Sunday 23 November 2014

இயற்கைவழி வாழ்க்கை நோக்கும் கவி

devadevan உதயசங்கர்

 

காணும்போதெல்லாம் அதிசயிக்க வைக்கிற அற்புதம் இயற்கையல்லவா? இந்த பூமியெனும் உயிர்ப்பரப்பை எப்படிப் புரிந்து கொள்வது? எத்தனை புற்கள்! எத்தனை பூக்கள்! எத்தனை செடிகள்! எத்தனை மரங்கள்! எத்தனை மலைகள்! எத்தனை கடல்கள்! எத்தனை புழுக்கள்! எத்தனை பூச்சிகள்! எத்தனை பறவைகள்! எத்தனை மிருகங்கள்! எத்தனை மனிதர்கள்! எத்தனை வாழ்க்கை! எந்த ஒரு மனிதனும் மற்றவரைப் போலில்லையே! எந்த ஒருவருடைய வாழ்க்கையும் மற்றவருடைய வாழ்க்கையைப் போலில்லையே! ஆகா இந்த பூமியில் வாழ்வது பேரானந்தமல்லவா!

வாழ்வின் ஒவ்வொரு துளியையும் ருசித்துக் குடிக்க வேண்டாமா? இத்தனை அபூர்வமான இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்தால் எத்தனை இன்பம் மனிதா? கவிஞர். தேவதேவன் இயற்கையை வாழ்க்கையின் குறீயீடாக்குகிறார். ஒன்றை மற்றொன்றால் குறிப்பது குறியீடென்றால் இயற்கையின் வழி மனிதவாழ்க்கையை குறியீடாக்கி புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்.

ஒரு புல்லின் உதவி கொண்டு

பூமியிலொரு பச்சைக் கம்பளம் விரித்தேன்

ஒரு மரக்கிளையின் உதவி கொண்டு

புள்ளினங்கள் கொஞ்சும்

ஒரு பள்ளத்தாக்கை எழுப்பினேன்

ஒரு கூழாங்க்கல்லின் உதவி கொண்டு

மலையடுக்குகளையும் அருவிகளையும் உருவாக்கினேன்

ஒரு தேன்சிட்டின் ஆலோசனை கொண்டு

விண்ணிலோர் மாளிகை அமைத்தேன்

ஒரு கண்ணீர்த்துளி கொண்டு

வானமெங்கும் கார்மேகங்களைப் படரவிட்டேன்.

தேவதேவன் தன்னுடைய கவிதைகளில் உணர்ச்சிகளின் வழியே அநுபவங்களை செவ்வியலும் புனைவும் கலந்து படைக்கும் போது வாசகனுக்கு அது புதிய கவிதாநுபவமாகிறது. அன்றாட வாழ்வின் காட்சிரூபங்களை தத்துவ தரிசனமாக்கிவிட விழையும் கவிஞர், தத்துவ தரிசனங்களை அன்றாட வாழ்வில் கண்டு வாசகனுக்குச் சொல்லுகிறது. மற்ற கவிஞர்களிடமிருந்து தேவதேவனை எது வேறுபடுத்துகிறது? சொல்லாமல் சொல்லிச் செல்லும் பாங்கும், பல பரிமாணங்கள் கொண்ட குறியீட்டுத்தன்மையும் ஆகும். மரங்களைப் பற்றிய இவருடைய கவிதைகள் குறிப்பிடத்தக்கவை.

அறியாது

ஒரு செடியை மண்ணிலிருந்து பிடுங்கி விட்டேன்

திசைகள் அதிரும் தனது பெருங்குரலால்

அது மரமாகி விட்டது என் கையில்

அந்தரவெளியில் துடிதுடித்து

ஆதரவுக்குத் துழாவின அதன் வேர்கள்

பாய்ந்து போய் அதனை அணைத்துக் கொண்டது பூமி

கொலைக்கரத்தின் பிடிதகர்த்து

மேல் நோக்கி பாய்ந்தது புது ரத்தம்

கழுத்தில் பட்ட தழும்புடனே

பாடின தலைகள்.

என்ற கவிதையில் ஒரு உயிரின் பரிதவிப்பைச் சொல்கிறார் கவிஞர். அதே மாதிரி மனிதர்களின் பார்வையில் இயற்கையைக் காண்பதை விட்டு இயற்கையின் கண்கொண்டு நோக்கும்போது மரத்தின் உருவம் எப்படித்தெரிகிறது தெரியுமா?

மரம் தன் பொன் இலைகள் உதிர்த்து

தன் கழுத்துக்கு ஓர் ஆபரணம் செய்து கொண்டிருந்தது

இதுவரை நான் அதன் காலடி என்று நினைத்திருந்த நிலத்தை

அது தன் கழுத்தென்று சொன்னதும்

கவ்வியது என்னைக் கொல்லும் ஒரு வெட்கம்.

தேவதேவனின் கவிதைகளில் புதுமையும் ஆழ்ந்த அர்த்தமும் இணைந்தே வாசகனை யோசிக்க வைக்கிறது. உதாரணத்துக்கு

அசையும் போது தோணி,

அசையாத போதே தீவு

தோணிக்கும் தீவுக்குமிடையே

மின்னற்பொழுதே தூரம்.

காதலைப் பாடாத கவிஞர்கள் உண்டோ. கவிஞர் தேவதேவனும் காதலைப் பாடுகிறார். மெல்லிய ரீங்காரத்துடன் ஆரம்பிக்கும் இசை தன் உடலை ஒரு நதியென பரப்பிக் கொண்டு தன் ஆழ அகலங்களினால் மனதை நிரப்பி புத்தம் புதிதாய் மணம் வீசி ஒரு ஆழ்ந்த தியானத்தைப் போல கடலில் சென்று சேர்வதைப் போல இவருடைய கவிதையும் சாதாரணமாக ஆரம்பித்து ஆழங்களை நோக்கிப் பாய்கிறது.

காதல் என்பது ஒரு சந்திப்பு

காதல் என்பது ஒரு கண்டுகொள்ளல்

காதல் என்பது ஒரு இறையனுபவம்

காதல் ஒரு குதூகலம்

காதலுக்குக் காலம் கிடையாது

எந்தச் சொற்களாலும்

உணர்த்தி விட முடியாதது

காதல் மட்டுமே காதலை அறியும்

காதல் கொண்ட இதயத்தில்

காதல் மட்டுமே இருக்கிறது

காதலின் தனிச்சிறப்பு அது

மரணமறியாதது

அது அதீதப் பேதமையின்

பொங்கும் இன்பம்

பௌர்ணமிப் புன்னகை

வாழ்வு தன்னைத்தானே

கண்டுகொண்டு விட்ட திகைப்புக் கொண்டாட்டம்

ஆனந்தக்கிறக்கம் தணிந்த

ஆழ்ந்த நிதானம்

பேரமைதி

மௌனம்

மீப்பெருஞ் செயல்பாட்டுக் களஞ்சியம்

அளப்பரிய செல்வம்.

இன்று முதல் வாழ்வைக் காதலியுங்கள். கவிதை பிடிக்கும். கவிதை பிடித்தால் தேவதேவனையும் பிடிக்கும்.

நன்றி_ அகில இந்திய வானொலி நிலையம்

Thursday 20 November 2014

மழை வரும் பாதையில் மலர்ந்த கவிஞர் கிருஷி

உதயசங்கர்Krishi

மனிதர்கள் தான் இந்த உலகத்தைப் பற்றிய விளக்கம் அளிக்கிறார்கள். அவர்களே இந்தப் புவியில் உள்ள பொருட்களுக்கும் உயிர்களுக்கும் இடையில் உள்ள உறவுகளை இனம் காணுகிறார்கள். இல்லையென்றால் பொதிகையில் தோன்றிய காலத்திலிருந்து எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணிக்கு தான் யார் என்று தெரியாது. ஒரு ஆலமரத்துக்கு தான் ஆலமரம் என்று தெரியாது. ஒரு மல்லிகைப்பூவுக்கு தான் மல்லிகை என்று தெரியாது. வானத்துக்குத் தான் வானம் என்றோ மழைக்கு தான் மழை என்றோ நேற்று பெய்த மழையில் முளைத்த புல்லுக்கு தான் ஒரு சிறிய புல் என்று கூடத் தெரியாது. நாம் வீட்டில் வளர்க்கும் டைகருக்கு தான் ஒரு நாய் என்றும் தெரியாது. ஆக மொத்தத்தில் இந்த உலகத்தில் எல்லாம் அதது பாட்டுக்கு இருக்கின்றன. இணைந்தும் பிரிந்தும் தங்கள் வாழ்வதற்கேற்ற பரிணாமச்சூழலை ஏற்படுத்திக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மனிதன் தான் இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றிற்கும் இடையில் உள்ள உறவுகளை புரிந்து கொள்ள முயற்சிக்கிறான். அவன் தான் மரத்தை மரம் என்று சொல்கிறான். அவன் தான் அதை வேப்பமரம் என்று வகை பிரிக்கிறான். மனிதன் இல்லையேல் உறவுகள் இல்லை.

கலைப்படைப்புகள் இந்த உறவுகளைப் பற்றியே பேசுகின்றன. இந்த உறவுகளை இன்னும் மேன்மையுறச் செய்ய மனித மனதின் அழகையும், சந்தோஷத்தையும், துக்கத்தையும், துன்பத்தையும் அசிங்கத்தையும் குரூரத்தையும், தியாகத்தையும், பேராசையையும் சொல்லிப் புரிய வைக்க முயற்சிக்கின்றன. மனிதர்களை மகான்களாக்கவே சதா கலைப்படைப்புகள் படைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கவிஞர் கிருஷியும் தன்னுடைய கவிதைகளில் இந்த உலகத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார். அவர் புரிந்து கொண்டதை நம்மிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறார்.

நிறை சூலியாய் நிற்கும்

வேம்பின் வாசத்தில்

வயல்வெளிக்கு மேல்

கை வீசி வரும்

நிலவைப் பார்த்தபடி

குத்த வைத்திருக்க வேண்டும்

கொஞ்ச நேரம் முதுகைச்

சாய்த்தபடி மண்சுவற்றில்.

என்று முடிகிற கவிதையிலாகட்டும்,

என்றாலும்

இன்னும் ஒளி

வற்றி விடவில்லை

பனித்துளியில்

காற்றில் அசைகிறது புல்

நிலவை வருடியபடி

சிறகடிக்கிறது

வண்ணத்துப்பூச்சி

இசையின் லயத்துடன்.

இயற்கையை வாசகருக்கு விளம்புகின்ற கவிஞர் கிருஷி தன்னைப்பற்றியும் சொல்கிறார் இப்படி

ரசம்

புழுதியில் கிடக்கும் வெறும்

கண்ணாடிச்சில் என்று தானே

நினைக்கிறாய்

ஒரு துண்டு கண்ணாடி என்றாலும்

முகம் காட்ட

மறுப்பதில்லை ஒருபோதும்

நண்பனே..ரசமற்ற

கண்ணாடி அல்லவே நான்

சிற்றுயிரான எறும்புகளுக்கு உள்ள நேசம் கூட மனிதர்களிடையே இல்லாமல் போனதையும் வாழ்வின் அவசர கதியில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் அந்நியப்பட்டு போவதைப் பற்றி ஏதேனும் ஒரு கவிதையில் சொல்கிறார். எறும்புகளின் வாழ்நிலை பற்றிச் சொல்லிக் கொண்டே வரும் கவிஞர். கிருஷி,

பனித்துளியின் உயிர்க்கருவோ

இந்த எறும்பின் வெண்முட்டைகள்

மழையை முன்னுணர்ந்து

புலம்பெயரும் ஞானம்

சிற்றெறும்பின் மூளைக்கு

எங்ஙனம் வாய்த்தது

வரிசை தவறுவதில்லை-என்றும்

தனிமைத்துயருமில்லை

ராஜ்யபரிபாலனம்- இதுபோல்

எங்கும் கண்டதில்லை

எவ்வளவு காலப்பழக்கம் நமக்குள்

ஏதேனும் ஒரு புள்ளியில்கூட

சந்திக்க முடிவதில்லையே

இப்போதெல்லாம் நண்பனே.

இவருடைய கவிதைகளில் மழையும் வானும் நட்சத்திரங்களும், பனித்துளியும், நதியும், குழந்தைகளும் பூக்களும் மீண்டும் மீண்டும் வந்து கவிஞரின் பரிசுத்தமான மனதின் ஏக்கங்களைப் பேசுகின்றன.

பொழுதடைந்த பின்

கரிசல் காட்டிலிருந்து திரும்பிய

எங்கம்மா சொன்னாள்

பாம்படம் அசைய

இன்னும் ஒரு மழை

பெஞ்சா போதுமய்யா

மொளச்ச பயிர்

பிழைச்சுரும்

இவருடைய கவிதை மழையில் நனையும்போது காய்ந்து வறண்ட நம் மனசிலும் மொளச்ச பயிர்கள் பிழைச்சிரும். இவருடைய கவிதைகளைப் பற்றி கவிஞர். கல்யாண்ஜி சொல்வது எவ்வளவு அழகாகப் பொருந்தி வருகிறது!

தன்னைத்தானே ஏந்திக் கொண்டு கவிஞர்.கிருஷி அவருடைய கவிதைகளில் வருகிறார். எந்த ஒரு வரியின் மீதும் அவருடைய சாயல் இருக்கிறது. ஒரு எளிய ஆரஞ்சு பட்டுப்பூச்சி போல நம் வீட்டு அந்தி மந்தாரைச் செடிகளின் மீது பறந்து விட்டுச் செல்கிறார். புதுத்தீப்பெட்டியின் முதல் குச்சி உரசலுக்குப் பின் மருந்துப் பட்டியில் தீக்குச்சியின் ஒற்றை உரசல் பதிந்திருப்பது போல ஒரு வரி. அரசுப்பொது மருத்துவமனைப் பக்கத்து வேப்பமர நிழலின் கீழ் கவலையோடு உட்கார்ந்திருக்கிற ஒரு பெரிய மனுஷியின் பக்கத்தில் அவள் கொண்டு வந்திருக்கிற தண்ணீர் பாட்டிலுக்குள் புகுந்து வெளியேறுகிற மாதிரி சில வரிகள். உல்லாசப் பயணத்துக்கு அழைத்துப்போன பள்ளிக்கூடப் பிள்ளைகளில் மற்ற பிள்ளைகள் எல்லாம் ஓடியாடி இரைச்சலுடன் விளையாடிக் கொண்டிருக்க, ஓடுகிற தண்ணீருக்குள் கிடக்கும் கூழாங்கற்களைப் பார்த்து அசையாது அமர்ந்திருக்கும் ஒரே ஒரு பையனின் சிகையைக் கோதி விடுகிற ஆசிரியர் போல நெகிழ்ந்து போன வரிகள் சில. அனறைக்கு நிகழ்ந்த அடையாள வேலை நிறுத்தத்தின் போது எழுப்பிய கோஷங்களை, சாலைத்தெரு திருப்பத்தில் டீ குடித்துக் கொண்டே மீண்டும் வாசித்துப் பார்ப்பது போலச் சில……..

வாழ்க்கையைப் போலவே கவிஞர் கிருஷியின் கவிதைகளும் வசீகரமானவை. சுழித்தோடும் தாமிரபரணியின் வண்ணக்கனவுகள் போல.

நன்றி-அகில இந்திய வானொலி நிலையம்

Tuesday 18 November 2014

மௌனத்தின் எதிர்ப்பதமாய் மாறிய கவிஞன்

AthavanTheedchanya உதயசங்கர்

அறிவியலும், கலை, இலக்கியமும், தத்துவங்களும் இந்தப் பூமியில் ஏன் பிறந்தன. மனிதகுலம் நோய்நொடி, வறுமை, துயரம், ஏற்றத்தாழ்வுகள் இன்றி எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்றிருக்கவே இவை பூமியில் பிறந்தன என்றால் மறுப்பாருண்டோ. இலக்கியத்தில் நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, பேச்சு, என்று பல வடிவங்கள் இருக்கின்றன. எல்லாவடிவங்களிலும் கவிதையே ஆகச் சிறந்ததென்றும் ஆதிக் கலை வடிவமென்றும் சொல்கிறார்கள். கவிதை மொழியின் செறிவும், அழகும், சேர்ந்து இசையின் சாயலோடு பிறக்கும் வடிவம். லயமும் சுதியும் அர்த்தபாவத்துடன் வாழ்வைப்பற்றிச் சுருக்கமாகச் சொல்லி ஆழமாக விளங்க வைக்கும் அதிர்வுச்சுழல். இடைவிடாத வாழ்வலைகளிலிருந்து கவிஞன் தன் உள்ளங்கையில் எடுத்த குட்டி அலையின் இரைச்சல். விரிப்பினும் அகாதமாய் விரியும். குறுக்கினும் கடுகெனவே குறுகும் அதிசய நிழல். வெயிலில் அலைந்துதிரிந்து வந்து சேர்பவர்களுக்கு குளிர்ந்த மண்பானை நீராகும் குளிர்மை. எப்படியோ கவிதையோ, கதையோ, கட்டுரையோ, சக மனிதர்களிடம் உரையாடக் கிடைத்த ஒரு விசேஷமான கருவி. இந்த உரையாடல் வழியே கலைஞனோ, கவிஞனோ, கதைஞனோ, தான் கண்ட வாழ்வநுபங்களின் சாராம்சத்தைச் சொல்ல முயற்சிக்கிறான்.

பலருக்கு கலையோ, கதையோ, கவிதையோ, வேறு வேலையில்லாதவர்களின் பொழுதுபோக்கு. ஆனால் நம் வாழ்வின் அணுகணமும் கலையின்றி இருப்பதில்லை. உண்பது உடுத்துவது உறைவது உடை பழக்கவழக்கம், என்று எல்லாமும் கலாப்பூர்வமானதாகவே இருக்கிறது. இந்த வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத கலை இந்த வாழ்க்கையைப் பற்றித் தானே பேசும். அப்படி பேசுகிற கவிஞனாக ஆதவன் தீட்சண்யா பிரகாசிக்கிறார். அவர் மௌனத்தின் உள்ளே அடர்ந்திருக்கும் வலி, வேதனை, மகிழ்ச்சி, எல்லாவற்றையும் நம்மோடு உரத்த குரலில் பகிர்ந்து கொள்கிறார்.

மடக்கி மடக்கி

மாடி வீடு கட்டினோம்

வாழ்க்கை வற்றி

வராண்டாவில் முடிந்தது

மத்திய தரவர்க்கத்தின் ஆசையின் விளைவை பகிடி செய்கிறார் ஆதவன் தீட்சண்யா.

முற்றுப்பெறாத டைரிக்காகவும்

அத்யந்த சினேகிதர்களுக்காகவும்

வெளுக்கப்போட்ட சட்டையில்

எடுக்கப்படாது நைந்த துண்டுச்சீட்டாக

செய்திகளிருக்கும் இன்னமும்

செத்தவர்களிடத்தில்

……………………………………………………………..

பேசி விட்டுச் சொல்கிறேன்

எப்படி அவர்கள் வாழ்ந்தார்களென்றும்

நாம் எப்படி இறக்கக்கூடாதென்றும்

என்று இறந்தவர்களிடம் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றிக் கேட்டு சொல்வதாய் சொல்கிறார் கவிஞர். இயங்கிக் கொண்டிருக்கும் வரை தானே மனம். இயங்காமல் நின்று விட்டால் அது ஜடமல்லவா. இதை குறுங்கவிதையாகச் சொல்கிறார் ஆதவன் தீட்சண்யா.

மனம்

அலையும் பெண்டுலத்திற்கு

அமைதி தேவையாம்

கடிகாரம் நின்று விடுமே.

சமூகத்தின் நிலவும் பெண்குழந்தைகளுக்கு எதிரான மனநிலை கண்டு கொதித்தெழுகிறார் ஆதவன் தீட்சண்யா. அவருடைய வார்த்தைகளில் முரணும், நகையும், கோபமும் கொப்பளிக்கிறது.

ஆத்தா மகமாயி

உம் புண்ணியத்தில பையனாப் பொறந்துட்டா

கெடா வெட்டிப் பொங்க வைக்கிறேன்

இது பக்தனின் குரல். இதற்கு பதில் சொல்கிறாள் ஆத்தா மகமாயி

ஏண்டா கும்பிடறதுக்குப் பொம்பிளசாமி

கொழந்த மட்டும் ஆம்பளயா

எனக்கு உங்கெடாவும் வேண்டாம்

ஒரு மயிரும் வேண்டாம்.

ஆத்தா மகமாயியாலேயே இந்தக் கொடுமையைத் தாங்க முடியவில்லை. அதே போல ஆதவன் தீட்சண்யாவின் எழுதுகோல் விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும் இக்காலத்தில் விவசாயத்தைப் பற்றி எழுதியுள்ள கவிதையைக் கேளுங்கள்.

ஆறும் குளமும் அலையும் கடலும்

அவிஞ்சு கிடக்குது பாலையா

ஓடும் மேகத்த ஒதைச்சி இழுத்துவா

உலகம் குளிரணும் பெருமழையில்

என்று மேகங்களை அடித்து இழுத்து வந்து வயக்காட்டில் மழை பொழியச் செய்து கரம்பக்காடாக இருக்கும் மண்ணை திமிறும் காளைகளைப் பூட்டி தலைகீழாகப் புரட்டணும் என்கிறார். அதோடு நம்முடைய முப்பாட்டன் வைத்திருந்த பாரம்பரிய விதைநெல்லை எடுத்து காத்தாட்டம் வீசி பயிர் வளர்க்கணும். பூச்சிப்புழு அரிக்கத்துடிக்கும் பயிரைப் போராடித்தான் வளர்க்கணும்.

பயிருக்காகவே வயலிருந்தாலும்

பச்சை நிறத்துல களைங்களூமிருக்கும்

அட எழுந்து வாங்கடா வெள்ளாமக்காட்டுக்கு

களையப் பிடுங்கணும் கவனமா.

அறுவடைக்காலம் நெருங்கி வரும் போது கதிர் அறுக்கும் அருவாளைத் தீட்டிப் பதமாக வைக்க வேண்டும்.களத்து மேட்டில் கதிர்கள் மலையாகக் குவியணும்.

அட அள்ளியெடுங்கடா ஆளாளூக்கு

அவரவர் தேவைக்கு வேண்டியதை

கொண்டு வாங்கடா சாட்டை சவுக்கை

சொடுக்கி முடுக்கணும் காலத்தை.

என்று ஒரு விவசாயக்காலத்தை நம் முன் கொண்டு வந்து காட்டுகிறார். கவிதை ஒன்றை பலவாறாக அர்த்தப்படுத்தும் என்ற நோக்கில் வாசிக்கும்போது இந்தக் கவிதையிலும் அவரவர் வேறு வேறு அர்த்தங்களையும் உணரமுடியும். ஆதவன் தீட்சண்யாவின் கவிதைகளை வாசிக்கும் ஒவ்வொருவரும் இதை உணர்வார்கள். ஆம். மௌனங்களை எதிர்ப்பதமாய் மாற்றி உரத்தகுரலில் பேசும் ஒரு கவிஞரையும் அவருடைய கவிதைகளையும் கண்டு விட்டோம் என்று.

நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்

Sunday 16 November 2014

தனித்துவமிக்க பெண்குரல்

உதயசங்கர்

vennila

இன்றிலிருந்து ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கப்பாடல்களை எழுதிய புலவர்களுள் பெண்பால் புலவர்கள் ஏராளம். அப்போதே பெண்கள் கல்வி கேள்விகளில் சிறந்து கவிதை இயற்றியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சங்க காலத்திற்குப் பின்னர் காரைக்காலம்மையார், ஆண்டாள் குறிப்பிடத்தக்க கவிஞர்களாக தமிழிலக்கிய வரலாற்றில் பதிவானார்கள். அதன் பிறகு நீண்ட இடைவெளி. 90 களுக்குப் பின்னால் உலகளாவிய அளவில் உருவான இலக்கியப் போக்குகளின் தாக்கத்தில் இப்போது நவீன கால தமிழிலக்கியத்தில் பெண் கவிஞர்களின் குரல் பதிவாகத் தொடங்கியுள்ளது.

இப்புவியில் சரி பாதியாகத் திகழும் பெண்கள் அந்தச் சமத்துவத்தைப் பெற்றிருக்கிறார்களா என்பது கேள்விக்குறியே. தாங்கள் யார்? இந்தப் பூமியில் தங்களுக்கான இடம் என்ன? தங்களின் பங்களிப்புகள் என்று எதுவும் இல்லையா? மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டு தங்களுடைய பரிணாம வளர்ச்சி என்ன? சமூகத்தில் இனவிருத்தியைத் தவிர வேறு முக்கியத்துவம் தனக்கில்லையா? சம மதிப்புடன் நடத்தப்படுகிறோமா? சமமான வாய்ப்புகள் கிடைத்திருக்கிறதா? இப்படி ஏராளமான கேள்விகள் பெண்களுக்குத் தோன்றின. அதன் விளைவாக அரசியல், பொருளாதாரம், இலக்கியம், கலை, பண்பாடு, வரலாறு, நிர்வாகம் என்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தற்காலத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் தங்களுக்கான அடையாளத்தைத் தேடும்போதே பெண்கவிதை உருவாகிறது. இந்த உலகத்தைப் பற்றி, தங்களைப் பற்றி, தங்களுடைய தேடல் பற்றி தங்களுடைய விடுதலை பற்றி, பாலினச்சமத்துவம் பற்றியெல்லாம் பெண்களுக்கென்று பிரத்யேகமான பார்வை இருக்கிறது. அவர்கள் தங்களுடைய மொழியில் தங்களுடைய உலகத்தை வெளிப்படுத்தத் துவங்கினார்கள். அப்படி எழுதிக் கொண்டிருக்கும் பெண் கவிஞர்களில் அ.வெண்ணிலா முக்கியமானவர்.

தேவதையைப் போல் வேடமணிந்த

சிறு வயது புகைப்படமொன்று

உங்கள் சேமிப்பில் இருந்தால்

நீங்கள் அதிர்ஷ்டசாலிகள்

பத்து வயதில்

முறிந்து விழும் சிறகுகள்

பனிரெண்டு வயதில்

பால்பற்கள் விழுந்து

விஷப்பற்கள் முளைக்கும்

குழந்தை முகம் மாறும்

பதினைந்து வயதில்

விருப்பத்தைப் பொருட்படுத்தாது

சாத்தான் உங்களைத் தேடும்

இருபது வயதில்

குழப்ப ரேகைகள்

முகத்தில் வளரும்

பிறகு

புன்னகைக்க மறப்பீர்கள்

முகம் இறுகிப் பாறையாகும்

தலையில் இரண்டு கொம்புகள் முளைத்து

முட்டிக் கொண்டிருப்பீர்கள்

எதிர்ப்படுபவர்களை

ரத்தம் குடித்து

ரத்தம் கொடுத்து

விகாரமாகிப் போன

உங்கள் முகத்தின் கோரம்

அருவெறுப்பூட்டும்

நிச்சயம் உங்களுக்கு உதவக்கூடும்

உங்களின் சிறுவயது புகைப்படமொன்று.

காலம் குழந்தைமையின் முகத்தைக் கோரமாக்கி விடும் கொடூரத்தை அழகாகச் சொல்லியிருக்கிறார் கவிஞர்.வெண்ணிலா. அன்றாட வாழ்வின் நெருக்கடிகளில் சிக்கிய பெண்மொழி தனக்கான தனித்துவமான பாதையைத் தேர்ந்தெடுக்கிறது.

கை நிறைய மௌனத்தை அள்ளி

இரவின் முகத்தில் வீசினேன்

இருளை ஒரு கோப்பைத் தேநீராக்கி

பருகச்சொல்லித் தந்தது இரவு.

கவிதை மட்டுமே என்னிடம் நிரந்தரக் கையிருப்பாக உள்ளது. வாழ்க்கை உருட்டித்தள்ளி விடும் மேடு, பள்ளங்களில் விழுந்து எழும் நேரங்களில் ஒவ்வொரு முறையும் இழப்பவை ஏராளம். என்னைத் தொலைக்கும் உறவுகள், நான் தொலைக்கும் நண்பர்கள், சில பிறப்பு, சில இறப்பு, துக்கம், அமைதி, மௌனம், என என்னைக்கடக்கும் ஒவ்வொரு கணத்திலும் கவிதை என்னுடனே பயணிக்கிறது. என்று சொல்லும் வெண்ணிலா குழந்தைகளின் உலகம் பற்றி எழுதியுள்ள கவிதைகள் குறிப்பிடத்தகுந்தவை.

கால் தவறி

லேசாக மிதித்து விட்டேன்

பொம்மையை

அடித்ததை விட

அதிகமாக அழுகிறாள்

குழந்தைகளின் உளவியலைப் புரிந்து கொண்ட கவிஞரான வெண்ணிலா. குழந்தைகளின் உலகத்தை நுட்பமாகக் கவனித்து எழுதியிருக்கிறார்.

அழும் பொம்மைகளை

குழந்தைகளுக்குப் பிடிக்காது

அழும் குழந்தைகளுக்கு

பிடித்து விடுகின்றன

பொம்மைகளை.

தாயும் குழந்தையுமாக உரையாடல் வடிவாக வெண்ணிலா எழுதியுள்ள கவிதைகளில் பெண்ணுலகம் பற்றிய அவரது சிந்தனைகள், கேள்விகளாக, தெறிப்புகளாக வெளிப்படுகின்றன. இந்தப் பன்முகக்குரலே வெண்ணிலாவின் தனித்துவம். அதுவே அவரை தமிழின் முக்கியமான கவிஞராக அடையாளப்படுத்துகிறது.

புறா ஏம்மா உயரமா

பறக்க மாட்டேங்குது

ஏன் கண்ணு

பாரு பயந்து பயந்து

மாடி மேல் உட்கார்ந்துக்கிது

இது வீட்டுப்புறாப்பா

இவ்வளவு தான் பறக்கும்

வீட்டுப்புறான்னா

உயரப்பறக்காதா

ஆமாம் கண்ணு

பறக்க முடியும்னு வீட்டுப்புறாக்கு

மறந்திடுச்சி

உன்னையும் என்னையும் போல.

நன்றி-அகில இந்திய வானொலி நிலையம்

Wednesday 12 November 2014

காலவெளியில் நடமிடும் கவிதைகள்

உதயசங்கர்

devathassan

மனித குல வரலாற்றில் ஆதியில் தோன்றிய கலை வடிவம் குகைச்சுவர் ஓவியங்கள் தான் என்றாலும் மனிதர்கள் ஆதிச்சடங்குகளின் போது உச்சரித்த மந்திரச்சொற்களே கவிதைக்கான மூலம் எனலாம். திரும்பத் திரும்ப உச்சரித்த ஒரே மாதிரியான சொற்கள் மனதில் விளைவித்த உளவியல் மாற்றமே மந்திரச்சடங்குகளும் மந்திரப்பாடல்களும் உருவாகக் காரணம். இந்த மந்திரப்பாடல்களிலிருந்து வாழ்வியல் பாடல்களும் பின்னர் கவிதைகளும் தோன்றின என்று மானிடவியலாளர்கள் கருதுகின்றனர். எனவே ஆதியில் தோன்றிய பாடல்களே தற்போது நவீனக்கவிதைகளாக மாறியிருக்கின்றன. பாம்பு தன் சட்டையை உரித்து உரித்து தன்னைப் புதுசாக்கிக் கொள்வதைப் போல கவிதையும் கால,தேச, வர்த்தமானக்களுக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டே இருக்கின்றது. இந்த மாற்றத்தில் கவிதை மொழியின் ஓசை நயத்துடன் கூடிய சந்தங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது. இடைவெளிகள் நிறைந்த மௌன வாசிப்பின் வழியே காட்சிகளைப் படைத்து நம் புனைவின் எல்லைகளை விரிக்கின்றனர்.இதோ தமிழின் முக்கியமான கவிஞரான தேவதச்சன் தன் கவிதையில் காட்டும் இடைவெளியப் பாருங்கள்.

காற்றில் வாழ்வைப்போல

விநோத நடனங்கள் புரியும்

இலைகளைப் பார்த்திருக்கிறேன்

ஒவ்வொரு முறையும்

இலையைப் பிடிக்கும் போது

நடனம் மட்டும் எங்கோ

ஒளிந்து கொள்கிறது.

அந்த வாழ்வின் நடனங்களைப் புரிந்து கொள்ளவே மீண்டும் மீண்டும் மனிதன் இலைகளைப் பிடிக்கிறான் இல்லையா? நிலக்காட்சிகளும் யதார்த்தமான அன்றாடக் காட்சிச்சித்தரிப்புகளும் தேவதச்சனின் கவிதையை எளிமை போல காட்டும் ஈர்ப்பு விசைகள். அந்த ஈர்ப்பின் வழியே நம்மை ஆழ்கடலின் அதிசயங்களைக் காணச்செய்கிறார்.

கடவுள் விடுகிற மூச்சைப்போல் காற்று வீசும் கரிசல்வெளி

வெயிலின் சமுத்திரத்தில் யாவும் முங்கிய நிசப்தம்

கருஞ்சாம்பல் மண்பரப்புக்குள் மெல்ல முனகும் சிருஷ்டிகரம்

தொலைதூரத்து எந்திரம் ஒன்றின் குது குதுகுது மந்திரம்

பருத்தி பறித்து மடித்துணியில் துருத்திக் கொண்டிருக்கும் பார்வதி

அவளோடு சேர்ந்து குனிந்திருக்கும் அத்துவானவெளி

யாரும் அழைக்காது திரும்பிக் கொண்டிருக்கும் காலம்.

இடையறாது ஓடிக்கொண்டிருக்கும் காலம். மாறிக் கொண்டேயிருக்கும் காட்சிகள். வாழ்க்கை ஒரு போதும் பின்னோக்கிப் போவதில்லை. உறைந்து நிற்பதுமில்லை. ஆனால் கவிஞருக்குக் காட்சிப்பிழையாக காலமும் காட்சியும் உறைந்து நின்று வேறொரு காலமும் காட்சியும் தெரிகிறது.

காற்று ஒரு போதும் ஆடாத மரத்தைப் பார்த்ததில்லை

காற்றில் அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்

காட்டைத்தூக்கிக் கொண்டு அலைகின்றன

வெட்டவெளியில் ஆட்டிடையன் ஒருவன்

மேய்த்துக் கொண்டிருக்கிறான்

தூரத்து மேகங்களை

சாலை வாகனங்களை

மற்றும் சில ஆடுகளை.

கனடா நாட்டு இலக்கிய விருதான விளக்கு விருதையும், இயல் விருதையும் தன் கவிதை நூல்களுக்காகப் பெற்றுள்ள கவிஞர் தேவதச்சன் உலகின் உள்ளார்ந்த உண்மையை உணர்வதற்காக தன் புனைவுகளின் மூலம் சில ஆச்சரியங்களை ஏற்படுத்துகிறார். நாம் தினசரி கண்ணாடி பார்க்கிறோம். கண்ணாடி பார்க்காதவர்கள் உண்டா என்று நீங்கள் கேட்க நினைக்கிறீர்கள் இல்லையா? இப்போது கவிஞர் தேவதச்சன் திரும்பவும் கேட்கிறார் உண்மையில் நீங்கள் கண்ணாடியைத் தான் பார்க்கிறீர்களா?

எனக்கு ஏழுகழுதை வயசாகியும்

கண்ணாடியை நான் பார்த்ததில்லை

ஒவ்வொரு முறையும் எதிரில்

நிறகையில் என் முகரக்கட்டை தான் தெரிகிறது.

கண்ணாடியைக் காணோம்

உடைத்தும் பார்த்தேன்

உடைந்த ஒவ்வொரு துண்டிலும்

ஒரு உடையாத கண்ணாடி

லேசான வெட்கம் எனக்கு

பார்க்க முடியாத கண்ணாடியைத் தான்

பார்க்க முடிகிறது.

ஆக யாரும் கண்ணாடியைப் பார்ப்பதில்லை. கண்ணாடியில் தன்னைத்தான் பார்க்கிறார்கள். தன்னைப் பார்க்காமல் வெறுமனே கண்ணாடியைப் பார்க்க முடியுமா? முடிந்தால் உண்மையை உணர முடியும். எல்லாமனிதர்களுக்கும் உள்ள பேராசை என்னவென்றால் தான் நிரந்தரத்துவம் பெற வேண்டுமென்பது தான். முடிவிலாத இந்த உலகத்தில் மனிதன் மட்டுமே தான் ஏதேனும் ஒரு வகையில் என்றென்றும் வாழ்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறான். இந்த உலகத்தின் படைப்புகள் அனைத்தும் இந்த ஆவலின் விளைவாக எழுந்தவை தான்.

சாய்வாக நான் எறிந்த

ஓட்டுச்சில்

நடனமாடுகிறது தண்ணீரில்

அந்தச் சின்ன விநாடியில்

என்னோடு சேர்ந்து

எல்லாக்காடுகளும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தன

தண்ணீரே தண்ணீரே

உன்னைத் தொட்டுத் தொட்டுப்

பறக்கும் கல்பூச்சியின்

கல்லைத்தான்

உன்னால் பிடிக்க முடியும்

அது உன்மேல் தூவிய

எழுத்துகளை

என்ன செய்ய முடியும்

உன்னால் என்ன செய்ய முடியும்?

காலத்தின் ஓட்டத்தில் படைப்பாளி மறைந்து போகலாம் ஆனால் அவனுடைய படைப்புகள் என்றும் மறையாது. அது தான் அவன் காலத்தின் முன் வைக்கும் சவால். அந்தச் சவாலை கவிஞர் தேவதச்சனின் கவிதைகள் எதிர்கொண்டு காலவெளியில் நடமிடுகின்றன.

நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்

Sunday 9 November 2014

குழந்தைகளின் உலகைப் புரிந்து கொள்ள ஒரு கவிஞன்

உதயசங்கர்

MukundhN

நமது சமூகத்தில் சரியாகப் புரிந்து கொள்ளப் படாதவர்கள் குழந்தைகள். பெரும்பாலும் நாம் குழந்தைகளை பயிற்சி கொடுத்து பழக்குகிறோம். சர்க்கசில் பழக்கப்படுத்துகிற விலங்குகளைப் போல. குழந்தைகள் இந்த பூமியின் புத்தம் புது மலர்கள் என்பதையோ அவர்கள் பூமியின் வண்ணக்கனவுகள் என்பதையோ எதிர்காலத்தின் சொந்தக்காரர்கள் என்பதையோ மறந்து போகிறோம். குழந்தைகள் குட்டி மனிதர்களே. குழந்தைகளின் மனவுலகம் ஆச்சரியங்களும் அற்புதங்களும் நிறைந்தது. தரையில் ஊர்ந்து செல்லும் எறும்புகளின் வரிசையைக் கண்டு குதூகலிக்கிற மனம். தீப்பெட்டிகளைக் கோர்த்து ரயிலாக்கி அந்த ரயிலில் சென்னை, மும்பை, டெல்லி, என்று பயணம் போகிற மனம். கைகளினால் ஸ்டியரிங் செய்து பஸ் ஓட்டும் சந்தோசம். மற்றவர்களுக்கு சாதாரணமாய் தெரிகிற ஒன்று குழந்தைகளுக்கு அசாதாரணமாய் தெரியும் நாமும் அந்த அற்புதங்களைக் கடந்து வந்தவர்கள் தான். ஆனால் வாழ்க்கை நெருக்கடியில் நம்முடைய குழந்தைத்தனத்தை இழந்து விட்டோம். குழந்தைகள் ஒரு போதும் தங்களுக்குள் சண்டையிடுவதில்லை. அவர்களுடைய டூ வும் சேக்கா வும் நிரந்தரமானதில்லை. குழந்தைகள் அன்பும் கருணையும் மிக்கவர்கள். இயல்பிலேயே மிக நல்லவர்கள். இந்தக் குழந்தைகளின் அதிசய உலகத்துக்குள் பெரியவர்களான பிறகு நுழைவதென்பது அவ்வளவு எளிதானதில்லை. ஏனெனில் பெரியவர்களின் உலகம் பெரிதும் பொருளியல் சார்ந்தது. அந்த உலகத்தில் எல்லாம் அவசரம். ஆனால் கவிஞர். முகுந்த் நாகராஜன் மிக எளிதாக குழந்தைகளின் உலகத்துக்குள் சென்று அங்கிருந்து முத்துகளையும், வைர, வைடூரியங்களையும் எடுத்து வருகிறார்.

குழந்தைகளின் ஜன்னல்கள்

இப்போது தான் கிடைத்தது ஜன்னல் சீட்

உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா

வீடு இங்கே தான் இருக்கிறதாம்

இதெல்லாம் ஒரு காரணமா…?

சரிதானே. ஓடும் பஸ்ஸில் ஜன்னல் சீட் வழியே பின்னால் ஓடிக் கொண்டேயிருக்கும் மரங்களையும், கட்டிடங்களையும் இப்போது தான் பார்க்க வாய்ப்பு வந்தது. அதற்குள் இறங்கு என்றால் வீடு அதற்குள் வர வேண்டுமா? என்று குழந்தை ஆதங்கப்படத்தானே செய்யும். குட்டி மனிதர்களான அவர்களைப் பற்றிய முகுந்த் நாகராஜனின் ஒரு குட்டிக் கவிதையைக் கேளுங்களேன்.

குட்டி

குட்டித் தலையணை, குட்டிப்போர்வை

குட்டி டம்ளர் மற்றும்

குட்டிக் கொட்டாவியுடன்

குழந்தைகள் உருவாக்குகிறார்கள்

ஒரு குட்டி உலகத்தை

அதில் பெற்றோர்களின் பெரிய விரல்களுக்கு

குட்டிக் கவளங்களைச் செய்யும்

பயிற்சியைத் தருகிறார்கள்

இந்த குட்டி உலகத்தைப் புரிந்து கொள்ள வேண்டாமா? அதில் வளர்ந்து வரும் குழந்தைகளின் உளவியல் எப்படி இருக்கும்? குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கும் போது எல்லா வீடுகளிலும் அதை எடுக்காதே… அங்கே வைக்காதே.. உடைச்சிராதே கிழிச்சிராதே கீழே போட்டுராதே என்று குழந்தைகளின் தன்னம்பிக்கையைக் குலைக்கும் விதமாகவே பெரியவர்கள் பேசுகிறார்கள். இது குழந்தைகளைப் பாதிக்கவும் செய்கிறது. இந்தப் பழியிலிருந்து தப்பிப்பதற்காக குழந்தைகள் ஏதேதோ சொல்கிறார்கள். இதோ கோப்பையை உடைத்த ஒரு குழந்தை என்ன சொல்கிறதென்று கேளுங்கள்.

சொந்தமாக விழுந்து உடைந்த கோப்பை

விளையாட்டில் வீட்டுப்பொருட்களை

காலம் காலமாக

உடைத்து வருகின்றனர் குழந்தைகள்

உடைந்த சத்தத்துக்கும்

ஓடி வந்து பெரியவர்கள் போடும் சத்தத்துக்கும்

நடுவில் இருக்கும் மௌனத்தில்

சிதறிய துண்டுகளில் இருந்து

தப்பிக்கும் வாக்கியங்களை இயற்றுகிறார்கள்

போனவாரம் கண்ணாடிக்கோப்பை ஒன்றை

கை தவறி உடைத்த அதிமதுரா

அவள் அம்மாவுக்கு

சொந்தமாக விழுந்து உடைஞ்சி போச்சி

என்ற வாக்கியத்தைப் பரிசளித்தாள்

உடைந்த கோப்பை இருந்த இடத்தில்

அந்த வாக்கியத்தைப் பொருத்தி வைத்து

வருவோர் போவோரிடமெல்லாம் எடுத்து எடுத்துக்

காட்டிக் கொண்டிருக்கிறாள் அவள் அம்மா.

கவிஞர் முகுந்த் நாகராஜனின் நுட்பமான கவித்துவமான பார்வைக்கு இதை விட என்ன வேண்டும்? பெரியவர்கள் எல்லோரும் குழந்தைகளை இந்தச் சமூகத்தில் வாழ்வதற்குத் தகுதியானவர்களாக்குவதற்காகவே சிரமப் படுகிறார்கள். குழந்தைகள் இதைப் புரிந்து கொள்ள மாட்டேனென்கிறார்களே என்பது தான் அவர்களுடைய ஆதங்கம். ஆனால் கவிஞர். முகுந்த் நாகராஜன் பெரியவர்களைக் கவலைப்பட வேண்டாம் என்கிறார். அவர்கள் தாங்களாகவே கற்றுக் கொள்வார்கள் என்கிறார். எப்படி என்று கேட்க நினைக்கிறீர்களா?

விளையாட்டாய்

ஓடுவது, துரத்துவது

வீசி எறிவது

குறி பார்த்து அடிப்பது

பிடிப்பது, தப்பிப்பது

மறைந்து கொள்வது

சுற்றுவது, சறுக்குவது

மூச்சு வாங்குவது என

விளையாடி வாழ்க்கைக்குத்

தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்

சிறுவர், சிறுமியர்.

உண்மை தானே. யாரும் துணியாத ஒரு புதிய உலகைப் பற்றி எழுதிய கவிஞர். முகுந்த் நாகராஜனை வாழ்த்துவோம்!

நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்

Sunday 2 November 2014

குழந்தைகளும் நோய்களும்

உதயசங்கர்

child-obesity

பெரும்பாலான பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் எப்போதும் விளம்பரப்படங்களில் வருகின்ற குழந்தைகளைப் போல புஷ்டியாக, சிரித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. குழந்தைகள் அழுதாலே டென்ஷன் ஆகிற அப்பா, அம்மாக்கள் நிறைய. இப்படி இருக்கும்போது ஏதாவது நோய் வந்து விட்டால் என்ன ஆவது? குழந்தைகளின் மூக்கு ஒழுகக்கூடாது. சளி பிடிக்கக்கூடாது, இருமல், தும்மல் வரக்கூடாது, வயிற்றாலை போகக்கூடாது. காய்ச்சல் வரக்கூடாது. கொடுப்பதையெல்லாம் சாப்பிட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டு சிரித்துக் கொண்டு அப்பா, அம்மா தூங்கும்போது தூங்கி அவர்கள் எந்திரிக்கும்போது எழுந்து எல்லாக்கடமைகளையும் ஒழுங்காகச் செய்து முடிக்க வேண்டும். இப்படியெல்லாம் நினைக்கிற பெற்றோர்கள் ஒன்றை முக்கியமாக மறந்து விடுகிறார்கள். குழந்தைகள் எவ்வளவு சிறியவர்களாக இருந்தாலும் குட்டி மனிதர்கள். அவர்களுக்கென்று விருப்பு, வெறுப்புகள், வெளிப்பாடுகள்,எல்லாம் அவர்களுக்கென்றே பிரத்யேகமான மொழியில் வெளிப்படுத்தவே செய்வார்கள். வெளிக்காற்றில் சென்று வந்தபிறகு ஜலதோஷம் பிடிக்கிறதா? பெற்றோர்கள் பதட்டப்படக்கூடாது. புதிதாகக் கொடுத்த உணவு பிடிக்காமல் வயிற்றாலை போகிறதா பதறக்கூடாது. காய்ச்சல், சளி, இருமல், தோன்றி விட்டதா. டாக்டரிடம் உடனே ஓடக்கூடாது. அப்புறம் என்ன செய்ய? முதலில் சந்தோஷப்படுங்கள். உங்கள் குழந்தையின் நோயெதிர்ப்பு ராணுவம் வேலை செய்யத் தொடங்கி விட்டது. பாதுகாப்பு படைவீரர்கள் யுத்தம் நடத்தத்தொடங்கி விட்டார்கள். அவர்களுடைய யுத்தத்தின் விளைவே இந்தச் சளி, இருமல், தும்மல், காய்ச்சல், வயிற்றாலை எல்லாம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

யோசித்துப்பாருங்கள். தாயிடமிருந்து பிரிந்து இந்தப்பூவுலகிற்கு வந்ததிலிருந்தே குழந்தைகள் எண்ணற்ற வைரஸ், பாக்டீரியாக்களினால் பாதிக்கப்படத்தான் செய்கிறார்கள். வளர்ந்த மனிதர்களே வாழத்தகுதியானதாகவா நமது ஊர்களும், நகரங்களும் இருக்கின்றன. தூசு, சாக்கடை, கலப்படம், ஒலிமாசு, புகை, குப்பை, கழிவுகள், என்று ஊரே ஒரு குப்பைத்தொட்டி போலத்தானே இருக்கிறது. இதிலிருந்து பிறக்கும் கண்ணுக்குத் தெரியாத கோடிக்கணக்கான வைரஸ்கள் ஊரெங்கும் பரவத்தானே செய்யும். அவை பாஸ்போர்ட், விசா, இல்லாமல் எல்லோர் உடலுக்குள்ளும் சென்றடையத் தான் செய்யும். ஆனாலும் எல்லோரும் நோய்வாய்ப்படுவதில்லை. காரணம் நம்முடைய வலிமையான நோய் எதிர்ப்புசக்தி தான். அதேதான் குழந்தைகளுக்கும் நமது உடலின் இயற்கையான உள்கட்டமைப்பான அந்த நோய் எதிர்ப்பு சக்தி தான் குழந்தைகளை எண்ணற்ற வைரஸ்களிடமிருந்து பாதுகாக்கிறது. ஆக நோய் என்பது ஒரு வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆரோக்கியத்தின் ஒரு பகுதி. ஏனெனில் நோய் வந்தால் தான் நோய் எதிர்ப்பு சக்தியும் வந்திருக்கிற வைரஸ்கள், பாக்டீரியாக்களின் ஆயுதங்களுக்கேற்ப தங்களை அப்டேட் செய்து கொள்ளவும், மீண்டும் வந்தால் அவற்றை அழிப்பதற்கான ஃபார்முலாவை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் முடியும்.

அப்படியில்லாமல் எடுத்ததற்கெல்லாம் டாக்டரிடம் சென்று மாத்திரை, ஊசி, சிரப்புகள், டானிக்குகள், ஆண்டிபயாடிக்குகள் என்று வாங்கிக் குழந்தைக்குக் கொடுக்கிறீர்களா? நீங்கள் முதலில் உங்கள் குழந்தையின் நீண்ட நாள் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். குழந்தையின் இயற்கையான உள்க்கட்டமைப்பான பாதுகாப்பு அமைப்பைப் பலப்படுத்துங்கள். அதற்குத் தேவையான ஆரோக்கியமான உணவுகளைக் கொடுங்கள். எடுத்ததற்கெல்லாம் மருந்துகளிடம் சரணாகதி அடையக்கூடாது. அதனால் குழந்தையின் இயற்கையான நோய் எதிர்ப்புசக்தி நிரந்தரமான பாதிப்புக்குள்ளாகும்.நீங்கள் ஒவ்வொரு முறை மருந்துகளைக் கொடுக்கும்போது செயற்கையான அல்லது கடன் வாங்கப்பட்ட நோயெதிர்ப்பு சக்தியை குழந்தைக்குக் கொடுக்கிறீர்கள். அந்த செயற்கையான தற்காலிகமான நோயெதிர்ப்பு சக்தி குறிப்பிட்ட அந்த நோய்க்குக் காரணமான வைரஸ்களையோ, பாக்டீரியாக்களையோ அழித்தபிறகு உடலிலிருந்து வெளியேறிவிடும். அதனால் குழந்தைகள் மீண்டும் நோயினால் தாக்கப்படும்போது மீண்டும் மருந்துகளையே நாட வேண்டியதிருக்கும். அதற்குப்பதில் இயற்கையான நோயெதிர்ப்பு அமைப்புக்கு நாம் இயற்கையான முறையில் உதவி செய்வதன் மூலம் மீண்டும் அந்த வைரஸ்கள் பாதிக்காமல் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

குழந்தைகள் நோய்வாய்ப்படும் போது மருத்துவரிடம் போகாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவா என்று நீங்கள் ஆவேசப்படுவது தெரிகிறது. அப்படியெல்லாம் இல்லை. குழந்தைகளோ, பெரியவர்களோ, மருந்துகளின் உதவி தேவைப்படும் நோய்களும் வரத்தான் செய்யும். அதற்கு மருத்துவரிடம் கண்டிப்பாகப் போய்த்தான் தீர வேண்டும். ஆனால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவரிடம் செல்வது குழந்தைக்கு ஊறு விளைவிக்கும். ஆங்கில மருத்துவ முறையில் நோய்களை உருவாக்கும் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மருந்துகளினால் அழிக்கப்படுகின்றன. ஆனால் இயற்கையான பாதுகாப்பு அமைப்புக்கு எந்தப் பலனுமில்லை. ஆனால் மாற்றுமருத்துவ முறைகளில் குழந்தைகளின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பையே பலப்படுத்தவும், அதன் மூலமே வைரஸ்களையும் பாக்டீரியாக்களையும் அழித்து விடலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புகழ் பெற்ற சீனப்பழமொழி ஒன்று இப்படிச் சொல்கிறது. பசித்திருக்கும் ஒரு மனிதனுக்கு ஒரு மீனைக் கொடுக்கும்போது அவனுக்கு ஒரு வேளை உணவு தந்தவர் ஆவீர்கள். ஆனால் அதற்குப் பதில் மீன் பிடிப்பது எப்படியென்று அவனுக்குக் கற்றுக் கொடுத்தீர்களானால் அவனுடைய வாழ்நாள் முழுவதும் உணவளித்தவர் ஆவீர்கள். அப்படித்தான் குழந்தைகள் நோய்வாய்ப்படும் போதெல்லாம் மருந்துகளைக் கொடுத்து செயற்கையான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தருவதென்பது ஒரு வேளைக்கு உணவளிப்பதைப் போல. ஒவ்வொரு சமயமும் குழந்தைகள் நோய்ப்படும்போதும் மருந்துகளின் மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும். ஆனால் அதே குழந்தையின் நோய் எதிர்ப்பு அமைப்பின் சக்தியைப் பலப்படுத்துவது என்பது மீன் பிடிக்கக்கற்றுக் கொடுப்பதைப் போன்றது. அது நிரந்தரமாக குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

நாம் குழந்தைகளுக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தரப்போகிறோமா? இல்லையென்றால் ஒரு நாளைக்கு உணவளிக்கப் போகிறோமா?

நன்றி- தீக்கதிர் வண்ணக்கதிர்

Saturday 1 November 2014

மோனோலிசாவும் குடும்பத் தலைவியும்

உதயசங்கர்Balakrishnan

இத்தாலி நாட்டு கலை அறிவியல் மேதையான லியார்னாடோ டாவின்சி வரைந்த புகழ் பெற்ற ஓவியம் மோனோலிசா. அந்த ஓவியப்பெண்ணின் அழியாத புன்னகை இன்றும் எல்லோரையும் ஆச்சரியப்படுத்துகிறது. எந்தக் கவலையுமில்லாத அந்தப் புன்னகையின் அர்த்தம் என்ன? அந்தப் புன்னகையில் தெரிவது இந்த உலகை வென்ற கர்வமா? முன்பின் தெரியாதவர்களிடம் அளந்து சிந்துகிற முறுவலா? உன்னால் என்றுமே என்னைப் புரிந்து கொள்ள முடியாது என்ற மர்மமா? உதட்டுச்சுழிப்பில் படைத்தவனையே அதிசயிக்கப்பண்ணிய படைப்பாக மலர்ந்த அகங்காரமா? என்னை விட எளிய பெண்ணை நீங்கள் இப்புவியில் எங்கும் காண முடியாது என்ற அடக்கமா? எது அந்தப் புன்னகையின் அர்த்தம்? ஏன் அந்தப்புன்னகை? மோனோலிசாவின் புன்னகை சிந்தும் ஒப்பற்ற அந்த ஓவியம் குறித்தும் லியார்னாடோ டாவின்சி குறித்தும் இன்னும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

நமது வீடுகளில் பெரும்பாலும் பெண்கள் தான் வீட்டு நிர்வாகம் செய்கிறார்கள். அலுவலக வேலையென்றால் கூட குறிப்பிட்ட நேரம் மட்டும் தான். அத்துடன் விடுப்புகளும், விசேட அநுமதிகளும் உண்டு. அதற்கு சம்பளமும் உண்டு. ஆனால் வீட்டு நிர்வாகம் இருபத்திநாலுமணி நேரத்தையும் வற்புறுத்தி வாங்கி விடும். வீட்டைத்தவிர வேறு எந்த சிந்தனையும் நமது பெண்களுக்கு இருக்குமா என்பது சந்தேகம். எங்கேயும் எப்போதும் வீட்டு ஞாபகம் தான். வீடு என்றால் வெறும் வீடல்லவே. வீட்டில் உள்ள உறவுகள், அவர்களுடைய தேவைகள், அவர்களுடைய விருப்பங்கள், அவர்களுக்கான சேவைகள், என்று நமது குடும்பத்தலைவி செய்யும் வேலைகள் கணக்கிலடங்காதவை. இதில் வேலைக்கும் சென்று விட்டு வீட்டையும் நிர்வாகம் செய்யும் பெண்கள் எவ்வளவு பதற்றத்திலும், அழுத்தத்திலும் இருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

உலகப்புகழ் பெற்ற மோனோலிசாவும் நமது குடும்பத்தலைவியும் சந்தித்தால் எப்படி இருக்கும்?

மொட்டைக்கோபுரம் என்ற கவிதை நூல் வழியே தமிழ் கவிதையுலகில் பிரசன்னமாகியிருக்கிற நமது கவிஞர் பிரதீபன் இரண்டு பேரையும் சந்திக்க வைக்கிறார். சந்தித்த வேளையில் தன் புன்னகை உதடு பிரித்து மோனோலிசா பேசும் முன்னரே நமது குடும்பத்தலைவி பேசுகிறாள்,

உனக்கென்னம்மா

எப்போதும் இப்படிச்

சிரித்துக் கொண்டிருப்பாய்

பிள்ளையா குட்டியா

குடும்பமா பிடுங்கலா

கோவில் குளமென்று ஓடவும் வேண்டாம்

ஆஸ்பத்திரி, மார்க்கட்டுக்கு

அலையவும் வேண்டாம்

மாமி, நாத்தி

சீர் செனத்தி என்று

எதிலும் மாட்டிக்கொள்ளாத

மகராசி நீ

மாறாத புன்னகை

இருக்காதா பின்னே.

கவிஞர் பிரதீபனின் கற்பனையில் இரு வேறு உலகங்கள் எப்படி வேறுபட்டு தெரிகிறது பாருங்கள்! எளிய சொற்களால் நமது பெண்களின் நிலையை இத்தனை கிண்டலுடன், ஆற்றாமையுடன் யார் சொல்லியிருக்கிறார்கள்? இப்போது புகழ முடியுமா மோனோலிசாவின் புன்னகைஅதிசயத்தை. இங்கே இதோ நமது பெண்கள் நிற்கிறார்களே பிரமாண்டமாய்…..இல்லையா.

அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவசர அவசரமாய் தூங்கி எழுந்து, அவசர அவசரமாய் பல் விளக்கி, குளித்து, உடை உடுத்தி, அவசர அவசரமாய் அவரவர் வேலைகளுக்குச் சென்று அவசர அவசரமாய் வேலை பார்த்து, அவசர அவசரமாய் வீடு திரும்பி உண்டு முடித்து உறங்கி விடுகிறோம். மீண்டும் அவசர அவசரமாய் ஒரு நாளை எதிர்பார்த்து. ஒரு நாளும் நமது தலைக்கு மேலே ஒரு வானம், குட்டி குட்டியாய் மேகங்கள், சூரியன் வரையும் அற்புத ஓவியங்கள், தென்றல் வீசும் மரங்கள், மலர்ந்து மணம் வீசும் மலர்கள், இரவில் நமது கோடிக்கணக்கான ஆசைகளைப் போல மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள், தெருக்களில் தண்ணொளி வீசி நிலாச்சோறு சாப்பிட அழைத்துக் கொண்டிருக்கும் நிலவு, இப்படி எதையுமே ஆற அமர அநுபவிக்காமல் வாழும் வாழ்க்கை எல்லோரையும் உறுத்திக் கொண்டிருக்கிறது. கவிஞர் பிரதீபனுக்கு இந்த நெருக்கடி ஒரு கவிதையை எழுதிச் செல்கிறது.

குறுநிழல் ஒன்று

குறுக்கே ஊர்ந்து செல்கிறது

தலைக்கு மேலே

வண்ணத்துப்பூச்சி பறக்கிறது போலும்

நிமிர்ந்து பார்க்க நேரமில்லை

அலுவலகத்துக்கு

இன்னும் ஐந்தே நிமிஷம்.

நாமே ஏற்படுத்திக் கொண்ட அவசரத்திற்கு நாமே அவசர அவசரமாய் மாட்டிக் கொண்ட பிறகு வாழ்க்கையை நின்று பார்க்க நேரம் கிடைக்குமா? அவசரத்தை அவசர அவசரமாய் விட்டு விட்டு வாழ்க்கையை வாழத் தொடங்குவோம். வாழ்வு இனியது!

நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்