Sunday 25 November 2018

குளத்தில் இருந்த நட்சத்திரங்கள்


குளத்தில் இருந்த நட்சத்திரங்கள்
மலையாளத்தில் - அப்துல்லா பேரம்பரா
தமிழில் - உதயசங்கர்



பழைய, பழைய காலத்தில் ஒரு நாட்டில் மூன்று சகோதரர்கள் வாழ்ந்து வந்தார்கள். அதில் மூத்தவனின் பெயர் தன்யன், இரண்டாமாவனின் பெயர் சோசு, மூன்றாது மகனின் பெயர் பென்கன். மூத்தவன் தன்யன் நல்லவன். கடின உழைப்பாளி. மற்ற இரண்டு பேரும் படுசோம்பேறிகள். அவர்கள் எந்த வேலையும் செய்யாமல் எப்பொழுதும் உறங்கிக் கொண்டும், விளையாடிக்கொண்டும் பொழுதைப்போக்கினார்கள்.
ஒரு நாள் தன்யன் தன்னுடைய சகோதரர்களிடம்,
“ பிரியமுள்ள சகோதரர்களே நாம் இப்படி கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருப்பது சரியில்லை. நம்முடைய குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும். அதனால் நான் ஒரு பயணம் போகப்போகிறேன். நல்வாய்ப்பு கிடைத்தால் உழைத்து நான் சம்பாதித்துக் கொண்டு வருவேன்..””
என்று சொன்னான். ஆனால் அது மற்ற இரண்டு சகோதரர்களுக்கும் பிடிக்கவில்லை. அவர்கள்,
“ ஏன் அண்ணன் மட்டும் செல்வந்தனாக வேண்டும்? நாமும் பணம் சம்பாதிக்க வேண்டாமா? அதனால் நாமும் பயணம் போகலாம்..”
என்று யோசித்தார்கள். அவர்கள் அதை அண்ணனிடம் சொன்னார்கள். தன்யன் பதில் எதுவும் சொல்லவில்லை.
அப்படி மூன்றுபேரும் பயணம் போனார்கள். சோசு ஒரு கிராமத்தில் கிலோமீட்டர் கிலோமீட்டராக நடந்து கொண்டிருந்தான். அப்படி நடந்து நடந்து ஒரு வயல்காட்டை அடைந்தான். அப்போது சோசுவுக்கு பசியும் தாகமும் ஏற்பட்டது. அவன் அருகில் தெரிந்த ஒரு குடிசையின் வாசல்கதவைத் தட்டினான். உள்ளேயிருந்து ஒரு வயதானகுரல் ,
“ வெளியில யாரு? “ என்று கேட்டது.
“ நான் ஒரு பிரயாணி.நான் இன்னிக்கு ராத்திரி இங்கே தங்கிக்கலாமா?.” என்று சோசு கேட்டான்.
“ இருந்துட்டுப் போகலாம்.. ஆனால் என்னுடைய குடிசையின்.பின்புறம் ஒரு குளம் இருக்கு.. அந்தக்குளத்திலுள்ள நட்சத்திரங்களை எல்லாம் சுத்தப்படுத்தித் தரணும்..முடியுமா?..”
அதெப்படி முடியும்? சோசு யோசித்தான். குளத்தில் தெரிவது வானத்தில் தெரிகிற நடத்திரங்களின் பிம்பம் தானே. அவற்றை எப்படி குளத்திலிருந்து சுத்தப்படுத்த முடியும்? தோல்வியை ஒப்புக்கொண்டு அங்கேயிருந்து திரும்பி ஊருக்கு வந்து விட்டான். தன்னுடைய சகோதரர்களிடம் வருத்தத்துடன்,
“ எனக்கு எங்கேயும் நல்வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால நான் திரும்பி வந்துட்டேன்..”
என்று சொன்னான். அப்போது தன்யனும் பென்கனும் வீட்டிலிருந்தார்கள். அடுத்தமுறை பென்கனுடையதாக இருந்தது. பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து கடைசியில் அவன் அந்தப் பழைய குடிசைக்குப் போனான். சோசு கேட்டதைப்போல அவனும் அதே கேள்வியைக் கேட்டான். சோசுவிடம் சொன்ன காரியத்தையே கிழவி பென்கனிடமும் சொன்னாள். சோசுவைப்போல எதுவும் செய்யாமல் பென்கனும் வீட்டிற்குத் திரும்பினான்.
“ எனக்கு எந்த இடத்திலும் நல்வாய்ப்பு கிடைக்கவில்லை..”
அவன் வேதனையோடு சொன்னான்.
கடைசியில் நல்வாய்ப்பைத் தேடி தன்யன் புறப்பட்டான். பல மைல் தூரம் கடந்து அவனும் அந்தக்கிழவியின் குடிசைக்குப் போய்ச்சேர்ந்தான். அப்போதும் கிழவி அந்தப் பழைய வேலையைச் செய்யச் சொன்னாள். ஒரு நிமிடம் யோசித்த தன்யன் பின்பு கிழவியிடம் ஒரு வாளியைக் கேட்டு வாங்கினான். வாளி கையில் கிடைத்த உடனே தன்யன் குளத்தில் இறங்கி தண்ணீரை வெளியில் எடுத்து ஊற்றினான். குளத்தில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியில் எடுத்து ஊற்ற அவன் கடுமையாக உழைத்தான். ஆனாலும் வேலை முழுவதும் முடிந்தபிறகே அவன் ஓய்வெடுத்தான். இரவு முழுவதும் அவன் தன்னுடைய வேலையில் மூழ்கியிருந்தான்.
பொழுது விடிவதற்கு முன்பு கிழவி குடிசையிலிருந்து வெளியில் வந்தாள். தன்யன் மக்ழ்ச்சியோடு குளத்தைக் காட்டினான். ஒரு நட்சத்திரம் கூட குளத்தில் இல்லை.
“ நான் குளத்தில் இருந்த நட்சத்திரங்களை எல்லாம் வெளியே எடுத்து விட்டேன். இனி ஒரு ராத்திரியிலும் ஒரு நட்சத்திரம் கூட குளத்தில் இருக்காது. “
கிழவிக்கு மகிழ்ச்சி. அவள் முன்னால் வந்து தன்யனைக் கட்டிப்பிடித்தாள். பின்பு,
“ உனக்கு முன்னால பலரும் இங்கே வந்திருக்கிறார்கள். இந்தப்போட்டியில் கலந்து கொள்ள முயற்சி கூடச் செய்யாமல் திரும்பிப் போயிருக்கிறார்கள். உழைப்பதற்கான உறுதியோ, சிந்திப்பதற்கான புத்தியோ, இல்லாத கழுதைகள். நீ தான் உத்தமன்..”
கொஞ்சநேரம் கிழவி மௌனமாக இருந்தாள். அதன்பிறகு தன்யனை உற்று நோக்கினாள்.
“ இனிமேல் இந்த நிலம் முழுவதும் உனக்குத் தான். இங்கே நீ உன்விருப்பம் போல் விவசாயம் செய்து பணம் சம்பாதிக்கலாம்..” என்று சொன்னாள்.
அந்த மகிழ்ச்சியான செய்தியைச் சகோதரர்களிடம் சொல்வதற்காக தன்யன் வீட்டிற்கு ஓடினான்.
“ நான் என்னுடைய நல்வாய்ப்பைக் கண்டுபிடித்து விட்டேன்..”
“ எங்கே? “
அவர்கள் திகைத்து நின்றனர். தன்யன் அவனுடைய கையை உயர்த்தி அவர்களைச் சுட்டிக் காட்டினான். எதுவும் புரியாமல் அவர்கள் முழித்தார்கள். சகோதரர்களிடம் நடந்ததை எல்லாம் சொன்னான். கதையைக் கேட்ட அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
அன்று முதல் சோம்பலை மறந்து உழைத்துப் பிழைக்கவேண்டும் என்று அவர்கள் முடிவு எடுத்தார்கள்.
நன்றி - மாயாபஜார்

Sunday 30 September 2018

பேசாநாட்டில் பேசும்கிளிகள்


பேசாநாட்டில் பேசும்கிளிகள்

உதயசங்கர்
பெரியமலை நாடு திடீரென்று ஒரு நாள் பேசாநாடாக மாறி விட்டது. ஏன் தெரியுமா? பெரியமலை நாட்டு ராஜா இடிவர்மன் ஏராளமான வரிகளைப் போட்டு மக்களைக் கசக்கிப்பிழிந்து கொண்டிருந்தான். ஏற்கனவே சிரமத்தில் இருந்த மக்கள் அந்த வரிகளைக் கட்ட முடியாமல் அவதிப்பட்டனர். நாட்டில் குடியிருப்பதற்கு நாட்டுவரி, வீட்டில் குடியிருப்பதற்கு வீட்டுவரி, நிற்பதற்கு நில்வரி, உட்காருவதற்கு உட்கார்வரி, நடப்பதற்கு நடவரி, படுத்து உறங்குவதற்கு படுவரி, உறங்கும்போது கனவு கண்டால் கனவுவரி, குழந்தை பிறந்தால் பிறவரி, யாராவது இறந்து போனால் இறவரி, இளைஞர்களுக்கு இளமைவரி, திருமணம் முடித்தால் திருமணவரி, குடும்பம் நடத்தினால் குடும்பவரி, நோய்வந்தால் நோய்வரி, நீண்டநாள் உயிருடன் இருந்தால் முதுமைவரி, பள்ளிக்கூடம் போனால் பள்ளிக்கூடவரி, கல்லூரிக்குப்போனால் கல்லூரி வரி, விளையாட்டு வரி, பொருளை விற்றால் விற்பனை வரி, பொருளை வாங்கினால் வாங்கும் வரி, உணவு வரி, குப்பை வரி, என்று ஆயிரத்து ஒன்று வரிகளை ராஜா இடிவர்மன் போட்டிருந்தார்.அப்படி வரி கட்டாதவர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டன. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 இந்த வரிகளைக்கட்ட முடியாத பெரியவர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், வியாபாரிகள், எல்லோரும் தனித்தனியாக ராஜா இடிவர்மனின் அரண்மனைக்குப் போய் முறையிட்டனர்.
வேண்டாம் ராஜா இந்த வரிகள் ராஜாவே
உயிர் போகுது எங்களுக்கு ராஜாவே
நாட்டு மக்களை நினைச்சுப்பாருங்க ராஜாவே
நல்லது செய்ய முடிவெடுங்க ராஜாவே 
ராஜா இடிவர்மனுக்குக் கோபம் வந்து விட்டது. அவனை எதிர்த்து பிறந்த குழந்தைகள் கூட அழுது போராட்டம் செய்வதைப்பார்த்து அடக்க முடியாத சினம் வந்து விட்டது. உடனே என்ன செய்தார் தெரியுமா? ஒரு நாள் ராத்திரி பனிரெண்டு மணிக்கு இனிமேல் யாரும் பேசக்கூடாது என்று ராஜா இடிவர்மன் சட்டம் போட்டு விட்டான். அந்தச் சட்டத்தை மாநகரங்களிலும், நகரங்களிலும், ஊர்களிலும், கிராமங்களிலும், தெருக்களிலும், வீடுகளிலும், முரசறைந்து அறிவித்தான். துண்டறிக்கைகளாகக் கொடுத்தான். தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸ்ஸாக அறிவிப்பு செய்தான். அந்த செய்தி என்னவென்றால்,
“ இதனால் சகலமானவர்களுக்கும் பெரிய நாட்டு ராஜாதிராஜ ராஜகுல திலக இடிவர்மன் தெரிவிக்கும் செய்தி என்னவென்றால், இந்த நிமிடம் முதல் பெரிய நாட்டு மக்கள் யாரும் யாருடனும் பேசக்கூடாது. சாப்பிடுவதற்கு மட்டும் நீங்கள் வாய் திறக்கலாம். மற்றநேரங்களில் எல்லோருடைய வாய்களிலும் பேசாப்பூட்டு பூட்டப்படும். அவர்கள் பேசாமல் இருப்பதை கண்காணிப்பதற்காக ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு காவலர் இருப்பார். அதையும் மீறி யாராவது ஒரு வார்த்தை பேசினாலும் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது நாடு கடத்தப்படுவார்கள் “
அறிவிப்பு செய்த நாளில் இருந்து பெரியமலை நாடு பேசாநாடாக மாறிவிட்டது. ஒரே அமைதி. அமைதி. அமைதி. யாரும் யாருடனும் பேசவில்லை. எல்லோரும் சைகையில் பேசிக்கொண்டார்கள். அதையும் மீறி ஒன்றிரண்டு பேர் சாப்பிடும்போது குழம்பு நல்லாருக்கு என்று சொன்னதுக்கும், இன்னும் கொஞ்சம் சோறு போடுங்க என்று சொன்னதுக்கும் கைது செய்யப்பட்டார்கள். அப்புறம் என்ன?
எல்லோரும் வாயில் பூட்டோடு அலைந்தார்கள். யாருமே யாருடனும் பேசமுடிய வில்லை. எல்லோருக்கும் பேச்சு மறந்து விட்டது. காவலர்களும் பேச மறந்தனர். பிறந்த குழந்தைகளும் பேச்சுச்சத்தம் கேட்காமல் வளர்ந்ததால் பேசவில்லை. எல்லோரும் கைஜாடை போட்டே பேசிக்கொண்டார்கள். பேசாநாட்டு ராஜா இடிவர்மனுக்கும் அவனது மந்திரிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. அவர்களை எதிர்த்து பேச யாரும் இல்லை. அவர்கள் இன்னும் என்ன வரிகளைப் போடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் யாருக்கும் தெரியாமல் தினம் இரவு இரண்டு மணிக்கு மக்கள் எல்லோரும் பேசாநாட்டின் கிழக்கு திசையிலிருந்த பெரிய மலைக்குப் போய் வந்தார்கள். காவலர்கள் கேட்டதுக்கு
“ சும்மா ஒரு நடை “ என்று சொன்னார்கள். சில நாட்கள் கழித்து காவலர்களும் கூட அங்கே போய் வர ஆரம்பித்தனர். அப்படி என்ன அங்கே நடந்தது? யாரும் யாரிடமும் சொல்லவில்லை. அவர்கள் தான் பேசக்கூடாதே.
 ஒரு நாள் காலையில் ராஜா இடிவர்மன் அவனது அரண்மனைத்தோட்டத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தான். ஒரு மாமரத்திலிருந்து
முட்டாள் ராஜா இடிவர்மன்
முரட்டு ராஜா இடிவர்மன்
சட்டம் போட்டான் இடிவர்மன்
சறுக்கி விழுந்தான் இடிவர்மன்
மக்களைப் பகைத்தான் இடிவர்மன்
மண்ணாய்ப்போவான் இடிவர்மன்
என்று ஒரு பாட்டு கேட்டது. ராஜா இடிவர்மன் சுற்றிச்சுற்றிப்பார்த்தான். மாமரத்தின் உச்சிக்கிளையில் ஒரு கிளி உட்கார்ந்து பாடிக்கொண்டிருந்தது. ராஜா இடிவர்மனுக்குக் கோபமானகோபம். அந்தக்கிளியை விரட்ட கீழே கிடந்த கல்லை எடுத்து எறிந்தான். அவ்வளவு தான். அந்தத்தோட்டத்தில் இருந்த குயில், சிட்டுக்குருவி, தவிட்டுக்குருவி, சாம்பல்புறா, மாடப்புறா, மணீப்புறா, செம்போத்து, காக்கா, வாத்து, அன்னம், மைனா, மயில், தேன்சிட்டு, தூக்கணாங்குருவி, தையல்சிட்டு, கொண்டைக்குருவி, பனங்காடை, மீன்கொத்தி, மரங்கொத்தி, என்று எல்லாப்பறவைகளும் சேர்ந்து பாட ஆரம்பித்தன. பகலில் தூங்கிக்கொண்டிருந்த ஆந்தை கூட முழித்துப்பாடியது. பெரிய புயல் வீசியதைப்போல இருந்தது அந்தக்குரல். அதைக்கேட்டு பயந்து போன இடிவர்மன் அரண்மனைக்குள் ஓடினான்.
அரண்மனைக்கு உள்ளேயும் அந்தப்பாட்டு கேட்டது. அவன் உற்றுக்கேட்டான். அது மக்களின் குரல். பார்த்தால் மக்கள் அனைவரும் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள், காவலர்கள், நாய்கள், பூனைகள், பன்றிகள், மாடுகள், ஆடுகள், அணில்கள், ஓணான்கள், எறும்புகள், ஈக்கள், கொசுக்கள், என்று ஒரு பெரும்படையே திரண்டு வந்து கொண்டிருந்தது. எல்லோருக்கும் முன்னால் மக்கள் எல்லோருக்கும் பேச்சு மறந்து விடாமல் இருக்கப் பெரியமலையில் பயிற்சி கொடுத்த இளங்குமரன் வந்து கொண்டிருந்தான்.
மக்கள் திரளைப் பார்த்து “ தப்பித்தோம் பிழைத்தோம்” என்று ராஜா இடிவர்மனும் அவனது மந்திரிகளும் அரண்மனையின் பின்வாசல் வழியே ஓடினார்கள். மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பேசாநாடு மறுபடியும் பெரியமலை நாடாகி விட்டது.
நன்றி - வண்ணக்கதிர்


Wednesday 26 September 2018

பாம்புக்குத் தடை விதித்த ராஜா


பாம்புக்குத் தடை விதித்த ராஜா
உதயசங்கர்
பறம்பூர் நாட்டு ராஜாவான பழையனுக்குப் பாம்பு என்றால் அப்படி ஒரு பயம். அதனால் அவருடைய அரண்மனையைச் சுற்றி அகழி கட்டி அதில் தண்ணீர் விட்டு பாதுகாப்பாக இருந்தார். யாராவது அவரிடம் பாம்பு என்று சொல்லி விட்டாலே போது அப்படியே பதறி துள்ளிக்குதித்து உருண்டு விடுவார். இத்தனைக்கும் பாம்பை அவர் நேரில் பார்த்ததில்லை. அதனால் முக்கிய மந்திரியோ, விவசாய மந்திரியோ, காட்டிலாகா மந்திரியோ, வீட்டு மந்திரியோ, ரோட்டு மந்திரியோ, யாரும் ராஜா பழையனிடம் பாம்பு என்ற வார்த்தையை உச்சரிக்கக்கூட மாட்டார்கள். ஆனால் அறிவியல் மந்திரி மட்டும் சொன்னார்.
“ இயற்கையில் எல்லோரும் சமமானவர்கள். பாம்பும் பல்லியும், பூச்சியும், புழுவும் மனிதனும்… எல்லோரும் சமமானவர்கள்.. ஒருவர் பாதையில் ஒருவர் குறுக்கிடாமல் இருந்தால் போதும்.. விபத்துகள் நேராது..”
அவர் சொன்னதை யாரும் கேட்கவில்லை. அவர் அரண்மனையிலிருந்து வெளியேறி விட்டார். பறம்பூர் விவசாய நாடு. மலையடிவாரத்தில் இருந்தது. எனவே அடிக்கடி காட்டிலிருந்து யானை, மிளா, மரைமான், காட்டுப்பூனைகள், காட்டு மாடுகள், நரி, காட்டு நாய்கள், நாட்டுக்குள் வந்து விடும். மக்கள் அந்த மிருகங்களை தாரை தப்பட்டை அடித்து காட்டுக்குள் விரட்டி விடுவார்கள். ராஜாவோ, மந்திரிகளோ, எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். அவர்கள் எல்லோரும் பத்திரமாக அரண்மனைக்குள் இருப்பார்கள்.
ஒரு நாள் ராஜா தன்னுடைய மாளிகைப்பூந்தோட்டத்தில் மாலைநடை நடந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சரக்கொன்றை மரத்தின் கிளையில் ஒரு கயிறு தொங்கிக்கொண்டிருந்தது. பச்சை நிறத்தில் அழகாக இருந்தது. அவருக்கு பச்சை நிறம் ரொம்பப்பிடிக்கும். அவர் அந்தக்கயிற்றைப் பிடித்து இழுத்தார். கையில் வழு வழு என்று நெளிந்தது. அவ்வளவு தான். பாம்பு! பாம்பு! பாம்பு! என்று அலறினார். கைகளை உதறு உதறு என்று உதறிக்கொண்டிருந்தார். அப்படியே மயங்கி விழுந்து விட்டார். அவர் உதறிய உதறில் பாம்பு எங்கேயோ போய் விழுந்து விட்டது.
ராஜா பழையன் மறுநாள் மாலை தான் கண்விழித்தார். எழுந்ததும் கேட்ட முதல் கேள்வியே
பாம்பு எங்கே? என்ற கேள்விதான்.
காட்டு மந்திரி உடனே,
“ அதை அப்பவே கொன்னு புதைச்சாச்சு ராஜாவே! “
என்று சொன்னார். ராஜா உடனே ஆணையிட்டார்.
” பறம்பூர் நாட்டில் ஒரு பாம்பு கூட இருக்கக்கூடாது. அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்…”
அதைக்கேட்ட மந்திரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
முக்கிய மந்திரி நாடு முழுவதும் பாம்புகள் ஊருக்குள் வராமலிருக்க யாகம் நடத்தச்சொன்னார். உடனே தெருவுக்குத் தெரு ஆல மரக்குச்சிகளையும், அரசமரக்குச்சிகளையும் போட்டு லிட்டர் கணக்கில் நெய்யை ஊற்றி வாயில் நுழையாத மந்திரங்களைச் சொல்லி யாகங்களை நடத்தினார்கள். புகை மூட்டத்தில் அங்கங்கே பொந்துகளிலும், பொடவுகளிலும் ஒளிந்திருந்த பாம்புகள் வெளியே வந்து தெருக்களில் அலைய ஆரம்பித்தன. யாகம் நடத்தியவர்கள் அலறியடித்து ஓடி விட்டார்கள். அவர்கள் ஓடுவதைப் பார்த்த பறம்பூர் நாட்டு மக்கள் உருண்டு விழுந்து சிரித்தனர். இப்படி முக்கிய மந்திரி கஜானாவில் பாதியைக் காலி பண்ணினார்.
காட்டு மந்திரி பாம்பு பிடிப்பவர்களைக் கொண்டு மகுடி ஊதி பாம்புகளைப் பிடிக்கப்போகிறேன் என்று ராஜாவிடம் சொன்னார். பாம்பு பிடிப்பவர்கள் தெருக்களில் மகுடி ஊதினார்கள். அவர்களைத் தெரிந்த மாதிரி பத்து பாம்புகள் அவர்களுக்கு முன்னால் ஊர்ந்து வந்து தலையசைத்து ஆடின. பாம்பு பிடிப்பவர்கள் கொண்டு வந்த சாக்குப்பையில் அந்தப்பாம்புகளைப் பிடித்து அடைத்தார்கள். மறுநாளும் அவர்கள் வேறு தெருவுக்குப் போய் ஊதினார்கள். அதே பத்து பாம்புகளைப் பிடித்தார்கள். இன்னொரு தெருவுக்குப் போனார்கள். அங்கேயும் அதே பத்து பாம்புகளைப் பிடித்தார்கள். இப்படி பத்து பாம்புகளை வைத்து ஆயிரம் பாம்புகளைப் பிடித்ததாகக் கணக்குக் காட்டினார் காட்டு மந்திரி.
ரோட்டு மந்திரி சும்மாயிருப்பாரா?  ஊரில் உள்ள தெருக்களில் எல்லாம் பாம்புக்கோவில்களைக் கட்டினார். அந்தக்கோவில்களில் மூன்று வேளையும் பூஜை நடத்தச்சொன்னார். மக்கள் அனைவரும் அந்தக்கோவில்களுக்குச் சென்று வழிபடவேண்டும். பாம்புகளைப்பற்றிய கட்டுக்கதைகளைத் தொலைக்காட்சியில் மெகாசீரியல்களாக எடுத்து வெளியிடச் செய்தார். அதில் கஜானாவிலிருந்து கால்வாசியைக் காலி பண்ணினார்.
விவசாயமந்திரியும் விவசாயிகள் இனிமேல் தங்களுடைய நிலங்களில் விதைக்கக்கூடாது. எந்தப்பயிரையும் பயிர் செய்யக்கூடாது. பயிர் செய்தால் தானே தவளைகளும், எலிகளும், பூச்சிகளும், சிறுபறவைகளும் வருகின்றன. பின்னாலேயே அவற்றைப் பிடித்துத் தின்பதற்காகப் பாம்புகளும் வருகின்றன. எனவே பயிர் செய்யாமல் நிலத்தைத் தரிசாகப் போடுங்கள் என்று ஆணையிட்டார். மக்கள் மன்றாடினார்கள். விவசாயம் இல்லை என்றால் மக்களுக்கு உணவு கிடைக்காது. அவர்கள் மட்டும் இல்லை ராஜா, மந்திரிகள், மக்கள் யாருமே வாழமுடியாது. என்றார்கள்.
” உணவு தானியங்களை நாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யலாம்.” என்று எகத்தாளமாகப் பதில் சொன்னார்.
பறம்பூர் நாட்டில் யாரும் விவசாயம் செய்ய முடியவில்லை. விவசாயம் செய்தால் தண்டனை. நாட்டில் மக்களுக்கு உணவு கிடைக்கவில்லை. மக்கள் அரண்மனைக்குச் சென்று போராட்டம் செய்தனர். ராஜா பழையனுக்கு என்ன செய்ய என்று புரியவில்லை. அந்தப்போராட்டத்துக்குத்  பழைய அறிவியல் மந்திரி தலைமை தாங்கி நின்றார். வேறுவழியில்லாமல்,
“ என்ன செய்ய வேண்டும் அறிவியலாளரே! “
என்று ராஜா பழையன் கேட்டார். அறிவியல் மந்திரி உடனே,
 பாம்புகள் மிகவும் குறைவான அறிவுத்திறன் கொண்டவை ராஜா. அவைகளுக்குக் காது கேட்காது. எந்த உணவையும் மென்று தின்கிற மாதிரி அவற்றின் வாயோ, தொண்டையோ கிடையாது. உணவுக்காகவும் பாதுகாப்புக்காவும் மட்டுமே அவை கடிக்கும். ஞாபகசக்தி கிடையாது. எனவே பழிவாங்க, ஞாபகம் வைத்திருக்கத்தெரியாது. எல்லாப்பாம்புகளுக்கும் விஷம் கிடையாது. நாம் அதன் வழியில் குறுக்கிடக்கூடாது. அவைகளும் நம்வழியில் குறுக்கிடாது. இயற்கையில் யாரும் யாரைப்பார்த்தும் அச்சப்படத்தேவையில்லை…….” என்று விளக்கமாகச் சொன்னார்.
பறம்பூர் நாட்டு ராஜா பழையனுக்கு புரிந்து விட்டது. பறம்பூர் நாட்டு மக்களும் பாம்புகளும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
நன்றி - மாயாபஜார்

Monday 17 September 2018

எட்டு டுட்டுவான கதை


எட்டு டுட்டுவான கதை

உதயசங்கர்
இப்போது டூர் நாட்டில் எட்டு என்ற எண்ணையே ராஜா எடுத்து விட்டார். பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் கணிதப்பாடம் படிக்கும் போது ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, டுட்டு, ஒன்பது, பத்து…. என்று தான் படிக்கிறார்கள். யாராவது நாட்டில் எட்டு என்று சொல்லி விட்டால் போதும். அவ்வளவு தான் எங்கிருந்துதான் வருவார்களோ தெரியாது. படைவீரர்கள் வந்து கைது செய்து  ராஜாவின் முன்னால் நிறுத்தி விடுவார்கள். ராஜா என்ன என்று கூட கேட்க மாட்டார். ஐந்து டுட்டு கசையடி கொடுக்கச்சொல்லி ஆணையிடுவார். அந்த நாட்டில் எட்டு எப்படி டுட்டுவாச்சு? மாணவர்கள் ரகசியமாய் உறங்கும்போது அப்பாஅம்மாவிடம் கேட்பார்கள். அவர்களும் வாயை மூடிக்கொண்டு அந்தக்கதையைச் சொன்னார்கள். வாயைத்திறந்தால் அவ்வளவுதான். திடீரென்று வீட்டுக்குள் ராஜாவே வந்து விடுவாரே. அந்த பயம் தான்.
 சரி. சரி . கதைக்கு வருவோம்.
முன்பு ஒரு காலத்தில் எட்டூர் என்ற பெயர் இருந்தபோது, நடந்த கதை. அந்த எட்டூர் நாட்டில் விவசாயம் தான் முக்கியமான தொழில். அந்த நாட்டு மக்கள் எல்லோரும் நெல், கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, குதிரைவாலி, சாமை, சோளம், எள், உளுந்து, துவரை, கடலை, என்று பயிர் செய்வார்கள். அதே போல கத்தரி, வெண்டை, வெங்காயம், பச்சைமிளகாய், பூசணிக்காய், தடியங்காய், புடலங்காய், சுரைக்காய், முருங்கைக்காய், என்று காய்கறிகளைப் பயிர் செய்வார்கள். கருணைக்கிழங்கு, சிறுகிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு, போன்ற கிழங்குகளையும் பயிரிட்டார்கள். காலையில் ஆறு மணிக்கு விவசாய வேலைகளுக்காக காடுகரைகளுக்கு மக்கள் போவார்கள். மாலை ஆறு மணிக்கு வீடு திரும்பி சமையல் செய்து சாப்பிட்டுத் தூங்குவார்கள். எட்டூர் நாடு முழுவதும் பச்சைப்பசேல் என்று மரங்கள், செடிகொடிகள், மலைகள், அருவிகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள், கண்மாய்கள், குட்டைகள், என்று நாடு செழிப்பாக இருந்தது.
 பக்கத்து நாடான கொடுக்கா சும்மா இருக்குமா? எப்படியாவது எட்டூரை தன்னுடைய  அடிமை நாடாக மாற்றி விடவேண்டும் என்று திட்டம் போட்டது. கிட்டுராஜா யார் சொன்னாலும் கேட்பார். என்ன சொன்னாலும் கேட்பார். அவருக்கு மூன்று வேளையும் பீட்சாவும் பர்கரும் வேண்டும். மற்றபடி எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார். அதனால் எட்டூர் அரசாங்க அதிகாரிகள் தங்கள் விருப்பப்படி சட்டம் போடுவார்கள்.
இனி யாரும் யாருடனும் பேசக்கூடாது. பேசினால் ஐம்பது கசையடி.
தனியாக காட்டுக்குள் போய் தனியாகப் பேசிக்கொள்ளலாம்.
ராஜாவைப்பார்க்க யாரும் வரக்கூடாது.
வந்தால் அவர்கள் பேசாமல் தலையை மட்டும் ஆட்ட வேண்டும்.
என்று ஏராளமான சட்டங்கள் போட்டார்கள். கொடுக்கா நாட்டு ஒற்றர்கள் எட்டூர் நாட்டு வளமைக்கு காரணம் என்ன என்று ஒற்று அறிய வந்தார்கள். ஒரு வாசனைத் திரவியத்தைக் கொடுத்ததும் அரசாங்க அலுவலர்கள் எல்லாவற்றையும் சொல்லி விட்டார்கள்.
எட்டூர் நாட்டின் எட்டு வழிகளிலும் எட்டு ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. வற்றாத அந்த ஆறுகளால் எட்டூரில் எப்போதும் விவசாயம் நடந்து கொண்டேயிருக்கும். மக்களும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.
உடனே கொடுக்கா நாட்டு ராஜா கொடுக்கு எட்டூருக்கு வருகை புரிந்தார். எட்டூர் ராஜா கிட்டுவுக்கு உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் பீட்சாவும், பர்கரும், வாங்கிக்கொண்டு வந்து பரிசாகக் கொடுத்தார். அதைப்பார்த்த கிட்டு ராஜாவுக்கு வாயில் எச்சில் வழிந்தது. அந்த நேரத்தில் எட்டு ஆறுகள் ஓடும் பாதைகளில் எட்டு பாலங்களை கொடுக்கா நாட்டிலிருந்து கட்ட வேண்டும். அப்படிக் கட்டி விட்டால் உலகின் எட்டு திசைகளிலிருந்தும் மூன்று வேளையும் சுடச்சுட பீட்சாவும் பர்கரும், சாண்ட்விச்சும் உடனுக்குடன் வந்து சேரும். ராஜா மட்டுமல்ல மக்களும் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போய் வரலாம் என்று சொன்னார். கிட்டு ராஜா யோசிக்கவே இல்லை. உடனே கொடுக்கா நாட்டுடன் ஒப்பந்தம் போட்டு விட்டார்.
அவ்வளவு தான் ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளில் மண்ணைக் கொண்டு வந்து கொட்டினார்கள். மக்கள் அலறி அடித்துக் கொண்டு கிட்டு ராஜாவிடம் போய் முறையிட்டாரகள்.
ஆறுகள் இல்லை என்றால் விவசாயம் இல்லை ராஜாவே
விவசாயம் இல்லை என்றால் உணவில்லை ராஜாவே
உணவில்லை என்றால் உயிர்வாழ முடியாது ராஜாவே
என்று கதறினார்கள். அப்போது தான் பொரித்திருந்த பிஎஃப்சி கோழித்துண்டை கடித்து இழுத்துக்கொண்டிருந்த கிட்டு ராஜா புது ஆறுகளை உருவாக்குவோம் என்றார். நாடு முழுவதும் மக்கள் அழுதனர். எங்குபார்த்தாலும் எட்டு ஆறுகளைப் பற்றியே பேசினார்கள்.
அன்றிலிருந்து தான் கிட்டு ராஜா எட்டு என்ற எண்ணையே நாடு கடத்தி விட்டார்,
மக்களின் அழுகுரல் கேட்டு எட்டு ஆறுகளின் எட்டு தேவதைகளுக்கும் கோபம் வந்தது. எல்லோரும் ஒன்று சேர்ந்து ஆறுகளின் மீது கொட்டப்பட்ட மணலை ஊதினார்கள். அந்த மணல் எல்லாம் எட்டு திசைகளில் இருந்தும் கிட்டு ராஜா அரண்மனை மீது கொட்டியது. மணல் மழை மாதிரி கொட்டி அரண்மனையை மூடி விட்டது. கொடுக்கா நாட்டை மக்கள் விரட்டி அடித்தனர். எட்டூர் நாட்டு மக்களே எட்டூர் நாட்டை ஆட்சி செய்தனர். எட்டு ஆறுகளின் தேவதைகளும் மழை பொழிந்து வாழ்த்தினார்கள்.
அட! கிட்டு ராஜா எங்கே?
தப்பித்தோம்.. பிழைத்தோம் என்று தலை தெறிக்க அதோ ஓடிக்கொண்டிருக்கிறார் கிட்டு ராஜா.
நன்றி - வண்ணக்கதிர்



Thursday 13 September 2018

கிருஷ்ணனின் வேஷம்


  கிருஷ்ணனின் வேஷம்

மலையாளத்தில் - மாதவிக்குட்டி
தமிழில் - உதயசங்கர்


இரவின் முக்கால்பாகமும் கழிந்தபிறகு வெறுமையாயிருந்த மேடையை நோக்கி ஒரு இளைஞன் தயக்கத்துடன் நடந்து சென்றான்.
இடப்புறத்தில் திரைச்சீலைக்கு அருகில் பழுதான ஸ்விட்சின் காரணமாக ஒரு பல்பு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. யாருமில்லாத நாடக சபையில் மூன்றாவது வரிசையில் ஒரு குடிகாரன் தன்னுடைய தலையை நெஞ்சில் சாய்த்து உறங்கிக்கொண்டிருந்தான்.
எல்லா வார்த்தைகளும் உச்சரிக்கப்பட்டு விட்டன.
எல்லா நடனங்களும் முடிந்து விட்டன.
எல்லா கானங்களும் நின்று விட்டன.
பார்வையாளர்களும் போய் விட்டனர்
இந்த அசந்தர்ப்பத்தில் நீ எதற்காக வந்தாய்?
மகாவேடங்கள், சிரித்தும் அட்டகாசம் செய்தும், கர்ஜனை செய்தும் புயற்காற்று போல சப்தங்கள் நிறைந்திருக்கும் இந்த மேடையில் அமைதியானவனும் இளைஞனுமான நீ எதற்காக வந்தாய்?
சுவரின்மேல் சிவந்த வெற்றிலை எச்சில் கறைகள் தரையில் சிகரெட்டுத்துண்டுகள், ஒப்பனையறையில் வெளுத்துப்போன வண்ணக்கலவைகள், நாடகசபையில் குடிகாரனின் குறட்டைச்சத்தம். பெயர்ந்து விழுவதற்குத் தயாராக இருக்கிற மேற்கூரையில் காற்றின் கிறீச்சிடல்கள்.
“ நீ இவ்வளவு சீக்கிரம் ஏன் வந்தாய்? நீ எந்த வேடத்தில் நடிப்பதற்கு உத்தேசித்திருக்கிறாய்? உன்னுடைய கையில் ஆயுதங்களில்லை. உன்னுடைய தலையில் கிரீடமுமில்லை.
உன்னுடைய முகத்தில் வன்ணப்பூச்சில்லை. உன்னைப்பார்த்தால் ஒரு நடிகன் என்று யாரும் சொல்லமுடியாதல்லவா?
“ உன்னுடைய பெயர் என்ன? “
“ நான் கிருஷ்ணன்.. நான் நானாக நடிக்கிறேன்..”
“உன்னை எங்கேயோ முன்பு ஒரு காலத்தில் பார்த்திருக்கிறேன் என்று எனக்குத் தோன்றுகிறது..”
“ ஆனால் அது சாத்தியமில்லை. நீ சிறியவன். இந்த முகத்தை நான் பார்த்திருக்கிறேனா? கஷ்டம்! எனக்கு ஞாபகம் வரவில்லையே. ஆனால் ஒரு விஷயம் உறுதி. உன்னுடைய பெயரை முன்பு எங்கேயோ நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.”

Tuesday 11 September 2018

புனிதப்பசு


புனிதப்பசு

மலையாளத்தில் - மாதவிக்குட்டி
தமிழில் - உதயசங்கர்
ஒரு நாள் ஒரு பையன் ரோட்டுக்குப்பக்கத்திலிருந்த குப்பைத்தொட்டியில் கிடந்த வாழைப்பழத்தோல்களை எடுத்துத் தின்று கொண்டிருந்தபோது ஒரு பசு அவனுக்கு அருகில் வந்தது. அவன் கையிலிருந்த பழத்தோலைக் கடித்து இழுத்தது.
பையனுக்குக் கஷ்டமாகி விட்டது. அவன் பசுவை விரட்டினான். பசு உரக்கக்கத்திக்கொண்டே ரோட்டில் ஓடியது.
உட்னே சாமியார்கள் தோன்றினார்கள்.
“ புனித மிருகமான பசுவினை நீயா தொந்தரவு செய்தாய்? “
என்று அவர்கள் பையனிடம் கேட்டார்கள். அதற்கு அந்தப்பையன்,
“ நான் தொந்தரவு செய்யலை.. நான் தின்னுக்கிட்டிருந்த பழத்தோலை அந்தப்பசுதான் கடித்து இழுத்தது. அதனால் நான் அதை விரட்டி விட்டேன்…”
என்று சொன்னான். உடனே சாமியார்கள்,
“ உன்னுடைய மதம் எது? என்று கேட்டனர். அதற்கு அந்தப்பையன்,
“ மதமா.. அப்படின்னா என்ன? “ என்று கேட்டான்.
“ நீ இந்துவா? முஸ்லீமா?.. கிறிஸ்தவனா? நீ கோவிலுக்குப்போவாயா? சர்ச்சுக்குப் போவாயா? “ என்று சாமியார்கள் கேட்டனர்.
“ நான் எங்கேயும் போகமாட்டேன்..” என்று அந்தப்பையன் சொன்னான். உடனே அவர்கள்,
“ அப்படின்னா நீ கடவுளை நம்பல இல்லையா? “ என்று கேட்டனர். அதற்குப் பையன்,
“ நான் எங்கேயும் போகமாட்டேன்.. எனக்குச் சட்டை கிடையாது.. என்னுடைய டவுசரின் பின்னால கிழிஞ்சிருக்கு..”
என்று சொன்னான். உடனே சாமியார்கள் ஒருமித்த ஒரே குரலில்,
“ நீ முஸ்லீம்தான்.. புனிதப்பசுவினைத் துன்புறுத்தி விட்டாய்..” என்று கூறினர்.
அதைக்கேட்ட அந்தப்பையன்,
“ நீங்கள் பசுவுக்குச் சொந்தக்காரர்களா? “ என்று கேட்டான்
சாமியார்கள் அந்தப்பையனின் கழுத்தை நெறித்துக்கொன்று அந்தக்குப்பைத்தொட்டியிலேயே போட்டார்கள். பின்னர் அவர்கள் எல்லோரும் ஒரே குரலில்,
“ ஓம் நமச்சிவாய.. உங்கள் திருநாமம் போற்றப்படுவதாக..”
என்று கூவினார்கள்.

Sunday 9 September 2018

கிழட்டு ஆடு



கிழட்டு ஆடு
மலையாளத்தில்- மாதவிக்குட்டி

தமிழில்- உதயசங்கர்

அவளுடைய நாற்பத்தி மூன்றாவது வயதில் மூத்த மகன் வேடிக்கையாக, “ அம்மா.. உங்களைப்பாத்தா.. ஒரு கிழட்டு ஆட்டைப்பாக்கிற மாதிரியே இருக்குதும்மா..” என்று சொன்னான். அவளும் அவனுடைய சிரிப்பில் சேர்ந்து கொண்டாள். ஆனால் அன்று அவர்கள் எல்லோரும் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு, அவள் கண்ணாடியை எடுத்து கவலையோடு தன்னுடைய முகத்தைப் பரிசோதித்தாள். தன்னுடைய ஒட்டிய கன்னங்களில் மறுபடியும் சதை வைக்க ஏதாவது வழியிருந்தால் தன்னுடைய வாழ்க்கையும் அதோடு சேர்ந்து புஷ்டியாகும் என்று அவளுக்குத் தோன்றியது. இளமையும் அழகும் இருந்த காலத்தில் அவள் தரையில் பாய் விரித்துப் படுத்துறங்கியது கிடையாது. ஆனால் ஒவ்வொன்றையும் நினைத்துக் கண்ணாடியைப்பார்த்துக்கொண்டே இருப்பதற்கு அவளுக்கு மனசு வரவில்லை. அடுப்பில் பால் பொங்கத்தொடங்கிவிட்டது.
காலை முதல் நடுநிசி வரை ஓய்வில்லாமல் வேலைசெய்து அவள் குடும்பத்தை வளர்த்து வந்தாள். மெலிந்து வெளுத்துப்போய் அங்கேயிங்கே ஒடிந்து போனமாதிரியிருந்தது அவளது தேகம். ஆனால் அவள் ஒருதடவை கூட தளர்ந்து படுக்கையில் விழவோ, ஆவலாதிகள் சொன்னதோ கிடையாது. அதனால் அவள் தண்ணீர் நிறைந்த குடங்களைத் தூக்கிக்கொண்டு குளியலறைக்கு நடந்தலையும்போது அவளுடைய கணவனோ, வளர்ந்த பெரிய மகன்களோ, உதவி செய்ய முனைந்ததில்லை. அவள் படிப்பும் நாகரீகமும் இல்லாதவள். வீட்டைப்பெருக்கித் துடைத்துச் சுத்தப்படுத்தவும், சமையல் செய்யவும், துணிமணிகளைத்துவைத்து இஸ்திரி போட்டு வைக்கவுமான அவளது திறமையைப் பற்றி அவர்கள் எப்போதாவது இடையிடையில் புகழ்ந்து பேசுவார்கள். அந்தப்பாராட்டைக் கேட்கும்போதெல்லாம் தன்னுடைய தேய்ந்த பற்களைக்காட்டி அவள் புன்சிரிப்பைத் தூவுவாள். ஒருதடவை அவளுடைய இளையமகன் ஸ்கூலிலிருந்து வரும்போது அவளுக்காக ஒரு நெல்லிக்காயைக் கொண்டு வந்தான். அன்று அடுக்களை இருட்டில் நின்று ஆனந்தக்கண்ணீர் சொரிந்தாள். நாளாவட்டத்தில் அவனுடைய பார்வையிலும் அவள் ஒரு பிசாகி விட்டாள். ஸ்கூலில் நடக்கிற டிராமா பார்ப்பதற்கு அவளும் வருவதாகச் சொன்னபோது,
“ அம்மா நீ வரவேண்டாம்.. எனக்கு அவமானமாக இருக்கும்…”
என்று அவன் சொன்னான். அதற்கு அவள்,
“ ஏன் அப்படிச்சொல்றே..நான் பட்டுச்சேலை கட்டிட்டு வரேன்.. என்னோட கல்யாணச்சேலை..”
என்று சொன்னான். அதற்கு அவன்,
“ இல்லை.. வேண்டாம்..”
என்று சொல்லிவிட்டான். மெலிந்த கால்கள் இரண்டு அறைகளுக்குள்ளே அந்தச் சிறிய வீட்டில் ஓய்வில்லாமல் நடந்து கொண்டேயிருந்தன. முடிவில் அந்த இயந்திரத்துக்கும் கேடு வந்தது. அவளுக்குக் காய்ச்சலில் ஆரம்பித்து வயிற்றில் வலியும் துவங்கியது. இஞ்சிச்சாறும், மிளகுரசமும், அவளுக்கு உதவவில்லை. பத்தாவது நாள் டாக்டரிடம் காண்பித்தபோது, அவர்
“ இவங்களை உடனே ஆஸ்பத்திரிக்குக்கொண்டு போகணும்… இது சீரியஸான மஞ்சள்காமாலை கேஸ்..”
என்று சொன்னார். பாடப்புத்தகங்களூக்கு நடுவில் உட்கார்ந்திருந்த மகன்கள் அதைக்கேட்டதும் நடுங்கினார்கள். ஒரு பணியாளர் அவளை சக்கரக்கட்டிலில் படுக்கவைத்து தள்ளிக்கொண்டு ஆஸ்பத்திரி அறைக்குள் நுழைந்தபோது கண்களைத்திறந்த அவள்,
“ அய்யோ பருப்பு கருகிப்போச்சு..”
என்று சொன்னாள். அவளுடைய கணவரின் கண்கள் நனைந்தன.



Wednesday 1 August 2018

அக்கரையும் இக்கரையும்


அக்கரையும் இக்கரையும்
ஜப்பானிய நாடோடிக்கதை
மலையாளத்தில்- பெரம்பரா
தமிழில் - உதயசங்கர்


முன்பு ஒரு காலத்தில் ஜப்பான் நாட்டில் ஒசாகா நகரத்தில் ஒரு கிணற்றில் ஒரு தவளை வாழ்ந்து வந்தது. இன்னொரு நகரமான டோக்கியோவில் மற்றொரு தவளை கடலுக்கு அருகில் உள்ள ஒரு அருவியில் வாழ்ந்து வந்தது. இரண்டு தவளைகளும் வெளி உலகம் தெரியாமல் தங்கள் இடத்திலேயே வாழ்ந்து வந்தனர்.
கொஞ்சநாள் கழிந்தபிறகு ஒசாகா நகரத்துத் தவளைக்கு டோக்கியா நகரத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. அதே போல டோக்கியா நகரத்துத்தவளைக்கு ஒசாகாவைப்பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. இந்த ஆவல் இரண்டு தவளைகளிடமும் பெரிதாக வளர்ந்தது. ஒரு பனிக்காலத்தில் இரண்டு பேரும் தங்களுடைய இருப்பிடங்களை விட்டு வெளியே கிளம்பினர்.
பயணத்தில் நிறைய துன்பங்கள் வந்தன. முதலில் அவர்கள் இப்போதுதான் இவ்வளவு தூரம் வெளியே பிரயாணம் செய்கிறார்கள். அதுமட்டுமல்ல. வழியைப் பற்றியும் சரியாகத் தெரியவில்லை. இடையில் ஒரு பெரிய மலையில் ஏறி இறங்க வேண்டி வந்தது. அந்த மலை ஒசாகாவுக்கும் டோக்கியாவுக்கும் நடுவில் இருந்தது. அவர்கள் மலையின் உச்சிக்கு ஏறி விட்டனர். அப்போது தான் இரண்டு தவளைகளும் ஒருவருக்கொருவர் பார்க்கின்றனர். உடனே இருவரும் பேசிக்கொண்டனர். ஏன் தாங்கள் இவ்வளவு தூரம் பிரயாணம் செய்தோம் என்று இரண்டு பேரும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். பின்பு இரண்டுபேரும் நல்ல நண்பர்களாகி விட்டனர்.
நண்பர்களாக ஆனதும் மலையின் உச்சியில் ஒரு இடத்தில் ஓய்வு எடுத்தனர். அவ்வளவு தூரம் கடந்து வந்ததினால் சோர்வு இருக்கும் அல்லவா?
“ கடவுள் நம்மை இவ்வளவு சின்னதாய் படைத்திருக்கக்கூடாது.. எவ்வளவு கஷ்டம்? அப்படி இல்லைன்னா.. இந்தக்குன்றின் மேல் நின்று நாம் இரண்டு நகரங்களையும் நன்றாக பார்க்கலாம்.. அப்ப இனிமே மீதி தூரம் பிரயாணம் பண்ணாமல் இருக்கலாம்..”
என்று ஒசாகா தவளை கூறியது. அதற்கு டோக்கியோ தவளை,
“ அதுக்கு ஏன் துக்கப்படணும்.. நான் என் பின்னங்கால்களில் உயரமாய் நிற்கிறேன்.. நீ என்னுடைய தோளில் ஏறி நின்றால் போதும்..பிறகு நான் உன்னுடைய தோளில் ஏறி நிற்கிறேன்.. அப்படி நாம் இரண்டு நகரங்களையும் பார்த்து விடலாம்..”
என்று சொன்னது. அந்த யோசனை ஒசாகா தவளைக்கு மிகவும் பிடித்தது. உடனே அது டோக்கியோ தவளையின் தோளில் ஏறி நின்றது. முடிந்தவரை கால்களை உயர்த்தி நின்றது. விழாமல் இருப்பதற்காக ஒசாகா தவளை டோக்கியோ தவளையின் தலையை இறுக்கிப்பிடித்தது. அப்போது ஒசாகா தவளையின் மூக்கு ஒசாகாவைப் பார்த்து திரும்பிவிட்டது. டோக்கியோ தவளையின் மூக்கு டோக்கியோவைப்பார்த்து திரும்பி விட்டது. இரண்டு தவளைகளின் கண்கள் தலையின் பின்னால் இரண்டு பக்கமும் இருந்ததால் அவர்கள் பார்க்க வேண்டிய நகரம் மாறிவிட்டது.
“ பாரு டோக்கியோ நகரம் அப்படியே ஒசாகா மாதிரியே இருக்கு.. அதனால் இனிமேல் பிரயாணம் போகவேண்டிய அவசியம் இல்லை. நாம் திரும்பிப்போகலாம்..”
ஒசாகா தவளை சொன்னதைக்கேட்டு, டோக்கியோ தவளையும் பார்த்தது.
“ சரிதானே! ஒசாகா நகரம் அச்சு அசல் டோக்கியோ மாதிரியே இருக்கு.”
அப்படி இரண்டு பேரும் ஆசைப்பட்ட நகரங்களைப் பார்த்த திருப்தியுடன் அவரவர் இடங்களை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தனர்.

நன்றி - மாயாபஜார் தமிழ் இந்து


Saturday 14 July 2018

கி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...


கி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...

உதயசங்கர்

கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு அரைமணிநேரம் மழை பெய்தது. காய்ந்து, கருகி, வெட்டை வெட்டையாய் விருவுகள் தெரிய நிதங்குலைந்து சுடுகாடு போல கொடூரமான அமைதி நிலை கொண்டிருந்த கரிசலில் உயிர்கள் துடிக்கத் தொடங்கின. வெயிலின் இசை முடிந்து விட்டது. ஒரே மாதிரி ராகம், தாளம், சுருதி, எதுவும் இல்லாத இசை. உடலையும் மனசையும் உருக்கும் இசை. கரிசல் காட்டு விவசாயி காட்டை உழுது காத்திருக்கிறான். உப்பு படிந்த வியர்வை அவனுடைய வீட்டின் தரையெங்கும் அவனுடைய உழைப்பைப் பற்றி ஓவியம் வரைந்து கொண்டிருந்தது. இன்று மழை. இடி. மின்னல். அவன் உடலும் உள்ளமும் குளிர்ந்தது. இனி காதுகளைக்கிழிக்கும் அந்த வெயிலின் இசை முடிவுக்கு வரும். அவன் உழுது போட்டிருக்கிற நிலத்திலிருந்து புதிய புதிய உயிர்கள் தோன்றும்.
 ராத்திரி ஒரே சத்தக்காடு. இரவு ஒரு இசைக்கச்சேரிக்குத் தயாராகிறது. கருமை கூடியிருக்கிற இந்த இரவில் நான் குமாரபுரம் ஸ்டேஷனில் நின்று எதிரே தெரியும் கரிசல் வெளியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இத்தனை நாள் தியானத்திலிருந்த உயிர்கள் மழையின் ஈரம் பட்டதும் உறக்கம் கலைந்து எழுந்தது போல ஒன்று போல மழலைக்குரலில் பேசுகின்றன. விதம் விதமான  ஏற்ற இறக்கங்களோடு பூச்சிகள் இசைக்கும். சிம்பனி இசை கரிசலின் மகத்துவத்தைச் சொல்கிறது. அந்த இசையின் ஸ்வரத்தில் நான் என்னை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருக்கிறேன். என் எதிரே தூரத்தில் விளக்கின் வெளிச்சம் மினுக்குகிறது. அது இடைசெவலில் புறப்பட்டு தமிழிலக்கியத்தில் பாய்ச்சிய புதிய  வெளிச்சம் என்று நம்புகிறேன்.
இடைசெவலிலிருந்து தமிழ் இலக்கியவெளியில் பரவிய புதிய வெளிச்சம் தமிழிலக்கியத்தைத் தலைகீழாய் புரட்டிப்போட்டது.  புதிய பாதைகளை உருவாக்கியது. அதுவரை மடிசஞ்சியான மத்திய தரவர்க்கத்தின் சடவுகளையே பாடுபொருளாகக் கொண்டிருந்த இலக்கியம் முதன்முதலாக கிராமங்களின் உயிர்வெளியைக் காட்டியது. சிறுகீறலாக ஷண்முகசுந்தரம் துவங்கிய அந்தக்கொழுமுனை இடைசெவலில் கி.ராவின் கைகளின்வழியே ஆழமாகவும் அகலமாகவும் உழுது ஏராளமான புதையல்களை வெளிக்கொண்டுவந்தது. யாரும் சென்றிராத தாம்போதிகளின் வழியே சென்று நாட்டார் இலக்கியத்தை, வட்டாரச்சொல் அகராதியை, பாலியல் கதையாடல்களை, சிறுவர் கதைகளை, சேகரித்து பண்பாட்டுக்களத்தில் புதிய காற்றாய் வீசிய அந்தப்புயல் இடைசெவலில் மையம் கொண்டிருந்தது. ஒரு பல்கலைக்கழகத்தின் ஒட்டு மொத்தப்பணிகளை தன் தோள்களில் சுமந்த கி.ரா. என்ற கி.ராஜநாராயணன் தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் ஏராளமான கொடைகளைத் தந்துள்ளார்.
வட்டார வழக்குகளை, விளையாட்டுகளை, சொற்பிரயோகங்களை, நாட்டார் கதைகளை, சிறுவர் கதைகளை, பெண் கதைகளை, நவீனக்கதைகளை, வேளாண் சமூக வரலாற்றை, களஞ்சியத்தை, தமிழுக்கு அளித்துள்ள மகத்தான ஆளுமை கி.ரா.
2.
1980- ஆம் ஆண்டு. கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு பரீட்சை எழுதி முடித்திருந்த சமயம். அதுவரை வீட்டுக்கு அருகில் இருந்த காந்திமைதானத்தில் நடக்கும் அரசியல் கூட்டங்களையும், இலக்கியப் பட்டிமன்றங்களையும், கவியரங்கங்களையும் ஆச்சரியத்துடன் வாய்பார்த்து கொண்டிருந்த எனக்குள்ளும் எழுத வேண்டும் என்ற பேராசைப்பேய் பிடித்தது. எல்லோருக்கும் போல கலாமோகினி கவிதையரசியை என்னிடம் அனுப்பி வைத்தாள். அவளுடைய கடைக்கண் பார்வை ஏற்படுத்திய ஹார்மோன்களின் துடிப்பினால் ஆழம் தெரியாமல் தமிழின் கரைகாண கடலுக்குள் குதித்தேன். நீச்சலும் தெரியாது. உயிரைத் தக்கவைக்க தத்தக்கா பித்தக்கா என்று கையையும் காலையும் அடித்துக் கொண்டிருந்தபோது தான் நண்பர் மாரீஸ் பள்ளிப்பிராயத்துக்குப் பிறகான நீண்ட இடைவெளியைக் கடந்து வந்து என்னைச் சந்தித்தார்.
அவர் தான் கோவில்பட்டி எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். தேவதச்சன், கௌரிஷங்கர், பிரதீபன், வித்யாஷங்கர், அப்பாஸ், ராமு, முருகன், நாடக நடிகர் மனோகர், பசப்பல் ராஜகோபால், என்று ஒரு குழாமை அறிமுகப்படுத்தினார். நிறைய புத்தகங்களையும் சிற்றிதழ்களையும், கையெழுத்துப்பத்திரிகைகளையும் வாசிப்பதற்கான சூழ்ந்லை கிடைத்தது. அப்போது நயினாவின் வேட்டி சிறுகதைத் தொகுப்பும், வாசகர் வட்டம் வெளியிட்ட கோபல்லகிராமம் நாவலும் வாசித்தேன். என்னால் நம்பமுடியவில்லை. அந்த மொழி, நடை, உத்தி, எல்லாம் புதுமையாக இருந்தது. மூளையின் அணுக்களில் ஒரு புதிய உணர்வு தோன்றியது. நான் அதைப்பற்றி என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தேன். கேட்டுக்கொண்டிருந்த மாரீஸ்
“ நாளைக்கி இடைசெவல் போவோம்… “ என்றான். மறுநாள் காலை நானும் அவனும்  இடைசெவலுக்குப் போனோம். நயினாவைச் சந்திக்கும்வரை எனக்கு எழுத்தாளர்களைப் பற்றி இருந்த சித்திரம் மிக மிக விசித்திரமானது. ஒழுங்கற்ற, விட்டேத்தியான, அசாதாரண நடைமுறை வாழ்க்கையும், பழக்கவழக்கங்களும் கொண்டவர்கள் என்று நினைத்திருந்தேன். அதில் பெருமளவு உண்மை இருந்ததை யதார்த்தத்திலும்  கண்டேன். ஆனால் நயினாவின் வீட்டில் என்னுடைய கற்பனைக்கு மாறான ஒழுங்கும் நேர்த்தியும் இருந்தது. புத்தகங்கள் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கடிதங்கள் தேதிவாரியாக இருந்தன. நயினாவின் சாய்வு நாற்காலித்துணி சுத்தமாக இருந்தது. வீட்டின் உள்ளே முற்றத்தில் இருந்த தொழுவம் சுத்தமாக இருந்தது. அமைதியும் சுத்தமும் அங்கே கோலோச்சிக் கொண்டிருந்தது.
ஈரிழைத்துண்டை மார்பில் போட்டமானிக்கு நயினா வந்து எங்களை வரவேற்றார். வெளியே பார்த்த சன்னலுக்கு எதிரே இருந்த சாய்வு நாற்காலியில் நயினா உட்கார்ந்தார். சன்னலில் இருந்து செய்யது பீடிக்கட்டை எடுத்தார். ஒவ்வொரு பீடியாக உருட்டிப்பார்த்து சில பீடிகளை ஒதுக்கினார். தேர்வு செய்த பீடிகளிலிருந்து ஒரு பீடியை எடுத்து அந்தப்பீடிக்கட்டுக்கு அருகிலேயே இருந்த கத்தரிப்பானால் அதன் சுருண்டு மடங்கியிருந்த நுனியைக் கத்தரித்தார். பின்னர் பீடியைப் பற்ற வைத்து இழுத்தார். அவருடைய இந்தச் செய்கைகள் எல்லாம் ஒரு தியானம் போல நடந்தது. நான் திறந்த வாய் மூடாமல் அவருடைய ஒரு அணக்கத்தையும் கவனித்துக் கொண்டிருந்தேன்.
மாரீஸ் மிக சகஜமாக நயினாவிடம் பேசினான். அடுக்களைக்குப் போனான். கணவதியம்மாவிடமிருந்து மோர் வாங்கி வந்தான். நாங்கள் குடித்தோம். நயினா மெல்லியகுரலில் நிறைய சங்கதிகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். ஒன்றிலிருந்து ஒன்றாக தொட்டுத் தொட்டு பேசிக்கொண்டிருந்தார். எனக்கு அப்போது அவர் பேசியதில் கொஞ்சமாவது புரிந்ததா என்று தெரியவில்லை. அமைதியாக அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
அப்போது தான் கரிசல் வழக்குச்சொல் அகராதியைத் தொகுத்து வருவதாகச் சொன்னார். கிளிப் வைத்த பரீட்சை அட்டையில் நிறையக் காகிதங்களில் கரிசல் வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன.
“ அகர வரிசைப்படி எழுதறது பெரிய வேலையா இருக்கு.. நீங்க அதைச் செய்ய முடியுமா?..”
என்று கேட்டார். எங்களுக்குத் தலைகால் புரியவில்லை. மறுநாளிலிருந்து ஒருபத்து நாட்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். மாரீஸ், முருகன், நான், முன்றுபேரும் காலையில் பத்துமணிக்குப் போய்விடுவோம். போனதும் ஒரு கடுங்காப்பி அல்லது மோர், மதியம் நல்ல சாப்பாடு, சாயந்திரம் கருப்பட்டிக்காப்பியும் காராச்சேவும் சாப்பிடுவோம். நாலு ஐந்து மணி வரைக்கும் உட்கார்ந்து எழுதிக்கொடுப்போம். எழுதியது கொஞ்சம் தான் பேசிக்கொண்டிருந்தது தான் அதிகம் என்று நினைக்கிறேன்.
கோவில்பட்டியில் கௌரிஷங்கர், தேவதச்சன், மனோகர், வித்யாஷங்கர், மாரீஸ், உதயசங்கர், நாறும்பூநாதன், சாரதி, முத்துச்சாமி, அப்பணசாமி, முருகன், எல்லோரும் சேர்ந்து சிருஷ்டி என்று ஒரு வீதி நாடகக்குழுவை உருவாக்கினோம். அதில் மௌனநாடகமாக பேரா.ராமனுஜத்தின் இசைநாற்காலி, தேவதச்சனின் பத்துரூபாய், பூமணியின் வலி, என்று நாடகங்களை உருவாக்கியிருந்தோம். தமிழ்நாட்டில் அப்போது தான் வீதி நாடகக்குழுக்கள் அங்கொன்றுமாய் இங்கொன்றுமாய் உருவாகிக்கொண்டிருந்த நேரம். சிருஷ்டி கலைக்குழுவின் நாடகங்களின் முதல் அரங்கேற்றம் இடைசெவலில் தான் நிகழ்ந்தது. ஒரு மாலைவேளை நயினா தன்னுடைய மெல்லிய குரலில் சத்தமாக
“ கோவில்பட்டியிலிருந்து நாடகம் போட வந்திருக்காங்க… வாங்க..வாங்க… “ என்று ஊர் அழைப்பு செய்ய கோவிலுக்கு முன்னால் இருந்த மந்தைத்திடலில் கூட்டம் கூடிவிட்டது. அங்கே பேண்ட், சட்டை, ஸ்டெப் கட்டிங், ஹீல்ஸ் செருப்பு, போட்டிருந்த இளைஞர்கள் நாங்கள் நாடகங்களை அரங்கேற்றினோம். நாடகநிகழ்வுக்குப்பின்னால் நாடகவிமரிசனமும் நடந்தது. அதே போல சமீபத்தில் அமரரான கவிஞர், ஓவியர், அஃக் பரந்தாமனை அழைத்து பிக்காசோ நூற்றாண்டு ஓவியக்கண்காட்சி நடத்தினோம். கார்ட்டூன் கண்காட்சி ஒன்றும் நடத்தினோம். கோவில்பட்டியில் கலை, இலக்கிய பண்பாட்டு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டேயிருந்தன. கரிசல் இலக்கியத்தின் காத்திரமான படைப்பாளிகளாக உருவாகிக் கொண்டிருந்தோம். நயினா எல்லோரிடமும் மிகப்பெருமிதமாக கரிசல் இலக்கியப்படை பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். பூமணி தன்னுடைய நாவலில் அவரை தன்னுடைய முன்னத்தி ஏர் என்றார். நாங்கள் நயினாவை எங்கள் பிதாமகராகப் போற்றினோம்.
கோவில்பட்டியில் மிகப்பெரிய எழுத்தாளர்குழாம் உருவாகவும் எல்லாவிதகலை முயற்சிகளைச் செய்து பார்க்கவும் நயினா பின்னணியில் எங்களுக்கு ஊக்கசக்தியாக இருந்தார் என்பதில் எள்ளளவும் மிகையில்லை.
3.

குமாரபுரம் ஸ்டேஷனுக்கு வெளியே வேம்பின் அடியில் கிடக்கும் சிமெண்ட் பெஞ்ச் காலத்தின் கரையேறிக் கிடக்கிறது. காலத்தின் பழுப்பு நிறத்தின் சிதறல்களில் கு.அழகிரிசாமியும் அவருடைய அத்யந்த நண்பரான கி.ரா.வும் சிறுவர்களாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். காற்றில் வேம்பின் மஞ்சள் நிறப்பழங்கள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன. எதிரே விரிந்து வானத்தை அண்ணாந்து பார்த்து குடைபிடித்துக் கொண்டிருக்கும் கருவை மரத்தில் ஒரு கொண்டைக்குருவி கீச்சிட்டுக் கொண்டிருக்கிறது. கி.ரா. அந்தக்குருவியை உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறார். பூஞ்சிட்டுகள் அருகிலிருந்த பன்னீர் மரத்தில் கிளைகளில் தவ்விக் கொண்டிருந்தன. கு.அழகிரிசாமியின் தொண்டையிலிருந்து ஏதோ ஒரு ராக ஆலாபனை மெல்ல எட்டிப்பார்க்கிறது. விளாமரத்தின் கிளையில் ஒரு குயில் கூவிக்கொண்டிருக்கிறது. கி.ரா. என்ற வெங்கடேசுக்கு பறவைகளின் மீது அலாதி ஆர்வம் தோன்றுகிறது. எதிரே இருக்கும் புதரிலிருந்து எட்டிப்பார்க்கும் கௌதாரியை அதன் குஞ்சுகளை ஆச்சரியத்துடன் விழிகள் விரியப் பார்க்கிறான். இந்நேரம் அவனுடைய மாமா திருவேதி நாயக்கர் இருந்தால் கவணால் அந்தக்குயிலை அடித்து வீழ்த்தியிருப்பார். இன்று மதியம் கம்பங்கஞ்சிக்கு வெஞ்சனமாயிருக்கும் அந்தக்குயில். அவன் சிரித்தான். அந்தக்குயிலும் சிரித்தது.
தினமும் இடைசெவல் பள்ளிக்கூடம் விட்டதும் தெக்கேயிருந்து வருகிற மெயில் வண்டியைப் பார்ப்பதற்கு இடைசெவலிலிருந்து குறுக்கே காட்டுவழியாக வெங்கடேசும், அசோக்கும் ஓடி வருவார்கள். தண்டவாளத்திலிருந்து தூரமாய் நின்று கொண்டு மெயில் வண்டியில் போகிற பயணிகளுக்கு கையை ஆட்டி டாட்டா காட்டுவார்கள். பதிலுக்கு பயணிகள் காட்டுகிறார்களோ இல்லையோ ரயில் டிரைவரும், கார்டும் பச்சைக் கொடியை அசைத்து அவர்களுக்கு டாட்டா காட்டுவார்கள். பொசல் வண்டியில் போகிற சட்டைக்காரடிரைவர் இப்போதும் அவர்களுக்கு ரொட்டியும் பிஸ்கெட்டும்போடுகிறார். அவர்கள் நீண்ட கம்பின் நுனியில் மல்லித்தழையைக் கட்டி நீட்டுகிறார்கள். அவர்கள் இருவருக்கும் பொசல்வண்டி பார்த்து விட்டால் ஆச்சரியமாக இருக்கும். எம்மாம் நீளம்! டொடக் டொடக் டொடக்.. என்று போய்க்கொண்டேயிருக்கும். அசோக் ஆளே இல்லாத அதற்கும் டாட்டா காட்டுவான்.
பள்ளிக்கூட லீவு நாட்களில் ஆடுமேய்க்கும் வடிவேலுவுடன் சேர்ந்து காடோ செடியோ என்று அலைவார்கள். வடிவேலு காட்டில் அலைந்து திரியும்போது மட்டும் தான் பாடுவான். அந்தப்பாட்டு அவனே கட்டியது. அவன் பாட்டுக்கட்டும் அழகே தனீ அழகு. கையில் வைத்திருக்கும் குச்சியால் தரையில் தோண்டிக்கொண்டேயிருப்பான். அப்படித்தோண்டத் தோண்ட அவனுடைய வாயிலிருந்து வார்த்தைகள் அடுத்தடுத்து வந்து கொண்டேயிருக்கும். அப்படியே ராகத்தை இழுத்து வளைத்துப் பாடுவான்.
வெத்திலை வெத்திலை வெத்திலையோ
கொழுந்து வெத்திலையோ
கோவில்பட்டிக் கொழுந்து வெத்திலையோ
எப்படி அவன் பாடுகிறான்? எப்படி ராகம் அவனுடைய தொண்டையிலிருந்து இழைகிறது என்று ஆச்சரியத்துடன் வடிவேலின் வாயையே பார்த்துக் கொண்டிருப்பான். அசோக்.  கலை எப்படி எங்கே ஏன் தோன்றுகிறது என்று யாரால் சொல்ல முடியும்? ஆடுகள் கரிசலில் பச்சையைத் தேடி அலைந்து கொண்டிருக்கும்.
திடீரென்று காட்டுக்குள் காணாமல் போகும் வடிவேலு எங்கே போவான்? என்ன செய்வான்? இருட்டு அவனுக்குப் பயமாக இருக்காதா? என்ன சாப்பிடுவான்? எப்படித்தூங்குவான்? வெங்கடேசு யோசித்தான். ஒருவேளை காட்டின் இருட்டிலிருந்து தான் அவன் வார்த்தைகளை, பாடல்களை, ராகங்களை எடுத்துக் கோர்த்து வைத்திருக்கிறானோ? கலையும் கலைஞர்களும் உன்மத்தம் கொண்டவர்கள் தானோ? தனிமையின் சிகரத்திலிருந்தே கலைஞன் தன் பாடல்களைப்பாடுகிறான்.
குமாரபுரம் ஸ்டேசனுக்கு தண்ணீர் குடிக்க வருகிற வடிவேலுவை நானும் பார்க்கிறேன். அவனிடம் கி.ரா.வைப் பற்றிக் கேட்கிறேன். இடைசெவல் கண்மாய்க்கரையில் நிற்கும் ஆலமத்தின் அடியில் தூரத்தில் தெரியும் குருமலையைப் பார்த்து ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார் என்கிறான். அவனுடைய பாடல்கள் எல்லாம் அவர் சொல்லித்தந்தது என்கிறான்.
இப்போதும் செந்திவேல் அம்மனைக்குளிப்பாட்டும்போது கி.ரா.வைத்தேடுகிறான். கோவில் நைவேத்தியத்தை உருளியின் கைப்பிடியில் கரண்டிக்காம்பைக் கொடுத்து தூக்கிக் கொண்டு வருகிறான். வெங்கடேசு எத்தனை பறவைகளைப் பார்க்கிறான்! அத்தனை பறவை முட்டைகளையும் சேகரித்து வைத்திருக்கிறான். காடை, கௌதாரி, கிளி, பருந்து, மயில், தவிட்டுக்குருவி, கொண்டைக்குருவி, கருங்குருவி, வாலாட்டிக்குருவி, பூஞ்சிட்டு, தேன்சிட்டு, நீலச்சிட்டு, என்று அத்தனை முட்டைகளையும் சேகரித்து வைத்திருக்கிறான்.
என் கனவில் திருவேதி நாயக்கரும், அசோக்கும், செந்திவேலும், வெங்கடேசும், வடிவேலுவும் திக்கம்மாளூம் வருகிறார்கள். அவர்கள் என்னிடம் கி.ரா.வைப் பார்த்தீர்களா? என்று கேட்கிறார்கள். அவர் புதுச்சேரியில் சௌக்கியமாக இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன். காகங்கள் கலைந்து கலவரம் அடைகின்றன. திருவேதி நாயக்கர் வெங்கடேசு.. என்று வேப்பமரத்தைப் பார்த்து சிரிப்புடன் அழைத்துக் கொண்டிருக்கிறார்.
நள்ளிரவு. கரிசல் பூச்சிகளின்  இசை அடங்கி விட்டது. எப்போதாவது ஒரு குரல் எழுந்து அடங்குகிறது. அமைதியின் போர்வை எல்லாவற்றையும் போர்த்தி விட்டது. குருமலை கணவாய்க்காற்று குளிர்ந்து வீசுகிறது. நான் பொசல்வண்டியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். அந்த வண்டி வந்தால் தான் வெங்கடேசும் அசோக்கும் வருவார்கள். அவர்கள் வந்தால் தான் எங்கள் அன்புக்குரிய கி.ரா. வருவார். ரயில்வே கேட்டின் மீது கைகளை வைத்துக் கொண்டு ஓடுகிற ரயிலின் ஒளிநிழல் விளையாட்டுகளை ரசித்துக் கொண்டிருப்பார். இன்னும் என்னென்ன வகைமையில் எழுத வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருப்பார். நீண்ட தார்ச்சாலையின் ஓரத்தில் வளர்ந்துள்ள சீம்புல் அவருக்குத் தலையாட்டி வணக்கத்தைச் சொல்கிறது. அவர் நடந்து கொண்டிருக்கிறார். நடக்க நடக்க பூக்கிறது இலக்கியம். நானும் வணங்குகிறேன். என்னுடைய பிதாமகனை.
என் எதிரே இடைசெவல்.
உண்மையில் இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில் தூரம் அதிகமில்லை.

நன்றி - ஓவியம் உ.நவீனா

கி.ரா. என்னும் மானுடம் கி.ரா.95 தொகுப்பு நூல்.






Sunday 8 July 2018

ஒரு புரட்டின் வரலாறு



ஒரு புரட்டின் வரலாறு

உதயசங்கர்

வேதகால ஆரியர்கள் மாட்டிறைச்சி தின்றதில்லை. குறிப்பாக பசுவின் இறைச்சியைச் சாப்பிட்டதில்லை. இஸ்லாமியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த பிறகுதான் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் வந்ததாக இந்துத்துவவாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். கிட்டத்தட்ட முஸ்லீம் சமூகத்தின் அடையாளமாகவே மாட்டிறைச்சியைச் சொல்கிறார்கள். அதோடு மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் கீழானவர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள் ஒருபடி தாழ்ந்தவர்கள் என்ற மதிப்பீட்டையும் உருவாக்குகிறார்கள். இதன் தொடர்ச்சியாக கோசாலை, பசு பாதுகாப்பு இயக்கம், என்று என்னென்னவோ செய்துகொண்டிருக்கிறார்கள். செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக கொலை செய்தல், மாட்டிறைச்சியை வீட்டில் வைத்திருந்தார் ( அது ஆட்டிறைச்சி என்று பின்னர் தெரிந்தது ) என்பதற்காகக் கொலை செய்தல், என்று இன்றைய வலதுசாரி அரசாங்கத்தின் ஆதரவோடு பசுவையும், மாடுகளையும் புனித விலங்குகளாக மாற்றுகிற திட்டத்தை குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான பகையாக மாற்றுகிற நிகழ்ச்சிநிரலாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் வேதகால ஆரியர்கள் பசு இறைச்சியைச் சாப்பிட்டார்களா? மாட்டிறைச்சி இஸ்லாமியர்களோடு மட்டும் தான் தொடர்புடையதா? இதைப் பற்றி வேதங்கள் என்ன சொல்லுகின்றன?
ஆதியிலிருந்தே மனிதன் மாமிசபட்சணி தான். வேட்டைச்சமூகமாகத்தான் அவனுடைய ஆதிகால கம்யூன் வாழ்க்கை இருந்தது. கூட்டமாகச்சென்று கண்ணில் படுகிற விலங்குகளைக் கொன்று கூடிப்பகிர்ந்து உண்பது தான் அன்றாட வாழ்க்கை. இந்த வேட்டைச்சமூகத்திலிருந்து தான் கலை தோன்றியது. வேட்டைச்சமூக அநுபவங்களைப்பகிர்ந்து கொள்ள மொழி உருக்கொள்ள ஆரம்பித்தது. அப்படி விலங்குகளை வேட்டையாடுகிறபோது விதிவிலக்கில்லாமல் எல்லாவிலங்குகளையும் தான் அவர்கள் வேட்டையாடினார்கள். இது உலகம் முழுவதும் நிகழ்ந்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆடு, மாடு, கோழி, போன்ற மிருகங்களை வளர்ப்பவர்கள் உணவுக்காக அவற்றைச் சாப்பிட்டுவது இயல்பும் கூட. இறைச்சியுணவு மிகச்சுலமாக மனிதர்களுக்குத் தேவையான புரதச்சத்தை அளித்தது. அதனாலேயே அவனுடைய மூளையும் உடலும் முழுமையான வளர்ச்சியடைந்தது என்பது அறிவியலாளர்களின் கருத்தும் கூட. எனவே ஆதியில் அனைவரும் மாமிசம் தின்றவர்கள் தான்.
பண்டைய காலத்தில் பாரசீகத்தில் ( ஈரான் ) இருந்த ஜொராஸ்துஸ்டிரா சமயத்தைச்சேர்ந்த ஆரியக்கூட்டம் இந்தியாவுக்குள் நுழைந்தபோது அவெஸ்தா என்ற அவர்களுடைய புனிதநூலில் இருந்த பிரார்த்தனைப் பாடல்களையும் தெய்வங்களையும் யாகங்களையும் கூடவே அழைத்து வந்தனர். ஆரியர்கள் அரைநாடோடிகளாக, ஆடுமாடுகளை மேய்த்துக்கொண்டு மேய்ச்சல் நிலங்களைத் தேடிக்கொண்டு புராதன விவசாயம், விலங்குகளையும் கால்நடைகளையும் பலி கொடுக்கும் சமயச்சடங்குகளைக் கொண்ட இந்தோ அய்ரோப்பியர்கள். மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வெவ்வேறு காலகட்டங்களில் வந்தவர்கள். இனக்குழுச்சமூகமாக வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் இங்கே அவர்களை விட நாகரிகத்தில் மிக உயர்ந்த காலகட்டத்தில் இருந்த மக்களைக் கண்டு அஞ்சினார்கள். நிலையான சமூகப்பொருளாதாரக்கட்டமைப்பு கொண்ட சமூகத்தின் மேல் பொறாமை கொண்டனர். ஆரியர்கள் கலாச்சாரரீதியிலான வேறுபாட்டையே முதன்மைப்படுத்தினர். எனவே தான் அந்நியர் என்றும் தாசர் என்றும் தஸ்யூ என்றும் அசுரன் என்றும் இங்கிருந்த மக்களை கீழ்மைப்படுத்தினர். குறிப்பாக வேதங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள், யாகங்களை மறுப்பவர்கள், இந்திரன், அக்னி, சோமன், போன்ற ஆரியர்களுடைய தெய்வங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களை வெல்லுவதற்கான வலிமையை வேண்டியே வேதப்பாடல்கள் பாடப்பட்டன. கி.மு. 1500 – கி.மு.600 க்கும் இடைப்பட்ட காலங்களில் ஆரியர்களின் சமயம், சடங்குகள், யாகங்கள், குறித்த பாடல்களும் கொண்டது தான் ஆதிகால ரிக் வேதம். நான்கு வேதங்கள், பிராமணங்கள், சம்கிதைகள், ஆபஸ்தம்ப சூத்திரங்கள் எல்லாவற்றிலும் பசு, எருது, காளை, முள்ளம்பன்றி, காண்டாமிருகம் இவற்றைப் பலியிடுகிற சடங்குகளைப் பற்றிப்பேசுகின்றன.
 யாகச்சடங்குகளில் மிருகங்களைப் பலி கொடுத்தல் தவிர்க்க முடியாத ஒரு அம்சம். ரிக்வேதப்பாடல்களில் பசுவைக்குறிக்கும் சொல் 176 முறை வருகிறது. காலநடைகள் தொடர்பான சொற்கள் கிட்டத்தட்ட 700 முறையாவது வருகிறது. கால்நடைகளை பலி கொடுக்கும் பசுபந்தா என்ற வேதகாலச்சடங்கு பற்றிக் குறிப்பிடப்படுகிறது. வேதகாலக்கடவுளர்களான இந்திரன், அக்னி, சோமன் ஆகிய மூவருமே மாட்டிறைச்சி மீது பேராசை கொண்டவர்கள் என்று வேதப்பாடல்களில் குறிப்பிடப்படுகிறது.
ரிக் வேதப்பாடல் –( 10-86 -14 ) வேதகாலக்கடவுளான இந்திரன் “ அவர்கள் எனக்காக பதினைந்து இருபது எருதுகளைச் சமைத்தார்கள் “ என்று சொல்கிறான்.
ரிக்வேதப்பாடல் ( 5-29.7 ) இந்திரன் தீயினால் சுடப்பட்ட முன்னூறு அல்லது ஆயிரம் எருமைகளைச் சாப்பிட்டதாகச் சொல்கிறது.
ரிக் வேதப்பாடல் ( 8 – 43.11 ) அக்னிக்கு எருதும் மலட்டுப்பசுவும் தான் விருப்பமான உணவாக இருந்தன என்று கூறப்பட்டுள்ளது.
அஸ்வம்,( குதிரை )  ரிஷபம், ( காளை ) உக்‌ஷன் ( எருது ) வசு ( மலட்டுப்பசு ) மேஷம் ( ஆட்டுக்கிடா ) போன்றவை அக்னி தேவனுக்குப் பலியிடப்பட்டிருக்கின்றன.
அஸ்வமேதயாகத்தில் முதன்மையானது குதிரையைப் பலியிடுதல் பின்னர் 600 மிருகங்களை பசு, காளை, எருமை, ஆடு, காட்டுப்பன்றிகள், பறவைகள், பலியிடப்பட்டன. யாகத்தின் இறுதிக்கட்டத்தில் 21 மலட்டுப்பசுக்களைப் பலியிட்டனர். ( மகாபாரதம், ராமாயணம் நினைவு கொள்க )
கோமேத யாகத்தில் பசுவைப்பலி கொடுத்து கொல்லப்பட்ட பசுவின் நெய்யை இறந்து போன முன்னோர்களுக்காக படைப்பார்கள். யாகத்தில் கொல்லப்பட்ட பசு இறைச்சியை அந்த யாகத்தில் பங்கு பெற்றவர்களுக்குக் கொடுப்பார்கள்.
அதேபோல வாஜபேயம் யாகச்சடங்குகளில் மதுவும் மாமிசமும் ராஜசூயம் யாகச்சடங்கில் சூதாட்டமும், முக்கியமானது. ( மகாபாரதத்தை நினைவு கொள்க ) அந்தச்சடங்கின்போது பசுவைப்பலியிடும் யாகச் சடங்கான கோசவா தவிர்க்க முடியாதது.
யாகங்களில் பலியிடப்படும் விலங்குகளை எப்படி வெட்ட வேண்டும் என்பதைப்பற்றியும், அவற்றின் இறைச்சியை எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் ஆத்ரேய பிராமணத்தில்,
“ யாகத்தில் பலியிடும் விலங்கை புரோகிதர்களுக்கிடையில் பங்கிடுவது பின்வரும் முறையிலாகும். தாடை எலும்புகளையும், நாக்கையும் பிரஸ்தோருக்குக் கொடுக்க வேண்டும். கழுகின் வடிவிலுள்ள இதயத்தை உத்கதாவுக்குக் கொடுக்க வேண்டும். கழுத்தும் உள்நாக்கும் பிரதிகர்த்தாவுக்கு, வலது இடுப்பின் கீழ்ப்பாகம் ஹோதாவுக்கு, இடது பாகம் பிரம்மாவுக்கு, வலது தொடை மைத்ரவருணனுக்கு, இடது தொடை பிராமணச்சாம்ஸிக்கும், தோளின் வலது பாகம் அத்வர்யூவுக்கும், இடது பாகம் மந்திரங்கள் சொல்ல உதவுபவர்களுக்கு.. “ என்று 36 பாகங்களாக யாக விலங்கை பகிர்ந்து உண்டனர் என்று விளக்கப்பட்டிருக்கிறது.
ஆபஸ்தம்ப சூத்திரத்தில், கறவைப்பசுவுடைய காளையுடைய மாமிசம் பார்ப்பனர்கள் உண்பதற்குரியது என்றும்
உடும்பு, ஆமை, பன்றி, முள்ளம்பன்றி, காண்டாமிருகம், முயல், போன்ற மிருகங்களை பார்ப்பனர்கள் உண்ணலாம். என்றும் கூறப்பட்டிருக்கிறது.
விருந்தினர்களை கௌரவிக்க மதுவர்கம் அல்லது அர்கியம் என்ற சடங்கு பின்பற்றப்பட்டதை பிற்கால வேதநூல்கள் குறிப்பிடுகின்றன. இந்தச்சடங்கானது விருந்தினர்களுக்கு விருந்தளிக்க விருந்துக்குப் பொருத்தமான பசுக்கள் என்று பொருள் தரும் அதிதினிர் என்ற வார்த்தை ரிக்வேதப்பாடலில் ( 10-68-3 ) குறிப்பிடப்படுகிறது. மதுபர்கத்தின் முக்கிய அம்சங்களாக தேனும் தயிரும் மாட்டிறைச்சியும் இருந்தன. விருந்தினர்களுக்காக பசுவைக் கொல்பவர்களுக்கு அதிதிக்வா என்ற பெயரும், விருந்தினர் வந்தால் விருந்துக்காக பசு கொல்லப்படவேண்டும் என்பதினால் விருந்தினர்களை கோக்னா ( பசுவைக் கொல்பவன் ) என்ற சொல் வழங்கப்பட்டு வந்தது.
சீமந்தம், உபநயனம், சிரார்த்தம், போன்ற அன்றாட வாழ்வியல் சடங்குகளிலும் கூட மாடுகள் பலியிடப்பட்டிருக்கின்றன.
ஆக வேதகாலத்தில் பசு புனிதமானதாக இல்லை. வேதகால ஆரியர்கள் பசு உள்ளிட்ட அனைத்து மிருகங்களையும் பலியிட்டு சாப்பிட்டிருக்கிறார்கள்.
வேதகாலத்தின் பிற்பகுதியில் கால்நடைப்பொருளாதார முறையிலிருந்து நிலையான விவசாயப்பொருளாதார முறைக்கு ஆரியர்கள் மாறிய போது நூற்றுக்கணக்கில் விலங்குகளைப் பலியிடும் வழக்கத்துக்கு மாற்றுச்சிந்தனை தோன்றியது. விலங்குகளுக்குப் பதிலாக பாயாசம் விலங்குகளைப்போன்ற உருவபொம்மைகள், அரிசி, பார்லி, போன்ற வேறு வேறு பொருட்கள் யாகச்சடங்குகளில் படையலாகப் பயன்படுத்தப்பட்டன.
மனு சாஸ்திரத்தில் எவையெல்லாம் சாப்பிடத்தகுந்தவை எவையெல்லாம் சாப்பிடத்தகாதவை என்று விரிவாகக்குறிப்பிடுகிறது. முள்ளம்பன்றி, முள்ளெலி, உடும்பு, காண்டாமிருகம், ஆமை, முயல், ஒட்டகம், மற்றும் தாடையில் பல் இருக்கும் வீட்டு விலங்குகள் அனைத்தையும் சாப்பிடலாம். அதேபோல வேள்விச்சடங்குகளில் மாமிசம் சாப்பிடுவது தெய்வக்கட்டளை என்றும் மற்ற சமயங்களில் அது ராட்சசக்காரியம் என்றும் மனு கூறுகிறார்.
சிரார்த்தத்தின் போது முயல், வெள்ளாடு, பன்றி, மறிமான், மான் செம்மறியாடு, ஆகிய விலங்குகளின் இறைச்சியைப் படையல் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று விஷ்ணு புராணம் சொல்கிறது. திருவிழாவ்ன் போது எருமைகளைப்பலியிடும்படி தேவி புராணம், கருட புராணம், ஸ்கந்த புராணம், பவிஷ்ய புராணம் ஆகிய புராணங்கள் பரிந்துரை செய்கின்றன.
பௌத்தம் தழைத்தோங்கியிருந்த மௌரியர் காலத்துக்குப்பின்பு பார்ப்பனீயம் மீண்டு எழுந்த குப்தர் காலத்தில் மகாபாரதமும் ராமாயணமும் ஒழுங்கமைப்பட்டன. இரண்டு இதிகாசங்களிலும் மாட்டிறைச்சி பற்றிய குறிப்புகள் ஏராளமாய் வருகின்றன. மகாபாரத்தத்தில் ஆதிபர்வத்தில் பார்ப்பனர்களுக்கு உணவளிப்பதற்காக காட்டில் மிருகங்களை வேட்டையாடியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
மாட்டிறைச்சியையும் உணவு தானியங்களையும் பார்ப்பனர்களுக்குக்கொடுத்து ஈடு இணையற்ற புகழைச் சேர்த்துக்கொண்ட மன்னனான ரந்திதேவரின் அரண்மணையில் தினம் இரண்டாயிரம் பசுக்கள் கொல்லப்பட்டதாக வனபருவத்தில் கூறப்பட்டிருக்கிறது. கொல்லப்பட்ட பசுக்களின் ரத்தம் கர்மாவதி ஆறாகப் பெருக்கெடுத்தாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ராமாயணத்தில் தனக்கு குழந்தைப்பேறு வேண்டும் என்பதற்காக தசரதன் நடத்திய வேள்வியில் அனைத்து மிருகங்களையும் பலியிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமனும் லட்சுமணனும் காட்டு மிருகங்களை வேட்டையாடியதான செய்திகள் ஏராளமாக வருகின்றன. இறைச்சி மீது சீதை கொண்ட ஆர்வம் தான் மானை வேட்டையாடச்சொல்லி ராமனைத் தூண்டுகிறாள்.
வேதச்சடங்குகளை மறுத்து அகிம்சையைப் போதித்த பௌத்தமும் சமணமும் கூட மாட்டிறைச்சியையோ, மற்ற விலங்குகளின் இறைச்சியையோ முற்றிலும் மறுத்து ஒதுக்கவில்லை. ஏன் புத்தரே கூட கெட்டுப்போன பன்றி இறைச்சியைச் சாப்பிட்டதால் புட்பாய்சன் ஆகி இறந்து போனார். மகாபரிநிப்பான சுத்தாவிலும், அங்குத்தர நிகாயத்திலும், சூசுரா நிகாயத்திலும் இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. புத்தருக்குப்பின்னால் பௌத்தம் மகாயானம், ஹீனயானம் இரண்டு பிரிவுகளாகப்பிரிந்த போது ஹீனயானம் மாட்டிறைச்சி உட்பட அனைத்து இறைச்சியுணவையும் சாப்பிடுவதை அநுமதித்தது.
சமணத்திலும் கூட இறைச்சியுணவை சமணர்கள் சாப்பிட்டதற்கான ஆதாரங்கள் ஆகாரங்க சூத்திரத்திலும் தாசவைகாலிக சூத்திரத்திலும், விபாக சூத்திரத்திலும், சூத்திர கிருதாங்க சூத்திரத்திலும் காணமுடிகிறது.
கி.பி. 500 ஆம் ஆண்டுகளுக்குப் பின்பு தான் பார்ப்பனர்கள் பசுக்களைப் பலியிடும் சடங்குகளை கண்டனம் செய்யும் கலிவர்ஜியா என்ற விலக்க வேண்டிய சடங்குகள் என்ற கருதுகோள் உருவாகி வந்தது. பிற்கால தர்மசாஸ்திரங்களில் தான் பசு புனித விலங்காகவும், அதன் மூத்திரம், சாணி, பால் தயிர், நெய், ஆகிய ஐந்து பொருட்களும் பஞ்சகவ்யா புனிதமானதாகவும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டது. வரலாற்றின் மிகச்சமீபகாலம் வரை பசு எல்லாவீட்டு வளப்பு விலங்குகளைப் போலவே பாவிக்கப்பட்டது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனாலும் மாட்டிறைச்சி உண்பதை முற்றிலும் விலக்கிக்கொள்ள முடியவில்லை. 1874- ஆம் ஆண்டு வரையிலும் கூட வேள்விச்சடங்குகளில் பசுக்களையும் எருமைகளையும் பலியிடுகிற வழக்கம் ராஜஸ்தானில் இருந்திருக்கிறது.
இஸ்லாமியர்கள் வந்தபிறகுதான் மாட்டிறைச்சி இந்தியாவுக்குள் வந்தது என்பது எத்தகைய வரலாற்று பிழை என்று தெரிகிறது. பார்ப்பனீயம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளச் செய்யும் ஆபத்தான தந்திரங்களில் இதுவும் ஒன்று. உணவுக்கான அவரவர் உரிமையில் யாரும் தலையிடக்கூடாது என்று உரத்து முழங்க வேண்டிய காலம் இது.

நன்றி - வண்ணக்கதிர்