Thursday 13 September 2018

கிருஷ்ணனின் வேஷம்


  கிருஷ்ணனின் வேஷம்

மலையாளத்தில் - மாதவிக்குட்டி
தமிழில் - உதயசங்கர்


இரவின் முக்கால்பாகமும் கழிந்தபிறகு வெறுமையாயிருந்த மேடையை நோக்கி ஒரு இளைஞன் தயக்கத்துடன் நடந்து சென்றான்.
இடப்புறத்தில் திரைச்சீலைக்கு அருகில் பழுதான ஸ்விட்சின் காரணமாக ஒரு பல்பு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. யாருமில்லாத நாடக சபையில் மூன்றாவது வரிசையில் ஒரு குடிகாரன் தன்னுடைய தலையை நெஞ்சில் சாய்த்து உறங்கிக்கொண்டிருந்தான்.
எல்லா வார்த்தைகளும் உச்சரிக்கப்பட்டு விட்டன.
எல்லா நடனங்களும் முடிந்து விட்டன.
எல்லா கானங்களும் நின்று விட்டன.
பார்வையாளர்களும் போய் விட்டனர்
இந்த அசந்தர்ப்பத்தில் நீ எதற்காக வந்தாய்?
மகாவேடங்கள், சிரித்தும் அட்டகாசம் செய்தும், கர்ஜனை செய்தும் புயற்காற்று போல சப்தங்கள் நிறைந்திருக்கும் இந்த மேடையில் அமைதியானவனும் இளைஞனுமான நீ எதற்காக வந்தாய்?
சுவரின்மேல் சிவந்த வெற்றிலை எச்சில் கறைகள் தரையில் சிகரெட்டுத்துண்டுகள், ஒப்பனையறையில் வெளுத்துப்போன வண்ணக்கலவைகள், நாடகசபையில் குடிகாரனின் குறட்டைச்சத்தம். பெயர்ந்து விழுவதற்குத் தயாராக இருக்கிற மேற்கூரையில் காற்றின் கிறீச்சிடல்கள்.
“ நீ இவ்வளவு சீக்கிரம் ஏன் வந்தாய்? நீ எந்த வேடத்தில் நடிப்பதற்கு உத்தேசித்திருக்கிறாய்? உன்னுடைய கையில் ஆயுதங்களில்லை. உன்னுடைய தலையில் கிரீடமுமில்லை.
உன்னுடைய முகத்தில் வன்ணப்பூச்சில்லை. உன்னைப்பார்த்தால் ஒரு நடிகன் என்று யாரும் சொல்லமுடியாதல்லவா?
“ உன்னுடைய பெயர் என்ன? “
“ நான் கிருஷ்ணன்.. நான் நானாக நடிக்கிறேன்..”
“உன்னை எங்கேயோ முன்பு ஒரு காலத்தில் பார்த்திருக்கிறேன் என்று எனக்குத் தோன்றுகிறது..”
“ ஆனால் அது சாத்தியமில்லை. நீ சிறியவன். இந்த முகத்தை நான் பார்த்திருக்கிறேனா? கஷ்டம்! எனக்கு ஞாபகம் வரவில்லையே. ஆனால் ஒரு விஷயம் உறுதி. உன்னுடைய பெயரை முன்பு எங்கேயோ நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.”

No comments:

Post a Comment