Wednesday 20 November 2013

புதிய அரசியலமைப்புச்சட்டம்..

சாதத் ஹசன் மண்ட்டோ

ஆங்கிலத்தில்- காலித் ஹசன்

தமிழில்- உதயசங்கர்manto2

குதிரைவண்டிக்காரனான மங்கு தான் அவனுடைய நண்பர்களிலேயே மிகச்சிறந்த அறிவாளி என்று கருதப்பட்டான். அவன் பள்ளிக்கூடத்துக்கு உள்ளே சென்று எப்படியிருக்கும் என்று இதுவரை பார்த்ததில்லை. கறாரான கல்வித்தகுதி என்று பார்த்தோமானால் அவன் பூஜ்யம் தான். ஆனால் சூரியனுக்குக் கீழே அவனுக்குத் தெரியாத எந்த விஷயமும் இல்லை.லௌகீகஉலகத்தைப் பற்றிய அவனுடைய இந்தப்பன்முகஅறிவைப் பற்றி குதிரைவண்டி நிலையத்திலுள்ள, அவனுடைய எல்லாநண்பர்களுக்கும் தெரியும். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய அவர்களுடைய ஆர்வத்தை அவன் எப்போதும் திருப்திப்படுத்திவிடுவான்.

ஒரு நாள் அவன் அவனுடைய இரண்டு சவாரிகள் பேசிக் கொண்டிருந்ததிலிருந்து இந்து முஸ்லீம்களுக்கிடையில் இன்னொரு மதக்கலவரம் வெடித்துவிட்டது என்று தெரிந்து கொண்டான்.

அன்று மாலையில் அவன் நிலையத்துக்கு வந்தபோது குழம்பிப்போயிருந்தான். அவனுடைய நண்பர்களுடன் உட்கார்ந்து, ஹூக்காவில் நீண்ட ஒரு இழுப்பு புகையை இழுத்துவிட்டான். அவனுடைய காக்கிநிறத் தலைப்பாகையை எடுத்துவிட்டு கவலைதோய்ந்த குரலில், “ இது அந்தப் புனிதரின் சாபம் தான். அன்றாடம் இந்துக்களும் முஸ்லீம்களும் ஒருவரையொருவர் அடித்துக்கொள்வார்கள். ஒருமுறை அக்பர் பாதுஷா ஒரு முனிவரை அவமரியாதை செய்துவிட்டார். அந்த முனிவர் ,” என் கண்முன்னே நிற்காதே.. உன் ஹிந்துஸ்தான் எப்போதும் கலவரங்களாலும், ஒழுங்கின்மையாலும் பீடித்திருக்கும்…” என்று சாபம் கொடுத்துவிட்டதாக பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன். நீங்களே பாக்கறீங்கள்ல அக்பரோட ஆட்சி முடிந்ததிலிருந்து என்ன நடக்கிறது இந்தியாவில் கலவரங்களைத்தவிர..” என்று சொன்னான்.

தன்னிச்சையாக அவன் ஹூக்காவை இழுத்து பெரிய மூச்சு விட்டு, “ இந்த காங்கிரஸ்காரங்க… இந்தியா சுதந்திரம் அடையணும்னு விரும்பறாங்க..இன்னிக்கி நான் சொல்றேன் கேட்டுக்கோ.. ஆயிரம் வருஷம் ஆனாலும் அவங்களால அது முடியாது..வேணும்னா ஆங்கிலேயர்கள் போகலாம்.. ஆனா அதுக்கப்புறம் இத்தாலிக்காரனையோ, ருஷ்யாக்காரனையோ நீ பார்ப்பே… எனக்குத் தெரிஞ்சவரை ருஷ்யாக்காரன் ரெம்ப முரட்டுத்தனமானவங்க.. நான் சத்தியம் செய்றேன் ஹிந்துஸ்தான் எப்போதும் அடிமையாத்தான் இருக்கும்…ஆமாம் அந்த முனிவர் அக்பருக்குக் கொடுத்த சாபத்தின் இன்னொரு விஷயத்தைச் சொல்ல நான் மறந்துட்டேன்… இந்தியா எப்போதும் அந்நியர்களாலேயே ஆளப்படும்….” என்று சொன்னான்.

மங்கு வாத்தியாருக்கு பிரிட்டிஷ்காரர்களைப் பிடிக்காது. அவன் அவர்களை வெறுப்பதற்கான காரணம் என்னவென்றால் அவர்கள் இந்தியர்களின் விருப்பத்துக்கு மாறாக இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல அட்டுழியம் செய்வதற்கான எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் அவர்கள் விட்டுவைப்பதில்லையென்று அவனுடைய நண்பர்களிடம் சொல்வது வழக்கம். ஆனால் உண்மையான விஷயம் என்னவென்றால் அவனுக்கு பிரிட்டிஷ்காரர்களைப் பற்றிய தாழ்வான அபிப்பிராயம் தோன்றுவதற்கு அங்கு படைமுகாமிலிருந்த கோரா படைவீரர்கள் தான் காரணம். அவர்கள் அவனை நாயை விடக் கேவலமான பிறவி போல நடத்துவார்கள். அதுவுமல்லாமல் அவன் அவர்களுடைய வெள்ளை நிறத்தை வெறுத்தான். அவன் யாராவது ஒரு பிரிட்டிஷ்காரனை அல்லது செம்பவளநிற கோரா படைவீரனை எதிர்கொள்ள நேர்ந்து விட்டால் குமட்டிக்கொண்டு வரும். ’ அவங்க சிவப்பு முகங்க எனக்கு அழுகிக் கொண்டிருக்கும் பிரேதங்களை ஞாபகப்படுத்தும் ’ என்று விருப்பத்துடன் சொல்லிக்கொண்டிருப்பான்.

ஒரு குடிகாரகோரா படைவீரனோடு ஏற்பட்ட அடிதடிச்சண்டைக்குப் பிறகு பலநாட்களுக்கு அவன் மனவருத்ததோடு இருந்தான்.அவன் நிலையத்துக்குத் திரும்பிய பிறகு வைது கொண்டே ஹூக்காவைப் பிடிப்பான். அல்லது அவனுக்குப் பிடித்த ஏர் படம் போட்ட பிராண்ட் சிகரெட்டுகளைப் புகைக்கும் போது திட்டுவான்.

அப்போது அவன் தலையாட்டிக் கொண்டே சொல்வான்,” பாரு அவங்களை…. வீட்டுக்கு ஒரு மெழுகுவர்த்தி எடுக்க வருவாங்க.. உனக்குத் தெரியாம எடுத்துகிட்டு போயிருவாங்க.. அந்த மனுசக்குரங்குகளுக்கு முன்னால நிற்கவே என்னால முடியாது.. அவங்க உனக்கு ஆணையிடுறதப் பார்த்தீன்னா ஏதோ நாம அவங்கப்பனோட அடிமை மாதிரி…!”

சிலசமயங்களில், மணிக்கணக்காக அவர்களைத் திட்டியபிறகும், அவனுடைய கோபம் தீராது. அவனுக்கு அருகில் உட்கார்ந்திருப்பவரிடம் “ பாரு அவங்களை…குஷ்டம் பிடிச்சவங்களை மாதிரி.. .செத்து அழுகிக் கொண்டிருக்கிற மாதிரி… நான் அவங்கள ஒரே அடியிலே சாய்ச்சிருவேன்…ஆனா அவங்களோட திமிர்த்தனத்தை எப்படி எதிர்கொள்ள…? நேற்று ஒருத்தனோட தகராறு..அவனோட அதிகாரத்தைப் பார்த்து எனக்கு வந்ததே கோபம்…நான் அவன் மண்டையை உடைச்சிருப்பேன்..ஆனா நான் என்னைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கிட்டேன்…அந்தக் கழிசடையோட சண்டை போடறது என்னோட தகுதிக்குக் குறைவானதில்லையா..” என்று சொல்வான்.

அவனுடைய சட்டைக்கையினால் மூக்கைத் துடைத்துக் கொள்வான். மறுபடியும் அவனுடைய வசவைத் தொடர்வான். “ கடவுள் சத்தியமாகச் சொல்றேன்… இந்த இங்கிலீஷ் கனவான்களைக் கேலி செய்றதே எனக்குப் பிடிக்கல… ஒவ்வொரு தடவையும் அவங்களோட சனியன்பிடிச்ச மூஞ்சிகளைபார்த்தவுடனேயே என்னோட ரத்தம் கொதிக்க ஆரம்பிச்சிரும்… உம்மேல சத்தியமா சொல்றேன்..இவங்கள ஒழிக்கணும்னா ஒரு புதிய சட்டம் தான் கொண்டு வரணும்…”

ஒருநாள் வாத்தியார் மங்கு மாவட்ட நீதிமன்றத்திலிருந்து இரண்டு சவாரிகளை ஏற்றிக்கொண்டு போனான். அவர்களுடைய உரையாடலிலிருந்து இந்தியாவில் ஒரு புதிய சட்டம் வரப்போகிறதென்று தெரிந்து கொண்டான்.அவர்கள் மிக விரைவில் அறிமுகப்படுத்தப் போகிற இந்திய அரசுச்சட்டம் 1935 ஐப் பற்றிப் விவாதித்துக் கொண்டு வந்தார்கள்.

“ ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து இந்தப் புதிய சட்டம் அமலுக்கு வரப்போவதாகச் சொல்கிறார்கள்… இது எல்லாவற்றையும் மாத்திரும்னு நம்புறியா..? ”

“ எல்லாம் மாறாது..ஆனால் நிறைய மாற்றங்கள் வரும்னு சொல்றாங்க… இந்தியர்களுக்கு விடுதலை கிடைச்சிரும்..”

“ அப்படின்னா நம்மோட வட்டி? “ என்று ஒருவர் கேட்டார். அநேகமாக அவர்கள் வழக்குக்காக நகரத்துக்கு வந்த லேவாதேவிக்காரர்களாக இருக்க வேண்டும்.

“ உண்மையில் எனக்குத் தெரியல… வழக்கறிஞரைக் கேட்கணும்…” என்று அவருடைய நண்பர் பதில் சொன்னான்.

வாத்தியார் மங்கு ஏற்கனவே ஏழாவது சொர்க்கத்துக்குப் போய் விட்டான். சாதாரணமாக அவனுடைய குதிரை மெதுவாகப் போவதாக திட்டிக் கொண்டே வருகிற பழக்கம் உண்டு. அதோடு சவுக்கை வீசி அடிக்கவும் தயங்க மாட்டான். ஆனால் இன்று எதுவும் செய்யவில்லை. அவ்வப்போது அவன் திரும்பி அவனுடைய பயணிகளைப் பார்த்துக் கொண்டான். மீசையைத் தடவி விட்டுக் கொண்டான். குதிரையின் கடிவாளத்தை ஆதூரத்துடன் தளர்வாக விட்டு,” வாடா மகனே உன்னால என்ன செய்ய முடியும்னு அவங்களுக்குக் காட்டுவோம்…. போவோம் வா..” என்று சொன்னான்.

அவனுடைய சவாரிகளை இறக்கிவிட்டு விட்டு அனார்கலி வணிகவளாகத்தில் அவனுடைய மிட்டாய்க்கடை நண்பனான டினோவின் கடையின் முன் நிறுத்தினான். அவன் ஒரு பெரிய கிளாஸ் லஸ்ஸியை வாங்கிக் ஒரே மூச்சில் குடித்தான். திருப்தியுடன் ஒரு பெரிய ஏப்பமிட்டு, கூவினான், “ அவர்கள் நரகத்துக்குப் போக..! “.

அவன் சாயந்திரம் குதிரைவண்டி நிலையத்துக்குப் போனபோது அவனுடைய நண்பர்கள் யாரும் அங்கில்லை. அவன் வெகுவாக ஏமாற்றமடைந்தான். ஏனெனில் அவன் அந்தச் சிறந்த செய்தியை அவனுடைய ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் வந்திருந்தான். அவனுக்கு சீக்கிரத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டம் வரப்போகிறது… அது எல்லாவற்றையும் மாற்றப்போகிறது …என்று யாரிடமாவது சொல்லியே ஆக வேண்டும்.

ஒரு அரைமணி நேரத்துக்கு அவனுடைய கையில் சவுக்கைப் பிடித்தபடி அமைதியின்றி சுற்றிச் சுற்றி நடந்து கொண்டிருந்தான். அவனுடைய மனசு பல விஷயங்களைப் பற்றி, எதிர்காலத்தில் நடக்கவிருக்கிற நல்ல விஷயங்களைப் பற்றி யோசித்தது. நாட்டில் வரப்போகிற புதிய அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றிய செய்தி புதிய சாத்தியங்களைத் திறந்து விட்டது. அவன் அவனுடைய மூளையின் அனைத்து விளக்குகளையும் எரிய விட்டான். இந்தியாவில் ஏப்ரல் 1 ஏற்படுத்தப்போகிற விளைவுகளைப் பற்றி கவனமாகப் பரிசீலித்தான். அவன் புளகாங்கிதமடைந்தான். அந்த கழிசடை லேவாதேவிக்காரர்கள் வட்டியைப் பற்றிப் பேசிக் கொண்டதைப் பற்றி நினைத்தவுடன் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான். ‘ இந்தப் புதிய சட்டம் கொதிக்கிற சுடுதண்ணீர் மாதிரி ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சும் இந்த மூட்டைப்பூச்சிகளை கொன்றொழித்து விடும் ‘ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். இந்தப் புதிய அரசியலமைப்புச் சட்டம் இந்த வெள்ளைஎலிகளை ( பிரிட்டிஷ்காரர்களுக்கு அவன் வைத்திருந்த பெயர்.) ஒரேயடியாக அவைகளுடைய இருண்டபொந்துகளுக்குள் விரட்டியடித்து விடும். இனி பூமியில் எங்கும் தலையெடுக்க முடியாது. சிறிது நேரம் கழித்து நாதூ என்ற வழுக்கைத்தலை குதிரைவண்டிக்காரன் அவனுடைய தலைப்பாகையை எடுத்து கையில் வைத்துக் கொண்டு மெல்ல நடந்து வந்தான். வாத்தியார் மங்கு அவனுடைய கையைப் பிடித்துப் பலமாகக் குலுக்கிக் கொண்டே, “ உனக்கு ஒரு சிறந்த செய்தி வைத்திருக்கிறேன்.. அதைக் கேட்டால் உன் வழுக்கைத் தலையில் முடி முளைச்சாலும் முளைச்சிரும்..” என்று சொன்னான்.

பிறகு அவன் அந்தப் புதிய அரசியலமைப்பு சட்டம் இந்தியாவுக்குக் கொண்டு வரப் போகிற மாற்றங்களைப் பற்றி விவரிக்கத் தொடங்கினான். “ கொஞ்சம் பொறுத்துப் பாரு… என்னெல்லாம் நடக்கப்போகுதுன்னு….நான் இன்னைக்குச் சொல்றேன் கேட்டுக்கோ…. ருஷ்யாவின் ராஜா அவர்கள் போகின்ற பாதையைக் காட்டப் போகிறார்..”.

வாத்தியார் மங்கு பல வருடங்களாக கம்யூனிச அரசாங்கத்தைப் பற்றிப் பல கதைகளைக் கேள்விப்பட்டிருக்கிறான். அதிலுள்ள பல விஷயங்களை புதிய சட்டங்களை, இன்னும் புதிய திட்டங்களை, அவன் மிகவும் விரும்பினான்.அதனால் தான் அவன் இந்தியாவின் புதிய சட்டத்தோட ருஷ்யாவின் ராஜாவை தொடர்பு படுத்தினான். ஏப்ரல் 1 ஆம் தேதி வரப்போகிற மாற்றங்கள் ருஷ்யாராஜாவின் செல்வாக்கினால் தான் ஏற்படுகிறது என்று நம்பினான். அவனைப் பொறுத்தவரை உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் ஒரு ராஜாவினால் தான் ஆளப்படுகிறது என்று உறுதியாக நினைத்தான்.

சில வருடங்களாக பெஷாவர் நகரில் சிவப்புச் சட்டை இயக்கம் மிகவும் பிரபலமாக செய்திகளில் அடிபட்டது. வாத்தியார் மங்குவுக்கு இந்த இயக்கம் ருஷ்யராஜாவுக்கு ஏதோ ஒரு வகையில் தொடர்புடையது அதனால் இயல்பாகவே புதிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும் தொடர்புடையது. இந்தியாவின் பல நகரங்களில் அடிக்கடி குண்டுவெடிப்புகள் நடந்ததாகத் தகவல்கள் வெளியாயின. வெடிபொருட்கள் வைத்திருந்ததாக பலர் பிடிபட்டதாக வாத்தியார் மங்கு கேள்விப்பட்டபோதும், தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளில் பலர்மீது வழக்கு தொடர்ந்த போதும் அவன் புதிய சட்டம் வருவதற்கு இவையெல்லாம் காரணம் என்று விளங்கிக் கொண்டான்.

ஒருநாள் அவனுடைய குதிரைவண்டியில் இரண்டு பாரிஸ்டர்கள் ஏறினார்கள் அவர்கள் புதிய அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி உரக்க விவாதித்துக் கொண்டே வந்தார்கள். அதில் ஒருவர் சொன்னார், “ அது சட்டத்தின் இரண்டாவது பிரிவு என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை…அது இந்திய கூட்டாட்சியைப் பற்றியது. அப்படி ஒரு கூட்டாட்சி உலகத்தில் எங்கேயும் இல்லை..அரசியல் ரீதியாகப் பார்த்தால் அது ஒரு பெரிய பேராபத்து…உண்மையில் சொல்லப்போனால், முன்மொழிந்திருப்பது கூட்டாட்சியைப் பற்றித் தான் வேறொன்றுமில்லை.”

அந்த பேச்சின் பெரும்பகுதியும் ஆங்கிலத்திலேயே நடந்ததால் வாத்தியார் மங்குவால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இந்த இரண்டு பாரிஸ்டர்களும் புதிய சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்றும் இந்தியா விடுதலை அடைவதை விரும்பவில்லை என்றும் அவன் மனதில் பட்டது. ‘ தவளைகள் ’ என்று என்று அவன் வாய்க்குள் முணுமுணுத்தான்.

இந்த நிகழ்ச்சிக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு அவன் மொசாங் போவதற்காக மூன்று அரசுக்கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு போனான். அவர்கள் புதிய சட்டத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு வந்தார்கள்.

“ புதிய சட்டத்தோடு பல புதிய விஷயங்கள் நடக்கப்போகுதுன்னு நான் நெனைக்கிறேன்…கொஞ்சம் கற்பனை பண்ணிப்பாரு.. நாம சட்டசபைகளை தேர்ந்தெடுக்கப் போறோம்.. ஒருவேளை திருவாளர் ………………….. தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால் எனக்கு எப்படியும் அரசாங்கவேலை கிடைத்து விடும்….”

“ ஓ பல புது விஷயங்களும் நிறையக் குழப்பங்களூம் நடக்கும். இன்னும் சொல்லப்போனால் நாம் ஏதோ ஒன்றில் நம் கைகளை வைக்கப்போகிறோம் என்று எனக்கு உறுதியாகத் தெரிகிறது..”

“ இதை என்னால ஒத்துக்கொள்ள முடியல..”

“ இயல்பாகவே இப்ப இருக்கிற ஆயிரக்கணக்கான வேலையில்லாப்பட்டதாரிகளின் எண்ணிக்கை குறையும்..”

இந்தப் பேச்சு வாத்தியார் மங்குவைப் பொறுத்தவரை அவனைப் புளகாங்கிதமடையச் செய்தது புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒளிமிக்கதாகவும் நம்பிக்கை நிறைந்ததாகவும் அவனுக்குத் தெரிந்தது. . ஒரே விஷயம் என்னவென்றால் அவன் புதிய சட்டத்தை ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்பு அவனுடைய குதிரைவண்டிக்காக சௌத்ரி குடாபக்ஸிடமிருந்து வாங்கிய அற்புதமான பித்தளை முலாம் பூசிய அலங்காரவிளக்கோடு ஒப்பிட்டுப் பார்க்கவே முடிந்தது. புதிய சட்டம் அவனுக்கு கதகதப்பான இனிய உணர்வைத் தந்தது.

பின்வந்த வாரங்களில் வாத்தியார் மங்கு மாற்றங்களைப் பற்றி ஆதரவாகவும் எதிராகவும் நிறையக் கேள்விப்பட்டான். ஆனால் அவனுடைய மனதில் உறுதியாக தோன்றிவிட்டது. அவன் ஏப்ரல் 1 ஆம் தேதியில் எல்லாம் மாறிவிடும் என்ற நம்பிக்கையை அவன் பாதுகாத்து வந்தான்.

கடைசியில் மார்ச் மாதத்தின் முப்பத்தியொரு நாட்களும் முடிவுக்கு வந்தன. வழக்கத்தை விட சீக்கிரமாக வாத்தியார் மங்கு எழுந்த போது குளிர்ந்த காற்று வீசியது. அவன் குதிரை லாயத்துக்குப் போனான். அவனுடைய குதிரை வண்டியைத் தயார் செய்து ரோட்டிற்கு கொண்டு போனான். இன்று அவன் அதீத மகிழ்ச்சியிலிருந்தான். ஏனெனில் புதிய சட்டம் வரப்போவதை அவனுடைய கண்களால் அவன் பார்க்கப்போகிறான்.

காலைப் பனியில் அவன் நகரத்தின் அகலமான, குறுகலான தெருக்களுக்குள் சுற்றி வந்தான். ஆனால் எல்லாம் அப்படியே பழைய மாதிரியே பாழடைந்து கிடந்தன. அவன் வண்ணங்களையும் ஒளியையும் பார்க்க விரும்பினான். அங்கே எதுவுமில்லை. அவன் அவனுடைய குதிரைக்காக புதிய இறகுக்குஞ்சம் ஒன்றை அந்தப் பெருநாளைக் கொண்டாடுவதற்காகக் கொண்டு வந்திருந்தான். அது ஒன்று தான் அங்கே அவனால் பார்க்கமுடிந்த சிறிதளவு வண்ணம். அது அவனுக்குக் கொஞ்சம் செலவையும் தந்து விட்டது.

குதிரையின் குளம்படிகளின் கீழே சாலை கருப்பாகவே இருந்தது. விளக்குதூண்கள் பழைய மாதிரியே இருந்தன. கடைகளின் விளம்பரப்பலகைகள் மாறவில்லை. புதிதாக எதுவும் நடக்காதமாதிரி மக்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். இருந்தாலும் அது ரெம்ப சீக்கிரம் தான். பெரும்பாலான கடைகள் மூடியிருந்தன. ஒன்பது மணிக்கு முன்னால் நீதிமன்றம் திறக்காது அதுக்கு அப்புறம் புதிய சட்டம் அமுலுக்கு வந்துவிடும் என்ற சிந்தனை வர அவனை அவனே ஆறுதல்படுத்திக் கொண்டான்.

அரசுக்கல்லூரிக்கு முன்னால் அவன் நின்ற போது மணிக்கூண்டுக் கடிகாரம் கிட்டத்தட்ட அதிகாரமாய் ஒன்பது தடவை அடித்து ஓய்ந்தது. மெயின் கேட் வழியே அழகாக உடையணிந்த மாணவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் மிகவும் அலங்கோலமாக வாத்தியார் மங்குவுக்குத் தெரிந்தார்கள். ஏதாவது வண்ணமயமாக, இன்னும் வியக்கிற மாதிரி நடக்க வேண்டும் என்று விரும்பினான்.

அவன் குதிரைவண்டியை முக்கிய வணிகவளாகமான அனார்கலியை நோக்கி ஓட்டினான். பாதிக்கடைகள் திறந்திருந்தன. மிட்டாய்க்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொது வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் வியாபாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அவர்களுடைய விற்பனைப் பொருட்கள் எல்லோர் கவனத்தையும் ஈர்க்கும்வண்ணம் கடை ஜன்னல்களில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் எதுவும் வாத்தியார் மங்குவை ஈர்க்கவில்லை. அவன் புதிய அரசியலமைப்பு சட்டத்தை அவனுடைய குதிரையைப் பார்ப்பது போல தெளிவாகப் பார்க்கவேண்டும் என்று விரும்பினான்.

வாத்தியார் மங்குவும் எதிர்பார்த்துக்காத்திருப்பதற்கு முடியாதவர்களில் ஒருவன். அவனுடைய முதல்குழந்தை பிறந்தபோதும் அவனால் அமைதியாக உட்கார்ந்திருக்க முடியவில்லை. குழந்தை பிறப்பதற்கு முன்பே அதைப் பார்க்க விரும்பினான். பலமுறை மனைவியின் வயிற்றில் அவனுடைய காதுகளை வைத்து குழந்தை எப்போது வெளியில் வரும் என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்வான். அல்லது குழந்தை எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்வான். ஆனால் அவனால் எதையும் கண்டுபிடிக்க முடியாது. ஒருநாள் அவன் அவனுடைய மனைவியைப் பார்த்து எரிச்சலுடன் கத்தினான்,

“ என்ன ஆச்சு உனக்கு? நாள்பூரா படுக்கையிலே கிடக்கிறே..பிணம் மாதிரி..ஏன் நீ எழுந்து வெளியில் போய் சுற்றி நடந்து கொஞ்சம் சக்தியை சேர்த்து வைக்க வேண்டியது தானே..குழந்தை பிறப்பதற்கு உதவி செய்யலாம்ல.. நான் சொல்றேன் இப்படியே இருந்தா அவன் எப்படி வருவான்.”

வாத்தியார் மங்கு எப்போதும் அவசரத்திலிருந்தான். அவனால் காரியங்கள் ஒரு வடிவத்துக்கு வரும்வரை காத்திருக்க முடியவில்லை. அவனுக்கு எல்லாம் உடனே நடந்து விட வேண்டும். ஒருமுறை அவனுடைய மனைவி கங்காவதி அவனிடம் சொன்னாள்,

“ கிணறே இன்னும் தோண்ட ஆரம்பிக்கல.. அதுக்குள்ள பொறுமையில்லாம தண்ணி குடிக்க அவசரப்படறே…”

இன்று காலையில் அவன் எப்போதும் இருக்கிற மாதிரி அந்தளவுக்கு பொறுமையில்லாமல் இல்லை.அவன் சீக்கிரம் வந்ததே புதிய சட்டத்தை அவனுடைய கண்களால் பார்ப்பதற்குத் தான். எப்படி காந்திஜியையும், நேருவையும் பார்ப்பதற்காக அவன் பல மணி நேரம் காத்திருந்தானோ அப்படி அவன் புதிய சட்டத்தைப் பார்ப்பதற்காக வந்திருந்தான்.

பெரிய தலைவர்களென்றால் வாத்தியார் மங்குவைப் பொறுத்தவரை ஊர்வலமாக வரும்போது ஏராளமான மாலைகள் சூட்டப்பட்டும் வருபவர்கள். ஒருவேளை அந்த ஊர்வலத்தில் போலீசாரோடு ஏதாவது சில தள்ளுமுள்ளுகள் நடந்து விட்டால் அந்தத் தலைவர் மங்குவின் பார்வையில் எங்கோ உயரத்திற்கு போய் விடுவார். புதிய அரசியலமைப்பு சட்டமும் அப்படியான பரபரப்பாக அமுலாவதைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினான்.

அனார்கலி வணிகவளாகத்திலிருந்து அவன் கடைவீதிக்குப் போனான். மோட்டார் ஷோ ரூம் முன்னால் அவனுக்கு ஒரு சவாரி படையணி நிலையத்துக்குக் கிடைத்தது. அவர்கள் பணத்தைக் கொடுத்து விட்டு உடனே அந்த இடத்தை விட்டு அவர்கள் வழியில் சென்றனர். வாத்தியார் மங்குவுக்கு இப்போது நம்பிக்கை வந்தது. படையணிநிலையத்திலிருந்து புதிய அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தான்.

அவனுடைய சவாரி குதிரை வண்டியிலிருந்து இறங்கியதும் வாத்தியார் மங்கு குதிரை வண்டியின் பின்னிருக்கைக்குச் சென்று ஒரு சிகரெட்டை பற்ற வைத்தபடியே யோசிக்க ஆரம்பித்தான். அவனுக்கு நேரம் கிடைக்கும்போது இப்படித்தான் அவன் ஆசுவாசப்படுத்திக் கொள்வான். அவன் அடுத்த சவாரியைப் பார்க்கவில்லை. அவன் புதிய சட்டத்தினால் வரக்கூடிய மாற்றங்கள் குறித்து அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தான்.

குதிரைவண்டிகளுக்கு குதிரைவண்டி எண் கொடுக்கும் இப்போதைய முறையை புதிய சட்டஒழுங்குமுறையில் எப்படி மாற்றலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தான். அப்போது ஒரு கோரா படைவீரன் விளக்குத்தூணுக்கருகில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான்.

அவனுக்கு ஏற்பட்ட முதல் உள்ளுணர்வு வண்டியில் அவனை ஏற்றக்கூடாது. அவன் அந்தக் குரங்குகளை வெறுத்தான். ஆனால் அவர்களுடைய பணத்தை ஏற்றுக் கொள்ளாமலிருப்பது புத்திசாலித்தனமுமல்ல என்று அவனுக்குத் தோன்றியது. புதிய இறகுக்குஞ்சம் வாங்க நான் செலவழித்த பணத்தை மீட்ட மாதிரி இருக்கும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

அவன் வண்டியைத் திருப்பி இருந்த இடத்திலிருந்து கொண்டே சாவகாசமான முறையில் கேட்டான், ” பகதூர் சாகிப் உங்கள எங்கே கூட்டிக் கொண்டு போக வேண்டும் ஐயா..? “ என்று கேட்டான். இந்த வார்த்தைகளை அவன் வெளிப்படையான வெறுப்புடனே கேட்டான். அப்போது அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. அந்தத் துடுக்குத்தனமான கோரா உடனே அங்கிருந்து மறைந்து விடவேண்டும் என்பதைத் தவிர வேறொன்றும் அவன் விரும்பவில்லை.

காற்றை எதிர்த்து சிகரெட்டைப் பற்றவைக்க முயற்சி செய்து கொண்டிருந்த கோரா திரும்பி குதிரைவண்டியைப் பார்த்து நடந்தான். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்தனர். வாத்தியார் மங்குவுக்கு இரண்டு துப்பாக்கிகள் நேருக்குநேராக சுட்டுக் கொள்வதைப் போல உணர்ந்தான்.

கடைசியில் அவன் அடக்கிவைக்கப்பட்ட சீற்றத்தோடு அந்த படைவீரனைப் பார்த்துக் கொண்டே கீழே இறங்கினான்.

“ நீ பேசாம வாறீயா இல்ல ஏதாவது பிரச்னைப் பண்ணப்போறீயா “ என்று கோரா தன்னுடைய உடைந்த உருதுவில் கேட்டான். “ இந்தப் பன்னியை எனக்குத் தெரியும் “ என்று மங்கு தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். இது அவனே தான் ஒரு வருடத்துக்கு முன்னால் அவனிடம் சண்டை போட்டவனே தான் என்று நிச்சயப்படுத்திக் கொண்டான். அப்போது அவன் குடித்திருந்தான். வாத்தியார் மங்குவை அவன் வைதான். அத்தனை வசவுகளையும் அவமானங்களையும் அமைதியாக ஏற்றுக் கொண்டான். அந்த வேசைமகனின் மண்டையை உடைக்க வேண்டுமென்று விரும்பினான். ஆனால் அந்த வழக்கு நீதிமன்றத்துக்குப் போனால் இந்த எளிய குதிரைவண்டிக்காரனின் கழுத்தைப் பிடிப்பார்கள் என்று அவனுக்குத் தெரியும்.

“ நீங்க எங்கே போகணும்? “ என்று வாத்தியார் மங்கு கேட்டான். இப்பொழுது இந்தியாவில் புதிய அரசியலமைப்பு சட்டம் அமுலுக்கு வந்திருக்கிறது என்பதை அவன் மறக்கவில்லை.

“ ஹீரா மண்டி… நடனமாடும் பெண்கள் கடைவீதிக்கு….” என்று கோரா சொன்னான்.

“ அதுக்கு அஞ்சு ரூபா ஆகும்..” என்று வாத்தியார் மங்கு சொன்னான், அப்போது அவனுடைய மீசை நடுங்கியது.

“ என்னது அஞ்சு ரூபாயா…உனக்கென்ன பைத்தியமா..” என்று கோரா நம்ப முடியாமல் கத்தினான்.

“ இந்தா பாரு.. உனக்கு உண்மையிலேயே போகணுமா… இல்ல என்னோட நேரத்த வீணாக்க விரும்புறீயா…” என்று வாத்தியார் மங்கு அவனுடைய முஷ்டியை இறுக்கிக் கொண்டு கேட்டான்.

கோராவுக்கு அவர்களுக்கிடையில் நடந்த சண்டை ஞாபகத்துக்கு வந்து விட்டதால் நெஞ்சை நிமிர்த்தும் வாத்தியார் மங்குவின் கோபத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவனுடைய திமிர்த்தனத்துக்கு இன்னொரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தான் கோரா. அவன் இரண்டடி முன்னால் போய் அவனுடைய பிரம்பை அந்த இந்தியனின் தொடை மீது வீசினான்.

வாத்தியார் மங்கு கடுமையான வெறுப்புடன் அவனை விட சிறிய உருவமான கோராவைப் பார்த்தான். பிறகு அவனுடைய கையை உயர்த்தி தாடையில் ஓங்கி அடித்தான். தொடர்ந்து இரக்கமில்லாமல் அந்த ஆங்கிலேயனை அடித்துக் கொண்டேயிருந்தான்.

கோராவுக்கு உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று நம்பமுடியவில்லை. அவன்மீது தொடர்ந்து இறங்கிக் கொண்டிருந்த அடிகளைத் தடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். ஆனால் அவனுக்கு அதிர்ஷ்டமில்லை. அவனுடைய எதிரி கிட்டத்தட்ட பைத்தியக்காரமனநிலையை தொட்டுக் கொண்டிருந்ததை அவனால் பார்க்க முடிந்தது.கையறுநிலையில் அவன் உதவிக்காக சத்தம் போட ஆரம்பித்தான். இது இன்னும் வாத்தியார் மங்குவின் ஆக்ரோஷத்தை அதிகப்படுத்தியது. அடிகள் இன்னும் பலமாக விழுந்தது. அவன் கோபத்துடன் அலறினான், “ ஏப்ரல் 1 ஆம் தேதியிலும் அதே வீறாப்பா.. மகனே! இப்போ எங்களோட ராஜ்யம் நடந்துக்கிட்டிருக்கு ”

கூட்டம் கூடி விட்டது. எங்கிருந்தோ இரண்டு போலீஸ்காரர்கள் வந்தார்கள் மிகுந்த முயற்சி செய்து அந்த துரதிருஷ்டசாலியான ஆங்கிலேயனைக் காப்பாற்றினார்கள். அது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. அங்கே வாத்தியார் மங்குவை இடது பக்கம் ஒரு போலீஸ்காரனும் வலது பக்கம் இன்னொரு போலீஸ்காரனும் பிடித்துக் கொள்ள எதிர்த்து விரிந்த தன் நெஞ்சை முன்னுக்குத் தள்ளியபடி அவன் நின்று கொண்டிருந்தான்.+ அவன் வாயில் நுரை தள்ளியது. ஆனால் கண்களில் ஒரு விநோதஒளி வீசியது. சுற்றிலும் திகைத்துபோய் நின்று கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து வாத்தியார் மங்கு, “ அந்த நாட்கள் போய்விட்டன நண்பர்களே! நாம் எதற்கும் லாயக்கில்லாதவர்களாக இருந்த காலம்.. இப்போது புதிய சட்டம்…ஆம் புதிய அரசியலமைப்பு சட்டம்! புரிந்ததா? “ என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

அந்த ஆங்கிலேயனின் முகம் வீங்கிப் போயிருந்தது. அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவனுக்கு இன்னும் என்ன நடந்தது என்று புரிந்து கொள்ள முடியவில்லை. வாத்தியார் மங்கு உள்ளூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான். எல்லாநேரமும் காவல்நிலையத்துக்குள்ளேயும் “ புதிய சட்டம்…புதிய அரசியலமைப்புச் சட்டம்..” என்று அலறிக் கொண்டிருந்தான்

“ என்ன முட்டாள்த்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறாய்? என்ன புதிய அரசியலமைப்புச் சட்டம்.. எல்லாம் அதே பழைய அரசியலமைப்புச் சட்டம்…தான் முட்டாளே..” என்று அவனுக்குச் சொல்லப்பட்டது.

பின்னர் அவர்கள் அவனை சிறையில் அடைத்தனர். 1400463_750454114981778_1170040150_oஅக்டோபர் 20 ஆம் தேதி தாம்பரத்தில்  சாதத் ஹசன் மண்ட்டோவின் சிறுகதைத் தொகுப்பான ‘ சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்’ என்ற நூல்( மொழிபெயர்ப்பு- உதயசங்கர் )  மார்க்சியக்கம்யூனிஸ்ட் கட்சியின்  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர். சீதாராம் யெச்சூரி வெளியிட்டார். இது ஒரு நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் வெளியீடு. விலை ரூ.145/-

Wednesday 9 October 2013

கடவுளின் மனிதன்

 

சாதத் ஹசன் மண்டோ

ஆங்கிலத்தில்- காலித் ஹசன்

தமிழில்- உதயசங்கர்

Saadat_hasan_manto

சௌத்ரிமௌஜூ அவனுடைய ஹூக்காவைப் புகைத்துக் கொண்டு இலைகள் அடர்ந்த ஒரு அரசமரத்தின் கீழ் ஒரு கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்திருந்தான். உச்சிப்பொழுது வெப்பமாயிருந்தது. ஆனால் வயல்களிலிருந்து வீசிய மெல்லிய தென்றல் ஹூக்காவின் ஊதா நிறப்புகையைக் கலைத்து விசிறியடித்தது.

அவன் அதிகாலையிலிருந்தே அவனுடைய வயலை உழுது கொண்டிருந்தான். ஆனால் இப்போது சோர்ந்து போய்விட்டான். சூரியன் சுட்டெரித்தான். ஆனால் அதெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டில்லை. அவன் கிடைத்த அந்த ஓய்வை அநுபவித்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய ஒரே மகளான ஜீனா அவனுடைய மதிய உணவான சுட்டரொட்டியும் மோரும் கொண்டு வருவதை எதிர்பார்த்து அவன் அங்கே உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தான். வீட்டு வேலைகளில் அவளுக்கு உதவி செய்ய யாரும் இல்லையென்றாலும் அவள் எப்போதும் நேரத்திற்கு வந்து விடுவாள். அவன் ஒரு கோபாவேசத்தில் அவளுடைய அம்மாவை இரண்டு வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்து விட்டான்.

ஜீனா அப்பாவை நன்றாகக் கவனித்துக் கொள்கிற கீழ்ப்படிதலுள்ள மகளாக இருந்தாள். அவள் ஒருபோதும் சும்மா இருந்ததில்லை. அவளுடைய வீட்டு வேலைகள் முடிந்து விட்டால் அவள் கை ராட்டினத்தில் நூல் நூற்கும் வேலையைச் செய்வாள். எப்போதாவது தான் அவளுடைய தோழிகளிடம் கதை பேசப்போவாள்.

சௌத்ரிமௌஜூக்கு அதிக நிலம் இல்லை. ஆனால் அவனுடைய எளிய தேவைகளுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. அந்தக் கிராமம் சிறியது. பல மைல் தூரத்தில் ரயில்நிலையம் இருந்தது. அந்த கிராமத்தை ஒரு மண்சாலை தான் இன்னொரு கிராமத்தோடு இணைத்தது. அதில் தான் சௌத்ரிமௌஜூ மாதம் இரண்டு முறை பலசரக்கு வாங்கப் போவான்.

அவன் மகிழ்ச்சியானவனாகவே எப்போதும் இருந்தான். ஆனால் அவனுடைய விவாகரத்திலிருந்து அவனுக்கு வேறு குழந்தைகள் இல்லை என்கிற விஷயம் அவனைத் தொந்திரவு செய்து கொண்டேயிருந்தது. இருந்தாலும் அவன் சிறந்த மதப்பற்றாளனாக இருந்ததால் இதெல்லாம் கடவுளின் சித்தம் என்று தன்னை ஆறுதல்படுத்திக் கொண்டு சமாளித்தான்.

அவனுடைய நம்பிக்கை ஆழமானது. ஆனால் அவனுக்கு மதத்தைப் பற்றி எதுவும் தெரியாது. கடவுள் இருக்கிறார், அவரை வணங்க வேண்டும். முகமது அவருடைய தீர்க்கதரிசி. குரான் முகமதுக்குக் கடவுள் வெளிப்படுத்திய செய்தி. அவ்வளவு தான் அவனுக்குத் தெரியும்.

அவன் ஒருபோதும் நோன்பு இருந்ததில்லை. தொழுகை நடத்தியதில்லை. உண்மையில் அந்த கிராமம் மிகச் சிறியது என்பதால் அதில் ஒரு மசூதி கூட இல்லை. மக்கள் தங்கள் வீடுகளில் தொழுதனர். பொதுவாகவே கடவுளுக்குப் பயந்தவர்களாக இருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் குரான் ஒரு பிரதி இருந்தது. ஆனால் யாருக்கும் அதை எப்படி வாசிப்பது என்று தெரியாது. அது வீட்டிலுள்ள மேலடுக்கில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும். எப்போதாவது யாராவது உறுதிமொழி எடுக்க வேண்டி வரும்போது பயன்படுத்தப்படும்.

திருமணங்களில் சடங்குகளை நடத்துவதற்காக ஒரு மௌல்வியை அந்தக் கிராமத்துக்கு வரவழைப்பார்கள். இறுதிச் சடங்குப் பிரார்த்தனைகளை கிராமத்துக்காரர்களே செய்து விடுவார்கள். அரபியில் இல்லை. அவர்களுடைய சொந்த மொழியான பஞ்சாபியில் பிரார்த்தனை செய்வார்கள். சௌத்ரிமௌஜூக்கு அந்த மாதிரியான நேரங்களில் கிராக்கி அதிகமாக இருக்கும். அவன் அவனுக்கென்று சுயமாக அஞ்சலி உரையை உருவாக்கிக் கொள்வான்.

உதாரணத்திற்கு,ஒரு வருடத்துக்கு முன்னால் அவனுடைய நண்பன் டினூ தன் மகனை இழந்து விட்டான். சௌத்ரிமௌஜூ கல்லறைக்குள் பிரேதத்தை இறக்கிய பிறகு கிராமத்தார்களிடம் இரங்கல் உரையை நிகழ்த்தினான்.

எப்பேர்ப்பட்ட அழகான, பலசாலியான இளைஞன் அவன்! அவன் எச்சிலைத் துப்பினால் அது இருபது அடி தூரம் தள்ளி விழும். அதேபோல அவனுடைய அடிவயிற்றில் அவ்வளவு சக்தி இருந்தது. அதனால் அவனால் இந்தக் கிராமத்திலிருக்கிற எந்த இளைஞனை விடவும் மிகத் தூரமாக மூத்திரம் பெய்ய முடியும். மல்யுத்தப்போட்டியில் அவன் ஒருபோதும் தோற்றதில்லை. நீங்கள் சட்டை பொத்தானைக் கழட்டுகிற மாதிரி அவன் எதிரியின் பிடியிலிருந்து மிகச் சுலபமாகத் தன்னை விடுவித்துக் கொள்வான்.

டினூ என் நண்பனே! உனக்கான தீர்ப்பு நாள் ஏற்கனவே இங்கே எழுதப்பட்டு விட்டது. நீ அதிலிருந்து தப்பிக்க முடியாது என்று நான் சந்தேகப்படுகிறேன். நீ கட்டாயம் இறந்து விடுவாய் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இவ்வளவு பெரிய அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டு நீ எப்படி வாழப்போகிறாய்? ஓ….எத்தனை அழகிய வாலிபன் உன்னுடைய மகன்! எனக்கு உண்மையில் தெரியும் தங்க ஆசாரியின் மகள் நெட்டி அவனுடைய காதலைப் பெறுவதற்காகப் பலமுறை வசிய மந்திரத்தை ஏவினாள். ஆனால் அவன் அவளை நிராகரித்து விட்டான். அவளுடைய அழகும் இளமையும் அவனை மயக்கவில்லை. கடவுள் சொர்க்கத்தில் அவனுக்கு ஒரு எழில் அணங்கை வழங்கட்டும். அங்கும் அவன் தங்க ஆசாரியின் மகள் நெட்டியிடம் இருந்ததைப் போலவே அந்த எழில் அணங்கிடம் மயங்காமல் இருக்கட்டும். கடவுள் அவன் ஆத்மாவை ஆசீர்வதிக்கட்டும்.

இந்தச் சுருக்கமான உரையை மிக உணர்ச்சிகரமாக நிகழ்த்துவான். சௌத்ரிமௌஜூ உட்பட எல்லோருக்கும் அழுது விடுவார்கள்.

மௌஜூ அவனுடைய மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்று முடிவு செய்த போது அவன் மௌல்விக்கு ஆளனுப்பவில்லை. அவனுக்கு மூத்தவர்களிடமிருந்து அவன் கேள்விப்பட்டிருந்தான். அதற்குத் தேவையானதெல்லாம் அவன் மூன்று முறை ‘ தலாக்…தலாக்…தலாக்..’ என்று சொல்ல வேண்டியது தான். உண்மையில் அதைத் தான் அவன் செய்தான். மறுநாள் அவன் வருத்தப்பட்டான். அதோடு அவனை நினைத்தே அவன் வெட்கப்பட்டான். கணவன், மனைவிக்குள் வருகிற தினசரிச் சச்சரவுக்கு மேல் பெரிய தீவிரமான எதுவும் அதில் கிடையாது. அது விவாகரத்தில் முடிய வேண்டிய அவசியமும் இல்லை.

அவனுடைய மனைவி பதானை அவன் விரும்பவில்லை என்று சொல்லமுடியாது. அவன் அவளை விரும்பினான். அவள் இளமையாக இல்லையென்றாலும் அவள் உடம்பு கட்டுக்கோப்பாக இருந்தது. அதோடு அவனுடைய மகளுக்குத் தாய் அவள். இதற்கு மேல் என்ன வேண்டும். ஆனால் அவன் அவளைத் திரும்பி அழைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. அப்படியே வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது.

ஜீனா அவளுடைய அம்மா இளமையில் இருந்ததைப் போலவே அழகாக இருந்தாள். சிறு பெண்ணாக இருந்த அவள் இரண்டு வருடங்களில் இளமையான, கவர்ச்சியான, பெண்ணாக, வளர்ந்திருந்தாள். அவன் அடிக்கடி அவளுடைய திருமணத்தைப் பற்றிக் கவலைப்பட்டான். குறிப்பாக அந்த நேரங்களில் அவனுடைய மனைவியைத் தேடுவான்.

அவன் இப்போது அவனுடைய கயிற்றுக் கட்டிலில் சாய்ந்து கொண்டு இன்பமாகப் புகைத்துக் கொண்டிருந்தான். அப்போது

“ கடவுளின் ஆசீர்வாதங்களும், சாந்தியும் உன் மீது இறங்கட்டும்…”

என்ற குரல் கேட்டது.

அவன் திரும்பினான். அங்கே ஒரு வயதான மனிதர் தூய வெள்ளாடை உடுத்தி காற்றில் அலைபாயும் தாடியுடன், தோள்வரை வளர்ந்த நீண்ட தலைமுடியுடன், நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். எங்கேயிருந்து அவர் முளைத்து வந்தார் என்று ஆச்சரியத்துடன் மௌஜூ அவரை வணங்கினான்.

அந்த மனிதர் உயரமாக இருந்தார். அவருடைய முகத்தில் பெரிய கருப்பிந்திய கண்கள் குறிப்பிடத்தகுந்ததாக இருந்தன.அவர் தலையில் ஒரு பெரிய வெள்ளைத் தலைப்பாகையும் அவருடைய ஒரு தோளில் மஞ்சள் துண்டும் அணிந்திருந்தார்.அவருடைய கையில் வெள்ளிப்பிடி போட்ட கைத்தடி வைத்திருந்தார். அவருடைய பூட்ஸ் மென்மையான தோலால் செய்யப்பட்டிருந்தது.

சௌத்ரிமௌஜூ உடனே அவரால் கவரப்பட்டான். இன்னும் சொல்லப்போனால் அவருடைய அழுத்தமான பெரியமனிதத் தோற்றத்தினால் அவனுக்கு வியப்பு விளிம்பிட்ட ஒரு ஆழ்ந்த மரியாதை அவர் மீது தோன்றியது. அவன் கட்டிலிலிருந்து எழுந்து,

“ நீங்கள் எங்கிருந்து எப்போது வந்தீர்கள்?”

என்று கேட்டான்.

அந்த மனிதர் புன்முறுவலோடு,

“ நாங்கள் கடவுளின் மனிதர்கள் சூன்யத்திலிருந்து வருவோம்.. எங்களுக்கு போவதற்கு வீடு கிடையாது. எந்தக் கணத்தில் வருவோம்.. எப்போது போவோம் என்று யாருக்கும் தெரியாது.. அந்தக் கடவுள் அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற எங்களுக்கு வழி காட்டுவார்.. அதேபோல அந்தக் கடவுள் தான் எங்களுடைய பிரயாணத்தை எங்கே நிறுத்தவேண்டும் என்றும் கட்டளையிடுவார்..”

என்று சொன்னார். சௌத்ரிமௌஜூவை இந்த வார்த்தைகள் மிகவும் பாதித்தன. அவன் அந்தப் புனிதரின் கையைப் பிடித்து மிகுந்த மரியாதையுடன் முத்தமிட்டு கண்களில் ஒற்றிக் கொண்டான். பின்பு,

“ என்னுடைய எளிய வீடு உங்களுடையது..”

என்று சொன்னான்.

அந்தப் புனிதர் புன்னகையுடன் கட்டிலில் உட்கார்ந்தார். அவருடைய இரண்டு கைகளாலும் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு அதில் தலை சாய்த்துக் கொண்டு,

“ உன்னுடைய எந்தக் காரியம் கடவுளின் கண்களுக்குப் பிடித்து அவர் இந்தப் பாவியை உன்னிடம் அனுப்பியிருக்கிறார் என்று யார் சொல்ல முடியும்? “

என்று சொன்னார். உடனே சௌத்ரிமௌஜூ,

“ மௌல்வி சாகிப்.. நீங்கள் கடவுளின் ஆணைப்படியா என்னைத் தேடி வந்தீர்கள்?”

என்று கேட்டான். அந்தப் புனிதர் தலையை உயர்த்தி கோபமான குரலில்,

“ அப்படின்னா உன்னுடைய கட்டளையின் பேரில் இங்கே வந்தேன் என்று நினைக்கிறீயா.. உனக்குக் கீழ்ப்படிவோமா இல்லை நாப்பது வருடங்களாக பணிவுடன் அந்தக் கடவுளைத் தொழுது வந்ததிருக்கிறோம். கடைசியில் அவர் அவருடைய அருளைப் பெற எங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் அவருக்குக் கீழ்ப்படிவோமா?..”

என்று சொன்னார். சௌத்ரிமௌஜூ பயந்து விட்டான். அவனுடைய எளிய கிராமத்துப் பாணியில் அவன் தேம்பிக் கொண்டே,

“ மௌல்வி சாகிப் நாங்கள் படிப்பறிவில்லாத மக்கள் இதைப்பற்றியெல்லாம் எதையும் அறியாதவர்கள்.. எங்களுக்கு எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கூடத் தெரியாது..உங்களைப் போன்ற கடவுளின் மனிதர்கள் கிடையாது.. அதனால் கடவுளின் கண்களில் பாவமன்னிபை நாங்கள் பார்த்ததேயில்லை..”

என்று சொன்னான்.

“ அதற்காகத் தான் நாம் இங்கிருக்கிறோம்..”

என்று அந்தப் புனிதர் பாதிக்கண்களை மூடிக் கொண்டே சொன்னார்.

சௌத்ரிமௌஜூ கீழே தரையில் உட்கார்ந்து கொண்டு விருந்தினரின் கால்களை அமுக்கி விட்டுக் கொண்டிருந்தான். அப்போது ஜீனா அவனுடைய சாப்பாட்டுடன் அங்கு வந்தாள். அவள் அந்த அந்நியரைப் பார்த்தவுடன் அவளுடைய முகத்தை மூடிக் கொண்டாள்.

“ யார் அது சௌத்ரிமௌஜூ? “

“ என்னுடைய மகள்..மௌல்வி சாகிப்..”

மௌல்வி சாகிப் ஓரக்கண்ணால் ஜீனாவைப் பார்த்துக் கொண்டே,

“ எங்களைப் போன்ற பிச்சைக்காரங்க முன்னால ஏன் அவள் முகத்தை மூடணும்னு கேளு..”

என்று சொன்னார்.

“ ஜீனா.. மௌல்வி சாகிப் கடவுளோட விஷேசத் தூதுவர்.. முக்காட்ட எடுத்துரு..”

என்று அவன் சொன்னான். ஜீனா அவளிடம் சொல்லப்பட்டதைச் செய்தாள். மௌல்வி சாகிப் அப்படியே அவளை மேலும் கீழும் அளவெடுத்துக் கொண்டே,

“ உன்னோட மகள் அழகாக இருக்கிறாள்..சௌத்ரிமௌஜூ..”

என்று சொன்னார். ஜீனா வெட்கப்பட்டாள். மௌஜு,

“ அவள் அவளோட அம்மா மாதிரி..”

என்று சொன்னான். ஜீனாவின் இளமை பொங்கும் கன்னியுடலை நோட்டமிட்டுக் கொண்டே,

“ அவளோட அம்மா எங்கே? “

என்று கேட்டார். அதற்கு எப்படிப் பதில் சொல்வதென்று தெரியாமல் சௌத்ரிமௌஜூ தயங்கினான். திரும்பவும் மௌல்வி சாகிப்,

“ அவளோட அம்மா எங்கே? “

என்று கேட்டார். மௌஜூ வேகவேகமாக,

“ அவ இறந்துட்டா..”

என்று சொன்னான். அதைக்கேட்டு திடுக்கிட்ட ஜீனாவைக் கவனமாகப் பார்த்தார். பிறகு அவர்,

“ நீ பொய் சொல்றே..”

என்று முழங்கினார். மௌஜூ அவர் காலில் விழுந்தான். குற்றவுணர்ச்சியுடன்,

“ ஆமாம். நான் உங்க கிட்ட பொய் சொன்னேன்..தயவு செய்ஞ்சு என்ன மன்னிச்சிருங்க.. நான் ஒரு பொய்யன்.. உண்மை என்னன்னா.. நான் அவளை விவாகரத்து பண்ணிட்டேன்..மௌல்வி சாகிப்..”

என்று சொன்னான்.

“ நீ ஒரு பெரிய பாவி.. அந்தப் பெண் செய்த தவறு தான் என்ன? “

“ எனக்குத் தெரியல..மௌல்வி சாகிப்.. அது வந்து உண்மையிலே ஒண்ணுமில்லை..ஆனா கடைசியில அவளை விவாகரத்து செய்யும்படியாயிருச்சி.. உண்மையில நான் ஒரு பாவி.. நான் மறுநாளே என்னோட தப்ப உணர்ந்துட்டேன்.. ஆனால் ரெம்பத் தாமதமாகியிருச்சி..அதுக்குள்ளே அவ அவளோட அப்பாஅம்மாகிட்ட போயிட்டா..”

மௌல்வி சாகிப் தன்னுடைய வெள்ளிக் கைப்பிடி போட்ட கைத்தடியினால் மௌஜூவின் தோள்களைத் தொட்டு,

“ கடவுள் பெரியவர்.. அவர் கருணையும் அன்பும் கொண்டவர்.. அவர் விரும்பினால் எல்லாத் தவறுகளையும் சரி செய்து விடலாம்.. அது தான் அவருடைய கட்டளையாக இருந்தால் அவருடைய இந்த வேலைக்காரன் உன்னை உன்னுடைய மீட்சியை நோக்கி வழி நடத்தவும் உனக்கு மன்னிப்பு வழங்கவும் சக்தி படைத்தவனாகிறான்..”

என்று சொன்னார். முழுமையான பணிவுடனும் நன்றியுடனும் சௌத்ரி மௌஜூ அவருடைய கால்களில் விழுந்து அழுதான். மௌல்வி சாகிப் ஜீனாவைப் பார்த்தார். அவளுடைய கன்னங்களிலும் கண்ணீர் வழிந்தோடியது.

“ இங்கே.. வா..பெண்ணே..” என்று கட்டளையிட்டார் அவர்.

அவருடைய குரலில் அப்படியோரு அதிகாரம் இருந்தது. அவளால் அதற்குக் கீழ்ப்படியாமல் இருக்க முடியவில்லை.அவள் சாப்பாட்டை ஓரமாக வைத்து விட்டு அவரை நோக்கி நடந்தாள். மௌல்வி சாகிப் அவளுடைய கைகளைப் பற்றி இழுத்து,

“ உட்கார்..”

என்று சொன்னார்.

அவள் கீழே தரையில் உட்காரப்போனாள். ஆனால் மௌல்வி சாகிப் அவளை அவர் பக்கமாக இழுத்து,

“ என் பக்கத்தில இங்கே உட்கார்..”

என்று உத்தரவிட்டார். ஜீனா உட்கார்ந்தாள். மௌல்வி சாகிப் அவருடைய கைகளால் அவளுடைய இடுப்பைச் சுற்றி வளைத்து அவளை இறுக்கிப் பிடித்துக் கொண்டே,

“ சரி.. எங்களுக்காக என்ன கொண்டு வந்திருக்கிறாய்..? ”

என்று கேட்டார். ஜீனா விலக நினைத்தாள். ஆனால் மௌல்வி சாகிப்ப்பின் பிடி கிடுக்கிப் பிடியாக இருந்தது.

“ சுட்ட ரொட்டியும் மோரும் கொஞ்சம் கீரையும் கொண்டு வந்திருக்கேன்..”

என்று தாழ்ந்த குரலில் சொன்னாள். மௌல்வி அவளுடைய மெல்லிய இடையை மறுபடியும் ஒரு தடவை பிசைந்தார். பின்பு,

“ அப்படியா..போ.. போய் அதைக் கொண்டு வந்து எங்களுக்குச் சாப்பாடு போடு..”

ஜீனா எழுந்தவுடன் மௌல்வி சாகிப் தன்னுடைய கைத்தடியினால் மௌஜூவின் தோள்களில் மெல்லத் தட்டி,

“ மௌஜூ.. என்னுடைய கைகளைக் கழுவ உதவி செய்..”

மௌஜூ அருகிலிருந்த கிணற்றுக்குச் சென்றான். ஒரு வாளியில் நல்ல தண்ணீரைக் கொண்டு வந்தான். ஒரு உண்மையான சிஷ்யனைப் போல அவன் மௌல்வி சாகிப் அவருடைய கைகளைக் கழுவ உதவினான். ஜீனா உணவை அவருக்கு முன்னால் வைத்தாள்.

மௌல்வி சாகிப் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டார். பின்பு அவர் அவருடைய கைகளைக் கழுவத் தண்ணீர் ஊற்றும்படி ஜீனாவுக்கு ஆணையிட்டார். அவள் கீழ்ப்படிந்தாள். அவருடைய செய்கையில் அப்படி ஒரு அதிகாரம் இருந்தது.

மௌல்வி சாகிப் சத்தமாக ஏப்பமிட்டார். அதை விட சத்தமாக கடவுளுக்கு நன்றி சொன்னார். ஈரக்கைகளால் அவருடைய தாடியைக் கோதி விட்டுக் கொண்டே கட்டிலில் சாய்ந்தார். ஒரு கண்ணால் ஜீனாவையும், இன்னொரு கண்ணால் அவளுடைய அப்பாவையும் கவனித்தார். அவள் சாப்பாட்டுப்பாத்திரங்களை எடுத்துக் கொண்டு போனாள். மௌல்வி சாகிப் மௌஜூவிடம்,

“ சௌத்ரி.. நாம் சற்று ஓய்வெடுக்கப் போகிறோம்..”

என்று சொன்னார்.

சௌத்ரி அவருடைய கால்களையும் பாதங்களையும் கொஞ்சநேரம் அமுக்கி விட்டான். அவர் உறங்கிவிட்டார் என்பதை உறுதிசெய்த பிறகு அங்கிருந்து நகர்ந்து அவனுடைய ஹூக்காவை பற்ற வைத்தான். அவன் சந்தோஷமாக இருந்தான். அவனுடைய நெஞ்சிலிருந்து மிகப்பெரிய பாரத்தை அகற்றியது போல அவன் உணர்ந்தான். அவனுக்குத் தெரிந்த எளிய வார்த்தைகளால் கருணையின் தேவர்களில் ஒருவரை மௌல்வி சாகிப்பின் வடிவில் கடவுள் அவனிடம் அனுப்பி வைத்தற்காக இதயபூர்வமாக நன்றி சொன்னான்.

மௌல்வி சாகிப் ஓய்வெடுப்பதையே சற்று நேரம் அங்கேயே இருந்து பார்த்துக் கொண்டிருந்து விட்டு, அவனுடைய வயலுக்கு வேலை செய்யப் போனான். அவனுடைய பசி கூட அவனுக்குத் தெரியவில்லை. உண்மையில் மௌல்வி சாகிப்புக்கு உணவளிக்கும் கௌரவமே அவனுக்குப் பெரிய விஷயமாக இருந்தது.

மாலையில் அவன் வேலை முடிந்து திரும்பியபோது மௌல்வி சாகிப் அங்கில்லாதது மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. அவன் அவனையே சபித்துக் கொண்டான். அந்த இடத்தை விட்டு போய் அவன் கடவுளின் மனிதரை அவமானப்படுத்தி விட்டான். ஒருவேளை போவதற்கு முன்னால் அவர் அவனைச் சபித்து விட்டும் போயிருக்கலாம். அவன் பயத்தில் நடுங்கினான். கண்ணீர் அவனுடைய கண்களில் குளமாய் கட்டியது.

அவன் கிராமத்தில் மௌல்வி சாகிப்பைத் தேடிப்பார்த்தான். ஆனால் அவரைக் காணவில்லை. மாலை இரவினுள் மூழ்கிக் கொண்டிருந்தது. ஆனால் மௌல்வி சாகிப்பைப் பற்றி ஒரு துப்பும் தெரியவில்லை. அவனுடைய வீட்டை நோக்கி ஏதோ இந்த உலகத்தையே அவனுடைய தோள்களில் சுமப்பதைப் போல அவன் தலையைக் குனிந்து கொ்ண்டே நடந்தான். கிராமத்திலிருந்து இரண்டு இளைஞர்களை அவன் எதிர்கொண்டான். அவர்கள் பயந்து போயிருந்தார்கள். முதலில் அவர்கள் என்ன நடந்ததென்று சொல்லவில்லை. அவன் வற்புறுத்திக் கேட்டபிறகே அவர்களுடைய கதையைச் சொன்னார்கள்.

கொஞ்ச நாளைக்கு முன்னால் அவர்கள் கடுமையான நாட்டுச்சாரயத்தைக் காய்ச்சி வடித்து மண்பானையில் ஊற்றி ஒரு மரத்தின் அடியில் புதைத்து வைத்தார்கள். அன்று மாலை அவர்கள் அந்த இடத்துக்குப் போனார்கள். அவர்களுடைய விலக்கப்பட்ட செல்வத்தைத் தோண்டியெடுத்தார்கள். அதைக் குடிக்கப்போகும் சமயம் ஒரு வயதான மனிதர் ஒரு விசித்திரமான ஓளி முகத்தில் வீச திடீரென அந்த இடத்தில் பிரசன்னமாகி அவர்கள் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டார்.

அவர்கள் செய்யவிருந்த பாவச்செயலுக்காக அவர்களைக் கடுமையாக ஏசினார். கடவுளே மனிதர்கள் தொடவேக்கூடாது என்று விலக்கிவைத்திருந்ததைக் எப்படி அவர்கள் குடிக்க நினைக்கலாம் என்று கேட்டார். அவர்கள் திகிலடைந்துபோய் அந்த இடத்தை விட்டு மண்பானையை அங்கேயே விட்டு விட்டு ஓடிப்போய் விட்டார்கள்.

சௌத்ரி மௌஜூ அவர்களிடம் சொன்னார், அந்த விசித்திரமான ஒளி வீசும் வயதான மனிதர் யார் தெரியுமா அவர் கடவுளின் புனிதர். அவர் அவமானப்படுத்தப் பட்டதால் அநேகமாக அந்த முழுக்கிராமத்தின் மீதும் சாபம் விட்டுப் போயிருக்கலாம்.

கடவுள் நம்மை காப்பாற்றட்டும் என் மக்களே...கடவுள் நம்மை காப்பாற்றட்டும்…..என் மக்களே.. என்று அவன் முணுமுணுத்தவாறே அவனுடைய வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஜீனா வீட்டிலிருந்தாள். ஆனால் அவன் அவளிடம் பேசவில்லை. மௌல்வி சாகிப்பின் சாபத்திலிருந்து தப்பமுடியாது என்று அவன் மனதார நம்பினான்.

ஜீனா மௌல்வி சாகிப்பிற்கும் சேர்த்துக் கூடுதல் உணவு தயாரித்திருந்தாள்.

அவள் “ அப்பா மௌல்வி சாகிப் எங்கே? ” என்று கேட்டாள்.

“ போய்ட்டாரு.. அவர் போய்ட்டாரு.. எப்படி கடவுளின் மனிதரால் நம்மைப் போன்ற பாவிகளோடு சேர்ந்து இருக்க முடியும்? “ என்று வருத்தந்தோய்ந்த குரலில் அவன் சொன்னான்.

ஜீனாவும் வருத்தப்பட்டாள். ஏனென்றால் மௌல்வி சாகிப் அவளுடைய அம்மாவை திரும்பி வரவழைக்க ஒரு வழி கண்டுபிடிப்பதாக வாக்களித்திருந்தார். இப்போதென்றால் அவர் போய் விட்டார் அவளை அவளுடைய அம்மாவுடன் சேர்த்து வைப்பதற்கு. இனி யாரிருக்கிறார்கள்? ஜீனா கீழே மணைப்பலகையில் உட்கார்ந்தாள். உணவு குளிர்ந்து கொண்டிருந்தது.

கதவை நோக்கி நெருங்கி வரும் காலடி ஓசையை அவர்கள் கேட்டார்கள். அப்பாவும் மகளும் துள்ளியெழுந்தார்கள். திடீரென மௌல்வி சாகிப் உள்ளே நுழைந்தார். கிளியாஞ்சட்டி விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் அவர் தடுமாறிக் கொண்டே வருவதைப் பார்த்துவிட்டாள். அவருடைய கையில் ஒரு சிறிய மண்கலயத்தை வைத்திருந்தார்.

மௌஜூ அவர் கட்டிலில் உட்காருவதற்கு உதவி செய்தான். அவனிடம் அந்த மண்கலயத்தைக் கொடுத்துக்கொண்டே மௌல்வி சாகிப்,

” இன்று கடவுள் நம்மை பெருஞ்சோதனைக்கு ஆட்படுத்திவிட்டான். எதிர்பாராதவிதமாக உன் கிராமத்திலிருந்து கொடிய பாவமான சாரயம் குடிக்கவிருந்த இரண்டு இளைஞர்களைச் சந்தித்தேன். நாம் அவர்களை நிந்தித்த போது அவர்கள் ஓடி விட்டார்கள். நாம் மிகுந்த துக்கத்திலிலாழ்ந்து விட்டோம். அவ்வளவு இளம்வயதில் இவ்வளவு கொடிய பாவமா? ஆனால் அவர்களுடைய இளமைதான் அவர்களை இந்தப்பாவத்தைச் செய்யத் தூண்டியது என்று நாம் உணர்ந்தோம். கடவுளின் மேலோக நீதிமன்றத்தில் அவர்களை மன்னித்தருளுமாறு நாம் பிரார்த்தனை செய்தோம். நமக்கு என்ன பதில் கிடைத்ததென்று உனக்குத் தெரியுமா? “ என்று கேட்டார்.

” தெரியாது..” என்று உணர்ச்சிவயப்பட்டு சௌத்ரி மௌஜூ கூறினான்.

“ அந்த பதில் என்னவென்றால் நீ அவர்களுடைய பாவத்தின் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராய் இருக்கிறாயா? அதற்கு நாம் சொன்னோம் சரி எல்லாம்வல்ல இறைவனே. அதன் பிறகு நாம் குரலைக் கேட்டோம்.. இந்த மண்கலயத்திலுள்ள அத்தனை சாராயத்தையும் குடிக்கும்படி ஆணையிடுகிறேன். நாம் அந்தப் பையன்களை மன்னித்தருளுவோம்..”

மௌஜூக்கு மயிர்க்கூச்செரிந்தது. “ பிறகு நீங்கள் அதைக் குடித்தீர்களா?”

மௌல்வியின் நாக்கு இன்னும் குழறியது, “ ஆமாம் நாம் குடித்தோம்.. அந்த இளம்பாவிகளின் ஆத்மாக்களைக் காப்பாற்றுவதற்காக..இந்த உலகத்தில் வணங்கவேண்டிய ஒரே ஆளான கடவுளின் கண்களுக்கு முன்னால் மதிப்பைச் சம்பாதிப்பதற்காக.. இன்னும் கொஞ்சம் மீதமிருக்கிறது அதையும் நாம் தான் குடிக்கவேண்டுமென ஆணையிடப்பட்டிருக்கிறோம்.. இப்பொழுது அதைக் கவனமாகப் பத்திரப்படுத்து.. ஒரு சொட்டுகூட வீணாகிவிடக்கூடாது..பாத்துக்கோ..”

மௌஜூ அந்த மண்கலயத்தை எடுத்தான். அதனுடைய வாயை ஒரு சுத்தமான துணியினால் மூடிக்கட்டினான். பின்னர் அதை அவனுடைய எளிய வீட்டிலுள்ள ஒரு இருட்டறையில் வைத்தான். அவன் திரும்பிய போது மௌல்வி சாகிப் கட்டிலில் கைகால்களைப் பரப்பிக் கொண்டு கிடந்தார். ஜீனா அவருடைய தலையைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள்.அவர் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தார், “ யார் மற்றவர்களுக்கு உதவி செய்கிறார்களோ அவர்களே கடவுளின் அன்புக்கு பாத்திரமாவார்கள்.. அவர் இந்தக் கணத்தில் உன்மீது பிரீதியோடு இருக்கிறார்.. நாமும் உன்மீது பிரீதியோடு இருக்கிறோம்..”

பிறகு மௌல்வி சாகிப் அவருக்கு பக்கத்தில் அவளை உட்காரவைத்து அவளுடைய நெற்றியில் ஒரு அழுத்தமான முத்தத்தைப் பதித்தார். அவள் எழுந்து கொள்ள முயற்சி செய்தாள் ஆனால் அவளால் அவரிடமிருந்து விடுவித்துக் கொள்ள முடியவில்லை. மௌல்வி சாகிப் அவளைக் கட்டியணைத்துக் கொண்டு மௌஜூவிடம் சொன்னார், ” சௌத்ரி நான் உன் மகளுடைய உறங்கிக் கொண்டிருக்கும் விதியை எழுப்புகிறேன்..”

மௌஜூ மிகுந்த உணர்ச்சிவசப்பட்டான். அவனால் நன்றியைக் கூட சரியாகச் சொல்ல முடியவில்லை. அவனால் சொல்ல முடிந்ததெல்லாம்,

“ எல்லாம் உங்களுடைய பிரார்த்தனைகளாலும் அன்பினாலும் வந்தது…”

அவ்வளவு தான். மௌல்வி சாகிப் ஜீனாவை அவருடைய நெஞ்சோடு சேர்த்து இறுக்கிக் கொண்டு சொன்னார், “ உண்மையில் கடவுள் தன்னுடைய அனுக்கிரகத்தை உனக்கு அளித்துவிட்டார். ஜீனா நாளை நாம் உனக்கு புனித பிரார்த்தனையைச் சொல்லிக் கொடுப்போம்.. நீ அதை எப்போதும் சொல்லிக் கொண்டிருந்தால் கடவுளின் கண்களுக்கு எப்போதும் நீ ஏற்றவளாக இருப்பாய்..”

மறுநாள் மௌல்வி சாகிப் தாமதமாக எழுந்தார். மௌஜூ ஒருவேளை அவன் அவருக்குத் தேவைப்படலாமோ என்று பயந்து வயலுக்குப் போகவில்லை. கடமையுணர்வோடு அவன் காத்திருந்தான். மௌல்வி கண் விழித்தபோது அவர் தன்னுடைய முகத்தைக் கழுவவும், கைகளைக் கழுவவும் அவன் உதவினான். அவருடைய விருப்பத்திற்கிணங்க அந்த மண்கலயத்தை எடுத்துக் கொண்டு வந்தான்.

மௌல்வி சாகிப் முணுமுணுத்தபடியே ஒரு தொழுகை நடத்தினார். பிறகு மண்கலயத்தின் வாயை மூடியிருந்த துணியை அகற்றி விட்டு மூன்று முறை பானைக்குள் ஊதினார். மூன்று பெரிய கோப்பைகள் நிறைய மதுவைக் குடித்தார். பிறகு இன்னொரு பிரார்த்தனையை முணுமுணுத்தார். வானத்தை அண்ணாந்து பார்த்து முழக்கமிட்டார்.

“ கடவுளே நீ எங்களைச் சோதிக்கும் சோதனையை நாங்கள் விரும்புவதாக நீ நினைத்து விடக்கூடாது..”

பிறகு அவர் மௌஜூவைப் பார்த்து, “ சௌத்ரி, நீ உடனே உன்னுடைய மனைவியின் கிராமத்துக்குப் போய் அவளை அழைத்துக்கொண்டு வரவேண்டும் என்று இப்போதுதான் புனிதகட்டளையை நாம் பெற்றோம்… நாம் எதிர்பார்த்திருந்த சமிக்ஞை கிடைத்துவிட்டது…” என்று சொன்னார்.

மௌஜூவுக்குப் புல்லரித்தது. அவன் குதிரையின் மீது ஏறினான். மறுநாள் அவளை அழைத்து வருவதாக சத்தியம் செய்தான். ஜீனாவிடம் மௌல்வி சந்தோஷமாகவும் வசதியாகவும் இருப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தினான்.

ஜீனாவின் தந்தை போனபிறகு அவள் வீட்டுவேலைகளில் மூழ்கி விட்டாள். மௌல்வி சாகிப் நிதானமாகக் குடித்துக் கொண்டேயிருந்தார். பிறகு அவர் சட்டைப்பையிலிருந்து ஜெபமாலையை எடுத்து அவருடைய விரல்களில் உருட்ட ஆரம்பித்தார். ஜீனா வேலைகளையெல்லாம் முடித்தவுடன் அவர் அவளைச் மேனியலம்பும் சடங்குகளைச் செய்யச் சொன்னார்.

அவள் அப்பாவியாக “ மௌல்விசாகிப், எப்படி அதைச் செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியாது..” என்று சொன்னாள்.

அவசியமான மதச்சடங்குகளைப் பற்றிய அறிவு கூட இல்லாமைக்காக அவளை மென்மையாக மௌல்விசாகிப் கடிந்து கொண்டார். பின்பு அவர் அவளுக்கு மேனியலம்பும் சடங்கை எப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். இந்த சிக்கலான பயிற்சி உடல்களின் நெருக்கம் மூலம் நிகழ்ந்தேறியது.

மேனியலம்பும் சடங்குக்குப் பின்னால் மௌல்விசாகிப் பிரார்த்தனைபாயைக் கேட்டார்.

அந்த வீட்டில் அப்படியொன்று இல்லை. மௌல்விசாகிப் அதிருப்தியடைந்தார். அவர் அவளிடம் ஒரு படுக்கைவிரிப்பைக் கொண்டுவரும்படி சொன்னார். உள்ளறையில் அதைத் தரையில் விரித்து ஜீனாவை உள்ளே வரும்படி ஆணையிட்டார். அதோடு வரும்போது அந்தப்பானையையும், கோப்பையையும் கொண்டு வரச் அறிவுறுத்தினார்.

மௌல்விசாகிப் கோப்பையில் நிறைய ஊற்றி, அதில் பாதியைக் குடித்தார். பிறகு தன் விரல்களில் ஜெபமாலையை உருட்ட ஆரம்பித்தார். ஜீனா அதை மௌனமாகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

வெகுநேரத்துக்கு மௌல்விசாகிப் ஜெபமாலையை சுறுசுறுப்பாக உருட்டிக்கொண்டிருந்தார். அவருடைய கண்கள் மூடியிருந்தன. பிறகு அவர் கோப்பைக்குள் மூன்றுமுறை ஊதி விட்டு ஜீனாவைக் குடிக்குக்கும்படிச் சொன்னார்.

ஜீனா நடுங்கும்கரங்களால் அதைக் கையில் எடுத்தாள். மௌல்விசாகிப் இடிக்குரலில் சொன்னார்,” நீ இதைக் குடிக்கும்படி நாம் கட்டளையிடுகிறோம். உன்னுடைய எல்லாவேதனைகளும், துன்பங்களும் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.”

ஜீனா அந்தக்கோப்பையை அவளுடைய உதடுகளுக்குக்கருகில் கொண்டு போனாள். ஒரே மூச்சில் அதைக் குடித்துவிட்டாள். மௌல்விசாகிப் புன்னகைத்தார்.

“ நாம் நம்முடைய சிறப்புப்பிரார்த்தனையைத் தொடரப்போகிறோம்…ஆனால் எப்பொழுதெல்லாம் நாம் சுட்டுவிரலை உயர்த்துகிறோமோ அப்பொழுதெல்லாம் பானையிலிருந்து அரைக்கோப்பை ஊற்றிக் குடிக்கவேண்டும்..தெரிந்ததா?”

அவர் அவளை பதில்சொல்ல அநுமதிக்கவில்லை. அவள் ஆழ்ந்த மயக்கத்துக்குள் போய்க்கொண்டிருந்தாள். ஜீனாவின் வாயில் ஒரு மோசமான ருசி. நெஞ்சில் தீ எரிவதைப்போன்ற எரிச்சல். அவள் எழுந்து சென்று வாளிவாளியாய் குளிர்ந்த நீரைக் குடிக்க விரும்பினாள். ஆனால் அதற்கு அவளுக்குத் தைரியமில்லை. திடீரென்று மௌல்விசாகிப்பின் சுட்டுவிரல் உயர்ந்தது. அவள் மனோவசியம் செய்யப்பட்டவளைப் போல ஏற்கனவே மௌல்விசாகிப் சொல்லியமாதிரி அரைக்கோப்பை ஊற்றி ஒரே மடக்கில் குடித்தாள்.

மௌல்விசாகிப் தொடர்ந்து பிரார்த்திக் கொண்டிருந்தார்.அவளால் ஜெபமாலையின் மணிகள் ஒன்றோடொன்று உரசும் சத்தத்ததைக் கேட்க முடிந்தது. அவளுடைய தலை சுற்றியது. அவள் உறக்கம் வருவதைப்போல உணர்ந்தாள். ஒரு முகம் மழிக்கப்பட்ட இளைஞனின் மடியில் இருப்பதாகவும், அவன் அவளிடம் அவளைச் சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்று கொண்டிருப்பதாகவும் சொல்லிக்கொண்டிருப்பதைப் போல அவளுக்கு ஒரு தெளிவில்லாத, கிட்டத்தட்ட தன்னுணர்வில்லாத உணர்வு தோன்றியது.

அவள் உணர்வுக்கு வந்தபோது அவள் உள்ளே தரையில் படுத்திருந்தாள். மங்கலான கண்களால் சுற்றிலும் பார்த்தாள். ஏன் அவள் அங்கே படுத்துக்கிடக்கிறாள்? எப்போதிருந்து? எல்லாமே பனிமூட்டமாக இருந்தது. மறுபடியும் தூங்க விரும்பினாள். ஆனால் அவள் எழுந்துவிட்டாள். மௌல்விசாகிப் எங்கே? அப்புறம் அந்த சொர்க்கம் எங்கே மறைந்து போனது?

அவள் திறந்தவெளி முற்றத்திற்குப் போனாள். கிட்டத்தட்ட சாயங்காலமாகி விட்டதைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். மௌல்விசாகிப் மேனியலம்பும் சடங்கைச் செய்து கொண்டிருந்தார். அவள் வருகிற சத்தம் கேட்டு புன்னகைமுகத்துடன் திரும்பினார் மௌல்விசாகிப். அவள் அறைக்குத் திரும்பி தரையில் அமர்ந்து அவளுடைய அம்மா வீட்டுக்குத் திரும்பி வரப்போவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். இன்னும் ஒரு இரவு இருக்கிறது.அவளுக்கு ரெம்பப் பசித்தது. ஆனால் அவள் சமையல் செய்ய விரும்பவில்லை. அவளுடைய மனம் முழுவதும் விளங்காத, பதிலில்லாத கேள்விகள் நிறைந்திருந்தன.

திடீரென மௌல்விசாகிப் கதவருகில் தோன்றினார். “ நாம் உன்னுடைய அப்பாவுக்காக விசேசபிரார்த்தனைகள் செய்ய வேண்டும். நாம் இரவு முழுவதும் கபர்ஸ்தானில் இருந்து பிரார்த்தனை செய்துவிட்டு காலையில் திரும்பி வருவோம். உனக்காகவும் நாம் பிரார்த்தனை செய்வோம்..” என்று சொன்னார்.

அவர் மறுநாள் காலையில் தோன்றினார். அவருடைய கண்கள் சிவந்திருந்தன. பேசும்போது லேசாக வாய் குழறியது. அவரால் நிலையாக நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தார். அவர் வெளிமுற்றத்துக்கு நடந்துபோய் ஜீனாவை உணர்ச்சியுடன் இறுக்கிக் கட்டிப் பிடித்து முத்தமிட்டார். ஜீனா மனைப்பலகையில் உடகார்ந்துகொண்டு கடந்த இருபத்திநாலு மணி நேரத்தில் நடந்த புதிரான, அரைகுறைஞாபகங்களோடு உள்ள நிகழ்வுகளை புரிந்துகொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தாள். அவளுடைய அப்பா திரும்பி வரவேண்டும் என்று விரும்பினாள். இரண்டுவருடங்களாக வீட்டை விட்டு போயிருந்த அம்மாவும் திரும்பி வரவேண்டும் என்று விரும்பினாள். அப்புறம் அங்கே அந்த சொர்க்கம்… அவளை அழைத்துக் கொண்டு போயிருந்தது என்ன வகையான சொர்க்கம்? அப்புறம் மௌல்விசாகிப்…. அவரா..அவளை சொர்க்கத்துக்கு கூட்டிப் போனது…அப்படியிருக்காது.. ஏன்னா ஒரு இளைஞன் அதுவும் தாடியில்லாதவனாக அவள் ஞாபகத்தில் வந்தான்.

மௌல்விசாகிப் அவளைப்பார்த்து, “ ஜீனா உன்னோட அப்பா இன்னும் வரல்ல..” என்று சொன்னார். அவள் ஒன்றும் சொல்லவில்லை.

அவர் திரும்பவும், “ இரவு முழுவதும் உன்னோட அப்பா என்னுடன் பிரார்த்தனையில் இருந்தான்..இப்பொழுது உன்னுடைய அம்மாவுடன் வந்திருக்கவேண்டுமே…”. என்று சொன்னார்.

ஜீனாவால் சொல்லமுடிந்ததெல்லாம் இதுதான்,” எனக்குத் தெரியல.. அவர் வந்துக்கிட்டிருப்பாரு..அம்மாவைக் கூட்டிக்கிட்டு..ஆனா உண்மையில் எனக்கு ஒண்ணும் தெரியாது…”

முன்கதவு திறந்தது. ஜீனா எழுந்தாள். அங்கே அவளுடைய அம்மா. இருவரும் ஒருவர் கைகளில் ஒருவர் விழுந்தனர். இருவருக்கும் கண்ணீர் பெருகியது. மனைவியின் பின்னால் மௌஜூவும் வந்தான். மிகுந்த மரியாதையுடன் மௌல்வி சாகிப்பை வணங்கினான். பின்னர் தன்னுடைய மனைவியிடம், “ பதான் நீ மௌல்விசாகிப்பை வணங்கவில்லையே….” என்று சொன்னான்.

பதான் மகளிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, கண்களைத் துடைத்தாள். பின்னர் மௌல்விசாகிப்பை வணங்கினாள். அதுவரை தன்னுடைய ரத்தச்சிவப்பான கண்களால் பதானையே முறைத்துப்பார்த்துக் கொண்டிருந்த மௌல்விசாகிப், “ நாம் உனக்காக இரவு முழுவதும் பிரார்த்தனையில் இருந்தோம்; இதோ நீ வந்து விட்டாய்.. கடவுள் நம்முடைய பிரார்த்தனைகளைச் செவிமடுத்துவிட்டார்.. இனி எல்லாம் நல்லபடியாய் நடக்கும்..” என்று சொன்னார்.

சௌத்ரிமௌஜூ தரையில் உட்கார்ந்து மௌல்விசாகிப்பின் கால்களை அமுக்கி விட்டுக் கொண்டிருந்தான். தொண்டை தழுதழுக்க, அவன் தன் மனைவியிடம், “ பதான், இங்கே வா… மௌல்விசாகிப்புக்கு உன் நன்றியைத் தெரிவி…. எனக்கு எப்படிச் சொல்லணும்னு தெரியல..” என்று சொன்னான்.

பதான் முன்னால் வந்து,” நாங்கள் ஏழை எளிய கிராமத்து ஆட்கள்…எங்களிடம் செய்வதற்கு எதுவுமில்லை…..புனித கடவுள்மனிதரே!..” என்று சொன்னாள்.

மௌல்விசாகிப் பதானை கூர்மையாகப் பார்த்துக் கொண்டே,” மௌஜூ சௌத்ரி நீ சொன்னது சரிதான்.. உன் மனைவி அழகாக இருக்கிறாள்.. இந்த வயதிலும் அவள் இளமையாகத் தெரிகிறாள்.. அவள் இன்னொரு ஜீனா… அவளை விட மேல்… நாம் எல்லாவற்றையும் சரி செய்வோம்.. பதான், கடவுள் உன்மீது அன்பும் கருணையும் கொள்ள தீர்மானித்துவிட்டார்…..” என்று சொன்னார்.

சௌத்ரி மௌஜூ மௌல்விசாகிப்பின் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டேயிருந்தான். ஜீனா சமையலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாள்.

சிறிது நேரம் கழித்து மௌல்விசாகிப் எழுந்தார். பதானின் தலையை ஆதூரத்துடன் தட்டிக் கொடுத்துக் கொண்டே மௌஜூவிடம்,” எல்லாம் வல்ல கடவுளின் விதிப்படி எப்போது ஒரு மனிதன் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டபிறகு மீண்டும் அவளை கூட்டிக் கொண்டு வரவேண்டுமானால் அவள் இன்னொரு மனிதனைத் திருமணம் செய்து விவாகரத்து செய்தபிறகே தன்னுடைய முதல் கணவனுடன் சேர முடியும்….” என்று சொன்னார்.

மௌஜு மெல்லிய குரலில், “ நானும் கேள்விப்பட்டிருக்கேன்.. மௌல்விசாகிப்..” என்று சொன்னார்.

மௌல்விசாகிப் அவனை எழுந்து நிற்கச் சொன்னார். அவனுடைய தோளில் அவருடைய கையைப் போட்டுக் கொண்டு, “ நேற்று ராத்திரி நீ செய்த தவறுக்காக உன்னை தண்டிக்காமலிருக்குமாறு எல்லாம் வல்ல கடவுளிடம் மன்றாடினோம்..அசரீரி சொல்லியது என்னவென்றால்,எவ்வளவு நாள் தான் மற்றவர்களுக்காக உன்னுடைய பரிந்துரைகளை நான் ஏற்றுக் கொள்வது? உனக்காக எதையாவது கேள். அதை நாம் வழங்குகிறோம்… நாம் மீண்டும் மன்றாடினோம்.. பிரபஞ்சத்தின் அரசரே..எல்லாநிலங்களின் கடல்களின் இறைவனே, நாம் எதையும் நமக்காகக் கேட்பதில்லை.. நீங்கள் எமக்கு போதுமானதைக் கொடுத்திருக்கிறீர்கள்..மௌஜூ சௌத்ரி அவனுடைய மனைவிமீது அன்பாக இருக்கிறான். அதற்கு அந்தக்குரல், நாம் அவனுடைய அன்பையும் உன்னுடைய விசுவாசத்தையும் சோதிக்கப்போகிறோம்… நீ தான் அவளை ஒருநாள் திருமணம் செய்து மறுநாள் அவளை விவாகரத்து செய்து மௌஜூவிடம் ஒப்படைக்கவேண்டும்..இதைத்தான் நாம் உனக்கு வழங்கமுடியும்.. ஏனெனில் நீ நாப்பது வருடங்களாக என்னை விசுவாசமாக வணங்கிவருகிறாய்…என்றது.” என்று சொன்னார்.

மௌஜூ உணர்ச்சிவசப்பட்டு,” நான் ஏற்றுக் கொள்கிறேன் மௌல்விசாகிப்.. நான் ஏற்றுக்கொள்கிறேன்..” என்று சொன்னான். பிறகு அவன் பதானைப்பார்த்தான். அவனுடைய கண்கள் உள்ளே பொங்கிய மகிழ்ச்சியில் ஒளிர்ந்தது. “ சரியா பதான்..? ” என்று கேட்டவன் அவளுடைய பதிலுக்காகக் காத்திருக்காமல் “ நாங்கள் இருவரும் ஏற்றுக்கொள்கிறோம்..” என்று சொன்னான்.

மௌல்விசாகிப் அவருடைய கண்களை மூடி ஒரு பிரார்த்தனையைப் பாடினார்.பின்பு அவர்களுடைய முகத்தில் ஊதிவிட்டார். அவருடைய கண்களை மேலுலகத்தை நோக்கி உயர்த்தியபடியே, “ எல்லாவானங்களீன் கடவுளே! நீங்கள் வைத்துள்ள இந்த சோதனையில் நாங்கள் தோற்றுவிடாமலிருக்க எங்களுக்கு வலிமையைத் தாரும்..” என்றார்.

பிறகு அவர் மௌஜூவிடம், “ இப்போழுது நாம் போகிறோம்.. ஆனால் நீயும் ஜீனாவும் இன்று இரவு மட்டும் எங்காவது சென்றுவிடவேண்டும் என்று விரும்புகிறோம்.. நாம் பிறகு வருகிறோம்..” என்றார்.

மாலையில் அவர் திரும்பி வரும்போது, ஜீனாவும், மௌஜூவும் கிளம்புவதற்குத் தயாராக இருந்தார்கள். மௌல்விசாகிப் வாய்க்குள்ளேயே ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அவர் அவர்களிடம் பேசவில்லை. அவர்களைப் போகச்சொல்லி சைகை செய்தார். அவர்கள் போய்விட்டார்கள்.

மௌல்விசாகிப் கதவைத் தாழ்ப்பாள் போட்டார். பிறகு பதானிடம்,” இந்த ஒரு இரவு நீ என்னுடைய மனைவி… உள்ளே போ.. படுக்கையைக் கொண்டுவந்து இந்த கட்டிலில் விரித்து வை. நாம் ஒரு சிறு தூக்கம்போட விரும்புகிறோம்…” என்று சொன்னார்.

பதான் உள்ளே சென்று படுக்கையை கொண்டுவந்து கயிற்றுக்கட்டிலில் அழகாக விரித்தாள்.மௌல்விசாகிப் அவளிடம் அவருக்காகக் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு உள்ளே போனார்.

ஒரு அகல்விளக்கின் நிழலான ஒளி அந்தச் சிறிய அறையை அலங்கரித்தது. அந்த மண்பானை மூலையில் இருந்தது. மௌல்விசாகிப் அதில் ஏதாவது மீந்திருக்கிறதா? என்று அதைக் குலுக்கிப்பார்த்தார். அதில் இருந்தது. அவர் அந்தப்பானையை உதடுகளுக்குக் கொண்டுபோய் அவசரமாக சில மிடறுகள் குடித்தார். அவருடைய மஞ்சள்நிற பட்டுத்துணியினால் வாயைத் துடைத்துவிட்டு வெளியே வந்தார்.

பதான் கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். மௌல்விசாகிப்பின் கைகளில் ஒரு கோப்பையை வைத்திருந்தார். அவர் அதில் சில புனிதமந்திரங்களை மூன்றுமுறை ஓதி அதை பதானிடம் கொடுத்து,” இதைக் குடி….” என்று சொன்னார்.

அவள் குடித்த உடனேயே புரையேறிச் சிரமப்பட்டாள். ஆனால் மௌல்விசாகிப் அவளுடைய முதுகில் பலமாகத் தட்டிக் கொடுத்துக்கொண்டே,” உனக்குச் சரியாயிரும்..” என்று சொல்லிவிட்டி படுத்துக்கொண்டார்.

அடுத்தநாள் காலையில் ஜீனாவும், மௌஜூவும் திரும்பிவந்த போது பதான் முற்றத்தில் கிடந்த கட்டிலில் படுத்துறங்கிக் கொண்டாள். மௌல்விசாகிப் அருகில் எங்கும் இல்லை. ஒருவேளை அவர் வயல்கரைகளில் நடைப்பயிற்சிக்குப் போயிருக்கலாம் என்று மௌஜூ நினைத்தான். அவன் மனைவியை எழுப்பினான். அவள் கண்களைத் திறந்ததும் “ சொர்க்கம்…சொர்க்கம்..” என்று பிதற்றினாள். அவள் மௌஜூவைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்தாள்.

அவன்,” மௌல்விசாகிப் எங்கே? “ என்று கேட்டான்.

பதான் இன்னும் தள்ளாட்டத்தில் தான் இருந்தாள். “ மௌல்விசாகிப்பா… எந்த மௌல்விசாகிப்? அவர் எங்கே என்று எனக்குத் தெரியாது…அவர் இங்கே இல்லை…” என்று சொன்னாள்.

“ வேண்டாம் …நான் போய் அவரைத் தேடிப்பார்த்துட்டு வாரேன்..” என்று மௌஜூ கூவினான்.

அவன் கதவருகில் போய்க்கொண்டிருக்கும்போது பதானின் அலறலைக் கேட்டான். அவள் தலையணைக்கடியிலிருந்து ஏதையோ எடுத்தபடியே நடுங்கிக் கொண்டிருந்தாள்.

அவள், “ இது என்னது?..” என்று கேட்டாள்.

மௌஜூ, ‘ முடி மாதிரி தெரியுது..” என்று சொன்னான்.

பதான் அந்தக் கறுப்புக்குவியலைத் தரையில் வீசினான். மௌஜூ அதை எடுத்து சோதித்துப் பார்த்துவிட்டு, “ மனிதமுடி மாதிரி இருக்கு..” என்று சொன்னான்.

” மௌல்விசாகிப்பின் தாடியும் தோள்வரை தொங்கிய தலைமுடியும்…தான் இது .” என்று ஜீனா கூக்குரலிட்டாள். மௌஜூ குழப்பமடைந்தான்.

“ அப்படின்னா மௌல்விசாகிப்பை எங்கே? “ என்று அவன் கேட்டான். பிறகு அவனுடைய எளிய எதையும் நம்பும் மனசில் உடனே ஒரு பதில் தோன்றியது.

“ ஜீனா…பதான்… உங்களுக்குப் புரியலையா.. அவர் கடவுளின் மனிதரில்லையா? அவர் அற்புதங்கள் செய்வார்... நம்முடைய இதயங்கள் என்ன விரும்பியதோ அதைக் கொடுத்துவிட்டு அவரை நாம் ஞாபகப்படுத்திக்கொள்ள நமக்கு இதை விட்டு விட்டுப் போயிருக்கிறார்…” என்று சொன்னான்.

அவன் அந்த பொய்த்தாடியையும் தலைமுடியையும் முத்தமிட்டான். பக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொண்டான். பின்னர் அவற்றை ஜீனாவிடம் கொடுத்தான்.

“ போ… போய் இவற்றை சுத்தமான துணியில் சுற்றி அந்தப் பெரிய மர அலமாரியின் மேல் வை… கடவுளின் அருள் நமது வீட்டை விட்டு அகலாதிருக்கட்டும்..” என்று சொன்னான். ஜீனா உள்ளே போனாள். மௌஜூ பதானின் அருகில் உட்கார்ந்து அவளிடம்,” நான் பிரார்த்தனை செய்வது எப்படி என்று கற்றுக் கொள்ளப்போகிறேன்… ஒவ்வொரு நாளும் என்னுடைய பிரார்த்தனைகளில் அந்தச் சாமியாரை ஞாபகப்படுத்துவேன்….”

பதான் மௌனமாக இருந்தாள்.

Friday 20 September 2013

கவிதையின் அரசியல்

உதயசங்கர் images (5)

 

ஆதியில் மந்திரச்சடங்குகளில் ஒரேவிதமான ஏற்ற இறக்கங்களில் இயைபு கொண்ட ஒலிக்குறிப்புகளைத் திரும்பத் திரும்ப ஒலிப்பதன் மூலம் இசையுடன் கூடிய மனதில் கிளர்ச்சியூட்டும் வார்த்தைகள் தான் இன்றைய கவிதையின் ஆதிமூலம் என்று சொல்லலாம். சடங்குகளில் இயற்கையைக் கட்டுப்படுத்த, ஆவிகளை அடக்கிவைக்க, உற்பத்திபெருக, நோய்கள் தீர, என்று சமூகத்தின் அத்தனை நடவடிக்கைகளிலும் கவிதை மந்திரச்சொல்லாகப் பயன்பட்டிருக்கிறது. வரிவடிவம் தோன்றிய பிறகு உழைப்பிலிருந்து கவிதை பிரிந்து கற்றோர் கலையாகவும், உழைப்பாளிகள் தங்கள் உழைப்பின் தேவைக்கேற்ப உருவாக்கிய உழைப்புப்பாடல்கள் எளியோர் கலையாகவும் பிரிந்து விட்டது. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் கவிதை ஆள்பவர்களின் புகழ்பாடவும், பொழுதுபோக்காகவும், சமூகமதிப்பீடுகளை நிலைநிறுத்தும் காவியங்களைப் படைக்கவுமாகத் தொழிற்பட்டது. கவிதையும், கவிஞர்களும் போற்றப்பட்டகாலமும் இதுதான். முதலாளித்துவகாலகட்டத்தில் முதலாம் இரண்டாம் உலகயுத்தங்களினால் ஏற்பட்ட விரக்தியும், நிச்சயமின்மையும், முதலாளித்துவத்தின் பிரிக்கமுடியாத விதியான சந்தை, பொருள், விற்பனையும், கவிதையின் பாடுபொருளை முற்றிலும் வேறொன்றாக மாற்றிவிட்டது. வாழ்வின் நிச்சயமின்மை குறித்தும், உச்சகட்டத்திலிருந்த அந்நியமாதல் குறித்தும், இதுநாள்வரை நம்பியிருந்த கடவுள் கைவிட்டதனால் ஏற்பட்ட கையறுநிலை குறித்தும், கவிதைகள் படைக்கப்பட்டன. புதியபாடுபொருளைப்பற்றிப் பேசுவதால் புதிய வடிவங்களைக் கைக்கொண்டன.

முதலாளித்துவத்தின் கருவறையிலேயே பிறந்த புரட்சியும் தொழிலாளர்களின் குரலாக, ஈவு இரக்கமற்ற முதலாளித்துவத்தின் லாபவெறிக்கு எதிரான கலகக்குரலாக, இழப்பதற்கு எதுவுமில்லை எதிரே ஒரு பொன்னுலகம் என்று புரட்சியின் முழக்கமாக மாறியது கவிதை.

இலக்கியவடிவங்களில் மூத்தகுடி கவிதை தான். எனவே கவிதைக்குத் தான் இலக்கணம் முதலில் எழுதப்பட்டிருக்கிறது. தொல்காப்பியம் முழுவதுமே தமிழ்மொழி இலக்கணமாக விளைந்தது தான். அதுவும் கவிதைக்கான இலக்கணம். அந்த கவிதை இலக்கணத்தை வைத்தே நாம் உரைநடையை இன்று எழுதிக்கொண்டிருக்கிறோம். உரைநடைக்கென்று தனி இலக்கணநூல் கிடையாது. யாப்பு, சீர், தளை, எதுகை, மோனை, உருவகம், என்று பழங்கவிதை தனக்கென்று பிரத்யேகமாக தனிவழிமுறைகளை கொண்டு இயற்றப்பட்டது. தமிழ்க்கவிதையின் பொற்காலமாக இந்தக்காலம் இருந்திருக்கிறது. திருக்குறள், தொடங்கி ஐம்பெருங்காப்பியங்கள், பதினென்கீழ்க்கணக்கு, குறுந்தொகை, கம்பராமாயணம் என்று தமிழ்க்கவிதை தன் உச்சத்தைத் தொட்டகாலம். காலனிய ஆட்சியின் கீழ் ஆங்கிலத்தின் அறிமுகமும் ஆங்கில இலக்கியத்தின் பரிச்சயமும், புதிய சமூக யதார்த்தமும் இந்தியாவிலும் தமிழிலும் புதிய வடிவங்களைக் கோர காலத்தின் விளைபொருளான மகாகவியும் வசனகவிதை எழுதுகிறான். அதுவரை எதுகை,மோனை, யாப்பு தளை, சீர் என்று சிந்தனைகளும் அநுபவங்களும் இலக்கணத்தில் சிறைப்பட்டிருந்ததை விடுவித்து கருத்துகளையும், அநுபவங்களையும் பிரதானப்படுத்தி புதிய வாழ்வநுபவங்களை புதிய மொழியில் புதிய வடிவத்தில் சொல்லும் புதுக்கவிதை பிறக்கிறது.

புதுக்கவிதை பிறக்கும்போது இயற்கையியல்வாதமாகவும், முரண்நகைவாதமாகவும், அழகியல்வாதமாகவும், அவநம்பிக்கைவாதமாகவும், காதலின் ஏக்கவாதமாகவும், பெட்டிபூர்ஷ்வா என்று சொல்லப்பட்ட மத்தியதரவர்க்கத்தின் வாழ்வநுபவமுரண்வாதமாகவும், புலம்பல்வாதமாகவும் உள்முகவாதமாகவும், சூன்யவாதமாகவும் பிறந்து வளர்ந்தது. இந்தப்புதுக்கவிதைக்குள்ளிருந்து தான் சாமானிய, எளிய மக்களின் கோபாவேசமும், ரௌத்ரமும், எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையும் பொங்கும் முற்போக்குக்கவிதைகள் பிறந்து வளர்ந்தன.

ஐம்பதுகளில் வேகமெடுத்த புதுக்கவிதையின் பிரவாகம் அறுபதுகள், எழுபதுகளில் உச்சத்தை தொட்டது எனலாம். அதிலும் குறிப்பாக எழுபதுகள் முற்போக்குக்கவிதைகளின் பொற்காலம். எண்பதுகளில் சற்று தேக்கமடைந்த கவிதை தொண்ணூறுகளுக்குப் பிறகு உலகமயமாக்கல் தீவிரமாக அமலாக்கப்பட்ட காலத்தில், பின்நவீனத்துவம் அறிமுகமான நேரத்தில் வேறு வடிவங்கள் பூண்டன. பூடகமும், விடுகதையும், புதிரும், நிறைந்த மயக்குமொழிப்பின்னல் கவிதையில் பிரயாகிக்கப்பட்டன. கவிதை மீண்டும் ஒரு சிறுகுழுவுக்கானதாக மாறியது. குழூஉக்குறியைப்போல கவிதை உருமாற்றம் அடைந்துவிட்டது. இத்தைகையச் சூழலில் நம்பிக்கையான காரியங்களாகத் தலித்தியமும் பெண்ணியமும் முன்னுக்கு வந்ததும், அதிலும் பெண்கவிஞர்கள் பெரும்பாய்ச்சலென தமிழ்க்கவிதையுலகில் பிரவேசித்ததும் என்று சொல்லலாம்.

ஆனால் இன்னமும் வானம்பாடிகளின் காலகட்டத்திற்கு அடுத்த நிலையில் உத்வேகமூட்டக்கூடிய, கலகக்குரலாக, புரட்சியின் கீதமாக, முற்போக்குக்கவிதைகள் மக்கள் மனதைக் கவ்விப்பிடிக்க வேண்டியதிருக்கிறது. ஏனெனில் மொழி தோன்றிய காலத்தில் மந்திரமாக உருவான கவிதை இன்னமும் மொழியின் உச்சபட்ச அர்த்தத்தை மனதில் செலுத்தி வாசகனை ஆட்கொண்டுவிடும் வல்லமை கொண்டது. ஒரு சொல் கவிதையில் சொல் அல்ல. அது பண்பாட்டின், வரலாற்றின், அரசியலின், பொருளாதாரத்தின், இயற்கையின், மாற்றத்தின் பிரதிபலிப்பு. ஆதிநனவிலிமனதில் மந்திரங்கள் ஏற்படுத்திய பாதிப்பை கவிதைகளும், பாடல்களும் ஏற்படுத்துகின்றன. எனவே தான் இன்னமும் கவிதையும் பாடலும் இசையும் வலிமையான கலைவடிவங்களாக இருக்கின்றன.

கவிதையை கலைகளின் அரசி என்றும் கவிதை ஒரு மோகனமான கனவு என்றும் புதுமைப்பித்தன் சொல்லுவார். உண்மைதான் மனிதமனதின் மாபெரும் கனவு கவிதை. மனிதகுலத்தின் மாபெரும் சிந்தனைப்பாய்ச்சல்களில் கவிதை மானசீகமாகத் தன் பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறது. முன்னுணர்வின் தடங்களில் மனிதகுலத்தை வழிநடத்தியிருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தின் அறிந்தும் அறியாமலும் கிடக்கும் அத்தனையும் கவிதையின் பாடுபொருள்தான். கவிதை மொழியின் சாரத்தின் வழியே அநுபவத்தைக் கடத்துவதாலேயே கவிதையில் மொழி முக்கியத்துவமாகிறது. பழகிப்புழங்கிய சொல்லும்கூட கவிதையில் வேறொன்றாக மாறி நிற்கிறது. விவரிப்பதில்லை கவிதை. உணர்த்துவது கவிதை. எனவே இன்றைய புதுக்கவிதை செறிவும் சிக்கனமும் கொண்டதொரு வடிவம் கொள்கிறது. கவிதை உணர்த்தும் சாரத்தின் பின்னால் அதன் நோக்கமாகிய கருத்துருவமும் தொக்கிநிற்கும்.

கவிதைக்கு பலமுகங்கள் அல்லது பலகுரல்கள் உண்டு. ஒரு கவிஞனிடமே கூட பலமுகங்களோ, பலகுரல்களோ வெளிப்படலாம். கவிஞனின் தத்துவப்பார்வை, அழகியல்கோட்பாடு, கவிஞனின் ஆளுமை,அவன் உணர்த்தவிழையும் அநுபவத்தின்சாரத்தை அவன் உள்வாங்கியிருக்கும் பாங்கு, உள்வாங்கியிருக்கும் அநுபவத்தின்மீது அவனுக்கேயுரித்தான பார்வை, அவனுடைய மொழியாளுமை, தொழில்நேர்த்தி, கற்பனையாற்றல், எல்லாம் சேர்ந்து ஒரு கவிதையைச் சிறந்த கவிதையாக்குகிறது. இவையாவும் கருவில் உருவாவதில்லை. எழுத்துழைப்பு, அர்ப்பணிப்பு, கவிதையின் வரலாற்றுணர்வு, வாசிப்பு, இவற்றின் மூலம் உருவாகி வருவது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழில் புதுக்கவிதை 1934-ல் வெளியான ந.பிச்சமூர்த்தியின் காதல் எனும் கவிதையிலிருந்தே தொடங்கியது எனலாம். நாற்பதுகளும், ஐம்பதுகளும் அவ்வளவு ஒளிமிக்கதாக இல்லை. எழுத்து என்ற இலக்கியப்பத்திரிகையின் தோற்றத்தோடு புதுக்கவிதையும் மறுமலர்ச்சியடைந்தது. எழுபதுகளில் ஏற்பட்ட ஜனநாயகஎழுச்சிக்குப் பிறகு முதலில் தயங்கியிருந்த முற்போக்கு இயக்கமும் புதுக்கவிதையை கையில் எடுத்தது. எழுபதுகளின் வானம்பாடி கவிதை இயக்கம் முற்போக்கு கவிதை இயக்கத்தின் பொற்காலம் என்று சொல்லலாம். மக்கள் கவிதைகள் பெருக்கெடுத்த காலம் அது. எண்பதுகள், தொண்ணூறுகளில் புதுக்கவிதைத் தொகுதிகள் ஏராளமாக வெளிவந்தன. மற்ற எல்லாஇலக்கிய வகைமையைக் காட்டிலும் கவிதை நூல்களே ஏராளமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

நவீனதாராளமயமாக்கலுக்குப் பிறகு முன்னெப்போதையும் விட வாழ்க்கை கடுமையான நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது. தகவல்தொழில்நுட்பபுரட்சியால் தேவையோ தேவையில்லையோ மனிதர்கள் தகவல்களால் குப்பைக்கிடங்காக மாறிக்கொண்டிருக்கின்றனர். உலகத்தை ஒற்றைக்கலாச்சாரம் விழுங்கத்தயாராக வாயைப்பிளந்து கொண்டிருக்கிறது. விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகளின் வழியேயும் பழமை தன் மோகத்தூண்டிலை வீசிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனையும் ஏகாதிபத்தியம் தன் கழுகுக்கண்களால் உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறது. தனிமனித உரிமைகள், எல்லாமுதலாளித்துவ அரசுகளாலும் மிதித்து நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற காலத்தில் பின்நவீனத்துவம் எல்லாத்தத்துவங்களும் காலாவதியாகி விட்டதாக அவநம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறது. முன்னெப்போதையும் விட நுண்ணுணர்வுமிக்க கவிஞர்களுக்கு சமூகப்பொறுப்பு அதிகரித்துள்ளது. மனிதனையே பெரும்சந்தைவெளியாக மாற்றி அவன் ஆன்மாவை பொருளாக்கி அவனிடமே விற்றுக்கொண்டிருக்கும் ஏகாதிபத்தியத்தின் தந்திரங்களுக்கு எதிராக தங்கள் கவிதைகள் மூலம் பெரும்கருத்துப்போரை நடத்தவேண்டிய கவிஞர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? 

சமீபமாக எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர்களை அல்லது கவிதைகளை மூன்று பெரும்பிரிவாகப் பிரிக்கலாம். இன்று வெளிவந்து கொண்டிருக்கும் கவிதைகள் எல்லாம் இன்றைய வாழ்வின் நெருக்கடியை, கசப்பை, ஏமாற்றத்தை, விரக்தியை, எதிர்காலம் சூன்யமாகத் தெரிவதை, நம்பிக்கையின்மையைச் சொல்பவைதான். முதலில் வாழ்வின் நெருக்கடியை, அரசியலை, தன் கூர்மையான மொழியில் சூசகமாக, பூடகமாக, விடுகதையாக, புதிராகச் சொல்லி வாசகனுக்கு நுழைந்து செல்ல எந்த ஒரு இடமுமின்றி இருள்பூசிய கவிதைகளை மிகச்சிறிய குழு மட்டும் வாசித்துப்பாராட்ட, எழுதுபவர்கள். அடுத்தது எளிய யதார்த்தநிகழ்வுகளிலிருந்து வாழ்க்கையின் விகசிப்பை, விசாரத்தை, அழகை, அன்பின்ருசியை, நெறிபடும் அவஸ்தையை, வெளிப்படுத்தும் கவிதைகளைச் சொல்லலாம். இந்தக் கவிதைகள் பெரும்பாலும் மத்தியதரவர்க்க அறவிழுமியங்களைச் சார்ந்து எழுதப்படுபவை. ஏகாதிபத்தியம், உலகமயமாக்கல், பின்நவீனத்துவம், இவற்றுக்கெதிராக எழுதப்படுகிற முற்போக்குக் கவிதைகள். பெரும்பாலும் இந்தக் கவிதைகள் கோட்பாட்டினை முன்மொழிவதாக இருப்பதனாலும், அரசியலை வெளிப்படையான, நேரிடையான, தட்டையான மொழியில் வெளிப்படுத்துவதாக இருப்பதாலும் ஒரு குழுசார்ந்த கவிதைகளாக மாறிவிடுகின்றன. அநுபவத்தின்சாரம் ஊறித்திளைத்து மொழியின் உச்சபட்ச அர்த்தசிகரத்தில் நின்று கேட்கிற, வாசிக்கிற அனைவரையும் ஈர்க்க வேண்டிய கவிதைகள் முற்போக்குக் கவிதைகளே. வானம்பாடி காலத்துக்குப் ( விமர்சனங்கள் இருக்கலாம்) முற்போக்குக்கவிதைகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவில்லையோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இன்னும் எழுதப்படாத ஓராயிரம் விடயங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன். முற்போக்குக்கவிஞர்களுக்காக.

இலக்கியத்தின் மற்ற துறைகளைப்போலவே கவிதையிலும் இத்தனை காலமும் அடக்கி, ஒடுக்கப்பட்டு சமூகவெளிக்கு புறந்தள்ளப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த தலித்தியமும், இதுநாள்வரை வீட்டின் மூலையில் இருந்த சமையலறையில் மட்டுமே யாருக்கும் கேட்காமல், யாராலும் கேட்கப்படாத முணுமுணுப்பாக, வலியாக, வேதனையாக, ஒலித்துக்கொண்டிருந்த பெண்களின் குரலான பெண்ணியமும், இனவெறி அரசால் காலந்தோறும் வஞ்சிக்கப்பட்டு கையில் ஆயுதம் எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டு போர்ச்சூழலில் பலபத்தாண்டுகளை மரணத்தின் கொடும்சிறகினக்கடியில் வாழவிதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் நரகவாழ்வனுபவங்களைச் சொல்லும் புலம்பெயர் இலக்கியம், இவையே கடந்த பத்தாண்டுகளில் எழுச்சியுடன் முன்வந்துள்ள கவிதைபோக்குகள்.

DSC00081

Thursday 19 September 2013

படைப்பின் அரசியல்

 

உதயசங்கர்

images (9)  மனிதகுல வரலாற்றில் வேட்டைச் சமூகத்தின் வேட்டை வாழ்வனுபங்களைப் பகிர்ந்து கொள்ளும் மனவெழுச்சியே கலையின் ஆதி வித்தென கொள்ளலாம். குகைச்சுவர்களிலும் கற்பாறைகளிலும் விலங்குகளின் தோலிலும் துவங்கிய கலையின் பயணம் தன்னுணர்வுமிக்க உழைப்பினால் மொழியைத் தோற்றுவித்திருக்கிறது. இயற்கையின் உற்பாதங்களும் மரணமும் ஆவியுலக நம்பிக்கையை வளர்த்தெடுக்க தொன்மங்களும் மந்திரச்சடங்குகளும் தோன்றியிருக்கின்றன. தொன்மங்களைப்புனையும் சிந்தனை ஆதிமனிதர்களுக்கேயுரிய சிந்தனை முறையாகும்.அது புலனறிவு சார்ந்தும் அகவயமாகவும் நெகிழ்ச்சியானதுமாகும். இப்படி தொன்மம் கலைக்கான மூலப்பொருளாக மாறிவிட்டது. தொன்மங்கள் முழுவதும் இயற்கை சக்திகளை முழுக்க கற்பனையிலே கீழ்ப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் அவற்றை மாற்றியமைக்கின்றன. எனவே தொன்மங்களுக்கு மந்திர் ஆற்றல் இருப்பதாக நம்பப்பட்டது. தொன்மங்களிலிருந்து தோன்றிய மந்திரச்சடங்குகளிலிருந்தே ஆதியில் உழைப்பிலிருந்து பிரிந்து கலை தோன்றியிருக்கிறது. ஆவியுலகக்கோட்பாடே மந்திரச்சடங்குகளை உருவாக்கியிருக்கிறது. மந்திரச்சடங்குகளை நடத்தியவர்களே ஆதிக்கலைஞர்களாக இருந்திருக்கிறார்கள். வர்க்கமற்ற சமுதாயத்திலும் வர்க்கசமுதாயத்தின் தொடக்க காலத்திலும் ஒரு தீர்க்கதரிசியைப் போல கலைஞனும் மக்களால் போற்றி வணங்கப்படுபவனாக இருந்தான். அவனுடைய வாழ்த்துக்களுக்கும் சாபங்களுக்கும் தனி ஆற்றல் இருப்பதாகவும் அது ஆவியுலகத்தோடு அவனுக்கிருந்த ஊடாடல் காரணமாக கிடைத்தது என்று நம்பினார்கள்.

மனிதசமுதாயம் பழங்குடிஅமைப்பிலிருந்து அரசு உள்ள சமுதாயமாக மாற்றமடைந்த போது ஆதி மனித உணர்வு சமூக அழுத்தங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் உட்பட்டது. இந்த அழுத்தங்கள் மனநோய், காக்காய்வலிப்பு, பிளவுண்ட ஆளுமை, ஆகியவற்றுடன் ஒப்பிடத்தக்க பல்வேறு மனநோய்களாக வெளிப்பட்டன. உணர்வுபூர்வமான கட்டுப்பாட்டை இழக்கவைக்கும் இந்த மனநோய்கள் ஒரு கடவுளோ அல்லது ஆவியோ மனிதனின் உடலில் புகுந்து அவனை ஆட்கொண்டு விட்டது என்ற நம்பிக்கை தோன்ற வழிவகுத்தன. இப்படித்தான் மந்திரச்சடங்குகளை நடத்திய மனிதர்கள் தனித்துவமும், அசாதாரணமான வாழ்க்கைமுறையும் கொண்டவர்களாக மாறுகிறார்கள். ஆக கலையின் தோற்றுவாயில் உளவியல்நோய்களும் காரணமாக இருந்திருக்கின்றன. இந்த வித்தியாசமான மந்திரவாதிகள் தங்கள் வாழ்க்கையை ரகசியமாக, மறைஞானத்தன்மை கொண்டதாக, சடங்குகள்பூர்வமாக, வைத்துக் கொண்டனர்.

மந்திரச்சடங்குகளிலிருந்து கலை வளர்ந்தது. தன்னுணர்வுமிக்க கலைஞன் சடங்குவடிவத்தை கையிலெடுத்து அதில் புதியதொன்றை அறிமுகப்படுத்தி அதை மாற்றி உருவத்துக்கும் உள்ளடக்கத்துக்கும் இடையே ஒரு புதிய இணைவை, ஒற்றுமையை உருவாக்குகிறான். இதன் மூலம் கலை இயங்கியல்பூர்வமாக வளர்கிறது.

வேட்டைசமூகத்திலும், வர்க்கமற்ற சமூகத்திலும், வர்க்கசமூகத்தின் ஆரம்பகட்டத்திலும் கலை, தொடர்பு ஊடகமாகவும், இயற்கையைக்கீழ்ப்படுத்தும் தொன்மச்சடங்குகளாகவும், ஆவிகளைக் கட்டுப்படுத்தும் மருத்துவமாகவும் சமூகத்தோடு இரண்டறக்கலந்தே வளர்ந்து வந்திருக்கிறது. என்றால் ஆதியில் கலை மக்கள் கலையாகவே இருந்திருக்கிறது.

அரசு என்ற அமைப்பு உருவானபிறகு, கலை உழைப்பிலிருந்து முற்றிலுமாகப் பிரிக்கப்பட்டு, பொழுதுபோக்கு சாதனமாகவும், அரசின் பிரச்சார பீரங்கியாகவும், அந்தந்த காலகட்ட அரசின் சட்டங்கள், சநாதன மதங்களின் விதிகளை, சடங்குகளை, சாதிய அமைப்பை, வாழ்க்கை மதிப்பீடுகளை மக்கள் மனதில் நிலைநிறுத்தவும், மக்கள் மனங்களை வென்றெடுக்கவும், கலைப்படைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கலைப்படைப்புகளை உருவாக்கிய படைப்பாளிகள் அந்தந்தக் காலகட்டத்தினை தங்கள் படைப்புகளில் பிரதிபலிக்கவே செய்திருக்கிறார்கள். எனவே என்றுமே படைப்புகள் அந்தந்த காலகட்ட அரசின், அரசியலை மக்கள் வாழ்வைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.

எந்தவொரு படைப்பின் அடிப்படைஆதாரசுருதி வெளிப்பாடு ( expression ) தான். இது தான் படைப்பரசியலின் அரிச்சுவடி. தன்னை, தன்வாழ்வனுபவங்களை, தான் வாழும் சமூகத்தை, மானுடவிழுமியங்களை, வெளிப்படுத்துகிறது படைப்பு.

அரசு என்ற அமைப்பு உருவானதிலிருந்து படைப்பு அரசதிகாரத்தினை முன்மொழிவதாக மாற்றமடைந்தது தான் படைப்பரசியலின் வளர்ச்சி. எனவே படைப்பின் அரசியல் என்பது அதிகாரத்தின் அரசியலை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ மக்கள் மனதில் ஏற்றி அவர்கள் ஒப்புதலைப் பெறுவது தான். அரசு என்ற அமைப்பு இருக்கும்வரை கலையின் தன்னிச்சையான வளர்ச்சியோ மலர்ச்சியோ சாத்தியமில்லை.

நிலப்பிரபுத்துவகாலத்தில் அரசவையில் அரசர்களுக்காக மட்டுமே படைக்கப்பட்ட கலை பூர்ஷ்வா சமூகம் உருவானபிறகு, முதலாளித்துவசந்தை உருவான பிறகு கலையையும் சந்தைவிதிகளுக்கு உட்படுத்தவும், நிலப்பிரபுத்துவத்தளைகளிலிருந்து கலையை விடுவிக்கவும் உருவாக்கிய கோட்பாடு தான் கலை கலைக்காக என்ற கோட்பாடு.

முதலாளித்துவம் தன் ஆயிரக்கணக்கான கரங்களால் கலையை துரியோதனாலிங்கனம் செய்து கொண்டேயிருக்கிறது. கலையின் அரசியலும் வேறு வேறு ரூபங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டேயிருக்கிறது. சமத்துவமற்ற, வர்க்கபேத சமூகத்தில் கலையும் வர்க்கபேதமுடனே இருக்கும். அறவிழுமியங்கள் எல்லாம் அரசு தன் நலனுக்காக சமூகத்தின்மீது ஏற்றி வைத்துள்ள வாழ்க்கை மதிப்பீடுகள். எல்லாஅறவிழுமியங்களுக்கும் பின்னால் அரசியலதிகாரத்தின் முகம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் இருப்பதை அவதானிக்கமுடியும். அதே போல எல்லாபடைப்புகளிலும் இந்த அறவிழுமியங்களை ஏற்று முன்மொழிவதையும் நாம் கட்டுடைத்துப்பார்க்கலாம். இதில் முற்போக்கு படைப்புகளும் பலியாகும் அபாயத்தைக் காணலாம். ஏனெனில் எல்லோருக்கும் பொதுவான அறம் என்று வர்க்கபேத சமூகத்தில் இருக்கமுடியாது. இன்றைய படைப்புகளின் அரசியல் என்பதை வர்க்கசார்பான அறவிழுமியங்களை வர்க்கபேதமில்லாமல் எல்லோரையும் ஏற்றுக் கொள்ளவைக்கிற ஆளும்வர்க்கத்தின் தந்திரங்கள் இருப்பதை நாம் உணரலாம்.

படைப்பு அரசியலின் இன்னொரு இரு பிளவாக படைப்பை ஜனநாயகப்படுத்துதலும் அதற்கெதிராக சர்வாதிகாரப்படுத்துதலும் என்று கூறலாம். படைப்பில் ஜனநாயகம் என்பது ஒரு படைப்பு யாருக்காக எழுதப்படுகிறது. யாரைப்பற்றி எழுதப்படுகிறது. எதற்காக எழுதப்படுகிறது எந்த மொழியில் எழுதப்படுகிறது, என்ற போதத்துடன் படைக்கப்படும் படைப்பில் கலை இன்பமும் நோக்கமும் ஜனநாயகப்படுத்தப்பட்டு எல்லோரையும் சென்றடையும் உத்வேகம் கொண்டிருக்கும். படைப்பு படைக்கப்படும்போதும், படைக்கப்பட்டபிறகும் வாசகனை சென்று சேர்வதில் ஆர்வமாயிருக்கும். இந்த வகையான படைப்புகளில் படைப்பாளியின் தான் என்னும் அகம் கரைந்து சமூக அகமாக மாறிவிடுகிறது. எனவே படைப்பு இயங்கியல்ரீதியாக வளர்ந்து கொண்டேயிருக்கும்.

இதற்கு மாறாக படைப்பில் தான் என்னும் அகங்காரம் சர்வாதிகாரத்துடன் இயங்கும்போது அது வாசகனை மறுதலிக்கிறது. தன்னைத் தவிர மற்றமை என்று ஒன்று இருப்பதை வெறுக்கிறது. தன்படைப்புமொழியை இறுக்குகிறது. குழூஉக்குறியைப் போல படைப்பதிலும் யாராலும் வாசிக்கப்படவோ, புரிந்துகொள்ளப்படவோ இயலவில்லையெனில் மகிழ்ச்சியடைவது, ஆதிகால மந்திரவாதிகள் போல வெகுமக்களிடமிருந்து தங்கள் படைப்புகளைத் தூரவிலக்கி வைப்பது என்று படைப்பின் இயங்கியலை மறுத்து படைப்பின் ஜனநாயகத்தை தன் சர்வாதிகாரத்தினால் நசுக்க நினைக்கிறது. அனுபூதி, தியானம், வேள்வி, என்றும், கலைக்கு நோக்கம் தேவையில்லை, கலைக்கு எந்த லட்சியமும் கிடையாதென்றோ தன்னைச் சிம்மாசனத்தில் நிலை நிறுத்திக் கொள்ளப் பார்க்கிறது.

முதலாளித்துவத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் படைப்பரசியல் தன் முகங்களை மாற்றிக் கொண்டே வந்திருக்கிறது. தன் தேவைகளுக்கேற்ப படைப்புகளை உருவாக்க ஏராளமான தத்துவக் கோட்பாடுகளைப் படைக்கிறது. அது சர்ரியலிசமாக இருக்கலாம். இருத்தலியமாக இருக்கலாம். ஸ்டரட்சுரலிசமாக இருக்கலாம். நவீனத்துவமாக இருக்கலாம். பின்நவீனத்துவமாக இருக்கலாம். அடையாள அரசியலாக இருக்கலாம். எல்லாக்கோட்பாடுகளிலும் வரைமுறையற்ற முதலாளித்துவத்தின் கொள்ளையினாலும் சூதாட்டத்தினாலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கொண்டிருப்பவர்களை மடைமாற்றவும், தனிமைப்படுத்தவௌம், விரக்தியடையவைக்கவும், இறந்துபோன கடவுளுக்குப் பதிலாக புதிய கடவுள்களை உற்பத்திசெய்யவும், சநாதன, பழைய, இற்றுப்போன, காலாவதியான மரபுகளுக்குள் சரணடையவும் செய்கிற படைப்புகளைப் படைக்கச்செய்கிறது. ஏழுதலை நாகமாக மக்களைத் தழுவி பிளவுண்ட தன் நாவினால் படைப்பாளியையும், வாசகனையும் தீண்டித் தீண்டி மயக்குகிறது.

இன்றைய படைப்புகள் அனைத்தையும் இந்த அடிப்படைப்பார்வையுடன் அணுகிப்பார்க்க வேண்டும்.

DSC00105

Saturday 14 September 2013

எஸ்.ராமகிருஷ்ணனின் நான்கு குழந்தைகள் நூல்கள் வெளியீடு

கடந்த 6.9.13 அன்று மாலை மதுரை நார்த் கேட் வே  ஹோட்டல் அரங்கத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நான்கு குழந்தைகள் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. சிரிக்கும் வகுப்பறை, அக்கடா, ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட், whirling wind, ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டது. அக்கடா என்ற நூலைப் பற்றி நான் பேசினேன். விழாவில் எஸ்.ஏ.பெருமாள், மம்முது, துளசிதாசன், சா.தேவதாஸ், ஷாஜகான், ஜெயகரன், பவா செல்லத்துரை, கே.வி.ஷைலஜா, எஸ்.கே.பி.கருணா, மருத்துவர் ச.வெங்கடாசலம், ஓவியர் செல்வம், கலந்து கொண்டனர். நூல்களை குழந்தைகள் பெற்றுக் கொண்டது சிறப்பு. நூல்களை வம்சி புக்ஸ் வெளியிட்டுள்ளது.     DSC00167

 

அருந்தலாய் இருக்கும் குழந்தைகள் இலக்கியத்தில் இந்த நான்கு நூல்களும் காத்திரமான வரவு.  வரவேற்போம்.

Thursday 12 September 2013

எல்லோருக்கும் விடுதலை

 

சாதத் ஹஸன் மண்டோ

ஆங்கிலத்தில்- காலித் ஹசன்

தமிழில்-உதயசங்கர்

manto

சுதந்திரம் பெற்ற புதிய தேசத்தின் ஒவ்வொரு பெருநகரத்தில், சிறுநகரத்திலும், கிராமத்திலும், செய்தி முன்னால் சென்றது. யாராவது தெருவில் பிச்சையெடுப்பதைப் பார்த்தால் அவர்கள் ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். உடனே கைதுகள் தொடங்கியதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஏனெனில் பிச்சையெனும் பெருஞ்சாபம் ஒருவழியாக ஒழிந்துவிடும்.

அலைந்து திரிந்து கொண்டிருந்த பாணரான கபீர் மட்டும் துக்கத்தினால் பீடிக்கப்பட்டான்.

“ என்ன ஆச்சு உனக்கு நெசவாளியே..” - அதுதான் அவனுடைய ஜாதி – என்று குடிமக்கள் கேட்டனர்.

” நான் ஏன் வருத்தமாயிருக்கேன்னா துணி இரண்டு இழைகளால் நெய்யப்படும்… ஒன்று குறுக்குவசமாகவும், மற்றது செங்குத்தாகவும் ஒடும்…..பிச்சைக்காரர்களை கைது செய்வதென்பது குறுக்குவசமென்றால் பசித்தவர்களுக்கு உணவளிப்பதென்பது செங்குத்தானது.. எப்படி நீங்கள் இந்த துணியை நெய்யப்போகிறீர்கள்? “

********** ********* *********** ************** *********** **********

இந்தியாவிலிருந்து வந்த ஒரு அகதிக்கு - அவர் தொழில்ரீதியாக ஒரு வழக்கறிஞர் –கைவிடப்பட்ட இருநூறு கைத்தறிகளைச் சொந்தமாக கொடுத்தனர். அந்த வழியே போன கபீர் அழத்தொடங்கினான்.

“ உனக்கு நியாயமாகக் கொடுக்க வேண்டியதை எனக்குக் கொடுத்ததற்காக அழுதுகிட்டிருக்கியா? “ என்று அந்த வழக்கறிஞர் கேட்டார்.

“ இல்லை…நான் ஏன் அழுதேன்னா.. இனிமேல் இந்தத்தறிகள் துணி நெய்யப்போவதில்லைன்னு தெரிஞ்சதால.. ஏன்னா நீங்க இந்த நூலையெல்லாம் நல்ல லாபத்துக்கு வித்துருவீங்க… உங்களுக்கு தறியின் கிளிக்டி-கிளாக் சத்தத்தைக் கேட்கப் பொறுமையிருக்காது… ஆனால் அந்த சத்தம்தான் நெசவாளி உயிரோடு வாழ்வதற்கான ஒரே காரணம்….”

**********************************************************************************************************************

தெருவில் ஒரு மனிதன் புத்தகத்தின் பக்கங்களைக் கிழித்து காகிதப்பைகளாகச் செய்து கொண்டிருந்தான்.

கபீர் அதில் ஒன்றை எடுத்தான். அதில் அச்சிடப்பட்டிருந்ததைப் படிக்க ஆரம்பித்தவுடன் அவனுடைய கண்கள் கண்ணீர்க்குளமாயின.

திகைப்படைந்த பை செய்பவர் “ என்ன பிரச்னை உனக்கு? “ என்று கேட்டார்.

” நீ பைகளை உருவாக்கும் காகிதங்களில் அச்சிடப்பட்டிருப்பது அந்தகரான இந்து ஞானி பகத் சூர்தாஸின் ஆன்மீகக்கவிதைகள்…தெரியுமா? “ என்று கபீர் பதில் சொன்னான்.

பை செய்பவருக்கு இந்தி தெரியாது.ஆனால் அவனுடைய தாய்மொழியான பஞ்சாபியில் சூர்தாஸ் என்றால் அந்தகபக்தர் என்று அர்த்தமில்லை.. ஆனால் பன்றி என்று அர்த்தம்.

அவன்,” ஒரு பன்றி எப்படி புனிதராக முடியும்..? ” என்று கேட்டான்.

******************************************************************************************************

நகரத்திலுள்ள ஒரு அற்புதமான கட்டிடத்தில் செல்வத்தின்இந்துக்கடவுளான லட்சுமியின் உருவச்சிலையை வைத்து அலங்கரித்திருந்தார்கள். ஆனால் எல்லை தாண்டி வந்த அகதிகளான புதிய குடியிருப்பாளர்கள் அதை அலங்கோலமான சாக்குத்துணியினால் மூடியிருந்தார்கள். அதைப்பார்த்த கபீர் அழத் தொடங்கினான்.

” எங்கள் மதத்தில் உருவவழிபாட்டுக்கு இடமில்லை…” என்று அவர்கள் அவனிடம் சொன்னார்கள்.

கபீர், “ அது அழகை அசிங்கப்படுத்தவா சொல்லியது..?” என்று கேட்டான்.

**********************************************************************************************

ஒரு படைத்தளபதி தன்னுடைய படைவீரர்களிடம், “ நம்மிடம் உணவு குறைவாக உள்ளது…ஏனென்றால் நம்முடைய பயிர்களை நாசம் செய்துவிட்டார்கள். ஆனால் அச்சப்படத்தேவையில்லை.. என்னுடைய வீரர்கள் வெறும்வயிற்றோடு எதிரிகளோடு சண்டை போடுவார்கள்…

வரவிருக்கும் வெற்றியின் கோஷங்கள் முழங்கின.

கபீர் கேட்டான்,” என்னுடைய தீரமிக்க தளபதியே.. யார் பசியுடன் போரிடுவார்கள்

******************************************************************************************

 

“ விசுவாசமுள்ள அன்புச்சகோதரர்களே! தாடி வளருங்கள்… உங்களுடைய பாவமீசையை மழித்து விடுங்கள்…..கட்டளையிட்டபடி உங்கள் கால்சராயை கணுக்காலுக்கு ஒரு அங்குலத்துக்கு மேலே உடுத்துங்கள்… விசுவாசமுள்ள அன்புச்சகோதரிகளே! உங்கள் முகத்தில் பூச்சு பூசாதீர்கள்… உங்களைத் திரையிட்டுக் கொள்ளுங்கள்.. இது தெய்வீகக்கட்டளை..”

கபீரின் கண்களில் கண்ணீர் வந்தது.

” உங்களுக்கு சகோதரரோ சகோதரியோ இல்லை. ….உங்கள் தாடி கருப்பாக இல்லை.. கலரூட்டப்பட்டது… நீங்கள் உங்களுடைய வெள்ளை முடியை காட்ட விரும்பவில்லையா? “ என்று கபீர் கேட்டான்.

**************************************************************************************************

 

ஒரு அறிவார்ந்த விவாதம் போய்க்கொண்டிருந்தது.

“ கலை கலைக்காக “

” கலை வாழ்க்கைக்காக..”

“ நீ நரகத்துக்குப் போக!.”

“ உன்னுடைய ஸ்டாலின் நரகத்துக்குப் போக! “

“ வாயை மூடு… இன்று கலை இன்னொரு விதமான பிரச்சாரம்..”

“ உலகத்திலுள்ள பிற்போக்குவாதிகள்..எல்லோரும் நரகத்துக்குப் போக! அதோடு அவர்களுடைய ஃப்ளாபர்ட்டுகளும், பாதலேர்களூம்…”

கபீர் அழ ஆரம்பித்தான்.

அவர்களில் ஒரு அறிவுஜீவி,” அவன் பூர்ஷ்வா துயரநாடகத்தை நடிக்கிறான்..” என்று சொன்னார்.

“ இல்லை.. நான் அழுவது ஏனென்றால் கலை எதற்காக என்று நீங்கள் புரிந்து கொள்ளவேண்டுமே என்பதற்காக…” என்று கபீர் சொன்னான்.

“ அவன் ஒரு பாட்டாளிவர்க்க ஜோக்கர்..”

“ இல்லை…அவன் ஒரு பூர்ஷ்வாக்கோமாளி..”.

*****************************************************************************************

 

ஒரு புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டது. முப்பது நாட்களுக்குள் அந்த நகரத்திலுள்ள பாலியல்தொழிலாளிகள் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.. கவலையால் பாழடைந்த அவர்களுடைய முகத்தைப் பார்த்த கபீர் அழுதான்.

ஒரு மதத்தலைவர் கபீரிடம் கேட்டான்,” நீ ஏன் அழுகிறாய் நல்லவனே? “

கபீர்,” யார் அவர்களுக்கு மாப்பிள்ளைகளைக் கண்டுபிடிப்பார்கள்? “ என்று கேட்டான்.

. ஏதோ அவர் கேள்விப்பட்டதிலேயிலே இதுதான் மிகவும் வேடிக்கையான விஷயம் போல அந்த மதத்தலைவர் சிரிக்க ஆரம்பித்தார்

**********************************************************************************************************

 

ஒரு அரசியல்வாதி கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். “ என் அருமைச் சகோதரர்களே! நம்முடைய தலையாயப் பிரச்னை எல்லைக்கு அப்பால் கடத்திச் செல்லப்பட்ட நம் பெண்களை எப்படி மீட்பது என்பது தான். நாம் எதுவும் செய்யவில்லையென்றால் அவர்கள் பாலியல்தொழிலாளிகள் வீட்டிற்கு அனுப்பப் படுவார்கள்… இந்த அழிவிலிருந்து அவர்களைக் காப்பாற்றவேஅண்டும்..அவர்களை உங்கள் வீட்டிற்கு அழைத்துப் போங்கள்…உங்கள் குடும்பத்தில் அடுத்ததாக யாருக்கேனும் திருமணஏற்பாடு நடக்க இருந்தால் இந்தப் பாவப்பட்ட ஜீவன்களை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருங்கள்…” கபீர் இதைக் கேட்டதும் தேற்றமுடியாத அளவுக்கு அழுதான்.

அதைப்பார்த்த தலைவர், கூட்டத்தைப்பார்த்து,” பாருங்கள் இந்த நல்லமனிதனை..என்னுடைய வேண்டுகோள் அவரை எப்படி ஆழமாகப் பாதித்திருக்கிறது.”

“ இல்ல… உங்கள் கோரிக்கை என்னைப் பாதிக்கவில்லை.. நான் ஏன் அழுதேன்னா எனக்குத் தெரியும்.. நீங்க இன்னும் கலியாணம் முடிக்காமல் இருப்பது ஏன்னா இன்னும் பணக்காரப்பொண்ணு கிடைக்காதது தான்..” என்று கபீர் சொன்னான்.

“ தூக்கி எறியுங்கள்..இந்தப்பைத்தியத்தை….” என்று கூட்டம் சீறியது.

**********************************************************************************************************

 

தேசத்தந்தை முகமது அலி ஜின்னா மறைந்தார். தேசமே அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தது.ஒவ்வொருவரும் கருப்பு பட்டைகளை அணிந்திருந்தனர்.அமைதியாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த கபீரின் கன்னங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

“ எவ்வளவு துணி இந்தக் கருப்புப்பட்டைகளுக்காக செலவாயிருக்கும்.. அதை வைத்து எத்தனையோ நிர்வாணிகளுக்குத் துணியும்.. பசித்தவர்களுக்கு உணவும் கொடுத்திருக்கலாம்..” அவன் அஞ்சலிசெலுத்துபவர்களிடம் சொன்னான்.

“ நீ ஒரு கம்யூனிஸ்ட்..” என்று அவர்கள் சொன்னார்கள்.

“ நீ ஒரு ஐந்தாம்படை பத்திரிகையாளர்…”

“ நீ ஒரு பாகிஸ்தான் துரோகி..”

அன்று முதல்முறையாக கபீர் சிரித்தான். “ ஆனால் நண்பர்களே! நான் கருப்போ, சிவப்போ, பச்சையோ… எந்த பட்டையும் அணியவில்

Wednesday 11 September 2013

மற்றொரு நூல் வெளியீடு

மகத்தான தியாகங்களால் ஆனது சாதாரணர்களின் வாழ்க்கை. அனுதினமும் தியாகம் செய்து கொண்டேயிருக்கிறார்கள். தாங்கள் ஒரு தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று உணராமலே. ஒரு புறம் சிலரிடம் குவியும் செல்வமும் மறுபுறம் அத்தியாவசியத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாத அவலமும் கொண்ட இந்த அசமத்துவ சமூகத்தை இந்தச் சாதாரண மக்களே இயக்குகிறார்கள். சமூகத்தின் சமத்துவத்திற்காகவும் அவர்களே போராடுகிறார்கள். அவர்கள் புகழுக்காக அல்ல. அவர்களுடைய வாழ்வின் நெருக்கடி அவர்களைப் போராடத் தூண்டுகிறது. அந்தப் போராட்டம் என்பது அவர்களுக்காக மட்டுமில்லாமல் மானுடம் முழுமைக்குமான விடிவுக்காக போராட்டமாக உருமாறுகிறதுDSC00192 அவர்கள் தான் இந்தப் பூமியில் கதாநாயகர்கள் வரலாற்றை இயக்குபவர்கள். வரலாற்றை உருவாக்குபவர்கள். நான் அவர்களின் பக்கம் நிற்பதையே விரும்புகிறேன்.

- முன்னுரையிலிருந்து…

நினைவு என்னும் நீள்நதி

( இன்னும் சில நண்பர்கள், எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புகள் )

விலை – ரூ. 120/  

வெளியீடு- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

சென்னை.DSC00134

Sunday 25 August 2013

இரண்டு நூல்கள் வெளியீடு

ஆனால் இது அவனைப்பற்றி – குறுநாவல் தொகுப்பு

உதயசங்கர் 

வெளியீடு- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

சென்னை-600098

விலை-ரூ.100

 

DSC00164

 

ஒரு சிறிய காற்றில் ஒடிந்து விழுந்து விடக்கூடிய சல்லி வேர்களில் பிடிமானம் கொண்டு நிற்கும் வாழ்க்கை விதிக்கப்பட்ட ஒரு கரிசல்க்காட்டு நகரத்தின் கீழ் மத்தியதர வர்க்கத்து வாழ்க்கையை அந்த வாழ்க்கைக்கே உரிய முறையில் சொன்ன முதல் கலைஞன் உதயசங்கர். அம்மக்களின் குரலாகத் தொடர்ந்து எழுதி வரும் உதயசங்கரின் மூன்று குறுநாவல்கள் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவ்வாழ்க்கை கனவுகளும், ஏக்கப்பெருமூச்சுகளும் நிறைந்ததாக வாசக மனதைத் துயரத்தால் நிரப்புவதாக நம் முன் விரிந்து செல்கிறது. வேலையில்லாக் காலத்து இளைஞனின் வலியை இவ்வளவு உக்கிரத்துடன் சொன்ன கதைகள் தமிழில் மிகக்குறைவு.

ச.தமிழ்ச்செல்வன்

DSC00166

லட்சத்தீவின் நாடோடிக்கதைகள்

மலையாளத்தில்- முனைவர் எம். முல்லக்கோயா

தமிழில்- உதயசங்கர்

வெளியீடு- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

சென்னை-600098

விலை-ரூ.65

எல்லாக்கதைகளும் மரணத்திலிருந்து ஒரு வகையான தப்பித்தல் தான். வாழ்விற்கும், மரணத்திற்கும் இடையில் ஊஞ்சலாடுகிற நிர்ப்பந்தத்திலுள்ள மனிதனுடைய மகாபிரயத்தனங்களும், துன்பதுயரங்களும், மரணத்திலிருந்து தப்பிப்பதற்கான இயற்கையுணர்வும் விதிச் சக்கரத்தின் சுழற்சியும் எல்லாம் இந்தக் கதைகளில்  தன்னுடைய புதிர் வழிகளை விரிக்கின்றது. யதார்த்ததிற்கும் உணமைக்குமிடையில் எங்கேயோ உருமாறுகிற இந்தக் கதைகள் சத்தியாசத்தியங்களையும், தர்மாதர்மங்களையும், புரிந்து கொள்வதற்கான மானசீகச் சூத்திரங்களாகவும் சமூகவாழ்வின் சந்தோஷங்களாகவும், தீவுக்காரர்களுக்கு அநுபவப்படுகின்றன. அவை நம்மை தீமைகளைப் புரிந்து கொள்வதற்கான படிப்பினைகள், குறிமொழிகள்.

ஆயிரத்தொரு இரவுகளிலோ, மகாபாரதத்திலோ,உள்ள கதைகளுக்கு நிகரான கருத்துகளும், வேகமும் இந்தக் கதைகளில் இருக்கின்றன. அரபிக்கதைகளை வாசிக்கின்ற சுவாரசியத்தோடேயே இந்தக் கதைகளை வாசிக்கலாம்.

முனைவர்.எம்.எம்.பஷீர். DSC00088

Friday 5 July 2013

நடப்பதொன்றே…

உதயசங்கர்

pathdownload

முடிவில்லாத சாலையில் பயணம்

நடந்து கொண்டிருக்கிறேன் நான்

நீங்கள் எனக்குச் சற்றுமுன்னால்

அவர் எனக்குச் சற்று பின்னால்

எல்லோருமே நடந்து கொண்டிருக்கிறோம்

தயவுசெய்து நம்புங்கள்

எங்கே போய்க்கொண்டிருக்கிறேனென்று

உங்களைப்போலவே எனக்கும் தெரியாது.

ஆனாலும் நடந்து கொண்டிருக்கிறேன்

பயணத்தைப் பந்தயமென்று

பிழைத்தவனில்லை நான்

முன்பின் நடப்பதால்

உயர்ந்தவரென்றோ தாழ்ந்தவரென்றோ

யாருமில்லை.

வெற்றியின் பூமாலை சூடிக் கொள்கிறார்கள் சிலர்

பரவாயில்லை

தோல்வியடைந்து விட்டதாகச் சிலர்

அகாலமாய் பயணத்தை நிறுத்திக் கொள்கிறார்கள்.

பாவம்

நடந்து கொண்டிருக்கிறேன் நான்

உங்களைப் போலவே

முடிவிலாத சாலையில்

நடப்பதொன்றே வாழ்வென.

Thursday 4 July 2013

வெளியே..

matte உதயசங்கர்

தேடாதீர் என்னை

இந்தப்புகைப்படத்தில்

வெற்றியின் வெண்கொற்றக்குடைக் கர்வத்தைச்சூடி

புகழின் செங்கோலைக் கையிலேந்தி

உலகையாளும் புன்முறுவலோடு

வரிசையாய் அமர்ந்திருக்கும் வெற்றியாளர்களின்

இந்தப் புகைப்படத்தில்

தேடாதீர் என்னை

இந்தப் புகைப்படத்திலும் கூட

தேடாதீர் என்னை

தோல்வியின் முட்கிரீடம் தலையில் சூடி

சோகத்தின் சிகரத்தில் தனிமையின்குறுவாள்

இதயத்தில் இறங்க ரத்தம் சொட்டும்

தோற்றவர்களின் இந்தப் புகைப்படத்திலும்

தேடாதீர் என்னை

வெற்றியென்றோ

தோல்வியென்றோ

முற்குறிப்பில்லாத நான்

எல்லாப்புகைப்படங்களுக்கும் வெளியே

நின்று கொண்டிருக்கிறேன்

நீண்டகாலமாய்.

Friday 7 June 2013

அரசு, பதிப்புலகம் மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் - சில குறிப்புகள்

 

உதயசங்கர்books2

சமீபகாலமாக அரசாங்கத்தின் நூலக ஆணை கிடைக்காததினால் விரக்தியடைந்திருக்கும் பதிப்பகத்துறை அதற்காகக் குரல் கொடுத்திருக்கிறது. அதற்குக் கொஞ்சம் பலனும் கிடைத்திருக்கிறது. ஆனால் அறிவுசார் வளர்ச்சி எந்த அரசாங்கத்துக்கும் உவப்பானதில்லை. அது மட்டுமல்லாமல் அரசு நூலகங்கள் மூலமாக கிராமங்கள் வரை சமகாலத் தமிழ் அறிவுலகச் செயல்பாடுகள் சென்று விடும் அபாயம் இருப்பதை எல்லா அரசாங்கங்களும் உணர்ந்திருக்கின்றன. அதனால் தான் வாசிப்பு வாசனையே இல்லாதவர்களையே நூலகத்துறை அதிகாரிகளாக வைத்திருக்கின்றனர். அப்படியே நூலக ஆணைக்கான விதிமுறைகளையும் பழைய பாடாவதியாகவே வைத்துக் காப்பாற்றுகின்றனர். பழையபுத்தகக்கடையில் எடைக்குப் புத்தகங்கள் போடுவதைப் போன்ற நடைமுறையினால் புத்தகத்தயாரிப்பு பற்றியெல்லாம் கவலைப்படாமல் பாரத்துக்கு இவ்வளவு என்ற அடிமாட்டு ரேட்டுக்குப் புத்தகங்கள் நூலகத்துறையால் வாங்கப்படுகின்றன. அதனால் பதிப்பகங்களும் சில தகிடுதத்த வேலைகளைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகின்றனர். இல்லையென்றால் முதலுக்கே வந்து விடும் மோசம் என்று எல்லோருக்கும் தெரியும். இது ஊரறிந்த ரகசியம். இப்பேர்க்கொண்ட நூலக ஆணை வாங்குவதற்கு அரசு அலுவலகங்களில் வழக்கமாக நடைபெறும் ரெம்ப ” நேர்மையான “ நடைமுறைகளின் வழியைத் தான் அநேகமாக எல்லாப்பதிப்பகங்களும் கடைப்பிடிக்கின்றன. தமிழர்களை இலவசங்கள்மூலம் கடைத்தேற்றி உலக அரங்கில் தமிழனின் கலை இலக்கிய அரசியல் தத்துவப்பெருமையை காற்றில் பறக்கவிடவே இந்தப்பிறவி எடுத்த திராவிடஅரசாங்கங்கள் இப்படி பதிப்பகங்கள் பிச்சைக்காரர்களைப் போலக் கையேந்தி நிற்பதையே விரும்புகின்றன.  இத்தனை ஆண்டுகளாகியும் இதற்கொரு ஒழுங்கோ முறையோ அரசாங்கம் கொண்டுவர விரும்பவில்லை. மக்களின் வரிப்பணத்தில் நூலக வரிப்பணம் எவ்வளவோ கோடி பயன்படுத்தப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கொருமுறை இப்படிக் குரல் பதிப்பகங்களிடமிருந்து எழும். உடனே கொஞ்சம் ஆர்டர் கிடைக்கும். அப்புறம் மறுபடியும் அதே கதை தான்.  மக்களின் அறியாமையும் சினிமாவை மட்டுமே மூலதனமாகக் கொண்டு மக்களைச் சுரண்டிப்பிழைக்கும் வணிகப்பத்திரிகைகளும், மின்னணு ஊடகங்களும் ஒரு காரணமென்றால், அது ஏதோ புலவர்கள் சமாச்சாரம் என்று மக்களும் நம்பி இன்று புதிதாக நடிக்க வந்த திரைப்பட நடிகையின் நேர்காணலைக் காண்பதில் காட்டுகிற ஆர்வத்தில் நூறில் ஒரு பங்கைக்கூட தமிழ்அறிவுலகம் சார்ந்து, நூலுலகம் சார்ந்து செலுத்துவதில்லை. அது ஏதோ, எங்கோ, யாருக்கோ நடக்கிற மாதிரி இருக்கிறார்கள். தமிழ்அரசியல்வாதிகள், திரைப்படநடிகர்கள், மின்னணுநிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், என்று எழுத்தாளர்களைத் தவிர எல்லோரும் இலக்கியவாதிகளாகி விடுகின்றனர். எனவே மக்களுக்கும் உண்மையான எழுத்தாளர்களைப் பற்றிக் கவலைப்பட நேரமில்லை. எழுத்தாளர்களும் தாங்களே எழுதி, தாங்களே அச்சடித்து, தாங்களே வாசித்து கொள்கிற பத்திரிகைகளில் தங்களுடைய உலக இலக்கியங்களைப் படைத்து அதைத் தங்களுக்குள்ளே உச்சிமுகர்ந்து பாராட்டிக் கொண்டு, உலக இலக்கியத்துக்குச் சற்றும் குறைவில்லாத படைப்புகளைத் தமிழ் எழுத்தாளர்கள் படைக்கிறார்கள் என்று யாருமில்லாத சூன்ய வெளியில் கத்திச் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.? இப்படி ஒரு நிலைமையில் இருக்கும் தமிழனை தமிழ்நாட்டை யாராவது காப்பாற்றி விட முடியுமா?

தமிழ்நாட்டை விட குறைந்த மக்கள்தொகை கொண்ட கேரளாவில் மலையாளப் பதிப்புலகம் கொடி கட்டிப் பறக்கிறது. பதிப்பகங்கள் சாதாரணமாக எந்தவொரு நூலாக இருந்தாலும் குறைந்தது இரண்டாயிரம் பிரதிகள் அச்சடிக்கிறார்கள். ஆண்டுதோறும் முக்கிய நகரங்களில் அரசாங்கமே தன்னுடைய செலவில் புத்தகக்கண்காட்சி நடத்துகிறது. உலகப்புத்தகக்கண்காட்சியும் நடத்துகிறது. அங்கே வாசிப்பவர்கள் அதிகமாக இருப்பதினால் பதிப்பகங்கள் அரசு நூலக ஆணைகளுக்காகக் காத்திருப்பதில்லை. அரசு நூலக ஆணையினால் மட்டுமே ஜீவித்திருக்க வேண்டிய அவசியத்தில் இல்லை. ஆனால் எந்த அரசாங்கமும் அது இடதுசாரி அரசாங்கமாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் அரசாங்கமாக இருந்தாலும் சரி நூலக ஆணைகளை நிறுத்தி வைப்பதில்லை. கேரள மக்களின் அரசியல்,சமூக உணர்வின் தளம் அதனுடைய ஊடகங்களிலும் பிரதிபலிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் நிலைமை அப்படியில்லை என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆனால் நிலைமை மிக மோசம் என்றும் சொல்லி விட முடியாது. ஏனெனில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் பெருநகரங்களிலும், சிறுநகரங்களிலும் கூட புத்தகக்கண்காட்சி நடைபெற்று வருகிற காலமாக மாற்றம் உருவாகியிருக்கிறது. புத்தகசந்தைக்கான புதிய வெளி திறந்து விடப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல உலகமெங்கிலும் ஏதிலிகளாக தஞ்சமடைந்திருக்கும் இலங்கைத் தமிழர்களும் தமிழ்ப்புத்தகச்சந்தைக்கான பரந்த வெளியை உருவாக்கியிருக்கிறார்கள். இவ்வளவு வாய்ப்புகளிருந்தும் தமிழ்ப்பதிப்புலகம் நூலக ஆணைகள் நிறுத்தி வைக்கப்படுவதால் பெரிய அளவுக்கு நஷ்டம் என்றும் எழுத்தாளர்களுக்கு காப்புரிமைத் தொகை வழங்க முடிய வில்லை என்றும் கூக்குரல் எழுப்புகின்றன. இதன் உண்மைத்தன்மை என்ன?

தமிழ்ப்பதிப்பகங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை வணிக ரீதியிலான பதிப்பகங்கள், இவர்கள் ஆண்டு முழுவதும் எல்லாவகையான புத்தகங்களையும் வெளியிட்டுக் கொண்டேயிருப்பவர்கள். இவர்களுடைய இலக்கு விரிந்து பரந்த புதிய, பழைய, எளிய வாசகர்கள். அவர்கள் தமிழ்நாடெங்கும் தங்களுக்கென ஒரு வியாபார வலைப்பின்னலை உருவாக்கி வைத்திருப்பவர்கள். கிட்டத்தட்ட தொழில்முறையிலான நடைமுறைகளைப் பின்பற்றுபவர்கள். அடுத்த வகையிலான பதிப்பகங்கள் தேர்ந்தெடுத்த சமூக இலக்கிய அரசியல் தத்துவப்புத்தகங்களை மட்டும் தேர்ந்தெடுத்த வாசகப்பரப்பிற்காக வெளியிடுபவர்கள் இவர்கள் தொழில்முறையிலும் தொழில்முறைஅல்லாமலும் தங்கள் பதிப்பகங்களை நடத்தி வருபவர்கள். இவர்கள் ஆண்டு முழுவதும் புத்தகங்களை வெளியிடுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் சென்னைப்புத்தகக்கண்காட்சியை ஒட்டி நூல்களை மொத்தமாக வெளியிடுவார்கள், மற்ற காலங்களில் ஒன்றிரண்டாய் நூல்வெளியிடுவார்கள். இவர்களில் இடதுசாரி அமைப்புகள் சார்ந்த பதிப்பகங்களும், அமைப்பல்லாத இடதுசாரி உணர்வுள்ள பதிப்பகங்களும், முழுமையாக சமூக இலக்கிய நூல்களை வெளியிடும் பதிப்பகங்களும் அடங்குவார்கள். மூன்றாவதாக குடிசைத்தொழில் மாதிரி பதிப்பகம் நடத்துபவர்கள். இவர்களுக்கு எந்த வியாபார வலைப்பின்னலும் கிடையாது. அதைப்பற்றிக் கவலைப்படுவதுமில்லை. இவர்களில் ஏராளமான வகை மாதிரிகள் இருக்கிறார்கள். தான் எழுதிய புத்தகத்தைத் தன் மனைவி, குழந்தை, பேரில் ஒரு பதிப்பகம், அதற்கு வீட்டுமுகவரியைப் போட்டு உள்ளூர் அச்சகத்தில் அச்சடித்து உள்ளூர் பிரமுகர்களை வைத்து ஒரு வெளியீட்டு விழா நடத்தி நானும் ஒரு கவிஞர் தான், நானும் ஒரு எழுத்தாளன் தான் என்று உலகத்துக்கு அறிவித்து விட்டு வெளியீட்டுவிழாவில் விற்ற சில புத்தகங்கள் போக மீதிப் புத்தகங்களைக் கட்டி பரணில் ஏற்றி வைத்திருப்பார். அவ்வப்போது திருமணவைபவங்களுக்கு பரிசுப்பொதியாகக் கொண்டுபோய் கொடுத்து பயமுறுத்துவார். அப்படியெல்லாம் கொடுத்தும் ஏன் கட்டி வைத்த புத்தகங்கள் குறையவே மாட்டேங்குறதுன்னு புரியாமலேயே தன்னுடைய பதிப்பகத்தின் அடுத்த புத்தகத்துக்கான சப்ஜெக்ட்டை யோசித்துக் கொண்டிருப்பார். இன்னொரு வகைப் பதிப்பகங்கள், இப்படி புதிதாக எழுதுகிற எழுத்தாளர்களிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு அவர்களுடைய பணத்தின் மதிப்புக்கேற்ப நூறோ, இருநூறோ புத்தகங்களை அச்சடித்து அவர்கள் தலையிலேயே கட்டி விடுவது அவர்களும் மேலே சொன்ன மாதிரி நானும் ஒரு எழுத்தாளன் தான் என்ற அடையாளத்துடனும் தன்னுடைய புத்தகங்கள் தமிழ்கூறும் நல்லுலகமெங்கும் வாசிக்கப்பட்டுக் கொண்டிருப்பதான கற்பனையில் மிதக்க அந்தப் புத்தகமும் அந்த எழுத்தாளரிடம் தவிர வேறெங்கும் கிடைக்காமலிருப்பதன் மர்மம் புரியாமலேயே தன்னுடைய இலக்கியப்பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கவும் நேரும். இதில் அந்தப் புத்தகம் அவருக்கே தெரியாமல் நூலக ஆணை பெற்று நூலகத்தில் சென்று சேர்ந்திருக்கும். இன்னும் சில பதிப்பகங்கள் இருக்கின்றன. அவை எந்தப்புத்தகமாயிருந்தாலும் இரண்டே இரண்டு பிரதிகள் மட்டுமே கம்ப்யூட்டர் பிரதி எடுத்து அதற்கு கலர் ஜெராக்ஸ் அட்டை போட்டு நூலக ஆணையை மட்டுமே நம்பி மேற்கொண்டு புத்தகங்களை அச்சடிக்கும் குணாதிசயம் கொண்ட பதிப்பகங்கள். இவர்கள் எதற்காக பதிப்பகம் நடத்துகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியுமா என்று தெரியவில்லை. புத்தகத்தின் தயாரிப்புச் செலவு பற்றி எந்த அறிவுமில்லாமல் ஒரு புத்தகத்துக்கான தொகை மதிப்பை அடிமாட்டுவிலையாக அறிவிக்கும் நூலகத்துறையின் ஆணை பெற்று அச்சடித்து என்ன தொழில் செய்து விடமுடியும் என்பது அவர்களுக்கே தெரிந்த தங்கமலை ரகசியம். இதற்கூடாகவும் சிலபல வகைகளில் பதிப்பகங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

இந்த எல்லாவகையான பதிப்பகங்களும் சேர்ந்து தான் நூலக ஆணைக்கான குரலை ஓங்கி ஒலித்திருக்கின்றன. அதன் விளைவான நூலக ஆணையில் டார்வினின் வலிமையுள்ளது வெல்லும் என்ற கோட்பாட்டின்படி பல பெரிய பதிப்பகங்கள் மொத்தமான ஆணைகளை வாங்கியிருப்பதும் நடந்திருக்கிறது. பதிப்பகங்களின் கூட்டமைப்பான பாபாசி இந்த எல்லாவகையான பதிப்பகங்களையும் ஒழுங்குபடுத்துவதற்கான எந்தத் திட்டமும் வைத்திருக்கிறதா என்று தெரியவில்லை. அதே போல எந்த அரசாங்கமாக இருந்தாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு நூலகத்துறையும் நூலக ஆணைகளும் ஒழுங்கான வெளிப்படையான ஒரு நடைமுறையைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி ஏதாவது இயக்கத்தை நடத்தியிருக்கிறதா என்றும் தெரியவில்லை. அந்தந்த ஆட்சியாளர்களை, அவர்களுக்கு வேண்டியவர்களை காக்கா பிடித்தே நூலக ஆணை வாங்க வேண்டிய அவலத்தைத் தீர்க்க ஏதேனும் வழிமுறைகளைக் கண்டிருக்கிறதா என்றும் தெரியவில்லை. புத்தகத்தயாரிப்புச் செலவைக் குறைக்க அரசிடம் ஏதாவது புதிய திட்டங்களை பிரேரிபித்திருக்கிறதா என்றும் தெரியவில்லை.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க பதிப்பகங்களின் ஆதங்கமான நூலக ஆணை கிடைக்காததினால் தான் எழுத்தாளர்களுக்குக் காப்புரிமைத் தொகை வழங்க முடியவில்லை என்ற விஷயத்துக்குள் சற்றே எட்டிப்பார்த்தோமானால் பதிப்பகங்கள் எப்படி தமிழ்எழுத்தாளர்களை எப்படிக் காமெடி பீஸாக வைத்திருக்கிறார்கள் என்று புரியும். அநேகமாக பெரும்பாலான பதிப்பகங்களுக்கு எழுத்தாளர்களுக்குக் காப்புரிமை என்று ஒரு உரிமை இருக்கிறது என்றே தெரியுமா என்று அச்சப்பட வேண்டியதிருக்கிறது. இதில் இடதுசாரி, வலதுசாரி என்ற பேதமில்லை. இதில் இன்னுமொரு முரண்நகை என்னவென்றால் எந்த எழுத்தாளருக்குமே காப்புரிமைத்தொகை வழங்காத பதிப்பகங்கள் பதிப்புரிமை பற்றியும், காப்புரிமை பற்றியும் செமினார்களை நடத்துவதும், தாங்கள் நடத்தும் பத்திரிகைகளில் அது பற்றி வல்லுநர்களின் கருத்துக்களை வெளியிடுவதும் நடக்கிறது. முதலில் விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச்சில பதிப்பகங்களே எழுத்தாளருடன் காப்புரிமை ஒப்பந்தம் போடுகிறார்கள். மற்ற பதிப்பகங்கள் அப்படின்னா என்ன? என்று கேட்பார்கள். பல பதிப்பகங்களுக்கு மட்டுமல்ல நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது சதவீத எழுத்தாளர்களுக்கு அந்தக் காப்புரிமை ஒப்பந்தம் எப்படி இருக்கும் என்று கூடத் தெரியாது. எல்லாம் வாய்மொழி வார்த்தைகள் தான். அதுவும் ஏதோ ஒப்பந்தம் என்று யாரும் நினைத்து விடாதீர்கள். என்ன சார் என் கதைத்தொகுப்பை போடலாமா? சரி போடுவோம். இவ்வளவு தான். இது தான் அந்த வாய்மொழி வார்த்தைகள். சமூகத்தின் நிகழ்வுகளில் அறச்சீற்றம் பொங்க எழுதி செயல்பட்டுக் கொண்டிருக்கும் எழுத்தாளரும் தன்னுடைய காப்புரிமை பற்றியோ காப்புரிமைத் தொகை பற்றியோ பேசுவதில்லை. ( ஏன்னா புத்தகம் போடறதே பெரிசு என்று அவர் நினைக்கிறார்.) பதிப்பகமும் அதைப்பற்றி அப்போது மட்டுமல்ல எப்போதும் வாய் திறப்பதில்லை. புத்தகம் வெளிவந்து எத்தனை வருடங்கள் ஆன பின்னும் சரி எப்போதாவது யாராவது ஒரு எழுத்தாளர் தெரியாத்தனமாக காப்புரிமைத்தொகை பற்றி கேட்டால் உடனே பதிப்பகம் ஒரு பதிலை ரெடிமேடாக வைத்திருக்கும். உங்க புஸ்தகம் கொஞ்சம் கூட போகலையே..சார்.. எல்லாம் அப்படியே கட்டிக் கிடக்கு. இப்படி ஒரு பதில். இதற்குள் நீங்கள் எல்லாவற்றையும் அடக்கி விடலாம். புத்தகம் போடும்போதும் எத்தனை புத்தகம் போடுகிறோம் என்று சொல்வதுமில்லை. எழுத்துபூர்வ ஒப்பந்தம் இல்லாததினால் தெரிவதுமில்லை. இத்தனை ஆண்டுகளில் இத்தனை புத்தகங்கள் தான் விற்றிருக்கிறது என்றும் சொல்வதில்லை. அதற்குமேல் நம் எழுத்தாளப்பெருமகனாருக்கு இதைப்பற்றிக்கேட்பதற்கு தைரியமும் இல்லை. அதனால் பதிப்பகம் சொல்கிற புத்தகம் போகல சார் என்று கேட்ட எழுத்தாளர் மனம் சோர்ந்து போவார். இனி ஒருபோதும் காப்புரிமைத்தொகை பற்றி வாயைத் திறப்பதில்லை என்று முடிவு செய்து விடுவார். இன்னும் சில பதிப்பகங்கள் எழுத்தாளரின் சமூக அந்தஸ்தை வைத்து காப்புரிமைத்தொகை கொடுப்பதா என்று தீர்மானிக்கின்றன. ஐயோ பாவம் அவர் கஷ்டப்படறார் அவருக்குக் கொடுத்துருவோம் என்றும் அவருக்கென்ன நல்ல ஜாப்பில இருக்கார் அவருக்கு இதெல்லாம் ஒரு விஷயமா? என்றும் பாகுபாடு பார்க்கின்றன. இதுவும் அப்படியே என்றும் சொல்ல முடியாது. மார்க்கெட்டில் டிமாண்ட் இருக்கிற எழுத்தாளரென்றால் அவர் எந்த அந்தஸ்திலிருந்தாலும் காப்புரிமைத்தொகையை பக்காவாக வருடந்தோறும் ஸ்டேட்மெண்ட் போட்டு அனுப்பி விடுகிறதும் உண்டு. மார்க்கெட் டிமாண்ட் என்கிற பரவலாக வாசிக்கப்படுகிற அங்கீகாரம் எழுத்தாளர்கள் பல உபாயங்களைச் செய்வதால் வந்தடைகிறது. அந்த உபாயங்களைச் செய்யத்தெரியாத அப்பாவிகள் புத்தகங்களைக் கொடுத்து விட்டு அங்கீகாரமும் இல்லாமல் காப்புரிமைத்தொகையும் கிடைக்காமல், அதை மறைக்க எழுத்தாளன் சமூகத்தின் மனசாட்சி அவனுக்கு இதெல்லாம் கால்தூசி. பாரதியைப்பார். புதுமைப்பித்தனைப்பார். என்று ஜம்பம் பேசிக் கொண்டு திரிவார்கள்.

இதில் மொழிபெயர்ப்பு புத்தகங்களென்றால் பதிப்பகங்களுக்கு அல்வா திங்கிற மாதிரி. ஏன் திடீரென்று எல்லாபதிப்பகங்களும் மொழிபெயர்ப்பு நூல்களின் மீது அபரிமிதமான ஆர்வத்தை கடந்த சில வருடங்களாகச் செலுத்தி வருகின்றன தெரியுமா? பிற நாட்டு நல்லறிஞர் நூல்களைத் தமிழில் கொண்டுவந்து தமிழ் மொழியை வளப்படுத்தவா என்ற சந்தேகம் சிலருக்கு வந்தது. முக்கியமான காரணம் மொழிபெயர்ப்பு நூல்களுக்கு காப்புரிமைத்தொகை வழங்க வேண்டியதில்லை. அதுவும் ஆங்கிலமென்றால் அவுட்ரேட்டாக மொழிபெயர்ப்பாளருக்குக் கொடுத்துவிட்டு போட்டுக் கொண்டேயிருக்கலாம். மலையாளம் போன்ற கொஞ்சம் விழிப்புணர்வு மிக்க எழுத்தாளர்களைக் கொண்ட மொழியாக இருந்தால் மட்டும் அந்த மூல ஆசிரியருக்கு மட்டும் காப்புரிமைத்தொகை ஐந்து சதவீதம் தருவது. அதையும் மொழிபெயர்ப்புக்கு நூலைத் தேர்ந்தெடுத்து மூல ஆசிரியரிடம் அனுமதி பெற்று மொழிபெயர்த்து பதிப்பகத்தாரிடம் கொடுத்து அது வெளிவந்ததும் நூலை மூல ஆசிரியருக்கு அனுப்பி வைத்து அவருக்குக் காப்புரிமைத்தொகையையும் பதிப்பகத்தை நச்சரித்து வாங்கி அனுப்பி வைத்த பிறகு அவ்வளவு உழைப்புக்கும் தனக்குக் கிடைக்கும் மொழிபெயர்ப்பாளர்பிரதிகள் ஐந்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருக்கும் தியாகி தான் மொழிபெயர்ப்பாளர். அவருடைய உழைப்பை பதிப்பகங்கள் மதிப்பதேயில்லை. உழைப்பையே மதிக்காத போது அவருக்கான காப்புரிமை பற்றி என்ன பேசமுடியும்?

சில பதிப்பகங்கள் தங்கள் பதிப்பகத்திலேயே வெளிவந்த புத்தகங்களில் சில எழுத்தாளர்களுக்கு காப்புரிமைத் தொகை வழங்குவதும் சில எழுத்தாளர்களுக்கு அது பற்றிய மூச்சே காட்டாமல் இருப்பதும் நடக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள் எதில் ஒற்றுமையாக இருக்கிறார்களோ இல்லையோ தங்களுக்கு காப்புரிமைத்தொகை கிடைக்கவில்லை என்பதைப் பற்றியோ பதிப்பகங்கள் அறவுணர்வுடன் அதைக் கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றியோ எங்கும் பேசுவதில்லை. ஒருவேளை அதைப்பற்றி பேசினால் பதிப்பகங்கள் ஒன்று சேர்ந்து தீர்மானம் போட்டு தங்கள் புத்தகங்களைப் போடாமல் போய் விடுவார்களோ என்ற அச்சமோ என்னவோ.

காப்புரிமை என்பது ஒரு படைப்பாளியின் படைப்பைச் சந்தைப்படுத்தும் போது அவருக்குச் சேரவேண்டிய மதிப்பூதியம். அந்தப் படைப்பாளியின் படைப்பை சந்தையில் விற்பனை செய்து வருகின்ற மொத்தத்தொகையில் பத்தோ, பதினைந்தோ, இருபதோ சதவீதம் அந்த படைப்பாளியின் சந்தை மதிப்பை வைத்து கொடுக்கப்படுவது. இப்படிப் பதிப்பகங்கள் எழுத்தாளர்களின் படைப்பை விற்றுத் தாங்கள் வருவாய் அடையும்போது அந்த வருவாய்க்கான மூலகாரணகர்த்தாவாகிய படைப்பாளிக்கு அவருக்கு உரிய காப்புரிமைத்தொகை கொடுப்பதில் என்ன தயக்கம் என்றும் தெரியவில்லை. ஒரு புத்தகத்தைப் வெளியிடுவதற்கும் வெளியிட மறுப்பதற்கும் ஏன் அந்தப் படைப்பைத் திருத்தி எழுதச்சொல்லிக் கேட்பதற்கும் ஒரு பதிப்பகத்துக்கு எல்லா உரிமைகளும் உண்டு. ஆனால் ஒரு பதிப்பகம் ஒரு புத்தகத்தை வெளியிட்ட பிறகு அந்தப் புத்தகத்தை விற்பனை செய்கிற பொறுப்பு அந்தப் பதிப்பகம் சார்ந்தது. அந்த நூலுக்கான வெளியீட்டு நிகழ்வு, அந்த நூலைப் பற்றிய மதிப்புரைகள், அதை புரோமோட் பண்ணுவதற்கான விளம்பரங்கள், எல்லாம் பதிப்பகங்கள் செய்ய வேண்டிய வேலை. ஆனால் இங்கே என்ன நடக்கிறது? எழுத்தாளரே தன் கைகாசை செலவு செய்து வெளியீட்டு விழா நடத்துகிறார். புத்தகங்களை நண்பர்களுக்கு ஓசிக்கு அனுப்புகிறார். அவர்களைப் பலமுறை நச்சரித்து மதிப்புரை வாங்கி பத்திரிகைகளில் வரவழைக்கிறார். இதில் எந்த வேலையையும் பெரும்பாலான பதிப்பகங்கள் செய்வதில்லை. புத்த்கங்களை விற்பனை செய்வதற்காக தமிழகமெங்கும் நூல்களை அனுப்புவதிலாகட்டும், விற்பனையான நூல்களுக்கான தொகையை வசூலிப்பதிலாகட்டும், எந்தப்பதிப்பகமும் தொழில்முறையில் செய்வதில்லை. அப்படித் தொழில்முறையில் செயல்பட்ட பதிப்பகங்கள் மகத்தான வெற்றி பெற்றிருக்கின்றன என்பதற்கு நம் கண்முன்னே உதாரணங்கள் இருக்கின்றன.

  ஒரு வேளை எல்லா எழுத்தாளர்களுக்கும் லட்சக்கணக்கில் காப்புரிமைத்தொகை கொடுக்க வேண்டியதிருக்குமோ என்றால் அதுவுமில்லை. ஆயிரக்கணக்கு என்பது கூட சில சமயம் அதிகம் தான். ஆனால் அதை கொடுப்பதற்கும் மனமில்லாத பதிப்பகங்கள் தான் ஏராளம். இதற்கும் கேரளாவையே உதாரணம் சொல்ல வேண்டியதிருக்கிறது. என்ன செய்ய? நல்ல அரசு உத்தியோகத்திலிருந்து முழுநேர எழுத்தாளராக மாறிய எழுத்தாளர்கள்  கேரளத்தில் அதிகம். காரணம் எழுத்தின் மூலமாக தங்களுக்குக் கிடைக்கும் வருவாய் போதுமானதாக இருந்தது தான் காரணம். அதற்கு அங்குள்ள பதிப்பகங்கள் எழுத்தாளர்களை மதிக்கின்றன. மக்கள் மதிக்கின்றனர். அரசியல்வாதிகள் மதிக்கின்றனர். அங்கே நீங்க என்ன செய்யறீங்க என்ற கேள்விக்கு அப்போது தான் எழுதத்தொடங்கியிருக்கும் ஒருவர்கூட நான் எழுத்தாளர் என்று தலை நிமிர்ந்து சொல்ல முடியும். ஆனால் இங்கே பிரபலமான எழுத்தாளர்கள் கூட அப்படிச் சொவதற்கு கொஞ்சம் யோசிப்பார்கள்.  இங்கே எழுத்தாளர் என்றால் எந்தப் போலீஸ் ஸ்டேஷனில் என்றோ, பத்திர எழுத்தாளர் என்றோ புரிந்து கொள்பவர்களை அதிகமாகக் கொண்ட நாட்டில் வாழநேர்ந்து விட்டது. இதில் பதிப்பகங்களும் நம்நாட்டு விவசாயிகளை ஏமாற்றும் வியாபாரிகளைப் போல எழுத்தாளர்களிடம் நடந்து கொண்டால் நஷ்டம் பதிப்பகங்களுக்கு மட்டுமல்ல. நாட்டின் கலை இலக்கிய, பண்பாட்டு, அறிவுலகப் பாரம்பரியத்துக்கும் தான்.

நன்றி- புதியபார்வை