Saturday 17 May 2014

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்- புத்தகமதிப்புரை

 

கமலாலயன்

1497597_437038946422644_650455706_n

இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் விளைவுகள், மனிதகுலம் தன் வரலாறு நெடுக கடந்து வந்திருக்கிற இருண்ட நரகத்தின் கூறுகள், எத்தனையோ லட்சக்கணக்கான, இந்துக்கள்- முஸ்லீம்களான சாதாரண மனிதர்கள் தாம் அந்த நரக வாதையை அநுபவித்தவர்கள். மதவெறியர்கள் மூட்டிய தீ நாக்குகளுக்கு இரையாகி மடிந்த லட்சோப லட்சம் மக்களின் சாம்பற்குவியல்கள் இரு நாடுகளிலும் இன்னமும் நிறைந்து தான் கிடக்கின்றன. பீனிக்ஸ் பறவைகளைப் போல மகத்தான கலைப்படைப்பாளிகள் இத்தகைய துயரங்களின் போதுதான் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். தங்களின் உயிரை விலையாகக் கொடுத்தேனும் அத்துயரங்களுக்குக் கலை வடிவம் தந்து விடுகிறார்கள். என்றோ, எங்கேயோ நடந்து முடிந்து போன நிகழ்வுகளே ஆயினும் அத்துயரப்பதிவுகள் காலத்தை வென்று உயிர் வாழ்கின்றன. மனச்சாட்சி உள்ள எந்த ஒரு மனிதனையும் இவை உலுக்கி விடுகின்றன. எதிர்காலச் சந்ததியினருக்கு இவை எச்சரிக்கை விளக்குகளாகி நிலை பேறடைகின்றன.

இந்தியத்துணைக்கண்டம் சந்தித்துக் கடந்து விட்ட ஆனால் சமீப காலங்களில் மீளவும் உயிர் பெற்று எழுந்து கோர நடனமாடுகிற அந்தத் துயரமும், குரூரமும் மிக்க காலத்தில் சோகந்தோய்ந்த குரல்கள் சாதத் ஹசன் மண்ட்டோவினுடையது. உருது மொழியிலக்கியத்தின் உன்னதமான படைப்பாளியான இவர் 1912, மே 11 ஆம் தேதி பிறந்தவர். அவரது நூறாவது பிறந்த ஆண்டான 2012- இல் தமிழில் அவருடைய படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பெற்று வந்தன. நண்பர் ராமாநுஜம் மண்ட்டோவின் மிகச்சிறந்த கதைகள் சொல்லோவியங்கள் நனவோடைப் படைப்புகளைத் தமிழாக்கி வழங்கியதன் மூலம் ஒரு மாபெரும் படைப்பாளியின் மறுவாசிப்பை நமக்குச் சாத்தியமாக்கியவர். அவரைத்தொடர்ந்து இப்போது கரிசல் காட்டின் கதை சொல்லியான உதயசங்கர், மண்ட்டோவின் 13 சிறந்த சிறுகதைகளை மொழியாக்கம் செய்து நமக்குத் தந்திருக்கிறார்.

உதயசங்கர், 1980-களிலிருந்து இன்று வரை உயித்துடிப்புடன் இயங்கி வரும் படைப்பாளி. ஏழு சிறுகதைத் தொகுதிகள், ஒரு குறுநாவல் தொகுதி, இந்து கவிதைத் தொகுதிகள், மலையாளத்திலிருந்து தமிழுக்கு ஒன்பது மொழியாக்க நூல்கள்,இரண்டு கட்டுரை நூல்கள், ஒரு குழந்தைப் பாடல் நூல்-ஆக 25 நூல்களின் ஆசிரியர். மானுட நதியின் கட்டற்ற பிரவாகத்தினூடே பயணித்தவாறே அதன் போக்கை முற்போக்கான திசை வழியில் கொண்டு செல்லுவதற்குத் தன்னாலியன்ற பங்களிப்பை செய்து வருபவர். மண்ட்டோவைப் பற்றி உதயசங்கர் எழுதிய உணர்ச்சிமயமான கட்டுரை ஒன்றை, இச்சிறுகதை மொழிபெயர்ப்பு நூலின் அறிமுகக் கட்டுரையாக இணைந்திருப்பது மிகமிகப் பொருத்தமான அமைவு.

நுட்பமான படைப்பு மனநிலையும், சக மனிதர்களின் மீது எல்லையற்ற நேசமும் கொண்ட எந்த ஒரு கலைஞனும் மண்ட்டோவைத் தனது நெருங்கிய உறவாக உணர்ந்து சொந்தம் கொண்டாடாமல் இருக்கவே முடியாது. உதயசங்கரும் ‘மண்ட்டோ மாமா’ வை உரிமையுடன் சொந்தம் கொண்டாடியிருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை.

பிரிவினையின், மதவெறியின் கொடூரங்கள் ஒருவர் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், மண்ட்டோவின் இந்தக் கதைகளை அவர் அவசியம் படித்தே ஆகவேண்டும். முதல் கதையான ‘டிட்வாலின் நாய்’ ஒரு நையாண்டியான தொனியில் எழுதப்பட்டிருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்புறத்து இராணுவ நிலைகளில், அவரவர் முகாம்களில் இருந்தவாறே ‘எதிரி’ நாட்டின் மீது ‘சும்மா’ சுட்டுக் கொண்டிருக்கிறார்கள் இருநாட்டு வீரர்களும். யார் வெற்றி பெறுவார்கள் எனத் தெரியாத ஒரு பைத்தியக்காரத்தனமான போர் அது. இரு படைநிலைகளுக்கும் நடுவே, தற்செயலாகத் தெரியாத்தனமாக வந்து மாட்டிக் கொள்கிறது ஒரு நாய். இந்திய-பாகிஸ்தான் வீரர்கள் மாறிமாறி இந்த விரட்டியடித்து நடத்தும் ‘துப்பாக்கிச் சூடு’ விளையாட்டில் ‘தியாகியைப் போல் செத்துப் போகிறது அது.

நாய்தான் என்றில்லை; இருஎஆட்டு இராணுவங்களின் தாக்குதல்களுக்கு நடுவே மனிதர்களும் ‘நாய்களைப்’ போல் செத்துப் போகிறார்கள். என்பதையே இக்கதை குறியீட்டுத் தனமையில் வெளிப்படுத்துவதாகவும் வாசிக்கவும். இதன் இன்னொரு பரிமாணம் யுத்தகளப் பயங்கரங்கட்கு நடுவிலும் என்றும் போல் உயிர்ப்புடன் திகழும் இயற்கையின் தரிசனப்பதிவுகள்; “ சீதோஷ்ணநிலையில் ரம்மியமும் காட்டு மலர்களின் வாசனையும் நிரம்பிய இயற்கை தன் வழியே போய்க்கொண்டிருக்கிற போது திடீரென்று வெடிக்கிற குண்டுகள் எல்லாவற்றையும் சீர்குலைத்துச் சிதறடித்து விடுகின்றன. பஞ்சாபி கிராமியப் பாடலைப் பாடுகிற இராணுவ வீரனின் துயரக்குரல் ஒரு புறம். அப்பாடலில் ஓர் ஏழைக்காதலி தனது காதலனிடம் எருமையை விற்று விட்டாவது நடசத்திரங்கள் பதித்த ஒரு ஜோடி செருப்பை வாங்கி வர வேண்டுமென்று மன்றாடுகிறாள். இவ்வாறான அத்தனை உயிர்க்குரல்களையும், துப்பாக்கிக்குண்டுகளின் முழக்கம் ஈவிரக்கமின்றிச் சாகடித்து விடுகிறது.

சாலையோரமாக.. புதிதாய்ப் பிறந்த ஒரு குழந்தை நனைந்த லினன் துணியால் சுற்றப்பட்டுக் கிடப்பதை போலீசார் லாகூரில் கண்டெடுக்கிறார்கள். குளிரில் அது விறைத்தே செத்திருக்க வேண்டும். ஆனால் அது உயிருடன் இருந்தது; மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது. அந்தக்குழந்தை யார்? பரஸ்பரம் தமது நிறைவின்மையை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு முழுமையடைந்து ஏதோ காரணத்தினால் பிரிந்து போன இரு ஆத்மாக்களின் விளைபொருளா அது?

‘ நான் ஓர் ஆண்; இன்று நீ என் வாழ்வில் முழுமையைக் கொண்டு வந்தாய். நாளை வேறொரு பெண். இன்று நீ நிரப்பிய வெறுமை மறுபடியும் தோன்றும். அப்போது அங்கே அதை நிரப்ப மற்றவர்கள் இருப்பார்கள்..” இப்படியான குரூரமான வார்த்தைகள் உயிருடன் கல்லால் அடிப்பதைப் போல அந்தப் பேதைப் பெண்ணைத் தாக்குகின்றன. அவள் மன்றாடுகிறாள்: “ இப்படியான குரூரமான வார்த்தைகள் உயிருடன் கல்லால் அடிப்பதைப் போல அந்தப் பேதைப் பெண்ணைத் தாக்குகின்றன. அவள் மன்றாடுகிறாள்: “ நடந்தது ஒரு விபத்து. ஆனால் அவன் அதிலிருந்து முழுதாக எந்தச் சேதாரமுமில்லாமல் எழுந்து நடந்து போய்விட்டான். ஆனால் என் காதில் ஒரு குரல் கிசுகிசுக்கிறது. ஒரு கண்ணீர்த்துளி என்னுடைய சிப்பிக்குள் நழுவி விழுந்து ஒரு முத்தை உருவாக்கியது. நான் காத்துக் கொண்டிருக்கும் ஒரு மடி. என்னுடைய கைகள் அதை ஏந்திக் கொள்வதற்காக நீள்கின்றன. இல்லை.. அதை என்னிடமிருந்து பறிக்காதீர்கள். என்னிடம் இருந்து அதை எடுத்துச் செல்லாதீர்கள்..” இப்படியெல்லாம் கடவுளின் பெயரால் அவள் எவ்வளவோ கெஞ்சி, அரற்றிய போதிலும், அவளிடமிருந்து பறிக்கப்பட்டு விட்ட உன்னதமான கனிதான் அந்தக் குழந்தையா?

தினசரி செய்தித்தாள்களில் நாம் படித்து விட்டு கொஞ்ச நேரத்தில் மறந்து போகும், சாலையோரக்குப்பைத் தொட்டிகளில் கிடக்கும் குழந்தைகளுள் ஒன்றாகக்கூட இது இருக்கலாம். மண்ட்டோவின் கலைத்தூரிகை இந்த அவலத்தை எத்தனை உயிர்ப்புடன் சொல்லோவியமாய் தீட்டியிருக்கிறது என்பதை இக்கதையைப் படித்தால் மட்டுமே உணரமுடியும்.

மதவெறியின் போதையில் நிலை மறந்துபோன மனிதர்கள், தமது எதிரி மதத்தைச் சேர்ந்த குடும்பத்தினரைக் கொன்று குவிக்கிறார்கள். பெண்களைச் சீரழிக்கிறார்கள். அந்த வகையில் ஐஷர்சிங்கின் கும்பலில் மாட்டிக் கொண்ட ஒரு நிராதரவான குடும்பத்தினர் ஏழுபேரில் ஆறு பேரை அவனுடைய கிர்பான் கத்தி கொன்று விடுகிறது. ஏழாவது நபர் ஓர் அழகான இளம்பெண். அவளை ஐஷர்சிங் கொல்லவில்லை. அவளைத் தூக்கிக் கொண்டு நகருக்கு வெளியே ஓடுகிற ஐஷர்சிங் அவளிடம் தனது துருப்புச்சீட்டை இறக்க முற்படுகிறான். அப்போதுதான் அந்த அதிர்ச்சிகரமான உண்மை அவனுக்குத் தெரிய வருகிறது. பனிக்கட்டியை விட குளிர்ந்து போய்.. என்ற இக்கதையின் இரண்டே கதாபாத்திரங்களும் ஒரு பிணமும் நமது இரத்தத்தை உறைய வைத்து விடுகிற மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒரு கட்டுரையின் தலைப்பைப் போலமைந்த இக்கதை விடுதலைக்கு முன்பு-பின்பு என இரு சமயங்களிலும் மக்களின் எதிர்பார்ப்புகளையும், ஏமாற்றங்களையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக முன் வைக்கிறது: “ என்ன முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறாய்? என்ன புதிய அரசியலமைப்புச் சட்டம்? எல்லாம் அதே பழைய அரசியலமைப்புச் சட்டம் தான் முட்டாளே!..” என்று குதிரை வண்டிக்காரன் மங்குவைப் பார்த்துச் சொல்லப்படுகிற இந்த வார்த்தைகள், விடுதலையடைந்த இந்தியாவின் சாதாரண குடிமக்கள் எல்லோருக்குமே ஏதேனும் ஒரு வகையில் பொருந்துபவையாகத் தான் இருக்கின்றன.

காட்டுக்கள்ளி கதையில் வருகிற சர்தார், நவாப், ஹைபத்கான், மூவரும் ஒரு முக்கோணத்தின் மூன்று முனைகள். ஹைபத்கானின் காதல், நவாப் என்கிற விலைமகளின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கிறது. ஆனால் ஹைபத்கானின் மனைவியான சகீனா என்ற பெண்ணின் வருகை, நவாப் வாழ்வின் இறுதி அத்தியாயத்தை மிகக் குரூரமான எழுத்துகளில் எழுதி முடித்தே விடுகிறது. உன்மத்தம் நிறைந்த காதலின் மறுபக்கம், உயிரையும் பறிக்கிற வெறுப்பாகவும் வினைபுரிவதை காட்டுக்கள்ளி சொல்லுகிறது. சர்தார், நவாப், போன்ற காட்டுக்கள்ளிகளைப் பாதுகாப்பதற்கு யாரிருக்கிறார்கள் இங்கே? மனப்பரப்பெங்கும் துயரத்தை நிரப்பி விடுகிற கதை இது.

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண் கதை கிழக்கு-மேற்கு பஞ்சாப் பகுதிகளில் இந்து-முஸ்லீம் கலவரங்களின் போது, கலவரக்காரர்களிடமிருந்து தப்புவதற்காக காரில் விரைவாக வந்து விபத்திற்குள்ளாகும் பிரபல பெண் ஓவியர் மிஸ்.எம்-மின் கதை. கலைக்கல்லூரி ஒன்றின் முதல்வரான அந்த முதிய வயதுப் பெண் ஆண்களை வெறுத்து வந்தவர். ஆனால் மழை பெய்து கொண்டிருந்த அந்த இரவில் கார் விபத்திலிருந்து தன்னை மீட்டுக் கொண்டு வந்த கதைசொல்லியின் வீட்டு வரவேற்பறையில் தான் முதன்முதலாகத் தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்து, அன்று புதிதாய்ப் பிறக்கிறாள். ஆனால் இருளில் முகம் தெரியாதபோது மோகம் பொங்க அவளை இறுக்கி அணைக்க முயலுகிற கதைசொல்லி திரு.எஸ்- நீ விருப்பப்பட்டா போகலாம் என்று சற்றுமுன் தான் தன்னைப் பெண்ணாக உணர்ந்த மிஸ்.எம்மைப் போகச் சொல்லுகிறான். அந்த மழையிரவில் ஏதோ சொல்ல முயன்று முடியாமல் மௌனமாக வெளியே போய்விடுகிற அவள் அன்றிரவே ஒரு கார் விபத்தில் இறந்து போய்விட்டதாக திரு.எஸ்ஸிடம் அவனுடைய நண்பன் சொல்லுகிறான். நாம் அறிந்தோ அறியாமலோ அன்றாடம் கொன்று குவிக்கிற பல மனிதர்களுள் ஒருத்தியைப் பற்றிய கதை இது. பல சமயங்களில் கொல்லப்படுவது வெறும் உடல்கள் மட்டுமேயல்ல என்ற உண்மை நெஞ்சில் அறைகிறது நம்மை.

கடவுளின் மனிதன் கதையின் ஜீனாவையும் அவருடைய அம்மா பதானையும் எப்படி மறக்க முடியும்? கடவுளின் பெயரால் கடவுளின் பிரதிநிதிகள் என்று தம்மை முன் நிறுத்திக் கொண்டு ஏமாற்றித் திரிகிற கயவர்களின் பிரதிநிதியாக மௌல்விசாகிப் வருகிறான். ஜீனா, பதான், இரண்டு பேரையும் வஞ்சித்து அநுபவிப்பதற்கு அந்தப் போலி மௌல்வியின் தாடி, மீசை, அலங்கார ஆன்மீகச் சொல்லாடல்கள் இவற்றை விடவும் அவனுக்கு முதன்மையாக உதவுவது பதானின் கணவனும் ஜீனாவின் தந்தையுமான சௌத்ரி மௌஜீவின் மதநம்பிக்கையும் இறையச்சமும் தான் என்பது நம் முகத்திலறைகிறது.

கடவுளின் பணியைச் செய்து கொண்டு கதையில் வருகிற பனியா வகுப்பு வியாபாரி, நமது சமகாலத்து லாபவேட்டைக் கொள்ளைக்காரர்களின் வகை மாதிரியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறான். விண்ணை முட்டுகிற வசிப்பிடக்கட்டடங்களின் அடித்தளத்திற்குள் அனுதினமும் புதையுண்டு போய்க் கொண்டிருக்கும் மனிதர்களின் அவலக்குரல்களை, நேரடியாக அல்லாமல் அந்த வியாபாரிகள் உணர்ச்சி ஏதுமற்ற வறட்டு விவரிப்பின் மூலமே நையாண்டி செய்து பதிவு செய்திருக்கிறார் மண்ட்டோ.

சிராஜ் ஒரு புதிரான பாலியல் தொழிலாளி. பத்து ஆண்டுகட்கு முன் லாகூரின் ஓட்டல் ஒன்றில் தன்னை ஏமாற்றிவிட்டு ஓடிப்போன அதே ஆளைக் கண்டுபிடித்து அதே ஒட்டல் அறையில் தன் பழைய கணக்கைத் தீர்த்து விடுகிறாள். எல்லோருக்கும் விடுதலை கதையில் பாணரான கபீர் விடுதலையடைந்த பூமியில் தான் சந்திக்கிற வெவ்வேறு மனிதக்குழுக்களிடமிருந்து எழுப்புகிற பல கேள்விகளாலும் பதில்களாலும் தனது எதிர்வினைகளாலும் நெய்யப்பட்ட ஒரு அற்புத மாலையைக் கதையாகத் தொடுத்திருக்கிறார் மண்ட்டோ. துக்கத்தின் அடையாளமாகக் கருப்புப் பட்டைகளை அணிந்திருக்கிற மனிதர்களிடமும் கபீர் ஓர் அர்த்தமுள்ள கேள்வியை எழுப்புகிறார். அவர்கள் கபீரை, ‘ நீ ஒரு கம்யூனிஸ்ட். ஐந்தாம்படை பத்திரிகையாளர் ‘ என்று பலவாறாக ஏசுகிறார்கள். அன்று முதல் முறையாக கபீர் சிரிக்கிறார். ஆனால் நண்பர்களே நான் கருப்போ, சிவப்போ, பச்சையோ, எந்தப் பட்டையும் அணியவில்லை..என்ற கபீரின் வாக்குமூலத்தை ஒரு வகையில் மண்ட்டோவினுடையதாகவும் வாசிக்க முடியும்.

இத்தொகுப்பின் எல்லாக்கதைகளிலும் நாம் சந்திக்கிற மனிதர்கள், நல்லவர்களா? கெட்டவர்களா? மென்மையும் அன்பும் கொண்டவர்களா? குரூரமும் வெறுப்புமே நிறைந்தவர்களா? உண்மையில் மனிதர்கள் இருவகையையும் சேர்ந்தவர்களுமாகத்தான் இருக்கிறார்கள். அப்படித்தான் அவர்கள் இருந்திருக்க முடியும். மண்ட்டோ யார் பக்கம்? இறுதியாகப்பார்த்தால் அவர் எளிய நிராதரவான மனிதர்களின் ஆன்மாக்களின் பாதுகாவலராக இருப்பதை நாம் உணர முடியும்.

சாதாரண அடித்தட்டு மக்கள் விளிம்பு நிலையினர், பாலியல் தொழிலாளிகள் போன்ற சாமானியர்களின் வாழ்க்கை அவலங்களை வாசக மனங்கள் அதிரும்வகையில் சொன்னவர் மண்ட்டோ. அனைத்து அதிகாரநிறுவனங்கட்கும், மேலாதிக்கக்கருத்துகளுக்கும் எதிரான போர்க்குரல் மண்ட்டோவினுடையது. ஆபாசமான கதைகளை எழுதியவர் என்று பலமுறை நீதிமன்றங்களால் அலைக்கழிக்கப்பட்ட, குற்றம் சுமத்தப்பட்ட எழுத்தாளர் அவர்.

மண்ட்டோவின் காலம் இந்திய வரலாற்றில் கொந்தளிப்பு நிறைந்த சமன் குலைந்த பிரிவினையின் வெறி மிகுந்த காலம். இயல்பாகவே தன் மனசாட்சியின் குரலைப்பின்பற்றி படைப்பு நேர்மை மிக்க கதைகளை எழுதியவர் மண்ட்டோ. உதயசங்கரின் கலையுள்ளம் மண்ட்டோவின் மனவுலகை முழுமையாகவும் ஆழமாகவும் உள்வாங்கி இக்கதைகளின் மொழியாக்கத்தில் முனைப்புடன் இயங்கியிருப்பதின் வெளிப்படை இந்தத் தொகுப்பு.

” சாதத் ஹசன் என்ற மனிதனை அவனுடைய சிந்தனைகளை செயல்களை அவனுடைய குடும்பத்தார், நண்பர்கள் யாரும் புரிந்து கொள்ளவில்லை. அவனை ஒரு பைத்தியக்காரனாகவே நினைத்தார்கள். ஆனால் மண்ட்டோ என்ற படைப்பாளியை தன் ஊனை உருக்கி உயிரைச்செலுத்தி அவன் படைத்த மகத்தான படைப்புகளை உலகம் இன்னமும் கொண்டாடுகிறது.” என்கிறார் உதயசங்கர். ஆம் உண்மை தான். முன்பு ராமாநுஜமும் இப்போது உதயசங்கரும் மொழிபெயர்த்துத் தந்திருக்கும் படைப்புகளின் வழியாக நாம் மண்ட்டோ என்ற மகத்தான படைப்பாளியின் மன உலகிற்குள் பிரவேசித்து உலாவி வருவதற்கு முடிந்திருக்கிறது.

“ நாமே அறியாத நம் மனதின் அத்த்னை மூலை முடுக்குகளிலும் பயணித்து அங்கே கொட்டிக் கிடக்கும் சாக்கடையையும், சகதியையும் அள்ளியெடுத்து வெளியே எறிந்து சுத்தப்படுத்துகிறான் கலைஞன். அங்கே கலையின் பொன்னொளியால் அன்பெனும் சுடரை ஏற்றுகிறான்…” என்று பொருத்தமான, தேர்ந்த சொற்களால் உதயசங்கர் மண்ட்டோவிற்குப் புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

இத்தொகுப்புக் கதைகளில் ஒரு எழுத்தைக்கூட மனம் நெகிழாமல் பதறாமல் ஆத்திரப்படாமல், வெறுக்காமல், நேசிக்காமல், சாதாரணமாக உங்களால் கடந்து போய் விட முடியாது. அந்த அளவிற்கு உயிர்ச்சத்து நிரம்பிய வலிமைமிக்க வாழ்க்கையின் உக்கிரங்களாகிய எரிமலை வெடித்துச் சிதறிப் பிரவாகமெடுத்ததைப் போன்ற கதைகள் இவை!

நன்றி- உங்கள் நூலகம் மார்ச் 2014

Thursday 15 May 2014

கொசுமாமாவும் கொசுமாமியும் பாயாசம் செய்ஞ்ச கதை

உதயசங்கர்

mosquito

ஒரு ஊரில் கொசுமாமாவும், கொசுமாமியும், ஒரு குட்டையில் குடித்தனம் நடத்தி வந்தார்கள். ஒரு நாள் வெளியே ஊரைச் சுற்றிப்பார்த்து விட்டு வந்த கொசுமாமாவுக்கு பாயாசம் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்து விட்டது. உடனே கொசுமாமா கொசுமாமியிடம்

“ பாயாசம் சாப்பிட வேணும்… உடனே நீயும் செய்ய வேணும் “

என்று ராகத்துடன் பாடியது. அதைக் கேட்ட கொசுமாமி,

“ பாயாசம் செய்வதற்கோ பானையிலோ அரிசியில்லை..” என்று பதில் ராகம் பாடியது. உடனே கொசுமாமா விர்ரெனப்பறந்து நெல்வயலுக்குச் சென்றது. அங்கே முற்றிய நெற்கதிர்கள் தலை சாய்த்து கிடந்தன. அதில் ஒரு நெல்லிடம் போய்,

“ பாயாசம் செய்ய வேணும்.. பானையிலோ அரிசியில்லை.. முற்றிய நெல்லே நீ என்னுடன் வருவாயா? “

என்று கேட்டது. அதைக் கேட்ட நெல்,

“ என்னை வளர்த்த கதிரைக் கேள் கொசுமாமா..”

என்று சொல்லியது. கொசுமாமா நெற்கதிரிடம் சென்று,

” பாயாசம் செய்ய வேணும்.. பானையிலோ அரிசியில்லை.. முற்றிய நெல்லே.. நெல்லை வளர்த்த கதிரே எனக்கு ஒரு நெல் தரவேணும்…”

என்று கேட்டது. அதைக்கேட்ட நெற்கதிர்,

”.. என்னை வளர்த்த வயலிடம் போய்க் கேள் கொசுமாமா..”

என்றது. உடனே கொசுமாமாவும் வயலிடம் போய்,

“ பாயாசம் செய்ய வேணும்..பானையிலோ அரிசியில்லை… முற்றிய நெல்லே.. நெல்லை வளர்த்த கதிரே.. கதிரை வளர்த்த வயலே எனக்கு ஒரு நெல் தரவேணும்…”

என்று கேட்டது. அதற்குத் தண்ணீரும்,

“.. எனக்கு உயிர் கொடுத்த நீரிடம் கேள் கொசுமாமா….”

என்று சொல்லியது.

உடனே கொசு மாமாவும் நீரிடம் போய்,

“ பாயாசம் செய்யவேணும்.. பானையிலோ அரிசியில்லை.. முற்றிய நெல்லே.. நெல்லை வளர்த்த கதிரே.. கதிரை வளர்த்த வயலே வயலுக்கு உயிர் கொடுத்த நீரே.. எனக்கு ஒரு நெல் தர வேணும்..”

என்று கேட்டது. அதற்கு நீர் ,

“ நிலத்தை உழுது நீர் பாய்ச்சி பயிர் வளர்த்த உழவனிடம் கேள் கொசுமாமா..”

என்று சொல்லியது.

அங்கிருந்து பறந்த கொசுமாமா உழவன் காதில் போய்,

“ பாயாசம் செய்ய வேணும்..பானையிலோ அரிசியில்லை.. முற்றிய நெல்லே.. நெல்லை வளர்த்த கதிரே.. கதிரை வளர்த்த வயலே… வயலுக்கு உயிர் கொடுத்த நீரே.. உழுது நீர்பாய்ச்சி பயிர் வளர்த்த உழவரே.. எனக்கு ஒரு நெல் தரவேணும்…”

என்று கேட்டது. அதற்கு அந்த உழவன்,

“ நான் சொல்வதை நீ செய்ய வேண்டும் கொசுமாமா..”

என்று சொன்னார். கொசுமாமாவும் ,

“ சொல்லுங்கள் உழவரே… தட்டாமல் செய்திடுவேன்…”

என்று சொல்லியது. உழவரும்,

“ குட்டையிலே குடித்தனம் நீ செய்யக்கூடாது கொசுமாமா… குழந்தைகளை கொசுமாமி கடிக்கக்கூடாது கொசுமாமா.. தூங்கும்போது தொந்திரவு செய்யக் கூடாதுகொசுமாமா..சம்மதமா சொல்லு..கொசுமாமா…”

என்று சொன்னார். உடனே கொசுமாமா

“ பாயாசம் செய்ய வேணும்..பானையிலோ அரிசியில்லை.. நிலத்தை உழுது நீர்பாய்ச்சி பயிர் வளர்த்த உழவரே..நீர் சொன்னபடி செய்திடுவேன்…”

என்று சொல்லியது. உடனே உழவர் நீரிடம் சொல்ல, நீர் வயலிடம் சொல்ல, வயல் கதிரிடம் சொல்ல, கதிர் நெல்லிடம் சொல்ல, நெல்லும் கொசுமாமாவுடன் புறப்பட்டுச் சென்றது. நெல்லைக் கூட்டிச் சென்ற கொசுமாமா, கொசுமாமியிடம்,

“ பாயாசம் செய்ய வேண்டும்.கொசுமாமி.. பானை நிறைய அரிசி உண்டு.. கொசுமாமி..”

என்று பாடியது. கொசுமாமியும், “ பாயாசம் செய்திடுவேன்.. கொசுமாமா.. பானை நிறைய அரிசி உண்டு. கொசுமாமா…” என்று பதில் சொன்னாள். கொசுமாமாவும் கொசுமாமியும் பாயாசம் செய்து ருசியாக சாப்பிட்டு குசியாகப் பறந்து போனார்கள்.

கதை சொன்னவர்- உ.மல்லிகா

Sunday 11 May 2014

கோடைகாலம் கொடுங்காலமா?

summer

உதயசங்கர்

ஒவ்வொரு கோடைகாலத்திலும் பெரும்பாலானவர்கள் “ யப்பா..இந்த வருஷம் வெயில் அதிகமப்பா…தாங்கமுடியல..” என்று சொல்வதைக் கேட்கலாம். புவிவெப்பமயமாதலால் ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை கூடுவது உணமைதான் என்றாலும் கோடைகாலமே வராமல் போய்விட்டால் என்னாகும் என்று யோசித்துப் பாருங்கள். இயற்கையின் சுழற்சியில் பருவங்கள் மாறி மாறி வந்து கொண்டிருப்பதால் பூமியில் உயிர்கள் ஜீவித்திருக்கின்றன. ஒரே பருவகாலம் நீடித்திருந்தால் புவியில் பல்லுயிர்ப்பெருக்கம் நிகழாது. கோடை, குளிர், வசந்தம், மழை, என்று இயற்கை சுழன்று பூமியை உயிர்கள் வாழ்வதற்கான இடமாக நிலைத்திருக்க வைக்கிறது.

நமது உடலின் கழிவுகள், சிறுநீரகம் மூலம் சிறுநீராக, வியர்வைச்சுரப்பிகள் மூலம் வியர்வையாக, மலக்குடல் மூலம் மலமாக வெளியேறுகிறது. , கோடைகாலத்தில் உடலின் வெப்பநிலை உயர்வதால், நம்முடைய உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்துக் கொள்ள நமது உடல் மருத்துவர் வியர்வைச் சுரப்பிகளை இயங்க வைக்கிறார். வியர்வைச்சுரப்பிககளின் மூலம் உடலின் கழிவுகளை வெளியேற்றும் அதே வேளையில் உடல் வெப்பநிலையை சமச்சீராக வைத்துக் கொள்ளச் செய்கிறார். அப்போது உடலிலிருந்து அதிக நீர் வெளியேறுவதால் தாக உணர்ச்சி ஏற்படுகிறது. நல்ல சுத்தமான தண்ணீரைக் குடிப்பது மட்டும் தான் வியர்வையின் மூலம் ஏற்படும் தண்ணீர் இழப்பை ஈடுகட்டுவதற்கான முதன்மையான வழி. எனவே மற்ற காலங்களை விட கோடைகாலத்தில் அதிகமான தண்ணீர் அருந்துவதின் மூலம் கோடைகாலத் தீவிர ( Acute diseases) நோய்களை பெரும்பாலும் தவிர்த்து விடலாம்..

பொதுவாகக் கோடைகாலத்தில் வரக்கூடிய நோய்களாக, ஜலதோஷம், காய்ச்சல், வயிற்றோட்டம், சிறுநீரகக்கல், நீர்க்கடுப்பு, வியர்க்குரு, வேனல்கட்டி, வெப்பமயக்கம், போன்றவற்றைச் சொல்லலாம்.

வெயிலில் போய்விட்டு வந்தவுடன் வியர்வை அடங்குமுன் குளிர்ந்த நீரைக் குடிப்பது பழக்கம். குளிர்ந்த நீர் தொண்டையில் இறங்கும்போது அவ்வளவு சுகமாக இருக்கும். ஆனால் அதனால் தாகம் அடங்காது. அது மட்டுமல்ல வெயிலில் அலைந்து கொண்டிருக்கும் போது உடலின் வெப்பநிலையைச் சமச்சீராக வைத்துக் கொள்ள வியர்வைச் சுரப்பிகள் செய்யும் வேலை முடியும் முன்பே வெளியிலிருந்து உடலுக்குள் செல்லும் குளிர்நீர் வியர்வைச் சுரப்பிகளின் வேலையை நிறுத்திவிடுகிறது. ரத்தக்குழாய்கள் குளிர்ந்து சுருங்கி விடுகிறது. ரத்தக்குழாய்கள் திடீரெனச் சுருங்குவதால் வியர்வைச்சுரப்பியின் வேலை தடைப்படுகிறது. வெளியேறும் நீர் அப்படியே வெளியேறவும் முடியாமல் உள்ளே போகவும் முடியாமல் திகைத்து தோலின் துவாரங்களை அடைத்து வியர்க்குருவை உண்டுபண்ணுகிறது. இந்த வியர்க்குருவே சிலநேரம் வேனல்கட்டியாக மாறுகிறது. இதெல்லாம் உடலின் வெப்பம் வெளியேற முடியாமல் போகும்போது ஏற்படும் தொந்திரவுகள். அதேபோல உடலின் திடீர்சீதோஷ்ண மாற்றத்தினால் சளிச்சவ்வுகள் அதிக நீரை உற்பத்தி செய்ய ஜலதோஷம் உண்டாகிறது. சிலநேரங்களில் ஜலதோஷக்காய்ச்சல் வரும். எனவே வெயிலில் போய்விட்டு வந்தவுடன் உடனே குளிர்ந்த நீரைப் பருகாமல் சற்று நேரம் கழித்து வியர்வை அடங்கியதும் பருகினால் உடல் தன் சமச்சீரான நிலைக்கு வந்து விடும். அதுவும் குளிர்பதனப்பெட்டியில் உள்ள நீரையோ, மென்பானங்களையோ அருந்தவே கூடாது.

தாகம் அடங்குவதற்கு, இளநீர், மோர், பானக்காரம், தர்பூசணி, நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கள் சாப்பிடுவது நல்லது.

கோடைகாலத்தில் உடலிலுள்ள நீர் வெளியேறும்போது நீர்ச்சத்து குறைந்து விடுகிறது. அதற்கு ஈடாக நீரை அருந்தாவிடில் ரத்தத்திலுள்ள உப்புச்சத்துகளை சிறுநீரகம் வெளியேற்றும்போது சிறுநீரகக்குழாய்களிலோ, சிறுநீரகத்திலோ படிகமாகத் தங்கி கல்லாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே சிறுநீரகக்கற்கள் உருவாகாமல் தடுக்க கோடைகாலத்தில் அதிகமான நீர் இளநீர், மோர், அருந்த வேண்டும்.

கோடைகாலத்தில் உணவுப்பொருட்கள் வெப்பநிலை உயர்வு காரணமாக சீக்கிரம் கெட்டுப்போய்விடும். எனவே கெட்டுப்போன உணவை, வீட்டிலோ, ஹோட்டலிலோ சாப்பிட்டால் கெட்டுப்போன உணவிலுள்ள விஷத்தை வெளியேற்ற வயிற்றோட்டத்தை உடல்மருத்துவர் ஏற்படுத்துகிறார். கோடைகாலத்தில் கெட்டுப்போன உணவைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஒருவேளை அப்படிச்சாப்பிட்டதால் வருகின்ற வயிற்றோட்டத்துக்கு உப்பும்சர்க்கரையும் சேர்ந்த கரைசல், நீர், எளிய உணவு, ஓய்வு இவையே போதுமானது.

உடல்வெப்பம் அதிகமாவதாலும் நீர் சரியாகக்குடிக்காததாலும் சிறுநீர் பிரிவது குறைந்து சிறுநீர்க்குழாய்த்தொற்று ஏற்படும். இதன் விளைவாக நீர்க்கடுப்பு வருகிறது. இதைத் தவிர்க்கவும் அதிகமான நீர் அருந்த வேண்டும்.

அதிகநேரம் வெயிலில் வேலை செய்தால் உடலின் வெப்பநிலை அதிகரிப்பதுடன், நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டு இதயத்துக்கும் மூளைக்கும் செல்லும் ரத்தம் தடைபடுவதினால் வெப்பமயக்கம் ஏற்படுகிறது. மரணத்தை விளைவிக்கக்கூடியது. எனவே தொடர்ந்து இரண்டுமணி நேரத்துக்கு மேல் வெயிலில் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

எனவே கோடைகாலத்தை கொடுங்காலமாக நினைக்கவேண்டியதில்லை. இயற்கையின் சுழற்சியை வரவேற்போம். கோடையின் நிழல்தரும் குளிரை அநுபவிப்போம். மரங்கள் பூப்பதற்கும், காய்ப்பதற்கும், வெப்ப சுழற்சி அவசியம். கோடையில் நமது ஆடை கைத்தறி, கதர், காட்டனாக இருக்கட்டும். குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். இளநீர், மோர், பானக்காரம், பழங்கள், தர்பூசணி, நீர்ச்சத்துள்ள காய்கறிகள், நிறைய சாப்பிட்டுப் பழகுவோம்.

கோடையை அநுபவிப்போம். கொளுத்தும் வெயிலை சுட்டுப்பொசுக்குவோம்.

 

நன்றி- இளைஞர் முழக்கம் மே 2014

Saturday 10 May 2014

குழந்தைகளின் கதை உலகம் பெரிது….

DSC01118 புத்தக மதிப்புரை

குழந்தைகளின் கதை உலகம் பெரிது….

வீரபத்ர லெனின்

குழந்தைகள் நம்மிடம் கதை கேட்டால் ஒரு ஊருல ஒரு ராஜா என்று ஆரம்பித்து அவர்கள் தூங்கும் வரை பல கதைகளை அடுக்கிக் கொண்டே போவோம். இப்படிப் போகும்போது அவர்களும் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தியன் போல பல கேள்விகளை கேட்பார்கள். அவற்றுக்கும் பதில்களைச் சொல்லிக் கொண்டே போவோம்.

நாம் சிறு வயதில் கேட்ட கதைகளை ஞாபகப்படுத்திக் கூறுவோம். இல்லையென்றால் படித்ததில் பிடித்ததைச் சொல்லுவோம். பலபேருக்கு ஒரு சில கதைகளுக்கு மேல் தெரியாது. சொன்ன கதைகளையே நாம் சொல்லும்போது, “ இதத்தான நேத்தும் சொன்னீங்க, அதத்தானே அன்னைக்கு சொன்னீங்க..” எனக் கேட்டு நம்மைத் துளைத்தெடுத்து விடுவார்கள்.

குழந்தைகள் கதைதானே கேட்கிறார்கள் நாம் ஏதாவது ஒன்றை அடித்து விட வேண்டியது தான் என்ற எண்ணமும் நமக்கு இருக்கக்கூடாது. ஏனென்றால் நாம் கூறிய கதைகள் அவர்கள் மனதில் பசுமரத்தில் ஆணிபோல் பதிந்து விடும். நாம் சொல்லும் கதைகள் பயனுள்ள அறிவை விரிவு செய்கிற விதத்தில் இருக்க வேண்டும்.

இப்படிச் சொல்லும் கதைகளுக்கு பாடப்புத்தகங்களில் உள்ள கதைகளோடு மற்ற பிற கதைப்புத்தகங்களையும் படிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதை எளிமைப்படுத்தும் விதத்தில் பாரதி புத்தகாலயம் “ புக்ஸ் ஃபார் சில்ரன் “ என 15 தலைப்புகளில் வண்ணப்படங்களுடன் குழந்தைகளுக்கான கதைகளை சிறு புத்தகக்கொத்தாக வெளியிட்டுள்ளது.

என்னுடைய காக்கா, சின்னத்தேனீ பாடுது, மாடப்புறாவின் முட்டை தொலைந்து போன கதை, புலி வருது புலி, ஐந்து பூனைக்குட்டிகளின் கதை, கொள்ளு பிறந்த கதை, யானை வழி, யானையும் தையல்காரனும், மல்லனும் மகாதேவனும், யானையும் அணிலும், மண்ணாங்கட்டியும் காய்ந்த இலையும், வாலறுந்த குரங்கின் கதை, ஆமையும் குரங்கும் வாழை நட்ட கதை, கொக்கும், கொசுவும், மரங்கொத்தியும் உப்பு விற்ற கதை, இந்த 15 தலைப்புகளில், படித்தால் குழந்தைகளுக்கு எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் உதயசங்கர் அழகிய தமிழைக் கையாண்டுள்ளார். புத்தகத்தில் உள்ள ஓவியங்கள் அனைத்தும் சிறப்பு.

மல்லனும் மகாதேவனும் என்ற கதையில் இரண்டு நண்பர்கள் காட்டுவழியாகச் செல்லும்போது கரடி ஒன்று வந்து விடுகிறது. இதனால் இருவரும் பயந்து விடுகின்றனர். மல்லன் கரடியிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொள்கிறான். மகாதேவனோ என்ன செய்வது என்று தெரியாமல் தன் சிறுமூளையைக் கசக்கி இறந்தாற் போல் நடித்து தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்கிறான். இந்தக் கதையில் பிரச்னைகள் வந்தால் பயந்து விடாமல் அதை எப்படிச் சமாளிப்பது என்பதையும் ஆபத்து என்றால் நண்பனை விட்டு விட்டு நாம் மட்டும் தப்பித்தால் போதும் என்ற கெட்ட எண்ணம் இருக்கக்கூடாது என்பதையும் உணர்த்துகிறது.

இக்கதையைக் குழந்தைகள் கேட்டாலும், படித்தாலும், அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையும் மற்றவர்களை எந்தச் சந்தர்ப்பத்திலும் கைவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் அந்தப் பிஞ்சுகள் மனதில் பதியும்.

மண்ணாங்கட்டியும் காய்ந்த இலையும், என்ற கதை ஒருவருக்குப் பிரச்னை என்றால் அவரை எப்படி காப்பாற்றுவது என்று கூறுகிறது. சின்னத்தேனீ பாடுது என்ற சிறிய கொத்தில் பாடுது, கேளு பாப்பா கேளூ, என்று குழந்தைகளைக் கேள்வி கேட்கும் அறிவைப் பாடல் மூலம் தூண்டுகிறார் உதயசங்கர்.

குழந்தைகளின் படிப்பு ஆர்வத்தைத் தூண்ட பெற்றோர்கள் இந்த 15 புத்தகக்கொத்தை வாங்கித் தர வேண்டும். பாரதி புத்தகாலயம் ஏற்கனவே இதுபோல் சில கதைப் பூங்கொத்துகளை வெளியிட்டுள்ளன. நல்ல முயற்சி. தொடர வேண்டும். நாமும் குழந்தைகளுக்கு விளையாட்டுச் சாமான்கள் வாங்கிக் கொடுப்பதுபோல் புத்தகங்களை வாங்கிக் கொடுக்கும் கலாச்சாரத்தைப் பின்பற்ற வேண்டும். கதைகளை விரும்பாத குழந்தைகள் இல்லை. இத்தகைய புத்தகங்களின் தேவை வற்றுவதில்லை.

15 நாடோடிக் கதைகள்

ஆசிரியர்கள்- கெ.டி.ராதாகிருஷ்ணன், சுஜா,சூசன், ஜார்ஜ், இ.என்.ஷீஜா, விமலாமேனன், ராமகிருஷ்ணன்குமரநல்லூர்,

தமிழில்- உதயசங்கர்

வெளியீடு- புக்ஸ் ஃபார் சில்ரன்

7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை-600018

விலை-ரூ.525/