Thursday 15 May 2014

கொசுமாமாவும் கொசுமாமியும் பாயாசம் செய்ஞ்ச கதை

உதயசங்கர்

mosquito

ஒரு ஊரில் கொசுமாமாவும், கொசுமாமியும், ஒரு குட்டையில் குடித்தனம் நடத்தி வந்தார்கள். ஒரு நாள் வெளியே ஊரைச் சுற்றிப்பார்த்து விட்டு வந்த கொசுமாமாவுக்கு பாயாசம் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்து விட்டது. உடனே கொசுமாமா கொசுமாமியிடம்

“ பாயாசம் சாப்பிட வேணும்… உடனே நீயும் செய்ய வேணும் “

என்று ராகத்துடன் பாடியது. அதைக் கேட்ட கொசுமாமி,

“ பாயாசம் செய்வதற்கோ பானையிலோ அரிசியில்லை..” என்று பதில் ராகம் பாடியது. உடனே கொசுமாமா விர்ரெனப்பறந்து நெல்வயலுக்குச் சென்றது. அங்கே முற்றிய நெற்கதிர்கள் தலை சாய்த்து கிடந்தன. அதில் ஒரு நெல்லிடம் போய்,

“ பாயாசம் செய்ய வேணும்.. பானையிலோ அரிசியில்லை.. முற்றிய நெல்லே நீ என்னுடன் வருவாயா? “

என்று கேட்டது. அதைக் கேட்ட நெல்,

“ என்னை வளர்த்த கதிரைக் கேள் கொசுமாமா..”

என்று சொல்லியது. கொசுமாமா நெற்கதிரிடம் சென்று,

” பாயாசம் செய்ய வேணும்.. பானையிலோ அரிசியில்லை.. முற்றிய நெல்லே.. நெல்லை வளர்த்த கதிரே எனக்கு ஒரு நெல் தரவேணும்…”

என்று கேட்டது. அதைக்கேட்ட நெற்கதிர்,

”.. என்னை வளர்த்த வயலிடம் போய்க் கேள் கொசுமாமா..”

என்றது. உடனே கொசுமாமாவும் வயலிடம் போய்,

“ பாயாசம் செய்ய வேணும்..பானையிலோ அரிசியில்லை… முற்றிய நெல்லே.. நெல்லை வளர்த்த கதிரே.. கதிரை வளர்த்த வயலே எனக்கு ஒரு நெல் தரவேணும்…”

என்று கேட்டது. அதற்குத் தண்ணீரும்,

“.. எனக்கு உயிர் கொடுத்த நீரிடம் கேள் கொசுமாமா….”

என்று சொல்லியது.

உடனே கொசு மாமாவும் நீரிடம் போய்,

“ பாயாசம் செய்யவேணும்.. பானையிலோ அரிசியில்லை.. முற்றிய நெல்லே.. நெல்லை வளர்த்த கதிரே.. கதிரை வளர்த்த வயலே வயலுக்கு உயிர் கொடுத்த நீரே.. எனக்கு ஒரு நெல் தர வேணும்..”

என்று கேட்டது. அதற்கு நீர் ,

“ நிலத்தை உழுது நீர் பாய்ச்சி பயிர் வளர்த்த உழவனிடம் கேள் கொசுமாமா..”

என்று சொல்லியது.

அங்கிருந்து பறந்த கொசுமாமா உழவன் காதில் போய்,

“ பாயாசம் செய்ய வேணும்..பானையிலோ அரிசியில்லை.. முற்றிய நெல்லே.. நெல்லை வளர்த்த கதிரே.. கதிரை வளர்த்த வயலே… வயலுக்கு உயிர் கொடுத்த நீரே.. உழுது நீர்பாய்ச்சி பயிர் வளர்த்த உழவரே.. எனக்கு ஒரு நெல் தரவேணும்…”

என்று கேட்டது. அதற்கு அந்த உழவன்,

“ நான் சொல்வதை நீ செய்ய வேண்டும் கொசுமாமா..”

என்று சொன்னார். கொசுமாமாவும் ,

“ சொல்லுங்கள் உழவரே… தட்டாமல் செய்திடுவேன்…”

என்று சொல்லியது. உழவரும்,

“ குட்டையிலே குடித்தனம் நீ செய்யக்கூடாது கொசுமாமா… குழந்தைகளை கொசுமாமி கடிக்கக்கூடாது கொசுமாமா.. தூங்கும்போது தொந்திரவு செய்யக் கூடாதுகொசுமாமா..சம்மதமா சொல்லு..கொசுமாமா…”

என்று சொன்னார். உடனே கொசுமாமா

“ பாயாசம் செய்ய வேணும்..பானையிலோ அரிசியில்லை.. நிலத்தை உழுது நீர்பாய்ச்சி பயிர் வளர்த்த உழவரே..நீர் சொன்னபடி செய்திடுவேன்…”

என்று சொல்லியது. உடனே உழவர் நீரிடம் சொல்ல, நீர் வயலிடம் சொல்ல, வயல் கதிரிடம் சொல்ல, கதிர் நெல்லிடம் சொல்ல, நெல்லும் கொசுமாமாவுடன் புறப்பட்டுச் சென்றது. நெல்லைக் கூட்டிச் சென்ற கொசுமாமா, கொசுமாமியிடம்,

“ பாயாசம் செய்ய வேண்டும்.கொசுமாமி.. பானை நிறைய அரிசி உண்டு.. கொசுமாமி..”

என்று பாடியது. கொசுமாமியும், “ பாயாசம் செய்திடுவேன்.. கொசுமாமா.. பானை நிறைய அரிசி உண்டு. கொசுமாமா…” என்று பதில் சொன்னாள். கொசுமாமாவும் கொசுமாமியும் பாயாசம் செய்து ருசியாக சாப்பிட்டு குசியாகப் பறந்து போனார்கள்.

கதை சொன்னவர்- உ.மல்லிகா

No comments:

Post a Comment