Tuesday 12 October 2021

கத்தரிக்காய் குள்ளனும் கழுகுமலை பூதமும் - நாடோடிக்கதை

 

கத்தரிக்காய் குள்ளனும் கழுகுமலை பூதமும்

உதயசங்கர்


ஒரு ஊரில் ஒரு பாட்டியும் தாத்தாவும் தனியாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு எட்டு மக்கமார் இருந்தாலும் அவர்கள் எல்லாரும் கலியாணம் முடிந்ததும் கிராமத்தை விட்டு நகரத்துக்குப் போய் விட்டார்கள். அதனால் பெருசுகள் ரெண்டும் ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பார்த்துக் கொண்டு கிடந்தார்கள். ஒரு காலத்தில் நல்ல கெதியாக நிலபுலன்களோடு இருந்தவர்கள் தான். தங்களுடைய பிள்ளைகளுக்காக அந்த நிலபுலன்களையெல்லாம் விற்று அவர்களைப் படிக்க வைத்து வேலை வாங்கிக்கொடுத்து கலியாணம் முடித்து விட்டார்கள். இப்போது அந்த கிராமத்தில் அல்லுசில்லான வேலைகளைப் பார்த்துக் கொண்டு அதில் கிடைக்கிற தானிய தெவசங்களை வாங்கி சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு கிடந்தார்கள்.

ஊரிலுள்ள சொந்தக்காரர்கள் அவர்களைச் சாப்பிடக் கூப்பிட்டாலும் போகமாட்டார்கள். உழைத்துச் சாப்பிட வேண்டும் என்று நினைத்தார்கள். கூலிக்கு வேலைபார்த்து கிடைப்பதைக் கொண்டு வாழவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். பாட்டி பயிர்களில் களையெடுப்பாள். அருகு வெட்டுவாள். தாத்தா ஏர் ஓட்டுவார். விதை விதைப்பார். இப்படியாக நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் தாத்தாவுக்கு ஒரு ஆசை வந்தது. கத்தரிக்காய் குழம்பு வைத்து சாப்பிடவேண்டும். ஒரு வாரமாகக் கம்பங்கூழே சாப்பிட்டுச் சாப்பிட்டு நாக்குச் செத்துப் போச்சு. நெல்லுச்சோறு பொங்கி கத்தரிக்காய் காரக்குழம்பு வைத்து ஒரு மொக்கு மொக்கவேண்டும் என்று நினைத்தார். பாட்டியிடம் சொன்னார். பாட்டிக்கும் ஆசை வந்து விட்டது. அடுக்குப்பானையில் கொஞ்சம் நாட்டுச்சம்பா அரிசி கிடந்தது. இரண்டு பேருக்கும் அது போதும். கத்தரிக்காய் வேண்டுமே. ஊருக்கு வடகடைசியில் அவர்களுடைய பங்காளி வீட்டுத் தோட்டத்தில் கத்தரிக்காய் போட்டிருந்தார்கள்.

மறுநாள் பாட்டி அந்தத் தோட்டத்துக்குப் போய் பங்காளி வீட்டுக்காரர்களிடம் குசலம் விசாரித்து விட்டு அப்படியே ஒரு பத்து பிஞ்சு கத்தரிக்காய்களைப் பறித்து மடியில் கட்டிக்கொண்டு வந்தாள். கத்தரிக்காய்களை ஒரு ஏனத்தில் எடுத்து வைத்து விட்டு வீட்டுக்கு வந்து விறகு அடுப்பில் தாத்தா பொறுக்கிக்கொண்டு வந்திருந்த காய்ந்த சுள்ளிகளை வைத்து சோறு பொங்கினாள். சோறு பொங்கிக்கொண்டே கத்தரிக்காய்களை நறுக்கி வைக்க எடுத்தாள். பத்து கத்தரிக்காய்களுக்கு ஒன்பது கத்தரிக்காய்கள் தான் இருந்தது. பாட்டி மடிச்சேலையை உதறிப் பார்த்தாள். வீடு முழுவதும் தேடிப்பார்த்தாள். அவளுக்கே சந்தேகம் வந்து விட்டது. தான் பறித்து வந்தது பத்தா? ஒன்பதா?

அப்போது அடுப்புக்குப் பின்னாலிருந்து அய்யய்யோ சுடுதே அப்பப்பா சுடுதே என்று சத்தம் வந்தது. பாட்டி அடுப்புக்குப் பின்னல் பார்த்தாள். அங்கே ஒரு கத்தரிக்காய் சூடு தாங்காமல் குதித்துக் கொண்டிருந்தது. பாட்டி அந்த கத்தரிக்காயை எடுத்து குளிர்ந்த தண்ணீரில் போட்டாள். கத்தரிக்காய் அதில் நீச்சலடித்துக்கொண்டு மிதந்தது. பாட்டி எல்லாக்கத்தரிக்காய்களையும் நறுக்க எடுக்கும்போது அந்தக் கத்தரிக்காய் மட்டும்,

“ பாட்டியம்மா பாட்டியம்மா

பாசமுள்ள பாட்டியம்மா

அண்ணனுக்கு அண்ணனாக

தம்பிக்குத் தம்பியாக

மகனுக்கு மகனாக

பேரனுக்குப் பேரனாக

உங்க கூட நானிருப்பேன்

என்னை மட்டும் நறுக்காதீங்க

பாட்டியம்மா பாட்டியம்மா

என்று பாட்டுப்பாடியது. அதைக்கேட்ட பாட்டியும் பதிலுக்குப் பாடினாள்.

குட்டிக்குட்டிக் கத்தரிக்கா

குள்ளக்குள்ளக் கத்தரிக்கா

தண்ணீ எடுக்கணும்

தவிடு பொடைக்கணும்

களை எடுக்கணும்

விதை விதைக்கணும்

விறகு பொறுக்கணும்

வீட்டு வேலை எல்லாத்தையும்

வேளாவேளைக்குச் செய்யணும்

என்று பதில் பாட்டுப்பாடினாள். கத்தரிக்காய் குள்ளனுக்கு மகிழ்ச்சி.

இட்டவேலை தட்டமாட்டேன் பாட்டியம்மா

இன்று முதல் நான் உனக்குப் பேரனம்மா

என்று சொல்லி வேலை பார்க்க ஆரம்பித்து விட்டது. பாட்டி நாள் முழுவதும் பூனாம்பூனாம் என்று செய்கிற வேலைகளையெல்லாம் கத்தரிக்காய் குள்ளன் அஞ்சு நொடியில் செய்து முடித்தான். வேலை முடிஞ்சதும் ஊர்சுற்றிப்பார்க்கக் கிளம்பி விடுவான்.

அப்போது  பக்கத்து கிராமத்தில் உள்ள கழுகுமலையில் கழுகின் தலையுடனும் பிரம்மாண்டமான இறக்கைகளுடனும் ஒரு பூதம் வாழ்ந்து வந்தது. அந்த பூதம் அங்கிருந்த குழந்தைகளையெல்லாம் தூக்கிக் கொண்டு போய் விட்டது என்று மக்கள் புலம்பினார்கள்.  அந்த பூதத்தைப் பார்த்ததுமே குழந்தைகள் வசியமாகி அப்படியே பின்னாலேயே போய் விடுகிறார்கள் என்றும் அதன்பிறகு அந்தக்குழந்தைகள் அந்த பூதத்துக்கு அடிமைகளாகவே வாழவேண்டியது தான் என்று அந்த ஊர்க்காரர்கள் சொன்னார்கள். கத்தரிக்காய் குள்ளனுக்குப் பாவமாக இருந்தது. அந்தக் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தான்.

மறுநாள் தாத்தா பாட்டியிடம், ஒரு நெல், ஒரு புல், ஒரு கல், வேண்டும் என்று கேட்டான் கத்தரிக்காய் குள்ளன். தாத்தாவும் பாட்டியும் அவன் கேட்டதைக் கொடுத்தார்கள். எல்லாவற்றையும் தன் மடியில் கட்டிக்கொண்டு புறப்பட்டான்.

போகும்வழியில் ஒரு தீ எறும்பு வந்தது. அது கத்தரிக்காய் குள்ளனைப் பார்த்து,

“ எனக்கு ரொம்பப்பசியா இருக்கு.. எனக்கு அந்த நெல்லைத் தருகிறாயா? “ என்று கேட்டது. உடனே கத்தரிக்காய் குள்ளன் அவனிடமிருந்த நெல்லைக் கொடுத்தான். அதைச்சாப்பிட்டா தீ எறும்பு,

“ நண்பா! நான் தீ எறும்புகளின் ராஜா… நல்ல நேரத்தில் நீ எனக்கு உணவளித்தாய்.. நீ எங்கு எப்போது நினைக்கிறாயோ அப்போது நான் அங்கு அப்போது வருவேன்..”

என்றது. கத்திரிக்காய் குள்ளனும் சரி என்று சொல்லிவிட்டு கழுகுமலை பூதத்தைத் தேடி நடந்தான். அப்போது ஒரு வெட்டுக்கிளி குறுக்கே வந்தது.

“ நண்பா! நீ வைத்திருக்கும் புல்லைத் தரமுடியுமா? நான் சாப்பிட்டு ரெண்டு நாட்களாகிறது.. ” என்றது. உடனே கொஞ்சமும் யோசிக்காமல் கத்தரிக்காய் குள்ளன் அந்தப்புல்லை எடுத்துக் கொடுத்தான். அதைச்சாப்பிட்ட வெட்டுக்கிளி,

“ நன்றி நண்பா! நீ எப்போது என்னை நினைத்தாலும் நான் அங்கு வருவேன்..” என்று சொன்னது. கத்தரிக்காய் குள்ளனும் சரி என்று சொல்லிவிடு கழுகுமலை பூதம் இருக்கும் மலையில் ஏறினான். கழுகுமலையின் உச்சியில் கழுகு வடிவத்தில் ஒரு கோட்டை இருந்தது. அந்தக் கோட்டையைச் சுற்றி காவலுக்கு நூறு கழுகுகள் வட்டமிட்டு சுற்றிக் கொண்டிருந்தன. என்ன செய்வது? என்று யோசித்தான் கத்தரிக்காய் குள்ளன். அப்போது ஒரு மலை எலி வந்தது.

“ நண்பா! உன்னிடமிருக்கும் கல்லைக் கொடுக்க முடியுமா? என்னுடைய வளையில் குட்டிகளுக்குப் பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறேன்.. “ என்றது. உடனே கத்தரிக்காய் குள்ளன் சரி என்று கொடுத்து விட்டான்.

“ நன்றி நண்பா.. உனக்கு என்ன உதவி வேண்டும் என்று சொல்.. நான் செய்கிறேன்..” என்று கேட்டது மலை எலி.

“ நான் கழுகுகளின் கண்களில் படாமல் கழுகுமலைக்கோட்டைக்குள் போகவேண்டும்… அதற்கு உதவி செய்வாயா? “ என்று கேட்டான் கத்தரிக்காய் குள்ளன்.

உடனே அந்த மலை எலி ஒன்றும் சொல்லாமல் வளைக்குள் சென்றது. பின்னர் திரும்பி வந்து கத்தரிக்காய் குள்ளனுக்கு முன்னால் செத்தமாதிரி விழுந்தது. பார்த்தால் அங்கங்கே எலிகள் செத்தமாதிரி கிடந்தன. அதைப் பார்த்த கோட்டையைக் காவல் காத்துக்கொண்டிருந்த நூறு கழுகுகளும்  அந்த எலிகளைச் சாப்பிடப் பறந்து வந்தன. அதுதான் சமயம் என்று கத்தரிக்காய் குள்ளன் கோட்டைக்குள் நுழைந்து விட்டான். கத்தரிக்காய் குள்ளன் கோட்டைக்குள் நுழைந்துதும் மலை எலி ஒரு சத்தம் கொடுத்தது. உடனே எல்லா எலிகளும் அருகிலிருந்த வளைக்குள் ஓடி ஒளிந்து கொண்டன. பறந்து வந்த கழுகுகள் ஏமாந்து போய் விட்டன.

கோட்டைக்குள் நுழைந்த கத்தரிக்காய் குள்ளன் கழுகுமலை பூதம் எங்கே இருக்கிறது என்று தேடினான். அப்போது ஒரு இடத்தில் குழந்தைகள் கூட்டமாய் இருந்தார்கள். அவர்களுக்கு முன் கழுகுமலை பூதம் உட்கார்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தான். அவனுடைய பேச்சைக்கேட்டு குழந்தைகள் சிரித்தார்கள். அழுதார்கள். அப்படிப் பேசிக்கொண்டே அவன் அவர்கள் ஒவ்வொருவராக தூக்கிச் சாப்பிட்டான். குழந்தைகள் சிரித்துக் கொண்டே அவனுடைய வாய்க்குள் போனார்கள். கத்தரிக்காய் குள்ளனுக்குக் கோபம் வந்தது. அவன் கழுகுமலை பூதத்துக்கு முன்னால் போய் நின்றான்.

“ ஏ பூதமே! குழந்தைகளை உடனே விடுதலை செய்! இல்லையென்றால் உன்னை அழித்து விடுவேன்..” என்றான் கத்தரிக்காய் குள்ளன். அவனைப் பார்த்த பூதம் ஏளனமாகச் சிரித்துக்கொண்டே,
“ டேய் குள்ளப்பயலே! நீயாவது என்னை அழிப்பதாவது.. ஒவ்வொரு குழந்தையாகச் சாப்பிட்டு இந்த உலகத்தில் குழந்தைகளே இல்லாமல் செய்து விடுவேன்.. ஏனென்றால் குழந்தைகள் தான் அன்பையும் நட்பையும் பாசத்தையும் நேசத்தையும் விதைக்கிறார்கள்..  அவர்கள் இல்லையென்றால் பெரியவர்கள் போட்டி பொறாமை வஞ்சகம் என்று சண்டை போட்டுக் கொண்டு வாழ்வார்கள்.. அதுதான் எனக்கு வேண்டும் நான் சுலபமாக இந்த உலகத்தை ஆண்டுகொள்வேன்… ஏகச்சக்கரவர்த்தியாகஇருப்பேன்.. ஹ்ஹ்ஹாஹ்ஹ்ஹா..” என்று கோட்டை அதிரச் சிரித்தான் கழுகுமலை பூதம்.

கத்தரிக்காய் குள்ளன் உடனே தீ எறும்புகளை நினைத்தான். தீ எறும்புகள் அந்தக் கோட்டையின் சுவர் இடுக்குகளின் வழியே படை படையாக வந்தன. அப்படியே கழுகுமலை பூதத்தின் கண்காது மூக்கு வாய் என்று எல்லாவழிகளிலும் லட்சக்கணக்கில் நுழைந்தன. கழுகுமலைப்பூதம் அலறினான். அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

“ ஐய்யோ எரியுதே ஐய்யோ எரியுதே.. ” என்று கத்தினான். அவனுடைய உடல் ஓட்டை ஓட்டையாகி உடைந்தது. உள்ளேயிருந்து அவன் சாப்பிட்ட குழந்தைகள் எல்லாரும் நலமுடன் வந்தார்கள். ஆனாலும் கழுகுமலை பூதம் சாகவில்லை. அப்போது கத்தரிக்காய் குள்ளன் வெட்டுக்கிளிகளை நினைத்தான். உடனே வெட்டுகிளிகள் கூட்டம் கூட்டமாக பறந்து வந்தன. அவை எல்லாம் சேர்ந்து கழுகுமலை பூதத்தின் உடலைத் தூக்கிக் கொண்டு போய் கடலில் போட்டன. கடலில் இருந்த திமிங்கிலங்கள் பூதத்தைக்கிழித்து தின்றன.

கத்தரிக்காய் குள்ளன் குழந்தைகள் படைசூழ கிராமத்துக்குத் திரும்பினான். பாட்டியும் தாத்தாவும் நாட்டு மக்களும் குழந்தைகளும் கத்தரிக்காய் குள்ளனை உச்சி மோந்து பாராட்டினார்கள்.

உலகில் அன்பும் பாசமும் நேசமும் நட்பும் தழைத்தோங்கியது.

நன்றி - வண்ணக்கதிர்


 

Saturday 9 October 2021

காப்பித்தண்ணியும் கழனித்தண்ணியும் – சிறார் கிராமியக்கதை

 

காப்பித்தண்ணியும் கழனித்தண்ணியும் –


சிறார் கிராமியக்கதை

உதயசங்கர்

அந்த ஊரிலேயே வசதியான சம்சாரிக்கு ரொம்ப நாளா குழந்தையில்லை. அந்தம்மா வயித்தில ஒரு புழு பூச்சி கூட உண்டாகலை. இவ்வளவு சொத்துபத்து இருந்தும் ஆண்டு அனுபவிக்க ஒரு பிள்ளை இல்லியேன்னு அந்தம்மாவுக்கு ஒரே வெசனம். நாம செத்தா கொள்ளிபோட ஒரு பிள்ளையில்லியேன்னு அந்த சம்சாரிக்கு கவலை. பிள்ளைக்காக அவுக போகாத கோயிலில்ல. வேண்டாத தெய்வமில்ல. செய்யாத வயணமில்ல. அக்னிச்சட்டி எடுத்தாக. கூழு காச்சி ஊத்துனாக. அங்கபிரதட்சணம் பண்ணுனாக. சோசியர்களைப் போய்க் கேட்டாக. சாமியார்களைப் போய்ப்பார்த்தாக. வைத்தியர்கள்கிட்ட போனாங்க. பத்தியம் இருந்தாக. ஆனா எதுவும் நடக்கல. ரெண்டுபேருக்கும் கொஞ்சம் கொஞ்சமா நம்பிக்கை குறைஞ்சி கிட்டே வந்தது.

கடசியில ஒரு டவுணுக்கு புதுசா வந்திருந்த ஒரு டாக்டரம்மாவப் போய்ப்பார்த்தாக. அந்தம்மா என்னெல்லாமோ டெஸ்டுகளை எடுக்கச்சொல்லிப்பாத்தது. எல்லாம் நல்லாத்தானே இருக்கு.. என்ன காரணம்னு மண்டைய போட்டு உடைச்சிக்கிட்டருந்தது… .சும்மானாச்சுக்கும் அது நீங்க ரெண்டுபேரும் தனியா குத்தாலம் போய் மூணு நாள் இருந்துட்டு வாங்க. அப்ப இன்னின்ன பதார்த்தங்களைச் சாப்பிடுங்க. இது வெளிநாட்டு வைத்தியமுறை. அப்படின்னு சொல்லி அனுப்பிட்டாக.

அவுகளும் குத்தாலம் போய் மூணுநாள் தங்கி நல்லாகுளிக்க, திங்க, தூங்க, இருந்துட்டு ஊருக்கு வந்தாக. மாயம் போல அடுத்த பத்துமாசத்துல ஒரு ஆம்பிளப்பிள்ளய பெத்துட்டா அந்தப்பொண்ணு. பிள்ளய தங்கத்தட்டுல வச்சித் தான் பாத்துகிட்டாக. அப்படித்தான் தாங்கு தாங்குன்னு தாங்கினாக. பிள்ளை என்ன கேட்டாலும் உடனே கிடைச்சிரும்.  அதவிட வேற வேலை! பயல் பள்ளிக்கூடம் போனான். அந்த ஊரில் பள்ளிக்கூடம் சரியில்லன்னு பக்கத்து டவுனுக்கு அனுப்புனாக. பத்திரமாக கூட்டிட்டுப் போய் கூட்டிட்டு வர்ரதுக்குன்னு ஒரு ஆளயும் அமத்துனாக.

அப்படிப் போய்க்கிட்டிருக்கும் போது பயல் ஒரு நாள் அவனுடைய சிநேகிதனுடைய வீட்டுக்குப் போனான். சிநேகிதனுடைய அம்மா டவுனு வழக்கப்படி பயலுக்கு காப்பித்தண்ணியைப் போட்டுக் கொடுத்துச்சி. சீனி போட்ட அந்த செவலை நிறத்தண்ணியைக் குடிச்சதும் பயல் அப்படியே கிறங்கிப்போனான். அப்படி அமிர்தமா இருந்துச்சி அவனுக்கு. உடனே இனிமே நாமளும் நெதமும் இந்தக்காப்பித்தண்ணியை வீட்டுல காய்ச்சித்தரச் சொல்லணும்னு மனசுக்குள் நெனச்சிக்கிட்டான். அம்மாகிட்ட சொல்றதுக்காக காப்பித்தண்ணி காப்பித்தண்ணி காப்பித்தண்ணின்னு மனப்பாடம் பண்ணிக்கிட்டே வந்தான். அப்போ அந்த சிநேகிதன் வீட்டுக்கு வந்த பால்க்காரர் பாலைக்கொடுத்துட்டு அம்மா கழனித்தண்ணி இருக்கான்னு கேட்டாரு. அவரு கேட்டதும் பயலுக்கு காப்பித்தண்ணி கழனித்தண்ணியா மாறிட்டது. கழனித்தண்ணி கழனித்தண்ணி கழனித்தண்ணின்னு சொல்லிகிட்டே ஊருக்கு வந்தான்.

நேரே அம்மாகிட்டே போய் “ யெம்மா நாளைக்கி காலைல குடிக்கிறதுக்கு எனக்கு கழனித்தண்ணி வேணும்..னு சொன்னான். அம்மா அதைக் கேட்டுட்டு தமாசுன்னு நெனச்சிகிட்டு சிரிச்சிக்கிட்டே அதுக்கென்ன ராசா தாராளமா குடின்னு சொல்லிட்டா. மறுநாள் காலைல எந்திச்சதும் மொதவேலையா குடிக்க கழனித்தண்ணியக் கேட்டான் பயல்.

மாடு குடிக்கிறதப்போய் கேக்கிறியே ராசா..ன்னு அவனோட அய்யா சொன்னாரு. அவன் சடச்சிக்கிட்டு மூஞ்சியத் தூக்கி வைச்சிகிட்டான். அப்ப டவுனில எல்லாரும் குடிக்காகன்னு சொல்லி அழுதான். இதென்னடா பாதரவாப்போச்சி. இதுவரை பிள்ளை கண்ணில கண்ணீரே பாத்ததில்லை. இப்பிடிப் பிடிவாதம் பிடிக்கானேன்னு அம்மாவுக்கு வருத்தம். காத்துக்கருப்பு எதுவும் பிடிச்சிருச்சான்னு தெரியலயே. ஆனா பயல் அழுது அடம்பிடிக்கான். யாராலயும் அவன சமாதானப்படுத்த முடியல.

சரி அவன் இஷ்டப்படியே செய்வோம்னு பெரிய கல்தொட்டியில இருந்த கழனித்தண்ணிய மேலால மோந்து அதுல கொஞ்சம் கருப்பட்டியைப் போட்டு கலக்கி பயந்துகிட்டே கொண்டு வந்து கழனித்தண்ணிய அவங்கிட்ட கொடுத்தா அம்மாக்காரி.

அதப்பாத்ததும் ஆவலா வாங்கிக் குடிச்ச பயல் முகத்தைச் சுளிச்சான்.

 டவுனில நல்லாச்சூடா கொடுத்தாக அதான் அம்புட்டு ருசியா இருந்துச்சி.. உனக்கு கழனித்தண்ணியே போடத்தெரியலன்னு சொல்லி அதைக் கீழே கொட்டிட்டான். மறுநாள் டவுனிலிருந்து வந்த சீலை வியாபாரி பேச்சோடு பேச்சாக காப்பித்தண்ணியைப் பத்தி சொல்லவும் தான் அம்மாக்காரிக்கு காப்பித்தண்ணி கழனித்தண்ணியான கத தெரிஞ்சது. எல்லாருக்கும் சிரிப்பாணி பொங்கி வந்தாலும் யாரும் சிரிக்கல. பயல் கோவிச்சிகிட்டான்னா என்னசெய்ய?

தவமாய் தவமிருந்து வெளிநாட்டு பத்தியத்துல பெத்தபிள்ளையில்லையா?

 

நன்றி – புக் டே இணைய இதழ்.

Wednesday 6 October 2021

தவளை ராஜாவான கதை

 


தவளை ராஜாவான கதை

உதயசங்கர்

மண்டூர் நாட்டை ஆண்டு வந்த மன்னர் நோய்வாய்ப்பட்டுத் திடீரென்று இறந்து விட்டார். அவருக்கு வாரிசு இல்லாததினால் மக்கள் என்ன செய்வது என்று யோசித்தனர். ஒரு ராஜாவைத் தேர்ந்தெடுக்கவேண்டும். உடனே அவர்கள் ராஜகுரு மாமண்டூவைச் சந்தித்தனர். ராஜகுரு ஏதோ புரியாத மொழியில் முணுமுணுத்தார். பரணிலிருந்து பெரிய பெரிய ஓலைச்சுவடிகளை எடுத்து புரட்டினார். பின்னர் கண்ணைமூடி இரண்டு நாட்கள் உட்கார்ந்து விட்டார். சாப்பிடுவதற்கும் தண்ணீர் குடிப்பதற்கும் மட்டும் கண்களைத் திறந்தார். மக்கள் அவரையே பார்த்துக் கொண்டு காத்திருந்தனர்.

கூட்டம் அதிகமாக அதிகமாக அவரைப் பார்ப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. பார்த்துவிட்டுப் போகவேண்டும் என்றால் ஒரு கட்டணம். அங்கேயே இருக்கவேண்டும் என்றால் அதிக கட்டணம். அவசர அவசரமாய் பார்க்கவேண்டுமென்றால் ஒரு கட்டணம் என்று விதவிதமாகக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. மக்கள் வரிசை வரிசையாக நின்றனர்.

அவர் சொல்லும் வார்த்தைகளில் தான் தங்களுடைய எதிர்காலம் இருப்பதாக மக்கள் நினைத்தனர். ஒரு நாளாயிற்று. இரண்டு நாட்களாயிற்று. மாமண்டூ ராஜகுரு கண்களைத் திறக்கவில்லை. ஒருவாரத்தை பேசவில்லை. மக்கள் கூட்டம் கூட்டமாக கட்டுச்சோறு கட்டிக்கொண்டு வந்து உட்கார்ந்திருந்தார்கள். மாமண்டூ ராஜகுருவே அவருடைய சீடர்கள் மூலம் அவருடைய படங்களை அச்சடித்து விற்க ஏற்பாடு செய்தார். அத்துடன் டீக்கடைகள், ஹோட்டல்கள், சர்பத் கடைகள் எல்லாம் ஆரம்பித்தார். குழந்தைகளுக்கு ராட்டினம் கூட வந்து விட்டது.

எல்லாரும் எப்போது மாமண்டூ ராஜகுரு பேசுவார் என்று காத்துக்கொண்டிருந்தனர்.

“ என்ன பேசிட்டாரா? “

“ என்ன சொல்லிட்டாரா.?.”

“ என்ன  குறிப்பு கொடுத்தாரா? “

“ என்ன சைகை காட்டினாரா? “

என்று ஒவ்வொருவரும் கேட்டுக் கொண்டே திரிந்தனர். மக்கள், அவரவர் வேலையை விட்டுவிட்டு அங்கு வந்து கிடந்தனர். விவசாயி உழவில்லை. நெசவாளி நெய்யவில்லை. தச்சர் தச்சுவேலை செய்யவில்லை. கொல்லர் நகை செய்யவில்லை. கொத்தனார் கல்லுடைக்கவில்லை. ஆட்டக்காரர்கள் ஆடவில்லை. பாட்டுக்காரர்கள் பாடவில்லை. தகவல் தொழில்நுட்பக்காரர்கள் தகவல் சொல்லவில்லை.

எல்லாரும் ராஜகுரு வாயைப் பார்த்துக் கொண்டேயிருந்தனர்.

மழைக்காலம் தொடங்கியது. மக்கள் எல்லாரும் கலைந்து போகத் தொடங்கினார்கள். உடனே மாமண்டூ ராஜகுரு கண்களைத் திறந்தார். மக்களை ஏற இறங்க பார்த்தார்.

உடனே தரையில் கட்டம் வரைந்து அதற்குள் குறுக்குமறுக்கும் கோடுகள் போட்டார். சோழியைக் குலுக்கிப் போட்டார். தாயக்கட்டையை உருட்டினார். நெற்றியில் கையை மடக்கி வைத்தார். எல்லாத்திசைகளிலும் கைகளை வீசினார். பின்னர் வாயைத் திறந்து,

“ ஏரி.. குளங்களுக்குப் போங்கள்.. அங்கே யார் சத்தமாகப் பேசுகிறார்களோ.. அவரை அழைத்து வாருங்கள்.. அவர் தான் மண்டூர் ராஜா.. “

என்று சொன்னார். அவ்வளவுதான். மக்கள் எல்லாரும் உடனே அந்த நாட்டில் இருந்த ஏரி, குளம், கண்மாய், குட்டை, என்று நீர்நிலைகளுக்குப் படையெடுத்தார்கள். மழைக்காலம் தொடங்கி விட்டதால் தவளைகளின் சத்தம் மட்டும் தான் கேட்டது. வேறு எந்தச் சத்தமும் கேட்கவில்லை.

“ கொர் கொர் கொர்ர்ர்ர்..” என்று மழைக்காலத்தை வரவேற்று தவளைகள் பாடிக்கொண்டிருந்தன. கூட்டமாகச் சத்தம் போட்டதால் யார் அதிகச் சத்தம் போடுகிறார்கள் என்று கணிக்கமுடியவில்லை. அதனால் எல்லாத்தவளைகளையும் பிடித்து பெட்டிகளில் அடைத்து அரண்மனைக்குக் கொண்டு போனார்கள். ராஜகுருவே தேர்ந்தெடுக்கட்டும்.

அரண்மனையில் ஆயிரக்கணக்கான தவளைகள் கொர்ர்கொர்ர் கொர்ர் கிர்ர்ர்க் கிர்ர்க் கிராக்க்.. என்று தவளைகளின் விதவிதமான சத்தங்களால் அரண்மனை ஆடியது. ராஜகுருவுக்குத் தெரியும் யார் ராஜாவாக வந்தாலும் அவருக்குப் பிரச்னையில்லை. அவருடைய பேச்சைக் கேட்டுத் தான் எல்லாரும் நடந்து கொள்வார்கள். அதனால் எல்லாத்தவளைகளையும் அரண்மனை அரச சபையில் விடச்சொன்னார்.

அப்படியே செய்தார்கள். தவளைகள் எல்லாம் கிராக் கிர்ர் கிர்ர்க் கிர்ர்ர் என்று கத்திக்கொண்டே அங்குமிங்கும் தத்தித்தாவிக் குதித்தன. அப்போது சிம்மாசனத்தில் ஒரு பூச்சியைப் பார்த்தது ஒரு தவளை. அவ்வளவுதான். அந்தத்தவளை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்க் கிர்ர்ர்ர்ர்ராரரரக் என்று கத்திக் கொண்டே பாய்ந்து சிம்மாசனத்தில் உட்கார்ந்து அந்தப் பூச்சியை தன்னுடைய நாக்கை நீட்டி லபக்கியது. உடனே மாமண்டூ ராஜகுரு ஒரு மாலையை எடுத்துக் கொண்டு வந்து அந்தத் தவளை ராஜாவுக்கு அணிவித்தார்.

மக்கள் எல்லாரும் ” தவளைராஜா வாழ்க! தவளைராஜா வாழ்க! “ என்று வாழ்த்தினார்கள். தவளைராஜாவுக்கு ஒன்றும்புரியவில்லை. பக்கத்தில் எங்காவது பூச்சிகள் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தது.

ராஜகுரு மக்களின் அறியாமையைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார்.

அந்தக் கூட்டத்தில் அறிவு என்ற சிறுவன் இந்தக்கூத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ராஜகுருவின் தந்திரம் புரிந்தது. மழைக்காலம் முடிந்ததும் தவளை ராஜா பேசமாட்டார். அப்போது அவருடைய பெயரைச் சொல்லித் தானே ஆட்சி செய்யலாம் என்ற ராஜகுருவின் திட்டத்தை அவன் தெரிந்து கொண்டான்.

உடனே அவன் தவளைமொழி தனக்குத் தெரியும் என்றும் தவளைராஜா சொல்வதை மக்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்வதாகவும் சொன்னான். ராஜகுருவால் மறுப்பு சொல்லமுடியவில்லை.

அப்போது தவளைராஜா ஒரு பெண் தவளைக்காகப் பாட்டுப்பாடினார். கிர்ரக்கிர்ராக்கி கிர்ர்கி கீர்ராக்கி கிகிகிர்ர்ர்ர்ர்க்க்க்க்.. என்று பாட்டுப் படித்தார். மக்கள் எல்லாரும்

“ ராஜா என்ன சொல்கிறார்? “ என்று அறிவைப் பார்த்துக் கேட்டனர். அறிவு,

“ அய்யோ! அதை நான் எப்படிச் சொல்வேன்… நம்முடைய ராஜகுரு நாட்டின் அத்தனை செல்வத்தையும் கொள்ளையடித்து பதுக்கி வைத்திருக்கிறார்.. அவரைக் கைது செய்யும்படி.. உத்தரவு போடுகிறாரே ராஜா..

மக்கள் திகைத்துப் போனார்கள். ஆனாலும் ராஜாவின் உத்தரவாயிற்றே. மீற முடியுமா? ராஜகுருவைக் கைது செய்தார்கள். இப்போது மறுபடியும் தவளைராஜா

 கிர்ர்ர்ர்ர்ராக் கிகிகிகிகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று கத்தினார். அறிவு மக்களைப் பார்த்து,

“ ராஜா இனிமேல் மன்னராட்சி கிடையாது.. .. மக்கள் தங்களுக்குச் சேவை செய்ய சரியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கட்டும்..  அவர்கள் ஆளட்டும்…

உடனே மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

கிராக் கிர்ரக் என்று மறுபடியும் தவளைராஜா கத்தினார்.

உடனே அறிவு,

“ என்னை என் குளத்திலேயே விட்டு விடுங்கள் என்று சொல்கிறார் தவளைராஜா..என்று சொன்னான்.

அப்புறம் என்ன!

மண்டூர் அறிவூராக மாறியது. மக்களை மக்களே ஆட்சி செய்யும் நல்லாட்சி மலர்ந்தது.


நன்றி - பொம்மி சிறுவர் மாத இதழ்