Friday 31 August 2012

சிட்டுக்குருவியும் தூக்கணாங்குருவியும்

thukkanangkuruvi தால்ஸ்தோய்

தமிழில்- உதயசங்கர்

 

என் வீட்டுக் கூரையின் விளிம்பில் கூடு கட்டியிருந்த தூக்கணாங்குருவியின் கூட்டை முற்றத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.நான் கவனித்துக் கொண்டிருக்கும் போதே இரண்டு தூக்கணாங்குருவிகளும் வெளியே பறந்து போய்விட்டன. கூடு காலியாக இருந்தது.

அந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி கூரை மீதிருந்து படபடவென இறக்கைகளை அடித்துக் கொண்டு பறந்து வந்து அந்தக் கூட்டின் மீது உட்கார்ந்தது. கூட்டுக்குள்ளே எட்டிப் பார்த்து விட்டு திரும்பவும் அதன் சிறகுகளை அடித்தது.பின்னர் கூட்டுக்குள் பாய்ந்தது. கூட்டுக்கு வெளியே தலையை மட்டும் நீட்டிக் கொண்டு கீச்சிட்டது.

சீக்கிரமாகவே ஒரு தூக்கணாங்குருவி திரும்பி வந்தது. கூட்டுக்குள் நுழைவதற்கு முயற்சி செய்தது.அப்பொது தான் அந்த அழையாவிருந்தாளியைப் பார்த்தது. உடனே, சிறகுகளை படபடவென அடித்துக் கொண்டு உரக்கக் கீச்சிட்ட.து. கூட்டிற்கு மேலே வட்டமிட்டு சுற்றியது. பின்பு அங்கிருந்து பறந்து போய்விட்டது.

ஆனால் சிட்டுக்குருவி கூட்டிலேயே இருந்து கொண்டு சலசலத்துக் கொண்டிருந்தது.

திடீரென்று ஒரு பெரிய தூக்கணாங்குருவிக்கூட்டமே அந்த கூட்டை நோக்கிப் பறந்து வந்தது.அந்த சிட்டுக்குருவியைப் ஒரு பார்வை பார்த்து விட்டு மறுபடியும் பறந்து போய் விட்டது. சிட்டுக்குருவி எந்தக் கவலையும் இல்லாமல் தலையை வெளியே நீட்டி அங்குமிங்கும் திரும்பிப் பார்த்துக் கொண்டே பாடிக்கொண்டிருந்தது.

தூக்கணாங்குருவிகள் மறுபடியும் திரும்பி வந்தன.ஏதோ கூட்டில் செய்து விட்டு பறந்து போய்விட்டன. அவர்கள் வந்து செல்வதற்கு காரணம் இருந்தது.ஒவ்வொருவரும் தங்களுடைய அலகில் கொஞ்சம் களிமண்ணைக் கொண்டு வந்தனர். எல்லோரும் சேர்ந்து கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துக் கொண்டு வந்தனர்.

அங்கும் இங்கும் பறந்து மேலும் மேலும் களிமண்ணால் கூட்டை மூடிக் கொண்டே வந்தனர். கூட்டின் வாசல் மேலும் மேலும் குறுகிக் கொண்டே வந்தது.

முதலில் சிட்டுக்குருவியின் கழுத்தைப் பார்க்க முடிந்தது. அதன் பிறகு தலையை மட்டும் பார்க்க முடிந்தது.பின்னர் அதன் அலகை, அப்புறம் எதையுமே பார்க்க முடியவில்லை. தூக்கணாங்குருவிகள் அதை கூட்டுக்குள் வைத்து பூசி மெழுகி விட்டனர்.பின்னர் அவர்கள் உற்சாகமாக அந்தக் கூட்டைச் சுற்றிச் சுற்றி வந்து கீச்சிட்டன.

Thursday 30 August 2012

யாரும் அழைக்காத அலைபேசி

how-to-unlock-cell-phone-1 உதயசங்கர்

 

யாரும் அழைக்காத அலைபேசியைச்

எப்போதும் சுமந்து திரிகிறேன்

நான் அழைக்கும் அழைப்புகளெல்லாம்

எனக்கே திரும்பி வருகின்றன

எங்கோ முட்டி மோதி

எப்போதாவது வரும் அழைப்பில்

கொஞ்சும் விளம்பரப்பெண்குரல்

என் தனிமையின் ரகசியத்தை

மற்ற பெண்களோடு பகிர்ந்து கொள்ள

அழைத்துக் கொண்டேயிருக்கிறது

தனிமையின் போதையைத் துளித் துளியாக

அருந்திக் கொண்டிருக்கிற

என் குகை வாழ்க்கை

எப்படி தெரிந்தது அவளுக்கு என்று வியந்தபடி

சந்தேகத்தோடு

நான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

யாரும் அழைக்காத என் அலைபேசியை

அதுவும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது

என்னை.

Tuesday 28 August 2012

இந்தக் கதை உங்களைப் பற்றியதாக இருக்கலாம்

 

உதயசங்கர்

emotion-chart-with-picture-reflection

இந்தக் கதை உங்களைப் பற்றியதாக இருக்கலாம் என்பதை முன் கூட்டியே சொல்லி எச்சரித்துவிட ஆசைப்படுகிறேன். பின்னால் நீங்கள் என் மீது கோவிக்கவோ சடைத்துக் கொள்ளவோ, விரக்தியடையவோ, இல்லை ஒரு அதீத வெறுப்புணர்வில் மானநஷ்ட வழக்கு தொடுக்கவோ ஏதுவான சந்தர்ப்பம் வரலாம். எனவே பின் வரும் குறிப்பினைக் கவனமாகப் படிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

உங்களுடைய பெயர் சேதுசிவராமனாகவோ, நீங்கள் ஒரு கலைக்கல்லூரியில் பேராசியராகப் பணிபுரிபவராகவோ, நீங்கள் சொந்தமாக ஒரு வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டவராகவோ, ஈடுபட்டுக்கொண்டிருப்பவராகவோ, ஈடுபடப்போகிறவராகவோ, இருந்தீர்களென்றால் இந்தக் கதையை இதற்கு மேல் வாசிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். கூடுதலாக நீங்கள் பயந்த சுபாவமும், உங்கள் துணைவியாரின் கைப்பிடித்தே வாழ்க்கைப் பாதையில் நடப்பவராகவும் இருந்தால் கண்டிப்பாக இந்தக் கதையை இதற்கு மேல் வாசிக்க வேண்டாம். என்னடா இப்படிச் சொல்கிறானே என்று நீங்கள் அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை. மீண்டும் இந்தக் கதையின் முதல் வரியைப் படித்துப் பார்க்கவும்.

துன்பத்தை யாரும் மீண்டும் மீண்டும் அநுபவிக்க விரும்புவதில்லை. அதுவும் என்னை மாதிரி எழுத்தாளர்கள் அவர்களுக்கு நடந்ததை உங்களுக்கு நடந்த மாதிரியே எழுதுவதை வாசித்து மனம் வெம்பவும் தேவையில்லை. இதை விட ஒரு எழுத்தாளன் வேறு என்ன சலுகை கொடுத்து விட முடியும்? நீங்கள் ஏதோ கேட்க முயற்சிக்கிறீர்கள்? மேலே சொன்ன குறிப்புகளில் ஏதாவது ஒன்று இல்லையென்றாலும், மனதிடம் அதிகமிருந்தாலும், நகைச்சுவையுணர்வு இருந்தாலும் வாசிக்கலாமா என்று தானே? வாசியுங்கள் ஐயா. தாராளமாக வாசியுங்கள். உங்களுக்கு அப்படி ஒரு ஆசை வந்து விட்டால் அதை யார் என்ன செய்து தடுத்து விட முடியும்?

சேதுசிவராமனுக்கும் அவனுடைய துணைவியார் அலமேலுமங்கைக்கும் திடீரென ஒரு ஆசை வந்து விட்டது. யாருக்கு ம் தோன்றாத அபூர்வமான ஆசை என்றெல்லாம் சொல்ல முடியாது. எல்லோரும் ஆசைப்படுகிற காரியம் தான். ஒரு வகையில் இன்றைய மத்தியதர வர்க்கத்தின் வாழ்க்கை லட்சியம், குறிக்கோள். வேறொன்றுமில்லை. ஒரு வீடு. ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருந்து கொண்டு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லையென்றால் உற்றார், உறவினர், உடன்வேலை பார்ப்போர், ஊரி உள்ள முகம் தெரிந்தவர்கள், முகம் தெரியாதவர்கள், போவோர், வருவோர், எல்லோரும் இளக்காரமாக ஒரு பார்வை வீசி ரெண்டு வார்த்தை இலவசமாய் அட்வைசும் செய்து விட்டுப் போவார்கள் தானே. எனக்குப் பின்னாலிருந்து சேதுசிவராமனின் துணைவியார் அலமேலுமங்கையின் குரல் கேட்கிறது.

“ ஏன் போக்கத்த நாய் கூட ரெண்டு குலைப்பு குலைத்து விட்டு காலைத் தூக்கி ரெண்டு சொட்டு மூத்திரம் அடித்து விட்டுப் போகும் “

நான் திரும்பி சேதுசிவராமனின் துணைவியார் அலமேலுமங்கையிடம் எச்சரித்தேன். எழுத்தாளரை மீறி கதாபாத்திரம் பேசக்கூடாது. அவள் முகத்தை ஒரு நொடி நொடித்து விட்டு மறுபடியும் கதைக்குள் வாசலில் ஹிண்டு பேப்பர் வாசித்துக் கொண்டிருக்கிற சேதுசிவராமனுக்கு காப்பி போடப் போய்விட்டாள்.

அலமேலுமங்கையும் சேதுசிவராமனும் ஆறுமாதம் இரவுபகலாக அவர்களுடைய ஆலோசனை தர்பாரான படுக்கையறையில் யோசித்தார்கள். யோசித்தார்கள். அப்படி யோசித்தார்கள். யோசித்தார்கள் என்ன யோசித்தார்கள் அலமேலுமங்கை யோசித்தாள் அதை சேதுசிவராமன் கேட்டுக் கொண்டிருந்தான். ஒரு நாள் இடம் வாங்கி வீடு கட்டுவதில் உள்ள சாதகபாதகங்களைப் பற்றிப் பேசினாள். சேதுசிவராமன் அங்கிட்டும் இங்கிட்டும் தலையாட்டினான். மறுநாள் கட்டிய வீட்டை வாங்குவதில் உள்ள லாபநஷ்டங்களைப் பற்றிப் பேசினாள். அதுக்கும் அங்கிட்டும் இங்கிட்டும் தலையாட்டினான். இன்னொருநாள் பாதிகட்டி கைவிடப் பட்ட வீட்டை வாங்கி கட்டினால் என்ன என்று யோசனை சொன்னாள். அதைக் கேட்டும் அங்கிட்டும் இங்கிட்டும் தலையாட்டினான். இப்படி அங்கிட்டும் இங்கிட்டும் தலையாட்டித் தலையாட்டி அவனுடைய தலை எப்பவுமே ஆடிக்கொண்டேயிருந்தது. யாருடனாவது பேசிக் கொண்டிருக்கும்போதும், வகுப்பு எடுக்கும்போதும், தலையாட்டல் நிற்கவில்லை. அவனுடைய இந்தத் தலையாட்டலை மாணவர்கள் தங்களுடைய தேவைகளுக்கேற்ப ஏற்ப சைகை மொழிமாற்றம் செய்து கொண்டனர்.

“ சார் இன்னிக்கு டெஸ்ட் வேண்டாம் சார்.. நாங்க படிக்கல..”

பேராசிரியர் சேதுசிவராமன் வாயைத் திறப்பதற்கு முன்னாலேயே தலை ஆடி விடுகிறது. உடனே மாணவர்கள்,

” ஹேய்.. இன்னிக்கு டெஸ்ட் இல்ல.. சார் தலையாட்டிட்டாரு..”

என்று மாணவர்கள் கோரஸாகக் கூப்பாடு போட்டார்கள். மாணவர்களின் திறமையான மொழிபெயர்ப்பை சேதுசிவராமனே வியந்து இன்னொரு முறை தலையாட்டி அதை அங்கீகரித்தான்.

சில நேரங்களில் தர்மசங்கடமான நிலைமைகளுக்கும் ஆளானான் என்பதை சொல்லவும் வேண்டுமா? வேண்டாம் என்று சொல்ல நினைத்து வேண்டும் என்று தலையாட்டவும், வேண்டும் என்று சொல்ல நினைத்து வேண்டாம் என்று தலையாட்டவும் ஆகி தலையாட்டல் அவனுடைய சுயகட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற்று விடும் போல இருந்தது. அலமேலுமங்கையின் ஒவ்வொரு சொல்லுக்கும், சொல்லின் எழுத்துக்கும், தலையாட்டியதின் முன் பின் பக்கவிளைவுகள் என்பதை ரெம்பத் தாமதமாகத் தெரிந்து கொண்டான். இது எல்லாத்திசைகளிலும் ஏற்படுத்தவிருக்கும் விபத்துகளை முன்னுணர்ந்து சீக்கிரத்தில் ஒரு முடிவு எடுக்கும்படி அல்மேலுமங்கையிடம் வேண்டிக் கொண்டான். அலமேலுமங்கையும் சரி ஆலோசிக்கிறேன் என்றாள். ஏனெனில் அவளுக்கும் சேதுசிவராமனின் தலையாட்டல்தான் சிந்தனையூக்கியாக இருந்தது. அவனுடைய ஒவ்வொரு தலையாட்டலுக்குப் பின்னும் அவளுக்கு புதுப்புது யோசனைகள் தன்னால ஊற்றெடுத்துக் கிளம்பியது.

இப்படியெல்லாம் சொல்வதனால் சேதுசிவராமனுக்கு வீட்டைப் பற்றிக் கருத்துகளே இல்லை என்று நீங்கள் நினைத்து விட வேண்டாம். வண்டி வண்டியாய் குமிந்து கிடக்கிறது. ஆனால் அவன் ஒரு சொல் சொல்ல ஆரம்பித்தால் போதும் அலமேலுமங்கை மூன்றே மூன்று வார்த்தைகளை அசரீரி போல முழங்குவாள்.

“ உங்களுக்கு ஒண்ணும் தெரியாது..”

இந்த வார்த்தைகளின் சப்தஒலி அடங்குமுன்பே அவனுக்குச் சொல்ல வந்தது மறந்து விடும். அதோடு இது எதுக்கு வம்பு அவள் முடிவுப்படியே நடந்து கொண்டால் எதிர்கால குற்ற்ச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற நப்பாசை தான். குறித்துக் கொள்ளுங்கள். நப்பாசைதான். இதையெல்லாம் படித்துவிட்டு அலமேலுமங்கையைப் பற்றி கொடூரமான சித்திரத்தை வரைந்து விடாதீர்கள். அலமேலுமங்கை நாட்டிலுள்ள எல்லாப் பெண்களையும் போல பரமசாது. வெளியே யாரிடமும் அதிர்ந்து பேசாத குணவதி. வீடென்னும் ராஜ்யத்துக்குள் மட்டுமே தன் ஜெயக்கொடியைப் பறக்க விட ஆசைப்படுபவள். என்ன அவளுக்கும் நாட்டிலுள்ள எல்லாப்பெண்களைப் போல தன் கணவன் ஒரு அப்பாவி, ஏமாளீ, சோணகிரி, பயந்தாங்குளி, உலகஞானம் இல்லாதவன், சூதுவாது தெரியாதவன், நெளிவு சுளிவு இல்லாதவன், இளிச்சவாயன், என்று அப்பாவியாய் நம்பி இந்தப் பட்டங்களையெல்லாம் நூலில் கட்டி பறக்க விட்டுக் கொண்டிருந்தாள். அதனால், ‘ தான் ஒருத்தி மட்டும் சமத்தா இல்லைன்னா’ என்ற எண்ணம் வேர் விட்டு கிளைவிட்டு, பூப்பூத்து, காய்காய்த்து, கனிந்தும் விட்டது. இனி ஒன்றும் செய்வதற்கில்லை.

சேதுசிவராமன் அந்த மரத்தின் நிழலில் எந்தவிதக் கவலையுமின்றி சோம்பேறியாய் படுத்துறங்கினான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? ஆனால் இப்போது அவனது தலையாட்டல் கொடுத்த நெருக்கடியால் தினசரி அலமேலுமங்கையிடம் சின்னப்பிள்ளை மாதிரி நச்சரிக்கத் தொடங்கினான். ஆறுமாதமாய் ஆலோசித்தும் எந்த முடிவுக்கும் வராத அலமேலுமங்கை சவலைப்பிள்ளையின் அழுகை போல தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் சேதுசிவராமனுக்காக ஒரே வாரத்தில் முடிவு எடுத்தாள். அந்த முடிவின் அந்தப் பக்கத்தில் காத்திருப்பது எது என்று அவர்களுக்குத் தெரியாது. வீட்டுமனை, வீடு, வாங்கிய பெருமக்களுக்கே அது தெரியும். ஆக தம்பதிகள் கட்டிய வீட்டையே வாங்கி விடலாம் என்று ஏகமனதாக முடிவு செய்தார்கள்.

அவர்கள் இரவு பனிரெண்டு மணிக்கு எடுத்த முடிவு எப்படித்தான் காற்றில் பரவியதோ இல்லை எந்தக் காத்து கருப்பு, முனி, போய் சொன்னதோ காலையில் பால்காரன் வருவதற்கு முன்பே வீட்டுக் கதவைத் தட்டினார்கள் புரோக்கர்கள். இல்லையில்லை ஹவுஸ் புரொமோட்டர்கள். சேதுசிவராமனும், அலமேலுமங்கையும் ஆச்சரியத்தில் ஏறி மூச்சுத் திணறிக் கொண்டிருந்தார்கள். அதற்கடுத்த வாரத்தில் அந்தச் சிறிய நகரத்தின் மிக முக்கியமான வி.வி.ஐ.பி.க்களானார்கள். எப்போதும் வீட்டுவாசலில் புதிது புதிதாய் ஆட்கள் இருந்து கொண்டேயிருந்தார்கள். சேதுசிவராமன் எங்கே போனாலும் பின்னாலேயே போனார்கள். அவன் திரும்பிய பக்கத்தில் திரும்பினார்கள். மழை விழுந்த மறுநாள் முளைக்கும் அருகம்புல்லைப் போல எப்படி இத்தனை புரொமோட்டர்கள் வந்தார்கள் என்ற தம்பதிகளின் ஆச்சரியக்குறி மறையும் முன்பே பக்கத்துவீட்டுக்காரர், எதிர்த்த வீட்டுக்காரர், இதுவரை அவன் ஏறிட்டும் பார்த்திராத பலபேர் வந்து வீடுகளைப் பற்றித் துப்பு சொன்னார்கள். சிலர் சேதுசிவராமனைத் தனியாகக் கல்லூரியில் சென்று சந்தித்தார்கள். அந்த விவரம் தெரியாத கூமுட்டைகளை தங்களுடைய கேலிச்சிரிப்பால் உடைத்து விட்டு அலமேலுமங்கையைத் தனியாகச் சந்தித்து வீடுகளை அறிமுகப்படுத்தினார்கள் வேறு சிலர். இதையெல்லாம் பார்த்த சேதுசிவராமன் அவர்கள் வீடு வாங்குவதற்கு ஊரே உதவி செய்கிறது என்று அப்பாவியாய் நினைத்தான்.

ஆனால் அலமேலுமங்கையோ வேறு மாதிரி நினைத்தாள். ஊரே புரோக்கர் தொழில் பார்த்து நாலு காசு சம்பாதிக்கும்போது தன் கணவன் மட்டும் இப்படி விவரமில்லாமல் வெறும் பேராசிரியர் வேலை மட்டும் பார்த்துக் கொண்டு குப்பை கொட்டுகிறானே என்று நினைத்தாள். நினைப்பு சிறு கங்காகி, கங்கு தீயாகி, தீ பெருநெருப்பாகி, அன்றே சேதுசிவராமனைச் சுட்டது. சேதுசிவராமனும் அக்கணமே சூளுரைத்தான். புதிய வீட்டில் சேதுசிவராமன் பேராசிரியர் அண்ட் ஹவுஸ் புரொமோட்டர் என்று பெயர்ப்பலகையை மாட்டியே தீருவேன் என்று சபதமிட்டான். அரைகுறை நம்பிக்கையுடன் அலமேலுமங்கையும் பெருநெருப்பை எப்போது வேண்டுமானாலும் ஊதிப் பெருக்கிக் கொள்ள வசதியாகச் சிறுகங்காக்கிக் கடைவாயின் ஓரத்தில் ஒதுக்கிக் கொண்டாள்.

நகரத்துக்கு வெளியே கட்டிமுடிக்கப்பட்ட, கட்டிக் கொண்டிருக்கிற, கட்டப்போகிற வீடுகள் எல்லாம் சேதுசிவராமனையும் அலமேலுமங்கையையும் இரு கைகளையும் அசைத்துக் கூப்பிட்டன. எல்லாஇடங்களுக்கும் அசராமல் சென்று பார்த்தார்கள். அவர்களை அழைத்துப் போய் காண்பிப்பதற்குப் புரொமோட்டர்கள் கியூவரிசையில் காத்துக் கொண்டிருந்தனர். வரிசை ஒழுங்கை நிர்வாகிக்க டோக்கன் வாங்கி பதிந்தும் கொண்டனர். இதில் சில சில்லரைச் சண்டைகளும் வந்தன. பெருமிதக் கடலில் மூழ்கி ஆனந்தமாய் நீந்திக் கொண்டிருந்தனர் சேதுசிவராமனும், அலமேலுமங்கையும்.

எல்லாவீடுகளும் நன்றாகவே இருப்பதாக சேதுசிவராமனும், எந்த வீடும் சரியில்லை என்று அலமேலுமங்கையும் நினைத்தால் என்ன ஆகும்? இந்த இரண்டு நினைப்புகளுக்கும் இடையில் கிடந்து வீடும் புரோக்கர்களும் நெரிபட்டனர். இப்படியே பொழுது போய்விடுமா என்ன? அநேகமாக ஊரில் உள்ள அத்தனை புரோக்கர்களும் சேதுசிவராமனையும் அலமேலுமங்கையையும் பார்த்து விட்டார்கள். சேதுசிவராமனும் அலமேலுமங்கையும் ஊரில் உள்ள அத்தனை வீடுகளையும் பார்த்து விட்டார்கள். ஆனால் இது வரை தம்பதிகளிடமிருந்து ஒரு சிறு முகக்குறிப்பைக் கூட பார்க்க முடியவில்லை. இயல்பாகவே புரோக்கர்களுக்கு ஒரு சந்தேகம் மெல்லத் தன் கோரமுகத்தைக் காட்டத் தொடங்கியிருந்தது. இதுவரை எந்தப் பிடியும் கொடுக்காத சேதுசிவராமனும், அலமேலுமங்கையும், உண்மையிலேயே வீடு வாங்கப் போகிறார்களா? அல்லது வீடுகளில் சுற்றுலா போகிறார்களா? இந்தச் சந்தேகம் வலுவடைந்தபோது புரோக்கர்களிடம் ஒரு புயல் மையங்கொள்ளத் தொடங்கியிருப்பதை சேதுசிவராமனும், அலமேலுமங்கையும் அறிந்திருக்கவில்லை. ஒரே வாரத்தில் மரியாதை குறைந்தது.

“ யோவ் வாத்தியாரே! நீரு வீடு வாங்கப் போறீரா.. இல்லையா..அத முதல்ல சொல்லும்.. என்னமோ வொயிட் ஹவுஸை வாங்கப் போற மாதிரி பிலிம் காட்டிகிட்டு..”

என்று குரல் ஏகாரமாய், ஏகக்காரமாய் ஒலிக்க சேதுசிவராமன் உண்மையில் பயந்து தான் போனான். ஆனால் அலமேலுமங்கை தான் தைரியலட்சுமியாய் குரல் கொடுத்தாள்.

” நாங்க வீடு வாங்குவோம்.. வாங்க மாட்டோம்.. அது எங்க இஷ்டம்..”

அந்தக் குரல் சூல் கொண்டு இடி மின்னலை ஏற்படுத்தி விட்டது. அதுவரை எலியும் பூனையும் மாதிரி தோற்றமளித்த அத்தனை புரோக்கர்களும் ஒன்று கூடி மாநாடு நடத்தினர். ஆரம்பத்திலிருந்தே சேதுசிவராமனின் நடவடிக்கைகள் அனைத்தும் சந்தேகத்துக்குரியதாகவே இருந்ததெனத் தீர்மானம் போட்டனர். கமிஷன் கொடுக்காமல் வீடு முடிப்பதற்கான திட்டம் இருக்கலாம் என முடிவு செய்தனர். அதன் பிறகு அவனுடைய அத்தனை நடவடிக்கைகளும் ஒற்றறியப் பட்டன. அவன் வீட்டுக்கு முன்னால் சிலர் காவலிருந்தனர். அவர்களை மீறி யாரும் உள்ளே நுழைந்து விட முடியாது. தீர விசாரித்தபிறகே அநுமதி கிடைத்தது. சிலர் பூனைப்படையைப் போல பின் தொடர்ந்தனர். அவன் யாரிடம் நின்று பேசினாலும் அருகில் வந்து அவன் பேசுவதை உரிமையுடன் கேட்டார்கள் சிலர். அவன் ரகசியமாக வீடு கிரையம் முடிக்கத் திட்டமிடுகிறானோ என்ற நினைப்பின் வழியே சென்ற புரோக்கர்கள் அவர்கள் அவனுக்குக் காட்டியவீடுகளின் சொந்தக் காரர்களிடம் நேரடியாகவே பேசி முடித்துவிடும் அபாயத்தை உணர்ந்தார்கள். எனவே இன்னும் கண்காணிப்பை நெருக்கினார்கள். கண்காணிப்பின் கனலில் வெந்து கருகிப் போன சேதுசிவராமன் ஊரில் அது வரை சென்றிராத தெருக்கள், சந்துபொந்துகள் வழியே போகத் தொடங்கினான். ஆனால் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தார்கள் புரோக்கர்கள்.

எப்போதும் கண்காணிக்கப்படுவதின் கொடுக்குகளால் கொட்டப்பட்டுக் கொண்டேயிருந்த சேதுசிவராமன் அலமேலுமங்கையிடம் புலம்பினான். இனி அவர்கள் வீடு வாங்குவதாகச் சொன்னாலும் நம்பமாட்டார்களே என்று நடுகடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது ஆபத்பாந்தவன் நானிருக்கிறேன் என்று வந்து நின்றார் ஒரு குட்டி அரசியல் தலைவர். ஒவ்வொரு தேர்தலுக்கும் ஆட்சிக்கு வரும் கட்சிக்கு மாறி மாறிக் குதிக்கும் அவர் இரு தரப்பு வாதங்களையும் கேட்டார். தீர ஆலோசிக்காமல் ஒரு குத்துமதிப்பாய் கட்டைப்பஞ்சாயத்துத் தீர்ப்பைச் சொன்னார். ஒரு ஒருமணி நேரம் உட்கார்ந்து காப்பி, வடை, சாப்பிட்டு பஞ்சாயத்து பண்ணியதற்கு சேதுசிவராமனிடம் ஒரு இரண்டாயிரம் ரூபாயும், புரோக்கர்களிடம் ஒரு ஆயிரம் ரூபாயும் வாங்கி ஜேபியில் செருகிக் கொண்டு நடந்தார். அலமேலுமங்கை இப்போதும் சேதுசிவராமனைப் பார்த்த பார்வைக்கு அர்த்தம் என்னவென்று புரியவில்லையா? இந்தக் கதையின் பதினெட்டாவது பாராவை மறுபடியும் வாசித்துப் பாருங்கள். சரி அது கிடக்கட்டும் எதிர்கால மந்திரியோ, சட்டமன்ற உறுப்பினரோ இல்லை நகர்மன்றத் தலைவரோ ஆகப் போகிற அந்த மகானுபாவனின் தீர்ப்பின் விவரம் அறிய ஆவலுடன் இருப்பீர்கள் தானே.

ஒரு மாத காலமாக சேதுசிவராமனுக்கு வீடு வாங்க உதவி செய்வதற்காக அவன் வீட்டு காவல்கிடந்த காவல் கூலி. அவன் பார்த்த வீடுகளை எப்படியும் வாங்கி விடுவான் என்ற நம்பிக்கையில் வேறு யாரிடமும் காட்டாமல் இருந்ததனால் தேங்கிப் போன வீடுகளுக்கான தேங்குகூலி. வீடுகளைக் காண்பித்ததற்கான பார்வைக்கூலி, அவன் வீடு வாங்கினாலும் வாங்காவிட்டாலும் தரவேண்டிய தரகுக்கூலி, இப்படி கூலிவகைகளைக் கூட்டினால் சேதுசிவராமன் அவன் முழுச்சம்பாத்தியத்தையே தர வேண்டியதிருக்கும். அவன் அறியாமல் செய்த பிழை பொறுக்க புரோக்கர்கள் பெரியமனதுடன் முன் வந்து விட்டதால் அவர்களுக்கு குறைந்தபட்ச நஷ்ட ஈடாக ஆளுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட வேண்டும்.

இப்படி ஒரு தீர்ப்பைக் கேட்டு அலமேலுமங்கை கொதித்துப் போனாள். ஆனால் கோவிலில் மஞ்சள் நீர் தெளித்து வெட்டப்படுவதற்குத் தயாராக நிற்கும் ஆட்டுக்குட்டியின் முகமாக சேதுசிவராமனின் முகம் இருக்கவே பரிதாபப்பட்டாள். இரண்டு நாட்களில் இருபத்தியெட்டு பேருக்கு நோட்டு நோட்டாய் எண்ணிக் கொடுத்தாள். இதைக் கேள்விப்பட்டு பக்கத்து ஊர்களிலிலிருந்தும் புரோக்கர்கள் கிளம்பி வருகிற தகவல் எப்படியோ சேதுசிவராமனுக்கும், அலமேலுமங்கைக்கும், கிடைத்து விட இரவோடிரவாகத் தலைமறைவாகி விட்டனர்.

சேதுசிவராமனும், அலமேலுமங்கையும் இப்போது வீடு என்றவார்த்தையை உச்சரிப்பதில்லை என்று நீங்களே யூகித்திருப்பீர்கள். ஆனால் இரவுகளில் சேதுசிவராமன் பற்களைக் கடித்து யாரையோ அரைத்துத் துப்புகிறான். ஏன் தெரியுமா? இருபத்தியெட்டாவது புரோக்கராக வந்து அவருடைய சொந்த வீட்டையேச் சுற்றிக் காண்பித்துவிட்டு அதற்கு ஆயிரம்ரூபாய் கமிஷன் வாங்கிக் கொண்டு போன அவனுடைய கல்லூரி முதல்வரை நினைத்துத் தான். இதற்கு நீங்களோ நானோ என்ன செய்ய முடியும்?

Monday 27 August 2012

இப்படியே

abstract-art-painting-shadesofpeace உதயசங்கர்

 

சகிக்க முடியாத வாழ்வினை

வாழ்ந்து தீர்க்கவே

வாழச் சபிக்கப் பட்டிருந்தவர்

கைகளும் கால்களும் கட்டப்பட்டு

கசப்பின் கடலை ஒவ்வொரு

துளியாகக் குடிக்கும்படி

வாழ்க்கை சிறைப்படுத்தியிருந்தது

எதிரே பெருஞ்சூனியம்

திரை விரித்திருந்தது

நம்பிக்கைக்கீற்றாய்  

ஆசி வழங்கிக் கொண்டிருந்தது 

தொலைக்காட்சிப்பெட்டியில்

ஒரு வல்லூறு 

பழக்கத்தின் துருவேறிப் போனதால்

இப்போதெல்லாம்

அவரே கசப்புக்கடலின் ருசியை

வேண்டி வாழ்க்கையிடம் மன்றாடுகிறார்

கட்டப்பட்டிருந்த கை கால்களே

விடுதலையின் சின்னமென

தோன்றிய போதத்திற்குச்

சிறகுகள் முளைத்து

புன்னகை தேசத்தில்

அவரைக் கொண்டிறக்கியது

இப்படியே அவர் மகிழ்ச்சியாக

வாழ்ந்து கொண்டிருக்கிறார்

இப்படியே நான் மகிழ்ச்சியாக

வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

இப்படியே நீ மகிழ்ச்சியாக

வாழ்ந்து கொண்டிருக்கிறாய்

Sunday 26 August 2012

கடல் சிங்கத் திருவிழா

 

ஹாருகி முரகாமி

ஆங்கிலத்தில் – கிகி

தமிழில்- உதயசங்கர்

113553-haruki-murakami

ஒரு எளிய மதிய உணவுக்குப் பிறகு நான் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும்போது ஒரு கடல்சிங்கம் என்னுடைய அபார்ட்மெண்டுக்கு வந்தது. கதவைத் தட்டுகிற சத்தம் கேட்டேன். என்னுடைய முன் வாசல் கதவருகே ஒரு கடல்சிங்கம் நின்று கொண்டிருந்தது. உண்மையில் அதைப் பற்றி விசேசமாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அது ஒரு வெறும் சாதாரண கடல்சிங்கம். அவ்வளவு தான். நான் என்ன சொல்ல வருகிறேனென்றால் அது சன்கிளாஸோ, ப்ரூக்ஸ் பிரதர்ஸ் சூட்டோ அணிந்திருக்கவில்லை. உண்மையில் அதைப் பார்க்கும்போது கிட்டத்தட்ட பழைய மோஸ்தர் சீனாக்காரனைப் போலவே இருந்தது.

“ மதிய வணக்கம்! உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.. நான் உங்களைத் தொந்திரவு செய்யவில்லையென்று நினைக்கிறேன். இது நல்ல நேரம் தானே..”

என்று கடல்சிங்கம் கேட்டது.

” பரவாயில்லை.. நான் அந்தளவுக்கு பிஸியில்லை..”

என்று நான் கொஞ்சம் குழப்பத்துடனே சொன்னேன். கடல்சிங்கங்கள் ஒப்பீட்டளவில் ஆபத்தில்லாத மிருகங்கள். அவற்றைப் பற்றி பயப்படும் விதமாகவோ, கொடூரமாகவோ எதுவும் இல்லை. உங்களுடைய முன்வாசல் கதவருகே எந்த விதமான கடல்சிங்கம் நிற்கிறது என்பது பெரிய விஷயமில்லை. உண்மையில் கவலைப்படுவதற்குக் காரணமும் இல்லை. அதோடு இதைப் பார்த்தால் ஒன்றும் வித்தியாசமாகத் தெரியவில்லை.

இதையெல்லாம் தெரிந்து கொண்டது தான் உண்மையில் தொந்திரவாக இருந்தது.

“ உங்களால் ஒரு பத்து நிமிடம் எனக்கு ஒதுக்க முடியுமானால் நான் உண்மையில் நன்றியுள்ளவனாக இருப்பேன்..”

என்றது கடல்சிங்கம். நான் பழக்கத்தினால் என்னுடைய வாட்சைப் பார்த்தேன். அது தேவையில்லை. எனக்கு நேரம் இருந்தது.

” அந்த அளவுக்குக் கூட நேரம் ஆகாது..”

என்று கடல்சிங்கம் என்னுடைய எண்ணங்களைப் படித்தறிந்தது போல அவசரமாகச் சொன்னது. மேற்கொண்டு அதைப் பற்றி யோசிக்காமல் நான் அதை என்னுடைய அபார்ட்மெண்டுக்குள் அழைத்தேன். அதுமட்டுமல்ல ஒரு டம்ளர் பார்லி தேநீரையும் அதற்கு நான் கொடுத்தேன்.

” உண்மையில் நீங்கள் உங்களைச் சிரமப்படுத்தியிருக்க வேண்டாம்….”

என்று சொல்லிக் கொண்டே பாதித் தேநீரை ஒரே மடக்கில் வாய்க்குள் கவிழ்த்தது. பிறகு தன்னுடைய சட்டைப் பையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து அதனுடைய லைட்டரில் பற்ற வைத்துக் கொண்டது.

” இன்னமும் சூடா இருக்குல்ல…”

என்று கேட்டது.

” நிச்சயமாக..”

” ஆனால் காலையும் மாலையும் அவ்வளவு மோசமில்லை…”

” ஆமாம்.. ஆனால் செப்டம்பர் வந்தாச்சே..’

” ம்ம்ம்.. உயர்நிலைப்பள்ளி பேஸ்பால் போட்டிகள் ஏற்கனவே முடிஞ்சிருச்சி.. வெற்றிக்கொடியை ஜெயண்ட்ஸ் பறித்து விட்டார்கள். அதைப்பத்தி பேசறதுக்கோ.. செய்றதுக்கோ..எதுவும் இல்லை..உண்மையில் கோடை முடிந்து விட்டது..”

” நீங்க சொல்றது சரிதான்..”

கடல்சிங்கம் ஒத்துக்கொண்டு தலையாட்டியது. பின்பு என்னுடைய அபார்ட்மெண்டைச் சுற்றிப் பார்த்தது.

” என்னோட அதிகப்பிரசங்கித்தனத்துக்கு மன்னிக்கணும். இங்க நீங்க தனியா இருக்கீங்களா? “

” இல்லையில்லை… நான் என் மனைவியோடு இருக்கிறேன்.. தற்சமயம் அவ ஒரு பிரயாணத்துக்காக வெளியே போயிருக்கா..”

” உண்மையாகவா? தனித் தனித்தனியே பிரயாணம் செய்றது வேடிக்கையா இருக்கு..”

என்று சொல்லிய கடல்சிங்கம் வேண்டுமென்றே லேசான கேலிச் சிரிப்பை உதிர்த்தது.

இதெல்லாமே என்னுடைய தவறு தான். இதற்கான முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். சிஞ்சிகு நகரிலுள்ள மதுபானவிடுதியில் மிதமிஞ்சிய போதையில் கொஞ்சமும் கவலையில்லாமல் அருகில் உட்கார்ந்திருந்த கடல்சிங்கத்திடம் யாராவது பிஸினஸ் கார்டைக் கொடுப்பார்களா? எல்லோருக்கும் அது தெரிந்திருந்தது என்று நினைக்கிறேன். வேறென்ன நான் சொல்ல? மிகுந்த முன்யோசனைக்காரனான நான் அதனிடம் அதைக் கொடுத்தேன். எனக்கு வேறு வழியில்லை. நான் அதைத் தான் செய்ய வேண்டியிருந்தது. கடல்சிங்கம் அதை எடுத்துக் கொண்டது.

பிரச்னைகளுக்குக் காரணமே தவறான புரிந்து கொள்ளுதலே. நான் கடல்சிங்கங்களை விரும்பவில்லை என்பதல்ல. ஏனெனில் நான் அவற்றை வெறுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. திடீரென ஒரு நாள் என் சகோதரி ஒரு கடல்சிங்கத்தைக் கலியாணம் செய்ய விரும்புவதாகச் சொன்னால் நான் உடைந்து நொறுங்கி விடுவேன் என்பதை ஒத்துக் கொள்கிறேன். அவர்கள் ஒருவரையொருவர் காதலிப்பதாக யூகித்துக் கொண்டு அந்தத் திருமணத்துக்குத் தீவிரமான எதிர்ப்பைக் காட்டமாட்டேன். கடல்சிங்கத்தின் மீது காதலில் விழுவது நடந்தே தீரலாம்.

ஆனால் ஒரு கடல்சிங்கத்திடம் பிஸினஸ் கார்டைக் கொடுப்பதென்பது முற்றிலும் வேறு விஷயம். கடல்சிங்கங்கள் பரந்து விரிந்த பெருங்கடலின் அடையாளங்கள் என்று உங்களுக்குத் தெரியும். ஏ வந்து பி க்கு அடையாளம், பி வந்து சி க்கு அடையாளம். அப்படியென்றால் சி வந்து ஏ க்கும் பி க்கும் அடையாளமாகி விடுகிறது. கடல்சிங்கங்கள் தங்களுடைய சமூகத்தைப் பிரமீடு வடிவத்தில் கட்டியமைக்கின்றன. அதில் பெருங்குழப்பத்துக்கான வாய்ப்பு இருக்கலாம். ஆனால் அந்த பிரமீடின் உயிர்நாடியாக பிஸினஸ் கார்டு இருக்கிறது. எனவே தான் கடல்சிங்கம் எப்போதும் பிஸினஸ் கார்டுகளின் கத்தையை தன்னுடைய பிரீஃப்கேஸில் வைத்திருக்கிறது. கடல்சிங்கங்களுக்கு அந்தக் கார்டுகள் சமூகத்தில் அதனுடைய அந்தஸ்தைக் குறிப்பிடுபவையாக இருக்கின்றன. பறவைகள் மணிகளைச் சேகரிப்பதைப் போலத் தான்.

” கொஞ்ச நாட்களுக்கு முன்னால் என்னுடைய நண்பருக்கு உங்களுடைய பிஸினஸ் கார்டு கிடைத்திருக்கிறது..”

” உண்மையாகவா? நான் நன்றாகக் குடித்திருந்ததால் எனக்குச் சரியாக ஞாபகம் இல்லை..”

அது என்ன பேசிக் கொண்டிருக்கிறது என்று புரியாத மாதிரி நடித்தேன்.

” என்னுடைய நண்பன் சந்தோஷப்பட்டான்..”

என்று கடல்சிங்கம் சொன்னது. நான் பாசாங்கான சுவாரசியத்தை வரவழைத்துக் கொண்டு என்னுடைய தேநீரைக் குடித்துக் கொண்டிருந்தேன்.

” முன்னறிவிப்பில்லாமல் வந்ததற்காக மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்கிறேன்…ஆனால் உங்களைச் சந்திப்பதற்கு இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டேன்.. இந்தக் கார்டு என்னிடம் இருப்பதால்…”

” என்னிடம் இருந்து எதையாவது எதிர்பார்க்கிறீர்களா? “

” அது ரெம்பச் சின்ன விஷயம்.. நாங்கள் விரும்புவதெல்லாம் சில அடையாள உதவிகள் தான் டீச்சர்…”

கடல்சிங்கங்கள் என்று சொல்லப்படுகிற இந்த மிருகங்கள் மனிதர்களை வெளிப்படையாகவே டீச்சர் என்று அழைத்தன.

” அடையாள உதவின்னா? “

” மன்னிக்க வேண்டும் “

அது தன்னுடைய பிரீஃப்கேஸைத் திறந்து ஒரு பிஸினஸ் கார்டை என்னிடம் கொடுத்துக் கொண்டே,

” இது உங்களுக்கு விஷயத்தை விளக்கி விடும்..”

’ கடல்சிங்கத் திருவிஆழா செயற்குழுத் தலைவர் ’ நான் அந்தக் கார்டை வாசித்தேன்.

” நீங்கள் எங்களுடைய அமைப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்..”

” உண்மையில் எனக்குத் தெரியவில்லை.. ஒரு வேளை ஏதாச்சும் அதைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம்..”

என்று நான் சொன்னேன்.

” கடல்சிங்கங்களான எங்களுக்கு எங்களுடைய திருவிழா மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.. முழுக்க முழுக்க அடையாள இறக்குமதி தான். ஆனால் அந்த நிகழ்வு உலகிலுள்ள எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்..”

” ம்ம்ம்ம் “

” இந்தக் கணத்தில் எங்களுடைய எண்ணிக்கை மிகவும் குறைவு.. ஆனால் இந்த நேரத்தில்………”

திடீரெனப் பேச்சை நிறுத்தி விட்டு அதனுடைய சிகரெட்டை ஆஷ்டிரேக்குள் திணித்தது.

” இந்த உலகம் பன்முகக்கூறுகளால் நிறைந்தது.. கடல்சிங்கங்களான நாங்கள் தான் ஆன்மீகத்துக்கான பொறுப்பைத் தோள்களில் சுமந்து கொண்டிருக்கிறோம்..”

” மன்னிக்கணும்.. உண்மையில் இந்த வகையான பேச்சில் எனக்கு ஆர்வமில்லை..”

” நாங்கள் கடல்சிங்கங்களின் மறுமலர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறோம்.. இது நடக்க வேண்டுமானால் இதற்கு இணையான மறுமலர்ச்சி உலகம் முழுவதும் நிகழவேண்டும்.. கடந்த காலத்தில் எங்களுடைய குறுகிய மனப்பான்மையினால் எங்களுடைய திருவிழாவில் உங்களை அநுமதித்ததில்லை. ஆனால் உலகத்துக்கு எங்களுடைய செய்தி இன்று இது தான்.. நாங்கள் எங்களுடைய திருவிழாவை அடிப்படையில் மாற்றியிருக்கிறோம்.. எங்களுடைய திருவிழா மறுமலர்ச்சியை உருவாக்க ஒரு விசைப்பலகையைப் போல உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்…இதுவே எங்களுடைய செய்தி..”

” நீங்க என்ன சொல்றீங்கன்னு புரிய ஆரம்பிச்சிருக்குன்னு நெனைக்கிறேன்..”

” இப்ப வரைக்கும் நம்முடைய திருவிழாக்களை வெறும் திருவிழாக்களாக மட்டுமே நாம் அணுகிக் கொண்டிருக்கிறோம்.. உண்மையில் திருவிழாக்கள் அழகானவை. அவை கண்கவர் அதிசயங்கள்.. ஆனால் கடல்சிங்கங்களான நாங்கள் வாழ்க்கையே திருவிழாவுக்கான தயாரிப்பு என்றே நம்புகிறோம்.. ஏனெனில் திருவிழாக்கள் எங்களுடைய கடல்சிங்க அடையாளத்தை உணரச் செய்கிறது.. நீங்கள் விரும்பினால் அதை கடல்சிங்கத்தன்மை என்று கூட வைத்துக் கொள்ளலாம்.. தொடர்ந்த இந்த நடவடிக்கையில் தான் சுயம் அறிதல் இருக்கிறது. சுயம் அறிதல் தான் இறுதி நடவ்டிக்கையின் உச்சகட்டம்..”

” எதை உறுதி செய்யப் போறீங்க..”

” மாட்சிமைமிக்க அந்தக் காட்சியை..”

அது உளறிக்கொண்டிருந்தது எதைப்பற்றி என்று தெரியாமலேயே நான் தொடர்ந்து தலையாட்டிக் கொண்டிருந்தேன். அப்படித்தான் அவர்கள் பேசுவார்கள். அவர்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதைப் பேசி விடுவார்கள். நான் எப்போதும் கொஞ்சம் பின்வாங்கி அவர்களை முழுவதுமாக பேச விட்டு விடுவேன். கடல்சிங்கம் பேசி முடிக்கும்போது மணி இரண்டரையைத் தாண்டியிருந்தது. எனக்கு மிகுந்த அசதியாக இருந்தது.

” அவ்வளவு தான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்..நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் என்பதை அடிப்படையில் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..”

என்று கடல்சிங்கம் அமைதியாகச் சொல்லி விட்டு சூடான தேநீரைக் குடித்து முடித்தது.

” நீங்கள் உதவியை எதிர்பார்க்கிறீர்கள்..”

” இல்லையில்லை.. நாங்கள் ஆன்மீக உதவியை எதிர்பார்க்கிறோம்..”

என்று திருத்தியது. நான் என்னுடைய மணிபர்ஸை எடுத்து அதிலிருந்து இரண்டாயிரம் யென் நோட்டுகளை எடுத்து அதற்கு முன்னால் வைத்தேன்.

” மன்னிக்கணும்.. இது அதிகமில்லை தான்.. நான் நாளைக்கு என்னோட இன்ஸ்சூரன்ஸைக் கட்ட வேண்டும்..அதோடு நியூஸ் பேப்பர் சந்தாவையும் கட்ட வேண்டும்..”

என்று சொன்னேன்.

” மிக்க நன்றி.. ஒவ்வொரு துளியும் உதவும்.. இந்த எண்ணம் தான் முக்கியம்..”

என்று கடல்சிங்கம் என்னுடைய வார்த்தைகளை கையை வீசித் தடுத்துக் கொண்டே சொன்னது.

போகும்போது ‘ கடல்சிங்கம் பற்றிய அறிக்கை ‘ என்ற சிறுபிரசுரத்தையும், ‘கடல்சிங்கங்கள் உருவகங்களா ?‘ என்று எழுதப்பட்ட ஸ்டிக்கரையும் கொடுத்து விட்டுப் போனது. ஸ்டிக்கரை ஒட்டுவதற்குப் பொருத்தமான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தபோது திடீரென நினைவுக்கு வந்தது. பக்கத்து வீட்டில் சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற செலிகா. நான் அதன் விண்ட்ஷீல்டின் மத்தியில் அழுத்தமாக ஒட்டி விட்டேன். அதைப் பார்க்கும்போது உண்மையில் பசையுள்ள ஸ்டிக்கரைப் போலத் தோற்றமளித்தது. அதனால் அவன் அதைக் கிழிப்பதற்குக் கஷ்டப்படுவான்.

நன்றி- மணல்வீடு

Friday 24 August 2012

தீண்டாமையின் அர்த்தவிநோதங்கள்

 an_untitled_portrait_modern_art  

உதயசங்கர்

 

தீண்டாமை என்ற சொல் அதனுடைய எதிர்வான தீண்டுதலையும் உள்ளடக்கியே இருக்கிறது. அதே போல பருப்பொருளாகத் தீண்டப்பட முடியாதவையெல்லாம் தீண்டாமை என்ற அர்த்தத்துக்குள் அடங்குவதுமில்லை. உதாரணமாக வெளி, காலம், போன்ற கருத்துருக்களும் அன்பு, காதல், போன்ற குணநலன்களும் பருண்மையாகத் தீண்டப்பட முடியாதாவை. சமூகத்தின் விதிமுறைகளின் படி எதிர்பாலினத்தை, ஆண் பெண்ணையோ, பெண் ஆணையோ திருமணச்சடங்குகளின்றி தீண்ட முடியாது. அதே போல அடுத்தவர் மனைவியையோ, கணவனையோ சமூகக்கட்டுப்பாட்டின் படி தீண்ட முடியாது. ஆனால் இவையெல்லாம் தீண்டாமை என்ற அர்த்தத்துக்குள் வருவதில்லை. ஆக தீண்டாமையும் அதன் எதிர்வான தீண்டுதலும் வேறொரு எதிரிணைவையும் கொண்டு வருகிறது. சுத்தம் எதிர்வு அசுத்தம், அல்லது தூய்மை எதிர்வு தூய்மையின்மை என்ற சொல்லாடலையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

தீட்டு தூய்மையின்மையையும் அதைக் கழிக்கும் சடங்கு தூய்மையையும் பிரதிநிதித்துவப்படுத்துவால் தற்காலிகத் தீண்டாமையாகத் தீட்டைக் கருதுகிறார்கள். தீட்டுச் சடங்கு முடிந்த பிறகு குளித்து உடலைத் தூய்மை செய்த பின்னர் அந்தத் தற்காலிகத் தீண்டாமை மறைந்து விடுகிறது. அந்தச் சடங்கைச் செய்யும் பிராமணரும் அந்தச் சடங்கு முடிந்த பின்னர் அந்த வீட்டிலிருந்த தீட்டை ஏற்றுக் கொண்டு அவரும் தீட்டாகி விடுகிறார். அவரும் குளித்த பிறகே தற்காலிகத் தீண்டாமையிலிருந்து விடுவிக்கப்படுகிறார். வருணாசிரமப் படிநிலையிலிருக்கும் அனைத்துச் சாதியினரும் இந்தத் தற்காலிகத் தீண்டாமைக்கு ஆளாகின்றனர். தூய்மை, தூய்மையின்மை, என்ற கருத்தாக்கங்களின் வழி ஆன்மிக அதிகாரத்திலிருக்கும் பிராமணியம் இந்தத் தற்காலிகத் தீண்டாமையை எல்லோருக்கும் விதிக்கிறது.

எனவே தீண்டாமை என்பது பிராமணியத்தின் அடிப்படையாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பிராமணியம் தன்னுடைய அடிப்படைப் பண்பான தீண்டாமையை அனைத்து சாதியினரையும் பின்பற்ற வைத்ததில் பெற்ற வெற்றியே இன்று வரை பிராமணியத்தை ஆன்மீக அதிகாரத்தில் வீற்றிருக்க வைத்திருக்கிறது. தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் தீண்டாமையை வாழ்வின் ஆதார நிகழ்வுகளுடன் பிறப்பு, இறப்பு, திருமணம், எல்லாவற்றுடனும் இணைத்து என்றென்றும் தன் நிலையை அசையாமல் இருக்க வழி வகை செய்துள்ளது. இதற்குள் இருக்கும் பொருளாதாரப்படிநிலையினையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். உழைக்கும் வர்க்கமான தலித்துகளை நிரந்தரத்தீண்டாமை நிலையில் வைப்பதன் மூலமும், அதற்கான அங்கீகாரத்தை மற்றெல்லாசாதியினரிடமிருந்தும் பெறுவதன் மூலமும் முடிவில்லாத உழைப்புச் சுரண்டலை பிராமணியம் உத்தரவாதப்படுத்தியிருக்கிறது. அசுத்தமான (?) வேலைகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட தலித்துகளை அந்த வேலைகளைக் காட்டியே தீண்டத் தகாதவர்களாக மாற்றியிருப்பது என்பது பிராமணியத் தந்திரமன்றி வேறென்ன? இதற்கான ஒப்புதலை மற்ற சாதியினரிடமிருந்து பெறுவதற்காகவே தீட்டு என்ற தற்காலிகத் தீண்டாமை என்று கருத இடமுண்டு. ஏனெனில் அசுத்தத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தி விட்டால் தீட்டு கழிந்து எல்லாப்பொருட்களையும், எல்லாமனிதர்களையும் தீண்ட முடியும் என்ற கருத்தியலையும் நடைமுறைப்படுத்தியதால், தற்காலிகமான தூய்மையின்மையை சடங்குகளின் மூலம் உடனடியாகத் தூய்மைப்படுத்தி விடலாம், ஆனால் நிரந்தமான தூய்மையின்மையை எந்தச் சடங்கின் மூலமும் தூய்மைப்படுத்த முடியாது. உண்மையில் அப்படி எந்தச் சடங்கும் தீண்டத்தகாதவர்களுக்கு இல்லை. எனவே அவர்கள் நிரந்தரமாகத் தீண்டத்தகாதவர்கள். தர்க்கபூர்வமாக எல்லா சாதியினரும் இந்தக் கருத்தியலுக்கு வந்து சேரும் வகையில் மனுதர்மசாஸ்திரத்தைக் கட்டமைத்திருக்கிறது.

சாதியப்படிநிலையில் கீழ்நிலையில் இருக்கும் தலித்துகளைப் போல சாதியப்படிநிலையில் மேல் நிலையில் இருக்கும் பிராமணரும் தீண்டத்தகாதவரே. அவரும் பிற சாதியினரைத் தீண்ட முடியாது. பிற சாதியினரும் அவரைத் தீண்ட முடியாது. அப்படி யாரையேனும் அவர் தீண்டி விட்டாலோ, அல்லது அவரை யாரேனும் தீண்டி விட்டாலோ அவர் தீட்டாகி விடுகிறார். அவர் குளித்தபிறகே அவருடைய மடி நீங்குகிறது. ஆனால் அவரைத் தீண்டியவர்கள் தீட்டாவதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். அவர்கள் குளித்து தீட்டைக் கழிக்க வேண்டியதில்லை. இது அப்படியே தலைகீழாக தலித்துகளிடம் நிகழ்கிறது. தீண்டத்தகாதவர் மற்றவர்களைத் தொட்டு விட்டாலோ அல்லது மற்றவர்கள் அவர்களைத் தொட்டு விட்டாலோ தீண்டத்தகாதவர் தீட்டாவதில்லை. அவர்கள் குளித்து மற்றவர்கள் தீண்டிய தீட்டைக் கழிப்பதில்லை. ஆனால் அவரைத் தொட்டவர்கள் அல்லது அவரால் தொடப்பட்டவர்கள் தீட்டாகி விடுகிறார்கள். அவர்கள் குளித்து தங்களுடைய தீட்டைக் கழிக்கிறார்கள். இரண்டு நிலைகளில் இருக்கும் தீண்டத்தகாதவர்களில் எவ்வளவு மாறுபாடு? மேல்நிலையிலுள்ள பிராமணர் தீண்டத்தகாதவரேயாயினும் அவர் தீண்டியதற்காக அல்லது அவரைத் தீண்டியதற்காக மற்றவர்கள் குளிப்பதில்லை. ஆனால் அவர் குளிக்கிறார். அதே போல கீழ்நிலையில் வைக்கப்பட்ட தீண்டத்தகாதவர் மற்றவர்களைத் தீண்டியதற்காகவோ, அல்லது தீண்டப்பட்டதற்காகவோ அவர் குளிப்பதில்லை, ஆனால் மற்றவர்கள் குளிக்கிறார்கள். ஏனெனில் மேல்நிலையில் உள்ள தீண்டத்தகாதவரிடம் ( பிராமணரிடம் ) ஆன்மீக அதிகாரம் இருக்கிறது. எனவே அவர் தீண்டத்தகாதவராக இருப்பதற்காக பெருமைப்படுகிறார். மற்றவர்களையும் அவர் தீண்டத்தகாதவராக இருப்பதற்காகப் பெருமைப்பட வைக்கிறார். ஆனால் கீழ்நிலையில் உள்ள தீண்டத்தகாதவரிடம் இழிவும் அவமானமும் மட்டுமே இருக்கின்றன.

ஆக ஒரே செயலை முற்றிலும் வேறுபட்ட இரண்டு எதிர்நிலைகளில் செயல்பட வைப்பதில் பிராமணியமும், மனுதர்மமும் வெற்றி பெற்றிருக்கின்றன. தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்றால் நாம் கேள்வி முறையின்றி கடைப்பிடித்து வரும் சடங்குகளை ஒழிக்க வேண்டும். மனுதர்மசாஸ்திரத்தை ஒழிக்க வேண்டும். பிராமணியத்தை ஒழிக்க வேண்டும். அப்போது தான் முழுமையான மனித விடுதலை சாத்தியமாகும்.

DSC01492

Thursday 23 August 2012

ஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்

உதயசங்கர்

Motohiko_Odani_Stunning_Sculptures_1

தொலைந்து போனவர்கள்

சாத்தியங்களின் குதிரையிலேறி

வனத்தினுள்ளோ

சிறு புல்லினுள்ளோ

கடலுக்குள்ளோ

சிறு மீனுக்குள்ளோ

மலையினுள்ளோ

மரத்திலுறைந்தோ

எங்கோ

எப்போதோ

எப்படியோ

தொலைந்த பின்னும்

ஆற்று மணலைப் போல

கதைகளாகத் திரும்புகிறார்கள்

கொலையுண்டதாகவோ

நோய்வாய்ப்பட்டதாகவோ

பெரும்பணக்காரனாகவோ

ரவுடியாகவோ

பிச்சையெடுத்துக் கொண்டோ

சாமியாராகவோ

காமாந்தகனாவோ

பைத்தியக்காரனாகவோ

அகதியாகவோ

போராளியாகவோ

தியாகியாகவோ

வேற்று நாட்டிலோ

வேற்று ஊரிலோ

எண்ணற்ற கதைகளாக

கலந்து விடுகிறார் காற்றில்

உயிருடன் இருந்தாலும்

மரணித்திருந்தாலும்

யாரும் விடை காணமுடியாத

யாருக்கும் விடை தெரியாத

கதைகளை எழுதிய எழுத்தாளராகி

என்றும் புதிராய்

வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஆனால்.

ஆசைப்பட்டாலும்

அத்தனை சுலபமில்லை.

தொலைந்து போவது

Wednesday 22 August 2012

டிட்வாலின் நாய்

 

சாதத் ஹசன் மண்ட்டோManto-02

ஆங்கிலத்தில்- காலித் ஹசன்

தமிழில்- உதயசங்கர்

ராணுவவீரர்கள் பல வாரங்களாகவே அரணாக அவரவர் நிலைகளில் இருந்தனர். ஆனால் ஒவ்வொருநாளும் சடங்குக்காக ஒரு டஜன் சுற்று பரஸ்பரம் சுட்டுக் கொள்வதைத் தவிர சண்டை என்று ஒன்றும் இல்லை. சீதோஷ்ண நிலை மிகவும் ரம்மியமாக இருந்தது. காட்டுமலர்களின் வாசனையால் காற்று நிரம்பிக் கனத்திருந்தது. இயற்கை தன் வழியே போய்க் கொண்டிருந்தது. படைவீரர்கள் பாறைகளுக்குப் பின்னே மலைத்தாவரங்களைச் சூடித் தங்களை உருமாற்றிக் கொண்டு ஒளிந்திருப்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை. பறவைகள் எப்போதும் போல பாடின. மலர்கள் பூத்துக் குலுங்கின. தேனீக்கள் சோம்பேறித்தனமாக இரைந்தன.

ஒரு குண்டு வெடிக்கும்போது தான் பறவைகள் திடுக்கிட்டு பறந்து செல்கின்றன. ஏதோ இசைக்கலைஞன் தன் வாத்தியத்தில் ஒரு அபஸ்வரத்தைத் தட்டியது போல. அது செப்டம்பர் மாதத்தின் கடைசி. வெப்பமாகவும் இல்லை. குளிர்ச்சியாகவும் இல்லை. அதைப் பார்க்கும்போது கோடைகாலமும் குளிர்காலமும் தங்களுக்குள் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டமாதிரி இருந்தது. நீலவானத்தில் பஞ்சுமேகங்கள் நாள் முழுவதும் ஏரியின் மீது மிதக்கும்படகுகளைப் போல மிதந்து கொண்டிருந்தன.

படைவீரர்கள் முடிவில்லாத, எதுவுமே பெரிதாய் ஒன்றும் நிகழாத இந்த யுத்தத்தினால் களைப்புற்றிருந்தனர். அவர்களுடைய நிலைகளை தாக்கி வெல்ல முடியாது. அந்த இரண்டு குன்றுகளும்- அதில் தான் அவர்கள் இருந்தனர் – எதிர் எதிராக இருந்தன. இரண்டும் ஒரே விதமான உயரம். அதனால் யாருக்கும் சாதகமில்லை. கீழே பள்ளத்தாக்கில் வேகமாகச் செல்லும் ஒரு ஓடை கற்படுக்கையின் மீது பாம்பைப் போல வளைந்து நெளிந்து சென்று கொண்டிருந்தது.

விமானப்படை இந்த யுத்தத்தில் ஈடுபடுத்தப்படவில்லை. இரண்டு தரப்பினரிடமும் பெரிய துப்பாக்கிகளோ, பீரங்கிகளோ இல்லை. இரவில் அவர்கள் பெரும் தீயை மூட்டுவார்கள். அந்தக் குன்றுகளில் எதிரொலித்து வரும் அவர்களின் குரலை ஒருவருக்கொருவர் கேட்பார்கள்.

இப்போது தான் கடைசிச் சுற்று தேநீர் முடிந்தது. நெருப்பு குளிர்ந்து விட்டது. வானம் தெளிந்து விட்டது. காற்றில் குளிர்ச்சி பரவியிருந்தது. கூரான, இனிய தேவதாரு மரக்காய்களின் மணம் வீசியது. படைவீரர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே உறங்கி விட்டனர். இரவுக் காவலரான ஜமேதார் ஹர்னாம்சிங் மட்டும் விழித்திருந்தார். இரண்டு மணியளவில் அவன் காவலை ஏற்றுக் கொள்ள காண்டாசிங்கை எழுப்பிவிட்டான். பிறகு அவன் படுத்துக் கொண்டான். ஆனால் தூக்கம் வானத்திலிருந்த நட்சத்திரங்களைப் போல அவன் கண்களிலிருந்து வெகுதூரத்திலிருந்தது. அவன் ஒரு பஞ்சாபிக் கிராமியப்பாடலை முணுமுணுக்கத் தொடங்கினான்.

“ ஒரு ஜோடி செருப்பு வாங்கி வா என் காதலா

நட்சத்திரங்கள் பதித்த ஒரு ஜோடி செருப்பு

வேண்டுமானால் நீ உன் எருமையை விற்றுவிடு

ஆனால் எனக்கு வாங்கி வா

நட்சத்திரங்கள் பதித்த ஒரு ஜோடி செருப்பு “

அந்தப் பாட்டு அவனை உணர்ச்சிவயப்படுத்தியது. உற்சாகத்தையும் தந்தது. அவன் ஒருவர் பின் ஒருவராக மற்றவர்களையும் எழுப்பினான். பாண்டாசிங் அங்கிருந்த படைவீரர்களில் இளமையானவன். இனிமையான குரலையுடையவன். “ஹீர் ரஞ்சா” பஞ்சாபி துயரக்காதல் காவியத்திலிருந்து ஒரு காதல் கவிதையைப் பாட ஆரம்பித்தான். ஒரு ஆழ்ந்த சோகம் அவர்கள் மீது கவிந்தது. அந்தச் சாம்பல் நிறக்குன்றுகள் கூட அந்தப் பாடலின் துயரத்தில் மூழ்கியது போல இருந்தது.

இந்த மனநிலையை ஒரு நாயின் குரைப்பொலி தகர்த்தது. ஜமேதார் ஹர்னாம்சிங்,

” எங்கேருந்து இந்தப் பொட்டைநாய்க்குட்டி முளைச்சி வந்தது…”

என்று சொன்னான். அந்த நாய் மீண்டும் குரைத்தது. அதன் சத்தம் மிக அருகில் கேட்டது. புதர்களில் சலசலப்பு தெரிந்தது. பாண்டாசிங் துப்பறிவதற்காக எழுந்து போனான். ஒரு சாதாரணக் கலப்பின நாயைக் கயிற்றில் கட்டி இழுத்து வந்தான். அது வாலை ஆட்டிக் கொண்டிருந்தது.

” நான் இதை புதர்களுக்குப் பின்னாலக் கண்டுபிடிச்சேன்.. அது எங்கிட்டே அதோட பேரு ஜுன் ஜுன்னு சொல்லிச்சு”

என்று பாண்டாசிங் சொன்னான். எல்லோரும் வெடித்துச் சிரித்தனர்.

அந்த நாய் ஹர்னாம்சிங்கிடம் சென்றது. அவன் அவனுடைய சாமான்பையிலிருந்து பிஸ்கட்டை எடுத்துத் தரையில் எறிந்தான். அந்த நாய் அதை மோந்து பார்த்தது. பின்னர் அதைச் சாப்பிடப்போகும் போது ஹர்னாம்சிங் அதைத் தட்டிப் பறித்தான்.

” நில்லு.. நீ ஒரு பாகிஸ்தான் நாயா இருந்தா..”

அவர்கள் எல்லோரும் சிரித்தனர். பாண்டாசிங் அந்த மிருகத்தைத் தட்டிக் கொடுத்தான். பின்னர் ஹர்னாம்சிங்கிடம்,

” ஜமேதார் சாகிப்.. ஜுன் ஜுன் ஒரு இந்திய நாய்..”

என்று சொன்னான்.

” நீ உன் அடையாளத்தை நிருபிச்சுக் காட்டு..”

ஹர்னாம்சிங் அந்த நாய்க்கு ஆணையிட்டான். அது தன்னுடைய வாலை ஆட்ட ஆரம்பித்தது.

” இது அத்தாட்சியில்லை.. எல்லாநாயும் தான் வாலை ஆட்டும்..”

என்று ஹர்னாம்சிங் சொன்னான். பாண்டாசிங்,

” அவன் பாவம் ஒரு அகதி “

என்று நாயின் வாலோடு விளையாடிக் கொண்டே சொன்னான். ஹர்னாம்சிங் ஒரு பிஸ்கட்டை அந்த நாயிடம் எறிந்தான். அதைக் காற்றிலேயேக் கவ்விக் கொண்டது.

“ நாய்கள் கூட இப்போ அவங்க இந்தியரா பாகிஸ்தானியான்னு முடிவு செய்ஞ்சுக்கணும்..”

என்று படைவீரர்களில் ஒருவன் குறிப்பிட்டான். ஹர்னாம்சிங் தன்னுடைய சாமான் பையிலிருந்து இன்னொரு பிஸ்கட்டை எடுத்தான்.

“ எல்லா பாகிஸ்தானியரும் நாய்கள் உட்பட சுடப் படுவார்கள்..”

என்று சொன்னான். உடனே ஒரு படைவீரன்,

” இந்தியா ஜிந்தாபாத்..”

என்று கத்தினான். அந்த நாய் பிஸ்கட்டை கடிக்கப்போனது அப்படியே நின்று விட்டது. தன்னுடைய வாலை கால்களுக்கிடையில் நுழைத்துக் கொண்டு பயந்துபோய் நின்றது. ஹர்னாம்சிங் சிரித்தான்.

” நீ ஏன் உன்னோட சொந்த நாட்டைப்பார்த்துப் பயப்படுறே…? இங்க பாரு ஜுன் ஜுன் இந்தா இன்னொரு பிஸ்கட்..”

திடுதிப்பென்று காலைப் பொழுதின் வெளிச்சம் யாரோ இருட்டறையில் விளக்கைப் போட்டதைப் போல பரவியது. அது டிட்வால் என்றழைக்கப்பட்ட அந்தப் பிரதேசத்தின் குன்றுகள் மீதும் பள்ளத்தாக்குகளிலும் படர்ந்தது.

யுத்தம் பல மாதங்களாகத் தொடர்ந்து கொண்டேயிருந்தது. யார் வெற்றி பெறுவார்கள் என்று யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.

ஜமேதார் ஹர்னாம்சிங் அவனுடைய பைனாகுலர் வழியாக அந்தப் பகுதியை ஆராய்ந்து கொண்டிருந்தான். எதிர்புறமாக இருந்த குன்றிலிருந்து புகை எழுந்து வந்ததைப் பார்க்க முடிந்தது. அப்படியென்றால் இவர்களைப் போலவே எதிரியும் காலையுணவைத் தயாரிப்பதில் சுறுசுறுப்பாக இருக்கிறான்.

பாகிஸ்தான் ராணுவத்தின் சுபேதார் ஹிம்மத்கான் அவனுடைய பெரிய மீசையை ஒரு முறை முறுக்கி விட்டுக் கொண்டே டிட்வால் பகுதியின் வரைபடத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் அவனுடைய வயர்லெஸ் ஆபரேட்டர் அந்தப் படைப்பிரிவுக் கமாண்டரிடமிருந்து உத்தரவுகளைப் பெறுவதற்காகத் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தான். சில அடி தூரத்தில் பஷீர் என்ற படைவீரன் பாறையில் சாய்ந்தபடி தரையில் உட்கார்ந்திருந்தான். அவனுடைய துப்பாக்கி அவனுக்கு முன்னால் கிடந்தது.

“ எங்கே கழித்தாய் இரவை என் அன்பே! என் நிலவே! எங்கே கழித்தாய் இரவை! “

என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தான். பாடலில் சந்தோஷமடைந்த அவன் இன்னும் சத்தமாக வார்த்தைகளை ரசித்துப் பாட ஆரம்பித்தான். திடீரென அவன் சுபேதார் ஹிம்மத்கானின் அலறலைக் கேட்டான்.

” எங்கே கழித்தாய் இந்த இரவை?”

ஆனால் இது பஷீரைப் பார்த்தல்ல. அவன் கத்தியது ஒரு நாயைப் பார்த்து. சிலநாட்களுக்கு முன்பு அது எங்கிருந்தோ அவர்களிடம் வந்து சேர்ந்தது. அந்த முகாமில் சந்தோஷமாகத் தங்கியிருந்தது. திடீரென நேற்று இரவு காணாமல் போய் விட்டது. ஆனால் இப்போது அது செல்லாத காசைப் போலத் திரும்பி வந்து விட்டது.

பஷீர் புன்னகைத்தான். அந்த நாயைப் பார்த்துப் பாட ஆரம்பித்தான்.

” எங்கே கழித்தாய் இந்த இரவை

எங்கே கழித்தாய் இந்த இரவை? “

ஆனால் நாய் வாலை மட்டும் ஆட்டியது. சுபேதார் ஹிம்மத்கான் ஒரு மிட்டாயை அதனிடம் வீசியபடியே,

” அதுக்குத் தெரிந்ததெல்லாம் வாலை ஆட்டறது மட்டும் தான்..முட்டாள்..”

என்று சொன்னான். அப்போது பஷீர்,

” அது கழுத்தில என்ன சுத்தியிருக்கு..?”

என்று கேட்டான். படைவீரர்களில் ஒருவன் அந்த நாயைப் பற்ரி இழுத்தான். கழுத்தில் கிடந்த கயிற்றுப்பட்டியைக் கழட்டினான். அதில் ஒரு சிறிய அட்டை கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது.

” என்ன சொல்லுது அது..”

என்று வாசிக்கத் தெரியாத அந்தப் படைவீரன் கேட்டான். பஷீர் முன்னால் வந்து கொஞ்சம் கஷ்டப்பட்டு எழுதியிருப்பதைக் கண்டுபிடித்தான்.

” அது ஜுன் ஜுன்னு சொல்லுது..”

சுபேதார் ஹிம்மத்கான் தன்னுடைய புகழ் வாய்ந்த மீசையை இன்னுமொரு தடவை திருகி விட்டுக் கொண்டே,

” பஷீரேய்..! அது ரகசிய வார்த்தை.. வேற எதாச்சும் சொல்லுதா..?”

என்று கேட்டான்.

” ஆமாம் சார்.. அது ஒரு இந்திய நாய்ன்னு சொல்லுது..”

உடனே சுபேதார் ஹிம்மத்கான்,

” அப்படின்னா என்ன அர்த்தம்? “

என்று கேட்டான். பஷீர் தீவிரமாக,

” ஆனால் அது ரகசியம்..”

என்று பதிலளித்தான்.

” அப்படி ரகசியம் இருந்தா அது ஜுன் ஜுன்கிற வார்த்தையில தான் இருக்கும்..”

என்று இன்னொரு படைவீரன் தன்னுடைய புத்திசாலித்தனமான யூகத்தைத் துணிந்து வெளிப்படுத்தினான்.

சுபேதார் ஹிம்மத்கானும்,

” ஏதாச்சும் இருக்கலாம்.. அதிலே..”

என்று குறிப்பிட்டான். கடமையுணர்வுடன் பஷீர் மீண்டும் அதை முழுவதுமாக வாசித்தான்.

” ஜுன் ஜுன் இது ஒரு இந்திய நாய்..”

சுபேதார் ஹிம்மத்கான் வயர்லெஸ் போனை எடுத்தான். அவனுடைய படைப்பிரிவு கமாண்டரிடம் அவர்களுடைய முகாமில் நாய் திடீரெனத் தோன்றியது, முந்திய இரவில் மறைந்து போனது, மறுபடியும் இன்று காலையில் திரும்பியது என்று விவரமாகச் சொன்னான். படைப்பிரிவு கமாண்டர்,

” நீ என்ன பேசிக்கிட்டிருக்கே. .”

என்று கேட்டார்.

சுபேதார் ஹிம்மத்கான் மீண்டும் அந்த வரைபடத்தை ஆராய்ந்தான். அவன் ஒரு சிகரெட் பாக்கெட் அட்டையைக் கிழித்தான். அதிலிருந்து ஒரு சிறிய துண்டை எடுத்து பஷீரிடம் கொடுத்து,

” இப்ப இதில குர்முகியில.. அதான் அந்தச் சீக்கியர்களோட பாஷையில எழுது..”

என்று சொன்னான்.

” நான் என்ன எழுதணும்..?”

”ம்ம்…..நல்லது…”

திடீரென பஷீருக்கு ஒரு ஆவேசம் தோன்றியது.

” சுன் சுன் ஆமாம் அது தான் சரி.. நாம ஜுன் ஜுன்னை சுன் சுன்னால எதிர்ப்போம்..”

சுபேதார் ஹிம்மத்கானும் அதை ஆமோதிக்கிற மாதிரி,

” பிரமாதம்.. அதோட இதையும் சேத்துக்கொ.. இது ஒரு பாகிஸ்தானிய நாய்..”

என்று சொன்னான். அவனே நாயின் கழுத்துப்பட்டியில், எழுதிய அந்தக் காகிதத்தைத் திணித்து,

” இப்ப போய் உன்னோட குடும்பத்தோட சேந்துக்கோ..”

அவன் அதற்கு சாப்பிட ஏதோ கொடுத்தான். பிறகு,

” இங்க பாரு நண்பா.. நம்பிக்கைத் துரோகம் கூடாது.. நம்பிக்கைத் துரோகத்துக்குத் தண்டனை மரணம் தான்..”

என்று சொன்னான்.

அந்த நாய் வாலை ஆட்டிக் கொண்டே அதனுடைய உணவைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. பிறகு சுபேதார் ஹிம்மத்கான் அந்த நாயை இந்திய நிலையைப் பார்த்த மாதிரி திருப்பி,

” போ..இந்தச் செய்தியை எதிரிட்ட கொண்டு போ.. ஆனால் திரும்பி வரணும்.. இது உன்னோட கமாண்டரின் கட்டளை..”

என்று சொன்னான். நாய் வாலை ஆட்டியபடியே அந்த இரண்டு குன்றுகளுக்கு நடுவேயுள்ள பள்ளத்தாக்கிற்குச் செல்லும் வளைந்த மலைப்பாதை வழியே கீழே இறங்கியது. சுபேதார் ஹிம்மத்கான் அவனுடைய துப்பாக்கியை எடுத்து காற்றில் சுட்டான்.

பகலில் இந்த மாதிரி விஷயங்களுக்கு இது கொஞ்சம் சீக்கிரம் என்று இந்தியர்கள் குழப்பமடைந்தனர். ஏற்கனவே சலிப்பில் இருந்த ஜமேதார் ஹர்னாம்சிங் கத்தினான்.

“ நாம அவங்களுக்குத் திருப்பிக் கொடுப்போம்..”

இரண்டு பக்கமும் ஒரு அரை மணி நேரத்துக்கு துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டனர். உண்மையில் அது முழுவதுமே காலவிரயம்தான். கடைசியில் ஜமேதார் ஹர்னாம்சிங் கொடுத்தவரை போதும் என்று கட்டளையிட்டான். அவன் அவனுடைய நீளமான தலைமுடியைச் சீவினான். கண்ணாடியில் அவனைப் பார்த்துக்கொண்டே, பாண்டாசிங்கிடம்,

“ எங்கே போச்சு..அந்த நாய்..ஜுன் ஜுன் “

என்று கேட்டான். அதற்கு பாண்டாசிங்,

” நாய்கள் எப்போதுமே வெண்ணெயைச் சீரணிப்பதில்லைன்னு....பழமொழி இருக்கே..”

என்று தத்துவார்த்தமாகச் சொன்னான். திடீரென கண்காணிப்புப் பணியிலிருந்த படைவீரன்,

“ அதோ அந்த நாய் வருது..” என்று கத்தினான்.

ஹர்னாம்சிங், “ யாரு ?” என்று கேட்டான். அதற்கு அந்தப் படைவீரன்,

” அது பேரென்ன? ஜுன் ஜுன்..”

என்று பதில் சொன்னான். உடனே ஹர்னாம்சிங்,

” அது என்ன செய்யுது..”

என்று கேட்டான். அந்தப்படைவீரன் பைனாகுலர் வழியே கூர்ந்து பார்த்துக் கொண்டே,

” அது நம்மைப் பாத்து வருது..”

என்று பதில் சொன்னான். ஜமேதார் ஹர்னாம்சிங் அவனிமிருந்து பைனாகுலரைப் பறித்து அதன் வழியே பார்த்துக் கொண்டே,

“ அது தான்.. அது கழுத்தில ஏதோ சுத்தியிருக்கே.. இரு..இரு.. அது பாகிஸ்தான் மலையிலிருந்து வருதே..ஙொத்தாலோக்க..”

என்று சொன்னான். அவன் அவனுடைய துப்பாக்கியை எடுத்து குறி பார்த்துச் சுட்டான். துப்பாக்கிக்குண்டு அந்த நாய் எங்கிருந்ததோ அதற்கு அருகில் எங்கோ பாறையில் பட்டுத் தெறித்தது. அந்த நாய் நின்று விட்டது.

சுபேதார் ஹிம்மத்கான் இந்தச் சத்தத்தைக் கேட்டதும் அவனுடைய பைனாகுலர் வழியே பார்த்தான். அந்த நாய் ஒரு சுற்று சுற்றித் திரும்பி வந்த வழியே திரும்பியது.

” தைரியசாலி யுத்தகளத்தை விட்டு ஓட மாட்டான்.. முன்னேறிப்போ.. உன் வேலையை முடி “

என்று அந்த நாயைப் பார்த்து அவன் கத்தினான். அதைப் பயமுறுத்த பொதுவான திசையில் துப்பாக்கியால் சுட்டான். அதேநேரம் ஹர்னாம்சிங்கும் சுட்டான். அந்த நாய்க்கு சில அங்குல தூரத்தில் குண்டு பாய்ந்து சென்றது. காதுகளை படபடவென அடித்துக் கொண்டு காற்றில் துள்ளி விழுந்தது. சுபேதார் ஹிம்மத்கான் மறுபடியும் சுட்டான். சில கற்களில் பட்டுச் சிதறியது.

அது மிக விரைவில் அந்த இரண்டு படைவீரர்களுக்கான விளையாட்டாக மாறி விட்டது. உயிர் பயத்தில் நாய் சுற்றிச் சுற்றி வட்டமடித்துக் கொண்டேயிருந்தது. ஹிம்மத்கானும், ஹர்னாம்சிங்கும் பயங்கரமாகச் சிரித்தனர். அந்த நாய் ஹர்னாம்சிங்கை நோக்கி ஓடத் தொடங்கியது. அவன் சத்தமாக அதை வைதுகொண்டே சுட்டான். துப்பாக்கிக் குண்டு நாயின் காலில் பாய்ந்தது. அது ஊளையிட்டது. திரும்பி ஹிம்மத்கானை நோக்கி ஓடத் தொடங்கியது. அதைப் பயமுறுத்துவதற்காகச் சுடப்பட்ட குண்டுகளைத் தான் அங்கேயும் சந்திக்க வேண்டியிருந்தது.

” தைரியமான பையனாய் இரு.. உனக்குக் காயம் பட்டாலும் உனக்கும் உன் கடமைக்குமான இடைவெளியிலிருந்து அசையாதே… போ…போ…போ…”

என்று பாகிஸ்தானி கத்தினான்.

நாய் திரும்பியது. அதன் ஒரு கால் இப்போது சுத்தமாய் உபயோகமில்லாமல் ஆகி விட்டது. அது காலை இழுத்துக் கொண்டு ஹர்னாம்சிங்கை நோக்கி நகர்ந்தது. அவன் தன்னுடைய துப்பாக்கியை எடுத்துக் கவனமாகக் குறி பார்த்துச் சுட்டுக் கொன்றான்.

சுபேதார் ஹிம்மத்கான் பெருமூச்சு விட்டுக் கொண்டே,

” பாவம் அந்தப் பயல் தியாகியாகி விட்டான்..”

என்று சொன்னான். ஜமேதார் ஹர்னாம்சிங் இன்னமும் சூடாக இருக்கும் அவனுடைய துப்பாக்கியின் குழலைத் தடவிக்கொடுத்துக் கொண்டே,

” அது ஒரு நாயைப் போலச் செத்தது..”

என்று முணுமுணுத்தான்.

நன்றி- தி எண்ட் ஆஃப் கிங்டம் அண்டு அதர் ஸ்டோரிஸ்.

நன்றி- மலைகள் இணைய இதழ்

Tuesday 21 August 2012

தீட்டு, தீண்டாமை, விலக்குதல்…….

 

உதயசங்கர்

Mohan Das (99)

இந்திய சமூகத்தின் நடைமுறை வாழ்வில், தீட்டு, தீண்டாமை, விலக்குதல், இந்த மூன்று செயல்களும் மிக முக்கியமானவையாகக் கடைப்பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எந்தக் கேள்வியுமின்றி, எந்த விமர்சனப்பார்வையுமின்றி இவற்றை மக்கள் மனதார ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இதை பண்பாட்டு விழுமியங்களாக, பாரம்பரிய உன்னதங்களாகக் கருதுபவர்களும் இருக்கிறார்கள். அதனால் தான் சாதாரண மக்களே,

“ அதுக்காக நம்ம பாரம்பரியத்தை, பழக்க வழக்கத்தை சம்பிரதாயத்தை விட்டுர முடியுமா? “

“ தீட்டுக் கழியாம எங்கேயும் போகக் கூடாது..”

“ அதைத் தொடாதே.. தீட்டாயிரும்..”

என்று சொல்வதைக் கேட்க முடிகிறது. அது மட்டுமல்ல. ஜனநாயகஎண்ணம் கொண்டவர்களுக்குக் கூட இந்த கொடிய நடைமுறைகள் கண்ணை உறுத்துவதில்லை. அநுதாபமும், பரிதாபமும், உதவியும் செய்தால் போதுமானது என்ற சிந்தனை வருகிறது. ஒட்டு மொத்தமாக இந்த நடைமுறைகளை ஒழிப்பதற்கான செயல் திட்டம் பண்பாட்டுத் தளத்தில் துவங்கப்பட வேண்டியிருக்கிறது. அதற்கு முதலில் பிராமணியமும், மனுதர்மமும் எப்படி தீட்டை, தீண்டாமையை, விலக்குதலை, மக்கள் மனதில் தந்திரமாகப் புகுத்தியது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இவற்றின் உள்ளார்ந்த தத்துவம் என்ன? என்பதையும் அந்தத் தத்துவத்தின் நடைமுறைகள் என்ன? என்பதைக் குறித்தும் புரிந்து கொண்டால் தான் பண்பாட்டுத் தளத்தில் அதை எதிர் கொள்வதற்கான புதிய பண்பாட்டு ஆயுதங்களை உருவாக்கமுடியும்.

விலக்குதல், தீட்டு, தீண்டாமை, என்ற வார்த்தைகள் மேலோட்டமாகப் பார்க்க ஒரே அர்த்தமுள்ளவை போலத் தோன்றினாலும் அடிப்படையில் மிக ஆழமான வேறுபாடுகளைக் கொண்டவை. பெரும்பாலும் தங்களுடைய தொடர்பெல்லைக்கு வெளியே நிறுத்துதல் என்ற அளவில் இந்த மூன்று செயல்களும் ஒரே மாதிரியான அர்த்தம் தருவதாகக் கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் அடிப்படை வாழ்வாதாரமான உடல், உணவு, உடை, உறைவிடம், தான். ஆனால் விலக்குதலும், தீட்டும், தற்காலிகமானவை. நடைமுறையில் எல்லோர் வாழ்விலும் இந்தத் தீட்டும், விலக்குதலும், அவர்களுடைய வாழ்வனுபங்களூடாக நடக்கின்றன. தலித்துகள் உட்பட எல்லோரும் இதைக் கடைப்பிடிக்கின்றனர்.

விலக்குதலை மிகச் சாதாரணமாக, சுய காரணங்களாக, எனக்குக் கத்தரிக்காய் பிடிக்காது, எனக்கு முட்டை பிடிக்காது, சாப்பிட்டால் ஒவ்வாமை வந்து விடும். உடல் நலம் கெட்டுவிடும் அவரைப் பிடிக்காது, இவரைப்பிடிக்காது பச்சை நிறம் பிடிக்காது இன்ன பிற விஷயங்களைச் சொல்லலாமென்றால் சமூகக் காரணங்களாக ஊர் விலக்கம், சாதி விலக்கம், வீட்டு விலக்கம் என்று சொல்லலாம். சுயகாரணங்கள் ஒவ்வொரு தனிநபரைப் பொறுத்தும் மாறிக் கொண்டேயிருக்கும். ஒவ்வொருவருடைய விருப்பு வெறுப்புகளைப் பொறுத்தும் வேறு வேறு பொருட்கள், வேறு வேறு நபர்கள், வேறு வேறு விஷயங்கள் என்று மாறிக் கொண்டேயிருக்கும். அதே போல சாதி விலக்கம், ஊர் விலக்கம், வீட்டு விலக்கமும் ஒரு இனக்குழு அல்லது சாதியின் எழுதப்படாத விதிமுறைகளைப் பின்பற்றாததற்கான தண்டனையாக அந்த இனக்குழு அல்லது சாதியின் கூட்டுச் சமூகம் எடுக்கிற முடிவுப்படி ஒரு தனி நபர் அல்லது ஒரு குடும்பம் அந்த இனக்குழு அல்லது சாதியிலிருந்து விலக்கப்படும். ஆனால் இதில் மிக முக்கியமான விஷயம் விலக்கப்பட்ட அந்தத் தனிநபர் அல்லது குடும்பம் மீண்டும் அந்த இனக்குழு அல்லது சாதியில் மீண்டும் சேருவதற்குப் பரிகாரம் உண்டு. அதை அந்த இனக்குழு அல்லது சாதியின் கூட்டுச் சமூகமே பரிகாரத்தைச் சொல்லிவிடும். பரிகாரம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இதே மாதிரி தான் ஊர் விலக்கமும், வீட்டு விலக்கமும். இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் விலக்குதலுக்கு பரிகாரம் இருக்கிறது என்பதும் அதைச் செய்தால் மீண்டும் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்பது தான். விலக்குதல் சேர்த்தலையும் இணைத்தபடியே தான் வருகிறது. இதையும் தீண்டாமை என்று சொல்லலாமென்றால் அது தற்காலிகமானது என்பது மட்டுமல்ல அதில் தீண்டுதலுக்கான நடைமுறையும் இருக்கிறது.

மனிதனின் பிறப்பு, இறப்பு, பூப்படைதல், பெண்களின் மாதவிடாய் நாட்கள், போன்றவற்றை தீட்டாக கற்பித்து வந்திருக்கிறார்கள். இதெல்லாவற்றுக்கும் அசுத்தம் எதிர்வு தூய்மை என்ற கருதுகோளை முன்வைத்தும், அசுத்தமான இடங்களில் தான் ஆவிகள் நடமாடும் என்ற கற்பிதத்தின் அடிப்படையிலும் தீட்டைக் கடைப்பிடிக்கிறார்கள். குழந்தை பிறந்த வீடென்றால் பதினாறு நாட்கள் கழித்து தாயையும், குழந்தையும் வீட்டோடு சேர்க்க ‘ வீடு சேர்த்தல் ‘ என்ற சடங்கை நிகழ்த்துகிறார்கள். அன்றிலிருந்து வீட்டுக்குள் தாயும் குழந்தையும் சேர்க்கப்பட்டு அன்றாட நடைமுறை வாழ்வில் இணைகிறார்கள். அவர்கள் இப்போது வெளியே வரலாம். எல்லோருடனும் கலந்து பழகலாம். அது வரை அவர்கள் தீட்டானவர்கள். தீண்டத்தகாதவர்கள். ஆக பிள்ளை பிறந்தவீட்டுத் தீட்டு ஒரு சடங்கின் ( பரிகாரம் ) மூலம் கழிக்கப்படுகிறது.

பெண் பூப்படைதலும் தீட்டு. அவளைத் தனியே வீட்டு முற்றத்திலோ, தனிக்குடிலிலோ, தனிமைப்படுத்தி வெளியுலகிலிருந்து விலக்கி வைத்து, தலைக்குத் தண்ணீர் ஊற்றினாலும், புண்ணியார்த்தனம் என்ற சடங்கை ( பரிகாரம் ) ஒரு பிராமணர் வந்து செய்த பிறகே அந்தத் தீட்டு கழிகிறது. தீட்டுக் கழிந்த பின்னே அந்தப்பெண் வெளியுலகோடு கலந்து பழகலாம். அது வரை இருந்த தற்காலிகத் தீண்டாமை மாறி தீண்டுதலுக்கான நடைமுறை வந்து விடுகிறது. அதன் பிறகும் அது தொடர்கிறது என்பது பெரிய கொடுமை. ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நாட்களில் பெண் தனிமைப்படுத்தப் படுவதும், மூன்று நாட்களோ ஐந்து நாட்களோ கழிந்து அவள் குளித்தபிறகு தான் வீட்டுக்குள் மற்ற பொருட்களைத் தீண்ட அநுமதிக்கப்படுவாள். அது வரை அவளுக்குத் தனித் தட்டு, தம்ளர், படுக்கை, உடை, உறைவிடம். வயதாகி மாதவிடாய் நிற்கும்வரை அந்தப் பெண் இந்தத் தற்காலிகத் தீண்டாமையிலிருந்து தப்பமுடியாது. ( இப்போது நகரங்களில் நவீன வாழ்வின் பல காரணிகளால் இந்தப் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது ) இங்கேயும் தீண்டாமை தற்காலிகமானது. தீண்டப்படுவதற்கான பரிகாரத்தையும் கொண்டிருக்கிறது.

இறப்பு வீட்டிலும் பதினாறாவது நாள் விஷேசம் முடியும் வரை அந்த வீடும் அந்த வீட்டிலுள்ள உறுப்பினர்களும் தீட்டாகவேக் கருதப்படுகிறார்கள். கருமாதி விஷேசம் ( பரிகாரம்) முடிந்ததும் அந்த வீடும், வீட்டிலுள்ளவர்களும் தீட்டுக் கழிந்தவர்களாகி விடுகிறார்கள். அதன் பிறகு அவர்கள் மற்றவர்களைத் தீண்டுவதோ மற்றவர்கள் அவர்களைத் தீண்டுவதோ தீட்டாகாது. இதுவும் தற்காலிகமான தீண்டாமை தான்.

மேலே குறிப்பிட்ட தீட்டு குறித்த முக்கியமான நிகழ்வுகளில் தற்காலிக தீட்டினால் விலக்கப்பட்ட மனிதர்களை, பொருட்களை, தீட்டு கழியுமுன்பே தீண்டிவிட்டால் தீண்டியவர் தன்னுடைய உடலைக் கழுவிச்( குளித்து) சுத்தம் செய்வதன் மூலம் உடனே அந்தத் தீட்டைக் கழித்து விடலாம். தீட்டினால் விலக்கப்பட்டவர்கள் தான் தீட்டு கழிவதற்காகக் குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து சடங்கு நடத்திய பின்பே மற்றவர்களைத் தீண்ட முடியும். ஆனால் மற்றவர்களுக்கு அது தேவையில்லை. தீட்டுக்காரரைத் தொட்ட தீட்டை குளித்தால் போக்கி விடலாம். தீட்டு நிகழ்வுகள் நடைபெற்ற வீட்டுக்காரர்கள் சில நாட்கள் தீண்டத் தகாதவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அவர்களைத் தீண்டியவர்கள் சிறிது நேரத்துக்கு தீண்டத் தகாதவர்களாக இருந்து உடனே குளித்து தன் தீண்டாமையைப் போக்கிக் கொள்ளலாம்.

இப்படிச் சில நாட்கள், சிறிது நேரம் தீண்டத் தகாதவர்களாக, மற்றவர்களிடமிருந்து விலக்கப்பட்டவர்கள், விலக்கப்பட்ட பொருட்கள், விலக்கப்பட்ட இடம், சில சடங்குகளைச் செய்வதன் மூலம் மீண்டும் தீண்டத்தக்கவர்களாக மாறுகிறார்கள். இப்படி தன் வாழ்நாள் முழுவதும் பிறப்பு, சாவு, பூப்படைதல், மாதவிடாய் காலம், என்று மாறி மாறி தற்காலிகமாகத் தீண்டத்தகாதவர்களாகவும், பரிகாரங்களுக்குப்பின் தீண்டத்தக்கவர்களாகவும் நிலை மாறிக் கொண்டேயிருக்க வைப்பதன் மூலம் பிராமணியம் தீண்டாமை என்ற வருணாசிரமத்தின் இழிவான நடைமுறையை எல்லோரையும் பின்பற்ற வைத்துள்ளது. இது தான் பிராமணியத்தின் இழிவான தந்திரம்.

நடைமுறையில் எல்லாசாதியினரும் தங்கள் வாழ்நாளில் சில காலம் தீட்டினால் தீண்டத் தகாதவர்களாக இருப்பதனால் தீண்டாமைக்கு அவர்களுடைய மனம் வசமாகிவிட்டது. அதை இயல்பாகப் பார்க்கும் மனநிலை உருவாகிறது. சாதியப்படிநிலையை ஏற்றுக் கொள்ள வைத்ததன் மூலம் வருணாசிரமப்படிநிலையில் கீழ் நிலையில் இருக்கும் தலித்துகளை தீண்டத்தகாதவர்களாக வைத்திருப்பதை எந்தக் கேள்வியும் இன்றி உறுதிப்படுத்தும் நடைமுறை உருவாகிறது. தலித் மக்களின் எழுச்சியை, விழிப்புணர்வைச் சகிக்க முடியாத மனநிலை பிராமணியத்தால் சமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இந்தச் சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயம், தீட்டு எல்லாம் பயன்படுகிறது. பண்பாட்டுத் தளத்தில் முற்போக்கு எண்ணம் கொண்ட எல்லோரும் குறிப்பாக இடது சாரிகள் இந்தச் சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயங்களுக்கு எதிராக சமரசமில்லாத யுத்தம் தொடுக்க வேண்டிய காலம் இது.

புகைப்படம் – மோகன்தாஸ் வடகரா

Monday 20 August 2012

காத்திருத்தல்

Modern Art101

நீ எனக்காகக் காத்திருக்க வேண்டாம்

உன் வழியில் நீ சென்று விடு

காத்திருத்தல் எவ்வளவு கொடிய துயரமென்று

நானறிவேன்

கழியும் ஒவ்வொரு கணமும்

அவமதிப்பின் விஷம் உடலில் ஏற

திருவிழாவில் கைவிட்டு விட்டுப் போன

அம்மாவைத் தேடிப் பரிதவிக்கும்

குழந்தையைப் போல தேம்பி அழும் மனதை

நானும் அறிவேன்

கோபத்தின் சிவப்புக்கொடி படபடக்க

சமாதானத்துக்கான எல்லாவழிகளும்

அடைபட்டுக் கொண்டிருக்க

காத்திருத்தல்

என்றென்றும் மறக்க முடியாத

ஒரு பயங்கரக் கனவாக மாறும்முன்பே

நீ உன் வழியில் சென்று விடு

என் முன்னே பல வழிகள்

எந்த வழி உன்னிடம் என்னைக் கொண்டு சேர்க்குமென்று

எனக்குத் தெரியவில்லை

காத்திருந்தபின்பு சந்திக்கும் அந்த நொடி

கலவிஉச்ச இன்பமே என்றாலும்

எனக்காக நீ காத்திருக்க வேண்டாம்

உன் வழியில் சென்று விடு

ஒருபோதும்

சந்திக்க முடியாத நம் சந்திப்பின்மீது

காலத்தின் கருணை பொழியட்டும்.

Sunday 19 August 2012

முன்னொரு காலத்திலே

 

ஒரு நகரம், சில நண்பர்களைப் பற்றிய நினைவுக் குறிப்புகள்

நூல்மதிப்புரை

புத்தகன்

 

இந்தப் புத்தகத்தை நீங்கள் வாசித்தால், இப்படி ஒன்றை நாமும் எழுத வேண்டும் என்ற ஆசை துளிர்ப்பது நிச்சயம். ஒவ்வொருவரும் எங்கோ பிறந்து, இடம் பெயர்ந்து, என்னவோ மாறி, புதுப்புது நண்பர்களோடு தனது பயணத்தைத் தொடந்துகொண்டு இருந்தாலும்.. பிறந்த ஊர், நம்முடைய வீட்டுக்கு முதன்முதலாக வந்த நண்பன், ஓசியில் கிடைத்த முதல் புத்தகம், எழுதியதைப்பாராட்டிய முதல் ரசிகன் என்பதெல்லாம் மறக்கமுடியாது. அப்படி சில நினைவுகளின் தாழ்வாரம் இது.

பிறிதொரு மரணம் தொகுப்பின் மூலம் தமிழ்ச்சிறுகதை உலகில் தன்னை இணைத்துக் கொண்ட உதயசங்கர், வைக்கம் முகமது பஷீர் தொடங்கி சமகாலக் கதைகள் வரை மலையாளத்தில் இருந்து தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்தவர். அவரது சொந்த நகரமான கோவில்பட்டி தான் இந்தப் புத்தகத்தின் களம். அதை ஒரு சோவியத் ரஷ்யாவாக வர்ணித்து இருப்பது தான் இதன் அடித்தளம்.

தடுக்கி விழுந்தால் கோவில்பட்டியில் ஒரு எழுத்தாளனின் udhayasankar cover1[4]தலையில் தான் முட்ட வேண்டும் என்பார்கள். ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி, உதயசங்கர், கௌரிசங்கர், வித்யாஷங்கர், தேவதச்சன், நாறும்பூநாதன், அப்பாஸ், அப்பணசாமி, மாரீஸ், ஜோதிவிநாயகம், சிவசு, சாரதி, என்று எண்ணிக்கொண்டே போகலாம். கோவில்பட்டிக்கு அந்தப் பக்கம் கி.ராஜநாராயணனும் இந்தப் பக்கம் கந்தர்வனும் இருந்தார்கள்.

80 – களின் தொடக்க காலத்தில் கிளம்பியவர் உதயசங்கர். “ இத்தனை சிறிய நகரத்தில் இத்த்னை எழுத்தாளர்கள் ஒரே காலகட்டத்தில் எழுத வந்தது போல், தமிழ்நாட்டில் வேறெங்கும் நடந்திருக்குமா என்று தெரியவில்லை. ஒரே நேரத்தில் 20 எழுத்தாளர்கள் ஒரே இடத்தில் சிந்திக்கவும், பேசவும், விவாதிக்கவுமான சூழல் இருந்தது. படைப்புச் செயல்பாட்டில் ஆரோக்கியமான போட்டி நிலவியது.” என்கிறார் உதயசங்கர்.

இவான் துர்கனேவின் ’மூன்று காதல் கதைகள்’ படித்துக் காதலர்களாகி.. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வாசித்து தோழர்களாகி, ‘சிலந்தியும் ஈயும்’ படித்து வர்க்கங்களை உணர்ந்து டி.எஸ்.எலியட் படித்து கவிஞர்களாகித் திரிந்த ஓர் இளைஞர் கூட்டத்தையே புத்தகங்கள் ஒன்று சேர்த்துள்ளது. இலக்கியம், அரசியல், சாளரங்களைத் திறந்துவிட எல்லா ஊர்களிலும் பாலு, பால்வண்ணன் போன்றவர்கள் இருக்கிறார்கள். இந்தக் கூட்டத்துக்குள் முத்துசாமி என்பவர் வருகிறார். எதுவுமே எழுதவில்லை அவர். எல்லா விவாதங்களிலும் இருக்கிறார். யோசித்துப் பாருங்கள். எல்லாஊர்களிலும் முத்துசாமிகளும் இருப்பார்கள்.

“ வாழ்க்கை தன் கொடூரமான பற்களால் பல கலைஞர்களைக் கிழித்து எறிந்திருக்கிறது. வாழ்க்கைக்குச் சவால் விட்டுக் கொண்டே, கலைஞன் ஜெயித்துக் கொண்டு இருக்கிறான். அந்த வெற்றிக்காகத் தன்னை பலியிட்டேனும்..” என்று சொல்லும் உதய்சங்கர், 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஊருக்கு வருகிறார். இந்த ஊர் அவருக்குப் பிடிக்கவில்லை. எல்லோருக்கும் முன்னொரு காலத்தில் பார்த்த ஊர் நிச்சயம் பிடிக்கும்!

வெளியீடு- வம்சி புக்ஸ், 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை. விலை ரூ 70/

நன்றி- ஜூனியர் விகடன் 22-8-12

Saturday 18 August 2012

மனதை வசப்படுத்தும் கலைஞன் வண்ணதாசன்

 

உதயசங்கர்

Vannadasan

ஒருவருடன் பார்க்காமல் பேசாமல் பழகாமல் அவரை நம் மனதுக்கு மிக நெருக்கமாக உணரமுடியுமா?, நம் குடும்பத்தில் சொந்த அண்ணாச்சி போலவோ, நீண்ட நாட்கள் ஒரே தெருவில் அருகருகே குடியிருந்து பிரிந்த, எப்போது சந்தித்தாலும் தோளில் கை போட்டு பிரியத்துடன் கைகளைப் பிடித்துக் கொண்டு ஈரம் ததும்பும் விழிகளோடு விட மறுக்கும் பாலிய சிநேகிதன் போலவோ, உரிமையுடன் அடுக்களைக்குள் சென்று குளிர்ச்சியாய் ஒரு சொம்புத் தண்ணீர் குடித்து விடும் சொந்தம் போலவோ தாமிரபரணி ஆற்றில் குளித்து வரும்போது ஈரக்கால்களில் ஒட்டிய மணல் தெருவெங்கும் பரவி ஆற்றின் மணத்தை ஊருக்கே அளிப்பதைப் போலவோ, அதிகாலைக்குளிரில் இசக்கியம்மன் படித்துறையில் உடலும் மனமும் குளிர குளிர போடும் முங்காச்சி போலவோ சந்திக்காத போதும் சந்தித்துக் கொண்டேயிருப்பதைப் போலவோ, ஏக்கம் தரும் ஒரு ஆளுமை அவர்.. தன் கலையாளுமை மூலம் எல்லோரையும் அணுக்கமாக்கிக் கொள்ளும் வல்லமை படைத்த வண்ணதாசன்.

80 – களில் கவிதை எழுதிக் கொண்டிருந்த நான் சிறுகதைகளை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, கு.அழகிரிசாமி, லா.ச.ரா, கி.ரா, சுந்தரராமசாமி, பூமணி, வண்ணதாசன், வண்ணநிலவன், என்று தேடித் தேடி வாசித்துக் கொண்டிருந்தேன். கல்லூரிப்படிப்பு முடிந்ததும் வேலை தேடுவதான பாவனையில் இலக்கியம் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது கோவில்பட்டியில் பெரும் இளைஞர்குழாம் இலக்கியவேள்வி நடத்திக் கொண்டிருந்தது. வாசிப்பு அதன் உச்சக்கட்டத்தில் இருந்தது. எங்கெங்கிருந்தோ, யார் யாரோ புத்தகங்கள் கொண்டு வந்தார்கள். போட்டி போட்டுக் கொண்டு வாசித்தோம். இருபத்திநாலுமணி நேரமும் புத்தகங்கள் ஓய்வில்லாமல் வாசிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தன. புத்தகங்களுக்காகச் சண்டைகள் நடந்தன. புத்தகங்களுக்காக பழமும் விட்டனர். அப்படி மாறிக் கொண்டே வந்த புத்தகங்களில் அந்தப் புத்தகம் வித்தியாசமாக இருந்தது. அந்தப் புத்தகத்தின் வடிவமைப்பு எங்களுக்கு அற்புத உணர்வைத் தந்தது. அப்படி ஒரு புத்தகத்தை நாங்கள் அதுவரை பார்த்ததில்லை. கலைக்கமுடியாத ஒப்பனைகள் என்ற அந்த வண்ணதாசனின் சிறுகதை நூல் எங்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. அஃக் பரந்தாமன் அதை வடிவமைத்திருந்தார். சிறுகதைகளை வாசிக்க வாசிக்க வேறொரு புதிய உலகத்துக்குள் நுழைந்த மாதிரி இருந்தது. ஆனால் நாங்கள் பார்த்த அதே பழைய உலகம் தான். வண்ணதாசன் என்ற கலைஞனின் மொழியில் புத்தம்புதிதாய் வேறொன்றாய் இந்த உலகம் தெரிந்ததே. எங்களுக்கு ஏற்கனவே தெரிந்த மனிதர்கள் இப்போது புதிதாகத் தெரிந்தார்கள். வண்ணதாசன் இந்த உலகத்தை மாற்றி விட்டார். இந்த மனிதர்களை மாற்றி விட்டார். எங்கள் மனதை மாற்றி விட்டார்.. வண்ணதாசனின் கதைகள் இந்த ரசவாதத்தை எல்லோரிடமும் ஏற்படுத்தும். நாங்கள் வண்ணதாசனின் கதைகளைக் கொண்டாடினோம்.

குறிப்பாக எனக்கு நான் வெகுநாட்களாக மறந்திருந்த புதையலின் ரகசியம் ஒன்று ஞாபகத்துக்கு வந்ததைப் போல இருந்தது. என் பாலியகாலம் முழுவதும் என் கண்ணில் ஆடியது. என் மனதில் அந்த நாட்களின் இனிமை மீண்டும் தேனாய் இனித்தது. என் பள்ளிவிடுமுறை நாட்களை கழித்த என்னுடைய ஆச்சியும் தாத்தாவும், திருநெல்வேலி மீனாட்சிபுரமும், புளியந்தோப்புத்தெருவும், சியாமளாதேவி கோவிலும், உலகம்மன் கோவிலும், சிக்கிலிங்கிராமமும், குறுக்குத்துறையும், சுப்பிரமணியன் கோவிலும், பாப்புலர் தியேட்டரும், வயக்காட்டு வழியே நடந்து போய் சினிமா பார்த்த ரத்னா தியேட்டரும், தட்டாக்குடித் தெருவும், கொக்கிரகுளமும், சுலோச்சன முதலியார் பாலமும், தாத்தாவின் விரலைப் பிடித்துக்கொண்டே நடந்து போன பாளையங்கோட்டை ஊரும், வழியில் வந்த ஊசிக்கோபுரமும், பாளையங்கோட்டை அசோக் தியேட்டரும், பாளையங்கோட்டை வாய்க்காலும், வழியெங்கும் பெரிய பெரிய மருத மரங்களும் எல்லாம் என் மனதை அலைக்கழித்தன.

காய்ந்து வெப்பம் உமிழும் தண்ணீர்ப்பஞ்சம் மிக்க கரிசல் பூமியான கோவில்பட்டி என் வாழ்விடமாக இருந்தது. புரண்டோடும் தாமிரபரணியின் கரைகளில் செழித்து எங்கும் பச்சைபசேலென்று வயக்காடுகள் நிறைந்த, தெருக்கள் தோறும் அவித்த பச்சை நெல்லின் வாசம் பொங்கிய, திருநெல்வேலி என் மனதின் கனவாக இருந்தது. வண்ணதாசனின் கதைகளைப் படித்தவுடன் என் மனதின் அடியாழத்தில் புதைந்து கிடந்த இனிய நினைவுகள் தன் சிறகுகள் விரித்து பறந்தன. நான் அந்தத் தொகுப்பிலுள்ள கதைகளை பலமுறை வாசித்தேன்.

ஏற்கனவே கோவில்பட்டியில் தர்சனா என்ற வீதி நாடகக்குழு ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது. அதில் பங்கேற்ற பல நண்பர்கள் மனோகர், வித்யாஷங்கர், கௌரிஷங்கர், போன்றவர்கள் வேலை கிடைத்தும், வேலை தேடியும் வெளியூர் சென்று விட்டனர். அதன் பிறகு நாங்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் சிருஷ்டி என்ற நாடகக்குழுவை நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது வத்திராயிருப்பில் பொன்.தனசேகரன், புதுப்பட்டி நடராஜன் அண்ணாச்சி ஆகியோர் ஏற்பாட்டில் பேரா.ராமானுஜம், மு.ராமசாமி, ராஜு, ஆகியோர் நடத்திய ஐந்து நாள் நாடகப்பயிற்சி முகாமில் நான் கலந்து கொண்டேன். நாடகப்பயிற்சியின் போது இரண்டு முறை பெண்ணாக நடிக்க வேண்டி வந்த போது என்னுடைய பெயரை தனலட்சுமி என்றே சொன்னேன். அதைக் கேட்ட புதுப்பட்டி நடராஜன் அண்ணாச்சியும், வைகை குமாரசாமி அண்ணாச்சியும் என்ன தனுமை தனலட்சுமியா? என்று கேலி செய்தார்கள். வண்ணதாசன் அந்த அளவுக்கு என்னைப் பாதித்திருந்தார்.

நான் ஒன்றிரண்டாய் கதைகளை எழுதத் துணிந்தபோது வண்ணதாசனின் பாதிப்பில் அவருடைய நடையை ஈயடிச்சான் காப்பி பண்ணி கான மயிலாட அதைக் கண்ட கோழி ஆடியதைப் போல எழுதிப் பார்த்தேன். எதுவும் தேறவில்லை. அவருடைய எழுத்தின் தனித்தன்மையை யாராலும் காப்பியடிக்க முடியாது. ஏனெனில் அது அவருடைய மனதில் எழுந்து வருகிற மனிதநேயமிக்க சுயம்புவான ராகம். அந்த ராகத்தை வேறொருவர் இசைக்க முடியாது. மனிதர்களை இத்தனை அழகாய் யாராவது வர்ணித்திருக்க முடியுமாவென்று தெரியவில்லை. நாம் அன்றாடம் பார்க்கிற உலகநாதனும், பிரமநாயகமும், ஆச்சியும், பாட்டையாவும், எப்படி இவ்வளவு அழகானவர்களாக மாறினார்கள்? சண்டையும் சல்லியமுமாய் வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதர்களா இவர்கள்? இந்த உலகம் எப்படி இவ்வளவு அழகாக மாறிப் போனது? முருங்கைப்பூக்களும், ஒரு நிமிடமும் ஓரிடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் பாய்ந்து கொண்டேயிருக்கும் அணிலும், அந்தியின் வர்ணஜாலமும், காலையில் எழுந்தவுடன் உதடுகளில் ஒட்டிக் கொள்கிற பழைய பாடலும், என்று உலகம் மாறித் தெரிவதை எப்படிக் கவனிக்கத் தவறினோம்? காட்சிச் சித்தரிப்புகளின் மூலம் மனிதர்களின் மனதை வெளிப்படுத்திய மனச்சித்திரக்காரன் வண்ணதாசன். ஒற்றைவரித் தீட்டலில் ஒரு மகத்தான மானுடநாடகத்தை உணர்த்திச் செல்லும் மகாகலைஞன். வண்ணதாசனின் கதைகளை வாசிக்கும் யாவரும் வசியப்படுத்தப் பட்டவர்களைப் போல மாறி விட நேர்வதும், அதன் பிறகு அவர்களுக்கு இந்த உலகம் அழகாகவும் அன்பாகவும் தெரிவதும் நடக்கும். அதன் பிறகான அவர்களுடைய வார்த்தைகளில் பிரியம் பொங்கும்.

82- ஆக இருக்கலாம். கோவில்பட்டி பேருந்து நிலைய வணிகவளாகத்தில் கிராஜூவேட் பரமன் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட வண்ணதாசனின் அருமை நண்பர் பரமசிவன் ஒரு டீக்கடை திறந்தார். அங்கே அவரைச் சந்திக்க அடிக்கடி வண்ணதாசன் வருவதாகக் கேள்விப்பட்டு அவரைச் சந்திக்கப் போயிருந்தேன். அந்தச் சமயத்தில் அவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் வெளிவந்திருந்தது. நான் என்னுடைய கதை வெளியாகியிருந்த செம்மலரை கையில் வைத்திருந்தேன். நெடிதுயர்ந்த, உருவமும் சாந்தமான முகமும், பாந்தமான குரலும் அணுக்கமான உடல்மொழியும் அவரோடு நீண்ட நாள் பழகிய உணர்வைத் தந்தது. என் கதையைப் படித்து விட்டு “ ஷங்கர், எழுதுங்க.. யார் என்ன சொன்னாலும் கவலைப்படாம நீங்க பாட்டுக்கு எழுதுங்க..” என்று சொன்னார். உண்மையில் அந்த வார்த்தைகள் என் ஆழ்மனதில் தங்கி விட்டது. இன்றுவரை அதைக் கடைப்பிடித்து வருகிறேன்.

வேலை கிடைத்து வடமாவட்டங்களில் ஒரு பதினான்கு வருடங்கள் சுற்றியலைந்த பிறகு மீண்டும் சொந்த ஊருக்கு வந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு வண்ணதாசனை நேரில் சந்தித்த போதும் கால இடைவெளி சிறிதுமின்றி அதே அந்நியோன்யத்துடன் அவர் உரையாடினார். அவருடைய கதைகள், கவிதைகள், கடிதங்கள், ஓவியம், பேச்சு, உரையாடல், எல்லாமும் ஒரு கலைநேர்த்தியோடு இருப்பதைக் கவனித்திருக்கிறேன். அது பலருக்கு மெனெக்கிடலாக இருக்கிறபோது அவருக்கு இயல்பாக இருக்கிறது. மனிதர்கள் மீது அவர் கொண்டுள்ள பேரன்பைப் போல.

நான் ஆறாங்கிளாஸ் அல்லது ஏழாங்கிளாஸ் படித்துக் கொண்டிருந்த சமயம் தாத்தாவுடன் பாளையங்கோட்டையிலிருந்த மாமா வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போது எங்கே சென்றாலும் நடை தான். மீனாட்சிபுரத்திலிருந்து ஆத்துக்குள் இறங்கி ( இறங்கும் முன்பு டவுசர், சட்டையைக் கழட்டிக் கையில் வைத்துக் கொண்டு ) குறுக்கே புகுந்து கொக்கிரகுளத்தில் கரையேறி அப்படியே பொடி நடையாய் பாளையங்கோட்டைக்குப் போய்விட்டு திரும்புகிற சமயத்தில் அபூர்வமாய் ஒரு டவுண் பஸ் வந்தது. அந்த பஸ்ஸை விட்டால் பிறகு ஒரு மணி நேரம் கழித்துத் தான் அடுத்த பஸ் வரும். பஸ் வந்து நின்றதும் எல்லோரும் ஏறுகிறார்கள். நான் கீழே குனிந்து பார்க்கிறேன். புழுதி மணலில் சில்லரைக் காசுகள் கொட்டிக் கிடக்கின்றன. எல்லாம் ஐந்து பைசா, பத்து பைசா, நாலணா, எட்டணா, காசுகளாகக் கிடக்கின்றன. நான் அந்தக் காசுகளை புழுதியுடன் அள்ளி டவுசர் பையில் போடுகிறேன். என் தாத்தா என்னை பஸ்ஸில் ஏறச் சொல்லிக் கத்துகிறார். இன்னும் புழுதியில் தெரிந்தும், தெரியாமலும் காசுகள் கிடக்கின்றன. எனக்கு அதை விட்டு விட்டு வர மனசில்லை. ஆனால் தாத்தா கூப்பாடு போடுகிறார். அந்தக் காசுகள் எல்லாம் அந்தக் காலத்தில் அலட்சியம் செய்யக்கூடியக் காசுகளும் இல்லை. எனக்கு அந்தக் காசுகள் ஆரஞ்சு மிட்டாய்களாக, சேவு, மிக்சராக, ஐஸ், சவ்வுமிட்டாயாகத் தெரிகிறது தாத்தாவின் சத்தத்தில் நான் பஸ் ஏறி விட்டேன். மிகப் பெரிய புதையலை விட்டு விட்ட மாதிரி ஏமாற்றமடைந்தேன். பொறுக்கிய சில்லரைகள் ஐந்தாறு ரூபாய் தேறியது என்றாலும் பொறுக்காமல் விட்ட காசுகளைப் பற்றியே கவலைப்பட்டேன். இப்போதும் கைகளில் அந்த நாணயங்களின் குளிர்ச்சி எனக்குக் கிளர்ச்சியூட்டுகிறது. அந்தக் குளிர்ச்சியை வண்ணதாசனின் கதைகளை வாசிக்கும் போது உணர்கிறேன்.

எப்போதெல்லாம் வண்ணதாசனை வாசிக்கிறேனோ, எப்போதெல்லாம் அவரைப் பற்றிப் பேசவோ, எழுதவோ செய்கிறேனோ அப்போதெல்லாம் திருநெல்வேலியின் ஸ்பரிசம் என் மனதை வருடும். தாமிரபரணியின் தாமிரவாசம் என் உடலில் தோன்றும். மீண்டும் என் பாலியகாலம் தன் வண்ணங்களின் விகசிப்பை எனக்குள் ஏற்படுத்தும். என் அபூர்வக்கனவுகளை மீண்டும் நான் காண்பேன். அதற்காகவே  மீண்டும் மீண்டும் வண்ணதாசனை வாசிப்பேன். மகத்தான கலைஞன் எங்கள் வண்ணதாசன்!

Friday 17 August 2012

எழுத்துகளின் தேசம்

உதயசங்கர்Mohan Das (28)

சின்னமுத்து ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தான். மூணாங்கிளாஸ் படித்துக் கொண்டிருக்கும் போது அவனுடைய அப்பா இறந்து விட்டார். கட்டிடவேலையில் கையாளாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது தவறி மாடியில் இருந்து விழுந்து விட்டார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் ஒரு மாதகாலம் சிகிச்சை பெற்றும் பலனில்லாமல் போய் விட்டது. அப்பாவைக் கவனிக்க வேண்டி அம்மாவும் வேலைக்குப் போகவில்லை. அதனால் ஏகப்பட்ட கடன். அம்மாவுக்கு என்ன செய்றதுன்னு தெரியல. சின்னமுத்துவின் படிப்பு நிறுத்தப் பட்டது. சின்னமுத்துவுக்கும் கடன் தொல்லையிலிருந்து தப்பிக்க வேறு வழி தெரியல. அழுகை அழுகையாய் வந்தது. ஒரு நாள் முழுக்க அழுது கொண்டிருந்தான். அம்மா ஒரு வாக்குறுதி தந்தாள். கடன் அடைந்துவிட்டால் அவனை மறுபடியும் பள்ளிக்கூடம் அனுப்பி படிக்க வைப்பதாகச் சொல்லியிருந்தாள். பாவம் அவளும் என்ன செய்வாள்.

டீக்கடை அண்ணாச்சி ரெம்ப நல்லவர். எப்போதாவது அவன் டீக்கிளாஸைக் கழுவும் போது தவறிக் கீழே விழுந்து உடைந்து விட்டால் மட்டும் அவ்ன் பிடதியில் ஒரு அடி விழும். மற்றபடி திட்டுவதோடு சரி. சின்னமுத்து சுறுசுறுப்பான பையன். துறுதுறுவென வேலை பார்த்துக் கொண்டிருப்பான். டீக்குடித்த தம்ளர்களை உடனுக்குடன் சுத்தமாகக் கழுவி வைப்பான். காலை எட்டு மணிக்கு தெருக்களில் இருக்கிற கடைகளுக்குப் போய் அங்கே வேலை பார்ப்பவர்களிடம்,

“ அண்ணே, டீ, காப்பி, பால், பஜ்ஜி, வடை, போண்டா, வேணுமாண்ணே!”

என்று கேட்டு அலைவான். அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்டு கேட்டவர்களுக்கு கேட்டமாதிரிச் சரியாகக் கொண்டு போய் கொடுப்பான். ஆள்களுக்குத் தான் எத்தனை விதமான ருசி! வித் அவுட் சுகர், அரைச்சீனி, லைட், ஸ்டிராங், டபுள்ஸ்டிராங், மலாய் போட்டு,கடுங்காபி, பிளாக் டீ, என்று புதிய புதிய வார்த்தைகளைக் கற்றுக் கொண்டான். எல்லாத்தையும் நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்வான். அண்ணாச்சியும் அழகாக அப்படியே போட்டுக் கொடுப்பார். அதையெல்லாம் கொண்டு போய் கொடுத்து விட்டு திரும்பப் போய் தம்ளர்களையும் காசையும் வாங்கிக் கொண்டு வந்து அண்ணாச்சியிடம் கொடுப்பான். சிலபேர் அப்புறம் காசு தருகிறேன் என்பார்கள். அதை நினைவில் வைத்துக் கொள்வான். அன்று இரவுக்குள் அதை வாங்கி விடுவான். ஞாபகம் வைத்திருப்பது ஒன்றும் சின்னமுத்துவுக்கு பெரிய விசயம் இல்லை. அவன் மூணாங்கிளாஸ் படித்துக் கொண்டிருக்கும் போதே பதினாறாவது வாய்ப்பாடு வரை மனப்பாடம் செய்து தப்பில்லாமல் ஒப்பிப்பானே.

மத்தியான வேளையில் வியாபாரம் கொஞ்சம் மந்தமாக இருக்கும். அப்போது தான் அண்ணாச்சியும் உட்காருவார். அவனும் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து அன்று வந்த தினசரி நாளிதழ்களை எழுத்துக் கூட்டி வாசிப்பான். ஒவ்வொரு செய்தியையும் வாசித்து முடித்தவுடன் அவனுக்கு மகிழ்ச்சி பொங்கும். பாதி நாளிதழ்களைத் திருப்புவதற்குள் மறுபடியும் வியாபாரம் சூடு பிடித்து விடும். அவன் ஏக்கத்துடன் நாளிதழை வைத்து விட்டு மறுபடியும் சுறுசுறுப்பாக அலைய ஆரம்பிப்பான். இரவு ஒன்பது மணிக்கு கடையை மூடி விட்டு வீட்டுக்கு புறப்படுவார் அண்ணாச்சி. அவனுக்கு அந்த நாளிதழ்களை வீட்டுக்குக் கொண்டு போய் படிக்கவேண்டும் என்று ஆசை ஆசையாக இருக்கும். ஒரு நாள் அண்ணாச்சி நல்லமனநிலையில் இருக்கும் போது மெதுவாகக் கேட்டான்.

“ அண்ணாச்சி..இந்தப் பேப்பரை நான் கொண்டு போகட்டா..”

“ எதுக்குலே..”

“வீட்ல.. வைச்சிப் படிக்க..”

“ இன்னம் என்னல.. படிப்பு..அதான் படிச்சி கிழிச்சிட்டீல்ல..”

என்று சொல்லி அதிர்வேட்டு போல சிரித்தார். அவன் அந்தத் தாளை எடுத்து மடித்து டவுசர் பைக்குள் வைத்துக் கொண்டான். கொஞ்ச நாளீலேயே அண்ணாச்சியின் குணாதிசயங்களைத் தெரிந்து கொண்டு விட்டான் சின்னமுத்து. வீட்டுக்குப் போய் சாப்பிட்டு முடித்ததும் உடம்பு அடித்துப் போட்டதைப் போல வலிக்கும். தூக்கம் கண்களைச் சுழற்றும். ஆனால் விளக்கைப் போட்டு, கொண்டு வந்த செய்தித்தாளை முழுவதும் படித்துவிட்டான். அவ்ன் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அம்மா கண்கலங்கினாள். சின்னமுத்துவுக்கு நாளிதழைப் படித்து முடித்ததும் அபூர்வமான புன்னகை பொங்கி வந்தது. அந்தச் சிரிப்புடனே தூங்கி விட்டான்.

ஒரு நாள் சின்னமுத்துவின் கனவில் வெள்ளைவெளேரென்று ஒரு ஊர் வந்தது. அங்கே எல்லாமனிதர்களும் கன்னங்கரேர் என்று கருப்பாய் இருந்தார்கள். என்ன ஆச்சரியம்! சின்னமுத்து அந்த ஊரின் மீது பறந்து கொண்டிருந்தான். நம்ப முடியாமல் திரும்பிப் பார்த்தால் கைகளோடு சேர்ந்து இறக்கைகள் முளைத்திருந்தன. அதை விட ஆச்சரியம் அருகில் நெருங்க நெருங்க அங்கே இருந்த மரங்கள், செடிகள், பறவைகள், பூச்சிகள், விலங்குகள், மனிதர்கள், எல்லாமே ஏதோ ஒரு எழுத்து வடிவில் இருந்தனர். குளத்தில் தண்ணீர் இல்லை. அதற்குப் பதில் குளம் முழுவதும் எழுத்துகள் நிரம்பியிருந்தன. அதில் நீந்திக் கொண்டிருந்த வாத்துகளும் எழுத்துக்களாகவே இருந்தன. எழுத்து மரத்தில் எழுத்துப்பூக்கள் பூத்திருந்தன. எழுத்துக் காய்களும் எழுத்துப்பழங்களும் தொங்கிக் கொண்டிருந்தன.

சின்னமுத்து அங்கே உள்ள ஒரு எழுத்துத் தோட்டத்தில் இறங்கினான். எழுத்துப் பட்டாம்பூச்சிகள் அவனைச் சுற்றிச் சுற்றி வந்து பாட்டுப் பாடின. அவனைப் பார்க்க ஊரிலிருந்த எல்லோரும் வந்தனர். முன்பே அவனைத் தெரிந்தவர்கள் போல அவனிடம் கைகுலுக்கிப் பேசினார்கள். எல்லோரும் அவர்களைத் தாங்களாகவே அறிமுகம் செய்து கொண்டனர். ஒருவர் அவனிடம் கைகுலுக்கியபடியே,

“ என் பெயர் ‘க’ ” என்றார். இன்னொருவர் முதுகை வளைத்தபடி வந்தார்.

“ என் பெயர் “ஏ’ “ என்று சொன்னார். சின்னமுத்துவுக்கு அவர்கள் எல்லோரும் நன்றாகத் தெரிந்தவர்களாகவே இருந்தனர். சிலர் கை குலுக்கும்போதே அவர்கள் உருவத்தைப் பார்த்து அவர்களுடைய பெயரைச் சொல்ல ஆரம்பித்து விட்டான். அவ்னுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது ஒரு சுழற்காற்று வீச ஆரம்பித்தது. எல்லா எழுத்துகளும் பறக்க ஆரம்பித்தன. “சின்னமுத்து” என்று அந்தக் காற்று அலறியது. அந்தச் சத்தத்தில் அவன் முழித்து விட்டான். அவனுடைய அம்மா அவ்ன் தலைமுடியைக் கோதி விட்டுக் கொண்டே அருகில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான்.

“ கண்ணு.. மணி ஆயிருச்சிடா.. எந்திரிச்சி பல் தேய்ச்சி குளிடா”

என்று அன்போடு சொன்னாள். அவன் எழுந்து வேலைக்குக் கிளம்பினான்.

அன்றிலிருந்து எங்கே எந்தத் துண்டு பேப்பர் கிடைத்தாலும்கூட சின்னமுத்து படித்துக் கொண்டே திரிந்தான். ரோட்டில் போகும்போது கூட படித்துக் கொண்டே போனான். ஒரு முறை டீயைக் கொட்டி விட்டான். ஒரு முறை சைக்கிளில் மோதி விட்டான். நல்லவேளை ஒருமுறை மோட்டார்சைக்கிள்காரன் பிரேக் போட்டு நிறுத்தினான். யார் என்ன திட்டினாலும் சிரித்தான். அண்ணாச்சியும் சத்தம் போட்டுப் பார்த்தார். ஆனால் அவன் வாசிப்பதை நிறுத்தவே இல்லை.

ஒரு நாள் டீக்கடை அண்ணாச்சி அவனிடம்,

“ பள்ளிக்கூடம் போறியாடா?”

என்று கேட்டார். பள்ளிக்கூடம் என்ற வார்த்தையைக் கேட்டதும் சின்னமுத்துவின் முகம் மலர்ந்தது. அவன் வேகமாகத் தலையாட்டினான். அண்ணாச்சி அவனைப் பார்த்து,

“ ஆனா கலையிலியும் சாயந்திரமும் வேலைக்கு வந்துரணும்..சரியா..”

என்று சொன்னார். சின்னமுத்து உற்சாகமாய்

“ சரி அண்ணாச்சி..” என்று கத்தினான். அவர் சிரித்துக் கொண்டே,

” நாளைக்கி உங்கம்மாவை வரச்சொல்லு..” என்று சொல்ல சின்னமுத்து உடனே,

” ரெம்ப நன்றி அண்ணாச்சி “ என்று சொன்னான். அதைக் கேட்ட அண்ணாச்சிக்கு வெட்கமாகப் போய் விட்டது. அவர் அதிர் வேட்டுப் போல சிரித்துக் கொண்டே,

“ அடச்சீ.. படுக்காளிப் பயலே ..” என்று சொல்லி சின்னமுத்துவின் கன்னத்தில் தட்டினார். சின்னமுத்துவைச் சுற்றி எழுத்துகள் பறந்து கொண்டிருந்தன. சின்னமுத்துவும் அந்த எழுத்துக்களோடு காடு, மலை, நாடு நகரங்களின் மீது பறந்து கொண்டிருந்தான்.

புகைப்படம்-மோகன்தாஸ் வடகரா

Wednesday 15 August 2012

நமது வீட்டில் புராதனச் சடங்குகள்

karpoor

உதயசங்கர்

 

கலையும், அறிவியலும், மருத்துவமும், மந்திரமும், சடங்குகளும், ஆதியில் ஒன்றாகவே இருந்தன. ஆதிமனிதன் தன் வாழ்வில் எதிர்கொண்ட எதிர்பாராத புயல், மழை, மின்னல், நெருப்பு, வெள்ளம், வறட்சி, உற்பத்திக்குறைவு, போன்ற இயற்கை உற்பாதங்களுக்கான காரணங்களை அறியாததினால் தன்னை மீறிய சக்தியினைக் கட்டுப்படுத்த மந்திரங்களை சடங்குகளைக் கண்டுபிடித்தான். சடங்குகள், மந்திரங்கள் மூலமாக தனக்கு இழப்புகள் நேராதிருக்கும் வளம் பெருகும் என்று நம்பினான். ஒரு கற்பனையான செயல் மூலமோ, போலச்செய்தல் மூலமோ, யதார்த்த வாழ்வினை மாற்றிவிடலாம் என்று நினைத்தான். இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. இயற்கையின் எல்லாப் பொருட்களிலும் ஆவி உள்ளுறைந்து இருப்பதாகவும் அவற்றின் ஆசாபாசங்களினால் தான் இயற்கையில் எல்லா உற்பாதங்களும் நிகழ்வதாகவும் முடிவு செய்தான். அவற்றிலும் நல்ல ஆவிகள் என்றும், கெட்ட ஆவிகள் என்றும் பிரிவினை இருப்பதாக நம்பினான். எனவே கெட்ட ஆவிகளைச் சடங்குகளின் மூலம், மந்திரங்களின் மூலம் சாந்தப்படுத்தினால் தனக்கு எந்த உபத்திரவமும் நேராது என்றும் அதே போல நல்ல ஆவிகளை வழிபடுவதின் மூலம் வளம் கொழிக்கும் என்றும் நம்பினான். இயற்கை சக்திகளின் இயக்கம் குறித்த அறிவின்மையினால் தனக்குப் புரியாத, தன்னை விடச்சக்தி வாய்ந்த இயற்கை நிகழ்வுகளைக் கற்பனையான செயல் மூலம் கட்டுப்படுத்திவிடலாம் என்ற அறிவியலறிவின் தொட்டில் பருவத்திலிருந்த ஆதிமனிதனின் நம்பிக்கையே ஆதியில் மந்திரங்களையும் சடங்குகளையும் தோற்றுவித்தது எனலாம்.

ஏனெனில் ஆதிமனிதன் இயற்கைப் பொருட்களையே வழிபட்டான். தனக்குத் துன்பம் தருகிற இயற்கைப்பொருட்களையும், தனக்கு அழிவை ஏற்படுத்துகிற இயற்கைப் பொருட்களையும் மட்டுமல்ல தனக்கு வளம் சேர்க்கிற இயற்கைப் பொருட்களையும் மந்திரங்கள் சடங்குகளின் வழியாக வணங்கினான். இதில் மந்திரங்கள் தான் முதலில் தோன்றியிருக்கிறது. அதன் பின்னரே சடங்குகள் தோன்றியிருக்கின்றன. ஆதியில் மனிதர்களுக்கு கடவுள் இல்லை. இயற்கையையே அவன் மந்திரங்கள் வழி வழிபட்டுக் கொண்டிருந்தான். அதனால் இயற்கையில் அவன் உற்றுக் கவனித்த நிகழ்வுகளை போலச் செய்யும் பாவனை நிகழ்வுகளையே அவன் மந்திரங்களாக உருவாக்கினான். உருளைக்கிழங்குச் செடி வளர்வதைப் பாவனையான செயல் மூலம் அவன் நிகழ்த்தினானெண்று ஜார்ஜ் தாம்சன் விளக்குவார். அதே போல மழை வேண்டுமென்றால் இடி, மின்னல், மழை போல பாவனை நடனங்கள் செய்து தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற கட்டளையிடுவதும் நடக்கும் என்று தேவி பிரசாத் சட்டோபாத்யாயா கூறுகிறார்.

ஆதியில் மனித சக்திக்கு மீறிய ஒரு சக்தியினை வழிபாடு, பலி, போன்ற செயல்களின் மூலம் வேண்டித் தாங்கள் விரும்புவதைப் பெற்று விடலாம் என்ற கருதுகோள் சில திட்டமிடப்பட்ட செயல்கள் மூலம் உருவாவதைச் சமயம் என்று சொல்லலாம்.அடிப்படையில் ஒரு விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுதலையும், வழிபாட்டையும் கொண்டது சமயமென்றால் பாவனைச் செயல்களையும் கட்டளையிடுதலையும் கொண்டது மந்திரமென்று சுருக்கமாகச் சொல்லலாம். சமயங்கள் தோன்றிய பிறகு மந்திரமும் சடங்கும் சேர்ந்து மந்திரச்சடங்குகளாகி விட்டன என்று ஆய்வாளர் ஆ. சிவசுப்பிரமணியன் சொல்கிறார்.

ஆதி மனிதன் தன் அறிவுவளர்ச்சியின் ஆரம்பக்கட்டத்தில் செய்த புராதன மந்திரச் சடங்குகள் இன்றும் நமது வீடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அறிவியலின் அற்புதங்கள் எதுவும் சமயத்தின் ஆதிக்கத்தை அசைக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல: மக்களின் பொதுப்புத்தியில் பரம்பரை பரம்பரையாக இந்த மந்திரச்சடங்குகள் சொல்லப்பட்டு கல்வெட்டு போல பதிந்திருப்பதும் ஒரு காரணம். மக்களின் பொதுப்புத்தியில் தலையிடாத வரை இந்த விதமான மந்திரச் சடங்குகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். நான்கு வகையான மந்திரச்சடங்குகள் இருக்கின்றன என்றும் தூய மந்திரம், தீய மந்திரம், உற்பத்தி மந்திரம், பாதுகாப்பு-அழிப்பு மந்திரம், என்றும் மானிடவியலாளர் பிரேசர் பிரிக்கிறார்.

வீடுகளில் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லையென்றால் உடனே நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக் கொள்வது இப்போதும் நடைபெறுகிற நிகழ்வு. மாரி நோய் வந்தவர்கள் மாரியம்மனுக்கு கண் உரு செய்து போடுவதாகவும், காலிலோ, மற்ற உடல் பகுதிகளில் வரும் நோய்கள் குணமாக அந்தந்த உடல் உறுப்புகளை செய்து காணிக்கையாகப் போடுகிற வழக்கத்தை நாம் பார்த்திருக்கலாம். அதே போல குழந்தை இல்லாதவர்கள் குறிப்பிட்ட கோவில்களில் உள்ள மரங்களில் தொட்டில் செய்து போடுவதும், இவையெல்லாம் ஒத்தது ஒத்த விளைவை உருவாக்கும் என்ற மந்திரச் சடங்கின் அடிப்படையிலேயே செய்யப்படுகின்றன. அதாவது உண்மையான உடலுறுப்பை ஒத்த செயற்கையான உடலுறுப்பை செய்து கோவிலுக்குக் கொடுப்பதாக நேர்ந்து கொள்வதின் மூலம் பாவனையான செயலைச் செய்து ( பொருளைக் கொடுத்து ) சாந்தப் படுத்துகிற வேலையை இந்த மந்திரச் சடங்கு செய்கிறது. தொட்டிலில் தன்னுடைய குழந்தையைப் போட்டு ஆட்ட வேண்டுமென்பது எல்லாப் பெண்களின் ஆசை. அந்த ஆசையை கோவில் மரத்தில் பாவனையான பொம்மைத் தொட்டிலை குழந்தைப் பொம்மையை இட்டுக் கட்டி விடுவதும் இந்த ஒத்த மந்திரத்தின் எச்சம் தான்.

சாதாரணமாக வெள்ளிக்கிழமைகளில் எல்லோர் வீடுகளிலும் வாசலில் சூடம் எரிவதைக் காணலாம். இது வியாபார ஸ்தலங்களிலும் நடக்கிறது. வீடுகளில் பெண்கள் நாலு சூடன்கட்டிகளை கைகளுக்குள் வைத்துக் கொண்டு வீட்டிலுள்ள எல்லோர் தலை, கை கால், உடல், முழுவதும் மூன்று முறை சுற்றி தூ தூ தூ வென மூன்று முறை துப்பச் சொல்லி வாசலில் கொண்டு போய் கொளுத்துவதை இப்போதும் பார்க்கலாம். அதே மாதிரி குழந்தைகளை அலங்காரம் செய்து கன்னத்தில் கருப்பாகத் திருஷ்டிப் பொட்டு வைத்து விடுவது, ஒரு கையில் உப்பையும், ஒரு கையில் மிளகாயையும் வைத்து உடல் முழுவதும் தடவி எரிகின்ற அடுப்பில் போடுவது, அப்படிப் போடும்போது “ ஊர்க்கண்ணு, உறவுக்கண்ணு, பாவிக்கண்ணு, பரப்பாக்கண்ணு, நாய்க்கண்ணு, நரிக்கண்ணு, எல்லாக்கண்ணும்….” என்று சொல்வதென்பதும், அடுப்பில் போடுகிற உப்பும்,மிளகாயும் வெடித்துச் சிதறுகிற போது “ பார்த்தியா எவ்வளவு கண்ணேறு பட்டிருக்கு..” என்று சொல்வதும் நடக்கிறது.

அதே போல முச்சந்தியில் பிடிமண்ணை எடுத்து தலை சுற்றி அடுப்பில் எரிவதும், கோழிமுட்டையை தலை சுற்றி வீதியில் எரிவதும், பூசணிக்காயைச் சுற்றி நடுச்சாலையில் போட்டு உடைப்பதும், கன்றை ஈன்ற பசுவின் நஞ்சுக்கொடியை பால் வடியும் மரங்களில் கட்டித் தொங்க விடுவதும், தொத்து மந்திரம் என்ற சடங்கின் எச்சம் தான்.

இயற்கையின் உற்பாதங்கள், எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, புதுக்கட்டிடங்கள் கட்டும் போது பூசணிக்காயைக் கட்டுவது, அகோரமாய் வைக்கோல் பொம்மை செய்து கட்டுவது, சீனிக்காரம், மிளகாய், எலுமிச்சம்பழம் இவற்றைக் கோர்த்து வண்டிகளில் கட்டுவது, காத்துக்கருப்பு அண்டாமலிருக்க கறுப்புக்கயிறு கையிலோ, காலிலோ கட்டுவது, கர்ப்பிணிப் பெண்கள் வெளியே செல்லும் போது வேப்பிலை, அடுப்புக்கரி, இரும்புத் துண்டு போன்றவற்றை கொடுத்தனுப்புவது, எல்லாம் பாதுகாப்பு மந்திரமாகும்.

நோய்கள் குணமாக, நினைத்த காரியம் பலிதமாக, தெய்வங்களுக்கு மிருகங்களை, பறவைகளைப் பலி கொடுக்க நேர்ந்து கொள்வது, தீமையை மாற்றித் தருகிற மந்திரமாகும். மழைக்காக கொடும்பாவி எரித்தலும் இத்தகைய மந்திரசடங்கே.தீமைகளை எரித்து நன்மைகளைப் பெறவே இத்தகைய பலிகள் தரப்படுகின்றன. இன்று அரசியல் தலைவர்கள், கொடுங்கோலர்கள், மக்கள் விரோதிகள், ஆகியோரின் கொடும்பாவி எரிப்பையும் இந்த மந்திரச்சடங்கின் எச்சமாகவே கொள்ளலாம்.

ஆவிகள் உறைந்திருக்கும் காடுகளிலிருந்து மரங்களை வெட்டியெடுத்துக் கொண்டு வந்து கட்டிடங்கள் கட்டும் போது அந்த மரங்களுடன் அந்த ஆவிகளும் சேர்ந்து வந்து கட்டிடங்களில் குடியேறிவிடும் என்பது பழைய நம்பிக்கை. அந்த ஆவிகளை வெளியேற்றவே தச்சுக்கழித்தல் என்ற சடங்கு. கட்டிடங்களில் வேலை செய்த தச்சாசாரியே அந்தச் சடங்கைச் செய்கிறார். கோழியின் தலையை அறுத்து அதன் ரத்தத்தை நிலை,கதவு, ஜன்னல், மற்ற மரவேலைகள் உள்ள இடங்களில் தடவுவதின் மூலம் மரங்களின் வழியாக வந்த ஆவிகளை ரத்தவாடை காண்பித்து ஈர்த்துக் கொண்டு போய் வெளியேற்றுகிற சடங்கு தான் தச்சுக்கழித்தல்.

இந்தச் சடங்குகள் எல்லாம் ஆதியிலிருந்தே சிற்சில மாற்றங்களுடன் இன்று வரை தொடர்ந்து கொண்டேயிருக்கும் புராதனச் சடங்குகள். இவற்றில் பிராமணமதத்தின் சடங்குகளும் கலந்து குழம்பியிருக்கின்றன. இன்றளவும் இந்தச் சடங்குகளில் பெரும்பாலானவை வெகுமக்களால் தீவிரமாக பின்பற்றப்படுகின்றன. அர்த்தமற்ற இந்தச் சடங்குகளின் தாத்பரியம் பற்றித் தெரியாமலேயே நமது வீடுகளிலும், அலுவலகங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நாமும் மௌன சாட்சிகளாக மக்களின் பொதுப்புத்தியில் தலையிடும் திட்டங்களின்றி அமைதியாக இருக்கிறோம். அறிவியலின் மகத்தான சாதனைகள் எதுவும் மக்களுடைய பொதுப்புத்தியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மக்களின் பொதுப்புத்தி என்பது தர்க்கசாஸ்திரத்தையோ, நிரூபணங்களையோ, எதிர்பார்ப்பதில்லை. அதற்கு நம்பிக்கை மட்டுமே போதுமானது. மக்களின் பண்பாட்டை ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்திக் கொண்டு போவது இந்தப் பொதுப்புத்தி தான் என்பதை நாம் உணர்ந்தோமானால் இதன் முக்கியத்துவம் புரியும். பழைய நம்பிக்கைகளில் நாம் தலையிடுவதென்பது பழைய பிற்போக்கான பண்பாட்டு விழுமியங்களில் தலையிடுவதென நாம் உணரவேண்டும். அப்போது இத்தகைய சடங்குகளின் காலப்பொருத்தமின்மை குறித்து நாம் மற்றவர்களுக்கு விளக்க வேண்டும். அதன் மூலம் மக்களின் பொதுப்புத்தியில் புதிய அறிவியல்பூர்வமான தர்க்கஞானத்தை உருவாக்க முடியும். இல்லையென்றால் அரசியலில் முற்போக்காகவும், பொதுப்புத்தியில் பிற்போக்கான மக்கள் திரளோடு நாம் எதிர் நோக்கும் உன்னத லட்சியத்தை அடைவதற்கு மிகுந்த காலதாமதமாகும்.

புதிய பண்பாட்டு மேலாண்மைக்கான பயணத்திசையில் பயணம் துவங்க வேண்டிய தருணம் இது. அதற்கான வேலைத் திட்டங்களை உடனடியாக உருவாக்க வேண்டும்.

Tuesday 14 August 2012

ஐந்து பேரும் ஒரு வீடும்

உதயசங்கர்children 01

 

கையூர் என்ற ஊரில் சுட்டான், பாம்பான், மோதிரான், சுண்டான், கட்டையான், என்று ஐந்து சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து பகலில் கடுமையாக உழைத்தனர். உழைப்பில் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருந்ததால் எத்தனை கடினமான வேலையையும் மிக எளிதாக அவர்கள் செய்து முடித்தனர். அவர்களுடைய உழைப்பினால் வயல் செழித்தது. தானியங்கள் ஏராளமாய் விளைந்தன. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.

இரவில் அவர்கள் அனைவரும் உறங்குவதற்கு ஒரு முற்றவீடு இருந்தது. அந்த முற்றவீட்டில் அவர்களே தூண்களாகவும், கூரையாகவும் மாறிப் பாதுகாப்பாக ஓய்வு எடுத்துக் கொண்டனர். விடிந்ததும் அவர்கள் உற்சாகமாய் வேலைக்குக் கிளம்பி விடுவார்கள்.

ஒரு நாள் இரவில் தூக்கம் வராமல் சுண்டான் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தது. அதற்குக் காரணமும் இருந்தது. அன்று மதியம் வேலை செய்து கொண்டிருந்தபோது, கட்டையான் சுண்டானைப் பார்த்து,”ஏலேய்..சோனிப் பயலே..நல்லாப் பாத்துப் பிடிலேய்…” என்று திட்டியது.

இதைக் கேட்டதும் சுண்டானின் முகம் சுண்டி விட்டது. அப்போதிலிருந்து சுண்டானுக்கு ஒரு விபரீத எண்ணம் தோன்றிக் கொண்டேயிருந்தது. சுண்டான் இரவெல்லாம் யோசித்து யோசித்து ஒரு திட்டம் தீட்டியது.

காலையில் எழுந்தவுடன், பாம்பானையும், சுட்டானையும், மோதிரானையும், தனித்தனியே பார்த்துப் பேசியது. கட்டையானின் கர்வத்தை அடக்க வேண்டும் என்று தந்திரமாய் பேசியது. எல்லோரும் சேர்ந்து அவனை விரட்டவேண்டும் என்றது. அதை மற்றவர்களும் முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் சுண்டான் அதையும் இதையும் சொல்லி மற்ற அனைவரையும் ஏற்றுக் கொள்ளச் செய்து விட்டது. அன்று மாலைவரை கட்டையானுடன் மற்ற நான்கு பேரும் சண்டை போட்டுக் கொண்டேயிருந்தனர். கட்டையான் கோபித்துக் கொண்டு போய் விட்டான்.

கட்டையான் போன பிறகு வேலை கடுமையாகத் தெரிந்தது. இரவில் அனைவரும் உறங்க முற்றவீட்டுக்கு வந்தனர். அயர்ந்து போய் படுக்கலாம் என்று வந்தால் ஒரு தூணும், கூரையின் ஒரு பகுதியும் இல்லை. அது கட்டையானின் இடம். அதனால் அந்த முற்றவீடு ஒரு பக்கமாகச் சாய்ந்து விட்டது. குளிர்ந்த காற்று உள்ளே வர ஏதுவாக இருந்தது. யாராலும் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.

மறுநாள் காலையில் சோர்வுடன் அனைவரும் எழுந்தனர். அன்று வேலையே பார்க்க முடியவில்லை. முன்பு மிக எளிதாக செய்த வேலைகள் இன்று மிகக் கடினமாக இருந்தன. சரியாக உறக்கமும் இல்லாததால் மத்தியானத்துக்குள் நான்கு பேரும் அசந்து விட்டனர். வேலை செய்யவே முடியவில்லை. அப்போதே முடிவு செய்து விட்டனர். போய் கட்டையானைக் கூப்பிட்டுக் கொண்டு வந்து விடவேண்டும்.

கட்டையானைக் கூட்டிக் கொண்டு வந்ததும், சுட்டானும்,மோதிரானும், பாம்பானும், சேர்ந்து சுண்டானைக் குறை சொல்ல ஆரம்பித்தனர். சுண்டானை வெளியேற்ற வேண்டும் என்று கூப்பாடு போட்டனர்.

கட்டையான் அவர்களை அமைதிப் படுத்தியது.

“மறுபடியும் சுண்டான் செய்த தவறையே நீங்களும் செய்யக் கூடாது. நான் சுண்டானைத் திட்டியதும் தவறு தான்..நாம் ஐந்து பேரும் ஒற்றுமையாக் இல்லாவிட்டால் இந்த உழைப்பும் அதன் பலன்களும் இல்லை. அதே போல நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது..அதைத் தெரிந்துகொண்டாலே போதும்.. ஒருவருக்கொருவர் பொறாமைப்படவோ, வெறுப்படையவோ தேவையில்லை..” என்று கட்டையான் சொன்னது.

அதைக் கேட்ட சுண்டானும் மனம் நெகிழ்ந்து எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டது.

அன்றிலிருந்து அந்த ஐந்து பேரும் முற்றவீட்டில் சுகமாக வாழ்ந்து வந்தனர்.

Sunday 12 August 2012

ப்ளம் பழத்தில் கல்

தால்ஸ்தோய்

தமிழில்- உதயசங்கர்

images (2)

அம்மா இரவு உணவுக்குப் பிறகு குழந்தைகள் சாப்பிடுவதற்காக கொஞ்சம் ப்ளம் பழங்களை வாங்கி வைத்திருந்தாள்.எல்லாப் பழங்களையும் ஒரு தட்டில் வைத்து மேஜை மீது வைத்திருந்தாள்.வான்யா இது வரை ப்ளம் பழமே சாப்பிட்டதில்லை.எனவே பழங்களை மோப்பம் பிடித்துக் கொண்டே இருந்தான்.

அவன் அதை மிகவும் விரும்பினான். ஒரு பழத்தையாவது சாப்பிட்டுப் பார்க்க அவனுக்கு அடக்க முடியாத ஆசை வந்தது.பழங்களைச் சுற்றிச் சுற்றியே அலைந்து கொண்டிருந்தான்.சாப்பாட்டுஅறையில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு பழத்தை எடுத்துச் சாப்பிட்டு விட்டான்.அம்மா சாப்பிடுவதற்கு முன்பு பழங்களை எண்ணிப் பார்த்தாள்.ஒரு பழம் குறைந்திருப்பதைக் கண்டு பிடித்தாள்.அவள் உடனே அதை அப்பாவிடம் சொன்னாள்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அப்பா,”குழந்தைகளே, யாராச்சும் ஒரு ப்ளம் பழத்தைச் சாப்பிட்டீங்களா?” என்று கேட்டார்.எல்லோருமே “இல்லை” என்று சொன்னார்கள்.முகம் சிவந்து போன வான்யாவும்,”இல்லை நான் சாப்பிடலை..”என்று சொன்னான்.

அப்பா,”நீங்க யாராச்சும் சாப்பிட்டிருந்தா அது நல்லதில்லை..ஏன்னா ப்ளம் பழத்துக்குள்ளே சின்னக் கல் இருக்கும். அதை எப்படிச் சாப்பிடணும்னு தெரியாம கல்லை முழுங்கிட்டா, கண்டிப்பா அவங்க மறுநாளே செத்துருவாங்க.. அதான் நான் பயப்படறேன்..”என்று சொன்னார்.

இதைக் கேட்டதும் வான்யாவின் முகம் வெளுத்து விட்டது.உடனே அவசர அவசரமாக”நான் அந்தக் கல்லை சன்னல் வழியே தூர எறிஞ்சிட்டேனே..” என்று சொன்னான்.

எல்லோரும் சிரித்தனர்.வான்யாவுக்கு அழுகை வந்தது.

Saturday 11 August 2012

கடல்பிரயாணத்தில் அதிசயங்கள்

மலையாளத்தில் – மாலி

தமிழில் – உதயசங்கர்

Josies-beach-calm-sea

ஒரு ஊரில் அந்தோணி என்று ஒரு பையன் இருந்தான். அவனுடைய அப்பா ஒரு செம்படவன். அந்தோணியை அவனுடைய அப்பா கடலுக்குள் கூட்டிப் போனதில்லை. ஏனெனில் அந்தோணி ரெம்பவும் சின்னப்பையன். அவனுடைய அப்பா ஒவ்வொரு நாளும் கலையில் தனியே கடலுக்கு மீன் பிடிக்கப் போவார்.

தானும் கடலுக்குப் போகவேண்டும் என்று அந்தோணிக்கு ஆசை தோன்றியது.ஆனால் அவனிடம் படகு இல்லை.துடுப்பு இல்லை. வலை இல்லை. எல்லாவற்றையும் சேகரிக்கவேண்டும்.

அந்தோணி குருவியம்மாவைப் பார்த்தது.

”குருவியம்மா! எனக்கு ஒரு முட்டைத்தோடு தாயேன்..” என்று அது கேட்டது.

“அந்தோணி! நேத்து என்னோட ஒரு முட்டை உடைஞ்சி ரெண்டாயிருச்சி..அதிலிருந்து என்னோட குருவிக்குஞ்சு வந்திருச்சி..உடைஞ்ச அந்த முட்டையோட பாதியை நீ எடுத்துக்கோ..” என்று குருவியம்மா சொன்னது.

அந்தோணி வாத்துமாமாவைப் பார்த்தான்.

”வாத்து மாமா! எனக்கு ஒரு ஜோடி துடுப்பு தாயேன்..” என்று கேட்டான்.

“என்னோட காலில் கட்டுற துடுப்புதானே அந்தோணி! எங்கிட்ட ஆறு ஜோடி துடுப்பு இருக்கு..ஒருஜோடியை நீ எடுத்துக்கோ..” என்று வாத்துமாமா சொன்னது.

அந்தோணி சிலந்தியண்ணனைப் பார்த்தது.

“சிலந்தியண்ணே! எனக்கு ஒரு வலை தாயேன்.” என்று அது வேண்டியது.

“அந்தோணி! நான் ஒரு புது வலை பின்னியிருக்கேன்.. அதை நீ எடுத்துக்கோ..” என்று சிலந்தியண்ணன் சொல்லியது.

அந்தோணி முட்டைதோட்டைக் கடலில் இறக்கினான். அதில் ஏறிக்கொண்டான். பின்பு, வாத்துமாமாவின் துடுப்புகளை வீசினான். அப்படியே கடலுக்குள் சென்று விட்டான். பின்பு சிலந்திவலையை எடுத்து வீசினான்.

சிலந்தி வலையில் ஒரு திமிங்கிலம் சிக்கியது.

“என்னைக் கொல்லாதே!” என்று யாசித்தது.

“உன்னைக் கொல்லாம இருந்தா எனக்கு என்ன தருவே?” என்று அந்தோணி கேட்டான்.

“புதுசா சில அதிசயங்கள காட்டுறேன்..” என்று திமிங்கிலம் சொன்னது.

அந்தோணி திமிங்கிலத்தை சிலந்திவலையிலிருந்து விடுவித்தான். திமிங்கிலம் அந்தோணியின் முட்டைத்தோடுபடகில் ஏறியது.திமிங்கிலமே வாத்துத்துடுப்பினால் தண்ணீரை வலித்தது. அவர்கள் திமிங்கிலத்தின் வீட்டைச் சென்று அடைந்தார்கள். அங்கே திமிங்கிலத்தின் மனைவி, நான்கு குழந்தைகள், இருந்தார்கள். அவர்கள் அந்தோணிக்கு நிறைய பெரிய பந்துகளைக் கொடுத்தனர். பச்சை,நீலம், சிவப்பு, முதலான நிறங்களில் உள்ள பவழப்பந்துகள்.அந்தோணி, திமிங்கிலம், திமிங்கிலத்தின் மனைவி, திமிங்கிலக்குட்டிகள், எல்லோரும் முட்டைத்தோடு படகில் ஏறினர். இப்போது எல்லோரிலும் இளைய திமிங்கிலக்குட்டி படகு வலித்தது.

முன்னால் அடர்ந்த சிவப்பில் ஒரு வெளிச்சம்!.

“என்ன அது?” என்று அந்தோணி கேட்டான்.

“அதுவா கடல்தீ” என்று திமிங்கிலத்தின் மனைவி சொன்னாள்.

கடல் முழுவதும் தீ பிடித்து எரிகிறது. குளிர்ந்த தீ. முட்டைத்தோடுபடகு கடல்தீக்குள் புகுந்து முன்னே சென்றது. அந்தப் பக்கத்தில் என்ன இருக்கிறது? வளைந்தவில் போன்ற பாலம். ஏழு நிறங்களில் அந்தப் பாலம் ஒளிர்ந்தது.

“இது என்ன பாலம்?” என்று அந்தோணி கேட்டான்.

“வானவில்பாலம்..” என்று மூத்த திமிங்கிலக்குட்டி சொன்னது.

இந்தப் பக்கத்துக் கடல், அந்தப் பக்கத்துக்கடல், ரெண்டையும் சேர்ப்பதுதான் வானவில்பாலம். முட்டைத்தோடுபடகு எல்லோருடன் வானவில்பாலத்தில் ஏறி அந்தப் பக்கத்தில் இறங்கியது. அந்தப் பக்கத்தில் மஞ்சள்கடல். அங்கேயும் ஒரு வானவில்பாலம். அதற்கு அப்புறம் வெள்ளைக்கடல். அங்கேயும் ஒரு வானவில்பாலம். அப்படியே தொடர்ந்து போய்க்கொண்டேயிருந்தது.

வெகு நேரம் ஆகி விட்டது.

“அப்பா வருவதற்கு முன்பு நான் வீட்டுக்குப் போகணும்..இல்லேன்னா அப்பா கோபப்படுவார்..” என்று அந்தோணி சொன்னார்.

திமிங்கிலம் வாலினால் தண்ணீரில் மூன்று முறை அடித்தது. முன்னால் ஒரு காற்று வந்து நின்றது. அது ஒரு புயற்காற்று.

“திமிங்கிலசாமி! தங்களுக்கு என்ன வேண்டும்?” என்று புயற்காற்று கேட்டது.

“அந்தோணியை உடனே அவன் வீட்டில் கொண்டு போய் சேர்க்கணும்” என்று திமிங்கிலம் ஆணையிட்டது.

திமிங்கிலம்,திமிங்கிலத்தின்மனைவி, திமிங்கிலக்குட்டிகள்,-எல்லோரும் முட்டைத்தோட்டிலிருந்து இறங்கினார்கள்.அந்தோணி மட்டும் முட்டைத்தோட்டுப் படகில் இருந்தான். புயற்காற்று முட்டைத்தோட்டுப் படகைக் கையில் எடுத்தது. பின்பு ஒரே ஊது! முட்டைத்தோடுப்படகு வானத்தில் பறந்து போய்விட்டது. அஞ்சே அஞ்சு நிமிசம். முட்டைத்தோடுபடகு, அந்தோணி, வாத்துத்துடுப்பு, சிலந்திவலை, எல்லாம் அந்தோணியின் வீட்டில் இருந்தார்கள்.

அந்தோணி முட்டைத்தோட்டை குருவியம்மாவுக்குக் கொடுத்தான். வாத்துதுடுப்புகளை வாத்துமாமாவிடம் கொடுத்தான்.சிலந்திவலையை சிலந்தியிடம் கொடுத்தான்.

மாலையில் அப்பா வந்தார். அந்தோணி எல்லாவற்றையும் விவரமாக சொன்னான்; எள்ளளவு வித்தியாசமும் இல்லாமல்.

அப்பா சொன்னார்: “நான் நம்புறேன்..”

Friday 10 August 2012

பாய்மரப்பாடல்

உதயசங்கர்

Mohan Das (17)

ததும்பிக் கொண்டிருக்கிறது என் கோப்பை

பீத்தோவனின் இசைக்கோர்வையை

தன் உடலில் வரைந்து திமிறிய

கடலின் அலைகளைப் போல

உயர்ந்தும் தாழ்ந்தும்

எதையோ வேண்டுகிறது உன்னிடம்

துடிதுடிப்புடன் தன் இதயத்தை

உன் திசை நோக்கிப் படகாய் செலுத்துகிறது 

உயிர்க்காற்றின் காதலைச்

சடசடக்கும் பாய்மரத்துணியில் 

பாடல்களாய் எழுதுகிறது 

நடுங்கும் உன் உதடுகளின்

கரைகளில் சலசலக்கும் சிற்றோடையாய்

ஊர்ந்து உன் உயிரை

என் கடலில் முத்தெடுக்க

அழைக்குமென் கோப்பையின்

குரல் கேட்கிறதா?

ததும்பும் என் கோப்பைக்கும்

உன் உதடுகளுக்கும் உள்ள தூரத்தில்

ஊஞ்சலாடுகிறது.

என் வாழ்வும் சாவும்

புகைப்படம் – மோகன்தாஸ் வடகரா

Thursday 9 August 2012

ரத்தக்காட்டேரி டிரைவர்

 

ஹாருகி முரகாமி

 

ஆங்கிலத்தில்- கிகி

 

தமிழில்- உதயசங்கர்

113553-haruki-murakami

சில நேரங்களில் மோசமான விஷயங்களும், மோசமான அதிர்ஷ்டமும் சேர்ந்து குவியும். ஆனால் அது ஒரு பொதுக்கருத்து தான். எனினும் ஒரே மனிதனுக்கே தொடர்ந்து மோசமான விஷயங்கள் நடந்து கொண்டிருந்தால், மேலும் மேலும் அது குவிந்து கொண்டேயிருந்தால், அப்புறம் அது ஒருபோதும் பொதுவானதில்லை. அது தனிப்பட்டதாக மாறி விடுகிறது. அந்த வகையில் பொதுக்கருத்து என்று யோசிப்பது எந்த உதவியும் செய்யாது. ஏனெனில் அது அனுதாபத்தையே விரும்புகிறது. இப்படி இந்த விஷயங்கள் எல்லாம் இன்று எனக்கு நடந்தது என்று எண்ணிப்பாருங்கள். நான் யாருக்காகக் காத்துக் கொண்டிருந்தேனோ அந்தப் பெண்ணைத் தவற விட்டுவிட்டேன். என்னுடைய உள்ச்சட்டையின் பொத்தானைக் காணவில்லை. நான் சந்திக்க விரும்பாத ஒருவரை ரயிலில் சந்தித்தேன். பல்வலியின் முதல் குத்தல்வலியை உணர்ந்தேன். அப்புறம் இப்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. நான் ஒரு வாடகைக்காரில் மாட்டிக் கொண்டேன். ஒரு விபத்து காரணமாக போக்குவரத்து குழப்பத்தில் சிக்கிக் கொண்டேன். யாராவது இதையெல்லாம் பொதுவான விஷயங்கள் என்று சொன்னால் அவரைக் கல்லைக் கொண்டு எறிவேன். நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களில்லையா?

இதனால் தான் மற்றவர்களோடு ஒத்துப்போவது ரெம்பக் கஷ்டமாக இருக்கிறது. சிலசமயங்களில் நான், என் வாழ்க்கையை வாசலில் கிடக்கும் ஒரு நல்வரவுப்பாயாகக் கற்பனை செய்கிறேன். வாசலில் கதவுக்கருகில் சும்மா கிடந்துகொண்டு என்னுடைய நேரத்தையெல்லாம் கழித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அநேகமாக நல்வரவுப்பாய் உலகத்திலும் ஒருவர் பொதுமைப்படுத்தவும் கூடும். நல்வரவுப்பாய்களுக்கும் அவர்களுக்கேயுரித்தான பிரச்னைகள் இருக்கும், அவர்களுக்கேயுரிய உயர்வுதாழ்வுகள் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நாம் என்ன செய்ய முடியும்? இது பெரிய விஷயமாக இல்லாமலும் இருக்கலாம்.

எது எப்படியோ நான் ஒரு வாடகைக்காரில் போய்க் கொண்டிருக்கிறேன். மாட்டிக்கொண்ட உணர்வுடனும், சிக்கிக் கொண்ட உணர்வுடனும். காரின் மேற்கூரையில் மழை விழுந்து அடிக்கிறது. என்னால் விட்டு விட்டு வரும் மீட்டரின் கிளிக் ஓசையைக் கேட்க முடிகிறது. காரின் கூரை மீது மழை மோதும் சத்தம் ஒரு இயந்திரத்துப்பாக்கியால் என் மூளையைத் துளைப்பது போல இருக்கிறது.

விஷயங்கள் இன்னும் சிக்கலாகுவதற்குக் காரணம் நான் மூன்று நாட்களுக்கு முன்பு தான் சிகரெட்டை விட்டிருந்தேன். நான் எதையாவது யோசித்து நேரம் போக்க முயற்சி செய்தேன். ஆனால் மூளையில் எதுவும் தோன்றவில்லை. அதனால் நான் ஒரு பெண் வரிசைக்கிரமமாக ஆடை கழற்றுவதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தேன். முதலில் கண்ணாடி, பின்னர் கைக்கடிகாரம், அடுத்தது மென்மையான உலோகச் சத்தத்துடன் கழற்றப்படுகிற பிரேஸ்லெட், அதன் பிறகு………..

“ மன்னியுங்கள் “ காரின் டிரைவர், சட்டையின் முதல் பொத்தானை கழற்றுகிற் என் கவனத்தைத் திருப்பிக் கேட்டார்.

“ ரத்தக்காட்டேரிகள் உண்மையில் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? “

“ ரத்தக்காட்டேரிகள்? “ என்று திருப்பிச் சொன்ன நான் அமைதியாகி விட்டேன். நான் காரின் பின்னோக்குக் கண்ணாடி வழியே டிரைவரைப் பார்வையிட்டேன். அவரும் திருப்பி பின்னோக்குக் கண்ணாடி வழியே என்னைப் பார்த்தார்.

“ ரத்தக்காட்டேரிகன்னு நீங்க சொல்றது ரத்தத்தைக்குடிக்கும் பிராணிகளையா? “

“ ஆமாம்.. அவைகள் இருக்குன்னு நீங்க நினைக்கிறீங்களா? “

“ சினிமாக்களில் ரத்தக்காட்டேரிகள்..பறக்கிற வௌவால்களா பாத்திருக்கேன்.. ஆனால் நிஜத்தில்….? “

“ அதே தான்.. அதே தான்..” அவர் பதிலளித்தார். கார் இரண்டடி தூரம் முன்னுக்குச் சென்றது.

“ எனக்குத் தெரியாது.. அதைப்பத்தி யோசிச்சதில்லை..” என்றி நான் சொன்னேன்.

“ இது பதிலில்லை..நீங்க நம்பறீங்களா..?நம்பலையா..? அதுக்கு எனக்குப் பதில் சொல்லுங்க…”

“ நான் ரத்தக்காட்டேரிகளை நம்பல…”

“ அப்படின்னா நீங்க ரத்தக்காட்டேரிகள் இருக்குன்னு நம்பல… சரிதானே..? “

“ நான் ரத்தக்காட்டேரிகளை நம்பல..” நான் என் பைக்குள்ளிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து அதை என் வாய்க்குள் வேகமாகத் திணித்தேன். அதைப் பற்ற வைக்காமல் விட்டு விட்டேன்.

“ சரி..பேய்களைப்பற்றி என்ன நெனக்கிறீங்க.. பேய்கள நீங்க நம்பறீங்களா..? “

“ பேய்கள் இருக்குன்னு உணர்றேன்..”

“ நான் உங்க உணர்தலைப் பற்றிக் கேட்கல.. பேய்கள் இருக்குன்னு நீங்க நெனைக்கிறீங்களா இல்லையா? அது தான் என் கேள்வி.. எனக்கு நீங்க ஆமாம் அல்லது இல்லைன்னு சொல்லுங்க…”

“ ஆமாம்.. நான் பேய்களை நம்பறேன்..” நான் உளறினேன்.

“ ஆனால் நீங்க ரத்தக்காட்டேரிகளை நம்பல..”

“ இல்லை.. நான் நம்பல..”

“ சரி ரத்தக்காட்டேரிகளுக்கும் பேய்களுக்கும் என்ன வித்தியாசம் ?

“ பேய்கள் லௌகீக உலகத்தின் எதிர்கோட்பாடு..” என்று நான் மென்று விழுங்கினேன். அது மடத்தனம் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். ஆனால் இப்படிப் பட்ட மடத்தனங்களைக் கொட்டுவது என்னுடைய பலங்களில் ஒன்று.

“ ம்ம்ம் ”

“ ஆனால் ரத்தக்காட்டேரிகள் நம்முடைய உடலிருப்பின் சிதைவு.. அவைகள் உடல் என்று சொல்லப்படுவதிலிருந்து மாறி விடுகின்றன. “

“ சரி.. பேய்கள் இந்த உலகத்தின் எதிர்கோட்பாடு என்பதை ஏற்றுக் கொண்டேனானால் பின் எப்படி நான் அதே இருத்தலின் சிதைவு தான் ரத்தக்காட்டேரிகள் என்ற யூகத்தை எப்படி நான் ஏற்றுக் கொள்ள முடியும்? “

“ ம்ம்ம்.. இது நல்ல கேள்விதான்.. அப்படின்னா அது முடிவில்லாத சந்தேகங்களை திறந்து விடுகிறது..இல்லையா? “

“ நீங்க புத்திசாலி.. உங்களுக்குத் தெரியுமா? “ என்று சொல்லி என்னைப் பார்த்து கார் டிரைவர் புன்னகைத்தார்.

“ அதைப் பத்தி எனக்குத் தெரியாது.. நான் ஏழு வருஷத்துக்கு முன்னால காலேஜிலிருந்து பட்டம் வாங்கியிருக்கேன்..”

என்று சொன்னேன். டிரைவர் தொடர்ந்து காரை ஒரு அங்குலம் முன்னுக்கு நகர்த்திக் கொண்டிருந்தார். அவர் ஒரு மெலிந்த சிகரெட்டை வாயில் வைத்து எங்களுக்கு முன்னால் உள்ள கார்களைப் பார்த்தபடியே அதைப் பற்ற வைத்தார். ஒரு இனிப்பு வாசனை காருக்குள் பரவியது.

” ஆனால் ஒருவேளை ரத்தக்காட்டேரிகள் உண்மையிலேயே இருந்தா.. அப்ப எப்படி? “

” அப்படியிருந்தா அது கொஞ்சம் கவலைப்படவேண்டிய விஷயம் தான்.. இல்லையா ?”

” அது போதும்னு நெனைக்கிறீங்களா? “

” இல்லை.. உண்மையில அப்படியில்ல..”

” நீங்க சொல்றது சரி தான்.. ஆனாலும் நம்பிக்கையைப் பற்றி யோசிங்க.. அது உண்மையிலே உயர்ந்தது.. அது மலைகளையே நகர்த்தி விடும்.. உங்களுக்குத் தெரியுமா நீங்க ஒரு மலை இருக்குன்னு நம்புனீங்கன்னா அது இருக்கும்.. நீங்க நம்பலைன்னா அது இருக்காது..”

ஏதோ ஒரு காரணத்தினால் அது எனக்கு ஒரு பழைய டோனோவன் பாடலை ஞாபகப்படுத்தியது.

” அது சரி தானா? “

” சரி தான் “

நான் ஆழ்ந்த பெருமூச்சை விட்டேன். பற்ற வைக்காத சிகரெட் என் வாயில் இன்னமும் இருந்தது.

” சொல்லுங்க நீங்க ரத்தக்காட்டேரிகளை நம்பறீங்களா? “

” ஆமாம்.. நான் நம்பறேன் “

” ஏன்? “

” ஏன்னா..? நான் நம்பறேன்.”

” உங்களால நிருபிக்க முடியுமா? “

” நம்பிக்கைக்கும் அத்தாட்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை..”

” நீங்க அப்படிச் சொன்னா….” நான் மறுபடியும் அந்தப்பெண்ணின் சட்டைப் பொத்தான்களிடம் சென்றேன். ஒன்று, இரண்டு, மூன்று..

” ஆனால் என்னால நிருபிக்க முடியும்..”

என்று அந்த டிரைவர் சொன்னார்.

” உண்மையாகவா? “

” உண்மையாக “

” எப்படி ? “

” ஏன்னா நான் ஒரு ரத்தக்காட்டேரி..”

நாங்கள் சற்று நேரம் அமைதியாக இருந்தோம். கார் ஒரு பதினைந்து அடி தூரத்துக்கு மேல் போகவில்லை. மழை தொடர்ந்து கூரை மீது அடித்துக் கொண்டிருந்தது. மீட்டர் 1500 யென்னுக்கு மேல் காண்பித்தது.

“ கொஞ்சம் உங்க லைட்டரைத் தரலாமா? ”

“ நிச்சயமா.. ஒண்ணும் பிரச்னையில்லை..”

நான் என் சிகரெட்டை அவனுடைய வெள்ளை லைட்டரினால் பற்ற வைத்தேன். மூன்று நாட்களுக்குப் பின் முதல் முறையாக என்னுடைய நுரையீரல் முழுமைக்கும் நிகோட்டினால் உணவளித்தேன்.

” நாம ரெம்ப நேரமா இங்க சிக்கிக்கிட்டிருக்கோம்.. இல்லையா? “

” நிச்சயமா.. ரத்தக்காட்டேரிகளைப் பற்றி பேசிக் கொண்டே..” என்று நான் பதிலளித்தேன்.

” ஆமாம் “

” நீங்க உண்மையிலே ஒரு ரத்தக்காட்டேரியா..? “

” ஆமாம். நான் ரத்தக்காட்டேரி தான் அதொண்ணும் நான் பொய் சொல்ற விஷயம் இல்ல..”

” நானும் அப்படி நெனக்கல.. எவ்வளவு நாளா நீங்க ரத்தக்காட்டேரியா இருக்கீங்க..”

’ பத்து வருசத்துக்கும் மேலே.. மூனிச் ஒலிம்பிக்ஸ் காலத்திலிடருந்து இருக்கும்னு நினைக்கிறேன்..”

” எனக்கு ஞாபகமிருக்கு… மார்க் ஸ்பிட்ஸ், ஒல்கா கோர்பட். சில இஸ்ரேலியர்களும் கொல்லப் பட்டாங்க இல்லையா? “

“ ஆமாம் நானும் அப்படித்தான் நெனைக்கிறேன்..”

” நான் இன்னொரு கேள்வி கேட்கலாமா? “

” கேளுங்க..”

” ஏன் நீங்க கார் ஓட்டுறீங்க..”

” நான் வழக்கமான இன்னொரு ரத்தக்காட்டேரியா இருக்க விரும்பல.. ஒரு நீண்ட அங்கியை அணிந்து கொண்டு வண்டியை ஓட்டிக் கொண்டு..இல்லைன்னா பாழடைந்த கோட்டையில வாழ்ந்து கொண்டு… சுத்தமோசம்.. நான் உங்களை மாதிரி தான்.. நாங்க யாரும் அவ்வளவு வித்தியாசமானவங்க இல்ல.. நானும் வரி கட்டறேன்.. உங்களுடையதைப் போலவே என்னுடைய ஹாங்கோ ஸ்டாம்பும் நகரத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.. நான் டிஸ்கோதெ போகிறேன். பச்சின்கோ விளையாடுகிறேன். இதெல்லாம் விசித்திரமா இருக்குன்னு நீங்க நினைக்கிறீங்களா? “

“ இல்ல.. உண்மையில இல்ல.. ஆனால் நாம இரண்டு பேரும் ஒண்ணுபோல கிடையாது இல்லையா? “

“ என்ன விஷயம்? நீங்க என்னை நம்பலையா?”

“ நான் உங்களை நம்பறேன்.. நீங்க மலை இருக்குன்னு நம்பினா அது இருக்கும்..”

என்று நான் வேகமாகச் சொன்னேன்.

“ சரி பிறகு..”

“ அப்படின்னா நீங்க சில சமயம் ரத்தம் குடிப்பீங்க..”

“ ஆமாம் என்ன இருந்தாலும் நான் ரத்தக்காட்டேரி தானே..”

“ சொல்லுங்க சில ரத்தம் மத்ததை விட ருசியா இருக்குமா? “

“ ஆமாம்.. உண்மைதான்.. உதாரணத்துக்கு உங்களோட ரத்தம் நல்லதில்லை.. ஏன்னா நீங்க ரெம்ப புகைக்கிறீங்க..”

“ ஆனால் நான் கொஞ்ச காலத்துக்கு அதை விட்டிருந்தேன்.. ஆனால் நான் நினைக்கிறேன் அது ஒரு விஷயமில்லை..”

“ ரத்தம் குடிக்கிறதைப் பத்தி பேசுறதுன்னா நான் பெண்களோட ரத்தத்தைத் தான் தேர்ந்தெடுப்பேன்கிறதை ஒத்துக்கிறேன்… உண்மையிலேயே..”

“ இது ஒத்துக்கிற மாதிரி இருக்கு..சரி எந்த நடிகையிடம் சுவையான ரத்தம் இருப்பதாக நீங்க நினைக்கிறீங்க..? “

“ நான் என்னோட பற்களை கயோகோ கிசிமோடோவின் கழுத்தில் பதிக்க விரும்புவேன். அப்புறம் கிமி சிங்யோஜியின் ரத்தமும் சுவையானது தான். ஆனால் எனக்கு காரிமோமோய் மீது ஆர்வமில்லை. அவள் சுதந்திரமானவள்..”

“ ரத்தம் குடிப்பது நல்லதா? “

“ ஆமா எனக்கு..”

நாங்கல் பதினைந்து நிமிடத்துக்குப் பின்னர் பிரிந்து விட்டோம். நான் என்னுடைய அபார்ட்மெண்டுக்குள் நுழைந்தேன். விளக்கைப் போட்டு விட்டு குளிர் சாதனப்பெட்டியிலிருந்து ஒரு பியரை எடுத்தேன். அதன் பிறகு நான் மதியத்துக்கு முன்னால் தவறவிட்ட பெண்ணை அழைத்தேன். நான் கூப்பிட்டது சும்மா அன்றைய தினம் நாங்கள் ஒருவரையொருவர் பார்க்கவில்லையென்ற காரணத்துக்காகத் தான்.

“ கேளு.. கொஞ்ச நாளைக்கு கருப்பு வண்ணம் பூசிய நகர் நம்பர் பிளேட் உள்ள கார்களில் பயணம் செய்யக்கூடாது.. சரியா?”

“ ஏன் கூடாது? “

“ ஏன்னா அந்தக் கார் டிரைவர் ஒரு ரத்தக்காட்டேரி..”

“ உண்மையாகவா?”

“ உண்மையாக “

“ நான் கவலைப் படணுமா? “

“ ஆமாம் “

“ அப்ப்டின்னா நான் கருப்பு வண்ணம் பூசிய நகர் நம்பர் பிளேட் உள்ள கார்களில் பிரயாணிக்கக் கூடாது.. சரியா..? “

“ ஆமாம் “

“ நன்றி “

“யு ஆர் வெல்கம்..”

” குட் நைட் “

“ உனக்கும் “

நன்றி – நற்றிணை காலாண்டிதழ்