Saturday 11 August 2012

கடல்பிரயாணத்தில் அதிசயங்கள்

மலையாளத்தில் – மாலி

தமிழில் – உதயசங்கர்

Josies-beach-calm-sea

ஒரு ஊரில் அந்தோணி என்று ஒரு பையன் இருந்தான். அவனுடைய அப்பா ஒரு செம்படவன். அந்தோணியை அவனுடைய அப்பா கடலுக்குள் கூட்டிப் போனதில்லை. ஏனெனில் அந்தோணி ரெம்பவும் சின்னப்பையன். அவனுடைய அப்பா ஒவ்வொரு நாளும் கலையில் தனியே கடலுக்கு மீன் பிடிக்கப் போவார்.

தானும் கடலுக்குப் போகவேண்டும் என்று அந்தோணிக்கு ஆசை தோன்றியது.ஆனால் அவனிடம் படகு இல்லை.துடுப்பு இல்லை. வலை இல்லை. எல்லாவற்றையும் சேகரிக்கவேண்டும்.

அந்தோணி குருவியம்மாவைப் பார்த்தது.

”குருவியம்மா! எனக்கு ஒரு முட்டைத்தோடு தாயேன்..” என்று அது கேட்டது.

“அந்தோணி! நேத்து என்னோட ஒரு முட்டை உடைஞ்சி ரெண்டாயிருச்சி..அதிலிருந்து என்னோட குருவிக்குஞ்சு வந்திருச்சி..உடைஞ்ச அந்த முட்டையோட பாதியை நீ எடுத்துக்கோ..” என்று குருவியம்மா சொன்னது.

அந்தோணி வாத்துமாமாவைப் பார்த்தான்.

”வாத்து மாமா! எனக்கு ஒரு ஜோடி துடுப்பு தாயேன்..” என்று கேட்டான்.

“என்னோட காலில் கட்டுற துடுப்புதானே அந்தோணி! எங்கிட்ட ஆறு ஜோடி துடுப்பு இருக்கு..ஒருஜோடியை நீ எடுத்துக்கோ..” என்று வாத்துமாமா சொன்னது.

அந்தோணி சிலந்தியண்ணனைப் பார்த்தது.

“சிலந்தியண்ணே! எனக்கு ஒரு வலை தாயேன்.” என்று அது வேண்டியது.

“அந்தோணி! நான் ஒரு புது வலை பின்னியிருக்கேன்.. அதை நீ எடுத்துக்கோ..” என்று சிலந்தியண்ணன் சொல்லியது.

அந்தோணி முட்டைதோட்டைக் கடலில் இறக்கினான். அதில் ஏறிக்கொண்டான். பின்பு, வாத்துமாமாவின் துடுப்புகளை வீசினான். அப்படியே கடலுக்குள் சென்று விட்டான். பின்பு சிலந்திவலையை எடுத்து வீசினான்.

சிலந்தி வலையில் ஒரு திமிங்கிலம் சிக்கியது.

“என்னைக் கொல்லாதே!” என்று யாசித்தது.

“உன்னைக் கொல்லாம இருந்தா எனக்கு என்ன தருவே?” என்று அந்தோணி கேட்டான்.

“புதுசா சில அதிசயங்கள காட்டுறேன்..” என்று திமிங்கிலம் சொன்னது.

அந்தோணி திமிங்கிலத்தை சிலந்திவலையிலிருந்து விடுவித்தான். திமிங்கிலம் அந்தோணியின் முட்டைத்தோடுபடகில் ஏறியது.திமிங்கிலமே வாத்துத்துடுப்பினால் தண்ணீரை வலித்தது. அவர்கள் திமிங்கிலத்தின் வீட்டைச் சென்று அடைந்தார்கள். அங்கே திமிங்கிலத்தின் மனைவி, நான்கு குழந்தைகள், இருந்தார்கள். அவர்கள் அந்தோணிக்கு நிறைய பெரிய பந்துகளைக் கொடுத்தனர். பச்சை,நீலம், சிவப்பு, முதலான நிறங்களில் உள்ள பவழப்பந்துகள்.அந்தோணி, திமிங்கிலம், திமிங்கிலத்தின் மனைவி, திமிங்கிலக்குட்டிகள், எல்லோரும் முட்டைத்தோடு படகில் ஏறினர். இப்போது எல்லோரிலும் இளைய திமிங்கிலக்குட்டி படகு வலித்தது.

முன்னால் அடர்ந்த சிவப்பில் ஒரு வெளிச்சம்!.

“என்ன அது?” என்று அந்தோணி கேட்டான்.

“அதுவா கடல்தீ” என்று திமிங்கிலத்தின் மனைவி சொன்னாள்.

கடல் முழுவதும் தீ பிடித்து எரிகிறது. குளிர்ந்த தீ. முட்டைத்தோடுபடகு கடல்தீக்குள் புகுந்து முன்னே சென்றது. அந்தப் பக்கத்தில் என்ன இருக்கிறது? வளைந்தவில் போன்ற பாலம். ஏழு நிறங்களில் அந்தப் பாலம் ஒளிர்ந்தது.

“இது என்ன பாலம்?” என்று அந்தோணி கேட்டான்.

“வானவில்பாலம்..” என்று மூத்த திமிங்கிலக்குட்டி சொன்னது.

இந்தப் பக்கத்துக் கடல், அந்தப் பக்கத்துக்கடல், ரெண்டையும் சேர்ப்பதுதான் வானவில்பாலம். முட்டைத்தோடுபடகு எல்லோருடன் வானவில்பாலத்தில் ஏறி அந்தப் பக்கத்தில் இறங்கியது. அந்தப் பக்கத்தில் மஞ்சள்கடல். அங்கேயும் ஒரு வானவில்பாலம். அதற்கு அப்புறம் வெள்ளைக்கடல். அங்கேயும் ஒரு வானவில்பாலம். அப்படியே தொடர்ந்து போய்க்கொண்டேயிருந்தது.

வெகு நேரம் ஆகி விட்டது.

“அப்பா வருவதற்கு முன்பு நான் வீட்டுக்குப் போகணும்..இல்லேன்னா அப்பா கோபப்படுவார்..” என்று அந்தோணி சொன்னார்.

திமிங்கிலம் வாலினால் தண்ணீரில் மூன்று முறை அடித்தது. முன்னால் ஒரு காற்று வந்து நின்றது. அது ஒரு புயற்காற்று.

“திமிங்கிலசாமி! தங்களுக்கு என்ன வேண்டும்?” என்று புயற்காற்று கேட்டது.

“அந்தோணியை உடனே அவன் வீட்டில் கொண்டு போய் சேர்க்கணும்” என்று திமிங்கிலம் ஆணையிட்டது.

திமிங்கிலம்,திமிங்கிலத்தின்மனைவி, திமிங்கிலக்குட்டிகள்,-எல்லோரும் முட்டைத்தோட்டிலிருந்து இறங்கினார்கள்.அந்தோணி மட்டும் முட்டைத்தோட்டுப் படகில் இருந்தான். புயற்காற்று முட்டைத்தோட்டுப் படகைக் கையில் எடுத்தது. பின்பு ஒரே ஊது! முட்டைத்தோடுப்படகு வானத்தில் பறந்து போய்விட்டது. அஞ்சே அஞ்சு நிமிசம். முட்டைத்தோடுபடகு, அந்தோணி, வாத்துத்துடுப்பு, சிலந்திவலை, எல்லாம் அந்தோணியின் வீட்டில் இருந்தார்கள்.

அந்தோணி முட்டைத்தோட்டை குருவியம்மாவுக்குக் கொடுத்தான். வாத்துதுடுப்புகளை வாத்துமாமாவிடம் கொடுத்தான்.சிலந்திவலையை சிலந்தியிடம் கொடுத்தான்.

மாலையில் அப்பா வந்தார். அந்தோணி எல்லாவற்றையும் விவரமாக சொன்னான்; எள்ளளவு வித்தியாசமும் இல்லாமல்.

அப்பா சொன்னார்: “நான் நம்புறேன்..”

1 comment: