Sunday 12 August 2012

ப்ளம் பழத்தில் கல்

தால்ஸ்தோய்

தமிழில்- உதயசங்கர்

images (2)

அம்மா இரவு உணவுக்குப் பிறகு குழந்தைகள் சாப்பிடுவதற்காக கொஞ்சம் ப்ளம் பழங்களை வாங்கி வைத்திருந்தாள்.எல்லாப் பழங்களையும் ஒரு தட்டில் வைத்து மேஜை மீது வைத்திருந்தாள்.வான்யா இது வரை ப்ளம் பழமே சாப்பிட்டதில்லை.எனவே பழங்களை மோப்பம் பிடித்துக் கொண்டே இருந்தான்.

அவன் அதை மிகவும் விரும்பினான். ஒரு பழத்தையாவது சாப்பிட்டுப் பார்க்க அவனுக்கு அடக்க முடியாத ஆசை வந்தது.பழங்களைச் சுற்றிச் சுற்றியே அலைந்து கொண்டிருந்தான்.சாப்பாட்டுஅறையில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு பழத்தை எடுத்துச் சாப்பிட்டு விட்டான்.அம்மா சாப்பிடுவதற்கு முன்பு பழங்களை எண்ணிப் பார்த்தாள்.ஒரு பழம் குறைந்திருப்பதைக் கண்டு பிடித்தாள்.அவள் உடனே அதை அப்பாவிடம் சொன்னாள்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அப்பா,”குழந்தைகளே, யாராச்சும் ஒரு ப்ளம் பழத்தைச் சாப்பிட்டீங்களா?” என்று கேட்டார்.எல்லோருமே “இல்லை” என்று சொன்னார்கள்.முகம் சிவந்து போன வான்யாவும்,”இல்லை நான் சாப்பிடலை..”என்று சொன்னான்.

அப்பா,”நீங்க யாராச்சும் சாப்பிட்டிருந்தா அது நல்லதில்லை..ஏன்னா ப்ளம் பழத்துக்குள்ளே சின்னக் கல் இருக்கும். அதை எப்படிச் சாப்பிடணும்னு தெரியாம கல்லை முழுங்கிட்டா, கண்டிப்பா அவங்க மறுநாளே செத்துருவாங்க.. அதான் நான் பயப்படறேன்..”என்று சொன்னார்.

இதைக் கேட்டதும் வான்யாவின் முகம் வெளுத்து விட்டது.உடனே அவசர அவசரமாக”நான் அந்தக் கல்லை சன்னல் வழியே தூர எறிஞ்சிட்டேனே..” என்று சொன்னான்.

எல்லோரும் சிரித்தனர்.வான்யாவுக்கு அழுகை வந்தது.

1 comment: