Friday 31 August 2012

சிட்டுக்குருவியும் தூக்கணாங்குருவியும்

thukkanangkuruvi தால்ஸ்தோய்

தமிழில்- உதயசங்கர்

 

என் வீட்டுக் கூரையின் விளிம்பில் கூடு கட்டியிருந்த தூக்கணாங்குருவியின் கூட்டை முற்றத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.நான் கவனித்துக் கொண்டிருக்கும் போதே இரண்டு தூக்கணாங்குருவிகளும் வெளியே பறந்து போய்விட்டன. கூடு காலியாக இருந்தது.

அந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி கூரை மீதிருந்து படபடவென இறக்கைகளை அடித்துக் கொண்டு பறந்து வந்து அந்தக் கூட்டின் மீது உட்கார்ந்தது. கூட்டுக்குள்ளே எட்டிப் பார்த்து விட்டு திரும்பவும் அதன் சிறகுகளை அடித்தது.பின்னர் கூட்டுக்குள் பாய்ந்தது. கூட்டுக்கு வெளியே தலையை மட்டும் நீட்டிக் கொண்டு கீச்சிட்டது.

சீக்கிரமாகவே ஒரு தூக்கணாங்குருவி திரும்பி வந்தது. கூட்டுக்குள் நுழைவதற்கு முயற்சி செய்தது.அப்பொது தான் அந்த அழையாவிருந்தாளியைப் பார்த்தது. உடனே, சிறகுகளை படபடவென அடித்துக் கொண்டு உரக்கக் கீச்சிட்ட.து. கூட்டிற்கு மேலே வட்டமிட்டு சுற்றியது. பின்பு அங்கிருந்து பறந்து போய்விட்டது.

ஆனால் சிட்டுக்குருவி கூட்டிலேயே இருந்து கொண்டு சலசலத்துக் கொண்டிருந்தது.

திடீரென்று ஒரு பெரிய தூக்கணாங்குருவிக்கூட்டமே அந்த கூட்டை நோக்கிப் பறந்து வந்தது.அந்த சிட்டுக்குருவியைப் ஒரு பார்வை பார்த்து விட்டு மறுபடியும் பறந்து போய் விட்டது. சிட்டுக்குருவி எந்தக் கவலையும் இல்லாமல் தலையை வெளியே நீட்டி அங்குமிங்கும் திரும்பிப் பார்த்துக் கொண்டே பாடிக்கொண்டிருந்தது.

தூக்கணாங்குருவிகள் மறுபடியும் திரும்பி வந்தன.ஏதோ கூட்டில் செய்து விட்டு பறந்து போய்விட்டன. அவர்கள் வந்து செல்வதற்கு காரணம் இருந்தது.ஒவ்வொருவரும் தங்களுடைய அலகில் கொஞ்சம் களிமண்ணைக் கொண்டு வந்தனர். எல்லோரும் சேர்ந்து கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துக் கொண்டு வந்தனர்.

அங்கும் இங்கும் பறந்து மேலும் மேலும் களிமண்ணால் கூட்டை மூடிக் கொண்டே வந்தனர். கூட்டின் வாசல் மேலும் மேலும் குறுகிக் கொண்டே வந்தது.

முதலில் சிட்டுக்குருவியின் கழுத்தைப் பார்க்க முடிந்தது. அதன் பிறகு தலையை மட்டும் பார்க்க முடிந்தது.பின்னர் அதன் அலகை, அப்புறம் எதையுமே பார்க்க முடியவில்லை. தூக்கணாங்குருவிகள் அதை கூட்டுக்குள் வைத்து பூசி மெழுகி விட்டனர்.பின்னர் அவர்கள் உற்சாகமாக அந்தக் கூட்டைச் சுற்றிச் சுற்றி வந்து கீச்சிட்டன.

2 comments:

  1. குருவிகளுக்கும்,அந்த குணமா?கண்றாவி தோழர் உண்மையில் பறவைகளும் அப்படி செய்யுமா என்ன ஆச்சரியமாக இருக்கிறது/

    ReplyDelete
  2. சிட்டுக் குருவி கூடு கட்டுகிறது.
    அருமை.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete