Thursday 9 August 2012

ரத்தக்காட்டேரி டிரைவர்

 

ஹாருகி முரகாமி

 

ஆங்கிலத்தில்- கிகி

 

தமிழில்- உதயசங்கர்

113553-haruki-murakami

சில நேரங்களில் மோசமான விஷயங்களும், மோசமான அதிர்ஷ்டமும் சேர்ந்து குவியும். ஆனால் அது ஒரு பொதுக்கருத்து தான். எனினும் ஒரே மனிதனுக்கே தொடர்ந்து மோசமான விஷயங்கள் நடந்து கொண்டிருந்தால், மேலும் மேலும் அது குவிந்து கொண்டேயிருந்தால், அப்புறம் அது ஒருபோதும் பொதுவானதில்லை. அது தனிப்பட்டதாக மாறி விடுகிறது. அந்த வகையில் பொதுக்கருத்து என்று யோசிப்பது எந்த உதவியும் செய்யாது. ஏனெனில் அது அனுதாபத்தையே விரும்புகிறது. இப்படி இந்த விஷயங்கள் எல்லாம் இன்று எனக்கு நடந்தது என்று எண்ணிப்பாருங்கள். நான் யாருக்காகக் காத்துக் கொண்டிருந்தேனோ அந்தப் பெண்ணைத் தவற விட்டுவிட்டேன். என்னுடைய உள்ச்சட்டையின் பொத்தானைக் காணவில்லை. நான் சந்திக்க விரும்பாத ஒருவரை ரயிலில் சந்தித்தேன். பல்வலியின் முதல் குத்தல்வலியை உணர்ந்தேன். அப்புறம் இப்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. நான் ஒரு வாடகைக்காரில் மாட்டிக் கொண்டேன். ஒரு விபத்து காரணமாக போக்குவரத்து குழப்பத்தில் சிக்கிக் கொண்டேன். யாராவது இதையெல்லாம் பொதுவான விஷயங்கள் என்று சொன்னால் அவரைக் கல்லைக் கொண்டு எறிவேன். நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களில்லையா?

இதனால் தான் மற்றவர்களோடு ஒத்துப்போவது ரெம்பக் கஷ்டமாக இருக்கிறது. சிலசமயங்களில் நான், என் வாழ்க்கையை வாசலில் கிடக்கும் ஒரு நல்வரவுப்பாயாகக் கற்பனை செய்கிறேன். வாசலில் கதவுக்கருகில் சும்மா கிடந்துகொண்டு என்னுடைய நேரத்தையெல்லாம் கழித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அநேகமாக நல்வரவுப்பாய் உலகத்திலும் ஒருவர் பொதுமைப்படுத்தவும் கூடும். நல்வரவுப்பாய்களுக்கும் அவர்களுக்கேயுரித்தான பிரச்னைகள் இருக்கும், அவர்களுக்கேயுரிய உயர்வுதாழ்வுகள் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நாம் என்ன செய்ய முடியும்? இது பெரிய விஷயமாக இல்லாமலும் இருக்கலாம்.

எது எப்படியோ நான் ஒரு வாடகைக்காரில் போய்க் கொண்டிருக்கிறேன். மாட்டிக்கொண்ட உணர்வுடனும், சிக்கிக் கொண்ட உணர்வுடனும். காரின் மேற்கூரையில் மழை விழுந்து அடிக்கிறது. என்னால் விட்டு விட்டு வரும் மீட்டரின் கிளிக் ஓசையைக் கேட்க முடிகிறது. காரின் கூரை மீது மழை மோதும் சத்தம் ஒரு இயந்திரத்துப்பாக்கியால் என் மூளையைத் துளைப்பது போல இருக்கிறது.

விஷயங்கள் இன்னும் சிக்கலாகுவதற்குக் காரணம் நான் மூன்று நாட்களுக்கு முன்பு தான் சிகரெட்டை விட்டிருந்தேன். நான் எதையாவது யோசித்து நேரம் போக்க முயற்சி செய்தேன். ஆனால் மூளையில் எதுவும் தோன்றவில்லை. அதனால் நான் ஒரு பெண் வரிசைக்கிரமமாக ஆடை கழற்றுவதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தேன். முதலில் கண்ணாடி, பின்னர் கைக்கடிகாரம், அடுத்தது மென்மையான உலோகச் சத்தத்துடன் கழற்றப்படுகிற பிரேஸ்லெட், அதன் பிறகு………..

“ மன்னியுங்கள் “ காரின் டிரைவர், சட்டையின் முதல் பொத்தானை கழற்றுகிற் என் கவனத்தைத் திருப்பிக் கேட்டார்.

“ ரத்தக்காட்டேரிகள் உண்மையில் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? “

“ ரத்தக்காட்டேரிகள்? “ என்று திருப்பிச் சொன்ன நான் அமைதியாகி விட்டேன். நான் காரின் பின்னோக்குக் கண்ணாடி வழியே டிரைவரைப் பார்வையிட்டேன். அவரும் திருப்பி பின்னோக்குக் கண்ணாடி வழியே என்னைப் பார்த்தார்.

“ ரத்தக்காட்டேரிகன்னு நீங்க சொல்றது ரத்தத்தைக்குடிக்கும் பிராணிகளையா? “

“ ஆமாம்.. அவைகள் இருக்குன்னு நீங்க நினைக்கிறீங்களா? “

“ சினிமாக்களில் ரத்தக்காட்டேரிகள்..பறக்கிற வௌவால்களா பாத்திருக்கேன்.. ஆனால் நிஜத்தில்….? “

“ அதே தான்.. அதே தான்..” அவர் பதிலளித்தார். கார் இரண்டடி தூரம் முன்னுக்குச் சென்றது.

“ எனக்குத் தெரியாது.. அதைப்பத்தி யோசிச்சதில்லை..” என்றி நான் சொன்னேன்.

“ இது பதிலில்லை..நீங்க நம்பறீங்களா..?நம்பலையா..? அதுக்கு எனக்குப் பதில் சொல்லுங்க…”

“ நான் ரத்தக்காட்டேரிகளை நம்பல…”

“ அப்படின்னா நீங்க ரத்தக்காட்டேரிகள் இருக்குன்னு நம்பல… சரிதானே..? “

“ நான் ரத்தக்காட்டேரிகளை நம்பல..” நான் என் பைக்குள்ளிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து அதை என் வாய்க்குள் வேகமாகத் திணித்தேன். அதைப் பற்ற வைக்காமல் விட்டு விட்டேன்.

“ சரி..பேய்களைப்பற்றி என்ன நெனக்கிறீங்க.. பேய்கள நீங்க நம்பறீங்களா..? “

“ பேய்கள் இருக்குன்னு உணர்றேன்..”

“ நான் உங்க உணர்தலைப் பற்றிக் கேட்கல.. பேய்கள் இருக்குன்னு நீங்க நெனைக்கிறீங்களா இல்லையா? அது தான் என் கேள்வி.. எனக்கு நீங்க ஆமாம் அல்லது இல்லைன்னு சொல்லுங்க…”

“ ஆமாம்.. நான் பேய்களை நம்பறேன்..” நான் உளறினேன்.

“ ஆனால் நீங்க ரத்தக்காட்டேரிகளை நம்பல..”

“ இல்லை.. நான் நம்பல..”

“ சரி ரத்தக்காட்டேரிகளுக்கும் பேய்களுக்கும் என்ன வித்தியாசம் ?

“ பேய்கள் லௌகீக உலகத்தின் எதிர்கோட்பாடு..” என்று நான் மென்று விழுங்கினேன். அது மடத்தனம் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். ஆனால் இப்படிப் பட்ட மடத்தனங்களைக் கொட்டுவது என்னுடைய பலங்களில் ஒன்று.

“ ம்ம்ம் ”

“ ஆனால் ரத்தக்காட்டேரிகள் நம்முடைய உடலிருப்பின் சிதைவு.. அவைகள் உடல் என்று சொல்லப்படுவதிலிருந்து மாறி விடுகின்றன. “

“ சரி.. பேய்கள் இந்த உலகத்தின் எதிர்கோட்பாடு என்பதை ஏற்றுக் கொண்டேனானால் பின் எப்படி நான் அதே இருத்தலின் சிதைவு தான் ரத்தக்காட்டேரிகள் என்ற யூகத்தை எப்படி நான் ஏற்றுக் கொள்ள முடியும்? “

“ ம்ம்ம்.. இது நல்ல கேள்விதான்.. அப்படின்னா அது முடிவில்லாத சந்தேகங்களை திறந்து விடுகிறது..இல்லையா? “

“ நீங்க புத்திசாலி.. உங்களுக்குத் தெரியுமா? “ என்று சொல்லி என்னைப் பார்த்து கார் டிரைவர் புன்னகைத்தார்.

“ அதைப் பத்தி எனக்குத் தெரியாது.. நான் ஏழு வருஷத்துக்கு முன்னால காலேஜிலிருந்து பட்டம் வாங்கியிருக்கேன்..”

என்று சொன்னேன். டிரைவர் தொடர்ந்து காரை ஒரு அங்குலம் முன்னுக்கு நகர்த்திக் கொண்டிருந்தார். அவர் ஒரு மெலிந்த சிகரெட்டை வாயில் வைத்து எங்களுக்கு முன்னால் உள்ள கார்களைப் பார்த்தபடியே அதைப் பற்ற வைத்தார். ஒரு இனிப்பு வாசனை காருக்குள் பரவியது.

” ஆனால் ஒருவேளை ரத்தக்காட்டேரிகள் உண்மையிலேயே இருந்தா.. அப்ப எப்படி? “

” அப்படியிருந்தா அது கொஞ்சம் கவலைப்படவேண்டிய விஷயம் தான்.. இல்லையா ?”

” அது போதும்னு நெனைக்கிறீங்களா? “

” இல்லை.. உண்மையில அப்படியில்ல..”

” நீங்க சொல்றது சரி தான்.. ஆனாலும் நம்பிக்கையைப் பற்றி யோசிங்க.. அது உண்மையிலே உயர்ந்தது.. அது மலைகளையே நகர்த்தி விடும்.. உங்களுக்குத் தெரியுமா நீங்க ஒரு மலை இருக்குன்னு நம்புனீங்கன்னா அது இருக்கும்.. நீங்க நம்பலைன்னா அது இருக்காது..”

ஏதோ ஒரு காரணத்தினால் அது எனக்கு ஒரு பழைய டோனோவன் பாடலை ஞாபகப்படுத்தியது.

” அது சரி தானா? “

” சரி தான் “

நான் ஆழ்ந்த பெருமூச்சை விட்டேன். பற்ற வைக்காத சிகரெட் என் வாயில் இன்னமும் இருந்தது.

” சொல்லுங்க நீங்க ரத்தக்காட்டேரிகளை நம்பறீங்களா? “

” ஆமாம்.. நான் நம்பறேன் “

” ஏன்? “

” ஏன்னா..? நான் நம்பறேன்.”

” உங்களால நிருபிக்க முடியுமா? “

” நம்பிக்கைக்கும் அத்தாட்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை..”

” நீங்க அப்படிச் சொன்னா….” நான் மறுபடியும் அந்தப்பெண்ணின் சட்டைப் பொத்தான்களிடம் சென்றேன். ஒன்று, இரண்டு, மூன்று..

” ஆனால் என்னால நிருபிக்க முடியும்..”

என்று அந்த டிரைவர் சொன்னார்.

” உண்மையாகவா? “

” உண்மையாக “

” எப்படி ? “

” ஏன்னா நான் ஒரு ரத்தக்காட்டேரி..”

நாங்கள் சற்று நேரம் அமைதியாக இருந்தோம். கார் ஒரு பதினைந்து அடி தூரத்துக்கு மேல் போகவில்லை. மழை தொடர்ந்து கூரை மீது அடித்துக் கொண்டிருந்தது. மீட்டர் 1500 யென்னுக்கு மேல் காண்பித்தது.

“ கொஞ்சம் உங்க லைட்டரைத் தரலாமா? ”

“ நிச்சயமா.. ஒண்ணும் பிரச்னையில்லை..”

நான் என் சிகரெட்டை அவனுடைய வெள்ளை லைட்டரினால் பற்ற வைத்தேன். மூன்று நாட்களுக்குப் பின் முதல் முறையாக என்னுடைய நுரையீரல் முழுமைக்கும் நிகோட்டினால் உணவளித்தேன்.

” நாம ரெம்ப நேரமா இங்க சிக்கிக்கிட்டிருக்கோம்.. இல்லையா? “

” நிச்சயமா.. ரத்தக்காட்டேரிகளைப் பற்றி பேசிக் கொண்டே..” என்று நான் பதிலளித்தேன்.

” ஆமாம் “

” நீங்க உண்மையிலே ஒரு ரத்தக்காட்டேரியா..? “

” ஆமாம். நான் ரத்தக்காட்டேரி தான் அதொண்ணும் நான் பொய் சொல்ற விஷயம் இல்ல..”

” நானும் அப்படி நெனக்கல.. எவ்வளவு நாளா நீங்க ரத்தக்காட்டேரியா இருக்கீங்க..”

’ பத்து வருசத்துக்கும் மேலே.. மூனிச் ஒலிம்பிக்ஸ் காலத்திலிடருந்து இருக்கும்னு நினைக்கிறேன்..”

” எனக்கு ஞாபகமிருக்கு… மார்க் ஸ்பிட்ஸ், ஒல்கா கோர்பட். சில இஸ்ரேலியர்களும் கொல்லப் பட்டாங்க இல்லையா? “

“ ஆமாம் நானும் அப்படித்தான் நெனைக்கிறேன்..”

” நான் இன்னொரு கேள்வி கேட்கலாமா? “

” கேளுங்க..”

” ஏன் நீங்க கார் ஓட்டுறீங்க..”

” நான் வழக்கமான இன்னொரு ரத்தக்காட்டேரியா இருக்க விரும்பல.. ஒரு நீண்ட அங்கியை அணிந்து கொண்டு வண்டியை ஓட்டிக் கொண்டு..இல்லைன்னா பாழடைந்த கோட்டையில வாழ்ந்து கொண்டு… சுத்தமோசம்.. நான் உங்களை மாதிரி தான்.. நாங்க யாரும் அவ்வளவு வித்தியாசமானவங்க இல்ல.. நானும் வரி கட்டறேன்.. உங்களுடையதைப் போலவே என்னுடைய ஹாங்கோ ஸ்டாம்பும் நகரத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.. நான் டிஸ்கோதெ போகிறேன். பச்சின்கோ விளையாடுகிறேன். இதெல்லாம் விசித்திரமா இருக்குன்னு நீங்க நினைக்கிறீங்களா? “

“ இல்ல.. உண்மையில இல்ல.. ஆனால் நாம இரண்டு பேரும் ஒண்ணுபோல கிடையாது இல்லையா? “

“ என்ன விஷயம்? நீங்க என்னை நம்பலையா?”

“ நான் உங்களை நம்பறேன்.. நீங்க மலை இருக்குன்னு நம்பினா அது இருக்கும்..”

என்று நான் வேகமாகச் சொன்னேன்.

“ சரி பிறகு..”

“ அப்படின்னா நீங்க சில சமயம் ரத்தம் குடிப்பீங்க..”

“ ஆமாம் என்ன இருந்தாலும் நான் ரத்தக்காட்டேரி தானே..”

“ சொல்லுங்க சில ரத்தம் மத்ததை விட ருசியா இருக்குமா? “

“ ஆமாம்.. உண்மைதான்.. உதாரணத்துக்கு உங்களோட ரத்தம் நல்லதில்லை.. ஏன்னா நீங்க ரெம்ப புகைக்கிறீங்க..”

“ ஆனால் நான் கொஞ்ச காலத்துக்கு அதை விட்டிருந்தேன்.. ஆனால் நான் நினைக்கிறேன் அது ஒரு விஷயமில்லை..”

“ ரத்தம் குடிக்கிறதைப் பத்தி பேசுறதுன்னா நான் பெண்களோட ரத்தத்தைத் தான் தேர்ந்தெடுப்பேன்கிறதை ஒத்துக்கிறேன்… உண்மையிலேயே..”

“ இது ஒத்துக்கிற மாதிரி இருக்கு..சரி எந்த நடிகையிடம் சுவையான ரத்தம் இருப்பதாக நீங்க நினைக்கிறீங்க..? “

“ நான் என்னோட பற்களை கயோகோ கிசிமோடோவின் கழுத்தில் பதிக்க விரும்புவேன். அப்புறம் கிமி சிங்யோஜியின் ரத்தமும் சுவையானது தான். ஆனால் எனக்கு காரிமோமோய் மீது ஆர்வமில்லை. அவள் சுதந்திரமானவள்..”

“ ரத்தம் குடிப்பது நல்லதா? “

“ ஆமா எனக்கு..”

நாங்கல் பதினைந்து நிமிடத்துக்குப் பின்னர் பிரிந்து விட்டோம். நான் என்னுடைய அபார்ட்மெண்டுக்குள் நுழைந்தேன். விளக்கைப் போட்டு விட்டு குளிர் சாதனப்பெட்டியிலிருந்து ஒரு பியரை எடுத்தேன். அதன் பிறகு நான் மதியத்துக்கு முன்னால் தவறவிட்ட பெண்ணை அழைத்தேன். நான் கூப்பிட்டது சும்மா அன்றைய தினம் நாங்கள் ஒருவரையொருவர் பார்க்கவில்லையென்ற காரணத்துக்காகத் தான்.

“ கேளு.. கொஞ்ச நாளைக்கு கருப்பு வண்ணம் பூசிய நகர் நம்பர் பிளேட் உள்ள கார்களில் பயணம் செய்யக்கூடாது.. சரியா?”

“ ஏன் கூடாது? “

“ ஏன்னா அந்தக் கார் டிரைவர் ஒரு ரத்தக்காட்டேரி..”

“ உண்மையாகவா?”

“ உண்மையாக “

“ நான் கவலைப் படணுமா? “

“ ஆமாம் “

“ அப்ப்டின்னா நான் கருப்பு வண்ணம் பூசிய நகர் நம்பர் பிளேட் உள்ள கார்களில் பிரயாணிக்கக் கூடாது.. சரியா..? “

“ ஆமாம் “

“ நன்றி “

“யு ஆர் வெல்கம்..”

” குட் நைட் “

“ உனக்கும் “

நன்றி – நற்றிணை காலாண்டிதழ்

No comments:

Post a Comment