Saturday 31 March 2018

நேற்று மாலை குமாரபுரம் ஸ்டேஷனுக்கு கு.அழகிரிசாமி வந்திருந்தார்

நேற்று மாலை குமாரபுரம் ஸ்டேஷனுக்கு கு.அழகிரிசாமி வந்திருந்தார். அவருடன் கோவில்பட்டி பள்ளிக்கூடத்தில் மேல் வகுப்பு படிப்பதற்காக ரயில் ஏற வந்த சிறுவர்களைப்போல நானும் தீன் தோழரும் சிரிப்பையே உருவாகக் கொண்ட மாரியும் நின்றிருந்தோம்.
1960- ஆம் ஆண்டு அவர் எழுதிய குமாரபுரம் ஸ்டேஷனைப் பார்ப்பதற்காக வந்திருந்தார்.குமாரபுரம் ஸ்டேஷன் ஒரு காட்டு ஸ்டேஷன் என்று எழுதிய தன் முதல் வரியைத் திரும்பவும் வாசித்துப் பார்ப்பதற்காகவே அவர் வந்திருந்தார் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல் அது இன்னமும் காட்டு ஸ்டேஷனாகவே இருக்கிறது. காலம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை அல்லது காலம் கு.அழகிரிசாமியின் காவியத்தில் சிறு கீறல் கூட விழாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.
கு.அழகிரிசாமியை நேரில் கண்டதில்லை. அவர் எழுதிய கதைகளின் சாராம்சமான அன்பின் ஆகிருதியை மாலை நேர நிழலின் சாயலில் நீண்டு என் மீது விழுவதை உணரமுடிந்தது.
கலைக்க முடியாத ஒப்பனைகளின் ஒளிக்கீற்றை தனுமையின் பேரன்பை, கனிவின் நெகிழ்வை, ஒரு சிறு இசையின் ஆழத்தை, கமழ்ச்சியின் அழகை, குமாரபுரம் ஸ்டேசனில் நான் தரிசித்தேன்.
கு.அழகிரிசாமியின் ஆழ்ந்த மோனத்தை ஒன்றிரண்டு ரயில்கள் ஊடறுத்து மௌனத்தின் வலிமையை கூவிச் சென்றது.
இருள் கவியத்தொடங்கி விட்டது.
இனி இந்தக்குமாரபுரம் ஸ்டேஷன் இன்னொரு உலகமாக மாயம் செய்யும். குள்ளநரிகளும் முயல்களும், பாம்புகளும், பூச்சிகளும், சேடான்களும், வெருகுகளும் அலைந்து திரியும். அதில் நானும் ஒரு பூச்சி. அழகிரிசாமி ஸ்டேஷன் முன்னால் கிடந்த மரப்பெஞ்சில் உட்கார்ந்து எதிரே விரிந்து கிடக்கும் புல்வெளியைப் பார்க்கிறார். சற்று தூரத்தில் அவருடைய சொந்த ஊரான இடைசெவல் மின்மினிப்பூச்சியைப் போல மின்னுகிறது. அங்கே அவருடைய உற்ற தோழனான கி.ரா. இருப்பதாகவும் போகும்போது அவரைப் பார்த்து விட்டுப் போகவேண்டும் என்றும் நினைக்கிறார்.
நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருக்கின்றன. நாங்கள் ஒரு நீண்ட பெருமூச்சுடனும் பரவசத்துடனும் அழகிரிசாமியைப் பார்த்துக்கொண்டிருந்தோம் . எங்கள் தோள்களின் வழியே குமாரபுரம் ஸ்டேஷனும், கருவை மரங்களும்,விளாமரங்களும், புதர்ச்செடிகளும், கூடடைய வந்த பறவைகளும், கூட அவரைப் பார்த்துக்கொண்டிருந்தன. பூச்சிகள் இரவுப்பேரிசையின் சிம்பொனியை இசைக்க ஆரம்பித்திருந்தன.
அந்த இசைத்துகள்கள் எங்கள் மீது படர்ந்தபோது கு.அழகிரிசாமி எங்கள் அன்பிற்குரிய வண்ணதாசனாக நின்றார்.
இருமருங்கும் புற்களின் அணிவகுப்பின் நடுவே வரைந்த அழகிய சாலையில் மஞ்சளொளியில் அபூர்வமான முகபாவத்தில் வண்ணதாசன் இருந்தார்.
அவருக்குள் கு.அழகிரிசாமியின் ஆவி இறங்கியிருந்தது.
நாங்களும் அதன் துடிப்பை உணர்ந்தோம். சிறிய நடுக்கத்துடன் எங்கள் மூதாதையான கு.அழகிரிசாமியை வணங்கினோம்.
அப்படியே எங்கள் வண்ணதாசனையும்.

Sunday 18 March 2018

குள்ளநரியின் கனவு


குள்ளநரியின் கனவு

உதயசங்கர்

கடம்பூர் காட்டில் உள்ள ஒரு புதரில் ஒரு குள்ளநரிக்குட்டி வாழ்ந்து வந்தது. அந்தக்குள்ளநரிக்குட்டி எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கும். படுசோம்பேறி. நிறையக் கனவுகள் காணும். தூங்கிக்கொண்டே உறுமும். தூங்கிக்கொண்டே ஊளையிடும். தூங்கிக்கொண்டே பற்களை நறநறவென்று கடிக்கும். அம்மாவும் அப்பாவும் தினம் திட்டுவார்கள்.
“ இப்படித் தூங்காதேடா… சோம்பேறியின் கனவு பலிக்காதுடா..”
“ சரிம்மா..” என்று சொல்லிக்கொண்டே மறுபடியும் தூங்கிவிடும். அம்மாவும் அப்பாவும் குள்ளநரிக்குட்டிக்கு இரை தேடிக் கொண்டு வந்து கொடுத்தார்கள். அது புதரில் தூங்கியபடியே சாப்பிடும்.
அம்மாவும் அப்பாவும் இரை தேடுவது எப்படி? வேட்டையாடுவது எப்படி? என்று சொல்லிக்கொடுக்க அழைத்தார்கள். குள்ளநரிக்குட்டி வரவில்லை. கெஞ்சினார்கள். குள்ளநரிக்குட்டி வரவில்லை. மிரட்டினார்கள் குள்ளநரிக்குட்டி வரவில்லை.
சிறிது நாட்களில் குள்ளநரிக்குட்டி வளர்ந்து விட்டது. அம்மாவும் அப்பாவும் அதைத் தனியே விட்டு விட்டு போய் விட்டார்கள்.
குள்ளநரி புதரில் சோம்பேறியாகப் படுத்தபடியே கனவு கண்டது.
புதருக்கு அருகில் அதுவும் குள்ளநரியின் கால்களுக்கு அருகில் ஒரு முயல்குட்டி விளையாடிக் கொண்டிருந்தது. கண்களைத் திறந்த குள்ளநரி அதை அப்படியே லபக்கென்று பிடித்துத் தின்றது.
மறுபடியும் கண்களை மூடித்திறந்த போது ஒரு மான்குட்டி அதன் வாலுக்கருகில் நின்றது. உடனே அதை லபக் என்று பிடித்து விழுங்கியது.
குள்ளநரியின் வாயில் உமிழ்நீர் சுரந்தது. கண்களைத் திறந்த குள்ளநரி கண்டது கனவு என்று தெரிந்தது. வயிறு பசித்தது.
ஆனாலும் சோம்பேறித்தனம் விடவில்லை. மறுபடியும் கண்களை மூடியது. இப்போது கனவு வரவில்லை. பசியினால் வயிறு எரிந்தது. ச்சே அலையாமல் கொள்ளாமல் சாப்பிட முடியாதா? என்று நினைத்தது.
பசி பொறுக்காமல் புதரில் இருந்து எழுந்து வெளியே வந்தது. கனவில் கண்ட மாதிரி ஒரு முயலோ, மானோ, கௌதாரியோ, காட்டு எலியோ, எதுவும் கண்ணில் படவில்லை. கொஞ்சதூரம் நடந்து சென்று பார்த்தது. எதுவும் இல்லை. கொஞ்சதூரம் ஓடிச் சென்று பார்த்தது. எதுவும் இல்லை. பசியினால் கண்கள் மங்கியது.
ஒரு காட்டு எலி அதன் கண்முன்னால் ஓடியது. ஆனால் அதை எப்படிப்பிடிப்பது என்று தெரியவில்லை. ஒரு விட்டில் பூச்சி தாவிக்குதித்தது. அதை எப்படிப்பிடிப்பது என்று தெரியவில்லை. அது தான் வேட்டையாடப் பழகவில்லையே. அப்போது அதற்கு அம்மாவும் அப்பாவும் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
“ சோம்பேறியின் கனவு பலிக்காது..”
பசியினால் சோர்ந்து உட்கார்ந்தபோது அதன் கால்களுக்கு முன்னால் ஒரு விட்டில்பூச்சி வந்து விழுந்தது. அப்படியே அசையாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்த குள்ளநரி முழுவேகத்தில் திடீரென்று அந்தப்பூச்சியின் மீது பாய்ந்து கால்களால் அமுக்கியது.
வேட்டையின் முதல் பாடத்தை குள்ளநரி கற்றுக்கொண்டது.
நன்றி- வண்ணக்கதிர்

Wednesday 14 March 2018

பேய் பிசாசு இருக்கா?

நேற்றைய தினமலர் பட்டம் இணைப்பிதழில் பேய் பிசாசு இருக்கா? என்ற நூலிலிருந்து சில பகுதிகள்......

Sunday 4 March 2018

ஆமையும் முயலும்


ஆமையும் முயலும்

உதயசங்கர்

ஒரு குளத்தில் ஆமை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக்குளத்தில் நீர் வற்றிக் கொண்டிருந்தது. புல், பூண்டுகள், பாசி, சிறிய மீன்கள், புழுக்கள், பூச்சிகள், எல்லாம் குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஆமைக்குத் தீனி கிடைக்கவில்லை. ஆமை வேறு நீர்நிலையை நோக்கிப் போகவேண்டும் என்று நினைத்தது.
அதிகாலை ஆமை அந்தக் குளத்தை விட்டு மெல்ல அடி எடுத்து வைத்து நடக்க ஆரம்பித்தது. ச்சர்ர்ரக்…… ச்சர்ர்ரக்…. என்ற சத்தத்துடன் மெல்ல நடந்தது. அப்போது ஒரு புதரில் இருந்து திடீர் என்று ஒரு முயல் பாய்ந்து ஆமையின் முன்னால் வந்து நின்றது.
“ வர்றியா ஓட்டப்பந்தயம் ஓடலாம்.. போன தடவை நான் கொஞ்சம் ஏமாந்துட்டேன்.. இந்த முறை விட மாட்டேன்..”
என்று முயல் தன் நீண்ட காதுகளை விடைத்தபடி பேசியது. அதைக் கேட்ட ஆமை சிரித்துக் கொண்டே,
“ இல்லை நண்பா… நான் வரவில்லை.. நான் வேறு குளத்தைத் தேடிப் போகிறேன்.. இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டுமோ தெரியவில்லை..” என்று பதில் சொல்லியது.
“ போடா பயந்தாங்குளி… நீ இப்படி நடந்து எப்படிக் கண்டுபிடிப்பே.. என்னை மாதிரி நாலு கால்ல ஓடணும்… சும்மா சளக்கு சளக்குன்னு அன்னநடை நடந்துக்கிட்டிருக்கே…. இதிலே முதுகிலே சுமை வேற சுமந்துக்கிட்டிருக்கே…. அதைக் கழட்டிப்போடு.. எல்லாம் சரியாயிரும்..”
என்று சொல்லிக்கொண்டே பாய்ந்து குதித்துச் சென்று விட்டது.
ஆமையும் ஒரு கணம் யோசித்தது. முதுகில் உள்ள ஓடு இல்லை என்றால் இன்னும் வேகமாகப் போகலாம். முயல் சொன்னது சரிதான். ச்சே… என்ன கனம்! ஆமை முதுகை உதறியது. ஓடு கீழே விழவில்லை. வருத்தத்துடன் மெல்ல ச்சர்ரக்…. ச்சர்ரக்.. என்று நடந்து போய்க் கொண்டிருந்தது.
ஆமை கொஞ்சதூரம் தான் போயிருக்கும். எதிரே முயல் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தது. அதன் உடல் நடுங்கியது.
“ ஆபத்து.. ஆபத்து.. நரி துரத்துது… ஓடு..ஓடு… “  என்று முயல் கத்திக் கொண்டே தலைதெறிக்க ஓடியது. ஆமை நிமிர்ந்து பார்த்தது. கொஞ்சதூரத்தில் செவலை நிற நரி ஒன்று பாய்ந்து வந்து கொண்டிருந்தது. ஆமை மெல்ல தன்னுடைய கால்களையும் தலையையும் ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டது.
வேகமாக ஓடி வந்த நரி, ஆமையின் அருகில் வந்தது. அதை முகர்ந்து பார்த்தது. ஓட்டின் மீது வாயை வைத்து கடித்தது. கடிக்க முடியவில்லை. ஓடு கடினமாக இருந்தது. நரி தன்னுடைய மூக்கினால் ஆமையைத் தள்ளயது. ஓட்டுக்குள் பாதுகாப்பாக இருந்த ஆமையை அசைக்க முடியவில்லை. ஆமையை இரண்டு முறை சுற்றிச் சுற்றி வந்தது நரி.
நரி பின்பு வந்த வழியே திரும்பிச் சென்றது.
நரி போன பிறகு ஓட்டிலிருந்து கால்களையும் தலையையும் வெளியே நீட்டியது ஆமை. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் ஓட்டை உதறிவிட நினைத்தேனே என்று தன்னை நினைத்து வெட்கப்பட்டது.
இயற்கையன்னைக்கு நன்றி சொல்லியது.

நன்றி - வண்ணக்கதிர்