Saturday 30 June 2012

பூனை குறுக்கே போனா!

 

உதயசங்கர்

OciCatB_004

பூனை குறுக்கே போனா என்ன? என்னவா. சரியாப்போச்சு. போகிற வேலை நடக்காது. எடுத்த காரியம் உருப்படாது. அதாவது நாம் ஒரு காரியத்துக்காகப் புறப்பட்டு போகும் வழியில் ஒரு பூனை குறுக்கே போனால் அன்று அந்த வேலை நடக்காது. அப்படியா ?

இதைச் சகுனம் என்று சொல்கிறார்கள் . அடிக்கடி சகுனம் சரியில்லை என்று சொல்லக் கேட்டிருக்கிறீர்களா ? சரி சகுனம் என்றால் என்ன? நடக்கப்போவதைப் பற்றி முன்கூட்டியே தெரிவிக்கிற சிக்னல்கள் அல்லது சமிக்ஞைகள் என்று சொல்லப்படுகிறது. இது உண்மையா/ இல்லை.

அறிவியல் சரியாக வளராத காலத்தில் நமது தாத்தாக்களுக்கு, தாத்தாக்களுக்கு, தாத்தாக்கள் நடந்த நிகழ்ச்சிகளுக்கு அவர்களுக்குத் தெரிந்த விளக்கத்தைச் சொல்லி வைத்து விட்டுப் போய் விட்டார்கள். அவைகள் எல்லாம் மூட நம்பிக்கைகளாக வளர்ந்து விட்டன.

அப்படின்னா தாத்தாக்கள் சொன்னதெல்லாம் தப்பா? இல்லை. அப்படிச் சொல்லமுடியாது. பழைய காலத்தில், மனிதர்கள் தங்களுடைய கஷ்டங்களுக்கும், நஷ்டங்களுக்கும், காரணம் தெரியாமல் தவித்தார்கள். அதே போல் தற்செயலாக நடக்கிற பல விஷயங்களும் அவர்களுக்குப் புரியவில்லை. எல்லாத்துக்கும் காரணம் தேடினார்கள். அப்போது தற்செயலாகப் பாதையின் குறுக்கே போன பூனை அன்று நடக்காமல் போன காரியத்துக்குக் காரணமாக ஆகிவிட்டது. உடனே பூனை மனிதர்களுடைய வாழ்வில் ஒரு கெட்ட சகுனமாக மாறி விட்டது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், மனிதர்களை விட குறைந்த அறிவுள்ள பூனையால் நாம் செய்யப் போகிற காரியத்தை நடக்கவிடாமல் செய்ய முடியுமா? யோசித்துப் பாருங்களேன்.

பூனை ஏன் பாதையின் குறுக்கே போகிறது? பாதையிலோ, சாலையிலோ, இடது புறமாகவே நடக்க வேண்டும் என்பது நமக்கு மட்டும் தானே. மிருகங்கள், பறவைகள், பூச்சிகளுக்குக் கிடையாதே. அவற்றுக்கு எங்கே உணவு கிடைக்குமோ அந்த இடத்தை நோக்கிப் போகும் இல்லையா? எலிகள் இருக்கும் இடத்தைத் தேடியோ, பாலும் தயிரும் இருக்கும் இடத்தைத் தேடியோ பூனை அங்கும் இங்கும் வரும் போகும் இல்லையா?

இப்படித் தன் பாட்டுக்கு சாப்பாட்டுக்கு அலைகிற அப்பிராணியைப் போய் நம்முடைய காரியத்தை நடக்கவிடாமல் செய்வதாகச் சொல்வது நியாயமா?

இது மூடநம்பிக்கையா. இல்லையா.

அடுத்ததாகப் பல்லி, சுவர்களில் விளக்கு வெளிச்சத்துக்கு வரும் பூச்சிகளைத் தின்பதற்கு அலைவதை நாம் பார்த்திருக்கிறோம். அது சுவரில் நடப்பதற்கு தன் ஐந்து விரல்களுக்கு நடுவே வெற்றிடத்தை உருவாக்குகிறது. அதன் மூலம் சுவரைப் பற்றிக் கொண்டு நடக்கிறது. தலைகீழாகவும், அதனால் இரையைப் பிடிக்க ஓட முடிகிறது. அதன் வேகம், பதுங்கி வாலைச் சுழட்டியபடி நாக்கை வினாடிக்கும் குறைவான நேரத்தில் பூச்சிகளை லவட்டுகிற லாவகம். பார்க்க, பார்க்க நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இல்லையா!

அந்தப் பல்லியையும் எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே குறி சொல்கிற மூடநம்பிக்கைக்குள் இழுத்து வந்து விட்டார்கள். எப்படித் தெரியுமா?

பல்லி சொல்லும் பலன், பல்லி விழும் பலன், என்று இரண்டு விதமாகப் பிரித்துச் சகுனம் சொல்லியிருக்கிறார்கள். கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது சரி தானா?

சுவரில் பறந்து வந்து ஒட்டுகிற சிறு பூச்சிகளை நோக்கி வேகமாகப் போகும் போது எப்போதாவது அதன் பிடிமானம் தவறாதா? அப்படி அதன் நிலை தவறிக் கீழே விழும்போது மனிதர்கள் யாராவது இருந்தால் அவர்கள் மீது தானே விழும். அதற்குப் பல்லி பொறுப்பாக முடியுமா? அப்படி விழும்போது, சரி இவன் காலில் விழுவோம் என்றோ, அவன் தலையில் விழுவோம் என்றோ, இன்னொருத்தன் கையில் விழுவோம் என்றோ முடிவு செய்தா விழும்?

சரி எங்கே விழுந்தாலும் உயிர் பிழைக்க வேண்டும் என்கிற பதட்டம் தானே அதுக்கு இருக்கும். பாவம் அதைப் போய் தலையில் விழுந்தால் கலகம், நெற்றியில் விழுந்தால் பதவி என்று மனிதர்களுடைய உறுப்பு வாரியாகப் பலன் எழுதியிருக்கிறார்களே! வேடிக்கையாக இல்லை.

எங்கே விழுந்தாலும் பாவம் பல்லி. இசகு பிசகா விழுந்துட்டா பல்லியல்லவா செத்து விடும். யோசித்துப் பாருங்கள்.

வீட்டுச் சுவரில் அலைந்து கொண்டு அற்பமான பூச்சிகளைத் தின்று வாழும் பல்லியினால் நமது வாழ்க்கையில் நடக்கப் போகிற நிகழச்சிகளைத் தீர்மானிக்க முடியுமா? அறிவியல் பூர்வமாக இதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா?

அடுத்ததாக பல்லி ஏன் கத்துகிறது? பொதுவாக இரண்டு காரணங்கள் இருக்கும். ஒன்று உணவை அதாவது பூச்சிகளைப் பார்த்து சப்புக் கொட்டி எழுப்பும் ஒலி. அல்லது பெண் துணையைத் தேடி ஆணோ, ஆண் துணையைத் தேடிப் பெண்ணோ, இனப்பெருக்கத்துக்காக அழைக்கும் ஒலி. இல்லையென்றால் எதிரியுடன் சண்டையிடும் போதோ, எதிர் பாராத வேதனையின் போதோ, ஒலி எழுப்பலாம்.

ஆனால் இதைப் போய் பல்லி மனிதர்களுக்குப் பலன் சொல்கிறது என்று மனிதர்களாக நினைத்துக் கொண்டால் பாவம் பல்லி என்ன செய்யும்? இப்படியான மூடநம்பிக்கையை என்னவென்று சொல்வது? அதிலும் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு திசையில் இருந்து கொண்டு பல்லி குரல்கொடுத்தால் ஒவ்வொரு விதமான பலன் உண்டாகுமாம்.

பல்லிக்குக் கிழமை தெரியுமா?

பல்லிக்குத் திசை தெரியுமா?

என்ன முட்டாள்த்தனம்!

ஆறறிவு படைத்த மனிதனால் செய்ய முடியாத ஒரு காரியம் ஒரு பல்லி தன்னுடைய கீச்சுக் குரலில் கத்துவதால் மட்டும் நடந்து விடுமா?

யோசித்துப் பாருங்கள்!

பூனை, பல்லியோடு மட்டும் விடவில்லை. ஆந்தை கத்தும் பலன், காகம் கரையும் பலன், கழுதை கத்தும் பலன், கருடனைப் பார்க்கும் பலன் என்று எதையும் விட்டு வைக்கவில்லை.

நல்லவேளை சிங்கம் கர்ஜிக்கும் பலன், புலி உறுமும் பலன், என்று சொல்லாமல் விட்டார்கள்!

இவைகளையெல்லாம் அறிவியல்பூர்வமாக, பகுத்தறிவுப்பூர்வமாக கடுகளவாவது ஏற்றுக் கொள்ள முடியுமா?

தாத்தாக்களுக்குத் தாத்தாக்களுக்குத் தாத்தாக்கள் சொன்னவை எல்லாவற்றையும் நாம் அப்படியே சரி என்று ஏற்றுக் கொள்ள முடியுமா? முடியாது. ஏன்?

அறிவியல் வளர்கிறது. மனிதர்களின் அறிவும் அநுபவமும் வளர்கிறது. எனவே சகுனம் என்றும், பல்லி, ஆந்தை, கருடன், கழுதை சொல்லும் பலன்கள் என்றும் சொல்லி மனிதனின் வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளக் கூடாது.

பூனை குறுக்கே போவதைப் பார்த்து எலிகள் பயந்து ஓடி ஒளியலாம்.

ஆனால் நாம் மனிதர்கள்.lizard

2 comments:

  1. அருமையான பதிவு. படித்துப் பாருங்கள்.
    நன்றி திரு உதய சங்கர்.

    ReplyDelete