Tuesday 26 June 2012

கொண்டையில்லாத சேவல்

மலையாளத்தில்- மாலிsculptures71

தமிழில்- உதயசங்கர்

 

அந்தச் சேவலுக்கு ஒரு கெட்டகுணம் இருந்தது. தேவையில்லாமல் அதிகமாய் பேசுவான். ஒருமுறை அவன் கூனன்பூனையைப் பார்த்தான். அவனிடம்,” டேய்! கூனா..உசுப்பிராணின்னா தலையில் கொண்டை வேணும்..உன் தலையில் கொண்டை இல்லை..அதனால நீ உசுப்பிராணியே இல்லை..” என்று சொல்லி முடிக்கும்முன்பே கூனன்பூனை பாய்ந்து ஒரு கடி! சேவல் தலைக் கொண்டை பூனையின் வாயில்!

அன்றிலிருந்து அந்தச் சேவலுக்கு ஒரு பட்டப்பெயர் உண்டானது-’கொண்டையில்லாச் சேவல்’.

அவன் பக்கத்துவீட்டுக் கோழியிடம்,”ஏடி! நான் மேகத்தைவிட உயரமாகப் பறக்கப் போறேன் தெரியுமா?” என்றான்.

அதற்கு அந்தக் கோழி,”கொண்டையில்லாச் சேவலே! என்ன இருந்தாலும் நீ ஒரு கோழியினம் தானே! அதனால பறப்பே..ஒத்துக்கிறேன்..ஆனால் ரொம்ப உயரமா எல்லாம்முடியாது..ரொம்ப தூரத்துக்கும் முடியாது..உன்னோட ஆசையை நீ விட்ரு!” என்று உபதேசம் செய்தது.

கொண்டையில்லாச் சேவல் விடவில்லை. அவனுக்கு பிடிவாதமும் கௌரவமும் உண்டு. உயரப் பறக்க படித்தே ஆக வேண்டும். அவன் போய் காக்காவைப் பார்த்தான்.

“காக்கா! நீ எனக்குச் சொல்லிக்கொடு..” என்று வேண்டினான்.

அதைக் கேட்ட காக்கா,” கொண்டையில்லாச் சேவலே! நீ கொஞ்சம் அடக்கஒடுக்கமா இருந்துக்கோ..அதான் உனக்கு நல்லது..” என்று சொல்லி விட்டுப் பறந்து சென்றது. கொண்டையில்லாச் சேவல் மைனாவைப் போய்ப் பார்த்தது.

”மைனா மைனா எனக்குச் சொல்லிக்கொடு..”என்று வேண்டினான்.

“கொண்டையில்லாச் சேவலே எனக்கு வேற வேலை இருக்கு...!”என்று மைனா சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விட்டது.

காக்காவும் கைகழுவி விட்டது. மைனாவும் கைகழுவி விட்டது.இவர்களை விட கழுகன் பலசாலி. கொண்டையில்லாச்சேவல் கழுகனைப் போய் பார்த்தான்.

”கழுகா, எனக்குச் சொல்லிக்கொடு..சும்மா ஒண்ணும் வேண்டாம்! தெரியுதா.. எனக்குக் கிடைக்கிற புழுக்கள்ல பாதிப் புழுக்கள் உனக்குத் தாரேன்..” என்று கொண்டையில்லாச் சேவல் சொன்னான்.

“கொண்டையில்லாச் சேவலே! உயரப் பறக்கிறது உனக்கு ஒத்து வராது..சும்மா ஆசைப் பட்டு பிரயோசனமில்லை..நீ உன் வேலையைப் பாரு..” என்று கழுகன் சொன்னான்.

கொண்டையில்லாச்சேவல் விடவில்லை. அவன் கழுகனைத் தொந்தரவு செய்தான். கழுகனுக்கு இரக்கம் வந்தது.

“சரி! நான் சொல்லிக் கொடுக்கிறேன்..முதல் பாடத்தை ஆரம்பிப்போமா..நீ என் முதுகில் ஏறிக்கோ..நான் உன்னைய தூக்கிகிட்டு உயரத்தில் பறக்கிறேன்..”என்று கழுகன் சொன்னான்.

கொண்டயில்லாச்சேவல் உற்சாகமாகி விட்டான். அவன் கழுகனின் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டான். கழுகன் சிறகுகளை விரித்து உயரே பறக்கத் தொடங்கினான்.கொண்டையில்லாச்சேவல் கண்களை மூடிக் கொண்டான்.திறக்கவில்லை. இரண்டு பேரும் எங்கே போயிருந்தாங்க தெரியுமா? தென்னை மரத்தை விட உயரமாய் பறந்து போனார்கள். கொண்டையில்லாச்சேவல் இவ்வளவு உயரமாய் பறப்பது இதுதான் முதல்தடவை. தலை சுற்றுவது போல் இருந்தது.கொஞ்சநேரம் கழிந்தது. அப்போது? கொண்டையில்லாச்சேவல் கீழே பார்த்தது. கீழே..ரொம்ப கீழே..கிடந்தது, பூமி. தென்னைமரமே புல்லு மாதிரி தான் தெரிந்தது.

கழுகன் இன்னும் மேலே பறந்து கொண்டிருந்தான்.கொண்டையில்லாச்சேவல் மிகவும் பயந்து போய்விட்டான்.அவன் கழுகனோட இறகுகளை இறுகப் பிடித்துக் கொண்டான்.பிடியை விட்டால்..அவ்வளவுதான்.முடிஞ்சது காரியம்!

“கழுகா! தயவு செஞ்சு என்னைக் கீழே இறக்கி விடேன்..” என்று கெஞ்சினான்.

ஆனால் கழுகன் உயரே போய்க் கொண்டேயிருந்தான்.கொண்டையில்லாச்சேவலுக்குக் கீழே பார்ப்பதற்கே பயம். அவன் கண்களை இறுக்கி மூடிக் கொண்டான்.

“கொண்டையில்லாச்சேவலே! நான் இப்போ உன்னை தள்ளிவிடப் போறேன்..” என்று கழுகன் சொன்னான்.

”அய்யோ தள்ளிராதே..நான் செத்துருவேன்..என்னைக் காப்பாத்து..உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்..” என்று கொண்டையில்லாச்சேவல் .

“இனிமேல் நீ மேகங்களை விட உயரமா பறக்கணுமா..” என்று கழுகன் கேட்டான்.

“இல்ல வேண்டாம்..” என்று கொண்டையில்லாச்சேவல் சொன்னான்.பின்னர் கழுகன் அவனைக் கீழே இறக்கி விட்டான்.

பக்கத்துவீட்டுக்கோழி “என்னாச்சு உன் முதல்பாடம்..” என்று கேட்டது.

கொண்டையில்லாச்சேவல் கொஞ்சமும் தயங்காமல்,” கழுகன்,காக்கா, மைனா, எல்லாம் மோசமான பறவைங்க..உயரப் பறக்கிறது..அவங்களுக்குச் சரிதான்..கோழியின் அந்தஸ்துக்கு அது தேவையில்லை..” என்று சொன்னான்!

1 comment: