Thursday 28 March 2013

பிரமீள் மேதையின் குழந்தமை

 

உதயசங்கர்

Piramil 2

திருநெல்வேலியிலிருந்து விளாத்திகுளத்துக்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு வேலை மாற்றலாகி வந்த ஜோதிவிநாயகம் கோவில்பட்டியில் எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துத் தலையை கழுத்துக்கு ரெண்டடி மேலே தூக்கிக்கிட்டு திரிந்த எங்கள் தலையில் ஒரு தட்டு தட்டி ( அப்படி தட்டுகிற அளவுக்கு எங்கள் எல்லோரையும் விட ஆறடி உயரத்தில் இருந்தார் ) ஏல உங்களுக்கு என்னல தெரியும் உலக இலக்கியம் பத்தி? என்று கேட்டார். அதுவரை எங்களைக் கேள்வி கேட்க யாரிருக்கா என்று தெருக்களில் யாரும் இல்லாத ராத்திரிகளில் பேட்டை ரவுடிகள் மாதிரி கர்ஜித்து புகை விட்டுத் திரிந்து கொண்டிருந்தோம். அவருடைய கேள்வியினால் எங்களுக்கானால் வெளம். எங்களைப் பார்த்து எப்படிக் கேட்கலாம்? எங்களைப் பார்த்து எப்படிக் கேட்கலாம்? அதுக்கும் ஒரு காரணம் இருந்தது.

கோவில்பட்டிக்காரர்களான எங்களுக்கு ஒரு சிறப்புக்குணம் இருந்தது. அங்கே எழுதிக் கொண்டிருந்த, எழுதிக் கொண்டிருக்கிற, நேற்றுத்தான் எழுதத் தொடங்கியிருக்கிற எல்லோருமே தாங்கள் எழுதுகிற ஒவ்வொரு எழுத்தும் உலக இலக்கியம் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். அதோடு ஒருத்தரை ஒருத்தர் தெரியாத்தனமாகக்கூட பாராட்டி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். ஒவ்வொருத்தரும் மற்றவர்கள் படைப்பை கொலைவெறியுடன் விமர்சனம் செய்தோம். எதிரிகள் போல பாவித்து விவாதம் செய்தோம். தத்துவங்கள் வழி பிரிந்து கிடந்தோம். பல இரவுப்பொழுதுகளில் கோவில்பட்டி காந்திமைதானம் தீப்பிடித்து எரிந்தது. ஆனாலும் தினமும் சந்தித்தோம். தினமும் விவாதித்தோம். இந்த சண்டை சச்சரவெல்லாம் எங்களுக்குள் தான். வெளியூரிலிருந்து யாராவது படைப்பாளிகள் வந்து விட்டார்களென்றால் அவர்கள் முதலில் ஓவியர் மாரீஸைத் தான் சந்திப்பார்கள். அவர் அவருடைய வீட்டில் தங்க வைத்து உணவளித்து ஓய்வெடுக்க வைத்து விட்டு ஊரிலுள்ள எழுத்தாளர்களுக்கு இப்படி இன்னாரின்னார் வந்திருக்கிறார்.. வாய்ப்பு இருக்கிறவர்கள் வந்து சந்தியுங்கள், என்று முரசறைவார். இப்போதென்றால் ஒரு குறுஞ்செய்தியோ, ஃபோனோ போதும். அது பழைய காலம் பெரும்பாலும் கால்நடையாக நடந்து ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் சென்று தகவல் சொல்ல வேண்டும். அதைச் சலிக்காமல் செய்தார் மாரீஸ்.

இப்படித் தகவல் கிடைத்ததும் எங்களுடைய ஆயுதங்களைத்தீட்டிக் கொண்டு அதுவரை பிரிந்து சண்டை போட்டுக் கொண்டிருந்த நாங்கள் ஒரே ஆளாக மாறி வியூகம் அமைத்து வந்தவர் மீது எல்லாவிதமான ஆயுதங்களைக் கொண்டும் தாக்குதல் நடத்துவோம். அவர் படைப்பைப் பற்றி பேசினால் நாங்கள் தத்துவம் பற்றி கேள்வி கேட்போம். அவர் தத்துவம் பற்றிப் பேசினால் அரசியல் பற்றிக் கேள்வி கேட்போம். இப்படி அவரைச் சுத்திச் சுத்தி வளைச்சு அவர் களைச்சுப்போய் சரணாகதி அடையும்வரை இந்த விவாதத்தின் முடிவுக்காகத் தான் இந்த உலகம் கண்மூடாமல் காத்துக் கொண்டிருப்பதாக நினைத்து உரத்த குரலில் சத்தம் போடுவோம். ஒத்தை ஆள் பாவம் என்ன செய்வார்? கடைசியில் சரணாகதி அடைந்து விடுவார். நாங்களும் வெற்றிக் களிப்புடன் அவருடன் சேர்ந்து அவருடைய காசில் டீயும் சிகரெட்டும் புகைத்து விட்டு கலைந்து விடுவோம். இப்படிக் கொள்ளைப்பேரை கலாய்ச்சிருக்கோம். அதனால் எங்களிடம் ஜோதிவிநாயகம் கேட்டபோது தயாரானோம் மற்றுமொரு யுத்தத்துக்கு.

நீளமான தலைமுடியை ஆட்டி ஆட்டி நீண்ட கைகளையும் விரல்களையும் நடன நிருத்தியங்களைப் போல் விரித்தும் நீட்டியும் எங்களிடம் பேசிய ஜோதிவிநாயகத்திடம் நாங்கள் அனைவரும் சரணாகதி அடைந்தோம். ஒரே நாளிரவில் எங்களையெல்லாம் வென்று விட்டார் ஜோதி. அப்படிக் கட்டுண்டிருந்தோம் அவரிடம். அவருடைய பேச்சு, விசாலமான அறிவு, உலக இலக்கிய அறிவு, அளவிலாத அன்பு, எல்லோரையும் அரவணைத்த மனம், இப்படி நாங்கள் அதுவரை கண்டிராத ஆளுமையாக இருந்தார் ஜோதி. அவருடைய உலகளாவிய இலக்கியப்பார்வை எங்களுக்கு எவ்வளவு கொஞ்சமாய் தெரிந்திருந்தது என்பதை உணர்த்தியது. கொஞ்சநாளுக்கு எங்களுடைய சந்திப்பின் மையம் காந்திமைதானத்திலிருந்து விளாத்திகுளம் வைப்பாற்று மணலுக்கு மாறி விட்டது. அது மட்டுமல்ல எப்போதும் யாராவது ஒருத்தர் ஜோதியின் கூடவே இருந்து கொண்டிருந்தோம்.

எல்லாஎழுத்தாளர்கள் மனதிலும் ஒரு ரகசியக்கனவு இருக்கும். அது தாங்கள் ஒரு பத்திரிகை நடத்த வேண்டும் என்பது தான். அந்தப் பத்திரிகை மட்டும் வெளியானால் போதும் தமிழிலக்கியமே தலைகீழாகப் புரண்டுவிடும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். கடைசிவரை இப்படியே ரகசியமாய் கனவுகண்டே காலத்தைக் கழிப்பவர்களும் இருப்பார்கள். சிலர் அசட்டுத் தைரியத்தில் கண்ட கனவை யதார்த்தத்தில் நிகழ்த்திவிட ஆசைப்படுவார்கள். ஆசை தானே எல்லா நல்லதுக்கும் கெட்டதுக்கும் காரணம். ஜோதியும் அப்படி ஒரு கனவு கண்டிருக்கிறார். பிறகென்ன அவருக்கு அருள் வர ஆரம்பித்துவிட்டது. போதாதுக்கு நாங்கள் வேறு ரெண்டாங்கு மேளத்தை டண்டனக்க டன் டண்டணக்க டன் என்று அடித்து அவருடைய அருள் குறையாமல் பார்த்துக் கொண்டோம்.

தேடல் என்ற நாமகரணம் சூட்டி காலாண்டிதழாக அந்தப் பத்திரிகை வெளிவந்தது. அந்தச் சமயத்தில் கோவில்பட்டிக்கு வருகிற எழுத்தாளர்கள் எல்லோரும் விளாத்திகுளத்துக்கும் செல்வதை வழக்கமாக்கியிருந்தனர். கவிஞர் தேவதேவன் தூத்துக்குடியிலிருந்து அடிக்கடி கோவில்பட்டி வந்து செல்வார். அப்போது கவிஞர் பிரமீளுடன் மிக நெருக்கமாக இருந்தார். நவீன கவிதையின் மிகச் சிறந்த கவிஞர் பிரமீள். அவருடைய கண்ணாடியுள்ளிருந்து தொகுப்பு அப்போது தமிழ்க்கவிதையுலகில் பெரும்சலனத்தை ஏற்படுத்தியிருந்தது. எனக்கு அவருடைய கவிதை மீது மிகப்பெரும் காதல் இருந்தது. அவருடைய விமர்சனக்கட்டுரைகள், கலை இலக்கிய கோட்பாடுகள் பற்றிய கட்டுரைகள் எல்லாம் புதிய ஒளியுடன் மனதுக்குள் வெளிச்சம் பாய்ச்சின. அவருடைய கவிதைகளை விட அவருடைய கட்டுரைகளை ஜோதிக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய மேதாவிலாசத்தைப் பற்றி, அவர் சொல்லியுள்ள கருத்துகளின் புதுமை பற்றி மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டிருப்பார்.

பிரமீள் இலங்கையில் பிறந்தவரென்றாலும் அவருடைய முப்பதுகளிலேயே இந்தியாவுக்கு வந்து விட்டார். இலங்கையிலிருக்கும்போதே அவருடைய இருபதுகளில் சி.சு. செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையில் தன் எழுத்துப் பயணத்தைத் தொடங்கிவிட்டார். அவர் இந்தியாவுக்கு வந்த காலம் புதுக்கவிதை இயக்கமும் விமர்சன மரபும், தமிழில் வேரூன்றத் தொடங்கியிருந்த காலம். அதன் பிறகு அவர் தமிழ் எழுத்தாளராகவே தான் அறியப்பட்டார். நவீன தமிழ் இலக்கியத்தில் மகத்தான ஒரு ஆளுமை பிரமீள். புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம், ஓவியம், சிற்பம், என்று பலதுறைகளிலும் தன் ஆளுமையை வெளிப்படுத்தியரென்றாலும் பிரமீளின் மேதைமை புதுக்கவிதையிலும் விமர்சனத்துறையிலும் விகசிக்கிறது. யாருக்கும் அஞ்சாமல் தயவு தாட்சண்யமில்லாமல் தன் கருத்துக்களை முன்வைக்கும் வல்லமை அவரிடம் இருந்தது. தமிழில் முழுமையான படிமக்கவிஞராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். புதுக்கவிதையின் இன்றைய வளர்ச்சிக்கு அவருடைய வாழ்நாள் முழுவதும் கவிதையை தன் வாழ்வின் இயக்கமாகக் கொண்டு இயங்கியதும் ஒரு காரணம். ஆரம்பத்தில் தன்னுடைய கவிதை இயக்கத்தை இதுவரை தமிழ்க் கவிதை உலகில் முன்னெப்போதும் ஒப்புவமை சொல்ல முடியாத படிமங்களின் வெளிச்சத்தைப் பாய்ச்சியவர் பிரமீள்.

அவருடைய விடிவு என்ற கவிதையில்,

பூமித்தோலில்

அழகுத்தேமல்

பரிதிபுணர்ந்து

படரும் விந்து

கதிர்கள் கமழ்ந்து

விரியும் பூ

இருளின் சிறகைத்

தின்னும் கிருமி

வெளிச்சச்சிறகில்

மிதக்கும் குருவி.

என்று படிமங்களின் அழகியலில் வாசகனுக்குப் பிரமிப்பூட்டிய பிரமீள் பின்னால் கவிதையின்வழி ஆன்மீகப்பயணத்தைத் தொடர்ந்தார். அவருடைய E=Mc2 என்ற கவிதையும், கண்ணாடியுள்ளிருந்து கவிதையும் காவியம் கவிதையும், என்றென்றும் பிரமீளின் பெயர் சொல்லும் பல கவிதைகளில் சில. அந்த மகத்தான கவியாளுமையின் கவிதையியக்கத்தை இத்தனை சிறிய கட்டுரையில் சொல்லிவிட முடியாது. பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பின்பு தமிழில் தோன்றிய மகத்தான ஒரு ஆளுமைக்கு உரிய கௌரவத்தை தமிழிலக்கியம் தரவில்லை என்றே அஞ்சுகிறேன்.

தமிழ் விமர்சன மரபென்பது இன்னமும் சோனிக்குழந்தையாகவே இருக்கிறது. அந்தத் துறையில் இயங்குவதற்கான தெம்பும் திராணியும் நம் இலக்கியவாதிகள் அநேகம்பேருக்கு இல்லை. ஆனால் தன்னுடைய இருபதுகளிலே சுயமான மதிப்பீட்டு உணர்வுடன் தமிழிலக்கியத்தில் இயங்கியவர் பிரமீள். அன்று அவருடன் வெங்கட்சாமிநாதன், கைலாசபதி, நா.வானமாமலை, தொ.மு.சி., சுந்தரராமசாமி, கா.சிவத்தம்பி போன்றோர் வேறு வேறு கோணங்களில் இயங்கினார்கள். ஆனால் இன்று அப்படிப்பட்ட விமர்சன மரபு தொடரவே இல்லை என்பது தமிழின் துரதிருஷ்டம் தான். அ. மார்க்ஸ்ஸையும் எழுத்தாளர் ஜெயமோகனையும் தவிர வேறு யாரும் அத்தகைய சுயமான மதிப்பீடுகளுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றனரா என்பது சந்தேகம். இப்போதைய விமர்சனங்கள் எல்லாம் ரசனை சார்ந்த மதிப்புரைகளாகவே இருக்கின்றன என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். கால சுப்பிரமணியன் பிரமீளின் தமிழின் நவீனத்துவம் என்ற நூலின் முன்னுரையில்,

“ விமர்சனத்தை ஒரு கலை வடிவாக அமைத்தவர் பிருமீள். அழகியல் ரீதியிலான அநுபவத்தைச் சொல்லும் ஒரு தோரணையாக விமர்சனத்தை மாற்றினார். சுயமான விமர்சனச் சித்தாந்தத்தை உருவாக்கிக் கொடுத்தார். “

என்று சொல்வதை அவருடைய விமர்சனக்கட்டுரைகளை வாசிக்கிற எல்லோரும் ஏற்றுக் கொள்ளவே செய்வர். அத்தகைய ஆளுமையின் வாழ்நாள் முழுவதும் அன்றாட வாழ்க்கைக்குத் தடுமாறிக் கொண்டிருந்தார். மிகுந்த கூர்மையான தன்னுணர்வு மிக்கவராகவும், கூருணர்வுடையவராகவும் இருந்ததால் இந்தச் சமூகத்தோடும், நண்பர்களோடும் எல்லாநேரமும் எல்லாக்காலமும் ஒத்துப் போக முடியவில்லை. அதனால் ஏற்பட்ட காயங்கள், அவருடைய எழுத்தில் வெளிப்பட்டது. எனக்கு அந்தக் குழாயடிச் சண்டைகள் அதுவும் குறிப்பாக மிகவும் தனிப்பட்ட முறையில் எழுத்தாளர்களை கேரக்டர் அஸாஸினேஷன் செய்கிற மாதிரி எழுத்துகள் அருவெருப்பையே ஏற்படுத்தின. அந்த மகா ஆளுமையின் சித்திரத்தில் தவறுதலாக விழுந்துவிட்ட கோடுகளாகவே அவை தெரிந்தன. ஆனால் இவற்றையெல்லாம் சுண்டுவிரலால் புறந்தள்ளி விடுகிற அளவுக்கு மகத்தான படைப்பாளியாக பிரமீள் திகழ்ந்தார். அவருக்குத் தமிழ்ச்சமூகம் எந்த நியாயத்தையும் வழங்கவில்லை. தன்னுடைய சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் தன்னுடைய அறிவார்ந்த ஆளுமையைப் பற்றி அதற்கு கிஞ்சித்தும் கவலையில்லை. கால சுப்பிரமணியன் போன்ற மிகச்சில நண்பர்களின் உண்மையான அன்பிலேயே தன் பிற்காலத்தைக் கழித்தார். உடல் நலக்குறைவினால் 1997- ல் வேலூர் அருகிலுள்ள கரடிக்குடியில் மறைந்தார். இப்போதும் பிரமீளின் எழுத்துகள் அனைத்தும் நமக்குக் கிடைப்பதற்கு கால சுப்பிரமணியன் தான் காரணகர்த்தாவாக இருக்கிறார். இந்த ஒரு காரியத்துக்காகவே நம்முடைய தமிழ்ச்சமூகம் கால சுப்பிரமணியத்துக்கு நன்றிக்கடன் பாராட்ட வேண்டும். ஆனால் தமிழ்ச்சமூகத்தின் எருமைத்தோலில் எந்த வெயிலோ, மழையோ எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லையே. அதற்கு அன்றிலிருந்து இன்று வரை திரைப்படம் ஒன்று தான் ஞானப்பாலூட்டி வளர்க்கும் தாயாக இருக்கிறது.

80- களில் பிரமீளின் ஒரு கட்டுரைத் தொகுப்பு ஒன்றை வெளிக்கொண்டுவர கவிஞர் தேவதேவன் முயற்சி எடுத்தார். அதற்காக அவருடைய கைப்பிரதிகளை வாங்கி படியெடுத்துக் கொடுக்க என்னிடம் கொடுத்திருந்தார் தேவதேவன். மகத்தான சந்தர்ப்பமென அவற்றை நானும் வாங்கி படியெடுக்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் நினைத்தபடி வேலையை உடனே முடிக்க முடியவில்லை. வேலையில்லாமல் சும்மா சுற்றிக் கொண்டிருப்பதால் வீட்டில் கடும்நெருக்கடி. பாதி நாள் வீட்டிலில்லாமல் யார் எந்த ஊருக்குக் கூப்பிட்டாலும் போய்க் கொண்டிருந்தேன். அப்புறம் காதல் நெருக்கடிகள் வேறு. இதனால் தேவதேவன் எவ்வளவோ அவகாசம் கொடுத்தும் அந்தக் கட்டுரைகளை படியெடுத்து முடிக்கவில்லை. இது தெரியாமல் பிரமீள் தேவதேவனைக் கடிந்து ஒரு கடிதம் எழுதிவிட்டார். அந்தக் கடிதம் ஏற்படுத்திய வருத்தத்தில் தேவதேவனும் எனக்கு கோபமாக எல்லா கைப்பிரதிகளையும் திருப்பி அனுப்பச் சொல்லி கடிதம் போட்டார். கடிதம் கண்டவுடன் நான் குற்றவுணர்ச்சி பொங்க என் சூழ்நிலையை விளக்கி ஒரு கடிதத்தை தேவதேவனுக்கு எழுதி விட்டு சில நாட்களிலேயே அந்தக் கைப்பிரதிகளைப் படியெடுத்து ஒரிஜினலையும் சேர்த்து அனுப்பி விட்டேன். பின்னர் அதை மறந்தும் விட்டேன். ஒரு மாதம் கழித்து ஒரு அஞ்சலட்டை வந்தது. பிரமீள் எழுதியிருந்தார். அவர் தவறுதலாக தேவதேவனைக் கடிந்ததின் விளைவே தேவதேவன் உங்களைக் கடிந்து விட்டார் என்று வருத்தம் தெரிவித்தும், நன்றி பாராட்டியும் எழுதியிருந்தார். எப்படியிருக்கும்? அந்தக் கடிதத்தை நான் காட்டாத ஆளில்லை.

என் ஆதர்சமான ஆளுமையிடமிருந்து கடிதமென்றால் சும்மாவா? அதன் பிறகு 90-களில் எழுதிய கட்டுரை ஒன்றில் நம்பிக்கையளிக்கும் வகையில் சிறுகதை எழுதிக் கொண்டிருப்பவர்கள் பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றிருந்தது. அவர் தூத்துக்குடிக்கு தேவதேவனைப் பார்ப்பதற்காக வந்தவர் விளாத்திகுளத்துக்கும் ஜோதியைப் பார்ப்பதற்காக வந்தார். நான் தற்செயலாக அன்று விளாத்திகுளத்தில் இருந்தேன். அவரைப் பார்த்தால் மிகச் சாதாரணமாகத் தெரிந்தது. அவருக்கு ஒரு புறம் தேவதேவனும், இன்னொருபுறம் ஜோதியும் ஒரு பரவச உணர்வோடு நடந்து கொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்குப் பின்னே குட்டோட்டமாக வந்து கொண்டிருந்தேன். ஒரு மேதையின் அறிவு விசாலத்தை அன்று நேரில் கண்டேன். எந்த சிரமமுமில்லாமல் அலட்டலுமில்லாமல் அத்தனை விஷயங்களைப் பற்றியும் ஆதாரபூர்வமாக, விளக்கமாக, எளிமையாக, சொல்லிக் கொண்டு வந்தார். அவர் பேசியதைக் கேட்டபோது அதிலிருந்த தெளிவு என்ன அதிசயப்படுத்தியது. எந்த விஷயம் குறித்தும் தயங்காமல் பேசினார். நாங்கள் மூன்று பேரும் அப்படியே மெய்ம்மறந்த மாதிரி நடந்து கொண்டிருந்தபோது விளாத்திகுளம் பேரூந்து நிலையத்துக்குள் ஒரு பேரூந்து அப்படியே வளைந்து திரும்பியது. ஒரு கணம் தான் பிரமீள் தன் உதடுகளைப் பிதுக்கி ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று ஒலியெழுப்பியபடியே சின்னப்பயனைப் போல இரண்டு கைகளையும் ஸ்டீயரிங்கை வளைத்துக் கொண்டு ரோட்டில் கொஞ்சதூரம் ஓடிப் போனார். பின் நின்று திரும்பி மறுபடியும் எங்களிடம் வந்தார். நாங்கள் அப்படியே அசந்துபோய் நின்றோம். அருகில் வந்ததும் புன்னகை மாறாமல் விட்ட இடத்திலிருந்து பேசத் தொடங்கினார் அந்த கவியாளுமை.

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னால் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஒரு கூட்டத்துக்காக நான் விளாத்திகுளம் சென்றிருந்தேன். பேருந்து நிலையம் மாறவில்லை. அன்று போலவே பேருந்து வளைந்து திரும்புகிறது. அதோ எனக்கு முன்னால் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ற சத்தமெழுப்பியபடி பிரமீள் ஓடிக் கொண்டிருக்கிறார். அந்த மேதையின் குழந்தமை விளாத்திகுளம் பேருந்து நிலையப் புழுதியில் அழியாக்கல்வெட்டாய் பதிந்திருக்கிறது. பிரமீள்..எங்கள் அன்புக்குரிய பிரமீள்…

நன்றி- சொல்வனம் இணைய இதழ்

Friday 15 March 2013

புத்தர்

fx_0184_buddha_oil_painting_religious_modern உதயசங்கர்

 

ஒரு இலை

உதிர்ந்து கொண்டிருக்கிறது

மெதுவாக

தன் ஆயிரமாயிரமாண்டு

வரலாற்றிலிருந்து

மற்றுமொரு

ஆயிரமாயிரமாண்டு

வரலாற்றுக்குள்

உதிர்ந்து கொண்டிருக்கும் இலை

புத்தராகி விட்டார்

அல்லது

புத்தர் இலையாகி விட்டது .

Wednesday 13 March 2013

எழுத்தாளர் தவசியின் மறைவு

IMG5663  

எழுத்தாளர் தவசி காலமானார். சுமார் முப்பத்தைந்து வயதுடைய தவசி மார்ச் 8 ஆம் நாள் பிற்பகலில் மதுரையில் காலமானார். ஒன்றரையாண்டு காலம் சிறுகுடல் புற்றுநோயால் அவதியுற்று வந்த தவசி அலோபதி மருத்துவம் மரணம் அவருக்கு வெகுபக்கத்தில் இருப்பதாகக் கூறி கைவிட, அவரும் சித்த மருத்துவத்தைத் தொடர்ந்தார். இப்பிரபஞ்சத்தையே பெருங்காதலுடன் சுவைக்கத் துடித்த ஒருவன் மரணத்தைக் கண்டு மிரள்பவன் அல்லவே. அதனால் அது வீசிய வஞ்சகப் புன்னகைக்குத் தன்னையே கொடுத்து விட்டான்.

தினகரன் நாளிதழில் வட்டாரப் பதிப்பில் துணையாசிரியாகப் பணியாற்றி வந்தார். மூன்று சிறுகதைத் தொகுப்பு, ஒரு நாவல் ஆகிய பக்கங்களில் விரவி நிற்கும் தவசியின் எழுத்து முறை நண்பர்கள் வட்டத்திற்கும் தேடிப்படிக்கும் வாசகர்களுக்கும் நெருக்கமான உணர்வைத் தருபவை. இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் திணைக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த தவசி எளிய விவசாயக் குடும்பத்தின் இரண்டாவது வாரிசு.

அப்பகுதியில் அடர்த்தியாக வசிக்கும் மறவர் குல மக்களின் இயல்பினையும், நிலம் சார்ந்த வாழ்க்கையையும் துல்லியமாகப் பதிவு செய்தவர். நிலத்தின் வெம்மையையும், குளுமையையும், மழைக்காலங்களில் வெள்ளை வெளேர் என்று நிற்கும் நீர்பரப்பையும், சின்னச்சின்ன கண்மாய்களையும், அதன் கரைகளில் அடர்ந்து நிற்கும் நீர்க்கருவேல மரங்களையும், உக்கிரமாக அடிக்கும் வெயிலையும், இரவுக் காலங்களில் பெருஞ் சமவெளியெங்கும் வெளிச்சம் பரப்பும் நிலவொளியையும், அடர்த்தியான ஆலமரத் தோப்புகளையும், அவை காட்டும் பயத்தையும், தோப்புகளுக்குள் உலவும் பயங்காட்டும் தொன்மைக் கதைகளையும், மரப்பொந்துகளில் வாழும் பச்சைக் கிளிகளையும், கருநாகப் பாம்புகளையும், வாய்க்கால் வரப்பு நண்டுகளையும் தம் எழுத்து வெளியின் பரப்பாக மாற்றியவர். அந்நிலத்தின் அறிமுகம் பெறாதவர்களும் தவசியின் எழுத்தைக்களை வாசிக்கும்போது அவற்றைத் தன்வயப்படுத்திக் கொள்ளும் விதமாக அலுப்பூட்டாமலும், நுணுக்கமாகவும் பதியச்செய்யும் திறனைக் கைவரப் பெற்றிருந்தார் தவசி.

குறிப்பாக ‘’சேவல்கட்டு’’ புதினத்திற்காக நடுவணரசின் விருது வழங்கப்பட்டது. யுவபுரஸ்கார் விருது அவருக்கு அளிக்கப்பட்டதன் மூலமாகவே அப்படி ஒன்று இருப்பதாகவும், அது கொஞ்சம் தகுதி வாய்ந்தது என்றும் என்னைப் போன்றவர்களுக்குத் தெரிய வந்தது.

மறக்குடிகளின் நிலத்தின் மீதான பிடிமானத்தையும், மாடு கன்றுகளை அவர்கள் தம் சகஉயிரியாகவே பேணுவதையும், சேவல் கட்டுக்காக மொத்த வாழ்வையும் பணயம் வைப்பதையும், சேவல்களின் குண நுணுக்கங்களையும், சில மறவர்களின் வறட்டுக் குலப் பிடிவாதத்தையும் பெண்களை அடிமையினும் கேவலமாக நடத்துவதையும் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியிருந்தார். தன் மனைவியை அடித்தே கொன்று போடுவதையும், மேல் வாய்க்கு வறட்டு வீராப்பு பேசுமவன் உள்ளுக்குள் கசிதைவயும் எதார்த்தம் சிதையாமல் நுணுக்கமாக எழுதிய தவசி தனது இறுதிப் படைப்பான ‘’அப்பாவின் தண்டனைகள்’’ என்ற புதினத்தில் கண்டிப்பின் பெயரால் ஒரு தந்தை தன் மகன் மீது காட்டும் வெறுப்புணர்வையும், வெறித்தனமான வன்முறையையும் நம்பகத் தன்மை சிதையாமல் சித்தரித்துள்ளார்.

கையால் எழுதிய இந்நாவலின் கணினியச்சு வடிவத்தை என்னிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அவருக்கு உவப்பான பகுதிகளையே நானும் எடுத்து வைத்துப் பேசியதில் பெரும் மனநிறைவு கொண்டார். மரணம் தனக்குப் பக்கத்தில் இருப்பதாக உணர்ந்து என்னையே அவசரமாக முன்னுரை எழுதவும், மெய்ப்புத் திருத்தவும் பணித்தார். மார்ச் இறுதியில் சொந்த ஊரில் வெளியீட்டு விழா நடத்த வேண்டும் என்று தம்பிகள் விரும்புவதாகக் கூறினார். சந்தியா பதிப்பகத்தார் இரண்டு புத்தகக் கண்காட்சியை முடித்த கையோடு தவசியின் அவசரத்திற்கு ஈடுகொடுக்க முயன்ற நிலையில் தான் மரணம் முந்திக்கொண்டு விட்டது.

‘’நடக்கட்டும்யா, எதுன்னாலும் நடக்கட்டும். இயற்கையின் உத்தரவிற்குக் கட்டுப்படுவதைவிட நாமென்ன செய்ய முடியும். எது நடந்தாலும் நல்லதுக்குத் தானே’’ என்ற குரல் நான் தான் மரணப் படுக்கையில் வீ.ழ்த்தப்பட்டவன் போலவும் அவர் எனக்கு ஆறுதல் கூறுவது போலவும் இருந்தது. ஒவ்வொரு முறை பேசி முடித்ததும் என் மரணத்திற்காக நீங்கள் யாரும் வருத்தப்படக் கூடாது என்று மிகவும் அழுத்திக் கூறுவது போல் இருந்தது.

‘’அப்பாவின் தண்டனைகள்’’ 240 பக்கப் புதினத்தை சுமார் ஒரு நாளைக்கு ஐந்து பக்கங்கள் வீதம் அவசர அவசரமாக நோயையும் தாக்காட்டிக் கொண்டு, வேலைக்கும் போய்க் கொண்டு எழுதி முடித்துள்ளார். நோயின் வலியுடன் கூடிய இந்த உழைப்பு பிரமிப்பாகத் தான் இருந்தது. அது பற்றிப் பேசும்போது ‘’நான் எங்கய்யா எழுதினேன். அதுவா எழுதி வாங்கிருச்சில்லே. ஆள விட மாட்டேன்னுருச்சேய்யா.’’ எனத் தானுமே மிரண்டு தான் காணப்பட்டார். அடுத்த இரண்டு வாரத்தில் மதுரை மேலூர் சாலையில் அமைந்துள்ள தினகரன் அலுவகத்தில் வேலைப்பொறுப்பேற்று வீடு பார்த்துக் குடியமர்ந்து பிழைதிருத்தங்களையும் செய்து முடித்திருந்தார். இதற்கிடையில் உடல்நிலை அவரது வேகத்திற்கு ஒத்துழைக்காததால் சில வாரங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த கிராமத்திற்குச் சென்றிருந்தார். ஒருநாள் காலை இளம் வெயில் சூடேறும் நேரத்தில் அழைத்து ‘’ம்…. என்ன செய்யிரீய? …… சௌக்கியந்தானே’’ ‘’நல்லாருக்கேன் தவசி எப்படி இருக்கீங்க? ‘’ம்….. இருக்கேன்…. ம்… ஏதோ பரவால்லாம இருக்கேன். ரெம்ப முடியாமத்தான் ஊருக்கு வந்தேன். இப்போ பெய்ஞ்ச மழையிலே கம்மாய்க் குளமெல்லாம் தெத்து தெத்துன்னு ஒரேத் தண்ணிக் காடா இருக்கு. அங்கங்க புல்லு மொள விட்டு மண்ணைத் தெறிச்சுக்கிட்டு மேல கிளம்புது. இந்தக் காட்சியக் காங்க சூரியனும் மேலெழும்பி வருது. மனசே நெறஞ்சு கிடக்கய்யா. அதான் உங்களக் கூப்டு பேசணுன்னு தோணிச்சு.’’ ‘’அப்பிடியா உங்க குரல்லயே உற்சாகம் தெரியுதே. சந்தோசம். அங்கேயே ஒரு பத்து நாளைக்கு இருக்க முடியுமா’’ ‘’அதான் பாக்குறேன். சொந்தம் உறவெல்லாம் பார்த்துட்டுப் போகலான்னுதான் வந்தேன். இங்க இருக்குற சூழ்நிலை இன்னும் ஒரு அஞ்சாறு நாள் இருந்து கயித்துக் கட்டில் போட்டு ஆலமரத்துக்குக் கீழ படுத்து, இம்புட்டுக் கூழுத்தண்ணிக் குடிச்சு மனசையும் உடம்பையும் தேத்திக்கலாம்ன்னு தோணுது. நீங்க என்ன செய்யிறீய? பிள்ளங்க என்ன பண்றாங்க? ஆகட்டும். முடிஞ்சா மத்தியில பேசுவோம். இங்க சரியா டவர் கிடைக்கிறதில்ல. அதனால மதுரைக்கு வந்திட்டுக் கூப்புடுறேன்.’’ .

தவசிக்கு தன் மண் மீதும், தன் வாழ்வுடன் தொடர்புடைய மக்கள் மீதும் நேசம் மிகுந்த ஈடுபாடு இருந்தது. ஆனால் அதில் சாதியஅபிமானம் ஏறி விடக்கூடாது என்ற சமூகப் பொறுப்புணர்வு கொண்ட படைப்பாளிக்குரிய எச்சரிக்கையும் சேர்ந்தே இருந்தது.

தவசியின் விருப்பத்திற்கு ஈடு கொடுத்து அப்பாவின் தண்டனைகள் பிரதியை நூல்வடிவமாக்கி இரண்டாம் நிலை பிழைதிருத்தத்திற்கு தவசிக்கு அனுப்பி இருந்தார் சந்தியா சௌந்திரராஜன். படித்து விட்டு பேராவல் பொங்க என்னை அழைத்து. ‘’சந்தியாவுல இருந்து அனுப்பிட்டாக. படிச்சுட்டேன். நல்லா வந்திருக்கு. எனக்கேப் புதுசாப் படிக்கிற மாதிரி இருந்துச்சு. இனி அச்சாகி, புத்தகமாகி, முகம் தெரியாத ஒருத்தர் படிச்சு சொல்றது அப்புறம் இருக்கட்டும். மொதல்ல எனக்கே ரெம்பப் பிடிச்சுருக்கய்யா. ஆமா ரெம்பப்பிடிச்சிருக்கு. சந்தோசமா இருக்கு. நிலமும் இயற்கையும், வெயிலும் அப்பிடியே பாத்திரங்களா மாறியிருக்கே.’’ என்று நிறைந்த உற்சாகத்தில் பேசினார். ஒரு மாலை நடையில் பேசிய விதம் எனக்கு தவசியின் உடல் நிலையின் பால் மிகுந்த நம்பிக்கையை உருவாக்கியது. முழுமையாகத் தேறிவிடுவார் என்றும் நோயின் பொருட்டு ஆழ்மனதில் படிந்திருந்த அவநம்பிக்கையைத் துடைத்து விட்டார் என்றும் கருதி ஒருவாரம் கழியவில்லை தவசியை எனக்கு அறிமுகம் செய்வித்த தோழர் பாண்டியன் மூலமாகவே தவசியின் மரணச்செய்தி வந்து சேர்ந்தது.

மருத்துவ அதிகாரத்தால் கைவிடப்பட்ட பின்னரும் ஓராண்டிற்கு மேலாக நோயுடன் போராடி மீளமுயன்ற தவசி வேலைக்கும் போய்க்கொண்டு தனித்துவமான புதினம் ஒன்றையும் எழுதி முடித்துள்ளார். இயற்கையின் கட்டளைக்குப் பணியத் தன்னை மனப்பூர்வமாகத் தயார்ப்படுத்தி இருந்தார். தன் நோயைக்குறித்த அனுதாபம் வழியும் குரலை ஒருபோதும் அவர் கேட்க விரும்பியதில்லை. ‘’ஆகட்டும் பார்த்துக்கலாம். இயற்கை எதைச்செய்தாலும் நன்மை தானே’’ என்று சொல்லுமளவிற்குத் தவசி பெற்றிருந்த ஆரோக்கியமான மனப் பக்குவம் என்னைப்போல நிறைய உடல் ஆரோக்கியம் பெற்றவர்களுக்கு இல்லை என்கிறபோது தவசி விட்டுச் செல்கிற வெற்றிடம் மிகப் பிரமாண்டமாகத் தெரிகிறது. இனி மிச்சமிருக்கிற நாட்களிலேனும் நான் பெற்றுவிட முடியுமா? என்ற ஏக்கம் மேலிடுகிறது.

அஞ்சலி என்பது என்ன? மரணித்தவனின் இலக்கை நோக்கி நானும் கொஞ்ச தூரம் செல்ல முயற்சிப்பது தானே?

ஏழு வயதுப்பெண் நான்கு வயதுப் பையன் இவர்களைப் போலவே நாளை என்பது எத்தனை இருள் நிறைந்தது என்று கணக்கிடத் தெரியாத இளம் மனைவி ஆகிய தவசியின் குடும்பத்தாருக்கு ஒரு கை விளக்கேனும் காட்ட வேண்டியது நமது கடமையாகிறது.

நண்பர்கள் சமூகத்தில் நீங்களும் சேர்வீர்களா?

போப்பு

Tuesday 12 March 2013

கல்வியின் அரசியல்

education உதயசங்கர்

 

நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் அரசியல் தான் தீர்மானிக்கிறது. முதலாளித்துவ அரசியல் அதன் இருப்பை உறுதி செய்கிற கல்வி, அறம், நீதி, பண்பாடு, முதலியவற்றை முன்னெடுக்கிறது. அதைப் பிரச்சாரம் செய்கிறது. மக்கள் மனதில் பதிய வைக்கிறது. மக்களை ஏற்றுக் கொள்ள வைக்கிறது. மக்கள் மனங்களைத் தன் வசப்படுத்துகிறது. ஆக அரசு யந்திரம் தன்னுடைய அரசியல் தத்துவத்துக்கேற்ப எல்லாவற்றையும் உருமாற்றுகிறது. கல்வியும் இந்த சமூகத்தில் அத்தகைய உருமாற்றம் அடைந்து கொண்டேயிருக்கிறது. இப்போதைய கல்வி முறை நடைமுறையிலிருக்கும் முதலாளித்துவ தத்துவத்துக்கேற்ப மாற்றப்பட்டிருக்கிறது. போலியான ஜனநாயகநடைமுறைகள் உள்ள இந்த அமைப்பு அதே போலியான ஜனநாயகநடைமுறைகளைக் கல்வித் திட்டத்திலும் கடைப்பிடிக்கிறது. எல்லோருக்கும் கல்வி என்று முழங்குகிறது. கட்டாயக்கல்வி என்று கட்டாயப்படுத்துகிறது. ஆனால் அதே நேரம் சாமானிய மக்களுக்கு எட்டாத உயரத்தில் கல்வி இருக்கும்படியாக கல்வியைத் தனியார் மயமாக்கியுள்ளது. அரசுப்பள்ளிகளுக்குப் போதுமான அடிப்படை வசதிகளோ, உள்கட்டமைப்பு வசதிகளோ செய்து கொடுப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் மாநில, மற்றும் மத்திய அரசுகளின் நிதிநிலை அறிக்கையில் கல்விக்கான நிதி குறைந்து கொண்டே வருகிறது. ஒரே நேரத்தில் எல்லோருக்கும் கல்வி என்ற முழக்கத்தையும், கொஞ்சம் கொஞ்சமாகக் கல்விக்கான நிதிக்குறைப்பையும் செய்து தாங்கள் முதலாளிகள் பக்கம்தான் என்று நிருபிக்கிறது.

இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் கல்வித்திட்டம் ஏழை எளிய உழைப்பாளி மக்களின் பிள்ளைகளுக்கேற்ப இல்லை. அந்தக் குழந்தைகளின் அறிதிறன், கற்றல் திறன், உள்வாங்கும் சக்தி, இவற்றிற்குச் சம்பந்தமில்லாமல் கல்வியைத் திணிக்கும்போது அந்தக் குழந்தைகளால் உள்வாங்க முடிவதில்லை. அல்லது சில குழந்தைகளுக்கேனும் அது முடிவதில்லை. அந்தக் குழந்தைகளைப் படிக்க லாயக்கில்லை என்ற முத்திரையைக் குத்தி பள்ளியை விட்டு விலகச்செய்து மாடு மேய், பன்னி மேய் என்று திரும்பத் திரும்பச்சொல்லி அவர்களை தாங்கள் மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று மனதளவில் ஏற்றுக் கொள்ளவைத்து கல்வியிலிருந்தும் வாழ்க்கையிலிருந்தும் ஓரங்கட்டுகிறது. இப்படி பெரும்பான்மையான குழந்தைகளை உதிரித் தொழிலாளிகளாக்கி தன்னுடைய உழைப்புச் சுரண்டலுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது இந்த அமைப்பு.

இப்படி பாரதூரமான பாதிப்பைக் குழந்தைகள் மனதில் நம்முடைய கல்வித்திட்டம் ஏற்படுத்தி அவர்களைத் தாழ்வுமனப்பான்மை உள்ளவர்களாக மாற்றுகிறது. எந்த விமர்சனமுமில்லாமல் சமூகத்தின் அடக்குமுறைகளைச் சகித்துக் கொள்ளும் பொறுமையை அது தருகிறது. இதற்கு ஆதரவாக மதமும், நீதித்துறையும் இருக்கிறது. இதைப் பெரும்பான்மையானவர்கள் புரிந்து கொள்ளும்போது சமூகத்தில் மாற்றம் நிகழும். இத்தகைய அரசியலைப் புரிந்து கொண்ட மாணவர்கள் எட்டுபேர் தங்களுடைய பள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடிதம் தான் “ எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க? ” என்ற குறுநூல். இதனை எழுத்தாளர் ஷாஜஹான் அற்புதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்த நூலின் ஒவ்வொரு பக்கமும் நம்மை அதிரவைக்கும் கேள்விகளும் பதில்களும் கொண்டவை

இத்தாலியிலுள்ள பார்பியானோ நகரத்தின் பள்ளிக்கூட மாணவர்கள் எட்டு பேர் தங்களுடைய டீச்சருக்கு எழுப்பிய கேள்விகள் உலகம் முழுவதுக்குமான கேள்விகளாக மாறி நம்மை உலுக்குகிறது. முப்பத்தியைந்து மதிப்பெண்கள் பெற்றால் பாஸ். முப்பத்திநாலு மதிப்பெண்கள் பெற்றால் பெயில் என்ற நடைமுறையினை தகர்த்தெறியும் கேள்விகளை அந்த மாணவர்கள் கேட்கிறார்கள். கல்வி என்பது கூட்டாகக் கற்க வேண்டியது என்பதையும், கல்வியில் மாணவர்களுக்கான பங்கேற்பு பற்றியும் அவர்கள் கேட்கிறார்கள். ஆசிரியர் என்பவர் கல்வி பயிலுவதற்கான வழிகாட்டியாக ஏன் இல்லாமல் அதிகாரியாக நடந்து கொள்கிறார் என்று கேள்வி கேட்கிறார்கள். பெயிலாக்கப்பட்டு பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவர்கள் ஒரு பாதிரியாரின் ஏற்பாட்டில் இரவுப்பள்ளி தொடங்கி தாங்களே ஆசிரியராகவும், தாங்களே மாணவர்களாகவும் நடத்திய அநுபவங்களைச் சொல்கிறார்கள். ஒருபாடத்தைக் கற்றுக்கொள்வதில் பின் தங்கிய மாணவனுக்காக வகுப்பே காத்திருந்து அவன் அந்தப் பாடத்தைக் கற்ற பிறகு அடுத்த பாடத்துக்குப் போவதைப்பற்றியும், வாழ்க்கை நடைமுறைக்கு ஒவ்வாத மேதாவித்தனமான பாடங்களை நெட்டுரு போட்டு வாந்தியெடுப்பதில் உள்ள இழிமுறைகளைப்பற்றியும் பேசுகிறது. ஒருவகையில் இது தோற்றுப்போனவர்களின் முழக்கம். தங்களைத் தோற்கடித்த கல்விமுறைக்கு எதிரான பரணி. புத்திசாலி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதைப் பற்றி, அலுப்பூட்டும் ஆசிரியர்களின் உரைகள் பற்றி, ஒருவழிப்பாதையாக வகுப்பறைகள் மாறியிருப்பதைப் பற்றி, கேட்கிறது. கூட்டாகக் கற்பது அரசியல் தனியாகக் கற்பது சுயநலம் என்று எச்சரிக்கிறது. மதிப்பெண்களுக்காக, தேர்ச்சிக்காக, சான்றிதழுக்காகக் கல்வி பயிலும் நடமுறையைக் கேலி செய்கிறது. இத்தகையக் கல்விமுறையில் பெற்றோர்களின் தலையீடு பற்றி, ஆசிரியர்களின் பொறுப்பு பற்றி பேசுகிறது. மாற்றம் தவிர்க்க முடியாதது. ஏழைகள் அதிகாரம் பெற்றால் மட்டுமே இந்தக் கல்விமுறையை மாற்ற முடியும் என்று முரசறைகிறது. கல்வி கற்க எல்லோருக்கும் வாய்ப்பளிப்பது போல சொல்லி மாணவர்களைப் பள்ளியிலிருந்து வெளியேற்றி அவர்களை கற்க லாயக்கில்லாதவர்களாக முத்திரை குத்தும் இந்த சமூக அமைப்பிற்கெதிரான போர்க்குரல் இந்தச் சிறுநூல்.

மதுரையிலுள்ள வாசல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள இந்த நூலை அனைவரும் வாசிப்பதின் மூலம்நம்முடைய கல்விமுறை குறித்தும், நாம் எந்த இடத்தில் நிற்கிறோம் என்பதைப்பற்றியும், என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றியும் புரிந்து கொள்ள முடியும்.

நன்றி- இளைஞர் முழக்கம்

Sunday 10 March 2013

புதிது

உதயசங்கர்

joisel-2

இன்று

அந்த மரத்தின் இலைகள்

உதிர்ந்து கொண்டிருக்கின்றன

மௌனமாய் இருக்கிறது மரம்

மௌனம் மரணமல்ல

தியானம்

நாளை

மீண்டும் அந்த மரத்தில்

புதிய இலைகள்

புதிய இலக்குகள்

புதிய லட்சியங்கள்

புதிய விடுதலை

புதிய பூக்கள்

புதிய மனிதர்கள்

புதிது புதிதாய் தோன்றவே.

Thursday 7 March 2013

ஆண்களின் சமூகத்தில் பெண்கள்

 

உதயசங்கர்pleasure-pain-series-ten-gustavo-ramirez

 

ஒரு வகையில் சமூகம் மாறித்தான் இருக்கிறது. மின்னணு ஊடகங்களும், இணைய தள வசதிகளும் தங்களுடைய பகாசுரப்பசிக்கு அவ்வப்போது சென்சேஷனலாக செய்திகளை, நிகழ்வுகளை, சம்பவங்களை, பயன்படுத்திக் கொண்டாலும் அது பொதுச்சமூகவெளியில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தவே செய்கிறது. சிவில் சமூகம் முன்னெப்போதும் இல்லாதவகையில் இப்போது இந்த மாதிரியான செய்திகளுக்கு, நிகழ்வுகளுக்கு, சம்பவங்களுக்கு, முகம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. விமரிசிக்கிறது. கோபம் கொள்கிறது. கொதித்தெழுகிறது. ஆவேசங்கொள்கிறது. ஆத்திரப்படுகிறது. ஆலோசனைகள் சொல்கிறது. சிவில் சமூகத்தின் இந்த உணர்ச்சிவேகத்தினால் அரசியல்கட்சிகளும், சமூகவியலாளர்களும், எழுத்தாளர்களும், கலைஞர்களும், சாமியார்களும், இத்தகைய நிகழ்வுகள் குறித்து பேச வேண்டியவர்களாகின்றனர். எல்லோரும் தங்களுடைய அறிவின் சிகரத்திலிருந்து சமூகத்தை உய்விக்க தங்களுடைய கருத்துகளை, ஆலோசனைகளை, அபிப்ராயங்களைச் சொல்கின்றனர். சிலர் இயக்கங்களை நடத்துகின்றனர். இவையெல்லாவற்றிற்கும் விளைவுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இவையெல்லாம் எது வரைக்கும் என்று ஒரு கேள்வி வருகிறது. அடுத்த சென்சேஷனல் செய்தியை ஊடகங்கள் தருகின்ற வரை மட்டுமா? அப்படி ஒரு செய்தி வந்தவுடன் அதை நோக்கி எல்லோரும் படையெடுக்கத் தொடங்கி விடுவார்களா? கருத்து சொல்ல ஆரம்பித்து விடுவார்களா? அப்படி நிகழுமென்றால் இன்றைய நவீன முதலாளித்துவ அமைப்புக்கு தான் நினைத்தது நடக்கிறதென்ற ஆணவம் வந்து விடும். ஏனெனில் தன்னுடைய அஸ்திவாரத்தின் சிறுகல்லையும் அசைக்காத எந்தவொரு சீர்திருத்தத்தையும், இயக்கத்தையும் அது ஆதரிக்கவும், ஏன் முன்னெடுக்கவும் செய்யும். அதற்காக இப்படியான சீர்திருத்தங்கள், இயக்கங்கள், தேவையில்லை என்பதில்லை. இதனூடாக நாம் எங்கே பயணம் செய்யப்போகிறோம்? இந்த எல்லாச் சமூகச்சீரழிவுகளுக்கும் அடிப்படையான சாராம்சமான காரணங்களை நோக்கிய பயணமாக இது இருக்கப்போகிறதா? இல்லை இது இப்படியான மேலோட்டமான சுயதிருப்தியாக முடியப்போகிறதா? இது தான் இன்று முக்கியமாய் நம்முன் உள்ள கேள்வி.

டெல்லியில் நடந்த கொடூரமான பாலியல் வன்முறையில் நேரடியாக ஈடுபட்டவர்கள் ஐந்து பேர்களாக இருக்கலாம். ஆனால் அந்த சம்பவத்தில் ஒட்டுமொத்த சிவில் சமூகமும் மறைமுகமாக ஈடுபட்டதாகவே கருத வேண்டும். ஏனெனில் ஒரு நிர்பயா அல்ல. ஆயிரக்கணக்கான நிர்பயாக்கள் அன்றாடம் பாலியல் வன்முறைக்காளாகின்றனர். வீடுகளில் இப்படிப்பட்ட வன்முறை நிகழவில்லையென்று யாராலாவது சொல்ல முடியுமா? அடித்து, உதைத்து, பயமுறுத்தி, வற்புறுத்தி, கெஞ்சி, வீட்டுப்பெண்களை அவர்களுடைய கணவர்கள் பாலியல்வன்கொடுமைக்கு ஆளாக்குவதில்லை என்று சொல்லமுடியுமா? சொந்தக்காரர்களால், நண்பர்களால், அப்பா, சகோதரர்களால், வீட்டுப்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதில்லையா? பள்ளிகளில், கல்லூரிகளில், பஸ்ஸில், ரோட்டில், தெருக்களில், அலுவலகங்களில்,சினிமாக்களில், பத்திரிகைகளில், ஊடகங்களில், இணையதளங்களில், வயது வித்தியாசமில்லாமல் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்காளாக்கப்படுவதில்லையா? அவமானப்படுத்தப்படுவதில்லையா? காவல்துறையால், ராணுவத்தால், சாதித்துவேஷத்தால், இனத்துவேஷத்தால், மதத்துவேஷத்தால், யுத்தத்தால், பிரிவினையால், பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாவதில்லையா? இதெல்லாம் எங்கே நிகழ்ந்து கொண்டிருந்தன? நிகழ்ந்து கொண்டிருக்கின்றன? இதே சிவில்சமூகத்தில் தானே. ஏதோ அந்த ஐந்து சமூகவிரோதிகள் மட்டும்தான் பாலியல்வன்கொடுமை செய்த மாதிரியும் சமூகத்தில் மீதம்உள்ள அத்தனை பேரும் யோக்கியர்கள் மாதிரி வேடம் போடுகிறோமே. எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

இப்போது யோசித்துப்பார்த்தால் ஒட்டு மொத்த சமூகமே பெண்களுக்கு எதிரான சமூகமாக இருக்கிறது. ஏனெனில் இது ஆண்களின் சமூகம். தங்களுடைய பாலியல் தேவைகளுக்காக மட்டுமே இந்த ஆண்கள் சமூகம் பெண்களை தங்களுடன் வாழ அனுமதித்திருக்கிறது. அதிகாரத்தின் குரூரத்தை மட்டுமே சுவைக்கப்பழகிய ஆண்கள் சமூகம் தங்களுடைய ஆதிக்கத்தைச் செலுத்த, அதிகாரத்தை நிலைநாட்ட தனக்குக் கீழே ஒரு பெண்உயிரியை வைத்து தனக்குச் சேவகம் செய்ய, தன் தேவைகளைப் பூர்த்தி செய்ய, வைத்துள்ளது. இது எந்த வர்ணாசிரம்க்கோட்பாடுகளையும் தாண்டிய அடிமைத்தனத்தைப் பெண்கள் பேண அநுமதித்திருக்கிறது. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர், என்று எல்லா சாதியினரும் பெண்களை அடிமைகளாகவே வைத்திருக்கின்றனர். ஏனெனில் சாதியக்கட்டமைப்பே ஆண்களின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக உருவாக்கப்பட்டது தானே.

அதேபோல குடும்பம் என்ற அமைப்பே பெண்களை அடிமைப்படுத்துவதற்கான ஒரு தந்திரம் தான். அன்று நந்தனை எரித்த மாதிரி இத்தனை நூற்றாண்டுகளாக எத்தனை பெண்களை எரித்திருப்பார்கள் ஆண்கள்? பெண்களை எக்காலத்தும் ( இளமையில் தந்தை, பருவத்தில் கணவன், முதுமையில் மகன் ) பாதுகாப்பின்மையில் வைத்து பெண்களையே பெண்களுக்கு எதிரியாக மாற்றியது ஆண்களின் மிகப்பெரும் தந்திரமல்லவா?. அதே போல பெண்ணே தன்னை உடலாக மட்டுமே பார்ப்பதற்கு அவளுடைய குழந்தைப்பருவத்திலிருந்தே அவளை அலங்காரப்பொம்மையாக்கி, நீளக்கூந்தலுக்காக, அழகான புருவத்துக்காக, அஞ்சன விழிகளுக்காக, சங்குக்கழுத்துக்காக, வடிவழகுக்காக, நிறத்துக்காக, வண்ண வண்ண ஆடைகளுக்காக, என்று தன்னை ஒரு பாலியல் பண்டமாக அறிந்தோ அறியாமலோ மாற்றிக் கொள்ள வைக்கிற தந்திரம் ஆண்களின் கைங்கர்யம் அல்லவா? இந்தியாவில் மட்டும் அழகுசாதனப்பொருட்களுக்கான நுகர்வு கடந்த இருபதாண்டுகளில் இருநூறு மடங்கு அதிகரித்துள்ளது. (தேங்க்ஸ்(!) டூ மின்னணு ஊடகங்கள்?). திரைப்படங்களில், விளம்பரங்களில், பெண்ணை நுகரும், சாப்பிடும், பொருட்களாகவே சித்தரித்து அதைக் காமெடியாகக் குடும்பத்தோடு கண்டுகளித்த இந்த ஆண்களின் சமூகம் எத்தனை சாமர்த்தியமாக தன் குரலை மாற்றிப் பேசுகிறது பாருங்களேன். போர்னோ இணையதளங்களில் மிக அதிகமான இணையதளங்களை ஒளிபரப்பும் அமெரிக்கா நிர்பயாவுக்கு வீரமங்கை விருது கொடுக்கும் வேடிக்கை போலத்தான். முறையான பாலியல் கல்வி இல்லாததினால் ஆண்கள் பருவமடைந்தவுடன் மிகச்சுலபமாக அன்று சரோஜாதேவி புத்தகங்கள் என்று சொல்லப்பட்ட செக்ஸ் பத்திரிகைகள் என்றால் இன்று வெறும் செல்போனிலேயே போர்னோ பார்த்து தன் வக்கிரத்தை வளர்த்துக் கொள்ள வழிவகுத்ததும் இந்த ஆண்கள் சமூகம் தான். முறையான பாலியல் கல்வியினால் லோகம் கெட்டுவிடும் என்று கூப்பாடு போடுவதும் இந்த சிவில் சமூகம் தான். ஆனால் இப்படி இழிவான வக்கிரமான போர்னோவினால் பாலியல்வன்முறை நிகழ்ந்தால் போட்டு விடலாம் தூக்கு என்று கொக்கரிப்பதும் இந்த சிவில்சமூகம் தான். இப்படி பலவேசம் போடும் இந்த சிவில் சமூகத்தைக் குறித்து சந்தேகப்படவேண்டியது அவசியம்.

உண்மையில் பெண்களைப் பற்றிய அடிப்படையான பார்வையே மாற வேண்டியதுள்ளது. முதலாளித்துவம் தன்னுடைய உழைப்புத்தேவைகளுக்காகவே பெண்களை வேலைக்குச் செல்ல அநுமதிக்கும்படி ஆண்களை வசப்படுத்தியிருக்கிறது. அப்படியும் கூட பெரும்பாலான பெண்கள் பொருளாதாரப்பாதுகாப்பில்லாமல் தான் இருக்கிறார்கள். முதலாளித்துவத்தின் அடிப்படைத்தத்துவமான எதையும் விற்பனை செய் என்பது தான். அந்தப்படியே அது பெண்களையும் பாலியலையும் விற்பனை செய்கிறது. ஆண்சமூகத்தின் உச்சபட்ச கொடுங்கோலன் இந்த முதலாளித்துவம். இந்த மகளிர் தினக்கொண்டாட்டங்கள் கூட விற்பனைக்கான ஒரு ஏற்பாடும் பொங்கிவரும் பெண் உணர்வுகளுக்கு ஒரு வடிகாலாக மடைமாற்றம் செய்யும் ஒரு ஏற்பாடு தான்.எனவே பெண்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதிருக்கிறது.  தங்களுடைய வாழ்க்கைப்பார்வையை மாற்ற வேண்டியதிருக்கிறது. பெண்களுக்கு மோட்சம் திருமணம் தான் என்ற பார்வை மாற வேண்டும். அதே போல பெண்குழந்தைகளை வெறும் அலங்காரப்பொம்மைகளாக வளர்க்கிற மனோபாவம் மாறவேண்டும். காதல் திருமணங்களை ஊக்கப்படுத்த வேண்டும். சாதிமறுப்பு திருமணங்களை இருகரம் நீட்டி வரவேற்க வேண்டும். அதுமட்டுமல்ல பெண்களை பொதுவெளியில் கலந்து பழக, பங்கேற்க உற்சாகப்படுத்த வேண்டும். பெண்களின் இன்றைய நிலைமை குறித்து விழிப்புணர்வை பெண்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இதையெல்லாம் முதலில் நம் வீட்டிலிருந்தே துவங்க வேண்டும். முற்போக்கான, ஜனநாயக, உணர்வுள்ள ஆண்களும் பெண்களும், அமைப்புகளும் இணைந்து பணியாற்ற வேண்டும். வெறும் சடங்காக மகளிர் தினத்தைக் கொண்டாடுவதிலோ உறுதிமொழிகளை எடுப்பதிலோ எந்த பயனும் இல்லை. இன்னும் அடிப்படைகளை நோக்கி சமூகமாற்றத்தை நோக்கி  நாம் பயணப்படவேண்டும்.

ஆதியில் என்று பெண் உற்பத்திசக்திகளை ஆணிடம் இழந்தாளோ அன்றிலிருந்தே பெண்ணை வெறும் பாலியல் பண்டமாக, குழந்தை பெறும் இயந்திரமாக ஆண் மாற்றி விட்டான். இதற்காகவே அரசியல்,தத்துவ, கலை, இலக்கிய, பண்பாட்டுக்களங்களில் பெண்களின்மனதை வசியப்படுத்தும் கருத்துக்களை சொல்லி அவர்களைத் தங்களைத் தாங்களே தியாகிகளாக்கி மடிவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் காவிய இதிகாசங்களிலும், காப்பியங்களிலும், செய்தான். தேவதாசி முறையை ஏற்படுத்தி பாலியல்வன்கொடுமை செய்யவில்லையா? சதி எனச்சொல்லி உடன்கட்டை ஏறச்சொல்லவில்லையா? என்ன தான் செய்யவில்லை பெண்களை. இவ்வளவும் செய்த, செய்து கொண்டிருக்கிற சிவில்சமூகம் தான் பெண்களுக்கெதிரான எல்லாக்கொடுமைகளுக்கும் பொறுப்பேற்கவேண்டும்.

உண்மையில் அந்த ஐந்து பேரையல்ல இந்த ஆண்களின் சமூகத்தைத் தான் தூக்கில் போட வேண்டும்.

Sunday 3 March 2013

தொலைந்தது…..

உதயசங்கர்sptlt102_1

 

சுப்பிரமணியனின் இல்லத்தரசி சுந்தரி சுப்பிரமணியனிடம் கோவித்துக் கொண்டு அவளுடைய அம்மா வீட்டுக்குப் போய்விட்டாள். ஏன் என்று கேளுங்களேன். கேட்க மாட்டீர்களா? இது என்ன பெரியவிஷயமா? இல்லை உலகில் எங்கும் நடக்காத புது விஷயமா? இரண்டு ஆண்களோ இல்லை பெண்களோ கூட சேர்ந்து கொஞ்சநேரம் இருக்கமுடியாது. இதில் ஒரு ஆணையும் பெண்ணையும் வாழ்நாள் பூராவும் சேர்ந்து இருக்கச்சொன்னால் ஒருத்தருக்கொருத்தர் கோவிக்காமல் கொள்ளாமல் இருக்க முடியுமா? அதனால் சுப்பிரமணியன் இல்லத்தரசி சுந்தரி கோவித்துக் கொண்டுபோனதில் என்ன அதிசயம் என்று தானே நினைக்கிறீர்கள். ஒருவகையில் நீங்கள் நினைப்பதும் சரிதான்.

உங்கள் வீட்டிலோ அல்லது எங்கள் வீட்டிலோ அவ்வப்போது சின்னச்சின்ன சச்சரவுகள் நடக்கும். ஒருவருக்கொருவர் பேசாமல்கொள்ளாமல் முறைத்துக் கொண்டே ஒருநாள் ஒருபொழுதோ இரண்டு சிங்கங்களைப் போல உறுமிக்கொண்டோ அல்லது சுவரையோ குழந்தைகளையோ பொருட்களையோ மொழிபெயர்ப்பாளராக அல்லது தொடர்பாளராக வைத்துக்கொண்டோ ஜென்மப்பகைவர்கள் போல நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு உன்னைக்கலியாணம் முடித்தது தான் என்று பரஸ்பரம் சொல்லிக்கொண்டோ அல்லது நினைத்துக்கொண்டோ அலைவோமில்லையா? நேரமாக ஆக அந்தச் சச்சரவு ஒரு காமெடியாகிவிடுவதும், இல்லாளைக் கள்ளப்பார்வை பார்த்து நோட்டமிடுவதும் அதேபோல இல்லாளும் ஜாடைமாடையாகப் பேசிக்கொள்வதும் நடக்கும். இரவு மாயாஜாலம் செய்து விடும். அப்புறம் பார்த்தால் குழந்தைகள் ஆச்சரியப்படுவார்கள் அல்லது எரிச்சல்படுவார்கள். சில குழந்தைகள் விபரம் தெரியாமல் எப்ப பேசுனீங்க? எப்படிப் பேசுனீங்க? என்று கேட்டு உயிரை எடுப்பார்கள். அப்புறம் ஒரு இரண்டு நாளைக்கு இரண்டுபேரும் நடந்துக்கிறதைப் பார்த்து இவங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சு ஏதோ இப்பதான் புதுசா ஃப்ரண்ட் ஆனவங்க மாதிரி கொஞ்சுறதும் குலாவுறதும்னு நெனப்பாங்க. இது அடுத்த சச்சரவு வரைக்கும் தொடரும். சிலர் இது ஈகோ பிராபளம் என்பார்கள். கணவன் மனைவி உறவு குறித்து ஏராளமான ஆலோசனைப்புத்தகங்கள், உளவியல் தொடர்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. மனைவியை மகிழ்விப்பது எப்படி? கணவனைப் புரிந்துகொள்ள சில எளிய சூத்திரங்கள். உங்கள் திருமணவாழ்க்கையை வெற்றிகரமானதாக்கிட சில வழிகள். தாம்பத்தியம் இனித்திட …. இத்யாதி இத்யாதி.. என்று எழுதித் தள்ளுவதற்கு எழுத்தாளர்களும் அதை வாங்கி வாசிப்பதற்கு வாசகர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.

சரி.போதும் விட்டால் உரைவீச்சை வீசிக்கொண்டே போகிறீர்களே என்று சொல்லநினைக்கிறீர்கள் தானே. என்ன செய்ய யாராவது கேட்பதுக்குக் கிடைத்தால் விடுவதற்கு மனசு வரமாட்டேனென்கிறது. சரி இப்பவாச்சும் சுப்பிரமணியனிடம் அவனுடைய இல்லத்தரசி ஏன் கோவித்துக் கொண்டு போனாள் என்று கேட்கநினைத்தீர்களே அது போதும். ஏன் என்றால் இந்தக் கதையே அதைப்பற்றித் தான். வேறொன்றுமில்லை. சுப்பிரமணியன் ஒரு முக்கியமான பொருளைத் தொலைத்து விட்டான். ப்பூ.. இது ஒரு பெரிய விஷயமா என்று அலட்சியப்படுத்துகிறீர்கள் அல்லது நாங்கள் தொலைக்காததா எத்தனை குடை? எத்தனை செருப்பு? எத்தனை ரூபாய்? எத்தனை பொருட்கள்? இதெல்லாம் வாழ்க்கையில் சகஜம். இதுக்குப் போய் கோவிச்சிகிட்டு அம்மா வீட்டுக்குப் போகலாமா?

நீங்கள் நினைப்பது சரிதான். நாம தொலைக்காத பொருளா பணமா? ஆனால் சுப்பிரமணியன் தொலைத்தது பொன்னோ பொருளோ பணமோ இல்லை. புதிதாகக் கட்டி முடித்து ஐந்து வருடங்களே ஆன ஒரு இரண்டு படுக்கையறை வீட்டையே தொலைத்து விட்டான். என்னது வீட்டைத் தொலைத்து விட்டானா? எப்படி? எப்படி? எப்படி? எதுக்கு இத்தனை எப்படி? அதைச் சொல்றதுக்குத் தானே இந்தக் கதையே.

சுப்பிரமணியனின் இல்லாள் சுந்தரி திருமணமான உடனே கேட்ட முதல் கோரிக்கை என்று நாகரிகமாகவும், போட்ட முதல் ஆணை என்று கொஞ்சம் முரட்டுத்தனமாகவும் சொல்லும்படியானது என்னவென்றால் முதலில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது தான். அதைக் கேட்டதும் முதலில் மலைத்துப் போய்விட்டான். வீடா? முதலில் சொந்தமாக ஒரு இடம் வாங்க வேண்டும். பிறகு அந்த இடத்தில் வீட்டுக்கு ஒரு பிளான் போட்டு அதற்கு நகராட்சியில் அனுமதி வாங்கி வங்கியில் கொடுத்து வீட்டுக்கடன் வாங்கி இஞ்சினியரைப்பிடித்து வீட்டைக் கட்டி முடித்து கிரகப்பிரவேசம் நடத்தி வீட்டுக்குக் குடிவந்து அப்பாடான்னு உட்காரும்வரை ………இப்படியே இந்த வாக்கியத்தை முடிக்கமுடியுமா என்ன? அப்புறம் கடனை யார் கட்டி முடிக்கிறது. பத்து வருடமோ பதினைந்து வருடமோ வங்கித் தவணைகளைக் கட்டி முடித்து வங்கியில் கிளியரன்ஸ் வாங்கி பத்திரம் கையில் கிடைத்தால் தான் அது நம்முடைய வீடு. அதுக்கே நமக்கு ரிடையர்மெண்ட் வயது நெருங்கிவிடும். வீட்டுப்பத்திரத்தைக் கையில் வாங்கி மனசாறுவதற்குள் பிள்ளைகள் வீட்டைப்பார்த்து விடுகிற பெருமூச்சுச் சத்தம் கேட்கும். அப்புறம் என்ன? எல்லாம் யாருக்காக? உங்களுக்காகத் தானே என்று பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு ஈரத்துணியை அடிவயிற்றில் இறுக்கிக் கட்டிக் கொண்டு அலைந்து திரிய வேண்டியது தான். இதற்கா இத்தனை ஆண்டுகாலமும் சதாசர்வகாலமும் சிரமங்களைத் தலையிலேற்றிக் கொண்டுத் தள்ளாடித் தள்ளாடி நடக்க வேண்டியிருந்தது என்று விரக்தி வரும்.

ஆனால் விதி யாரை விட்டது என்று சொல்லமுடியாது.. சுந்தரியின் மதி சுப்பிரமணியனை விடவில்லை என்று சொல்லலாம். அங்க இங்க கடன உடன வாங்கி சுப்பிரமணியன் ஐந்து செண்ட் இடம் வாங்கி அதிலே வங்கிக் கடன் நகைக்கடன்களை நாயாய்பேயாய் அலைந்து பெற்று எப்படியும் போட்ட பிளானுக்குச் சம்பந்தமில்லாமல்தான் வீடு உருவாக, அந்த எக்ஸ்ட்ரா செலவுகளுக்கு நண்பர்களிடம் கையேந்தி அவர்களும் நம்மைப்பார்த்து துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட, அது தான் சந்தர்ப்பமென்று சுந்தரியும் என்னவோ உயிர் நண்பன்னீக.. உங்க உயிர் நண்பர் உங்களைப் பார்த்ததும் ஓடறாரு… அவரோட பொண்டாட்டி வழி மச்சினனுக்கு ஃபாரின் போறதுக்கு இருபத்தையாயிரம் கொடுத்துருக்காரு.. தெரியுமா? இனிமே ஃப்ரெண்டு கிரண்ட்னீக இருக்கு பார்த்துங்க… என்று காலை வாரிவிட, இஞ்சினீயர், கொத்தனார், கையாள், சித்தாள், என்று எல்லோரிடமும் வழிந்து வழிந்து சிரித்து அவர்கள் கமிஷன், கையாடல் எல்லாம் பொறுத்து ஒரு வீட்டைக் கட்டினான். கட்டிமுடித்து சுந்தரியைப் பார்த்து சிரித்தபோது தலையில் நரை எட்டிப்பார்த்தது. சுந்தரி சிரித்துக் கொண்டே “ என்ன அதுக்குள்ளே கிழவனாயிட்டீங்க… பக்கத்துவீட்டு சாரைப்பாருங்க இந்த வயசிலும் எப்படியிருக்கார்? “ என்று கேலி செய்தாள். ஆயிரொத்தொரு கவலைகளை இத்துனூண்டு தலையில் போட்டு அமுக்கினால் என்ன ஆகும்? நரை திரை மூப்பெய்தி கிழப்பருவம் சடுதியில் வாராதோ? என்று சொல்ல நினைத்ததைச் சொல்லாமல் அந்தக் கவலையையும் ஆயிரத்திரண்டாவது கவலையாகச் சேர்த்துக் கொண்டான்.

அப்படி அரும்பாடு பட்டு கட்டிய சுந்தரி இல்லத்தைத் தான் நம்ம சுப்பிரமணியன் தொலைத்து விட்டார். நம்பமுடியவில்லை இல்லையா? உண்மை தான் அவர் என்னிடம் சொன்னபோது என்னாலும் நம்பமுடியவில்லை. உங்களைப் போலவே நானும் சுப்பிரமணியனுக்கு ஏதாவது மனநிலை லேசாக பிசகியிருக்குமோ என்று சந்தேகப்பட்டேன். ஒரு திரைப்படத்தில் நகைச்சுவைக்கலைஞர் வடிவேலு கிணத்தைக் காணவில்லை என்று காமெடி பண்ணியமாதிரி ஏதாவது செய்கிறாரோ என்று கூடத் தோன்றியது. ஆனால் அவர் கண்ணில் தளும்பிய கண்ணீர் கொஞ்சம் நம்புகிற மாதிரித் தான் இருந்தது. இந்தக் கதை கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கலாம் என்று நினைத்து எப்படித் தொலைத்தீர்கள் என்று கேட்டேன்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் பிராய்லர்கோழிக்கறியை வகையாக ஒரு பிடிபிடித்து விட்டு உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் வீட்டுக்கு வெளியில் ஏதோ ஆட்கள் சத்தம் கேட்டு சுந்தரி எழுப்பி விட்டாள். உறக்கச்சடவுடன் வெளியில் போய்ப் பார்த்தான் சுப்பிரமணியன். ஒரு பத்துபேர் அவன் வீட்டுக்கு அருகிலிருந்த காலிமனையை அளந்து கொண்டிருந்தார்கள். அது ஒன்றும் பெரிய விஷயமில்லையே. அந்த இடத்தை வாங்குபவர்களாக இருக்கலாம் என்று நினைத்தபடியே மீண்டும் தூக்கத்தைத் தொடரலாம் என்று திரும்பி உள்ளே வர யத்தனித்தவன் கண்ணில் அவன் வீட்டையும் சேர்த்து சங்கிலியால் அளக்கிற மாதிரி ஒரு அரிச்சல் தென்பட்டது. உடனே உறக்கம் கலைந்து விட்டது. பதட்டத்தில் அவனுடைய சொங்கியான தேகக்கட்டை பிறர் கண்ணில் படாமல் மறைக்க மறந்து வேகமாக வெளியில் ஓடினான். உண்மையில் அவனுடைய வீட்டையும் சேர்த்துத் தான் அளந்து கொண்டிருந்தார்கள். அவன் அளந்து கொண்டிருந்தவர்களை நோக்கி வீராவேசமாகப் போனான். ஆனால் அவர்கள் யாரும் அவனைப் பொருட்படுத்தவில்லை என்பது மட்டுமல்ல ஏதோ வேடிக்கை பார்க்க வந்தவனைப் போல தள்ளி நிற்கச் சொன்னார்கள். அவர்களுடைய அலட்சியம் அவனுக்கு மிகுந்த ஆத்திரத்தை உண்டுபண்ணியது.

“ ஏங்க வீட்டையும் சேர்த்து அளக்கிறீங்க? “

“ வாங்குனா அளக்கமாட்டாங்களா? “

“ இது என்வீடு..”

“ அதெல்லாம் அண்ணன்கிட்ட பேசிக்கோ..”

“ யாருய்யா உங்க அண்ணன்? “

இந்தக் கேள்வியைக் கேட்டதும் சினிமாவில் வருகிற மாதிரி எல்லோரும் ஒன்றுபோல நிமிர்ந்து முறைத்துப் பார்த்தார்கள். ஒரு கணம் உள்ளுக்குள் நடுங்கித் தான் போய் விட்டான்.

“ இல்ல இது என் சொந்த வீடு… அதான் இதையும் சேர்த்து அளக்கிறீங்களேன்னு கேட்டேன்..”

என்று இழுத்தான். அதற்குள் வெளியே போன சுப்பிரமணியனைக் காணவில்லையே என்று தேடி வந்த சுந்தரி இந்தக் காட்சிகளையும் வசனத்தையும் கேட்டு விட்டாள். அவ்வளவு தான். பத்திரகாளியாக மாறி விட்டாள். அன்று தான் சுந்தரியின் முழு விஸ்வரூபத்தையும் சுப்பிரமணியன் பார்த்தான்.

“ என்னங்க இது இவங்ககிட்ட போய் கேட்டுகிட்டு..போலீசைக்கூப்பிடுங்க… பத்து வருசத்துக்கு முன்னாடி இடத்தை வாங்கி வீட்டைக்கட்டி குடியிருந்துகிட்டிருக்கோம்… இவுக நோகாம வந்து நொங்கு தின்பாங்களாம்… என்ன அநியாயமாருக்கு.. வீட்டை அளந்தீங்க நடக்கிறதே வேற…”

என்று ஆங்காரமாய் குரல் கொடுத்தாள். அதைக் கேட்டதும் அளந்து கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் அடங்கிப் போனார்கள். அவர்களில் ஒருவர்,

“ ஏம்மா எங்ககிட்ட வந்து கத்துறீங்க.. எங்கள அளந்துட்டு வரச்சொன்னாங்க… நாங்க அளக்கறோம்… உங்களுக்குப் பிரச்னைன்னா நீங்க போய் இடத்தை வாங்குனவங்ககிட்ட போய் பேசுங்க…”

என்று சொன்னார். சுப்பிரமணியன் அதுவும் சரிதான் என்கிற மாதிரி தலையாட்டினான். ஆனால் சுந்தரி,

“ நாங்க எதுக்குப் போய் அவங்ககிட்ட பேசணும்..நாங்க இந்த இடத்த பத்து வருசத்துக்கு முன்னாலயே வில்லங்கம் பார்த்து பத்திரம் பதிஞ்சிருக்கோம்.. எங்ககிட்ட எல்லா ரெகார்டும் இருக்கு.. போலீஸ் பார்த்துகிடட்டும்… ஏங்க நம்ப கருப்பசாமியண்ணனுக்கு ஒரு போனைப் போடுங்க…”

என்று சொன்னதும் இதுவும் சரிதான் என்று சுப்பிரமணியன் தலையாட்டினான். உடனே கூட்டத்தில் ஒருவன் யாருக்கோ போனைப் போட்டான். சில நிமிடங்கள் பேசிய பிறகு அவன்,

“ யப்பா வாங்கப்பா… அண்ணன் எல்லாரையும் வரச் சொல்லிட்டாரு.. அவரு பேசிக்கிடுதாராம்….”

என்று சொன்னான். உடனே எல்லோரும் கிளம்பி விட்டார்கள். அன்று ஆரம்பித்த புயல் சின்னம் கொஞ்சம் கொஞ்சமாக இடி, மழை, என்று தொடர்ந்தது. ஒரு இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர்கள் வீட்டுக்கு முன்னால் ஒரு கருப்பு நிறஸ்கார்பியோ வந்து நின்றது. அதிலிருந்து அண்ணன் இறங்கி வந்தார். கூடவே இரண்டு துணை அண்ணன்களும் வந்தார்கள். வீட்டுக்குள் சுவாதீனமாக நுழைந்து சுப்பிரமணியனிடம்,

“ சார் உங்களுக்கும் நமக்கும் எதுக்குப் பிரச்னை.. வாங்க உட்காந்து பேசுவோம்..”

என்று சொல்லி சோஃபாவில் உட்கார்ந்து கொண்டார். உடனே சுப்பிரமணியன் தன் வீட்டுப்பத்திரம், வில்லங்கச் சான்றிதழ் எல்லாம் இருந்த ஃபைலைக் கொண்டு வந்து காட்டினான்.

“ அண்ணாச்சி… இந்தா இதப் பாத்தீங்களா.. வில்லங்கம் கிளியரா இருக்கு பாருங்க பக்கா ரிஜிஸ்ட்ரெஷன் …. என்னோட இடம் சர்வே நம்பர் 518/12 ல் மனை எண் 23 ல் கிழமேலா முப்பத்தியெட்டு அடியும் தென்வடலா ஐம்பத்தாறு அடியும் கொண்ட இரண்டாயிரத்து நூத்தி இருபத்தியெட்டு சதுர அடிப் பரப்பளவுள்ள காலி மனைன்னு இருக்கு பாத்தீகளா… அண்ணாச்சி..”

அதைபடித்ததும் அண்ணன் புருவத்தைச் சுளித்தார். பின்னால் கையை நீட்ட அவருடைய கையில் ஒரு புதிய பத்திரம் இருந்தது. அதைப்பிரித்து சர்வே எண் 518/12, 518/13, 518/14, 518/15, 518/16, தென்கிழக்கிலிருந்து வடமேற்கு வரைக்குமான காலி மனைகள் அத்தனையும்……..இத்யாதி இத்யாதி.. என்று எழுதப்பட்டிருந்தது.

சுப்பிரமணியனுக்குத் தலைசுற்றியது. “ இல்ல அண்ணாச்சி… அது தென்கிழக்கு, வடமேற்கு… என்னோடது தென்வடல் கிழமேல்… “ என்று சுரத்தில்லாமல் சொன்னான்.

அவர் மெல்ல தலையையுயர்த்தி,

“ நான் அவ்வளவு இடத்துக்கும் முப்பது லட்சத்துக்குக் கிரயம் பண்ணியிருக்கேன்.. என்ன செய்ய சரி கோர்ட்டுல பார்த்துக்குவோம்..”

என்று சாதாரணமாகச் சொல்லி விட்டு எழுந்து விட்டார். சுப்பிரமணியனுக்கு என்ன சொலவதென்றே தெரியவில்லை. அவருக்குப் பின்னாலேயே போய்,

“ அண்ணாச்சி.. ஏதோ உங்க பத்திரத்தில தப்பு நடந்துருக்குன்னு நெனக்கிறேன்… நான் ரெஜிஸ்ட்ரர் ஆபீஸ் போய் பார்த்துட்டு வந்து சொல்றேன்…”

என்றான். அவர் அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தார். ரியல் எஸ்டேட்ல நாங்க கரை கண்டவங்க தெரியுமா? என்ற அர்த்தம் வெளிப்படையாகவே தெரிந்தது.

மறுநாள் பத்திரப்பதிவு அதிகாரியைப் போய் பார்த்தான். அவர் கையை விரித்து விட்டார். அதுமட்டுமல்லாமல் ,

“ அவங்க எழுதியிருக்கிற தென்கிழக்கு, வடமேற்கு, வகையில வில்லங்கமோ, வியாஜ்ஜியமோ இல்ல.. நீங்க தான் உஷாரா இருக்கணும்.. பத்திரம் முடிக்கும்போதே எட்டுத்திசையும் எழுதி வைச்சிக்கிடணும்.. பார்ட்டி மினிஸ்டரோட பினாமி.. எதுக்கு பெரிய இடத்துல வம்பு… ஏதாவது சமாதானமா பேசி கொடுக்கறத வாங்கிகிட்டு செட்டில் பண்ணிக்கோங்கோ… வீணா கோர்ட்டு கேஸுன்னு போனீங்கன்னா.. கேஸ் முடியதுக்கே பத்து வருசம் ஆனாலும் ஆகும்… ஏன்னா இது சிவில் கேஸு பாத்தீங்களா… அப்புறம் அவங்க செல்வாக்குக்கு ஜட்ஜை விலைக்கு வாங்கி வைச்சாலும் வைப்பாங்க… ஏதோ உங்களப் பாத்தா பாவமா இருக்கு.. அதான் சொல்றேன்… “

என்று இலவசமாக அறிவுரைகளையும் அள்ளி வீசினார். முகத்தில் அருள் இல்லாமல் வீட்டுக்கு வந்தவனை வேப்பிலை அடித்து அருளேற்றி வக்கீலைப் பார்க்க அனுப்பியவள் சுந்தரி தான். இதோ ஆச்சு.. வருசம் மூணு.. வாய்தாக்களாக காலம் கடந்து கொண்டிருக்கிறது. இடையில் கேஸ் முடியும்வரை அந்த வீட்டில் குடியிருப்பதற்கும் தடை வாங்கி விட்டார்கள். அப்புறம் என்ன குழந்தைகளோடு சுந்தரி அவளுடைய அம்மா வீட்டுக்குப் போய் விட்டாள்.

வீட்டைத் தொலைத்துவிட்டு ஆபீஸில் தங்கியிருந்து கோர்ட் வாய்தாக்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் சுப்பிரமணியன். பராசக்தி படவசனம் போல இந்த கோர்ட் எத்த்னையோ விசித்திரமான விந்தையான வழக்குகளைச் சந்தித்திருக்கலாம். ஆனால் ஒரு வீட்டைத் தொலைத்த வழக்கை இப்போது தான் சந்திக்கிறது. என் பெயர் சுப்பிரமணியன். துத்துக்குடி மாவட்டம் முழுக்க உள்ள ஆயிரக்கணக்கான சுப்பிரமணியன்களில் நானும் ஒருவன்….. என்று வசனம் பேச மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறான் நமது சுப்பிரமணியன். அவன் என்னிடம் கடைசியாகச் சொன்னதை நான் உங்களிடம் சொல்லி விடுகிறேன்.

“ சார் வீடு கட்டியிருந்தீங்கன்னா உங்க பத்திரத்த ஒரு தடவை நல்லா பாத்துக்குங்க.. எட்டு திசையும் போட்டிருக்கான்னு ஏன்னா எந்தத் திசையிலிருந்தும் யார் வேண்டுமானாலும் வந்து நம்ம வீட்டை நாமே தொலைக்க வைச்சிருவாங்க.. ஜாக்கிரதை…”

என்ன கேட்டுகிட்டீங்களா?