Monday 31 December 2012

ஆபத்தான சமூகமா? ஆபத்தான காலமா?

1 nature scenery (www  

உதயசங்கர்

 

சமீபகாலமாக நமது சமூகத்தில் நடந்து வருகிற நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது நாம் வாழும் இந்தக் காலம் ஆபத்தானதாக மாறியிருக்கிறதா? இல்லையெனில் நமது சமூகமே ஆபத்தானதாக மாறி விட்டதா? என்ற அச்சம் தோன்றுகிறது. ஆபத்தான காலகட்டம் என்றால் நாம் அதைப் போராடிக் கடந்து விடலாம். ஏனெனில் இந்தக் காலகட்டம் மாறுவதற்கான, மாற்றுவதற்கான, காரணிகள் காலத்தின் கர்ப்பத்திலேயே உருக்கொண்டுவிடும். ஆனால் சமுகமே ஆபத்தானதாக மாறிவிட்டால் பெரும்நாசம். சீரழிவு. பெரும்பான்மை சமூகம் மனசாட்சியற்றுப் போய் விட்டதோ என்ற பயம் தோன்றுகிறது. எப்போதுமே சமூகத்த்தின் மேன்மை குறித்து சிந்திக்கும் முற்போக்கான சக்திகள் செயல்திட்டமின்றி செயலிழந்து நிற்கிறதோ என்ற சந்தேகம் தோன்றுகிறது. சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதி, மத வேறுபாடுகள் மீண்டும் எழுச்சி கொண்டிருக்கிறன. உலகமயமாக்கலின் நவீன நுகர்வுக்கலாச்சாரத்தினால் நமது அறமாண்புகள் இழிவுப்படுத்தப்படுகின்றன. பழமைவாதத்தையும் நவீனத்தையும் தனித்தனியே போற்றிப் பாதுகாப்பாய் நமது மனங்களில் கொலுவிருக்கச் செய்வதில் ஆட்சியாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பழமைவாதத்தை, சாதிவேர்களை, வர்ணாசிரமத்தை, பெண்ணடிமைத்தனத்தைக் ஆணாதிக்கத்தைக் காப்பாற்றும் பொறுப்பைப் பெண்களே செய்கிற அவலத்தைக் கண்கூடாகக் காணமுடிகிறது. நாம் எங்கே நிற்கிறோம்? காட்டுமிராண்டிக்காலத்திலா? கற்காலத்திலா? மனிதமனதில் இத்தனை நூற்றாண்டுகளாக உருவாகிவந்த அறம், தயை, நேசம், அன்பு, கருணை, எல்லாம் எங்கே போயின? எந்த ஒரு கணத்திலும் மனிதன் விலங்காக இப்படிச் சொல்வதுகூட தவறு, கொடூரமான காட்டுமிராண்டியாக மாறி விடுகின்ற சந்தர்ப்பங்களைப் பார்க்கும்போது மனித இனத்தின் பெரும் அவநம்பிக்கை தோன்றுகிறது. இப்படி ஒரு இனம், சமுகம் இல்லாதொழியட்டும் என்று சாபமிடத் தோன்றுகிறது.

உலகமயமாக்கலின் ஏகாதிபத்தியத்தின், வேட்டைக்காடாக நமது சமுகத்தை மாற்றுகிற வேலையை நமது ஆட்சியாளர்கள் திறம்பட செய்து கொண்டிருக்கிறார்கள். ஏகாதிபத்தியநாடுகள் எதை விற்றாலும் வாங்குவதற்குத் தயாராக இந்தியா இருக்கிறது. அதில் ஒன்று தான் அணு உலை விற்பனையும். ஜான் பெர்கின்ஸின் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் புத்தகத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த பிறகு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் எல்லாம் எப்படி முன்கூட்டியே திட்டமிடப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டு அரசமைப்பு, அரசு நிர்வாகம், முதலாளித்துவ ஊடகங்கள், அரசியல் கட்சிகள் எல்லாம் அந்த ஒத்திகையின் அட்சரம் பிசகாமல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சொந்த நாட்டு மக்களின் அச்சத்தை விட அந்நிய நாட்டு நலன் முக்கியமானதாக போய்விட்டது. தங்களூக்காக மட்டுமல்ல ஒட்டு மொத்த சமூகத்தின் பாதுகாப்புக்காக போராடிக் கொண்டிருக்கும் கூடங்குள மக்களின் மகத்தான போராட்டம் ஓராண்டைத் தாண்டியும் அதற்கான எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. அடக்குமுறைகளால் அந்த மக்களின் போரட்ட உணர்வை அழித்து விட நினைக்கும் அரசு நிர்வாகம் அந்த ஊரைத் தனித்தீவாக்கி போகும் பாதைகளிலெல்லாம் அடக்குமுறை யந்திரங்களை நிறுத்தி பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. முதலாளித்துவ ஜனநாயகத்தின் கோரமுகத்தை அங்கே பார்க்கமுடிகிறது., சமுகத்தின் வாழ்வு, தங்கள் வாழ்வாதாரம், அழிந்துவிடும் என்ற அச்சத்தில் போராடிக் கொண்டிருக்கும் மக்களின் மீது தேசத்துரோக வழக்குகள், சதி வழக்குகள் லட்சக்கணக்கில் போடப்பட்டுள்ளன. எந்த அரசியல், பொருளாதாரப்பின்புலமற்ற அந்த எளிய மக்களின் போராட்டம் நமது சமூகத்தின் மனசாட்சியை ஏன் உலுக்கவில்லை. எல்லா நிகழ்வுகளும் நமக்கு சாயங்காலநேரத்து ஸ்னாக்ஸ் ஆகி விட்டதா? பயமாக இருக்கிறது. இது ஆபத்தான காலமா? இல்லை ஆபத்தான சமூகமா?

அடையாள அரசியலின் ஒரு முகமாக சாதி அரசியல் முன்னெப்போதையும் விட இப்போது நமது சமூகத்தில் ஓங்கியிருக்கிறது. துரதிருஷ்டவசமாக இந்த சாதி அரசியலை அதன் ஆரம்பகாலத்தில் ஊக்குவித்து அதற்குத் தத்துவார்த்தபின்புலத்தை நமது அறிவுஜீவிகளில் இலக்கியவாதிகளில் பலர் கொடுத்ததை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. ஏற்கனவே வர்ணாசிரமக் கோட்பாட்டினால் ஈராயிரம் ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு சமுகத்தில் இந்தச் சாதி அரசியல் என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தமிழ் அறிவுஜீவிகள் முன்னுணரவில்லை. தங்களை முன்னிறுத்தும் போராட்டகளத்தில் இதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். தன்வாழ்நாள் முழுவதும் வர்ணாசிரமத்துக்கு எதிராக, பிராமணியத்துக்கு எதிராகப் போராடிய நமது சமுகத்தின் கலகக்காரச் சிந்தனையாளர் பெரியாரின் அத்தனை உழைப்பையும் மிகச் சில வருடங்களிலே துடைத்தழித்து விட்டது சாதி அரசியல். விளைவு சாதிகள் தோறும் புதிய மனிதக்கடவுள்களின் தோற்றம், வழிபாடு, அந்தக் கடவுள்களின் பெயரால் வன்முறை, கொலை, கொள்ளை. சமுகத்தின் மனசாட்சி என்னவாயிற்று? பரமக்குடி, மதுரை, சம்பவங்களின் உள்ளர்த்தம் இது தானே.

அகமணமுறையின் மூலமே சாதியத் தூய்மையைக் காப்பாற்ற முடியும் என்ற மனுதர்மசிந்தனையை யார் யாருக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்? ஆனால் சமுகம் அதைக் கடைப்பிடிக்கிறதே. அதுவும் சாதிப்படிநிலையில் கீழ்நிலையில் வைக்கப்பட்டிருக்கிற சாதிகளுடனான திருமணம் என்றால் ரத்தம் கொதித்து, கௌரவக்கொலை தொடங்கி, தருமபுரியில் நடந்திருப்பதைப் போல கூட்டுக்கொள்ளை, என்று சமூகமே திரண்டு நடத்திய வன்முறை அரங்கேற்றத்தைப் பார்க்கும்போது நாம் மீண்டும் நமது கற்காலத்திற்குத் திரும்பி விட்டோமா? என்ற அச்சம் எழுகிறது. இது ஆபத்தான காலமா? இல்லை ஆபத்தான சமூகமா?

தனித்தனியாக இருக்கும்போது எத்தனை நல்லவனாக அறவுணர்ச்சி மிக்கவனாக, சமூகமனிதனாக, அன்பு, தயை, கருணை, மிக்கவனாக இருக்கிறான் மனிதன்! ஆனால் கும்பலாக மாறும்போது அவனிடம் காட்டுமிராண்டித்தனத்தைத் தவிர வேறு எதுவும் இல்லாமல் போகிறதே. இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக மானுடம் தன் அநுபவத்தின் வழியாகக் கற்றுணர்ந்த நாகரீகம், பண்பாடு, அறவிழுமியங்கள் எல்லாம் வேஷம் தானோ? இல்லை போர்வை போர்த்திய காட்டுமிராண்டி தானோ மனிதன்? பண்பாட்டு அறிஞர் கே.என். பணிக்கர் மதச்சார்பின்மைக்கான கலாச்சார நடவடிக்கைகளைப் பற்றிப் பேசும்போது எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் எல்லாமத, இன, மொழி, மக்களையும் உள்ளடக்கிய கலாச்சார அமைப்புகளை உருவாக்கி பரஸ்பரம் அந்நியோன்யத்துடன் அனைத்து விழாக்கள், நிகழ்ச்சிகள், என்று உறவுகளைப் பலப்படுத்தச் சொல்லுவார். ஆனால் தருமபுரியில் நடந்த பொருளாதார அழித்தொழிப்பு சம்பவத்தை நடத்தியிருப்பது எங்கிருந்தோ வந்த வேற்று மனிதர்களல்ல. அந்தந்த ஊர்களின் வழியே போய்வந்து கொண்டிருக்கும், வியாபாரம், கொடுக்கல் வாங்கல், என்று உறவுகளைக் கொண்டிருந்தவர்கள் தான். வன்முறை நடக்கும் போது ஒரு பெண் கேட்கிறார், “ ஐயா, பழகுன ஆட்களே இப்படிச் செய்யுறீங்களே..” அதற்கு கொள்ளையடித்துக் கொண்டிருந்த மனிதர் சொல்லியிருக்கிறார், “ பழகுனா சம்பந்தம் பண்ணிக்க முடியுமா..” அங்கே பிராமணர்கள் யாரும் கிடையாது. பிராமணியம் என்றால் என்னவென்றே அவருக்குத் தெரியாது. வேதங்கள் என்றால் என்னவென்றோ, மனுதர்மம் என்றால் என்னவென்றோ தெரியாது. வருணாசிரமக் கோட்பாட்டின் படி தான் எந்த இடத்தில் இருக்கிறோம். தன்னுடைய சாதியைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றும் தெரியாது. மனுதர்மத்தில் எப்படியெல்லாம் தான் இழிவு படுத்தப்பட்டிருக்கிறோம் என்றும் தெரியாது. ஆனால் அவருடைய பொதுப்புத்தியில் வருணாசிரமும், மனுதர்மமும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறதே. அது தான் அவரை இப்படிப் பேசச் சொல்கிறது. அது தான் அவருடைய கட்சித்தலைவரையும் பேசச்சொல்கிறது. தன்னுடைய அரசியல் பதாகைகளில் பெரியாரையும், அம்பேத்கரையும், காரல்மார்க்ஸையும், வைத்துக் கொண்டே பிராமணியத்தின் கொடிய நடைமுறையைக் கடைப்பிடிக்கச் சொல்கிறது. சமூகமும் இந்த பலவேசத்தைப் பார்த்து வாளாவிருக்கிறது. இது ஆபத்தான காலமா? இல்லை ஆபத்தான சமூகமா?

சமீபத்தில் மறைந்த இனவெறி அரசியலின் பிதாமகர் பால்தாக்கரேயின் அரசியல் வாழ்க்கை பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் அத்தகைய வெறுப்புஅரசியலை நடத்திய அவருடைய இறுதி நிகழ்ச்சிக்கு ஐந்திலிருந்து பத்து லட்சம் பேர் கூடியிருந்தார்கள் என்ற செய்தி உண்மையில் அதிர்ச்சியளித்தது. அதை விட பெரிய அதிர்ச்சி. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, இடதுசாரிகளைத் தவிர மற்றவர்கள் அவர் ஏதோ நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தலைவரைப் போல எந்த விமர்சனமுமின்றி உரைச்சித்திரம் நிகழ்த்தியது அதை விட பெரிய கொடுமை. எல்லோருக்குள்ளும் ஒரு ஹிட்லர் இருக்கிறானா? சந்தேகமாயிருக்கிறது. இது ஆபத்தான காலமா? இல்லை ஆபத்தான சமூகமா?

இது எல்லாவற்றுக்கும் உச்சகட்டமாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போவது. பெண் பிறப்பதற்கு முன்பே கருவாக இருக்கும்போதே அவளுடைய போராட்டம் தொடங்கி விடுகிறது. பிறந்து, நோய், ஊட்டச்சத்துக்குறைபாடு, குடும்பத்தில் அலட்சியம், அவமானம், வீட்டுவேலைகள் என்ற ஆபத்துகளோடு வளரும்வரை குடும்பத்தோடு போராட்டம் என்றால் கல்வி கற்கத் தொடங்குவதிலிருந்து தன் இறுதிக் காலம் வரை சமூகத்தோடு போராட்டம். ஒரு சமூகத்தையே எதிர்த்து வளர்கிறாள். பிறந்ததிலிருந்தே ஆண்சமூகம் அவளை ஒரு பாலியல்கருவியாக நினைக்கிற அவலத்தை என்னவென்று சொல்ல? தந்தை, சகோதரன், சொந்தக்காரன்கள், அக்கம்பக்கத்துகாரன்கள், பழகியவன்கள், அந்நியன்கள், எங்கும் ஒரு பெண்ணுக்கு எதிரிகளாகவே இருக்கிற சமூகம் உயிர்வாழ வேண்டுமா? திரைப்படம், பத்திரிகைகள், மின்னணு ஊடகங்கள், இணையதளங்கள், என்று எங்கும் பெண் உடல் காட்சிப்பொருளாய் மாற்றப்பட்டுள்ள, அதற்கு எதிராக ஒரு சுட்டுவிரலைக் கூட அசைக்காத இந்த ஆணாதிக்கக்குடிமைச் சமூகம் உயிர்வாழத்தான் வேண்டுமா?

டெல்லியில் நிர்பயா, தாதன்குளத்தில் புனிதா, இன்னும் இன்னும் தினசரிகளில் பெண்குழந்தைகளுக்கு நேரும் பாலியல்வன்முறைகளைக் கேள்விப்படும் போது உடல் நடுங்குகிறது. இப்போது தான் நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு பெண்கள் படிக்கவும், மிகக்குறைந்த சதவீதமானவர்கள் வேலைக்குச் செல்லவும், சற்றே பொருளாதார ரீதியாகச் சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கவும் ஆரம்பித்திருக்கும் வேளையில் பெண்ணுடலைச் சிதைத்து அவர்களை மீண்டும் முடமாக்க நினைக்கிற இந்த ஆணாதிக்கச் சமூகம் உயிர் வாழத்தான் வேண்டுமா? இது ஆபத்தான காலமா? இல்லை ஆபத்தான சமூகமா?

குடிமைச்சமூக மக்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியாது. போலி அரசியல்வாதிகள் பின்னால் அணிதிரள்கிறார்கள். பொருளாதாரச்சுரண்டல் என்றால் என்னவென்று தெரியாது. தமக்கு வாய்ப்புக் கிடைத்தால் முதலாளியாகி விட நினைக்கிறார்கள். குறுக்குவழியில் சம்பாதிக்க ஓடுகிறார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் கவலையில்லையென்று குவாட்டருக்கும் பணத்துக்கும் ஓட்டளிக்கிறார்கள். இனவெறி, மதவெறி, சாதிவெறி, என்று எல்லா வெறிகளுக்கும் மிகச்சுலபமாக பலிகடா ஆகிறார்கள். தன்னைத்தவிர வேறு யாரும் இந்த உலகத்தில் இல்லையென்ற எண்ணத்திலோ, இருக்கக்கூடாதென்ற ஆசையிலோ சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள். சமூகத்தின் ஏற்றதாழ்வுகளைப்பற்றிக் கவலைப்படாதவர்களாக, ஏழ்மை, இல்லாமை, சமூக அவலங்கள் இதைப் பற்றிக் கவலைப்படாதர்களாக இருக்கிறார்கள். பகுத்தறிவற்றவர்களாக, மூடநம்பிக்கையின் முடைநாற்றமெடுப்பவர்களாக இருக்கிறார்கள். உண்மை எது? பொய் எது? என்று தெரியாதவர்களாக இருக்கிறார்கள். எளிமை கண்டு இகழ்கிறார்கள். ஆடம்பரத்தைக் கண்டு பிரமிக்கிறார்கள். கேளிக்கைகளில் மூழ்குபவர்களாக, குடிகாரர்களாக, அறமற்றவர்களாக, பண்பாடற்றவர்களாக, நாகரீகத்தைப் பவுடர் பூச்சைப்போல பூசிக் கொள்பவர்களாக, கொடியவர்களாக, வாய்ப்பு கிடைத்தால் ஏமாற்றுபவர்களாக, பிறர் சொத்தை அபகரிப்பவர்களாக, இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்களாக, மலைகளை உடைப்பவர்களாக, மணல்கொள்ளையர்களாக, பல்லுயிரிகளைக் கொல்பவர்களாக, இயற்கைச் சமன்பாட்டை குலைப்பவர்களாக, சகமனிதன் மீது குரோதம் கொண்டவர்களாக, குடிநீரை விற்பவர்களாக, விவசாயத்தை மதிக்காதவர்களாக, மனோதிடமில்லாதர்களாக, கோழைகளாக, அடிமைகளாவதற்குத் தயாராக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள்திரளைக் கொண்ட இந்தக் குடிமைச் சமூகம் ஆபத்தான சமூகமா இல்லையா?

ஒரு ஆபத்தான காலகட்டத்தில் ஒரு ஆபத்தான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதோ இன்னும் ஒரு ஆண்டு கழிந்து விட்டது. காலத்தின் பேராற்றில் ஒரு துளி. நம்முடைய வாழ்நாளில் முந்நூற்றுஅறுபத்தைந்து நாட்கள் கடந்து விட்டன. எல்லா ஆண்டுகளையும் போல இனி வரும் ஆண்டும் கருப்பு ஆண்டாகவே மலருமா? சமூகத்தின் அத்தனை கொடுமைகளும் இப்படியே மாறாமல் கூடிக் கொண்டே போகுமா? நாம் நம்முடைய எதிர்காலச்சந்ததியினருக்கு எந்த மாதிரியான சமூகத்தைக் கொடுக்கப் போகிறோம்? நமக்கு முன்னால், நம் மனசாட்சியின் முன்னால் இந்தக் கேள்வி பெரும்பாறையென நிற்கிறது. உண்மையில் இப்போது நெருக்கடி முற்றிவிட்டதென்றே தோன்றுகிறது. சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள், சமூகத்தை மாற்ற வேண்டும் என்று லட்சியம் கொண்டவர்கள் ஒன்றிணைந்து தங்கள் செயல்திட்டங்களை உருவாக்க வேண்டிய காலம் இது. இடதுசாரிகள், பெரியாரியவாதிகள், அம்பேத்கரியவாதிகள், பெண்ணியவாதிகள், சமூக மாற்றத்தில் அக்கறையுள்ள அறிவுஜீவிகள், இலக்கியவாதிகள், முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள், உண்மையான ஜனநாயக எண்ணம் கொண்டவர்கள், பாலினச்சிறுபான்மையினர், என்று எல்லோரும் இணைந்து பொதுத்தளத்தில் எல்லோருக்கும் பொதுவான ஒரு செயல்திட்டத்தை உருவாக்கி சமூகத்தின் பொதுப்புத்தியில் தலையிட வேண்டும். குறைந்தபட்ச பண்பாட்டு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயல்படுவதின் மூலம் மட்டுமே இந்த ஆபத்தான காலத்திலுள்ள நம்முடைய ஆபத்தான சமூகத்தை மாற்ற முடியும். இது தான் நம்முடைய இன்றைய தலையாயக்கடமை. காலமும் கழிந்து கொண்டிருக்கும் இந்த ஆண்டும் நமக்கு விடுக்கும் செய்தி. காலமும் வரலாறும் அழைக்கிறது நம்மை. அதன் குரலுக்குச் செவிமடுப்போம்.

Sunday 30 December 2012

புதிய உலகைக் காணப் புதிய கண்கள்

images

உதயசங்கர்

 

முதலாளித்துவம் தன் ஆக்டோபஸ் கரங்களால் இந்த உலகைக் கபளீகரம் செய்து இரண்டு மூன்று நூற்றாண்டுகளாகி விட்டது. உற்பத்திசக்திகளில் ஏற்பட்ட மாற்றம் உற்பத்தி உறவுகளிலும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. எல்லாம் சந்தைமயமாகவும், நுகர்வின் பெருவெளியாக இந்தப் பிரபஞ்சமே மாறி விட்டது. மைதாஸின் பேராசையாய் எந்த அறவிழுமியங்களுமின்றி தொட்டதையெல்லாம் பொன்னாக்கி தன் செல்வத்தைக் குவித்துக் கொண்டிருக்கிறது முதலாளித்துவம். மக்களுக்காக பொருட்களும், பொருட்களுக்காக மக்களும் தயாரிக்கப் படுகிறார்கள். மக்களையே பண்டங்களாக்கி பொருட்களிடம் விற்று விடுகிறார்கள். அதற்கு ஏற்றாற்போல மக்கள் மனங்களைத் தகவமைக்கிற வேலைகளை கலை, இலக்கியம், ஓவியம், இசை, என்று பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் விலை பேசி வாங்கி தங்களுக்குச் சேவகம் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் விலையுண்டு என்பதே முதலாளித்துவத்தின் தாரகமந்திரமாக மாறி விட்டது. முதலாளித்துவத்தின் உச்சகட்ட கண்டுபிடிப்புகளான உலகமயம், தாராளமயம், தனியார்மயம் உலகநாடுகளை ஏகாதிபத்தியத்தின் வேட்டைக்காடாக்கி விட்டது. தங்களுக்குச் சாதகமான அரசாங்கங்களை அமைக்கவும், தங்களுக்குச் சாதகமாக இல்லாத அரசுகளைக் கவிழ்க்கவும் சதிகளைச் செய்கிறது. இதற்கு அந்தந்த நாடுகளின் பிரத்யேகத் தன்மைகளைத் தெரிந்து கொண்டு இனவெறி, மதவெறி இவற்றைப் பயன்படுத்தவும் செய்கிறது. இதற்கான ஆய்வுகளையும் அந்தந்த நாட்டு அறிவுஜீவிகளைக் கொண்டே நடத்துகிறது. ஊடகங்களை விலைக்கு வாங்கியோ, அல்லது பின்னிருந்து இயக்கியோ தங்களுடைய தாரகமந்திரமான உலகமயம், தாராளமயம், தனியார்மயம், நிகழ்ச்சிநிரலுக்கு ஆதரவாக மக்கள் மனதைத் தகவமைக்கிறது. மக்களுடைய பொதுப்புத்தியில் மிகத் தந்திரமாக புதிய பண்பாட்டு விழுமியங்களை, உணவு, உடை, உறைவிடம், வீட்டு உபயோகப்பொருட்கள் தொடங்கி அழகு சாதனப்பொருட்கள், என்று எல்லாவற்றிலும் புதிய உலகமயப்பண்பாட்டை மக்கள் ஆதரவோடு திணித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் இன்னும் கொஞ்சம் பிரத்யேகமான சூழ்நிலை. முதலாளித்துவம் இந்தியாவில் காலூன்றத் துவங்கும் போது சாதிஅமைப்பு முறை என்ற புதிய சவாலை எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. ஈராயிரம் ஆண்டுகளாகப் புரையோடிப் போயிருக்கும் இந்த சாதிய அமைப்பை ஒழிக்க முடியாதென்று உணர்ந்து அதனோடு சமரசம் செய்து கொண்டது. எனவே ஒரே நேரத்தில் நிலப்பிரபுத்துவத்தின் சாதியவேரோடும் முதலாளித்துவத்தின் முகமும், தலையுமற்ற உடலாகவும் இந்திய மனிதன் மாறிவிட்டான். நிலப்பிரபுத்துவத்தை முறியடித்து அதிலிருந்து முற்போக்கான அமைப்பாக மற்ற தேசங்களில் நிலை பெற்ற முதலாளித்துவம் இந்தியாவில் நிலப்பிரபுத்துவத்தோடு கை கோர்த்துக் கொண்டது. எனவே தான் இந்திய மனிதன் ஒரே நேரத்தில் இரண்டு முகங்களுடன், நிலப்பிரபுத்துவப்பழமை வழியும் ஒரு முகமும், முதலாளித்துவ ஜனநாயகம் பொங்கும் ஒரு முகமும் கொண்டு ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்று தத்தளித்துக் கொண்டிருக்கிறான். ஒரே நேரத்தில் சுதந்திரமானவனாகவும் அடிமையாகவும் உணர்கிறான். காலில் கட்டிய சநாதனச் சங்கிலியின் ஓசை அவனைப் பொதுவெளியில் கலந்துறவாடும் போது கேட்டுக் கொண்டேயிருக்கிறது. தொழிற்சாலையில், கம்பெனியில், சினிமா தியேட்டரில், உணவகங்களில், கடைகளில், மக்கள் கூடுகிற இடங்களில் எல்லாம் அவன் இந்தச் சங்கிலியின் ஓசையைச் சங்கடத்தோடு உணர்கிறான். இந்தச் சங்கட உணர்வை மறைப்பதற்காகவே அடிக்கடி பாரம்பரியம்,என்றும் பண்பாடு என்றும் பழைய சம்பிரதாயங்கள், என்றும் நோஸ்டால்ஜியா ( பழமை போற்றும் ) பேசி சமனப்படுத்திக் கொள்கிறான்.

இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்களுக்கு வர்ணாசிரமக்கோட்பாடு என்றால் என்னவென்றோ மனுதர்ம சாஸ்திரம் என்றால் என்னவென்றோ, வேதங்கள் என்றால் என்னவென்றோ தெரியாது. ஆனால் இவற்றின் நடைமுறைத் தத்துவங்களை தங்களுடைய வாழ்க்கையில் பிடிவாதமாய் கடைப்பிடித்துக் கொண்டு வருகிறார்கள். அந்த அளவுக்கு பிராமணியம் பெரும்பான்மை மக்களின் பொதுப்புத்தியில் வலுவாக ஊடுருவியிருக்கிறது. தாங்கள் தங்களுடைய சொந்த வர்க்கத்துக்கு எதிராக சாதியின் பேரால் போராடுகிறோம் என்றே இவர்களுக்குத் தெரியாது. அதனால் தான் வர்க்கரீதியில் ஓரணியில் திரள வேண்டிய தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். எல்லா இடைநிலைச்சாதிகளும், பிற்படுத்தப்பட்ட சாதிகளும் வர்க்கபேதமின்றி தாழ்த்தப்பட்ட மக்களை எதிரியாக நினைப்பதும், அவர்கள் மீது நூற்றாண்டுகளாய் நடத்தி வரும் தீண்டாமைக் கொடுமைகளை நியாயப்படுத்துவதும் நம்முடைய வர்க்க அணி திரட்டலை மேலும் கடினமாக்கியுள்ளது. இன்னும் நாம் போக வேண்டிய தூரம் மிக மிக அதிகம் என்று உணர வைக்கிறது. இந்த சாதியப்பிளவுகளை, அதன் பின்னுள்ள பிராமணியத் தந்திரங்களை, மக்களுடைய பொதுப்புத்தியில் பாதிப்பை ஏற்படுத்துகிற வகையில் பிரச்சாரம் செய்ய வேண்டியதிருக்கிறது. வர்க்கபேதத்தையும், சாதி பேதத்தையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள மிகப் பெரிய கடமை இடதுசாரிகளுக்கு இருக்கிறது.

மார்க்சியம் என்பது மக்களுக்காக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தத்துவம் மட்டுமல்ல. அது ஒரு வாழ்வியல் நடைமுறை. உலகைப் பற்றிய விளக்கமல்ல. அசமத்துவமான இந்த உலகை மாற்றவல்ல பேராயுதம். ஒரு புதிய உலகைப் படைக்கின்ற படைப்பாளி மார்க்சியம். அந்தப் புதிய உலகம் இது வரை மனிதகுலம் கண்டிராத அற்புதங்களால் உருவானது. பழமையின் முற்போக்கான கூறுகளோடு புதிய முற்போக்கான வாழ்வியல் நடைமுறைகளைக் கொண்டிருக்கும். எங்கும் எதிலும் சமத்துவநெறியே மேலோங்கி நிற்கும். புதிய அறமும், புதிய பண்பாட்டு விழுமியங்களும் கோலோச்சும். இல்லை என்ற சொல் அகராதியில் இல்லாமல் போய்விடும். வர்க்கபேதம் மட்டுமல்ல சாதிபேதமும் அழிக்கப்படும். அந்த உலகைக் காணப் புதிய கண்கள் வேண்டும். புதிய சிந்தனை வேண்டும். புதிய செயல்திட்டங்கள் வேண்டும். புதிய பண்பாடு வேண்டும். பாட்டாளி வர்க்கப் பண்பாட்டை இப்போதிருந்தே வளர்த்துச் செல்ல வேண்டும். பாட்டாளி வர்க்கப் பண்பாடு வர்க்க பேதமற்றது. மதபேதமற்றது. சாதி பேதமற்றது.பால்பேதமற்றது. பாட்டாளி வர்க்கப் பண்பாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய மகத்தான கடமை இடதுசாரிகளுக்கு இருக்கிறது.

பாட்டாளி வர்க்கப்பண்பாடு குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். ஆளுகின்ற முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் பண்பாட்டு விழுமியங்களின் மீது மக்களின் பொதுப்புத்தியில் இருக்கிற நம்பிக்கையைத் தகர்க்க வேண்டும். சாதியும் வர்க்கமும் என்றும் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கையில் உடைப்பை ஏற்படுத்த வேண்டும். ஒரே வர்க்க அணிகளுக்கிடையில் சாதி மதம் கடந்த ஒற்றுமையுணர்வை ஏற்படுத்த வேண்டும். நாங்கள் இடது சாரிகள் என்ற பெருமித உணர்வோடு கூடிய ஒரு புதிய அடையாளத்தை உருவாக்க வேண்டும். அதற்கு சுயசாதி நிராகரிப்பும், சுயவர்க்க நிராகரிப்பும் வேண்டும். சாதி அழிப்பும் வர்க்க அழிப்பும் நமது நீண்ட நாளையக் கனவு. ஆனால் சுயசாதி நிராகரிப்பும் சுயவர்க்க நிராகரிப்பும் உடனடியாக நடைமுறைப் படுத்தக் கூடியது. இதற்கு மிகப்பெரிய மனோபலம் வேண்டும். இந்த மனோபலத்தை இடதுசாரி அமைப்புகள் தர வேண்டும். அதற்கான புதிய பண்பாட்டு நடைமுறைகளை கண்டுணர வேண்டும்.

Saturday 29 December 2012

பரிநிர்வாணம்

உதயசங்கர்

Mohan Das (186)

சென்னை, தி.நகர், வெங்கட்நாராயணா சாலையில் வெங்கியின் அலுவலகம் இருந்தது. அவனைப் பார்த்து ஒரு இருபது வருடங்களாவது இருக்கும். அவன் சொன்ன இலக்கஎண்ணில் ஒரு நான்கு மாடிக்கட்டிடம் நின்று கொண்டிருந்தது. எனக்கு நம்பமுடியவில்லை. இந்தக் கட்டிடத்திலா வெங்கி வேலை பார்க்கிறான். இருக்காது. பக்கத்தில் உள்ள அட்ரஸ் இல்லாத ஏதாவதொரு சிறிய ஓய்ந்து போன கட்டிடத்தில் வேலை பார்ப்பானாக்கும். சும்மா நாம தேடி அலையக்கூடாதுன்னு இந்த அட்ரஸைக் கொடுத்திருப்பான். இப்போது ஃபோன் செய்ததும் அவன் அப்படியொரு கட்டிடத்திலிருந்து சுமாரான உடையில் அதே ஒல்லிப்பிச்சானான உடம்புடன் வெளியே வருவான் என்று கற்பனை செய்து கொண்டிருந்தேன். அலைபேசியில் அவனை அழைத்தேன். ஓ என்ற ஆச்சரியத்தொனியுடன் ஆரம்பித்தான். நான் அந்த நான்கு மாடிக்கட்டிடத்தின் வாயிலில் நின்று கொண்டிருப்பதைச் சொன்னேன். அவன் அந்தக் கட்டிடத்துக்குள் நுழைந்து லிஃப்டில் மூன்றாவது மாடிக்கு வரச்சொன்னான். எனக்கானால் ஆச்சரியம்.

வெங்கி பிராமணர் வீட்டுப்பிள்ளையாக இருந்தாலும் தப்பிப் பிறந்திருந்தான். கொஞ்சமும் படிப்பு வரவில்லை. அதோடு எல்லாவிதமான சேட்டைகளையும் செய்து கொண்டிருந்தான். பீடி, குடிப்பது, மிலிட்டரி ஹோட்டலில் புரோட்டா, கறி வறுவல் சாப்பிடுவது, ( சாராயமும் குடிப்பான் என்று கேள்வி, ஆனால் உறுதியாகத் தெரியாது ) எப்போதும் காவாலிப்பயகளோடு சுற்றிக் கொண்டு பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போடுவது, எம்.ஜி.ஆர். சினிமாவைக் குறைந்தது பத்து தடவையாவது பார்ப்பது, உரிமைக்குரல் லதா ரசிகர் மன்றத்தலைவராக இருப்பது, என்று எல்லாவிதமான நடவடிக்கைகளிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தான். ஆள் ஒல்லின்னா ஒல்லி அப்படியொரு ஒல்லி. எலும்புகளின் மீது தோல் மூடியிருக்கும் அவ்வளவு தான். ஆனால் எல்லோருடனும் வலுச்சண்டைக்குப் போவான். இடுப்பிலிருந்து ஒட்டிவைக்கப்பட்ட இரண்டு கால் எலும்புகளும் தசையின் சப்போர்ட் இல்லாததினால் லேசாக வளைந்து கப்பக்காலாக மாற முயற்சித்துக் கொண்டிருக்க, வெங்கி ஒரு ராஜநடை நடந்து இந்த உலகத்தை எகத்தாளமாக ஒரு பார்வை பார்ப்பான் பாருங்கள் அதை இந்தப் பிறவியில் மறக்க முடியாது. வாயில் புகைந்து கொண்டிருக்கும் பீடியுடன் கால்களில் ஒட்டாத ஒரு டவுசரும் அதற்கு மேல் சுருட்டி சுற்றப்பட்ட கைலியும், வீசும் காற்றில் எப்படியாவது வெங்கியிடமிருந்து தப்பித்து விட முடியாதா என்று கடும்பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் அழுக்குச் சட்டையும் அணிந்து நாங்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் மைதானத்துக்கு சாயங்காலவேளையில் உலா வருவான். அப்படியே மைதானத்துக்கு வெளியே உட்கார்ந்து பந்து வீசுபவனுக்கும், மட்டை அடிப்பவனுக்கும் ஒரே நேரத்தில் ஆலோசனை சொல்வான். அதைக் கேட்ட மாதிரியும், கேட்காத மாதிரியும் நாங்கள் விளையாடிக் கொண்டிருப்போம். இருட்டில் பந்து கொஞ்சங்கூட கண்ணுக்குத் தெரியாமல் போகும் வரை எங்கள் விளையாட்டு தொடரும். அதுவரை எங்களோடு தான் இருப்பான் வெங்கி. எங்களை விட வயதில் மூத்தவன். ஆனால் எங்களிடம் சகஜமாகப் பழகுவான். எல்லோரும் டேய், போடா, வாடா, என்று தான் பேசிக் கொள்வோம்.

கீழே உள்ள விநாயகர்கோவில் சந்துக்குள் இருந்த நான் எப்படி மேட்டுத்தெருவிலுள்ள பிராமணப்பையன்களோடு சேர்ந்தேன் தெரியுமா? கிரிக்கெட் தான். ஊரெல்லாம் ஹாக்கி விளையாடிக் கொண்டிருக்க மேட்டுத்தெரு பையன்கள் மட்டும் தான் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். எனக்குக் கல்லூரியில் வரும் ஹிந்து பேப்பரிலும், ஸ்போர்ட்ஸ் ஸ்டாரிலும், வருகிற சுனில் கவாஸ்கர், குண்டப்பா விஸ்வநாத், கிர்மானி, பிரசன்னா, சந்திரசேகர், வெங்கட்ராகவன், மொகிந்தர் அமர்நாத், சுரீந்தர் அமர்நாத், புகைப்படங்களைப் பார்த்தே கிரிக்கெட் விளையாடும் ஆசை வந்தது. எப்படியும் இந்திய அணியில் சேர்ந்து விட வேண்டும் என்று கனவு கண்டேன். ரேடியோவில் வர்ணனை கேட்டேன். டோனி க்ரேய்க்கின் ஹவ் டூ பேட்? என்ற புத்தகம் வாசித்தேன். கிரிக்கெட் என்னை ஒரு பைத்தியக்காரனாக்கி விட்டது. உண்மையை மறைக்காமல் சொல்லவேண்டுமானால் கிரிக்கெட் மட்டுமல்ல. மேட்டுத்தெருவில் இருந்த நளினியும் தான் என்னைப் பைத்தியக்காரனாக்கி விட்டாள். பிறகென்ன கிரிக்கெட் விளையாடுவதற்காகவும் நளினியின் தரிசனத்திற்காகவும் மேட்டுத்தெருவிலேயே கிடந்தேன். நல்ல உச்சி வெயிலிலும், இரவு தெரு விளக்கின் வெளிச்சத்திலும் கூட கிரிக்கெட் பிராக்டீஸ் செய்தேன். நளினியின் வீட்டெதிரே காலியாக இருந்த ஒரு சிறிய இடத்தைத் தேர்வு செய்து இந்தக் காரியங்களைச் செய்தேன்.

இப்படி இரவு பகலாக சச்சின் கூட பிராக்டீஸ் செய்திருக்கமாட்டாரே. சச்சினுக்கு முன்னாடியே நீங்கள் இந்திய அணிக்கு வந்திருக்க வேண்டுமே என்று நீங்கள் முணுமுணுப்பது எனக்குக் கேட்கத் தான் செய்கிறது. என்ன செய்ய? நான் இந்திய அணியில் சேர்ந்து உலகப்புகழ் பெற முடியாமல் போனதுக்கு யார் காரணம் தெரியுமா? இந்த வெங்கி தான். இரவு பகலாய் கிரிக்கெட் விளையாடி கவாஸ்கர் மாதிரி ஓபனிங் பேட்ஸ்மேனாகி விட்டேன். போதாக்குறைக்கு கிர்மானி மாதிரி கீப்பிங்கும் செய்து கொண்டிருந்தேன். எங்களுடைய மெஜஸ்டிக் கிரிக்கெட் கிளப் தெருத் தெருவாக, அப்புறம் ஊர் ஊராகப் போய் கிரிக்கெட் மேட்ச் ஆடினோம். எனக்கு மவுசு கூடிக் கொண்டிருந்தது. கல்லூரியின் கிரிக்கெட் அணியிலும் மேட்டுத்தெரு பையன்களின் ஆதிக்கம் தான். கல்லூரிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் நாங்கள் இரண்டாம் இடம் பெற்றோம். பெருமை தாங்கவில்லை. இதையெல்லாம் கேள்விப்பட்டு நளினி என்னிடம் ஓடி வந்து அந்த மூன்று வார்த்தைகளைச் சொல்லி விடுவாள் என்று எதிர்பார்த்தேன். அப்படியெதுவும் நடக்கவில்லை. ஏழை தமிழ் எழுத்தாளனாகி இந்த அநுபவங்களையெல்லாம் உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று லவித்து விட்டது.

ஒரு நாள் அந்தியில் நாங்கள் பால்பண்ணை மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம். வழக்கம் போல வெங்கியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். பவுண்டரிக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த நாகராஜனுக்கும் அவனுக்கும் ஏதோ வாக்குவாதம் வந்து விட்டது. என்ன என்று எங்களுக்குத் தெரியவில்லை. அன்றைய மேட்சில் நாங்கள் அதாவது ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த எங்களுடைய அணி ஜெயித்து விட்டது. உடனே நாகராஜன் வெங்கியிடம் “ சொன்ன மாதிரி செய்டா..” என்று சொன்னான். நாங்கள் என்ன என்று கேட்டதுக்கு எங்களுடைய அணி ஜெயிக்காது. அப்படி ஜெயித்து விட்டால் வெங்கி அந்த மைதானத்தை அம்மணமாய் சுற்றி வருவதாகப் பந்தயம் போட்டிருக்கிறான். நாங்கள் இந்தப் பந்தயத்தின் பந்தயப்பொருளை நினைத்து சிரித்துக் கொண்டிருக்க, ரமேஷ் “டேய் எங்களுக்குக் கண் அவிஞ்சு போகவா..? “ என்று சொல்லி முடிக்கவில்லை. அதற்குள் வெங்கி கால்வாசி மைதானத்தைச் சுற்றியிருந்தான். எங்களுக்கு வாயடைத்து விட்டது.

பார்க்கவும் முடியவில்லை. பார்க்காமலிருக்கவும் முடியவில்லை. எங்களுடைய சிரிப்பு நின்று ஒரு தர்மசங்கடமான நிலைமை உருவானது. யாருக்கும் எதுவும் ஓட வில்லை. என்ன பேசுவது என்றே தெரியவில்லை. நாங்கள் நாகராஜனைத் திட்ட ஆரம்பித்தோம். ஆனால் அதற்குள் வெங்கி எங்களுக்கு அருகில் வந்து விட்டான். எதுவுமே நடக்காத மாதிரி அவனுடைய டிரவுசரையும், கைலியையும் சட்டையையும் அணிந்து கொண்டு திகைத்துப் போயிருக்கும் எங்களைப் பொதுவாகப் பார்த்துக் கொண்டே ” என்ன போலாமா? “ என்று கேட்டான். எதுவும் பேசாமல் அவன் பின்னால் போனோம்.

அடுத்த ஒரு வாரத்துக்கு எங்களுக்கு வெங்கியை எப்போது பார்த்தாலும் மைதானத்துக் காட்சியே நினைவுக்கு வந்தது. அந்த அதிர்ச்சியை முழுங்கிச் செரிமானம் ஆகுமுன்னால் அதைவிட இன்னொரு முக்கியமான அதிர்ச்சியை எனக்குத் தந்தான் வெங்கி. நளினியை அவன் காதலிப்பதாகவும், அவளும் அவனைக் காதலிப்பதாகவும் சொன்னான். எனக்கு எதுவும் புரியவில்லை. அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை. அப்படியே கிரிக்கெட்டை விட்டேன். நளினியை விட்டேன். மேட்டுத்தெருவை விட்டேன்.

அந்த வெங்கியைத் தான் இப்படி ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலுள்ள ஒரு அலுவலகத்தில் சந்திக்க நேரும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. வாழ்க்கை விசித்திரமானது தான். மனதுக்குத் தான் எத்தனை வேகம்? லிஃப்டில் நான் சென்று கொண்டிருந்த சில நிமிடங்களுக்குள் பழைய காட்சிகளை எல்லாம் புது பிரிண்ட் போட்டு ஓட்டிக் காட்டி விட்டதே. லிஃப்டிலிருந்து வெளியேறி வலது பக்கம் திரும்பினேன். ஒஞ்சரித்திருந்த அலுவலகக் கதவின் வழியே ஒரு குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. அது வெங்கியின் குரல் தான். அந்தக் குரலைக் கேட்டதும் அப்படியே திரும்பிப் போய்விடலாமா என்று நினைத்தேன். அசரீரி போல அந்தக் குரல் ஒலித்த வார்த்தைகள் என்ன தெரியுமா?

“ என்ன பெட் கட்டறே.. யார் தோக்கறாங்களோ அவங்க இந்த பில்டிங்க “ நியுடா”  சுத்தி வரணும்.. என்ன ஓ.கே.யா ? “

வெங்கி மாறவில்லை.

Wednesday 26 December 2012

எக்ஸிஸ்டென்சலிசமும் எமனின் அழைப்பும்

shutterstock_35113210-300x300

உதயசங்கர்

எழுத்தாளன் என்பவனுக்கு அனுபவங்கள் அவசியம் என்று நண்பர்கள் நாங்கள் அடிக்கடி பேசிக் கொண்டோம். அப்போது தான் கல்லூரி முடித்திருந்த எங்களுக்கு உலக அனுபவங்களே இல்லை என்று மனதார நம்பினோம். அதனால் அநுபவங்களைத் தேட வேண்டும் என்றும், எல்லா அனுபவங்களும் பெற வேண்டும் என்று முடிவு செய்தோம். நாங்கள் எழுத்தாளர்களை அவதானித்ததில் எல்லா எழுத்தாளர்களுக்கும் அப்படிப்பட்ட அநுபவங்கள் வாய்த்தன அல்லது அப்படி அவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். செவிவழிச் செய்திகளாகவும், புத்தகங்கள் வாயிலாகவும் நாங்கள் தெரிந்து கொண்டதெல்லாம் எழுத்தாளன் என்பவன் களவும் கற்று மறக்க வேண்டும். வாழ்வின் அத்தனை சூழ்நிலைகளையும் அநுபவித்து உணர வேண்டும் என்று ஆசைப்பட்டோம். பாரதி தொடங்கி ஜி.நாகராஜன் வரை எல்லா ஆளுமைகளின் வாழ்வனுபவங்களும் எங்களுக்கு பொறாமையூட்டின. அது மட்டுமல்ல அப்போது எதை எழுதினாலும் இது உங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கிறதா நீங்கள் அநுபவித்திருக்கிறீர்களா? என்றெல்லாம் கேள்விக்கணைகளை எதிர் கொள்ள வேண்டியதிருந்தது.

இடைசெவல் கி.ரா.வைப் போய் பார்க்கும்போது அவர் பீடி குடித்துக் கொண்டிருந்தார். எங்களூர் எழுத்தாளர்கள், இடது சாரித் தோழர்கள் பலருக்கும் பீடி அல்லது சிகரெட் குடிக்கும் பழக்கம் இருந்தது. டீ குடித்துவிட்டு ஒரு பீடியையோ சிகரெட்டையோ பற்ற வைத்து அவர்கள் ஆழ்ந்து இழுத்து விட்டுப் பேசும்போது அபூர்வமான விஷயங்கள் வந்து விழுந்தன. நாங்கள் பார்க்காத கோணத்தில், புதிது புதிதாய் இந்த உலகைப் பற்றிய வியாக்கியானங்கள், இலக்கியம் பற்றிய ஆச்சரியமான சொல்லாடல்கள் பீடிப் புகை வழியே வந்து விழுந்து கொண்டேயிருந்தன. நாங்கள் அந்த அறிவின் ஊற்றுக்கண் பீடியிலோ, சிகரெட்டிலோ தான் இருக்கிறது என்றும் ஒரு தீவிரமான மனநிலையை, படைப்பின் உக்கிரத்தை அடைவதற்கு அவை தான் உதவுகிறது என்றும் அப்பாவிகளாய் நம்பினோம். நாங்களும் அறிவுஜீவியாக வேண்டாமா? எனவே அப்போதைய சூழ்நிலைக்கேற்ப பீடி குடித்தோம். ஆனால் நாத்தம் தாங்க முடியவில்லை. அதோடு இருமல் வேறு. அதற்காக அறிவுஜீவித்தனத்தை விட்டு விட முடியுமா? சரி என்று சிகரெட் பிடிக்கப் பழகினோம். ஒருத்தன் மூக்கு வழியாகவே புகைவிட்டான் என்றால் இன்னொருத்தன் பீப்பி வாசித்தமாதிரி புகையை எச்சிலோடு வழிய விட்டான். மற்றவனோ ஆழ்ந்து உள்ளே இழுத்தான், புகை வெளியே வரவில்லை என்றதும் பயம் வந்து விட்டது. ஒரு மாதிரி முழித்துக் கொண்டு நின்றான்.

தோழர்கள் சத்தம் போட்டார்கள். பழகாதீர்கள் பழகி விட்டால் பின்னர் அதை விட முடியாது என்று அறிவுரை சொல்லத்தான் செய்தார்கள். இதை அவர்கள் பீடி பிடித்துக் கொண்டே சொன்னது தான் எங்களுக்கு வேடிக்கையாக இருந்தது. அதோடு பீடி, சிகரெட் புகைப்பவர்களுக்கு அப்படி புகைக்கிற மற்றவர்களோடு ஒரு அந்நியோன்யம் இருந்த மாதிரி தோன்றியது. எங்களுக்குள் இரண்டு கருத்துகள் வந்தன. ஒன்று நாங்களும் அறிவுஜீவியாவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இரண்டாவது அப்படி பீடியோ சிகரெட்டோ பிடிக்கவில்லையென்றால் அவர்களுடன் அந்நியோன்யமாக பழக முடியாது. இதில் கூடுதலாக இன்னொரு பாயிண்ட் பீடி குடிப்பது என்பது பாட்டாளி வர்க்கக்கலாச்சாரம். இத்தனையும் சேர்ந்த பிறகு விடுவோமா? தினசரி ஒன்றோ இரண்டோ பீடிகள் வீதம் குடித்து பழகிக் கொண்டிருந்தோம். அப்படி இருக்கும் நாளையிலே ஒரு நாள் சிவசு என்ற சிவசுப்பிரமணியன் சாயங்காலவேளையிலே நாங்கள் எப்போதும் கூடிப் படிக்கிற, விவாதிக்கிற, சிவகிரி மடத்தைச் சேர்ந்த துணை மடமான முத்தானந்தசாமி மடத்தின் புளியமரத்தடியில் கூடியிருக்கிற நேரத்தில் ஒரு விபரீதமான திட்டத்தோடு வந்தான். அவன் மிகுந்த தைரியசாலி. எங்கிருந்தோ கஞ்சாவை வாங்கிக் கொண்டு வந்திருந்தான். நாங்கள் பயந்தோம். அவன் தான் இது ராஜபோதை. பாரதியின் தீக்குள் விரலை வைத்தால் எப்படி வந்துச்சின்னு நெனக்கிறே.. இந்த அநுபவமெல்லாம் இல்லாமல் நீங்கள்லாம் என்னத்த கவிதை, கதை எழுதப் போறீங்களோ என்று உசுப்பேத்தி விட்டான். ஏற்கனவே எழுத்தாளனாகி இந்த உலகை உய்விக்க ( ! ) வேண்டுமென்று வெறியுடன் இருந்த நாங்களும் அவனுடைய தந்திரத்தில் தூண்டில் புழுவாய் சிக்கினோம். புகைக்க முடியாது வெளியே தெரிந்து விடும் என்று சாரதி ஆட்சேபித்தான். சரி என்று ராஜு வீட்டுக்குப் பால் வாங்கக் கொண்டு வந்த தூக்குவாளியைக் கொண்டு போய் முகைதீன்பாய் கடையில் கடனுக்கு மூன்று டீ வாங்கி வந்தான். அதில் கஞ்சாத்தூளைப் போட்டு ஆளுக்குக் கொஞ்சமாய் குடித்தோம். ராஜபோதையை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தோம். ஒருவருக்கொருவர் ஏதாச்சும் தெரியுதா ஏதாச்சும் தெரியுதா என்று கேட்டுக் கொண்டோம். ஒரு சித்தெறும்பு கூடக் கடிக்கவில்லை.

நாங்கள் சிவசுவை முறைக்க அவனோ ஆமா ஒரு ஆள் குடிக்க வேண்டியதை நாலுபேர் குடிச்சா மயிரா வரும்.. என்று முந்திக் கொண்டான். சரி இன்னொரு நாள் ஆளுக்கொரு பொட்டலமாக வாங்கிக் குடித்துப் பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். அன்று காலையில் நான் படித்த கவிஞர் பாலாவின் எக்ஸிஸ்டென்சலிசம் புத்தகத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தேன். மார்ட்டின் ஹைடேக்கர், கீர்க்கேகாடு, சார்த்தர், ஆல்பர்ட் காம்யு, என்று நவீன தத்துவாதிகளைப் பற்றியும் சர்ரியலிசம், எக்ஸ்சிஸ்டென்சலிசம், பற்றியும் பேசினோம்.

மனிதனுக்கு வாழ்க்கையில் மரணம் தான் பெரிய பிரச்னை. மரணத்தைக் கடப்பது எப்படி என்று தான் எல்லா மதங்களும் எல்லா தத்துவங்களும் ஆய்வு செய்து ஒவ்வொரு முடிவுக்கு வந்திருக்கின்றன. மரணத்துக்குப் பிறகு மனிதன் என்னவாகிறான்? மரணம் கடந்த பெருவாழ்வு வாழ்வது எப்படி? இந்திய உபநிஷதத்தில் நசிகேதனின் மரணம் என்றால் என்ன ? என்ற கேள்விக்குப் பதில் என்ன என்று விலாவாரியாகப் பேசத் தொடங்கியிருந்தோம். இருபதுகளில் இருந்த எங்களுடைய பேச்சை யாராவது கேட்டிருந்தால் என்னடா இது சாவைப் பத்தி பேசிக்கிட்டிருக்காங்க என்று முகம் சுளித்திருக்கவும் கூடும். ஆனால் நாங்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுகிற நிலைமையில் இல்லை. நாங்கள் தான் அறிவுஜீவிகளாயிற்றே

எப்போதும் கொஞ்சம் விதண்டாவாதமாகவும் நான் என்ன பேசினாலும் மறுப்பு சொல்லும் ராஜு அப்போதும் கீழே தரையில் போய்க் கொண்டிருந்த ஒரு எறும்பை காலால் மிதித்து நசுக்கினான். பின்னர் இந்தா இந்த எறும்பு செத்துப்போச்சு.. அது மரணத்துக்குப் பின்னால எங்கே போச்சு.. மரணத்தைக் கடக்க அது என்ன செய்ஞ்சுச்சு சொல்லேன்.. மரணத்தைக் கடப்பதாம்.. மயிரு.. செத்தா அவ்வளவு தான் அதுக்கப்புறம் உங்களைத் தூக்கிச் செமந்துகிட்டேவா இருப்பாங்க.. என்று கத்தினான். நான் அவன் முகத்தைப் பார்த்தேன். முகம் துடிதுடிக்க கண்கள் கோவைப்பழமாய் இருந்தன. அவன் சொல்லி முடித்ததும் சிவசு சிரித்தான். சிரித்தான். சிரித்தான்.. சிரித்துக் கொண்டேயிருந்தான். சிரிப்பை நிறுத்தவே முடியாது என்பதைப் போலச் சிரித்துக் கொண்டேயிருந்தான். சிரிப்பின் ஒலி நீண்டு கொண்டே போய் அழுகையின் ஈளக்கம் போல ஒலித்துக் கொண்டேயிருந்தது. சாரதி விரலால் மண்ணில் மரணம் மரணம் என்று எழுதியெழுதி அழித்துக் கொண்டேயிருந்தான். எனக்கு ஒரு மாதிரி புரிந்து விட்டது. மருந்து வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. நான் உடனே சபையைக் கலைத்து விடலாம் என்று சிவசுவிடம் சொல்கிறேன். நேரமும் இருட்டி விட்டது. அவர்கள் ஒவ்வொருவராய் எழுந்து கிளம்பத் துவங்கும் முன்பே நான் மடத்தின் திட்டிவாசல் வழியே ரோட்டிற்கு வந்து விட்டேன். தலை பாரமாக இருந்தது. தலையைத் தவிர உடம்பு இல்லாததைப் போல காற்றாய் இருந்தது. பிடதியில் ஒரு தீக்கங்கு கனன்று எரிந்து கொண்டிருந்தது. அடுத்த தெருவில் தான் என்னுடைய வீடு இருந்தது. நான் நடந்து கொண்டிருந்தேன். நடக்க நடக்க தொலையாத தூரமாகிக் கொண்டிருந்தது. ஒரு வேளை நடப்பதைப் போல ஒரே இடத்தில் நின்று கொண்டு கால்களை அசைத்துக் கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகமும் வந்தது. இல்லை நடந்து கொண்டுதானிருந்தேன். யாரோ என்னிடம் ஏதோ கேட்டார்கள். ஏதோ பதில் சொன்னேன். எதுவும் நினைவிலில்லை. நான் நடந்து கொண்டிருப்பது மட்டும் தான் என் ஞாபகத்திலிருந்தது. நடப்பது மட்டுமே நானாக, நானே நடையாக மாறிக் கொண்டிருந்தேன். நன்றாக இருந்தால் ஐந்து நிமிடங்களில் வந்து சேர்ந்திருக்கக் கூடிய என் வீட்டை அன்றிரவு முழுவதும் நடந்தாலும் அடைய முடியாது என்று தோன்றியது.

இப்பொழுது நினைத்தாலும் ஆச்சரியமாய் இருக்கிறது. எப்படி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன் என்று தெரியவில்லை. வீட்டுக்கு வந்தவுடன் செய்த முதல் காரியம் வீட்டு மூலையில் போர்வையை விரித்து முடங்கிக் கொண்டேன். என்னுடைய அம்மா ஏதோ கேட்டார்கள். ஏதோ பதில் சொன்னேன். அப்படியே பூமி கீழேயே போவது போலிருந்தது. நான் அதலபாதாளத்துக்குப் போய்க் கொண்டிருந்தேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் மூழ்கிப் போய் விட்டேன். காலையில் எழுந்தவுடன் பிரெஷ்ஷாக இருந்தது. தி.ஜானகிராமனின் மோகமுள் நாவலைப் படிக்க உட்கார்ந்து விட்டேன். அன்று மாலைக்குள் நான் அதை ராஜுவிடம் கொடுக்க வேண்டும். ஆனால் நினைத்த மாதிரி சாயந்திரத்துக்குள் மோகமுள்ளைப் படித்து முடிக்க முடியவில்லை. சாயங்காலம் வீட்டிலிருந்து கிளம்பி சாரதியைப் பார்க்கப் போனேன். அவன் அப்போது தான் ராஜுவின் வீட்டிலிருந்து வந்திருந்தான். டேய் ஒரு முக்கியமான விஷயம் என்றான். இரண்டு பேரும் பாய் டீக்கடைக்குப் போனோம். நேற்று எல்லோரும் பிரிந்து போன பிறகு சாரதி இன்று மதியம்வாக்கில் ராஜுவின் வீட்டிற்குப் போயிருக்கிறான். ராஜு வீட்டிலில்லை. அவனுடைய அம்மா அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள்.

உள்ளுக்குள் பதைபதைப்புடன் ஏன் என்னாச்சு.. என்று கேட்டிருக்கிறான் சாரதி. ராஜுவும் வீட்டிற்குப் போய் என்னை மாதிரியே படுத்திருக்கிறான். அவனுடைய அம்மா கேட்டதுக்கு ஏதோ சம்பந்தமில்லாமல் உளறியிருக்கிறான். அப்போதே அவனுடைய அம்மாவுக்குச் சந்தேகம் வந்து என்னடா உடம்பு சரியில்லையா காய்ச்சல் எதும் அடிக்குதா.. என்று கேட்டிருக்கிறார்கள். அவன் எதுவும் சொல்லாமல் தூங்கியிருக்கிறான். நடுராத்திரியில் அவனுக்கு நாவறண்டு தொண்டையிலிருந்து சத்தம் போட முடியாமல் யாரோ மேலே விழுந்து அமுக்குற மாதிரி தோன்ற அவன் என்ன முயற்சி செய்தும் கையையோ காலையோ அசைக்க முடியாமல் போய் விட தான் செத்துப் போய் விடப் போகிறோம் என்று நினைத்து விட்டான். போதாக்குறைக்கு சாயங்காலம் நாங்கள் பேசிய மரணம் பற்றிய பேச்சு சித்திரங்களாகக் கண்முன்னால் ஆட அவன் உண்மையில் பயந்து போய் விட்டான். அம்மா என்று குரலெழுப்ப முடியவில்லை. சற்று தள்ளிக் கட்டிலில் படுத்திருக்கும் அப்பாவைக் கூப்பிட கையை அசைக்க முடியவில்லை. என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் தன் முழு பலத்தையும் திரட்டி ஐயோ..அம்மா.. ஐயோ அம்மா என்று கூப்பிட்டு விட்டான். அவன் கூப்பிட்டு விட்டதாய் நினைத்தான். ஆனால் அவன் போட்ட கூப்பாட்டில் அந்த வளவே எழுந்து விட்டது. அவனுடைய அப்பாவும் அம்மாவும் அலறியடித்து எழுந்து லைட்டைப் போட்டு அவனருகில் வந்து என்னடா என்ன? என்று கேட்க என்னால கையக் கால அசைக்க முடியல.. என்னமோ மாதிரியா இருக்கு உடனே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போங்க என்று சொல்லியிருக்கிறான். அவனுடைய அம்மா அழுது விட்டார்கள். அப்பா உடனே தெரு முக்கில் இருக்கும் குதிரை வண்டியைப் பிடித்து அதில் அவனைப் படுக்க வைத்து வீட்டோடு ஆஸ்பத்திரி வைத்திருக்கும் சுகுமாரிதாஸிடம் கூட்டிக் கொண்டு போயிருக்கிறார். குதிரை வண்டியில் போகும் போது பின்னால் வந்த லாரியின் ஹெட்லைட் வெளிச்சத்தைப் பார்த்து ஐயோ எமன் வரானே.. ஐயோ எமன் வரானே.. என்று கத்தியிருக்கிறான். அவனைச் சமாதானப்படுத்துவதற்குள் அவனுடைய அப்பாவுக்கு போதும் போதும் என்றாகி விட்டது. அவருக்கு பையனுக்கு ஏதோ கோட்டிகீட்டி பிடிச்சிருச்சோ என்று சந்தேகமும் வந்திருக்கிறது. எப்படியோ ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள். டாக்டர் என்ன சாப்பிட்டே என்று கேட்டதற்கு சாயங்காலம் ஒரு டீக்கடையில் டீ குடித்ததுக்கப்புறம் தான் என்று சொல்லியிருக்கிறான். அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. சரி எதற்கும் இருக்கட்டும் என்று தூங்குவதற்கு ஊசி போட்டு விட்டார். இந்தக் கூத்து பண்ணிட்டானே என்று சாரதி சொன்னான். எனக்கு ராஜுவின் அப்பாவைப் பார்த்தாலே பயம்.

ஒருவேளை எல்லாவற்றையும் அவன் டாக்டரிடமோ, அவனுடைய அம்மா அப்பாவிடமோ சொல்லியிருந்தால் என்ன ஆகும்? அவ்வளவு தான். வேலையில்லாமல் தெண்டச்சோறு சாப்பிட்டுகிட்டு சுத்திகிட்டு திரியுதுமில்லாமல் இது வேறயா என்று வாரியலால நாலு சாத்து விழுமே. என்ன செய்ய? மார்ட்டின் ஹைடேக்கரும், கீர்க்கேகாடுமா வந்து காப்பாத்தப் போகிறார்கள். என்ன சொல்லித் தொலைச்சிருக்கானோ என்று பயந்தபடியே நானும் சாரதியும் மெல்ல அரவமில்லாமல் ஆஸ்பத்திரிக்குப் போய் எட்டிப் பார்த்தோம்.. அவனுடைய அப்பா எங்களை வரவேற்றவிதத்திலேயே தெரிந்து விட்டது பிள்ளையாண்டன் எதையும் உளறவில்லை. ராஜு அசட்டுத்தனமாய் எங்களைப் பார்த்துச் சிரித்தான். அவனுடைய அப்பா எங்களைத் தனியே கூப்பிட்டுப் போய், நீங்க கொஞ்சம் அவனை வாட்ச் பண்னுங்க.. அவன் எங்க போறான்.. எங்க வாறான்.. எந்தக் கடையில டீக் குடிக்கான்னு பாருங்க.. டீக்கடையில தான் அவனுக்கு யாரோ எதையோ கலந்து கொடுத்திருக்காங்க.. ஒரு வேள செய்வினை ஏதும் வைச்சிருக்காங்களான்னு. பாக்கணும் என்று ரெம்ப சீரியஸாகச் சொல்லிக் கொண்டிருந்தார். சாரதி ரெம்ப அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு அப்படியா நாங்க அவனை வாட்ச் பண்றோம் என்று அவருக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். அதுமட்டுமல்லாமல் அவருக்கு செய்வினைகள் எடுப்பது பற்றி ஆலோசனைகளும் வேறு சொல்லிக் கொண்டிருந்தான். எனக்கானால் நடந்து கொண்டிருந்த கூத்தைப் பார்த்து சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. ரெம்பக் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டேன். ஆனால் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்ததும் பாய் டீக்கடையில் வைத்து சிரியோ சிரியென்று சிரித்து முடித்தோம்.

இன்றுவரை ராஜுவுக்குச் செய்வினை வைத்த வில்லன்கள் நாங்கள் தான் என்று அவனுடைய வீட்டாருக்குத் தெரியாது. இப்போதும் ராஜுவிடம் ஹைடேக்கர் என்றால் போதும். சிரிக்காமல் ரெண்டு நல்ல வார்த்தை சொல்லுவான்,

போடா மயிரு!

நன்றி- சொல்வனம் இணைய இதழ்

Tuesday 25 December 2012

நமது உடலில் தீண்டாமை

உதயசங்கர்

modern_art

கோடிக்கணக்கான ஆண்டுகளாக இந்தப் பிரபஞ்சத்தில் உருவாகி, உருமாறி, வந்துள்ள அனைத்து ஜீவராசிகளும் அதன் இருத்தல் வழியேயும், உயிரியக்கத்தின் வழியேயும் இந்த உலகத்தை உயிர்ப்புடன் வைத்துக் கொண்டுள்ளன. எந்த ஒரு சிறு உயிரியும் ஒன்றை விட ஒன்று குறைவானதோ தாழ்ந்ததோ இல்லை. எல்லாமே சமமான மதிப்புடையவையே. உயிர்களின் ஆயுட்காலம் ஒரு விநாடியோ, ஒரு நிமிடமோ, ஒரு மணி நேரமோ, ஒரு நாளோ, ஒரு மாதமோ, ஒரு ஆண்டோ, ஒரு நூற்றாண்டோ, எல்லா உயிர்களும் தங்களின் இருத்தலின் மூலம் மற்ற உயிர்களின் இருப்பையும் அங்கீகரிக்கின்றன. எனவே ஒன்றின் இருத்தல் மற்றொன்றின் இருத்தலுக்கு அவசியமானது. ஒன்றின் மறைவு மற்றொன்றின் மறைவுக்கு வித்திட்டு விடும். இதைச் சுற்றுச்சூழல், இயற்கையியலில் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆக எல்லா உயிர்களுமே சமமான மதிப்புடையவை.

ஒரே இனத்தைச் சேர்ந்த எந்த உயிரும் இருத்தலுக்கான போராட்டத்திற்காகவன்றி மற்றபடி தங்களுடைய சொந்த இனத்தின் மீது நிரந்தரமான வெறுப்புணர்வையோ, உயர்வு தாழ்வையோ, அதிகாரத்தையோ, தீண்டாமையையோ கடைப்பிடிப்பதில்லை. ஆனால் மனித இனத்தில் மட்டுமே இத்தகைய கொடிய சிந்தனைகள் வேர்விட்டு கிளைபரப்பி மனித வாழ்வின் ஆரம்பம் முதல் இறுதி வரை நடைமுறைப்படுத்தப் படுகின்றன. இத்தனைக்கும் இப்போது உலகம் முழுவதும் பரவியிருக்கிற மனித இனம் ஆப்பிரிக்காவிலிருந்து தான் முளைவிட்டு பரவியிருக்கிறது என்று அறிவியல்பூர்வமாக நிரூபித்த பிறகும் இனம், மொழி, மதம், சாதி, என்று வேறுபாடுகளைக் கடைப்பிடிப்பதும், அதை வெறியாக வளர்த்தெடுப்பதும் மனித இனத்தில் மட்டும் தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் சகமனிதர் மீது இத்தகைய வெறுப்புணர்வை பேணி, வளர்த்து, காப்பாற்றி, நிலை நிறுத்தியதில் பிராமணியமே முக்கியப்பங்கு வகிக்கிறது.

சுத்தம் அசுத்தம், தூய்மை, தூய்மையின்மை, என்ற இயற்கை,சூழல், சுகாதாரம், சார்ந்த புறவயமான செயல்களை பண்பாட்டுரீதியில் மாற்றி அதைச் சமூகவயமாக்கியதில் பிராமணியம் பெற்ற வெற்றி தான் இன்று வரை நாம் அநுபவித்து வரும் வருணாசிரமக்கோட்பாடு. இயற்கையின் செயல்பாடுகளையும் பண்பாட்டுத்தளத்திற்குள் மாற்றுகிற காரியங்களில் நமது சொந்த உடலையே தீண்டாமையின் களமாக மாற்றியிருக்கிறது பிராமணியம். முதலில் வர்ணம் என்ற சொல்லுக்கு நிறம் என்றே பொருள். ஆக ஆரம்பத்தில் தோலின் நிறமும் சாதியக்கட்டமைப்புக்கு ஒரு காரணியாக இருந்திருக்கிறது. மேற்குலகில் அது வெள்ளை, கறுப்பு, என இனரீதியாக பிரிவினையை உருவாக்கியிருந்தது. ஆனால் இங்கே தோலின் நிறம் இனரீதியாக மட்டுமல்ல இன்னும் நுட்பமாக வேலைப்பிரிவினை, நிலம், சுற்றுச்சூழல், கலாச்சாரம், என்று வாழ்வின் சகல அம்சங்களிலும் ஊடுருவி பிறப்பு ரீதியான சாதிப்பிரிவினையை உருவாக்கி நிலைநிறுத்தியுள்ளது. மக்களது பொதுப்புத்தியில் சிவந்த உடல்கள் சிறந்தவை. கருத்த உடல்கள் கீழானவை என்ற எண்ணத்தை தங்களது அதிகாரப்படிநிலை மூலமாக பதிய வைத்துள்ளது பிராமணியம். எனவே இன்றும் கூட கறுத்த நிறமுடைய பெண்களுக்கு அவர்களுடைய சாதியிலும் திருமணம் முடிப்பது பெருங்கஷ்டமாக இருக்கிறது. கறுத்த நிறமுடைய ஆண்களை சாதிப்படிநிலையில் கீழே இருப்பவர்களோ என்ற சந்தேகத்தோடு மற்ற சாதியினர் பழகுகிறார். நகரங்களில் நாசூக்காகவும், கிராமங்களில் அப்பட்டமாகவும் இதைக் கேட்டு விடுகிறார்கள். எனவே உடலின் நிறமே சாதியப்படிநிலையை பார்த்தவுடன் தீர்மானிக்கிற விஷயமாக இருக்கிறது.

நமது உடலின் எல்லாப்பாகங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. சமமான மதிப்புடையவை. எல்லா உறுப்புகளும் நம்முடைய ஒட்டு மொத்த உயிரியக்கத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் தான். அதில் ஏற்ற தாழ்வோ, சமத்துவமின்மையோ சுத்த, அசுத்தமோ, கிடையாது. ஆனால் நடைமுறையில் நமது உடலில் வலது பாகத்துக்குக் கொடுக்கக் கூடிய முக்கியத்துவத்தை இடது பாகத்துக்குக் கொடுப்பதில்லை. வலது பாகத்தினால் செய்யக்கூடிய வேலைகளை இடது பாகத்தினால் செய்வதில்லை. அதே போல இடது பாகத்தினால் செய்யக்கூடிய வேலைகளை வலது பாகத்தினால் செய்வதில்லை. செய்யக்கூடாது என்று நம்முடைய பொதுப்புத்தியில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. இயற்கையில் நமது மூளையின் இடதுபாகமே நமது உடலியக்கத்தின் வலது பாகத்தைச் செயல்படுத்துகிறது. அதே போல வலதுபாகம் உடலியக்கத்தின் இடதுபாகத்தைச் செயல்படுத்துகிறது. உழைப்பின் வரலாற்றில் இயற்கையின் உள்ளுணர்வினால் உந்தப்பட்ட மூளை உடலின் வலது பாகத்தை அதிகமாகப் பயன்படுத்தியதால் மூளையின் இடது பாகம் வலுப்பெற்று பாரம்பரியமாகவே உடலின் வலது பாகத்தை செயலூக்கம் பெறச் செய்தது. இப்படி இயற்கையான, உயிரியல்பூர்வமான உடலியக்கத்தை தங்களுடைய கோட்பாடுகளுக்குச் சாதமாக்கிக் கொண்டிருக்கிறது பிராமணியம்.

வலது கை, வலது கால், உட்பட உடலின் வலது பாகம் மங்களகரமானது. உயர்வானது. சுத்தமானது. வலது கையினால் கொடுப்பது, வலது கையினால் வாங்குவது, அதை எந்தெந்தச் சாதினருக்கு எப்படியெப்படி செய்ய வேண்டும் என்று மனுதர்மம் சொல்கிறது. இடது கை அமங்களமானது, அசுத்தமானது, எனவே தீட்டுக்குரியது. இடது கையினால் மலம் கழுவுவது, இடது கையினால் அசுத்தமான, வேண்டாத பொருட்களைத் தூக்கி எறிவது, சாதியப்படியில் கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு இடது கையினால் தூக்கிக் கொடுப்பது, உட்பட இடது கை முக்கியத்துவம் குறைந்ததாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. தீட்டுக்கழிப்புச் சடங்குகளில் இந்த வலது கை, இடது கை, விவகாரங்களைக் காணலாம். சமூகத்தில் இப்போதும் இடது கையினால் சாப்பிடுவது, கொடுத்து வாங்குவது, வித்தியாசமாகவும், அருவெறுப்புடனும் பார்க்கப்படுகிறது. சில சமயம் வெளிப்படையாகவே “ வலது கையில கொடுங்க..” என்றுசொல்வதும் நிகழ்கிறது

அதே போல புதுவீடு, புது இடம் என்று எங்கு சென்றாலும் வலது காலை எடுத்து வைத்து வரச்சொல்லுதல், வலது கால் மங்கலம், இடது கால் அமங்கலம் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே உருவானது. இந்தக் கோட்பாடு கடவுளரையும் விட்டு வைப்பதில்லை. அர்த்தநாரீஸ்வரர் என்ற ஆணூம் பெண்ணும் இணைந்த உருவத்திலும் ஆண் வலது பாகத்தில் இருப்பதையும், பெண் இடது பாகத்தில் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. பிராமணீயம் எவ்வளவு நுட்பமாக நம் வாழ்வின் அணுத்துகளிலும் தன்னுடைய கோட்பாட்டைக் கலந்து நமது மனதை வசப்படுத்தி நமக்கே தெரியாமல் நம்முடைய ஓப்புதலை வாங்கி நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை யோசிக்க வேண்டியுள்ளது.

நம் வாழ்வின் சகல அம்சங்களிலும் பிரிக்கமுடியாமல் கலந்திருக்கும் பிராமணியத்தின் அனைத்துக் கூறுகளையும் மிகுந்த விழிப்புணர்வுடன் இனங்காண வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

Monday 24 December 2012

குயிலக்கா

உதயசங்கர்indian_cuckoo_0008

குயிலக்கா குயிலக்கா

எங்கே போனீங்க?

உங்க குரலைக்கேட்க

நானுந்தான் ஏங்கிப் போனேங்க!

குட்டிப்பாப்பா குட்டிப்பாப்பா

கெட்டிக்காரக் குட்டிப்பாப்பா

தங்கி வாழ மரமில்லாமல்

தவித்துப்போனேனே

தங்கமான உன் நினைவு வந்து

பார்க்க வந்தேனே!

குயிலக்கா, குயிலக்கா

குக்கூக்கூ குயிலக்கா

குட்டியான செடியொண்ணு

நான் வளக்கேனே

அது மரமான பின்னாலே

உனக்குத் தருவேனே!

குட்டிப்பாப்பா குட்டிப்பாப்பா

பொன்னான குட்டிப்பாப்பா

நல்ல வார்த்தை நீயும் சொன்னாய்

நம்பிக்கை மலர வைத்தாய்

குக்கூக்கூ குயில்கள் எல்லாம்

உன் மரத்திலே நாளை

ஒன்று சேர்ந்து கூடி வாழுமே!

Saturday 22 December 2012

சாலையோரமாக…

 

சாதத் ஹசன் மண்ட்டோ

ஆங்கிலத்தில் – காலித் ஹசன்

தமிழில் – உதயசங்கர்manto2

ஆமாம், ஆண்டின் இதே நேரம் அது. வானம் அவனுடைய கண்களைப் போல கழுவி விடப்பட்ட நீலநிறத்தில் இருந்தது. சூரியன் ஒரு இனிய கனவைப் போல மென்மையாக இருந்தது. மண்ணிலிருந்து கிளம்பிய மணம் என் இதயத்தில் நுழைந்து என் உயிரை சேர்த்தணைத்துக் கொண்டது. இதோ அவனருகில் படுத்துக் கொண்டிருக்கிற நான் துடிக்கும் என் ஆத்மாவை அவனுக்கு அர்ப்பணித்துக் கொண்டிருந்தேன்.

அவன் என்னிடம்,

” எது என் வாழ்க்கையில் எப்போதும் இல்லாமலிருந்ததோ அதை நீ தந்தாய்.. உன்னுடன் பகிர்ந்து கொள்ள நீ அநுமதித்த இந்த மாயக்கணங்கள் என் வாழ்வின் வெறுமையை நிரப்பியது. உன் காதலில்லாத என் வாழ்க்கை சூனியமாக, ஏதோ ஒன்று பூரணமில்லாததாக நிலைத்து இருந்திருக்கும். உன்னிடம் என்ன சொல்வது? எப்படிச் சொல்வது? என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இன்று நான் முழுமையடைந்து விட்டேன். நான் நிறைவடைந்து விட்டேன். அதனால் நீ எனக்குத் தேவையில்லை…”

என்று சொன்னான். பின்பு அவன் ஒரு போதும் திரும்பி வராதபடி போய் விட்டான்.

நான் அழுதேன். எனக்குப் பதில் சொல்லும்படி கெஞ்சினேன்.

” என்னுடைய ஒட்டு மொத்த உயிரும் பேராவலோடும், பெருங்காதலோடும் தீயாக எரிந்து கொண்டிருக்கிறபோது ஏன் உனக்கு நான் இனிமேல் தேவைப்படமாட்டேன். உன்னுடைய ஆத்மாவில் உள்ள வெறுமை நிரம்பிவிட்டது என்று நீ சொன்ன கணங்கள் என் ஆத்மாவில் ஒரு வெறுமையை உருவாக்கி விட்டதே..”

அதற்கு அவன்,

” நாம் பகிர்ந்து கொண்ட இந்தக் கணங்களே என் வெறுமையை நிரப்பிவிட்டது. உன் உயிரின் அணுக்கள் என்னை முழுமையானவனாக்கி விட்டது. நம்முடைய உறவு முன் தீர்மானிக்கப்பட்ட முடிவுக்கு வந்து விட்டது..”

என்று சொன்னான்.

உயிரோடு கல்லாலடிக்கிற மாதிரியான குரூரமான வார்த்தைகள் இவை. நான் கதறினேன். ஆனால் அவன் முடிவு செய்து விட்டான். நான் அவனிடம்,

” நீ பேசிய என் உயிரின் அணுக்கள், உன்னை முழுமையடையச் செய்த இந்த அணுக்கள் என் உடலின் ஒரு பகுதி தானே.. நான் உனக்கு அவற்றைக் கொடுத்தேன். அங்கேயா நம் உறவு முடிவுக்கு வந்தது? என்னிடமிருந்து பிரிந்து வந்தது உன்னிடம் நான் என்ன கொடுத்தேனோ அது என்னிடமிருந்து எப்போதும் துண்டிக்கப்பட்டு விடுமா? நீ முழுமையடைந்து விட்டாய். ஆனால் என்னைக் குறையுள்ளவளாக்கி விட்டாய். உன்னை நான் கடவுளைப் போல் பூஜிக்கவில்லையா? “

என்று சொன்னேன். அதற்கு அவன்,

” பாதி திறந்த மலர்களிலிருந்து தேனீக்கள் உறிஞ்சிய தேன் மீண்டும் ஒரு போதும் அந்த மலர்களை அலங்கரிக்கவோ, அவர்களுடைய கசப்பை இனிப்பாக்கவோ போவதில்லை. கடவுள் என்றாலே பூஜிக்கப் படவேண்டியவர். ஆனால் அவர் யாரையும் பூஜிப்பதில்லை. பெருஞ்சூனியத்தில், அவர் உயிர்களை உயிரற்றவைகளோடு இணைத்து உலகை சிருஷ்டித்தார். அதன் பிறகு சூனியம் இல்லாதொழிந்தது. ஏனென்றால் அவருக்கு அது தேவைப்படவில்லை.. புதிய உயிரைத் தந்து விட்டு தாய் இறந்து விட்டாள்..”

என்று சொன்னான். ஒரு பெண் அழலாம். அவள் விவாதிக்கக்கூடாது. அவளுடைய உச்சபட்ச விவாதமென்பதே அவள் கண்களிலிருந்து ஊற்றெடுக்கும் கண்ணீர் தான். நான் அவனிடம்,

என்னைப் பார்… நான் அழுது கொண்டிருக்கிறேன். நீ பிரிந்து போவதென்று முடிவு செய்து விட்டால் என்னால் உன்னை நிறுத்த முடியாது..ஆனால் இந்தக் கண்ணீர்த்துளிகளை உன்னுடைய கைக்குட்டை மடிப்புகளில் சுருட்டி எடுத்துக் கொண்டு எங்காவது எரித்து விடு. ஏனென்றால் நான் மீண்டும் அழும்போது எனக்கு நீ ஏற்கனவே காதலின் இறுதிச் சடங்குகளைச் செய்து விட்டாய் என்று தெரிந்து விடும். எனக்காக, என்னுடைய சந்தோஷத்திற்காக இந்தச் சிறிய விஷயத்தைச் செய்து விடு..”

என்று சொன்னேன். அதற்கு அவன்,

” நான் உன்னைச் சந்தோஷப்படுத்தினேன்.. நான் வரும்வரை உன் வாழ்வில் கானலைப் போல இருந்த அந்த உன்னதமான மகிழ்ச்சியை நான் உனக்குக் கொடுத்தேன்.. நான் உனக்களித்த அந்த மகிழ்ச்சியின் ஞாபகத்தில் மீதி வாழ்நாள் முழுவதையும் உன்னால் கழிக்க முடியாதா? என்னுடைய முழுமை உன்னைக் குறையுள்ளவளாக்கி விட்டதென்று நீ சொன்னாய் முழுமையின்மையைத் தொடர்ந்து கொண்டிருப்பது வாழ்வுக்கு அவசியமில்லை. நான் ஒரு மனிதன் இன்று நீ என் வாழ்வில் முழுமையைக் கொண்டு வந்தாய். நாளை வேறொரு பெண். பலப்பலமுறை அதே உன்னதமான மகிழ்ச்சித் தருணத்தை அநுபவிக்க, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட மூலக்கூறுகள் என்னைக் கவர்ந்திழுத்துக் கொண்டேயிருக்கின்றன. இன்று நீ நிரப்பிய வெறுமை மறுபடியும் தோன்றும். அப்போது அங்கே அதை நிரப்ப மற்றவர்கள் இருப்பார்கள்..”

என்று சொன்னான். நான் தொடர்ந்து அழுது கொண்டிருந்தேன், நான் நினைத்தேன். என் கையில் பிடித்திருந்த குறைந்த அந்தச் சில கணங்கள் போய் விட்டன. நான் அதன் மாயாஜாலத்தால் அடித்துச் செல்லப்படுவதற்கு ஏன் என்னை அநுமதிக்க வேண்டும்? ஏன் நான் அமைதியற்றுத் துடித்துக் கொண்டிருக்கும் ஆத்மாவை வாழ்வின் கூண்டில் அடைக்க வேண்டும்? ஆமாம். அது வார்த்தைகளைத் தாண்டிய பரவசம். ஆமாம் நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டிருந்தது ஒரு கனவைப் போல இருந்தது. ஆமாம்.. ஆமாம். அது ஒரு விபத்து. ஆனால் அவன் அதிலிருந்து முழுதாக எந்தச் சேதாரமுமில்லாமல் எழுந்து நடந்து போய் விட்டான். சிதைந்து போன என்னை விட்டு விட்டு. அவன் மீதான என்னுடைய ஆசையின் உக்கிரம் எனுடம்பையும் உயிரையும் நெருப்பாய் எரித்துக் கொண்டிருக்கிறபோது ஏன் அவனுக்கு நான் இனிமேல் தேவைப்படாமல் போனேன்? நான் என்னுடைய சக்தியை அவனிடம் கொடுத்து விட்டேன். நாங்கள் வானத்தில் இரண்டு மேகங்களைப் போல இருந்தோம்.ஒன்று மழை. மற்றொன்று காட்டுமின்னலின் ஒளி. இரண்டும் விலகிப் போய் விட்டது. இது என்ன விதமான தீர்ப்பு? வானத்தின் சட்டங்களா? பூமியின் சட்டங்களா? இல்லை இவைகளையெல்லாம் சிருஷ்டித்த சிருஷ்டிகர்த்தாவின் சட்டங்களா?

ஆமாம். நான் இந்த விஷயங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இரண்டு ஆத்மாக்கள் சந்தித்தன. அதில் ஒன்று முடிவின்மையின் வெளியை சென்றைடைந்து விலகிப் போய்விட்டது. இதெல்லாம் என்ன கவிதையா? இரண்டு ஆத்மாக்கள் சந்தித்தால் அவர்கள் அந்தச் சிறு புள்ளியில் கூடி இனைந்து பிரபஞ்சத்தின் கருவைப் போல ஆகி விடுகிறார்கள். ஆனால் ஏன் இரண்டில் ஒன்று இணைவிலிருந்து உடைத்துக் கொண்டுப் பிரிந்து போய் விடும்படி விதி செய்கிறது? பிரபஞ்சத்தின் கருவான அந்தச் சிறு புள்ளியைக் கண்டுபிடிக்க மற்றவருக்குச் செய்த உதவிக்குக் கிடைத்த தண்டனையா?

ஆமாம். ஆண்டின் இதே நேரம் அது. இன்று போலவே வானம் அவனுடைய கண்களைப் போல நீலமாக இருந்தது. இதோ அவனருகில் படுத்துக் கொண்டிருக்கும் நான் துடிக்கும் என் ஆதமாவை அவனுக்கு சமர்ப்பணம் செய்து கொண்டிருந்தேன்.

அவன் இங்கு இல்லை. அவன் வேறு வானத்தில் வேறு மேகங்களோடு விளையாடிக் கொண்டிருக்கும் மின்னல் கீற்று. அவனுடைய முழுமையை அவன் கண்டடைந்து விட்டதால் அவன் போய் விட்டான். அவன் ஒரு பாம்பு. அது என்னைக் கடித்து விட்டு சென்று விட்டது. ஆனால் என் அடிவயிற்றில் முன்பு அவன் எங்கே இயங்கினானோ அங்கே என்ன ஒரு விசித்திரமான அமைதியின்மை? என் முழுமையின் ஆரம்பமா?

இல்லை. அப்படி இருக்க முடியாது. இது என்னுடைய அழிவு. என்னுடைய முடிவு. ஆனால் ஏன் என் உடலின் வெற்று வெளிகள் நிரம்பிக் கொண்டிருக்கின்றன? இந்த பிளவுகளுள்ள துளைகளுக்கு உணவளிக்க என்னவிதமான குப்பைகள் பயன்படுத்தப் படுகின்றன? என்ன இந்த இரத்தக் குழாய்களில் விசித்திரமான உணர்வுகள்?ஏன் நான் என்னுடைய மொத்த உயிரும் சுருங்கி என்னுடைய அடி வஇற்றில் குடியிருக்கும் அந்தச் சிறிய புள்ளியாக மாற விரும்புகிறேன்? இந்தப் பெருங்கடல்களில் மூழ்கிக் கொண்டிருக்கும் காகிதப்படகான என் இதயம் மீண்டு வருமா?

என்னுடைய உடலின் நெருப்பில் பாலைக்கூட கொதிக்க வைத்து விடலாம் என்று உணர்ந்தேன். நான் எதிர்பார்க்கிற அந்த விருந்தாளி யார்> யாருக்காக என்னுடைய இதயம் இரத்தத்தை இறைத்து மென்மையான பட்டிழைகளை நெய்து கொண்டிருக்கிறது? என் மனதில் அற்புதமான நிறங்களில் லட்சக்கணக்கான பட்டு நூலிழைகள் இணைந்து சிறிய ஆடைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன?

யாருக்காக என்னுடைய உடல் தங்கநிறமாக மாறிக் கொண்டிருக்கிறது?

ஆண்டின் இதே நேரம் அது. அந்த வானம் அவனுடைய கண்களைப்போல கழுவி விடப்பட்ட நீலநிறமாக இன்று போலவே இருந்தது. ஆனால் ஏன் அந்த வானம் என் அடிவயிற்றில் தன்னுடைய கூரையைக் கட்டுவதற்கு இறங்கி வந்தது? ஏன் என்னுடைய இரத்தத்தில் அவனுடைய நீலநிறம் ஓடிக் கொண்டிருப்பதாக உணர்கிறேன்?

ஏன் என்னுடைய வட்டமான முலைகள் மசூதிகளின் மீது அலங்கரித்துக் கொண்டிருக்கும் பளிங்கு வட்டக் க்ப்புரத்தின் புனிதத்தைப் பெற்றுக் கொண்டது?

ஈலை. நடந்த நிகழ்வில் புனிதம் என்று எதுவும் இல்லை. நான் இந்தக் கோபுரங்களைத் தகர்த்து விடுவேன். என்னுடைய உடலில் எரியும் நெருப்பை அணைத்து விடுவேன். அது தான் அழையாத விருந்தாளிக்காக உணவு தயாரித்துக் கொண்டிருக்கிறது. நான் லட்சக்கணக்கான நிறங்களுள்ள அந்தப் பட்டிழைகளை அறுத்து விடுவேன்.

ஆண்டின் இதே நேரம் அது.அந்த வானம் அவனுடைய கண்களைப்போல கழுவி விடப்பட்ட நீலநிறமாக இன்று போலவே இருந்தது. ஆனால் ஏன் நான் அவனுடைய காலடித்தடங்கள் இனி கேட்காத அந்த நாட்களின் ஞாபகங்களை மீட்டெடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்? ஆனால் என் அடி வயிர்றின் ஆழத்தில் நான் என்ன உணர்கிறேன்? சிறிய காலடிச் சத்தமா? எனக்கு அது தெரியுமா?

நான் அதை அழித்து விடுவேன். அது ஒரு புற்று நோய். ஒரு ராஜபிளவை. ஒரு பயங்கரமான ஒட்டுண்ணி.

ஆனால் ஏன் அதையே என் வலியை இதமாக்குகிற, குணப்படுத்துகிற மருந்தாக நான் உணர்கிறேன்? அது மருந்தாக இருந்தால் எந்தக் காயத்தைக் குணப்படுத்தப் போகிறது? அவன் விட்டுச் சென்ற காயத்தையா?

இல்லை. இந்தக் காயம் நான் பிறந்ததிலிருந்தே நான் என்னுடன் சுமந்து கொண்டிருக்கிறேன். என் கர்ப்பப்பையில் எப்போதும் இருந்த காயம். பார்க்கமுடியாத, உறங்கிக் கொண்டிருந்த காயம்.

என் கர்ப்பப்பை என்ன உபயோகமில்லாத களிமண் பானையா? ஒரு குழந்தையின் பொம்மையா? நான் அதை துண்டு துண்டாக உடைத்து நொறுக்குவேன்.

ஆனால் என் காதில் ஒரு குரல் கிசுகிசுக்கிறது. இந்த உலகம் சிக்கலானது. அதற்கு மத்தியில் உன்னுடைய களிமண் பானையை உடைக்காதே. குற்றம் சாட்டுகிற விரல்கள் உன்னைக் குறி வைத்து நீளும்.

இந்த உலகம் சிக்கலானது. ஆனால் அவன் என்னை இரண்டு சாலைகளின் நடுவே விட்டுவிட்டான். இரண்டுமே முழுமையின்மையையும் கண்ணீரையும் நோக்கி கூட்டிச் செல்பவை.

ஒரு கண்ணீர்த்துளி என்னுடைய சிப்பிக்குள் நழுவி விழுந்து ஒரு முத்தை உருவாக்கியது. யாரை அலங்கரிக்கப்போகிறது அது?

சிப்பி திறந்து அதன் முத்தை வெளிப்படுத்துகிற போது குற்றம் சாட்டுகிற விரல்கள் உயரும். முச்சந்தியில் அதைத் துப்பிவிடும். அந்த விரல்கள் பாம்புகளாக மாறி சிப்பியையும் முத்தையும் கடித்து தன் விஷத்தினால் நீலநிறமாக்கி விடும்.

வானம் அவனுடைய கண்களைப்போல கழுவி விடப்பட்ட நீல நிறத்தில் இன்று போலவே இருந்தது. ஏன் அது விழவில்லை? அதை எந்தத் தூண்கள் தாங்கிக் கொண்டிருக்கின்றன? இந்த மிகப்பெரியக் கட்டிடத்தின் அஸ்திவாரங்களை அசைக்க பூகம்பம் வருமா? ஏன் என் தலைக்கு மேலே வானம் ஒரு கூரையைப் போல இருக்கிறது?

நான் வியர்வையில் நனைகிறேன். என் உடலின் துவாரங்கள் எல்லாம் திறந்து கொண்டன. எங்கும் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. என்னுடைய மண்பானையில் தங்கம் உருக வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தீயின் பிழம்புகள் தாவிக் கொண்டிருக்கின்றன. தங்கம் உருகிய லாவா குழம்பைப் போல பொங்கிக் கொண்டிருக்கிறது.அவனுடைய நீலநிறக் கண்கள் என் ரத்த நாளங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. மணிகள் ஒலித்துக் கொண்டிருப்பதை நான் கேட்டேன். யாரோ வருகிறார்கள். கதவுகளை அடைக்கிறார்கள்.

அந்த மண்பானை தலைகீழாகத் திரும்புகிறது. உருகிய தங்கம் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. மணிகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

அது அதன் வழியே போய்க் கொண்டிருக்கிறது. என்னுடைய கண்களில் உறக்க்ம அழுத்துகிறது. அந்த நீல வானம் கறை படிந்து விட்டது. சீக்கிரத்திலேயே அது கீழே விழுந்து நொறுங்கி விடும்.

நான் கேட்பது யாருடைய அழுகைக்குரல்கள் இவை? அவற்றை நிறுத்துங்கள். அவை என் இதயத்தில் சுத்தியல் அடிகளாக விழுகின்றன.

அதை நிறுத்து. அதை நிறுத்து. அதை நிறுத்து.

நான் ஒரு காத்துக் கொண்டிருக்கும் மடி. என்னுடைய கைகள் அதை ஏந்திக் கொள்வதற்காக நீள்கின்றன. என் உடலில் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் பால் கொதித்துக் கொண்டிருக்கிறது. என்னுடைய உருணட முலைகள் கோப்பைகளாக மாறி விட்டன. என்னிடம் அதைக் கொண்டு வாருங்கள். மெதுவாக என்னுடைய கரங்களில் அதைப் படுக்க வையுங்கள்.

இல்லை. என்னிடமிருந்து அதைப் பறிக்காதீர்கள்.என்னிடமிருந்து அதை எடுத்துச் செல்லாதீர்கள். கடவுளின் பெயரால் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

விரல்கள்..விரல்கள்.. அவர்கள் விரல்களை உயர்த்தட்டும். இனி எனக்குக் கவலையில்லை. இந்த உலகம் சிக்கலானது. என்னுடைய மண்பானை அதன் நடுவே உடைந்து சிதறட்டும்.

என் வாழ்வே மூழ்கி விடும். இருந்து விட்டுப் போகட்டும். என் சதையை என்னிடம் தாருங்கள். என்னுடைய ஆத்மாவை என்னிடமிருந்து பறிக்காதீர்கள். அது எவ்வளவு மதிப்பு மிக்கது என்று உங்களுக்குத் தெரியாது. அது என் வாழ்வில் என் உடல் இன்னொருவரை முழுமையாக்கிய தருணங்களில் விளைந்த உன்னதமான கனி. இது தான் என் முழுமையின் கணமா?

நீங்கள் நம்பவில்லையென்றால் பள்ளமாகி வெற்றிடம் நிறைந்த என்னுடைய அடிவயிற்றைக் கேளுங்கள் பால் நிறைந்த என்னுடைய முலைகளைக் கேளுங்கள். என் உடலின் ஒவ்வொரு துளையிலிருந்தும் எழுகிற தாலாட்டுகளைக் கேளுங்கள். மென்மையான ஊஞ்சலாக மாறிவிட்ட என் கரங்களைக் கேளுங்கள்.

குற்றம் சாட்டுகிற விரல்கள். உயரட்டும் அவை. நான் அவற்றைத் துண்டுகளாக வெட்டி எடுத்து என் காதில் வைத்து அடைத்துக் கொள்வேன். நான் ஊமையாகி விடுவேன். நான் செவிடாகி விடுவேன். நான் குருடாகி விடுவேன். ஆனால் இந்தச் சின்னஞ்சிறியது என்னுடைய பகுதியான அது என்னை அறியும். என் கரங்களால் அதைத் தடவித் தடவி நானும் அதைத் தெரிந்து கொள்வேன்.

நான் உங்களைக் கெஞ்சுகிறேன். என்னிடமிருந்து எடுத்துச் செல்லாதீர்கள்.

ததும்பி வழியும் என் பால் கோப்பைகளை கவிழ்த்து விடாதீர்கள். என் ரத்தத்தினால் நான் நெய்த பட்டுக்கூட்டை தியில் எரித்து விடாதீர்கள். என் கரங்களின் ஊஞ்சலை வெட்டாதீர்கள். அதன் அழுகையின் சங்கீதத்தை என் காதுகள் கேட்கவிடாதபடி செய்யாதீர்கள்.

என்னிடமிருந்து அதை எடுத்துச் செல்லாதீர்கள்.

லாகூர் ஜனவரி 21

சாலையோரமாக பிறந்த குழந்தையொன்றை போலீஸ் கண்டெடுத்தார்கள். அதன் வெற்றுடல் நனைந்த லினன் துணியினால் சுற்றப்பட்டிருந்தது. குளிரினால் அது விரைத்துச் சாக வேண்டும் என்ற நோக்கத்திலேயே அப்படிச் செய்யப் பட்டிருந்தது. ஆனாலும் அந்தக் குழந்தை உயிருடன் இருந்தது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதற்கு அழகான நீலநிறக்கண்கள் இருந்தன.

நன்றி – தி எண்ட் ஆப் கிங்டம் அண்டு அதர் ஸ்டோரிஸ்

நன்றி- அடவி இலக்கிய இதழ்

Monday 17 December 2012

என்றாலும் நான் எழுதுகிறேன் எனவே நான் இருக்கிறேன்..

 

உதயசங்கர்Uthayasankar

ஒருவர் எழுத்தாளராவது எப்படி நிகழ்கிறது என்று யாராவது துல்லியமாகச் சொல்லி விட முடியுமா என்று தெரியவில்லை. எந்தக் கணத்தில் மனதில் எழுத்தின் மீதான தீராதமோகம் அல்லது வெறி உருவாகி அலைக்கழிக்கத் துவங்குகிறது. எந்தக் கணத்தில் வாழ்க்கையை அதன் பரிபூர்ண அர்த்தத்தில் உள்வாங்கி மீண்டும் படைக்கத் தொடங்குகிறது. எந்தக் கணத்தில் கலையின் பலி பீடத்தில் தன்னையே அர்ப்பணிக்க மனம் துணிகிறது. எந்தக் கணத்தில் வாழ்வின் முழுஅர்த்தமே எழுத்து தான் என்று தன்னையே நம்பச்செய்கிறது. இப்படிச் சொல்லிக் கொண்டே போகமுடியும். ஆனால் ஒரு எழுத்தாளன் உருவான அந்தக் கணம் பிடிபடுமா என்று தெரியவில்லை. இப்படியெல்லாம் சொல்லுவதனால் எழுத்தாளன் அபூர்வமான பிறவி என்றோ அவனுடைய எழுத்து பிறவிக்கொடை என்றோ சொல்லுவதாக அர்த்தமில்லை. வாழ்வின் எத்தனையோ விசித்திரங்களில் ஒன்றாக எழுத்தாளனும் உருவாகிறான். எனக்குத் தெரிந்து எந்தக் குழந்தையும் தான் எழுத்தாளனாக வேண்டும் என்ற லட்சியவெறியுடன் விரும்பி எழுத்தாளனானதாகத் தெரியவில்லை. இல்லை பெற்றோர்கள் தங்கள் குழந்தை எழுத்தாளனாக வேண்டும் என்று விரும்புவதுமில்லை. எழுதுவதை பொழுதுபோக்கு வகையறாவில் தான் சமூகத்தின் பொதுப்புத்தி வைத்திருக்கிறது. இதை விடக்கொடுமையும் இருக்கிறது. நான் தற்போது குடியிருக்கும் பகுதிக்கு மகாகவி நகர் என்று பெயர் வைக்கும் வைபவம் நடந்தபோது அங்கிருந்த ஒருவர் அதென்ன தரித்திரம் பிடித்தவன் பெயரை வைக்கிறீங்க என்றார். ஆக எழுத்தாளன் என்பவன் அதாவது எழுத்தை மட்டும் நம்பி வாழ்க்கை நடத்துபவன் தரித்திரத்துக்கு வாக்கப்பட்டவன். அவனால் குடும்பத்துக்கு ஒரு பிரயோசனமுமில்லை. பொதுப்புத்தியில் எழுத்தாளர்களைப் பற்றிய இந்த அழகான ( ? ) சித்திரம் இருக்கிறது என்னும்போது யார் தான் நான் எழுத்தாளராகத் தான் ஆகப் போகிறேன் என்று பிடிவாதம் பிடிக்கப் போகிறார்கள். அப்புறம் எப்படி எழுத்தாளர்கள் உருவாகிறார்கள்?

கலையே போலச் செய்வது தான். ஏற்கனவே நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கிற, நிகழப்போகிற, யதார்த்தத்தை எழுத்தாளன் போலச் செய்கிறான். இதில் அவன் விரும்புகிற யதார்த்தத்தைத் தான் போலச் செய்கிறான் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். எழுத்தாளனின் உழைப்பு, அர்ப்பணிப்பு இவற்றைப் பொறுத்து சுயம்புவான யதார்த்தத்தைச் சிருஷ்டிப்பது போலவும் மாயாஜாலம் நடக்கும். சரி. ஏன் ஒருவன் போலச் செய்ய வேண்டும்? குழந்தைகள் போலச் செய்தலை தன் வளரிளம் பருவத்தில் இயற்கை உள்ளுணர்வால் செய்து பார்க்கின்றன. அதன் மூலம் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளவும், மற்றவர் கவனத்தை ஈர்க்கவும் செய்கின்றனர். அநேகமாக எழுத்தாளர்களும் அந்தப்படியே செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். முதலில் எழுத்தின் மூலம் மற்றவர் கவனத்தை ஈர்த்து, தன்னுடைய இருத்தலை, இருத்தலுக்கான அர்த்தத்தை உறுதிப்படுத்துகின்றனர். அதோடு யதார்த்தத்தை புரிந்து கொள்ளவும், அதைப் புரிந்து கொண்ட விதத்தில் தன் கலையின் மூலம் விளக்கவும் முயற்சிக்கின்றனர். அதனால் எப்போதும் வேறொரு உலகத்தில் வாழ்பவரைப் போல மிதந்து கொண்டிருப்பதால் நடைமுறை வாழ்க்கையில் சரியாகப் பொருந்தமுடியாமல் போகிறது. யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள எழுத்தாளன் தன் வாழ்நாளையே செலவழிக்கிறான். ஆனால் நடைமுறை வாழ்வில் தோற்றுப் போகிறான். இது இங்கே தமிழ் எழுத்தாளர்களின் நிலை. வெளிநாடுகளில் எழுத்தாளர்களுக்கு இருக்கும் மரியாதையும் செல்வாக்கும் நம்மைப் பொறாமைப் பட வைக்கிறது. ஏன் மலையாள இலக்கிய உலகில் கூட எழுத்தாளர்களைக் கொண்டாடுகிறார்கள். விஜயதசமி அன்று கேரளாவில் எழுத்தாளர்கள் வீட்டு முன்பு குழந்தைகளோடு பெற்றோர்கள் வரிசை காத்து நிற்பார்களாம். எழுத்தாளர்கள் குழந்தைகளுக்கு முதல் அட்சரம் எழுதச் சொல்லிக் கொடுக்க வேண்டி. அதற்குத் தட்சிணையும் உண்டு. எனக்கு இதைக் கேள்விப்பட்ட போது மலையாளஎழுத்தாளர்கள் மீது பொறாமையாய் இருந்தது. ஆனால் இங்கே எழுத்தாளனுக்கு இருக்கும் மரியாதையைக் கண்கொண்டு காணமுடியாது. இந்த அழகில் எழுத்தாளன் ஆகியே தீருவேன் என்று சிறுவயதிலேயே பிடிவாதம் பிடித்து யார் வரப்போகிறார்கள்? அப்படியே தான் நானும் எந்தப்பிடிவாதமும் பிடித்து எழுத்தாளனாகவில்லை.

. நான் எழுத்தாளன் தானா என்ற கேள்வி இப்போதும் அவ்வப்போது மனசில் அலையடித்துக் கொண்டேயிருக்கத் தான் செய்கிறது. எழுதுவதற்கான எந்த முகாந்திரமும் என் இளம்பருவத்தில் இருக்கவில்லை. என் குடும்பத்தில் யாரும் பெரிய படிப்பாளிகளோ, கலை, இலக்கிய ஆர்வலர்களோ இல்லை. மிகச் சாதாரணமான கீழ்மத்திய தரக்குடும்பத்தில் மிகுந்த கஷ்டத்துக்கும், கஷ்டத்துக்கும் நடுவில் ஊஞ்சலாடிக் கொண்டே தான் எங்கள் குடும்பம் இருந்தது. கரிசக்காட்டு மக்களின் வெக்கையையெல்லாம் தீப்பெட்டியாபீசுகள் குடித்தன. எல்லாவீடுகளிலும் ஏதோ ஒரு வகையில் தீப்பெட்டி சம்பந்தப்பட்ட ஒரு வேலை நடந்து கொண்டிருந்தது. அதன் மூலம் கிடைத்த சொற்ப வருமானம் சொர்க்கம் கிடைத்த மாதிரி மக்களுக்குத் திருப்தியளித்தது. நானும் என் தம்பிகளும் தீப்பெட்டிக்கட்டைகளைச் சுமந்து கொண்டு தீப்பெட்டியாபீசு போகவும், ( பழைய )தீப்பெட்டியில் உள்ள மேல்பெட்டி, அடிப்பெட்டி, ஒட்டிக் கொண்டு போய் அளந்து விட்டு வரவும் இருந்தோம். எங்கள் விளையாட்டு நேரங்கள் மிகவும் குறைவு. தெருக்காட்டுப் புழுதியில் பம்பரக்குத்து, செதுக்குமுத்து, பாண்டி, கபடி, சிகரெட் அட்டை சீட்டு விளையாட்டு, கோலிக்குண்டு, விளையாட்டுகள் அம்மாவின் கூப்பாடுகளுக்கிடையில் நடக்கும். பல நேரங்களில் வீட்டில் அடி உதையும் விழும். எல்லாவிளையாட்டுகளிலும் நான் உப்புக்குச் சப்பாணி மாதிரி தான். அதனால் பசங்களோடு விளையாடுவதைக் காட்டிலும் பொம்பிளைப் பிள்ளைகளோடு உட்கார்ந்து கட்டு ஒட்டிக் கொண்டோ, கட்டை அடுக்கிக் கொண்டோ சினிமா கதைகள் பேசிக் கொண்டிருப்பதில் அலாதி விருப்பமிருந்தது. அப்படியே நான் கேட்ட, கேட்டதிலிருந்து உருவாக்கிய ராஜாராணி கதைகள், மந்திரவாதிக் கதைகள், எம்.ஜி.ஆர், நம்பியார் கதைகள், பேய்,பிசாசுக் கதைகள், என்று அளந்து விட்டுக் கொண்டிருந்தேன்.

பள்ளிக்கூடத்தில் குட்டைக்கத்தரிக்காய் என்ற பட்டப்பெயர், வகுப்பில் உதயசங்கரானதால் கடைசி வரிசை, வீட்டில் மூத்த பையனானதால் வீட்டு வேலைகள் அனைத்திலும் அம்மாவுக்கு ஒத்தாசை செய்வது, ஏனோ என்னுடைய இளமைப் பருவத்தை நினைக்கும் போது மிகுந்த மனஅழுத்தத்துடன் கழிந்த மாதிரியே தான் தோன்றுகிறது. அதனால் எனக்குள் ஒரு தனி உலகத்தைச் சிருஷ்டித்துக் கொண்டேன். அதில் வெகுநேரம் தனியே இருக்கவும் எனக்குள்ளே பேசிக்கொண்டிருக்கவும் செய்தேன். அதில் கொஞ்சம் சுதந்திரமாக உணர்ந்தேன். பள்ளி இறுதி வகுப்புவரை அம்மாபிள்ளையாகவே இருந்தேன். அம்மாவை எப்போதும் தேடிக் கொண்டேயிருந்தேன். இதையெல்லாம் வாசிக்கும் நீங்கள் என்னை மனநலம் குன்றியவனாக நினைத்தால் நான் எதுவும் செய்வதற்கில்லை. எனக்கும் எல்லோரையும் போல தன்முனைப்புடன் விளையாட்டு, படிப்பு, குறும்பு, சுட்டித்தனம், எல்லாம் செய்ய ஆசை தான். ஆனால் சின்னவயதிலிருந்தே எனக்குள் எப்படியோ நுழைந்து விட்ட தாழ்வுமனப்பான்மையும், தயக்கமும் என்னை கண்ணுக்குத் தெரியாத மந்திரக்கயிற்றினால் இன்னமும் கட்டிப் போட்டிருக்கிறது.

எங்கள் வீடு ஒரு விசித்திரமான அமைப்பில் இருந்தது மூன்று பக்கங்களிலும் சாக்கடை ஓடும் சந்துகளால் சூழப்பட்டிருந்தது. ஒரு புறம் இன்னொரு வீட்டின் புறவாசல் இருந்தது. ஒரு பக்கச் சந்தில் ஒரு கோட்டைச் சுவரும் அந்தக் கோட்டைச் சுவருக்கு அப்பால் என்னுடைய அற்புத உலகமும் இருந்தது. அந்தக் கோட்டைச் சுவர் இருளப்பசாமியின் கோவில் இருந்த காட்டைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது. அடர்ந்த செடிகளும் புதர்களும் நிறைந்திருந்தது. எத்தனையோ நாட்களில் அந்த செடிகளுக்குள் ஏதோ அமேசான் காட்டுக்குள் தேடியலைகிற மாதிரி எதையோ தேடிக் கொண்டு திரிந்திருக்கிறேன். ஏன் அப்படி செய்தேன் என்று இப்போது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அப்படித் தேடித் தேடி சட்டை பொத்தான்கள், சோடா பாட்டில் மூடிகள், குட்டிக்குரா பவுடர் டப்பா, மண் மூடி பாசம் பிடித்திருக்கும் ஒரு பைசா, எப்போதோ தொலைந்து போன கோலிக்குண்டு, ஆக்கர் குத்தில் உடைந்து போன பம்பரம், புழுக்கைப் பென்சில், சிலேட்டுக்குச்சிகள்,ஊக்குகள், பழைய ஆணிகள் என்று பலவிதமான பொருட்களைக் கண்டெடுத்திருக்கிறேன். ஒவ்வொரு முறை கோலிக்குண்டோ, பென்சிலோ, பொத்தானோ கிடைக்கும் போது புதையல் கிடைத்த மாதிரி சந்தோஷம் வரும் அதைப் பத்திரமாக ஒரு பழைய ஜாமிட்ரி பாக்ஸில் போட்டு என்னுடைய நோட்டுப் புத்தகங்களுக்கென்று நான் அழுது அடம் பிடித்து வாங்கிய கறுத்த சொருகு பலகை பூட்டிய சிறுகருங்காலிப் பெட்டியில் பூட்டி வைத்திருந்தேன்.இப்போதும்கூட போகும்போதும் வரும்போதும் எதையாவது தேடிக் கொண்டே அலைகின்றன என் கண்கள்.

என்னுடைய அம்மா குமுதம், கல்கண்டு வாசகியாக இருந்தாள். பள்ளிக்கூடப் பாடப்புத்தகத்தைத் தவிர நான் வாசிக்க நேர்ந்த புத்தகங்கள் முதலில் இது தான். ஒவ்வொரு சனிக்கிழமை ( என்று தான் நினைக்கிறேன் ) யும் கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் புத்தக ஸ்டால் வைத்திருந்த ஏகாந்தலிங்கம் கடைக்கு ஓடுவேன். அவர் கட்டைப் பிரிக்கும் போதே புத்தகங்களை வாங்கிக் கொண்டு திரும்பி வரும்போது கல்கண்டில் வெளிவந்து கொண்டிருந்த தமிழ்வாணனின் துப்பறியும் சங்கர்லால் கதையை வாசித்து முடித்து விடுவேன். அப்புறம் அம்புலி மாமா, அணில், முத்து காமிக்ஸ், என்று நண்பர்களிடம் இரவல் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். இது ஒரு கட்டத்தில் என் அம்மாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தவே என்னுடைய வகுப்பாசிரியரிடம் வந்து புகார் தெரிவித்தாள். என் கற்பனையின் வேகம் கூடிக் கொண்டே போனது. அதனுடைய விளைவாக எனக்கு உவப்பான பையன்களை சேர்த்துக் கொண்டு தந்தையும் மகனும் என்ற சமூக நாடகம் எழுதி எங்கள் தெருவில் வீடு வீடாக துட்டு வசூல் செய்து ரோஸ்பவுடர், பஞ்சுமீசை, தாடி, கலைஞர்கள் குடிப்பதற்கு சாக்ரீன் கலந்த குளிர்பானம், என்று ஏகதடபுடலாய் அரங்கேற்றினோம். என் உயரத்தை விட இரண்டு பங்கு உயரமான ராஜு தான் மகன் நான் தந்தை, பஞ்சு மீசை, தாடியெல்லாம் ஒட்டி அவிழ்ந்து அவிழந்து விழுகிற வேட்டியை ஒரு கையில் பிடித்துக் கொண்டே கெட்ட வழியில் போகிற மகனைத் திருத்துவேன். தெருவே அல்லோகலப்பட்டது.

பள்ளியில் நடத்திய எந்தப் போட்டியிலும் ஆறுதல் பரிசு கூட வாங்கியதில்லை. ஆனால் எல்லாப்போட்டிகளிலும் கலந்து கொள்வேன். பேச்சுப்போட்டியில் முதல் இரண்டு வரிகளுக்குப் பின் என் வாய் பேசாது. என்ன முயற்சி செய்தும் ஒரு வார்த்தை வராது. பாட்டுப்போட்டியில் என்னுடைய ஃபேவரைட் சாங்கான தூங்காதே தம்பி தூங்காதே தம்பி என்ற நாடோடி மன்னன் படப்பாடலைப் பாட ஆரம்பிப்பேன். அவ்வளவு தான். ஆயிரம் தடவை வீட்டிலிருக்கும் போது பாடிப் பாடி அக்கம்பக்கம் வீடுகளில் இருந்தவர்களை தூங்கவிடாமல் பண்ணிய அந்தப் பாடலின் மூன்றாவது வரி என்னைக் கை விட்டு எங்கோ நிரந்தரமாய் மறதியெனும் புதைசேற்றில் மறைந்து கொள்ளும். அப்படியே விக்கித்துப் போய் நின்று கொண்டிருக்கும் என்னை போட்டி நடத்தும் நடுவர்கள் தான் கரை சேர்ப்பார்கள். அவமானத்தால் கூனிப் போய் இன்னும் சின்ன உருவமாகி விடுவேன். கட்டுரைப் போட்டிகளில் என் சொந்த சரக்குகளை எழுதிக் கொட்டுவேன். அதற்கெல்லாமா பரிசு கொடுப்பார்கள்? எனக்கு மூன்று வருடசீனியராக இருந்த இளங்கோ( கோணங்கி ) பேச்சுப்போட்டியில் திராவிடக்கழகப் பேச்சாளர்களைப் போல சண்டமாருதமாய் பொழிவான். அடுக்குமொழியில் கண்களைச் சிமிட்டிச் சிமிட்டி அவன் பேசிய காட்சி இன்னமும் கண்களில் நிழலாடுகிறது. அதே போல நாறும்பூநாதனும். எல்லாப்போட்டிகளிலும் ஏதாவது ஒரு பரிசு வாங்காமல் இருக்கமாட்டான். நான் நாறும்பூநாதனோடு நட்பு பாராட்டினேன். அவனுக்கு ஏற்கனவே ஒரு நண்பர் குழாம் இருந்தது. அவர்கள் அவனைப் போற்றி வழிபட்டார்கள். அந்த குழாமுக்குள் நுழைவது அத்தனை சுலபமாயில்லை. நாறும்பூவின் மீது உரிமை கொண்டாடுவதில் சாரதியும், முத்துவும் போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள். அதனால் எனக்கு சற்று சிரமமாகவே இருந்தது. ஆனால் தொடர்ந்த என் முயற்சிகளுக்கு விரைவில் பலன் கிடைத்தது.

நாறும்பூநாதன் மூலமாக என் உலகம் விரிந்தது. அதோடு அந்தப் பருவத்துக்கேயுரிய பொறாமையும் வந்ததால் நானும் கண்டதை வாசிக்கவும், நூலகத்துக்குச் செல்லவும், நாறும்பூவிடம் இருந்தே புத்தகங்கள் வாங்கி வாசிக்கவும், அதன் வழியாக எனக்கென சொந்தக் கருத்துகளை உருவாக்கவும், அதை நண்பர்கள் மத்தியில் பேசவும் தலைப்பட்டேன். சாரதியும் முத்துவும் நாறும்பூதாசர்களாக இருந்ததால் அவன் என்ன சொன்னாலும் தலையாட்டினார்கள். நான் விவாதிக்கத் தொடங்கினேன். பல சமயங்களில் அது விதண்டாவாதமாகவும் இருந்தது. பள்ளியிறுதி வகுப்பு முடிந்து கல்லூரியில் புகுமுகவகுப்பில் நாங்கள் வேறு வேறு பிரிவுகளில் சேர்ந்தாலும் எங்கள் நட்பில் எந்தக் குறையுமில்லை. அங்கே தான் கவிதைகள் வாசிக்க ஆரம்பித்தேன். அப்போது கல்லூரியின் நூலகத்தில் ஏராளமான கவிதைத் தொகுப்புகள் இருந்தன. அதையும் கிரிக்கெட் சம்பந்தமான புத்தகங்களையும் சேர்த்தே வாசித்தேன். கவிதைப் புத்தகங்களை வாசித்ததால் கவிதை எழுத ஆரம்பித்தேன். முதலாமாண்டு மாணவர்களை வரவேற்றும், மூன்றாமாண்டு மாணவர்களை வழியனுப்பியும் கவிச்சரங்களைத் தொடுத்தேன். அதை யாராவது பொருட்படுத்தினார்களா என்று தெரியவில்லை. நானும் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.முதன்முதலாக கல்லூரி ஆண்டு மலரில் கல்லூரியிலிருந்து சென்று வந்த சுற்றுலாவைப் பற்றி ஒரு கட்டுரை எழுதிக் கொடுக்கச் சொல்லி தமிழ்ப்பேராசிரியர் அரங்கராசன் கேட்டார். அது வெளிவந்தது. அடுத்த ஆண்டு தமிழ்ப்பேராசிரியர் விஜயராகவன் ஒரு கதை எழுதிக் கொடுக்கச் சொன்னார். அது தான் பிரசுரமான என் முதல் கதை. அந்த உற்சாகத்தில் கதைப்புத்தகங்களாக வாசிக்க ஆரம்பித்தேன். கையெழுத்து பத்திரிகை நடத்தினோம். கோவில்பட்டி இலக்கியவட்டமும் அறிமுகமானது. இடதுசாரிகள் எங்களைத் தூண்டில் போட்டு பிடித்தனர். இயல்பாகவே நாங்கள் சென்று சேர்ந்திருக்க வேண்டிய இடமாகவும் இடது சாரி இயக்கம் இருந்தது.

அப்போதிருந்த கனவுகளை இப்போது சொல்லி மாளாது. எழுத்தாளன் என்ற கர்வம் தலைக்குப் பின்னால் ஒளிவட்டமாய் சுற்றிக் கொண்டிருக்க தலைகால் தெரியாமல் தான் அலைந்தேன். என்னைத் தின்று கொண்டிருந்த தாழ்வுமனப்பான்மை இந்த ஒளிவட்டத்தின் வெக்கையில் ஓடி ஒளிந்து கொண்டது. நானும் ஒரு ஆள் தான் என்று நம்பிக்கை வளர்ந்தது. எழுத்தாளர்களைத் தவிர இந்த உலகத்தில் யாரும் இல்லாதது போல நினைப்பு. கோவில்பட்டி ஊரும் அப்படித் தான் இருந்தது. தெருவுக்குத் தெரு எழுத்தாளர்கள் என்றால் ஊர் தாங்குமா? ஆனால் கோவில்பட்டி தாங்கியது. ஊரை உண்டு இல்லையென்று பண்ணினோம். எத்தனையோ பரிசோதனை முயற்சிகளையும் செய்து பார்த்தோம். கார்ட்டூன் கண்காட்சி, பிகாசோ ஓவியக்கண்காட்சி, புகைப்படக்கண்காட்சி, யுத்தஎதிர்ப்பு கண்காட்சி, உலகசமாதானக்கண்காட்சி, என்று கண்காட்சிகள் ஒரு பக்கம், தர்சனா, சிருஷ்டி, என்று வீதி நாடகக்குழுக்கள், ஊர் முழுவதும் உள்ள மின்கம்பங்களில் பாரதி, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, மார்க்ஸ், லெனின், மாவோ, கிராம்ஷி, சே குவாரா, என்று உலகச்சிந்தனையாளர்களின் சிந்தனைகளை எழுதி தொங்கவிட்டிருந்தோம். த்வனி என்று ஒரு பத்திரிகை ஒரே ஒரு இதழ் மட்டும் கொண்டு வந்தோம். நாங்கள் செய்யாத காரியங்கள் இல்லையென்று தான் நினைக்கிறேன். அதோடு 1980 களில் இதெல்லாம் பெரிய விஷயம் தான். எவ்வளவோ படித்தோம். எவ்வளவோ எழுதினோம். உலகத்தை மாற்றும் மந்திரக்கோல் எழுத்தாளர் கைவசமே இருக்கிறது என்ற இறுமாப்பு இருந்தது. அது ஒரு காலம்.

ஏன் இப்படி விலாவாரியாக இருளப்பசாமி கோவில் புதர்க்காட்டுக்குள் எதையோ தேடி அலைந்த மாதிரி சொல்லிக் கொண்டு போகிறேன். அப்படியாவது நானும் எழுத்தாளன் என்று சொல்லிவிடுவதற்கான தடயங்கள் கிடைக்கிறதா என்று பார்ப்பதற்காகத் தான். கோவில்பட்டியில் இருந்தகாலம் வரை இருந்த எழுத்தாளன் என்ற கர்வம் எனக்கு வேலை கிடைத்து நான் வெளியுலகத்தை எதிர்கொள்ளத் தொடங்கியதும் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்து கொண்டது.. இரக்கமேயில்லாமல் என்னுடைய பழைய தயக்கமும் தாழ்வு மனப்பான்மையும் மீண்டும் என்னை வதைக்கத் தொடங்கி விட்டது. என்னுடைய புத்தகங்கள் வெளிவந்தன, வெளி வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த சந்தோஷமெல்லாம் ஓரிரவு மதுபோதை மாதிரி கலைந்து போய் விடுகிறது. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.

நான் என் சக எழுத்தாளர்களைப் பொறாமையுடன் படித்தேன். கொஞ்சகாலம் எழுதாமலும் இருந்தேன். நான் எழுத்தாளன் இல்லையோ என்ற சந்தேகம் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. என் கண்முன்னால் தன் வாழ்நாள் முழுவதும் எழுதி எழுதியேக் காணாமல் போய் விட்ட எழுத்தாளர்படையே தெரிந்தது. அவர்களைப் பற்றி எந்த ஒரு சிறு இலக்கியக்குறிப்பும் கிடையாது. அவர்கள் ஆவிகளாக என் கனவில் வந்து என்னைப் பயமுறுத்தினார்களென்றால் நேரில் பல இலக்கிய ஆர்வலர்கள், புது எழுத்தாளர்கள், அமைப்பிலுள்ள தோழர்கள் இன்றும்கூட

1. நீங்க கதையெல்லாம் எழுதுவீங்களா?

2. நீங்க கதை எழுதியிருக்கிறீங்களா?

3. நீங்க புக் எதுவும் போட்டிருக்கீங்களா?

4. அப்படியொண்ணும் பெரிசா எழுதலியே… நீங்க

5. யாரு புதுசா இருக்கு.. உதயசங்கர்னு போட்டிருக்கே யாருப்பா?

கேட்டுப் பயமுறுத்துகிறார்கள். அதனால் எழுத்தாளராவதற்கு எழுதுவதைத் தவிர வேறு நிறையத் தகுதிகள் வேண்டும் என்று நான் புரிந்து கொண்டிருக்கிறேன். குழு சேர்க்க வேண்டும். இலக்கியஅரசியல் செய்ய வேண்டும். இலக்கிய மையம் ஒன்று துவங்கி எல்லாஎழுத்தாளர்களையும் அழைத்து கூட்டங்கள் நடத்த வேண்டும். அங்கே நடக்கும் எல்லாச்சண்டைகளையும் பஞ்சாயத்து பண்ண வேண்டும். எப்படியும் அந்தப் பஞ்சாயத்தில் உங்களுக்கென்று ஒரு கோஷ்டி சேர்ந்து விடும் அல்லது நீங்கள் ஒரு கோஷ்டியில் சேர்ந்து விடுவீர்கள். பின்பு என்ன எல்லோர் கவனத்தை ஈர்க்க கையெறி குண்டுகளை வீச வேண்டும் தமிழில் நாவல் இல்லை, சிறுகதை இல்லை, கவிதை இல்லை, விமர்சனம் இல்லை, தமிழிலக்கியவாதிகள் சினிக்குகள் அல்லது ஹிப்போகிரைட்டுகள், தமிழில் எதுவுமே இல்லை .இப்படி இப்படி.. இப்படி.. குறைந்தது ஒரு வெங்காயவெடியாவது வீச வேண்டும். புழுதியாவது கிளம்புமே. ஏற்கனவே பிரபலமாக இருப்பவர்களுடன் எப்படியாவது நட்பு பாராட்டி ஒட்டிக் கொள்ள வேண்டும். அல்லது அவர்களுடைய அடிப்பொடியாக ஆக வேண்டும். அவர்கள் உங்கள் பெயரை மறக்காமலிருக்க தினமும் ஒரு முறை யாவது தொலைபேசியில் வாழ்த்த வேண்டும். அல்லது அவருக்குப் பிடிக்காதவர்களைப் பற்றிக் கோள் மூட்ட வேண்டும். இந்தச் சிறிய முதலீட்டினால் பல பெரிய லாபங்கள் கிடைக்கும். அவர்கள் உங்கள் பெயரை எல்லாப்பொது இடங்களிலும் உச்சரிப்பார்கள். பலசமயம் பரிசுகளுக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். இல்லையென்றால் ஒரு பத்திரிகை அப்படியே கொசுறாக ஒரு பதிப்பகம் நடத்த வேண்டும். இல்லையென்றால் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டும். ஊர், உலகத்திலுள்ள எல்லா எழுத்தாளர்களையும் வரவேற்று ரூம் போட்டு பகலிரவில் விருந்தோம்பல் நடத்த வேண்டும். அதையும் அடிக்கடி செய்ய வேண்டும். அவர்களும் நன்றிக்கடனாக உங்கள் பெயரை தங்களுடைய குழுவிலோ, பட்டியலிலோ, சேர்த்துக் கொள்வார்கள்.

முழு இலக்கிய உலகமும் இப்படித்தான் இயங்குகிறதென்றோ, இல்லை பொச்சரிப்பினால் இப்படிச் சொல்கிறேனென்றோ நினைத்து விட வேண்டாம். மேலே சொன்ன எல்லாவகையிலும் பகுதியளவுக்காவது இயங்கிக் கொண்டிருக்கிறது இலக்கிய உலகம் என்று இதில் புழங்கிக் கொண்டிருக்கிற எழுத்தாளர்களுக்குத் தெரியும் என்று நம்புகிறேன். இதெல்லாம் இல்லாம என்னப்பா இலக்கிய உலகம் ?. உப்பு உரப்பு இல்லாத பத்தியச்சாப்பாடு மாதிரியா இருக்கமுடியும் என்று சொல்லலாம். அதுவும் உண்மை தான். ஆனால் இவையெல்லாம் ஒருவரின் எழுத்தாளத்தகுதியைத் தீர்மானிக்கிற விஷயங்களாக மாறுகிறதே என்ற ஆதங்கம் தான். அதெல்லாம் காலம் பாத்துக்கிடும்பா என்று ஒரு அசரீரி கேட்கிறது. அரூபமான காலத்தின் ஊடே ரூபமான மனிதர்கள் தானே இயங்குகிறார்களில்லையா? இயல்பிலேயே மேலே குறிப்பிட்ட எந்தத் தகுதிகளும் வசதிகளும் இல்லாத என்னைப் போல இன்னும் பல எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். தயக்கமிக்க எங்களால் இந்த ரேஸில் ஒரு போதும் கலந்து கொள்ளவே முடியாது. என்ற குறிப்புடனும், என்றாலும் நான் எழுதுகிறேன், எனவே நான் இருக்கிறேன் என்ற பஞ்ச் டயலாக்குடன் முடிக்கலாம் என்று நினைக்கிறேன். இதையெல்லாம் வாசித்து முடிக்கும் சிலருக்கேனும் ” யாருப்பா இந்த உதயசங்கர்? என்ன எழுதியிருக்காரு?” என்ற கேள்விகள் வரவும் கூடும் என்ற ஆச்சரியமின்மையோடு இங்கே நிறுத்திக் கொள்கிறேன்.

நன்றி- நற்றிணை காலாண்டிதழ்SketchGuru_20121121212036

Saturday 8 December 2012

பிலோமியின் காதலர்கள்

உதயசங்கர்

VANNANILAVAN-7

கல்லூரிக்காலத்திலேயே எல்லாப்பையன்களையும் போல காதலைப் பற்றிப் பேச ஆரம்பித்து விட்டோம். பெண்கள் பார்க்காதபோது அவர்களை உற்றுப் பார்ப்பது, அவர்கள் பார்த்து விட்டால் உடனே பராக்கு பார்ப்பது, அதுவரை வராத விதர்ப்பமான எண்ணங்கள் பெண்களின் உடலைப் பார்க்கும்போது தோன்றியது. அப்போது குமுதம் பத்திரிகையில் ஜெயராஜின் ஓவியம் பாப்புலர். அந்தப் படங்களை அப்படியே நோட்டில் வரைவான் நாறும்பூநாதன். அவன் வரைந்த படத்தைப் பார்த்து சாரதியும் முத்துச்சாமியும் கூட வரைந்து பார்ப்பார்கள். எட்டரை மணிச் சினிமாக்களுக்கு அவர்கள் சேர்ந்து போவார்கள். எனக்கு இதிலெல்லாம் ஆர்வமில்லாதது போலக் காட்டிக் கொள்வேன். ஆனால் ரகசியமாய் பத்திரிகையில் வெளிவரும் நடிகைகளின் புகைப்படங்களைச் சேகரித்து வைத்திருந்தேன். நாங்கள் சந்திக்கும்போது இப்போது வெளிப்படையாகவே காதலைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம். எல்லோரும் காதலித்துத் தான் திருமணம் செய்வது என்று உறுதியெடுத்துக் கொண்டோம். ( ஆனால் அப்படி காதல் திருமணம் யாருக்கும் நடக்கவில்லை ). மணிக்கணக்காக எல்லாஇளைஞர்களையும் போல உன்னதமான காதலைப் பற்றிப் பேசித் தீர்த்தோம்.அவசர அவசரமாக எங்களுக்கு ஒரு காதலை வரவழைத்துக் கொண்டோம். ஒரு காதலியை வரித்துக் கொண்டோம்.

பொதுவாகவே நிறையப் பேசினோம். நிறைய விஷயங்களைப் பற்றிப் பேசினோம். அதுவே எங்களை இலக்கியத்தின் வழி மடைமாற்றியது என்று நினைக்கிறேன். கையெழுத்துப் பத்திரிகை வழியே புதிய பிரம்மாண்டமான அற்புதங்கள் நிறைந்த புத்தக உலகத்திற்குள் நுழைந்து விட்டோம். அந்த உலகத்துக்குள் என்னைத் தொலைத்து விடவே நான் ஆசைப்பட்டேன். என் இயல்புக்கு மிகவும் பொருத்தமான இடமாக இருந்தது. ஒவ்வொரு புத்தகத்தின் கதை உலகத்துக்குள்ளும் ஒன்றிரண்டு நாட்கள் வாழ்ந்து வந்தேன். அந்தக் கதாபாத்திரங்களோடு நான் புத்தகத்துக்குள் அலைந்து திரிந்தேன். அவர்கள் சிரிக்கும்போது சிரித்தேன். அழும்போது அழுதேன். அதில் கொலைச்செயல் நடக்கும் போது என்னைக் கொலை செய்வதாக நினைத்தேன். துரோகமிழைக்கப்படும் போது எனக்குத் துரோமிழைப்பதாக நம்பினேன். காதலிக்கும்போது நான் காதலிக்கப்படுவதாக நினைத்தேன்.

பெரும்பாலான இரவுகள் கொடுங்கனவுகள் என்னைச் சூழ்ந்திருக்க திடுக்கிட்டுக் கண்விழித்திருக்கிறேன். ஏதோ இனம் புரியாத தனிமையும் திடீர் திடீரென அநாதரவான ஒரு மனநிலையும் வந்து விடும். எப்போது வரும்? எப்படி வரும்? என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் ஆறுதல் வேண்டியிருந்தது. ஒண்ணுமில்ல..ஒண்ணுமில்ல என்று சொல்லும் ஆறுதல்.

நண்பர்களிடம் பேசிக் கொண்டிருப்பதில், புத்தகங்களை வாசிப்பதில் எனக்கு அந்த ஆறுதல் கிடைத்தது. அதிலும் சில புத்தகங்கள் நம்மை வேறு உலகத்திற்கே கொண்டு சென்றன. நம் அந்தரங்க உணர்ச்சிகளைத் தெரிந்து கொண்டதைப் போல ஆறுதல் அளித்தன. நம் தலைகோதி மடிசாய்த்து வருடிக் கொடுத்தன. அந்தப் புத்தகங்கள் வாசிப்பவனின் மீது அன்பு செலுத்தின. பேரன்பின் ஒரு துளியைச் சுவைக்கும் போது முகத்தில் தோன்றுமே ஒரு பரவசம் அந்தப் பரவசத்தைக் கண்டு தாய்மையின் பூரிப்போடு அமைதியாய் நம்மைப் பார்த்துக் கொண்டிருந்தன. அப்படிப்பட்ட புத்தகங்களை வாசித்து முடித்தபின்பு மனதில் ஒரு அமைதி தோன்றும். புறவுலகின் எந்த நிகழ்வுகளும் பாதிக்கமுடியாத ஒரு அமைதி. அந்த அமைதியின் கீழ் நீர்மையாய் மனம் ததும்பிக் கொண்டிருக்கும். பற்றியும் பற்றற்றும் இருக்கும் ஒரு விழிப்பு நிலை. பார்க்கும் மனிதர்களின்மீது, பொருட்களின்மீது அன்பு மீதூறும் இன்பநிலை.

நாங்கள் இவான் துர்கனேவின் மூன்று காதல் கதைகள், செகாவின் நாய்க்காரச்சீமாட்டி, தால்ஸ்தோயின் அன்னாகரினினா, சிங்கிஸ் ஐத்மாத்தவின் ஜமீலா, வாசித்தோம். தி.ஜானகிராமனின் மோகமுள், வாசித்தோம். வண்ணநிலவனின் கடல் புரத்தில் வாசித்தோம். ஏற்கனவே வண்ணநிலவனின் எஸ்தரும், பாம்பும் பிடாரனும், எங்கள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டன. கடல் புரத்தில் எங்களுடைய அப்போதைய காதல்பொங்கும் மனநிலையில் எங்களுடைய வேதப்புத்தகமாக மாறியிருந்தது. அதைப் படித்த பிறகு அதைப்பற்றியும், வண்ணநிலவனைப் பற்றியும் பேசாத நாட்களே கிடையாது. பிலோமி எங்கள் பிரியத்துக்குரியவளாகி விட்டாள். பிலோமி மாதிரி ஒரு பெண் எங்களைக் காதலிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். கருத்த, சிறிய, உதடுகளையுடைய மிகக் கருப்பான அந்தப் பறைச்சி எங்கள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டாள். கடல்புரத்தில் நாவலில் வரும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும், அலசி ஆராய்ந்தோம். அந்த நாவலைப் படித்த ஒரு மாதத்திற்கு எந்த டாப்பிக்கைப் பற்றிப் பேசினாலும் அது கடல்புரத்தில் நாவலிலும், பிலோமியிலும் வந்து முடிந்தது. மனிதர்களிடம் உள்ள அன்பு என்ற வஸ்துவின் மூலம் இந்த வாழ்க்கையை, சக மனிதர்களை, துரோகத்தை, வஞ்சத்தை, பழியுணர்ச்சியை, பேராசையை, பகையை, வெற்றி கொள்ள முனையும் முயற்சியே இந்த நாவல். எல்லோருமே நல்லவர்கள் தான். எவ்வளவு கொடிய மனிதனிடமும் அன்பு எனும் ஊற்று சுரந்து கொண்டுதானிருக்கும். அவன் தன் மீது மட்டுமோ, தன் குடும்பத்தார் மீது மட்டுமோ, தனக்கு வேண்டியவர்கள் மீது மட்டுமோ அன்பு செலுத்துகிறார்கள். அது பிரதிபலன் எதிர்பார்த்து செலுத்துகிற அன்பு. அன்பான ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் நீயும் இதைப் போல செய்யவேண்டும் என்று கண்டிஷனோடு வருகிற அன்பு. உலகத்தில் உள்ள எல்லோரும் அன்பின் பிரம்மாண்டத்தை உணர்ந்தவர்களில்லை. வாழ்வில் ஏதோ ஒரு கணத்தில் பரிசுத்தமான அன்பின் தரிசனத்தை உணர்கிறார்கள். அந்த அன்பின் ஒளியை யாராலும் தாங்கமுடிவதில்லை. அது எல்லாவற்றையும் கொடுப்பது. எதையும் எதிர்பாராமல் தன் உடல்,பொருள், அனைத்தையும் கொடுப்பது. தன்னை, தன் குடும்பத்தை, தன் உற்றாரை, அல்ல இந்த உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் தன் கருணைபொங்கும் ஒளியின் அரவணைப்பால் அணைத்துக் கொள்வது. அதற்கு ஒரு மகத்தான மனது வேண்டியதிருக்கிறது. அந்த மகத்துவத்தின் ஒரு துளியை பிலோமி தன் வாழ்வில் தரிசித்து விட்டாள் என்று தோன்றியது.

அதனால் தான் தன்னைப் பயன்படுத்திக் கொண்ட காதலன் சாமிதாஸின் மீதோ, தன்னை எப்போதும் கண்டித்துக்கொண்டேயிருக்கும் அம்மா மரியம்மை மீதோ, தன் வல்லம் தவிர வேறு எதைப்பற்றியும் கவலைப்படாத அப்பா குருசு மிக்கேல் மீதோ, பேராசை கொண்ட தன் அண்ணன் செபஸ்தி மீதோ, தன் அம்மாவின் சிநேகிதர் வாத்தி மீதோ, தன்னைக் கொத்திக் கொண்டு போகத்துடிக்கும் ஐசக் மீதோ, வல்லத்துக்குப் பணம் தராமல் ஏமாற்றிய சிலுவை மீதோ, யார் மீதும் அவளுக்குக் கோபம் வருவதில்லை. அவளுக்கு அம்மாவின் சிநேகிதராக இருந்து இப்போது அவளுக்கும் சிநேகிதராக மாறிவிட்ட வாத்தி போதும், அவளுடைய சிநேகிதி ரஞ்சி போதும். அவள் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தாலே எல்லாம் சொஸ்தமாகி விடும். இந்த உலகமே வேறொன்றாக மாறி விடும். உன்னதமான அன்பின் கரங்களால் இந்த உலகை அப்படியே ஆவிச் சேர்த்து அணைக்கத் தோன்றும். பாவம் மனிதர்கள்!

பேரன்பின் ஒளி எங்கும் எப்போதும் இருக்கிறது. அதை உணராத மனிதர்கள் தான் பகை கொள்கிறார்கள், வஞ்சிக்கிறார்கள், கொலை செய்கிறார்கள், பேராசைப் படுகிறார்கள், பழியுணர்ச்சியால் அலைக்கழிக்கப்படுகிறார்கள். கடல்புரத்தில் நாவல் படித்தவுடன் எங்களுக்கு இந்த உலகமே மென்மையானதாக மாறிவிட்டது. தொட்டால் கூட நொந்து விடுமோ என்று பயந்தோம். மழை பெய்து முடித்த மறுநாளில் எல்லாம் புத்தம்புதிதாய் பளிச்சென்று தெரியுமே அப்படித் தெரிந்தது இந்த உலகம். வண்ணநிலவன் நாவலுக்கான என்னுரையில் அன்புவழி மாதிரி ஒரு நாவலை தன் வாழ்நாளில் எழுதிவிட வேண்டும் என்று ஆசைப்படுவதாக எழுதியிருப்பார். நாங்கள் இந்த நாவலைப் படித்து முடித்தவுடன் கடல்புரத்தில் மாதிரி ஒரு நாவலை எழுதிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆசைப்பட்டுக் கொண்டேயிருக்கிறோம். இத்தகையதொரு மகத்தான நாவலை எழுதிய படைப்பாளியைச் சந்தித்து அளாவளாவ ஆசைப்பட்டோம். அவருடைய கைகளைத் தொட்டுக் கும்பிட விரும்பினோம். ஆனால் அப்போது வண்ணநிலவன் சென்னையில் துக்ளக் பத்திரிகையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் எங்களுடைய அதிர்ஷ்டம் 1983 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், திருச்செந்தூர் கோவில் கொலை வழக்கு சம்பந்தமாக கலைஞர் கருணாநிதி திருச்செந்தூருக்கு நடைப்பயணம் மேற்கொண்டிருந்தார். அந்த நடைப்பயணத்தைக் கவர் செய்வதற்காக வண்ணநிலவன் கோவில்பட்டி வந்திருந்தார். ஒரு விடுதியில் தங்கியிருந்த அவருடனேயே எப்போதும் யாராவது ஒருத்தரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ இருந்து கொண்டிருப்போம். அவரைத் தனியாக விட்டதாகவோ, ஓய்வெடுக்க விட்டதாகவோ நினைவில்லை. மெலிந்த அவருடைய உடம்பு, நீண்ட விரல்கள், பேசுகிற பேச்சில் இருந்த அந்நியோன்யம், எல்லாமும் சேர்ந்து எல்லோரையும் மந்திரத்தால் கட்டிப்போட்டிருந்தது. நான் அவருடனே நடைப்பயணத்தில் ஒரு நாளோ, இரண்டு நாளோ போய் வந்தேன். அப்போது செம்மலரில் வெளியாகியிருந்த என்னுடைய உறவு என்ற சிறுகதையை அவரிடம் வாசிக்கக் கொடுத்தேன். படித்து விட்டு ” அப்படியே நான் எழுதின கதை மாதிரி இருக்கிறது” என்று பாராட்டினார். எனக்குத் தலைகால் புரியவில்லை. நான் அப்போது ஒரு நாலைந்து கதைகள் தான் எழுதியிருப்பேன். அவர் தமிழின் முன்னணி எழுத்தாளர். அவர் வாயால் எனக்குக் கிடைத்த பாராட்டினால் அந்த மாதம் முழுவதும் வாயெல்லாம் பல்லாக மற்ற நண்பர்கள் முன்னால் தலையைத் தூக்கிக் கொண்டு திரிந்தேன்.

வேலை தேடும் காண்டம் சென்னை வரை நீண்ட போது அங்கும் வீடு தேடிச் சென்று வண்ணநிலவனைச் சந்தித்தேன். அது தான் கடைசியாக நான் வண்ணநிலவனைச் சந்தித்தது என்று நினைக்கிறேன். ஆனால் கடல்புரத்தில் நாவல் என்னுடன் எப்போதும் இருந்தது. எப்போது இலக்கியம் பற்றிப் பேசினாலும் கடல்புரத்தில் பற்றிய பேச்சு வராமலிருக்காது. பிலோமியின் நினைவு வராமலிருக்காது. நான் பிலோமியின் காதலனாக இருந்த காலம் கண்ணில் ஆடும். நான் சாமிதாஸை வெறுத்தேன். ஏனெனில் நானே சாமிதாஸாக இருந்தேன். பிலோமியின் அன்பின் மழையில் நனையக் கொடுத்து வைக்காத பாவி சாமிதாஸ் என்று நினைத்தேன். அதோ அலை வீசிக் கொண்டிருக்கும் கடல்கரையில் காற்றில் தன் சேலை முந்தானை படபடக்க நின்று கொண்டு எதிரே விரிந்து கிடக்கும் கடலம்மையை வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள் பிலோமி. அவள் கண்களில் ததும்பி வழியும் சாந்தம் கடலின் ஆக்ரோஷத்தைக் குறைக்கிறது. நான் அந்த மணல்வெளியில் பிலோமியை நோக்கி நடந்து போய்க்கொண்டிருக்கிறேன்.. போகப் போகத் தொலையாத தூரமாக மணல் விரிந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் பிலோமியின் அருகாமையில் போக முடியவில்லை. பிலோமியின் கருத்த உடல் ஒளி வீசுகிறது. அது அன்பின் ஒளி. நேசத்தின் ஒளி. என் இளமைக்காலக் காதலியான பிலோமியின் ஒளி… பிலோமி… எங்கள் ப்ரியத்துக்குரிய பிலோமி! எங்கள் வணக்கத்துக்குரிய வண்ணநிலவன்!

நன்றி- சொல்வனம் இணைய இதழ்

Wednesday 5 December 2012

தாகமிக்க குழந்தைகள்

 

உதயசங்கர்ayeesha

 

எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் தீராத தாகம் வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளிடம் இருந்து கொண்டேயிருக்கும். கடலைக் குடித்தாலும் தீராத அந்த ஆர்வத்தை, குறுகுறுப்பை, அர்ப்பணிப்பை, பள்ளிக்கூடங்கள் தான் முதலில் வளரும் செடியின் வேரில் வெந்நீர் ஊற்றுவது போல முரட்டுத்தனமான கல்விமுறையினால் அழிக்கின்றனர். கேள்விகளே இல்லாமல் பதில்களை மட்டும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து மனப்பாடம் செய்ய வைத்து மதிப்பெண் பெற வைக்கின்றனர். கேட்பதற்கு ஆயிரமாயிரம் கேள்விகள் இருந்தாலும் ஒரு வழிப்பாதையாகக் கல்விமுறையும் அதை யந்திரமயமாய் கையாள்கிற ஆசிரியர்களும் குழந்தைளிடம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்து விட முடியும்? ஒரே குரல் அதிகாரமாய் ஓங்கி ஒலிக்கும் பள்ளிக்கூடங்கள் சிறு முணுமுணுப்புகளைக் கூடச் சகித்துக் கொள்வதில்லை. வதைகளின் மூலம் பிஞ்சுக் குழந்தைகளின் மேதைமைத் திறனை உருத்தெரியாமல் நசுக்குகின்றனர். எதிர்கால சமூகத்தை உருவாக்கும் உன்னதமான பணியில் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன என்பதை பள்ளிக்கூடங்களும் உணர்வதில்லை, பெற்றோர்களும் உணர்வதில்லை.

எந்த சமூக அமைப்பும் தனக்குச் சாதகமான மக்கள் திரளை உருவாக்குவதற்கு தான் அரசு யந்திரத்தைப் பயன்படுத்தும். அதற்கு இசைவான கல்விமுறை, சட்டம், நீதி, அறிவியல் என்று எல்லாத்துறைகளையும் உருவாக்கி மக்களைத் தன் வசப்படுத்திக்கொள்ளும். அப்படித்தான் இன்றையக் கல்வி முறையும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்றையப் பள்ளிக்கூடங்கள் பற்றியும், கல்விமுறை பற்றியும், நம் மனதை உலுக்கும் கேள்விகளை நமக்கு முன்னால் வைக்கிறது, இரா.நடராசன் எழுதிய ஆயிஷா என்ற சிறு நூல். அது ஒரு கதை தான். ஆனால் கதையல்ல. பள்ளி செல்லும் எல்லாக்குழந்தைகளின் பள்ளிவாழ்க்கையில் ஒரு முறையேனும் சந்திக்கிற அநுபவம். மரத்துப்போன, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு, தன்னை விட வலிவில் குறைந்த எளிய குழந்தைகளின் மீது தன் அதிகாரத்தைத் தண்டனைகள் மூலமாக நிலைநாட்டிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு இது அன்றாட நிகழ்வு.

குழந்தைகளைக் கொண்டாடுவதாய் பம்மாத்து பண்னிக் கொண்டிருக்கும் நம் சமூகத்தின் முகத்தில் ஆயிஷா ஓங்கி அறைகிறாள். இதோ இப்போது கூட பாகிஸ்தானில் மதவெறியர்களின் மதவெறிக்கு மாலாலா இலக்காகியிருக்கிறாள். இத்தனைக்கும் அவள் விரும்பியது வேறொன்றுமல்ல. கல்வி. அவளும் அவளொத்த மற்ற பெண்களும் கல்வி பெற வேண்டும் என்று ஆசைப்பட்டாள். மதத்தின் பெயரால் சமூகத்தின் நாகரீக வரலாற்றைப் பின்னுக்குத் தள்ள நினைக்கும் காட்டுமிராண்டிகளுக்கு அது பொறுக்கவில்லை. அவளைத் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். மாலாலா உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறாள். இந்த மாதிரியான மதவெறிக் காட்டுமிராண்டிகள் எல்லாமதங்களிலும் இருக்கிறார்கள். எந்த மதமும் பெண்களை உயர்வாகப் பேசவில்லை. எல்லாமதங்களின் வேதங்களிலும் பெண்களை இரண்டாம்தர பிரஜைகளாக, இழிவானவர்களாக, எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டியர்களாகவே சுட்டப்படுகிறார்கள். இந்தக் கதையில் வருகிற ஆயிஷாவுக்குக் கேள்விகள் பிறந்து கொண்டேயிருக்கின்றன. மற்றவர்களைப்போல இல்லாமல் அவள் அந்தக் கேள்விகளைத் தொடர்ந்து போகிறாள். அந்தக் கேள்வி அவளைப் புத்தகங்களை வாசிக்கும்படி தூண்டுகிறது. ஆசிரியர்கள் திருப்பிக் கூடப் பார்த்திராத புத்தகங்களை வாசித்து அடிக்கோடிட்டு வைக்கிறாள். அதன் பிறகும் அவளுக்குப் புரியாத விஷயங்களை ஆசிரியர்களிடம் கேட்கிறாள். அங்கே தான் ஆயிஷா ‘ கவனிக்கப்’ படுகிறாள். இப்படிப்பட்ட ஒரு குழந்தையைக் கொண்டாடுவதற்குப் பதில் தண்டிக்கிறார்கள். அவளுடைய வகுப்பிற்கு வரும் எல்லாஆசிரியர்களும் அவளைத் தலைவலியாக நினைக்கிறார்கள்.

எதையெதையோ தின்று செரிமானம் ஆகாமல் மயங்கிக் கிடக்கிற நம்மை உலுப்பி யதார்த்தத்தைப் பார்க்கச் சொல்கிறாள். நம்முடைய பள்ளிக்கல்வி குறித்த தீவிரமான விவாதத்தைத் தொடங்குகிற துவக்கப்புள்ளியாக ஆயிஷா இருக்கிறாள். காலங்காலமாக பள்ளிகளில் குழந்தைகள் அதிலும் பெண்குழந்தைகள் அநுபவித்து வரும் கொடுமைகளை அதற்காக அவர்கள் தங்கள் உயிரையே விலையாகக் கொடுக்க வேண்டியிருப்பதை வாசிக்கும் போது இந்தச் சமூகத்தின் மீது கோபமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆத்தாமையும் ஆயிஷாவை வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் வரும். இந்த ஒரு புத்தகத்திற்காகவே தமிழ்ச்சமூகத்தால் இரா.நடராசன் என்றென்றும் நினைக்கப்படுவார்.

ஆயிஷாவின் அறிவுத்தாகம் ஆசிரியர்களுக்கு எரிச்சலை ஊட்டுகிறது. ஆனால் இந்தக் கதையைச் சொல்கிறவரும் ஆசிரியர் தான். மரத்துப்போன செக்குமாட்டு நடைமுறையிலேயே பழக்கப்பட்ட ஆசிரியர் தான். அவருக்கு ஆயிஷா தான் போதிமரமாக இருக்கிறாள். ஞானம் கிடைத்த அவர் ஆயிஷாவுக்கு ஆறுதலாக இருக்கிறார். அவரே இந்தக்கதையில் ஒரு இடத்தில்

“ பள்ளிக்கூடங்கள் பலிக்கூடங்கள் ஆகி விட்டன. நானும் அவர்களது கூட்டத்தில் ஒருத்தியா? எல்லாமே முன் தயாரிக்கப்பட்டவை. ரெடிமேட் கேள்விகள், அவற்றிற்கு நோட்ஸ்களில் ரெடிமேட் பதில்கள். வகுப்பறையில் ஆசிரியர்கள் ஓய்வெடுக்கிறார்கள். வெறும் மனப்பாடம் செய்யும் இயந்திரமாய் ( அதுவும் முக்கியக் கேள்விகளுக்கு விடைகளை மட்டும் ) மாணவர்கள் உருமாற்றம் அடைந்து விட்டனர். எல்லாமாணவர்களுக்கும் எண்கள் தரப்பட்டுள்ளன. வகுப்பு, வரிசை எண், தேர்வு எண், பெற்றெடுக்கும் மதிப்பெண்கள், எங்கும் எண்கள், எண்களே பள்ளிகளை ஆள்கின்றன. எல்லா ஆசிரியர்களுமே ஏதாவது ஒருவகையில் மாணவரின் அறிவை அவமானப்படுத்துகிறார்கள்…”

பள்ளியைப் பற்றிய விமரிசனத்தை முன்வைக்கிறார். ஆம் உண்மையில் பள்ளிக்கூடங்கள் குழந்தைகளின் அறிவுத்திறனை அவமானப்படுத்துகின்றன. எல்லாவற்றைப்பற்றியும் அறிந்து கொள்ளும் ஆர்வம் குழந்தைகளிடமே முழுவீச்சுடன் இருக்கிறது. பள்ளிக்கூடங்கள் ஏற்கனவே முன் தயாரிக்கப்பட்ட கேள்விகள், அதற்கான பதில்கள், மதிப்பெண்கள், ரேங்க், என்று மாணவர்களையும் ஒரு செக்குமாட்டு நடைமுறைக்குள் கொண்டு வந்து விடுகின்றன. பள்ளியை விட்டுப்போனதுமே படித்ததெல்லாம் மறந்து மரத்துப்போன இன்னொரு செக்குமாட்டு வாழ்க்கைக்குள் சிக்கி விடுகிறார்கள். நம்முடைய கல்விமுறை குறித்த ஆழமான கேள்விகளை எழுப்புகிறாள் ஆயிஷா. ஒவ்வொரு முறை ஆயிஷாவை வாசிக்கும் போதும் நம் குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் படும் சித்திரவைதைகளை நினைத்து கண்கலங்கும்.

பாரதி புத்தகாலாயம் வெளியீடாக வெளிவந்து லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகிக் கொண்டிருக்கும் ஆயிஷா, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி, பள்ளிக்கூடங்களைப் பற்றி, கல்விமுறை பற்றித் தெரிந்து கொள்ள, ஒவ்வொரு வீட்டிலும் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம். ஆசிரியர்கள் தங்களை உரசிப்பார்த்துக் கொள்ள, தங்கள் கற்பிக்கும்முறை குறித்து மறுபரிசீலனை செய்ய, தங்களை சுயவிமரிசனம் செய்து கொள்ள, தினமும் ஒரு முறையேனும் ஆயிஷாவை வாசிக்க வேண்டும். அப்போது தான் நம்முடைய குழந்தைகளின் கேள்விகளை அலட்சியப்படுத்தாமல், அவமானப்படுத்தாமல், இருக்க நம்முடைய சமூகம் கற்றுக் கொள்ளும். இந்தச் சிறுகதை மூலம் தமிழிலக்கியத்தில் நீங்காத இடம் பிடித்த இரா.நடராசனை என்றென்றும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கத் தோன்றும் 

நன்றி-இளைஞர் முழக்கம்

Tuesday 27 November 2012

திருடன் கொண்டு போன நாய்க்குட்டி

மலையாளம்- மாலிMohan Das (3)

தமிழில்-உதயசங்கர்

ராமுவுக்கு ஒரு நாய்க்குட்டி கிடைத்தது.நாய்க்குட்டியின் தலையும் வாலும் கருப்பு. உடம்பும் கால்களும் வெள்ளை. அழகான நாய்க்குட்டி. அதே சமயம், உஷாரான நாய்க்குட்டி.

நாய்க்குட்டி இரவில் வராந்தாவில் படுத்து உறங்கும். ராமுவின் அறைக்கு வெளியே தான் வராந்தா இருந்தது. ராமு அறைக்கதவைத் திறந்தே வைத்திருப்பான்.

ஞாயிற்றுக்கிழமை இரவு பனிரெண்டு ஆனது. ஒரு மணிச்சத்தம் கேட்டது. அதைக் கேட்டு ராமு விழித்து விட்டான். நாய்க் குட்டியும் விழித்து விட்டது. மணிச்சத்தம் அருகில் வந்து கொண்டேயிருந்தது. பின்பு கொஞ்சம் கொஞ்சமாய் தூரத்தில் கேட்காமலே போய் விட்டது.

” நாய்க்குட்டியே! இந்த மணிச்சத்தம் எதுக்குன்னு தெரியுமா?” என்று ராமு கேட்டான்.

நாய்க்குட்டி வாலாட்டியது- தெரியாது என்ற அர்த்தத்தில்.

“எல்லா ஞாயிற்றுக்கிழமையும் ராத்திரி பனிரெண்டு மணி ஆயிருச்சின்னா ஒரு திருடன் ரோட்டு வழியே நடந்துபோவான். திருடி விட்டு மணியடித்துக் கொண்டே வீட்டுக்குப் போவான். திருடன் போகிறான் என்று எல்லோருக்கும் தெரியணுமாம்..அதுக்குத் தான் மணியடித்துக் கொண்டு போகிறான்..என்ன உனக்குப் பயமாருக்கா நாய்க்குட்டி?” என்று ராமு கேட்டான்.

நாய்க்குட்டி வாலாட்டியது- பயம் இல்லை என்ற அர்த்தத்தில்.

அடுத்த ஞாயிறு வந்தது.இரவு மணி பதினொன்றரை ஆகி விட்டது. நாய்க்குட்டி என்ன செய்தது தெரியுமா? சத்தம் போடாமல் எழுந்து கேட்டிற்கு அடியில் நுழைந்து ரோட்டில் போய் உட்கார்ந்து கொண்டது. அவனுக்கு திருடன் எப்படி இருப்பான்னு கொஞ்சம் பார்க்கணும்!

மணி பனிரெண்டு அடித்தது. அதோ வருகிறான் திருடன் மணியை அடித்துக் கொண்டு. திருடனைப் பார்த்தபோது நாய்க்குட்டி பயத்தில் நடுங்கியது. அரிவாள்மீசை, முட்டைக்கண்கள்,கருப்பு நிறம்,பயங்கரமான ஆள்!

நாய்க்குட்டிக்கு வீட்டிற்குப் போனால் போதும் என்று தோன்றியது. அவன் கேட்டின் அடியில் நுழைய முயற்சித்தான். திருடன் பாய்ந்து ஒரே பிடி. உடனே நூலை வைத்து வாயில் ஒரு கட்டு. நாய்க்குட்டிக்குக் கடிக்கவும் முடியாது, குரைக்கவும் முடியாது. திருடன் நாய்க்குட்டியைக் கையில் எடுத்தான்.மணியை அடித்துக் கொண்டு ஒரே நடை.

முதலில் நாய்க்குட்டி மிகவும் பயந்து போய்விட்டது. பின்பு பயம் இல்லாமல் போய் விட்டது. அவன் யோசித்தான். வாயை மட்டும் தானே கட்டியிருக்கிறார்கள். மூக்கை கட்டவில்லை. கண்ணைக் கட்டவில்லை. அவன் மூக்கைத் திறந்து வைத்தான்.கண்ணைத் திறந்து வைத்தான்.எல்லாமணங்களயும் முகர்ந்து உள்வாங்கினான்.எல்லாகாட்சிகளையும் பார்த்தான். எல்லா மணங்களையும், எல்லாக்காட்சிகளையும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டான்.

பத்து மைல் தூரத்திலிருந்தது திருடனின் வீடு. திருடன் வீட்டிற்கு போய்ச் சேர்ந்தான். திருடனின் மனைவி திருடி கதவைத் திறந்தாள். திருடன் நாய்க்குட்டியோடு வீட்டிற்குள் சென்றான். திருடி பத்திரமாய் கதவை அடைத்தாள்.

“திருடி இந்த நாய்க்குட்டி நல்லாருக்கா?” என்று திருடன் கேட்டான்.

“திருடா ரொம்ப நல்லாருக்கு..” என்று திருடி சொன்னாள்.

திருடி நாய்க்குட்டியை சங்கிலியால் கட்டிப் போட்டாள். சோறும் பாலும் கொடுத்தாள். பின்பு படுத்து உறங்கினாள்.

நாலைந்து நாள் கழிந்த பிறகு என்ன நடந்தது தெரியுமா? திருடி யோசித்தாள். எவ்வளவு நல்ல நாய்க்குட்டி! நாய்க்குட்டி திருடி சொன்னபடியெல்லாம் கேட்கிறது. கடிப்பதில்லை. குரைப்பதில்லை.திருடி அதை அவிழ்த்து விட்டாலோ வாசல்படி கூட தாண்டுவதில்லை!

ஆனால் இதெல்லாம் வெறும் நாடகம் என்று அவளுக்குத் தெரியாது. அவளை எப்படியாவது ஏமாற்றி விட்டு ஓடிப் போகணும். அதுதான் நாய்க்குட்டியின் திட்டம்.

ஒரு ராத்திரி. மணி ரெண்டு இருக்கும். திருடியும் திருடனும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். நாய்க்குட்டி பதுங்கிப் பதுங்கி ரோட்டில் இறங்கியது.பின்பு ஒரே ஓட்டம்! முன்பு திருடன் தூக்கிக் கொண்டு வரும்போது முகர்ந்த மணங்கள், பார்த்த காட்சிகள், எல்லாவற்றையும் ஞாபகப்படுத்திக் கொண்டே சென்றது.அது பத்து மைல் ஓடி ராமுவின் வீட்டை அடைந்தது. கேட்டின் கீழே நுழைந்து உள்ளே சென்றது. நாய்க்குட்டி இல்லாததினால் ராமு வாசலை பூட்டியிருந்தான். நாய்க்குட்டி சன்னல் வழியே எட்டிப் பார்த்தது. சத்தமாய் நாலைந்து குரைப்பு!

ராமு எழுந்து விட்டான். குரைப்பொலியை உற்றுக் கேட்டான். வேறு நாயோ? இல்லை. நம்மோட நாய் தான். ராமு வாசல் கதவைத் திறந்தான். நாய்க்குட்டி ராமுவின் மேல் ஒரே பாய்ச்சல். பின்னர் நக்கோ நக்கென்று நக்கிக் கொஞ்சியது.

அடுத்த ஞாயிறு ராத்திரி வந்தது. பனிரெண்டு மணி ஆனது. அதோ கேட்கிறது மணிச்சத்தம். திருடன் திருடி விட்டு வீட்டுக்குப் போகிறான்.

“நாய்க்குட்டி! ரோட்டிற்குப் போக வேண்டாமா?” என்று ராமு கேட்டான்.

நாய்க்குட்டி வாலாட்டியது- வேண்டாம் என்ற அர்த்தத்தில்.

காலையில் ராமு கேட்டைத் திறந்தான்.

“போறியா.. நாய்க்குட்டி!” என்று ராமு கேட்டான்.

நாய்க்குட்டி வாலாட்டியது-இல்லை என்ற அர்த்தத்தில்!

புகைப்படம்-மோகன் தாஸ்வடகரா

Monday 26 November 2012

கலாமோகினியின் கடைக்கண்பார்வை

Impressionism-Oil-Painting-001-  

உதயசங்கர்

 

80 களின் துவக்கத்தில் இலக்கியக்கோட்டி பிடித்து எழுத்தாளராவதைத் தவிர வேறு மார்க்கமேயில்லை என்று நாங்கள், நான், நாறும்பூநாதன், சாரதி, திடவைபொன்னுச்சாமி, அப்பணசாமி, கோவில்பட்டி காந்திமைதானத்து பொட்டல்வெயிலில் சத்தியம் செய்திருந்தோம். காணாததைக் கண்ட மாதிரி அவதி அவதியாய் புத்தகங்களைத் தின்று தீர்த்தோம். அதுவரை தெரிந்த உலகமே இப்போது வேறொன்றாய் தெரிந்தது. உலக, இந்திய, தமிழ், எழுத்தாளர்களோடு ஏற்பட்ட பரிச்சயம் எங்கள் நடையையே மாற்றி விட்டது. தரையில் கால் பாவியதாக நினைவில்லை. நாங்கள் வேறு பிறவிகள் என்ற நினைப்பு. பாரதி, புதுமைப்பித்தன், மௌனி, கு.அழகிரிசாமி, கு.பரா., சுந்தரராமசாமி, கு.சி.பா, டி.செல்வராஜ், கி.ரா, வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, என்று வாசித்து வாசித்துத் தீரவில்லை. வாசிக்கும்போதும் வாசித்து முடித்தபிறகும் எங்களுக்கு தோன்றும் முதல் கேள்வி “ எப்படிரா எழுதறாங்க..? “ என்பது தான். அப்படியே அழுவதற்கும், சிரிப்பதற்கும், கோபப்படுவதற்கும், காதலிப்பதற்கும் வைக்கிறதே எழுத்து. எழுத்தாளர்கள் தான் இந்த உலகத்தை ஆளமுடியும் என்று அப்பாவியாய் நினைத்திருந்தோம். எங்கள் கனவுகளில் எழுத்தாளர்கள் வந்தார்கள்.எனவே எழுத்தாளர்களைச் சந்திப்பதில் பேராவல் கொண்டிருந்தோம். ஒவ்வொரு எழுத்தாளரின் எழுத்துகளையும் படிக்கும்போது ஒரு சித்திரம் அந்த எழுத்தாளரைப் பற்றி உருவாகும். எழுத்தாளர்களை இந்த பூமியில் பிறந்த அதிசயப்பிறவிகளாக எண்ணி மணிக்கணக்காக அவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம்.

யாரையேனும் எழுத்தாளர்களைச் சந்திக்க நேர்ந்தால் கண்களில் பக்தியுணர்வு தோன்றிவிடும். அவர்களுடைய நடையுடை பாவனைகளை, அவர்கள் பேசும் முறையை, அவர்கள் சிரிப்பதை, அவர்கள் வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையையும் மிகக் கவனமாகக் கவனிப்போம். அவர்களுடன் இருக்கும் நேரம் முழுவதும் ஒரு பணிவு எங்களிடம் இருக்கும். எல்லா எழுத்தாளர்களிடமும் தவறாமல் கேட்கிற கேள்வி “ நீங்க எப்ப சார் எழுதுவீங்க? ராத்திரியிலா காலையிலா எந்த நேரம் வேணும்னாலும் எழுத உட்கார்ந்திருவீங்களா? “ அவர்கள் சொல்கிற பதிலில் தான் எங்கள் எதிர்கால எழுத்துலகமே இருப்பதைப் போல அவர்கள் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்போம். மாக்சிம் கார்க்கியின் எப்படி எழுதுவது? அலக்ஸி டால்ஸ்டாயின் எழுதும் கலை என்று எழுதுவதைப் பற்றிய வியாக்கியானங்களை வேறு படித்திருந்தோமா. எங்களைப் பாடாய்ப்படுத்தியது சந்தேகங்கள். நாங்கள் சந்தித்த எழுத்தாளர்களையும் அந்தச் சந்தேகங்களின் கொடுக்குகளால் கொட்டிக் கொண்டிருந்தோம். அவர்கள் என்ன சொன்னாலும் எங்களுக்குத் திருப்தியில்லை. எதையோ மறைக்கிறார்கள். அந்த சூக்குமத்தைச் சொல்லிக் கொடுக்க மறுக்கிறார்கள் என்று பின்னர் பேசிக் கொண்டிருப்போம். ஏனெனில் நாங்கள் அப்போது வேலையின்றிச் சுற்றிக் கொண்டிருந்ததால் எப்போது வேண்டுமானாலும் எழுதிப்பார்க்கும் சுதந்திரம் இருந்தது. ஆனால் எழுதினால் எழுத்து தான் எழுத்து..எழுத்து.. வரவில்லை. அதனால் தான் எழுத்தாளர்களின் நடவடிக்கைகளை உற்றுக் கவனித்து ரகசியத்தைக் கண்டுபிடிக்க முயற்சித்தோம்.

இடைசெவல் போய் கி.ரா.வைப் பார்த்தால் அப்படி ஒரு ஒழுங்கு. சுத்தம். நறுவிசு. குடிக்கிற செய்யது பீடியைக் கூட தேர்வு செய்து அதன் முனையை, அருகிலேயே வைத்திருக்கும் கத்தரிக்கோலை வைத்து கத்தரித்து பற்றவைப்பார். அவருடைய நடையுடை பாவனைகளில் இருக்கும் நேர்த்தி யாவரையும் கவர்ந்து விடும். பூமணியிடம் பேசிக் கொண்டிருந்தால் தினமும் அதிகாலை எழுந்து எழுதுவேன் என்று சொல்லுவார். சுந்தரராமசாமி டைப்ரைட்டரில் தான் கதை எழுதுவார் என்று கேள்விப்பட்டிருந்தோம். இப்படி ஒவ்வொரு எழுத்தாளர்களிடமும் கேட்டாலும் எங்களுக்கு ஒரு கருத்து உருவாகிக் கொண்டிருந்தது. அது கோவில்பட்டி இலக்கியவட்டத்தின் கருத்து. அப்படியெல்லாம் தினசரியோ, காலையோ, மதியமோ, இரவோ, நள்ளிரவோ, எழுத முடியாது. கலைஎழுச்சி வரவேண்டும். அருள் வந்த மாதிரி, காய்ச்சல் வந்த மாதிரி உடம்பு சூடு ஏற வேண்டும். கைகளில் ஒரு நடுக்கம். இனி எழுதாமலிருக்க முடியாது என்கிற மாதிரி ஒரு வெறி, இடம், பொருள், காலம், பற்றிய பிரக்ஞை ( அப்போது இந்த வார்த்தையைப் பயன்படுத்தாத இலக்கிய உரையாடல்களே கிடையாது. அதான் அந்த வார்த்தையே ஓடி ஒளிஞ்சிருச்சி போல ) இருக்கக் கூடாது. என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்போம். என்ன வேப்பிலையடிச்சாலும் எங்களுக்கு அருள் வரவில்லை என்பது வேறு விஷயம்.

ஆனால் நாங்கள் விட்டுவிடுவோமா? தினசரி ஒரு கதை எழுதிக் கொண்டு வரவேண்டும் என்று எங்கள் சபையில் முடிவு செய்தோம். ஒரு பக்கமாக இருந்தாலும் சரி. எழுதவேண்டும். எப்படியாவது கலாமோகினியின் கடைக்கண்பார்வையை எங்கள் பக்கம் திருப்பி விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டோம். கலைஎழுச்சி அல்லது கலைஅருள் வருவதற்கு வேறு வெளி உபகரணங்களைப் பயன்படுத்தவும் யோசித்தோம். மற்ற எழுத்தாளர்கள் என்னென்ன உபகரணங்களை பயன்படுத்துகிறார்கள் என்று ஆராய்ச்சி செய்தோம். நிறைய டீக்களைக் குடித்தோம். பீடி பிடித்துப் பார்த்தோம். காசு இருந்தால் அல்லது ஓசியென்றால் வில்ஸ்பில்டர் வாங்கிக் குடித்தோம். பாரதி கஞ்சா அடித்து விட்டுத்தான் கவிதை எழுதுவானாமே என்று ஒரு நண்பர் சொல்ல எப்படியோ கஷ்டப்பட்டு கஞ்சாவைச் சம்பாதித்து அதை சிகரெட்டிலோ பீடியிலோ அடைக்கத் தெரியாததினால் சூடான டீயில் கலந்து குடித்துப் பார்த்தோம். சிரிசிரியென்று சிரித்து உருண்டதும், நடை நடையென்று ஒரே தெருவில் நடந்து கொண்டேயிருந்ததும் தான் மிச்சம். கலாமோகினி எங்கே போனாள் என்றே தெரியவில்லை. நாங்கள் இருந்த திசைப்பக்கம் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை.

இதற்கிடையில் தினமும் எழுதிக் கொண்டுவரவேண்டும் என்ற எங்கள் முடிவு ஒரு வாரத்தில் காலமாகி விட்டது. மறுபடியும் “ எப்படிரா எழுதறாங்க..? “ என்ற முதல்கேள்வியில் வந்து நின்றோம். சிலசமயம் வண்ணதாசனின் கலைக்கமுடியாத ஒப்பனைகளைப் படித்து விட்டு அதன் அதிர்வுகளிலிருந்து மீளுமுன்னே கதை எழுதிப் பார்ப்பதுண்டு. அப்படியே வண்ணதாசன் கதை மாதிரியே இருக்கும். வண்ணநிலவனின் எஸ்தர் படித்து விட்டு அதன் உணர்ச்சி வேகம் அடங்குமுன்னே கதை எழுதுவோம். அப்படியே வண்ணநிலவன் கதை மாதிரியே இருக்கும். ஒருவருக்கொருவர் வாசித்து விட்டு “ எலேய் வண்ணதாசன் இதை விட நல்லா எழுதியிருக்காருடா..” என்றோ “ டேய் காப்பியடிக்காதே வண்ணநிலவனைக் காப்பியடிக்காதே..” என்றோ திட்டிக் கொள்வோம். அப்புறம் என்ன கதையெழுதினாலும் இது கு.அழகிரிசாமி கதை மாதிரி இருக்கோ, பூமணி கதை மாதிரி இருக்கோ, மௌனி கதை மாதிரி இருக்கோ, ஜானகிராமன் கதை மாதிரி இருக்கோ என்ற பயம் வந்து விடும். பாதியில் எழுத்து நின்று விடும்.

பலசமயம் எழுதிக் கையெழுத்துப்பிரதியாக நண்பர்களிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லி அவர்கள் படித்து முடிக்கும்வரை இருக்குமே பாருங்க ஒரு அமைதி ஆளையேக் காலி பண்ணிரும். அதிலேயும் படித்து முடித்ததும் நண்பர் ஒரு பார்வை மேலும் கீழும் பார்ப்பார். பின்னர் திரும்ப ஒரு தடவை எழுதிய தாள்களை புரட்டுவார். ஏதோ ஒரு பக்கத்தில் ஏதோ ஒரு இடத்தைத் திரும்ப வாசிப்பதைப் போல அவர் பாவனை இருக்கும். பேச ஆரம்பிக்கப் போகிற மாதிரி லேசாக தொண்டையைச் செருமிக் கொள்வார். அவர் வயையே பார்த்துக் கொண்டிருக்கும்போது பொன்னம்போல மெல்ல உதடுகளை அசைப்பார். அவர் கதையைப் பத்தித்தான் ஏதோ சொல்லப் போறார் போல என்று ஆவலின் மீது “ ஒரு டீ சொல்லேன்..அப்படியே ஒரு வில்ஸ்பில்டரும் வாங்கிரு..” என்ற வார்த்தைகளைச் சிந்தி அடக்குவார். எல்லாம் நேரம்டா நேரம்.. நீயும் கதை எழுதிட்டு வராமலா போயிரப்போறே பாத்துக்குகிறேன் என்று மனசுக்குள் கறுவிக் கொண்டே அவர் கேட்டதை வாங்கிக் கொடுத்தபிறகும் நீண்ட புகைமேகங்களை அனுப்பிக் கொண்டே ஏராளமான வெளிநாட்டு உள்நாட்டு, தமிழ்நாட்டு, உள்ளூர் எழுத்தாளர்களின் கதைகளைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை யெல்லாம் வாசிப்பார். அதில் இல்லாதது பொல்லாததும் இருக்கும். மற்ற நேரமாக இருந்தால் வந்து பாருன்னு சொல்லிரலாம். ஆனால் இப்போது வாயைத் திறக்க முடியாதே. அவர்கிட்டே கதை இருக்கே. எனவே பல்லைக் கடித்துக் கொண்டு அவர் சொல்றதையெல்லாம் பொறுமையின் சிகரத்தில் ஏறியபடியே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். அப்படியே ஒரு இரண்டுமணி நேரம் கழியும். பொறுமையின் உச்சியில் நின்று கொண்டு இனி பொறுக்க முடியாது தற்கொலை தான் வழி. விழும்போது அவரையும் சேர்த்துத் தள்ளிர வேண்டியதான் என்ற முடிவின் வாசல்கதவைத் திறக்கும்போது “ உன்னோட இந்தக் கதை..” என்று ஆரம்பித்து உலகச்சிறுகதைகளை ஒப்பிட்டுப் பேச ஆரம்பித்து சுற்றி வளைத்து கடைசியில்” கதை சரியில்லை ” என்ற இரண்டு வார்த்தையைத் தான் இவ்வளவு நேரமாகச் சொல்லியிருப்பார்.

எப்படியிருக்கும்? ஏதோ இந்த ஒரு கதையிலதான் என்னோட உயிரே இருக்கிற மாதிரி துடிக்கிற துடிப்பு கடைசியில் அடங்கி விடும். முகம் தொங்கிப்போக சரி தான் நமக்கு எழுத வராது போல என்ற எண்ணம் தோன்றி விடும். இது வரை நான் எழுதி கையெழுத்துப் பிரதியில் படிக்கக் கொடுத்த கதைகளில் ஒரு கதையைக் கூட நல்லாருக்குன்னு ஒருத்தர் கூடச் சொன்னதில்லை. எல்லோருக்கும் அதுவும் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கு உள்ளுக்குள் ஒரு பொறாமை நதி ஓடிக் கொண்டிருக்கும் போல. மற்றவர்கள் பிரதிகளைப் படிக்கும்போது அந்த நதியில் முங்கி முங்கி எழுந்திரிப்பார்கள் போல. ஆனால் இப்படி பொத்தாம் பொதுவாய் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. பல சமயம் இந்த மாதிரி விமர்சனங்கள் நம்மைப் புடம் போடவும் செய்யும். நம்மைச் செப்பனிட, செழுமைப்படுத்த, இன்னும் தீவிரமாய் எழுதத் தூண்டும். நான் அப்படியே எடுத்துக் கொண்டேன். கதை சரியில்லை என்று சொல்கிற சமயங்களில் வருத்தம் வந்தாலும் அந்த வருத்தத்தின் மீது இன்னும் நாலு கதைகளை எழுதிப் போட்டு அமுக்கிவிடுவேன்.

இப்பவும் அந்தக் கேள்வி இருக்கத்தான் செய்கிறது. அதுவும் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் முக்கியமான எழுத்தாளர்களான வண்ணதாசன் , கோணங்கி, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜாகிர்ராஜா, இன்னும் பலரிடமும் இப்பவும் கேட்க நினைக்கிற கேள்வி இது தான் “ எப்படி எழுதுறீங்க? “ “ இதென்ன கேள்வி பேனாட்டு தான்..” ( டேய் எந்தக் காலத்தில் இருக்கே எல்லாம் கணிணியில் தான் என்று நாறும்பூநாதன் சொல்கிறான்.) என்று சொல்லிவிடாதீர்கள். அருள் வந்தோ, கலாமோகினியின் கடைக்கண் பார்வை பட்டோ, தியானம் செய்தோ, பிரக்ஞை விழிப்பு நிலையினாலோ, பிறவித்திறமையாலோ, கடின உழைப்பாலோ, கடுமையான முயற்சியாலோ, தீவிரப்பயிற்சியாலோ எப்படியோ எழுத்தாளராகி விட வேண்டும் என்று நாங்கள் செய்த, யோசித்த, மேற்சொன்ன விஷயங்களால் நான் அல்லது நாங்கள் எழுத்தாளராகவில்லை, அது வேறு விஷயம். ஆனால் அந்த வேறு விஷயம் தான் என்னவென்று தெரியவில்லை. மறுபடியும் முதல்லருந்தா..ஐயோ சாமி ஆள விடுடா என்று நீங்கள் ஓடத் துவங்குவதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

நன்றி- சொல்வனம் இணைய இதழ்