Tuesday 23 January 2018

குளத்தில் சத்தம்

குளத்தில் சத்தம்

உதயசங்கர்

நல்ல மழை. அல்லிக்குளம் நிரம்பி வழிந்தது. அல்லிக்குளத்தில் நிறைய அல்லி மலர்கள் பூத்திருந்தன. அல்லி மலர்கள் அல்லிக்குளத்தின் கரையோரம் கொக்கு, நாரை, உள்ளான், பறவைகள் தண்ணீரில் அசையாமல் நின்று கொண்டிருந்தன. சிறுமீன்களோ, தலைப்பிரட்டான்களோ, புழு, பூச்சிகளோ, அந்தப்பக்கம் வந்தால் லபக் என்று வயிற்றுக்குள்ளே தள்ளிவிடத் தயாராக நின்று கொண்டிருந்தன. கவனமாய் தண்ணீருக்குள்ளேயே பார்த்துக்கொண்டு நின்றன.
சிலசமயம் அல்லிமலர்கள் மீதோ, அல்லி இலைகள் மீதோ உள்ளானும், நாரையும், கொக்கும், நடந்து சென்று இரை தேடின. நீர்க்காகம், குளத்தில் நீந்தியது. அவ்வப்போது தலையைக் குனிந்து தண்ணீருக்குள் குட்டிக்கரணம் போட்டு இரை தேடியது.
குளத்தில் அயிரை, கெண்டை, கெளுத்தி, உளுவை, மீன்களும் ஏராளமான தவளைகளும், தலைப்பிரட்டான்களும், நீந்திக்கொண்டிருந்தன. பகல் முழுவதும் தவளைகளின் சத்தம் காதைப்பிளந்தது. குளத்தின் ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் ஒவ்வொரு விதமான சத்தம் வந்து கொண்டிருந்தது.
குளத்தின் கரையில் கூட்டம் கூட்டமாக தவளைகள் கூடிப் பேசிக்கொண்டிருந்தன. ஒரு குட்டித்தவளை மட்டும் அங்கும் இங்கும் தாவிக்குதித்துக் கொண்டே இருந்தது. அங்கே இருந்த வயதான தவளைகள், பெரிய தவளைகள், இளம் தவளைகள், குட்டித்தவளைகள், என்று எல்லோரிடமும் போய் மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மகிழ்ச்சி! என்று கத்தியது. அந்தக்குட்டித்தவளையின் உற்சாகத்தைப் பார்த்து மற்ற தவளைகளும் ஒன்று போல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று கத்தின.
அந்த சத்தத்தைக் கேட்டு கொக்குகளும், நாரைகளும், உள்ளான்களும், நீர்க்காகங்களும் ஒரு நொடி திகைத்து நின்றன. பின்னர் அவைகளும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று கத்தின. அந்த சத்தத்தைக் கேட்டு அல்லி மலர்களும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று தலையாட்டின. அல்லி மலர்கள் தலையாட்டுவதைப் பார்த்து குளத்தைச் சுற்றி நின்ற தென்னை மரம், மாமரம், வாகை மரம், புங்கை மரம், வேப்பமரம், எல்லாம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று தலையாட்டின. மரங்கள் தலையாட்டியதும் உண்டான காற்றும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று பாடியது. காற்றின் பாடலைக் கேட்டு மேகங்களும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று சிரித்தன. எங்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி!
அப்போது ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று சத்தம் கேட்டது. ஒரு சாரைப்பாம்பு கரையோரம் ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. சாரைப்பாம்பின் சத்தம் கேட்டு மீன்கள் தண்ணீரின் ஆழத்துக்குப் போய் விட்டன. தவளைகள், சகதிக்குள் புதைந்து கொண்டன. குட்டித்தவளை மட்டும் இன்னமும் மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று குதித்துக்கொண்டிருந்தது.
அப்படி ஒரு குதி!
நேரே சாரைப்பாம்பின் முன்னால் போய் குதித்தது.. சாரைப்பாம்பு குட்டித்தவளையை உற்றுப் பார்த்தது. குட்டித்தவளை ஒரு கணம் கண்களை மூடித் திறந்தது. பிறகு சாரைப்பாம்பை தைரியமாகப் பார்த்து மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று கத்தியது.
சாரைப்பாம்பு ஒரு நொடி நின்றது. தன்னுடைய பெரிய வாயைத்திறந்தது.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று கத்தியது. அது திரும்பிப் பார்ப்பதற்குள் குட்டித்தவளை குபீர் என்று குளத்துக்குள் பாய்ந்தது.
அவ்வளவு தான்!

Friday 19 January 2018

பயத்துக்கு விடுதலை

பயத்துக்கு விடுதலை

உதயசங்கர்

ஊரிலேயே பெரிய தொலைதொடர்பு கோபுரத்தில் ஒரு பருந்து கூடு கட்டியிருந்தது. கூட்டில் இரண்டு பருந்துக்குஞ்சுகள் இருந்தன. நாள்முழுவதும் தாய்ப்பருந்து இரை தேடி இரண்டு பருந்துக்குஞ்சுகளுக்கும் ஊட்டி விட்டது. இரண்டு பருந்துக்குஞ்சுகளும் எதையும் வேண்டாம் என்று சொல்லாமல் நன்றாகச் சாப்பிட்டன. இப்போது அந்தக்குஞ்சுகள் நன்றாக வளர்ந்து விட்டன. இறகுகள் முளைத்து சிறகுகள் வளர்ந்து அழகாக இருந்தன.
தாய்ப்பருந்து குஞ்சுகளுக்குப் பறக்கக் கற்றுக் கொடுத்தது. மெல்ல தன்னுடைய மூக்கினால் ஒரு பருந்துக்குஞ்சை தள்ளிக் கூட்டின் விளிம்புக்குக் கொண்டு வந்தது. அந்தப் பருந்துக்குஞ்சு கூட்டிலிருந்து தானாகவே கீழே விழுந்தது. நேரே கீழே போய்க்கொண்டிருந்த குஞ்சின் சிறகுகள் தானாகவே மேலும் கீழும் அடிக்க ஆரம்பித்தன. பருந்துக்குஞ்சு இப்போது பறக்க ஆரம்பித்து விட்டது.
ஆனால் இன்னொரு பருந்துக்குஞ்சு கூட்டிலேயே பயந்து நடுங்கியது. கீழே எட்டிப்பார்க்கும். உடனே ஓடி கூட்டிற்குள் போய் உட்கார்ந்து கொள்ளும். தாய்ப்பருந்து உள்ளே இருந்து பருந்துக்குஞ்சை மூக்கினால் தள்ளும். பருந்துக்குஞ்சோ அம்மாவின் பின்னால் போய் ஒளிந்து கொள்ளும். தாய்ப்பருந்து ..பயப்படாதே.. நீ கீழே இறங்கினால் பறந்து விடலாம். கூட்டிலேயே இருக்க முடியாது. பருந்து என்றால் பறக்க வேண்டும். பறந்து பார். பறத்தல் இனிது. பறத்தல் அழகு என்று உற்சாகப்படுத்தியது.
பருந்துக்குஞ்சு அம்மாவிடம் அம்மா எனக்குப் பயம்மா இருக்கும்மா. இவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்தால் என்ன ஆகும்? நான் கூட்டிலேயே இருக்கேன். நீ சாப்பாடு கொண்டு வந்து கொடு. என்றது.
தாய்ப்பருந்து கவலையுடன் பருந்துக்குஞ்சைப் பார்த்தது. சரி இரண்டு நாட்கள் போகட்டும் என்று விட்டு விட்டது.
பருந்துக்குஞ்சுக்குப் பயம் போகவில்லை.
அன்று காலை விடிந்தது. தாய்ப்பருந்து பருந்துக்குஞ்சை தன் மூக்கினால் தள்ளியது. பருந்துக்குஞ்சு வரமாட்டேன் என்று முரண்டு பிடித்தது. தாய்ப்பருந்து தன் அலகினால் செல்லமாய் ஒரு தட்டு தட்டியது. பின்பு வேகமாக கூட்டிலிருந்து பருந்துக்குஞ்சைத் தள்ளியே விட்டது.
ஐயோ அம்மா என்று கத்தியபடியே கீழே வேகமாக விழுந்து கொண்டிருந்தது பருந்துக்குஞ்சு. திடீர் என்று அதன் சிறகுகள் அசைய ஆரம்பித்தன. காற்றில் சிறகுகளை விரித்து மிதந்தது. ஆகா! எவ்வளவு அழகு! பறத்தல் இத்தனை இனிமையா! இதற்காகவா பயந்து நடுங்கினோம். என்று வெட்கப்பட்டது. இப்போது பருந்துக்குஞ்சின் பயம் போயே போய் விட்டது.
தாய்ப்பருந்துடன் போட்டி போட்டுக்கொண்டு இரண்டு பருந்துக்குஞ்சுகளும் அதோ பறந்து கொண்டிருக்கின்றன.
பாருங்கள்!

 5+

Wednesday 17 January 2018

யார் அழகு?

யார் அழகு?

உதயசங்கர்

அன்று குருமலை காட்டில் திருவிழா. அந்தச் சிறிய காட்டில் உள்ள புள்ளிமான், மிளா, நரி, குள்ளநரி, ஒலுங்கு, ஓணான், மரப்பல்லி, அணில், எலி, சாரைப்பாம்பு, நல்லபாம்பு, ராஜநாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன், பச்சைபாம்பு, மஞ்சள்விரியன், மண்ணுள்ளி பாம்பு, புறா, காட்டுக்கோழி, கௌதாரி, காடை, மைனா, சிட்டுக்குருவி, தவிட்டுக்குருவி, கருங்குருவி, பனங்காடை, மரங்கொத்தி, நீலச்சிட்டு, தேன்சிட்டு, மயில், கருங்குயில், புள்ளிக்குயில், என்று எல்லோரும் ஒன்று கூடுவார்கள். வருடத்துக்கு ஒரு முறை இயற்கையைப் போற்றி வழிபடுவார்கள்.
அந்த விழாவின் போது அங்கே கலை நிகழ்ச்சிகள் நடக்கும். பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, நடனம், ஓட்டப்பந்தயம், சடுகுடு, பாண்டி, கிளித்தட்டு, என்று எல்லாவிதமான நிகழ்ச்சிகளும் நடக்கும். அன்று முழுவதும் யாரும் யாருடனும் சண்டை போடக்கூடாது. யாரும் யாருக்கும் எதிரி இல்லை.
பாட்டுப்போட்டியில் குயிலும், கிளியும், மைனாவும், போட்டி போட்டனர். குயில் ” குக்கூ குக்கூகுக்கூக்கூஊஊ “ என்று பாடிக்கொண்டிருந்தது.
கிளி “ கீகிகிகிகிக்கீக்கீக்கீ..” என்று கத்திக் கொண்டிருந்தது.
மைனா,” கெக்கேக்கெக்க்கே..” என்று ராகம் பாடியது.
நடுவராக இருந்த ஆந்தை தூக்கக்கலக்கத்தில் கண்ணை மூடி மூடித் திறந்து தலையாட்டிக் கொண்டிருந்தது. ஆந்தையாரின் தலையாட்டலைப் பார்த்து குயிலும் கிளியும், மைனாவும், இன்னும் சத்தமாகப் பாட ஆரம்பித்தன.
நடனப்போட்டிக்கு நடுவராக நத்தை இருக்க, மயிலும், கோழியும், புறாவும், ஆடின.
“ ஏன் இப்படி கையையும் காலையும் உதறிக் கொண்டிருக்கிறார்கள்?”
என்று நடுவர் நத்தை நினைத்தது. இப்படி காட்டின் பல பாகங்களிலும் வேறு வேறு போட்டிகள் நடந்து கொண்டிருந்தன.
காட்டின் நடுவே இருந்த ஒரு பெரிய ஆலமரத்தடியில் அழகுப் போட்டி நடந்து கொண்டிருந்தது. அழகுப்போட்டியின் நடுவராக பருந்து உட்கார்ந்திருந்தது.
அழகுப்போட்டியில் ஆண்மயில் தன் தோகை விரித்து ஒய்யாரமாக நடந்து வந்தது.
மயில்புறா தலையில் கொண்டையும் பின்புறம் விரிந்த இறகுகளுமாய் நடந்து வந்தது.
சிட்டுக்குருவி தத்தித்தத்தி நடந்து வந்தது.
கிளி தலையைத் தலையை ஆட்டிக்கொண்டு ஒவ்வொரு அடியாய் அடியெடுத்து நடந்து வந்தது.
ஒவ்வொருவர் நடந்து வரும்போதும் கைதட்டலும் சீட்டி ஒலியும் ஆரவாரமும் தூள் பறந்தது.
ஆமை அன்னநடை போட்டு வந்தது.
நத்தை தன்னுடைய சங்குமுதுகை ஆட்டிக் கொண்டே வந்தது.
முயல் நீண்ட காதுகளை ஆட்டிக் கொண்டே துள்ளித் துள்ளி வந்தது.
நரி வாலை சுருட்டிக் கொண்டே பம்மிப் பம்மி வந்தது.
பாம்பு தலையைத்தூக்கி தன் படத்தைக் காட்டிக் கொண்டே வந்தது.
அணில் தன்னுடைய சாமரவாலைத் தூக்கிக்கொண்டு விருட்டென்று ஓடியது.
காகம் தலையைச் சாய்த்துச் சாய்த்து எல்லோரையும் பார்த்தபடி நடந்தது.
ஓணான் தன்னுடைய இரண்டு கண்களையும் உருட்டியபடி தலையை ஆட்டிக்கொண்டே நடந்தது.
எறும்பு யாரையும் கவனிக்காமல் விறுவிறுவென்று நடந்தது.
அழகுப்போட்டியின் முடிவு அறிவிக்கும் நேரம் வந்தது.
நடுவராக இருந்த பருந்து நீண்ட தன் சிறகுகளை விரித்து மடக்கியது. பின்னர் அலகுகளால் இறகுகளைக் கோதி விட்டது. எல்லோரும் காத்திருந்தனர். பின்னர் மேடையில் அதுவே ஒரு நடை நடந்து பார்த்தது.
கரகரப்பும் கீச்சுத்தன்மையும் கலந்த குரலில் தன்னுடைய தீர்ப்பை அறிவித்தது.
” அழகுப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே அழகு. கலந்து கொள்ளாமல் வேடிக்கை பார்த்தவர்களும் அழகு. இயற்கையின் படைப்பில் எல்லோருமே அழகு. “
உண்மை தானே!
காட்டில் ஒரே ஆரவாரம்!. கைத்தட்டல்!. சீட்டி ஒலி!.
5+



Monday 15 January 2018

கோழியின் எச்சரிக்கை

கோழியின் எச்சரிக்கை

உதயசங்கர்

செவலைக்கோழி பத்து முட்டைகளை இட்டது. அந்த பத்து முட்டைகளையும் இருபத்தியொரு நாட்கள் அடைகாத்தது. இருபத்தியொராம் நாள் முட்டைகளின் ஓட்டை உடைத்துக் கொண்டு ஏழு குஞ்சுகள் வெளியே வந்தன. மூன்று முட்டைகள் அப்படியே இருந்தன. செவலைக்கோழி அந்த முட்டைகளை உருட்டிப்பார்த்தது. ஒன்றும் அசையவில்லை. அந்த முட்டைகளை அடைகாத்த கூட்டிலிருந்து தள்ளி விட்டது. அந்த மூன்று முட்டைகளும் கூமுட்டைகள்.
செவலைக்கோழி உண்ணாமல் உறங்காமல் அடைகாத்து பொரித்த அந்த ஏழு குஞ்சுகளையும் பெருமையுடன் பார்த்தது.
ஒரு குஞ்சு வெள்ளை நிறத்தில் இருந்தது.
ஒரு குஞ்சு செவலை நிறத்தில் இருந்தது.
ஒரு குஞ்சு கருப்பு நிறத்தில் இருந்தது
ஒரு குஞ்சு கருப்பில் வெள்ளைப் புள்ளிகளுடன் இருந்தது
ஒரு குஞ்சு வெள்ளையில் கருப்புப்புள்ளிகளுடன் இருந்தது
ஒரு குஞ்சு சாம்பல் நிறத்தில் இருந்தது
ஒரு குஞ்சு செவலையும் கருப்பும் கலந்து இருந்தது.
எல்லாக்குஞ்சுகளும் கிய்யா..கிய்யா…கிய்யா…கிய்யா.. என்று போல குரல் எழுப்பிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன.
தாய்க்கோழி ” கெக்கெக்கெக் எல்லோரும் வாங்க “ என்று கேறியது. உடனே எல்லாக்குஞ்சுகளும் தாய்க்கோழியின் அருகில் வந்து நின்றன. ஆனால் சாம்பல் நிறக்குஞ்சு மட்டும் வரவில்லை. அந்தக்குஞ்சு அப்படியே உலாத்திக் கொண்டிருந்தது. தாய்க்கோழிக்குக் கோபம். உடனே கொஞ்சம் சத்தமாய், ” க்ர்ர்ர்ர்ர் எனக்குக் கோபம் வந்துருச்சி.. உடனே வா..” என்று கத்தியது.
தாய்க்கோழியிடம் இருந்து விலகியிருந்த சாம்பல் நிறக்குஞ்சு மெல்ல அலட்சியமாய் நடந்து வந்து அருகில் நின்றது. தாய்க்கோழி சாம்பல் நிறக்குஞ்சை முறைத்துப் பார்த்தது. ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை சாம்பல் நிறக்குஞ்சு.
செவலைக்கோழி குஞ்சுகளிடம்,
“ குழந்தைகளே நான் சொல்றதைக் கவனமாகக் கேட்டுக்குங்க..
நான்  ‘ கெக் ‘ ன்னு சொன்னா கவனம்னு அர்த்தம்
’ கேகெக்கேகேகே ‘ ன்னு கூப்பாடு போட்டா ஆபத்து ஆபத்து ஓடி வாங்க!ன்னு அர்த்தம்.
கெ கெ கெ ன்னு மெல்லக்கூப்பிட்டா இரை இருக்கு வாங்கன்னு அர்த்தம்..
இன்னிக்கு இது தான் உங்களுக்கு பாலபாடம். எல்லோரும் கேட்டுக்கிட்டீங்களா? “
என்று பேசியது. அம்மா சொல்வதை எல்லாக்குஞ்சுகளும் ஆர்வத்துடன் கேட்டன. சாம்பல் நிறக்குஞ்சு மட்டும் காதில் வாங்காமல் வாய்க்குள்ளேயே கிய்கிய்யா கிய்யா கிய்கிய்யா கிய்யா என்று பாட்டுப்பாடிக் கொண்டிருந்தது. செவலைக்கோழிக்குக் கவலையாக இருந்தது. இப்படி அலட்சியமாக இருக்கே இந்தச் சாம்பல் நிறக்குஞ்சு!
செவலைக்கோழி குஞ்சுகளுக்கு ஒவ்வொரு நாளும் புதிய புதிய பாடங்களைக் கற்றுக் கொடுத்தது.
கருப்பு நிறக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
வெள்ளை நிறக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
செவலைக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
கருப்பு வெள்ளைக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
வெள்ளைக்கருப்புக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
செவலைக்கருப்புக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
சாம்பல் குஞ்சு மட்டும் அம்மா சொன்னதைக் கேட்கவில்லை
சாம்பல் குஞ்சு கண்டபடி அலைந்து திரிந்தது. இரை தேடியது.
அன்று காலை செவலைக்கோழியும் குஞ்சுகளும் இரை தேடி குப்பைமேட்டை கிண்டிக் கொண்டிருந்தன. மேலே வானத்தில் பருந்து தன் நீண்ட சிறகுகளை விரித்து பறந்து கொண்டிருந்தது. அந்தப்பருந்தின் நிழல் கீழே பூமியில் விழுந்ததைப் பார்த்தது செவலைக்கோழி. உடனே செவலைக்கோழி, கேக்கேக்கேக்கே என்று அபாய எச்சரிக்கையைக் கத்தியது. உடனே எல்லாக்குஞ்சுகளும் அங்கங்கே கிடைத்த புதர்களுக்குள் பதுங்கிக் கொண்டன. செவலைக்கோழி சாம்பல் குஞ்சைத் தேடியது. காணவில்லை.
சிலநொடிகளுக்கு அப்புறம் சாம்பல் குஞ்சு ஒரு செடியின் மறைவிலிருந்து ஹாயாக கிய்கிய்யா கிய்கிய்யா கிய்கிய்யா என்று பாடிக்கொண்டே வெளியில் வந்தது. அது என்ன என்று நிமிர்ந்து பார்ப்பதற்குள் சாம்பல் குஞ்சின் மீது பருந்தின் நிழல் விழுந்தது.
ஆ…ஐயோ… ஆபத்து வந்து விட்டதே… பருந்தின் இறகுச்சத்தம் சாம்பல் குஞ்சின் காதில் கேட்டது. அவ்வளவு தான் உயிர் போகப்போகிறது. இதோ பருந்தின் கால்களில் உள்ள கூர் நகங்கள் உடலைக் கிழிக்கப்போகிறது. என்ன செய்வது என்று சாம்பல் குஞ்சுக்குத் தெரியவில்லை. அப்படியே கண்களை மூடி உட்கார்ந்து விட்டது. கிய்யா கிய்யா கிய்யா
அப்போது ஆவேசமாய் செவலைக்கோழி பறந்து வந்து பருந்தின் மீது மோதியது. பருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து புரண்டது. என்ன நடந்தது என்று தெரியாமல் அப்படியே மேலே எழுந்து பறந்து போனது பருந்து.
சாம்பல் குஞ்சின் அருகில் செவலைக்கோழி நின்றது. கண்களை மூடி உட்கார்ந்திருந்த சாம்பல் குஞ்சின் தலையில் தன் அலகுகளால் மெல்லத் தடவியது. சாம்பல் குஞ்சுக்கு அப்போது தான் உயிர் வந்தது.
இப்போது செவலைக்கோழியின் சத்தத்துக்கு முதலில் வந்து நிற்பது யார் தெரியுமா?

நீங்களே சொல்லுங்கள். 
5+