Friday 19 January 2018

பயத்துக்கு விடுதலை

பயத்துக்கு விடுதலை

உதயசங்கர்

ஊரிலேயே பெரிய தொலைதொடர்பு கோபுரத்தில் ஒரு பருந்து கூடு கட்டியிருந்தது. கூட்டில் இரண்டு பருந்துக்குஞ்சுகள் இருந்தன. நாள்முழுவதும் தாய்ப்பருந்து இரை தேடி இரண்டு பருந்துக்குஞ்சுகளுக்கும் ஊட்டி விட்டது. இரண்டு பருந்துக்குஞ்சுகளும் எதையும் வேண்டாம் என்று சொல்லாமல் நன்றாகச் சாப்பிட்டன. இப்போது அந்தக்குஞ்சுகள் நன்றாக வளர்ந்து விட்டன. இறகுகள் முளைத்து சிறகுகள் வளர்ந்து அழகாக இருந்தன.
தாய்ப்பருந்து குஞ்சுகளுக்குப் பறக்கக் கற்றுக் கொடுத்தது. மெல்ல தன்னுடைய மூக்கினால் ஒரு பருந்துக்குஞ்சை தள்ளிக் கூட்டின் விளிம்புக்குக் கொண்டு வந்தது. அந்தப் பருந்துக்குஞ்சு கூட்டிலிருந்து தானாகவே கீழே விழுந்தது. நேரே கீழே போய்க்கொண்டிருந்த குஞ்சின் சிறகுகள் தானாகவே மேலும் கீழும் அடிக்க ஆரம்பித்தன. பருந்துக்குஞ்சு இப்போது பறக்க ஆரம்பித்து விட்டது.
ஆனால் இன்னொரு பருந்துக்குஞ்சு கூட்டிலேயே பயந்து நடுங்கியது. கீழே எட்டிப்பார்க்கும். உடனே ஓடி கூட்டிற்குள் போய் உட்கார்ந்து கொள்ளும். தாய்ப்பருந்து உள்ளே இருந்து பருந்துக்குஞ்சை மூக்கினால் தள்ளும். பருந்துக்குஞ்சோ அம்மாவின் பின்னால் போய் ஒளிந்து கொள்ளும். தாய்ப்பருந்து ..பயப்படாதே.. நீ கீழே இறங்கினால் பறந்து விடலாம். கூட்டிலேயே இருக்க முடியாது. பருந்து என்றால் பறக்க வேண்டும். பறந்து பார். பறத்தல் இனிது. பறத்தல் அழகு என்று உற்சாகப்படுத்தியது.
பருந்துக்குஞ்சு அம்மாவிடம் அம்மா எனக்குப் பயம்மா இருக்கும்மா. இவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்தால் என்ன ஆகும்? நான் கூட்டிலேயே இருக்கேன். நீ சாப்பாடு கொண்டு வந்து கொடு. என்றது.
தாய்ப்பருந்து கவலையுடன் பருந்துக்குஞ்சைப் பார்த்தது. சரி இரண்டு நாட்கள் போகட்டும் என்று விட்டு விட்டது.
பருந்துக்குஞ்சுக்குப் பயம் போகவில்லை.
அன்று காலை விடிந்தது. தாய்ப்பருந்து பருந்துக்குஞ்சை தன் மூக்கினால் தள்ளியது. பருந்துக்குஞ்சு வரமாட்டேன் என்று முரண்டு பிடித்தது. தாய்ப்பருந்து தன் அலகினால் செல்லமாய் ஒரு தட்டு தட்டியது. பின்பு வேகமாக கூட்டிலிருந்து பருந்துக்குஞ்சைத் தள்ளியே விட்டது.
ஐயோ அம்மா என்று கத்தியபடியே கீழே வேகமாக விழுந்து கொண்டிருந்தது பருந்துக்குஞ்சு. திடீர் என்று அதன் சிறகுகள் அசைய ஆரம்பித்தன. காற்றில் சிறகுகளை விரித்து மிதந்தது. ஆகா! எவ்வளவு அழகு! பறத்தல் இத்தனை இனிமையா! இதற்காகவா பயந்து நடுங்கினோம். என்று வெட்கப்பட்டது. இப்போது பருந்துக்குஞ்சின் பயம் போயே போய் விட்டது.
தாய்ப்பருந்துடன் போட்டி போட்டுக்கொண்டு இரண்டு பருந்துக்குஞ்சுகளும் அதோ பறந்து கொண்டிருக்கின்றன.
பாருங்கள்!

 5+

No comments:

Post a Comment