Saturday 14 July 2018

கி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...


கி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...

உதயசங்கர்

கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு அரைமணிநேரம் மழை பெய்தது. காய்ந்து, கருகி, வெட்டை வெட்டையாய் விருவுகள் தெரிய நிதங்குலைந்து சுடுகாடு போல கொடூரமான அமைதி நிலை கொண்டிருந்த கரிசலில் உயிர்கள் துடிக்கத் தொடங்கின. வெயிலின் இசை முடிந்து விட்டது. ஒரே மாதிரி ராகம், தாளம், சுருதி, எதுவும் இல்லாத இசை. உடலையும் மனசையும் உருக்கும் இசை. கரிசல் காட்டு விவசாயி காட்டை உழுது காத்திருக்கிறான். உப்பு படிந்த வியர்வை அவனுடைய வீட்டின் தரையெங்கும் அவனுடைய உழைப்பைப் பற்றி ஓவியம் வரைந்து கொண்டிருந்தது. இன்று மழை. இடி. மின்னல். அவன் உடலும் உள்ளமும் குளிர்ந்தது. இனி காதுகளைக்கிழிக்கும் அந்த வெயிலின் இசை முடிவுக்கு வரும். அவன் உழுது போட்டிருக்கிற நிலத்திலிருந்து புதிய புதிய உயிர்கள் தோன்றும்.
 ராத்திரி ஒரே சத்தக்காடு. இரவு ஒரு இசைக்கச்சேரிக்குத் தயாராகிறது. கருமை கூடியிருக்கிற இந்த இரவில் நான் குமாரபுரம் ஸ்டேஷனில் நின்று எதிரே தெரியும் கரிசல் வெளியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இத்தனை நாள் தியானத்திலிருந்த உயிர்கள் மழையின் ஈரம் பட்டதும் உறக்கம் கலைந்து எழுந்தது போல ஒன்று போல மழலைக்குரலில் பேசுகின்றன. விதம் விதமான  ஏற்ற இறக்கங்களோடு பூச்சிகள் இசைக்கும். சிம்பனி இசை கரிசலின் மகத்துவத்தைச் சொல்கிறது. அந்த இசையின் ஸ்வரத்தில் நான் என்னை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருக்கிறேன். என் எதிரே தூரத்தில் விளக்கின் வெளிச்சம் மினுக்குகிறது. அது இடைசெவலில் புறப்பட்டு தமிழிலக்கியத்தில் பாய்ச்சிய புதிய  வெளிச்சம் என்று நம்புகிறேன்.
இடைசெவலிலிருந்து தமிழ் இலக்கியவெளியில் பரவிய புதிய வெளிச்சம் தமிழிலக்கியத்தைத் தலைகீழாய் புரட்டிப்போட்டது.  புதிய பாதைகளை உருவாக்கியது. அதுவரை மடிசஞ்சியான மத்திய தரவர்க்கத்தின் சடவுகளையே பாடுபொருளாகக் கொண்டிருந்த இலக்கியம் முதன்முதலாக கிராமங்களின் உயிர்வெளியைக் காட்டியது. சிறுகீறலாக ஷண்முகசுந்தரம் துவங்கிய அந்தக்கொழுமுனை இடைசெவலில் கி.ராவின் கைகளின்வழியே ஆழமாகவும் அகலமாகவும் உழுது ஏராளமான புதையல்களை வெளிக்கொண்டுவந்தது. யாரும் சென்றிராத தாம்போதிகளின் வழியே சென்று நாட்டார் இலக்கியத்தை, வட்டாரச்சொல் அகராதியை, பாலியல் கதையாடல்களை, சிறுவர் கதைகளை, சேகரித்து பண்பாட்டுக்களத்தில் புதிய காற்றாய் வீசிய அந்தப்புயல் இடைசெவலில் மையம் கொண்டிருந்தது. ஒரு பல்கலைக்கழகத்தின் ஒட்டு மொத்தப்பணிகளை தன் தோள்களில் சுமந்த கி.ரா. என்ற கி.ராஜநாராயணன் தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் ஏராளமான கொடைகளைத் தந்துள்ளார்.
வட்டார வழக்குகளை, விளையாட்டுகளை, சொற்பிரயோகங்களை, நாட்டார் கதைகளை, சிறுவர் கதைகளை, பெண் கதைகளை, நவீனக்கதைகளை, வேளாண் சமூக வரலாற்றை, களஞ்சியத்தை, தமிழுக்கு அளித்துள்ள மகத்தான ஆளுமை கி.ரா.
2.
1980- ஆம் ஆண்டு. கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு பரீட்சை எழுதி முடித்திருந்த சமயம். அதுவரை வீட்டுக்கு அருகில் இருந்த காந்திமைதானத்தில் நடக்கும் அரசியல் கூட்டங்களையும், இலக்கியப் பட்டிமன்றங்களையும், கவியரங்கங்களையும் ஆச்சரியத்துடன் வாய்பார்த்து கொண்டிருந்த எனக்குள்ளும் எழுத வேண்டும் என்ற பேராசைப்பேய் பிடித்தது. எல்லோருக்கும் போல கலாமோகினி கவிதையரசியை என்னிடம் அனுப்பி வைத்தாள். அவளுடைய கடைக்கண் பார்வை ஏற்படுத்திய ஹார்மோன்களின் துடிப்பினால் ஆழம் தெரியாமல் தமிழின் கரைகாண கடலுக்குள் குதித்தேன். நீச்சலும் தெரியாது. உயிரைத் தக்கவைக்க தத்தக்கா பித்தக்கா என்று கையையும் காலையும் அடித்துக் கொண்டிருந்தபோது தான் நண்பர் மாரீஸ் பள்ளிப்பிராயத்துக்குப் பிறகான நீண்ட இடைவெளியைக் கடந்து வந்து என்னைச் சந்தித்தார்.
அவர் தான் கோவில்பட்டி எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். தேவதச்சன், கௌரிஷங்கர், பிரதீபன், வித்யாஷங்கர், அப்பாஸ், ராமு, முருகன், நாடக நடிகர் மனோகர், பசப்பல் ராஜகோபால், என்று ஒரு குழாமை அறிமுகப்படுத்தினார். நிறைய புத்தகங்களையும் சிற்றிதழ்களையும், கையெழுத்துப்பத்திரிகைகளையும் வாசிப்பதற்கான சூழ்ந்லை கிடைத்தது. அப்போது நயினாவின் வேட்டி சிறுகதைத் தொகுப்பும், வாசகர் வட்டம் வெளியிட்ட கோபல்லகிராமம் நாவலும் வாசித்தேன். என்னால் நம்பமுடியவில்லை. அந்த மொழி, நடை, உத்தி, எல்லாம் புதுமையாக இருந்தது. மூளையின் அணுக்களில் ஒரு புதிய உணர்வு தோன்றியது. நான் அதைப்பற்றி என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தேன். கேட்டுக்கொண்டிருந்த மாரீஸ்
“ நாளைக்கி இடைசெவல் போவோம்… “ என்றான். மறுநாள் காலை நானும் அவனும்  இடைசெவலுக்குப் போனோம். நயினாவைச் சந்திக்கும்வரை எனக்கு எழுத்தாளர்களைப் பற்றி இருந்த சித்திரம் மிக மிக விசித்திரமானது. ஒழுங்கற்ற, விட்டேத்தியான, அசாதாரண நடைமுறை வாழ்க்கையும், பழக்கவழக்கங்களும் கொண்டவர்கள் என்று நினைத்திருந்தேன். அதில் பெருமளவு உண்மை இருந்ததை யதார்த்தத்திலும்  கண்டேன். ஆனால் நயினாவின் வீட்டில் என்னுடைய கற்பனைக்கு மாறான ஒழுங்கும் நேர்த்தியும் இருந்தது. புத்தகங்கள் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கடிதங்கள் தேதிவாரியாக இருந்தன. நயினாவின் சாய்வு நாற்காலித்துணி சுத்தமாக இருந்தது. வீட்டின் உள்ளே முற்றத்தில் இருந்த தொழுவம் சுத்தமாக இருந்தது. அமைதியும் சுத்தமும் அங்கே கோலோச்சிக் கொண்டிருந்தது.
ஈரிழைத்துண்டை மார்பில் போட்டமானிக்கு நயினா வந்து எங்களை வரவேற்றார். வெளியே பார்த்த சன்னலுக்கு எதிரே இருந்த சாய்வு நாற்காலியில் நயினா உட்கார்ந்தார். சன்னலில் இருந்து செய்யது பீடிக்கட்டை எடுத்தார். ஒவ்வொரு பீடியாக உருட்டிப்பார்த்து சில பீடிகளை ஒதுக்கினார். தேர்வு செய்த பீடிகளிலிருந்து ஒரு பீடியை எடுத்து அந்தப்பீடிக்கட்டுக்கு அருகிலேயே இருந்த கத்தரிப்பானால் அதன் சுருண்டு மடங்கியிருந்த நுனியைக் கத்தரித்தார். பின்னர் பீடியைப் பற்ற வைத்து இழுத்தார். அவருடைய இந்தச் செய்கைகள் எல்லாம் ஒரு தியானம் போல நடந்தது. நான் திறந்த வாய் மூடாமல் அவருடைய ஒரு அணக்கத்தையும் கவனித்துக் கொண்டிருந்தேன்.
மாரீஸ் மிக சகஜமாக நயினாவிடம் பேசினான். அடுக்களைக்குப் போனான். கணவதியம்மாவிடமிருந்து மோர் வாங்கி வந்தான். நாங்கள் குடித்தோம். நயினா மெல்லியகுரலில் நிறைய சங்கதிகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். ஒன்றிலிருந்து ஒன்றாக தொட்டுத் தொட்டு பேசிக்கொண்டிருந்தார். எனக்கு அப்போது அவர் பேசியதில் கொஞ்சமாவது புரிந்ததா என்று தெரியவில்லை. அமைதியாக அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
அப்போது தான் கரிசல் வழக்குச்சொல் அகராதியைத் தொகுத்து வருவதாகச் சொன்னார். கிளிப் வைத்த பரீட்சை அட்டையில் நிறையக் காகிதங்களில் கரிசல் வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன.
“ அகர வரிசைப்படி எழுதறது பெரிய வேலையா இருக்கு.. நீங்க அதைச் செய்ய முடியுமா?..”
என்று கேட்டார். எங்களுக்குத் தலைகால் புரியவில்லை. மறுநாளிலிருந்து ஒருபத்து நாட்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். மாரீஸ், முருகன், நான், முன்றுபேரும் காலையில் பத்துமணிக்குப் போய்விடுவோம். போனதும் ஒரு கடுங்காப்பி அல்லது மோர், மதியம் நல்ல சாப்பாடு, சாயந்திரம் கருப்பட்டிக்காப்பியும் காராச்சேவும் சாப்பிடுவோம். நாலு ஐந்து மணி வரைக்கும் உட்கார்ந்து எழுதிக்கொடுப்போம். எழுதியது கொஞ்சம் தான் பேசிக்கொண்டிருந்தது தான் அதிகம் என்று நினைக்கிறேன்.
கோவில்பட்டியில் கௌரிஷங்கர், தேவதச்சன், மனோகர், வித்யாஷங்கர், மாரீஸ், உதயசங்கர், நாறும்பூநாதன், சாரதி, முத்துச்சாமி, அப்பணசாமி, முருகன், எல்லோரும் சேர்ந்து சிருஷ்டி என்று ஒரு வீதி நாடகக்குழுவை உருவாக்கினோம். அதில் மௌனநாடகமாக பேரா.ராமனுஜத்தின் இசைநாற்காலி, தேவதச்சனின் பத்துரூபாய், பூமணியின் வலி, என்று நாடகங்களை உருவாக்கியிருந்தோம். தமிழ்நாட்டில் அப்போது தான் வீதி நாடகக்குழுக்கள் அங்கொன்றுமாய் இங்கொன்றுமாய் உருவாகிக்கொண்டிருந்த நேரம். சிருஷ்டி கலைக்குழுவின் நாடகங்களின் முதல் அரங்கேற்றம் இடைசெவலில் தான் நிகழ்ந்தது. ஒரு மாலைவேளை நயினா தன்னுடைய மெல்லிய குரலில் சத்தமாக
“ கோவில்பட்டியிலிருந்து நாடகம் போட வந்திருக்காங்க… வாங்க..வாங்க… “ என்று ஊர் அழைப்பு செய்ய கோவிலுக்கு முன்னால் இருந்த மந்தைத்திடலில் கூட்டம் கூடிவிட்டது. அங்கே பேண்ட், சட்டை, ஸ்டெப் கட்டிங், ஹீல்ஸ் செருப்பு, போட்டிருந்த இளைஞர்கள் நாங்கள் நாடகங்களை அரங்கேற்றினோம். நாடகநிகழ்வுக்குப்பின்னால் நாடகவிமரிசனமும் நடந்தது. அதே போல சமீபத்தில் அமரரான கவிஞர், ஓவியர், அஃக் பரந்தாமனை அழைத்து பிக்காசோ நூற்றாண்டு ஓவியக்கண்காட்சி நடத்தினோம். கார்ட்டூன் கண்காட்சி ஒன்றும் நடத்தினோம். கோவில்பட்டியில் கலை, இலக்கிய பண்பாட்டு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டேயிருந்தன. கரிசல் இலக்கியத்தின் காத்திரமான படைப்பாளிகளாக உருவாகிக் கொண்டிருந்தோம். நயினா எல்லோரிடமும் மிகப்பெருமிதமாக கரிசல் இலக்கியப்படை பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். பூமணி தன்னுடைய நாவலில் அவரை தன்னுடைய முன்னத்தி ஏர் என்றார். நாங்கள் நயினாவை எங்கள் பிதாமகராகப் போற்றினோம்.
கோவில்பட்டியில் மிகப்பெரிய எழுத்தாளர்குழாம் உருவாகவும் எல்லாவிதகலை முயற்சிகளைச் செய்து பார்க்கவும் நயினா பின்னணியில் எங்களுக்கு ஊக்கசக்தியாக இருந்தார் என்பதில் எள்ளளவும் மிகையில்லை.
3.

குமாரபுரம் ஸ்டேஷனுக்கு வெளியே வேம்பின் அடியில் கிடக்கும் சிமெண்ட் பெஞ்ச் காலத்தின் கரையேறிக் கிடக்கிறது. காலத்தின் பழுப்பு நிறத்தின் சிதறல்களில் கு.அழகிரிசாமியும் அவருடைய அத்யந்த நண்பரான கி.ரா.வும் சிறுவர்களாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். காற்றில் வேம்பின் மஞ்சள் நிறப்பழங்கள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன. எதிரே விரிந்து வானத்தை அண்ணாந்து பார்த்து குடைபிடித்துக் கொண்டிருக்கும் கருவை மரத்தில் ஒரு கொண்டைக்குருவி கீச்சிட்டுக் கொண்டிருக்கிறது. கி.ரா. அந்தக்குருவியை உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறார். பூஞ்சிட்டுகள் அருகிலிருந்த பன்னீர் மரத்தில் கிளைகளில் தவ்விக் கொண்டிருந்தன. கு.அழகிரிசாமியின் தொண்டையிலிருந்து ஏதோ ஒரு ராக ஆலாபனை மெல்ல எட்டிப்பார்க்கிறது. விளாமரத்தின் கிளையில் ஒரு குயில் கூவிக்கொண்டிருக்கிறது. கி.ரா. என்ற வெங்கடேசுக்கு பறவைகளின் மீது அலாதி ஆர்வம் தோன்றுகிறது. எதிரே இருக்கும் புதரிலிருந்து எட்டிப்பார்க்கும் கௌதாரியை அதன் குஞ்சுகளை ஆச்சரியத்துடன் விழிகள் விரியப் பார்க்கிறான். இந்நேரம் அவனுடைய மாமா திருவேதி நாயக்கர் இருந்தால் கவணால் அந்தக்குயிலை அடித்து வீழ்த்தியிருப்பார். இன்று மதியம் கம்பங்கஞ்சிக்கு வெஞ்சனமாயிருக்கும் அந்தக்குயில். அவன் சிரித்தான். அந்தக்குயிலும் சிரித்தது.
தினமும் இடைசெவல் பள்ளிக்கூடம் விட்டதும் தெக்கேயிருந்து வருகிற மெயில் வண்டியைப் பார்ப்பதற்கு இடைசெவலிலிருந்து குறுக்கே காட்டுவழியாக வெங்கடேசும், அசோக்கும் ஓடி வருவார்கள். தண்டவாளத்திலிருந்து தூரமாய் நின்று கொண்டு மெயில் வண்டியில் போகிற பயணிகளுக்கு கையை ஆட்டி டாட்டா காட்டுவார்கள். பதிலுக்கு பயணிகள் காட்டுகிறார்களோ இல்லையோ ரயில் டிரைவரும், கார்டும் பச்சைக் கொடியை அசைத்து அவர்களுக்கு டாட்டா காட்டுவார்கள். பொசல் வண்டியில் போகிற சட்டைக்காரடிரைவர் இப்போதும் அவர்களுக்கு ரொட்டியும் பிஸ்கெட்டும்போடுகிறார். அவர்கள் நீண்ட கம்பின் நுனியில் மல்லித்தழையைக் கட்டி நீட்டுகிறார்கள். அவர்கள் இருவருக்கும் பொசல்வண்டி பார்த்து விட்டால் ஆச்சரியமாக இருக்கும். எம்மாம் நீளம்! டொடக் டொடக் டொடக்.. என்று போய்க்கொண்டேயிருக்கும். அசோக் ஆளே இல்லாத அதற்கும் டாட்டா காட்டுவான்.
பள்ளிக்கூட லீவு நாட்களில் ஆடுமேய்க்கும் வடிவேலுவுடன் சேர்ந்து காடோ செடியோ என்று அலைவார்கள். வடிவேலு காட்டில் அலைந்து திரியும்போது மட்டும் தான் பாடுவான். அந்தப்பாட்டு அவனே கட்டியது. அவன் பாட்டுக்கட்டும் அழகே தனீ அழகு. கையில் வைத்திருக்கும் குச்சியால் தரையில் தோண்டிக்கொண்டேயிருப்பான். அப்படித்தோண்டத் தோண்ட அவனுடைய வாயிலிருந்து வார்த்தைகள் அடுத்தடுத்து வந்து கொண்டேயிருக்கும். அப்படியே ராகத்தை இழுத்து வளைத்துப் பாடுவான்.
வெத்திலை வெத்திலை வெத்திலையோ
கொழுந்து வெத்திலையோ
கோவில்பட்டிக் கொழுந்து வெத்திலையோ
எப்படி அவன் பாடுகிறான்? எப்படி ராகம் அவனுடைய தொண்டையிலிருந்து இழைகிறது என்று ஆச்சரியத்துடன் வடிவேலின் வாயையே பார்த்துக் கொண்டிருப்பான். அசோக்.  கலை எப்படி எங்கே ஏன் தோன்றுகிறது என்று யாரால் சொல்ல முடியும்? ஆடுகள் கரிசலில் பச்சையைத் தேடி அலைந்து கொண்டிருக்கும்.
திடீரென்று காட்டுக்குள் காணாமல் போகும் வடிவேலு எங்கே போவான்? என்ன செய்வான்? இருட்டு அவனுக்குப் பயமாக இருக்காதா? என்ன சாப்பிடுவான்? எப்படித்தூங்குவான்? வெங்கடேசு யோசித்தான். ஒருவேளை காட்டின் இருட்டிலிருந்து தான் அவன் வார்த்தைகளை, பாடல்களை, ராகங்களை எடுத்துக் கோர்த்து வைத்திருக்கிறானோ? கலையும் கலைஞர்களும் உன்மத்தம் கொண்டவர்கள் தானோ? தனிமையின் சிகரத்திலிருந்தே கலைஞன் தன் பாடல்களைப்பாடுகிறான்.
குமாரபுரம் ஸ்டேசனுக்கு தண்ணீர் குடிக்க வருகிற வடிவேலுவை நானும் பார்க்கிறேன். அவனிடம் கி.ரா.வைப் பற்றிக் கேட்கிறேன். இடைசெவல் கண்மாய்க்கரையில் நிற்கும் ஆலமத்தின் அடியில் தூரத்தில் தெரியும் குருமலையைப் பார்த்து ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார் என்கிறான். அவனுடைய பாடல்கள் எல்லாம் அவர் சொல்லித்தந்தது என்கிறான்.
இப்போதும் செந்திவேல் அம்மனைக்குளிப்பாட்டும்போது கி.ரா.வைத்தேடுகிறான். கோவில் நைவேத்தியத்தை உருளியின் கைப்பிடியில் கரண்டிக்காம்பைக் கொடுத்து தூக்கிக் கொண்டு வருகிறான். வெங்கடேசு எத்தனை பறவைகளைப் பார்க்கிறான்! அத்தனை பறவை முட்டைகளையும் சேகரித்து வைத்திருக்கிறான். காடை, கௌதாரி, கிளி, பருந்து, மயில், தவிட்டுக்குருவி, கொண்டைக்குருவி, கருங்குருவி, வாலாட்டிக்குருவி, பூஞ்சிட்டு, தேன்சிட்டு, நீலச்சிட்டு, என்று அத்தனை முட்டைகளையும் சேகரித்து வைத்திருக்கிறான்.
என் கனவில் திருவேதி நாயக்கரும், அசோக்கும், செந்திவேலும், வெங்கடேசும், வடிவேலுவும் திக்கம்மாளூம் வருகிறார்கள். அவர்கள் என்னிடம் கி.ரா.வைப் பார்த்தீர்களா? என்று கேட்கிறார்கள். அவர் புதுச்சேரியில் சௌக்கியமாக இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன். காகங்கள் கலைந்து கலவரம் அடைகின்றன. திருவேதி நாயக்கர் வெங்கடேசு.. என்று வேப்பமரத்தைப் பார்த்து சிரிப்புடன் அழைத்துக் கொண்டிருக்கிறார்.
நள்ளிரவு. கரிசல் பூச்சிகளின்  இசை அடங்கி விட்டது. எப்போதாவது ஒரு குரல் எழுந்து அடங்குகிறது. அமைதியின் போர்வை எல்லாவற்றையும் போர்த்தி விட்டது. குருமலை கணவாய்க்காற்று குளிர்ந்து வீசுகிறது. நான் பொசல்வண்டியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். அந்த வண்டி வந்தால் தான் வெங்கடேசும் அசோக்கும் வருவார்கள். அவர்கள் வந்தால் தான் எங்கள் அன்புக்குரிய கி.ரா. வருவார். ரயில்வே கேட்டின் மீது கைகளை வைத்துக் கொண்டு ஓடுகிற ரயிலின் ஒளிநிழல் விளையாட்டுகளை ரசித்துக் கொண்டிருப்பார். இன்னும் என்னென்ன வகைமையில் எழுத வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருப்பார். நீண்ட தார்ச்சாலையின் ஓரத்தில் வளர்ந்துள்ள சீம்புல் அவருக்குத் தலையாட்டி வணக்கத்தைச் சொல்கிறது. அவர் நடந்து கொண்டிருக்கிறார். நடக்க நடக்க பூக்கிறது இலக்கியம். நானும் வணங்குகிறேன். என்னுடைய பிதாமகனை.
என் எதிரே இடைசெவல்.
உண்மையில் இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில் தூரம் அதிகமில்லை.

நன்றி - ஓவியம் உ.நவீனா

கி.ரா. என்னும் மானுடம் கி.ரா.95 தொகுப்பு நூல்.






Sunday 8 July 2018

ஒரு புரட்டின் வரலாறு



ஒரு புரட்டின் வரலாறு

உதயசங்கர்

வேதகால ஆரியர்கள் மாட்டிறைச்சி தின்றதில்லை. குறிப்பாக பசுவின் இறைச்சியைச் சாப்பிட்டதில்லை. இஸ்லாமியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த பிறகுதான் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் வந்ததாக இந்துத்துவவாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். கிட்டத்தட்ட முஸ்லீம் சமூகத்தின் அடையாளமாகவே மாட்டிறைச்சியைச் சொல்கிறார்கள். அதோடு மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் கீழானவர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள் ஒருபடி தாழ்ந்தவர்கள் என்ற மதிப்பீட்டையும் உருவாக்குகிறார்கள். இதன் தொடர்ச்சியாக கோசாலை, பசு பாதுகாப்பு இயக்கம், என்று என்னென்னவோ செய்துகொண்டிருக்கிறார்கள். செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக கொலை செய்தல், மாட்டிறைச்சியை வீட்டில் வைத்திருந்தார் ( அது ஆட்டிறைச்சி என்று பின்னர் தெரிந்தது ) என்பதற்காகக் கொலை செய்தல், என்று இன்றைய வலதுசாரி அரசாங்கத்தின் ஆதரவோடு பசுவையும், மாடுகளையும் புனித விலங்குகளாக மாற்றுகிற திட்டத்தை குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான பகையாக மாற்றுகிற நிகழ்ச்சிநிரலாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் வேதகால ஆரியர்கள் பசு இறைச்சியைச் சாப்பிட்டார்களா? மாட்டிறைச்சி இஸ்லாமியர்களோடு மட்டும் தான் தொடர்புடையதா? இதைப் பற்றி வேதங்கள் என்ன சொல்லுகின்றன?
ஆதியிலிருந்தே மனிதன் மாமிசபட்சணி தான். வேட்டைச்சமூகமாகத்தான் அவனுடைய ஆதிகால கம்யூன் வாழ்க்கை இருந்தது. கூட்டமாகச்சென்று கண்ணில் படுகிற விலங்குகளைக் கொன்று கூடிப்பகிர்ந்து உண்பது தான் அன்றாட வாழ்க்கை. இந்த வேட்டைச்சமூகத்திலிருந்து தான் கலை தோன்றியது. வேட்டைச்சமூக அநுபவங்களைப்பகிர்ந்து கொள்ள மொழி உருக்கொள்ள ஆரம்பித்தது. அப்படி விலங்குகளை வேட்டையாடுகிறபோது விதிவிலக்கில்லாமல் எல்லாவிலங்குகளையும் தான் அவர்கள் வேட்டையாடினார்கள். இது உலகம் முழுவதும் நிகழ்ந்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆடு, மாடு, கோழி, போன்ற மிருகங்களை வளர்ப்பவர்கள் உணவுக்காக அவற்றைச் சாப்பிட்டுவது இயல்பும் கூட. இறைச்சியுணவு மிகச்சுலமாக மனிதர்களுக்குத் தேவையான புரதச்சத்தை அளித்தது. அதனாலேயே அவனுடைய மூளையும் உடலும் முழுமையான வளர்ச்சியடைந்தது என்பது அறிவியலாளர்களின் கருத்தும் கூட. எனவே ஆதியில் அனைவரும் மாமிசம் தின்றவர்கள் தான்.
பண்டைய காலத்தில் பாரசீகத்தில் ( ஈரான் ) இருந்த ஜொராஸ்துஸ்டிரா சமயத்தைச்சேர்ந்த ஆரியக்கூட்டம் இந்தியாவுக்குள் நுழைந்தபோது அவெஸ்தா என்ற அவர்களுடைய புனிதநூலில் இருந்த பிரார்த்தனைப் பாடல்களையும் தெய்வங்களையும் யாகங்களையும் கூடவே அழைத்து வந்தனர். ஆரியர்கள் அரைநாடோடிகளாக, ஆடுமாடுகளை மேய்த்துக்கொண்டு மேய்ச்சல் நிலங்களைத் தேடிக்கொண்டு புராதன விவசாயம், விலங்குகளையும் கால்நடைகளையும் பலி கொடுக்கும் சமயச்சடங்குகளைக் கொண்ட இந்தோ அய்ரோப்பியர்கள். மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வெவ்வேறு காலகட்டங்களில் வந்தவர்கள். இனக்குழுச்சமூகமாக வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் இங்கே அவர்களை விட நாகரிகத்தில் மிக உயர்ந்த காலகட்டத்தில் இருந்த மக்களைக் கண்டு அஞ்சினார்கள். நிலையான சமூகப்பொருளாதாரக்கட்டமைப்பு கொண்ட சமூகத்தின் மேல் பொறாமை கொண்டனர். ஆரியர்கள் கலாச்சாரரீதியிலான வேறுபாட்டையே முதன்மைப்படுத்தினர். எனவே தான் அந்நியர் என்றும் தாசர் என்றும் தஸ்யூ என்றும் அசுரன் என்றும் இங்கிருந்த மக்களை கீழ்மைப்படுத்தினர். குறிப்பாக வேதங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள், யாகங்களை மறுப்பவர்கள், இந்திரன், அக்னி, சோமன், போன்ற ஆரியர்களுடைய தெய்வங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களை வெல்லுவதற்கான வலிமையை வேண்டியே வேதப்பாடல்கள் பாடப்பட்டன. கி.மு. 1500 – கி.மு.600 க்கும் இடைப்பட்ட காலங்களில் ஆரியர்களின் சமயம், சடங்குகள், யாகங்கள், குறித்த பாடல்களும் கொண்டது தான் ஆதிகால ரிக் வேதம். நான்கு வேதங்கள், பிராமணங்கள், சம்கிதைகள், ஆபஸ்தம்ப சூத்திரங்கள் எல்லாவற்றிலும் பசு, எருது, காளை, முள்ளம்பன்றி, காண்டாமிருகம் இவற்றைப் பலியிடுகிற சடங்குகளைப் பற்றிப்பேசுகின்றன.
 யாகச்சடங்குகளில் மிருகங்களைப் பலி கொடுத்தல் தவிர்க்க முடியாத ஒரு அம்சம். ரிக்வேதப்பாடல்களில் பசுவைக்குறிக்கும் சொல் 176 முறை வருகிறது. காலநடைகள் தொடர்பான சொற்கள் கிட்டத்தட்ட 700 முறையாவது வருகிறது. கால்நடைகளை பலி கொடுக்கும் பசுபந்தா என்ற வேதகாலச்சடங்கு பற்றிக் குறிப்பிடப்படுகிறது. வேதகாலக்கடவுளர்களான இந்திரன், அக்னி, சோமன் ஆகிய மூவருமே மாட்டிறைச்சி மீது பேராசை கொண்டவர்கள் என்று வேதப்பாடல்களில் குறிப்பிடப்படுகிறது.
ரிக் வேதப்பாடல் –( 10-86 -14 ) வேதகாலக்கடவுளான இந்திரன் “ அவர்கள் எனக்காக பதினைந்து இருபது எருதுகளைச் சமைத்தார்கள் “ என்று சொல்கிறான்.
ரிக்வேதப்பாடல் ( 5-29.7 ) இந்திரன் தீயினால் சுடப்பட்ட முன்னூறு அல்லது ஆயிரம் எருமைகளைச் சாப்பிட்டதாகச் சொல்கிறது.
ரிக் வேதப்பாடல் ( 8 – 43.11 ) அக்னிக்கு எருதும் மலட்டுப்பசுவும் தான் விருப்பமான உணவாக இருந்தன என்று கூறப்பட்டுள்ளது.
அஸ்வம்,( குதிரை )  ரிஷபம், ( காளை ) உக்‌ஷன் ( எருது ) வசு ( மலட்டுப்பசு ) மேஷம் ( ஆட்டுக்கிடா ) போன்றவை அக்னி தேவனுக்குப் பலியிடப்பட்டிருக்கின்றன.
அஸ்வமேதயாகத்தில் முதன்மையானது குதிரையைப் பலியிடுதல் பின்னர் 600 மிருகங்களை பசு, காளை, எருமை, ஆடு, காட்டுப்பன்றிகள், பறவைகள், பலியிடப்பட்டன. யாகத்தின் இறுதிக்கட்டத்தில் 21 மலட்டுப்பசுக்களைப் பலியிட்டனர். ( மகாபாரதம், ராமாயணம் நினைவு கொள்க )
கோமேத யாகத்தில் பசுவைப்பலி கொடுத்து கொல்லப்பட்ட பசுவின் நெய்யை இறந்து போன முன்னோர்களுக்காக படைப்பார்கள். யாகத்தில் கொல்லப்பட்ட பசு இறைச்சியை அந்த யாகத்தில் பங்கு பெற்றவர்களுக்குக் கொடுப்பார்கள்.
அதேபோல வாஜபேயம் யாகச்சடங்குகளில் மதுவும் மாமிசமும் ராஜசூயம் யாகச்சடங்கில் சூதாட்டமும், முக்கியமானது. ( மகாபாரதத்தை நினைவு கொள்க ) அந்தச்சடங்கின்போது பசுவைப்பலியிடும் யாகச் சடங்கான கோசவா தவிர்க்க முடியாதது.
யாகங்களில் பலியிடப்படும் விலங்குகளை எப்படி வெட்ட வேண்டும் என்பதைப்பற்றியும், அவற்றின் இறைச்சியை எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் ஆத்ரேய பிராமணத்தில்,
“ யாகத்தில் பலியிடும் விலங்கை புரோகிதர்களுக்கிடையில் பங்கிடுவது பின்வரும் முறையிலாகும். தாடை எலும்புகளையும், நாக்கையும் பிரஸ்தோருக்குக் கொடுக்க வேண்டும். கழுகின் வடிவிலுள்ள இதயத்தை உத்கதாவுக்குக் கொடுக்க வேண்டும். கழுத்தும் உள்நாக்கும் பிரதிகர்த்தாவுக்கு, வலது இடுப்பின் கீழ்ப்பாகம் ஹோதாவுக்கு, இடது பாகம் பிரம்மாவுக்கு, வலது தொடை மைத்ரவருணனுக்கு, இடது தொடை பிராமணச்சாம்ஸிக்கும், தோளின் வலது பாகம் அத்வர்யூவுக்கும், இடது பாகம் மந்திரங்கள் சொல்ல உதவுபவர்களுக்கு.. “ என்று 36 பாகங்களாக யாக விலங்கை பகிர்ந்து உண்டனர் என்று விளக்கப்பட்டிருக்கிறது.
ஆபஸ்தம்ப சூத்திரத்தில், கறவைப்பசுவுடைய காளையுடைய மாமிசம் பார்ப்பனர்கள் உண்பதற்குரியது என்றும்
உடும்பு, ஆமை, பன்றி, முள்ளம்பன்றி, காண்டாமிருகம், முயல், போன்ற மிருகங்களை பார்ப்பனர்கள் உண்ணலாம். என்றும் கூறப்பட்டிருக்கிறது.
விருந்தினர்களை கௌரவிக்க மதுவர்கம் அல்லது அர்கியம் என்ற சடங்கு பின்பற்றப்பட்டதை பிற்கால வேதநூல்கள் குறிப்பிடுகின்றன. இந்தச்சடங்கானது விருந்தினர்களுக்கு விருந்தளிக்க விருந்துக்குப் பொருத்தமான பசுக்கள் என்று பொருள் தரும் அதிதினிர் என்ற வார்த்தை ரிக்வேதப்பாடலில் ( 10-68-3 ) குறிப்பிடப்படுகிறது. மதுபர்கத்தின் முக்கிய அம்சங்களாக தேனும் தயிரும் மாட்டிறைச்சியும் இருந்தன. விருந்தினர்களுக்காக பசுவைக் கொல்பவர்களுக்கு அதிதிக்வா என்ற பெயரும், விருந்தினர் வந்தால் விருந்துக்காக பசு கொல்லப்படவேண்டும் என்பதினால் விருந்தினர்களை கோக்னா ( பசுவைக் கொல்பவன் ) என்ற சொல் வழங்கப்பட்டு வந்தது.
சீமந்தம், உபநயனம், சிரார்த்தம், போன்ற அன்றாட வாழ்வியல் சடங்குகளிலும் கூட மாடுகள் பலியிடப்பட்டிருக்கின்றன.
ஆக வேதகாலத்தில் பசு புனிதமானதாக இல்லை. வேதகால ஆரியர்கள் பசு உள்ளிட்ட அனைத்து மிருகங்களையும் பலியிட்டு சாப்பிட்டிருக்கிறார்கள்.
வேதகாலத்தின் பிற்பகுதியில் கால்நடைப்பொருளாதார முறையிலிருந்து நிலையான விவசாயப்பொருளாதார முறைக்கு ஆரியர்கள் மாறிய போது நூற்றுக்கணக்கில் விலங்குகளைப் பலியிடும் வழக்கத்துக்கு மாற்றுச்சிந்தனை தோன்றியது. விலங்குகளுக்குப் பதிலாக பாயாசம் விலங்குகளைப்போன்ற உருவபொம்மைகள், அரிசி, பார்லி, போன்ற வேறு வேறு பொருட்கள் யாகச்சடங்குகளில் படையலாகப் பயன்படுத்தப்பட்டன.
மனு சாஸ்திரத்தில் எவையெல்லாம் சாப்பிடத்தகுந்தவை எவையெல்லாம் சாப்பிடத்தகாதவை என்று விரிவாகக்குறிப்பிடுகிறது. முள்ளம்பன்றி, முள்ளெலி, உடும்பு, காண்டாமிருகம், ஆமை, முயல், ஒட்டகம், மற்றும் தாடையில் பல் இருக்கும் வீட்டு விலங்குகள் அனைத்தையும் சாப்பிடலாம். அதேபோல வேள்விச்சடங்குகளில் மாமிசம் சாப்பிடுவது தெய்வக்கட்டளை என்றும் மற்ற சமயங்களில் அது ராட்சசக்காரியம் என்றும் மனு கூறுகிறார்.
சிரார்த்தத்தின் போது முயல், வெள்ளாடு, பன்றி, மறிமான், மான் செம்மறியாடு, ஆகிய விலங்குகளின் இறைச்சியைப் படையல் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று விஷ்ணு புராணம் சொல்கிறது. திருவிழாவ்ன் போது எருமைகளைப்பலியிடும்படி தேவி புராணம், கருட புராணம், ஸ்கந்த புராணம், பவிஷ்ய புராணம் ஆகிய புராணங்கள் பரிந்துரை செய்கின்றன.
பௌத்தம் தழைத்தோங்கியிருந்த மௌரியர் காலத்துக்குப்பின்பு பார்ப்பனீயம் மீண்டு எழுந்த குப்தர் காலத்தில் மகாபாரதமும் ராமாயணமும் ஒழுங்கமைப்பட்டன. இரண்டு இதிகாசங்களிலும் மாட்டிறைச்சி பற்றிய குறிப்புகள் ஏராளமாய் வருகின்றன. மகாபாரத்தத்தில் ஆதிபர்வத்தில் பார்ப்பனர்களுக்கு உணவளிப்பதற்காக காட்டில் மிருகங்களை வேட்டையாடியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
மாட்டிறைச்சியையும் உணவு தானியங்களையும் பார்ப்பனர்களுக்குக்கொடுத்து ஈடு இணையற்ற புகழைச் சேர்த்துக்கொண்ட மன்னனான ரந்திதேவரின் அரண்மணையில் தினம் இரண்டாயிரம் பசுக்கள் கொல்லப்பட்டதாக வனபருவத்தில் கூறப்பட்டிருக்கிறது. கொல்லப்பட்ட பசுக்களின் ரத்தம் கர்மாவதி ஆறாகப் பெருக்கெடுத்தாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ராமாயணத்தில் தனக்கு குழந்தைப்பேறு வேண்டும் என்பதற்காக தசரதன் நடத்திய வேள்வியில் அனைத்து மிருகங்களையும் பலியிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமனும் லட்சுமணனும் காட்டு மிருகங்களை வேட்டையாடியதான செய்திகள் ஏராளமாக வருகின்றன. இறைச்சி மீது சீதை கொண்ட ஆர்வம் தான் மானை வேட்டையாடச்சொல்லி ராமனைத் தூண்டுகிறாள்.
வேதச்சடங்குகளை மறுத்து அகிம்சையைப் போதித்த பௌத்தமும் சமணமும் கூட மாட்டிறைச்சியையோ, மற்ற விலங்குகளின் இறைச்சியையோ முற்றிலும் மறுத்து ஒதுக்கவில்லை. ஏன் புத்தரே கூட கெட்டுப்போன பன்றி இறைச்சியைச் சாப்பிட்டதால் புட்பாய்சன் ஆகி இறந்து போனார். மகாபரிநிப்பான சுத்தாவிலும், அங்குத்தர நிகாயத்திலும், சூசுரா நிகாயத்திலும் இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. புத்தருக்குப்பின்னால் பௌத்தம் மகாயானம், ஹீனயானம் இரண்டு பிரிவுகளாகப்பிரிந்த போது ஹீனயானம் மாட்டிறைச்சி உட்பட அனைத்து இறைச்சியுணவையும் சாப்பிடுவதை அநுமதித்தது.
சமணத்திலும் கூட இறைச்சியுணவை சமணர்கள் சாப்பிட்டதற்கான ஆதாரங்கள் ஆகாரங்க சூத்திரத்திலும் தாசவைகாலிக சூத்திரத்திலும், விபாக சூத்திரத்திலும், சூத்திர கிருதாங்க சூத்திரத்திலும் காணமுடிகிறது.
கி.பி. 500 ஆம் ஆண்டுகளுக்குப் பின்பு தான் பார்ப்பனர்கள் பசுக்களைப் பலியிடும் சடங்குகளை கண்டனம் செய்யும் கலிவர்ஜியா என்ற விலக்க வேண்டிய சடங்குகள் என்ற கருதுகோள் உருவாகி வந்தது. பிற்கால தர்மசாஸ்திரங்களில் தான் பசு புனித விலங்காகவும், அதன் மூத்திரம், சாணி, பால் தயிர், நெய், ஆகிய ஐந்து பொருட்களும் பஞ்சகவ்யா புனிதமானதாகவும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டது. வரலாற்றின் மிகச்சமீபகாலம் வரை பசு எல்லாவீட்டு வளப்பு விலங்குகளைப் போலவே பாவிக்கப்பட்டது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனாலும் மாட்டிறைச்சி உண்பதை முற்றிலும் விலக்கிக்கொள்ள முடியவில்லை. 1874- ஆம் ஆண்டு வரையிலும் கூட வேள்விச்சடங்குகளில் பசுக்களையும் எருமைகளையும் பலியிடுகிற வழக்கம் ராஜஸ்தானில் இருந்திருக்கிறது.
இஸ்லாமியர்கள் வந்தபிறகுதான் மாட்டிறைச்சி இந்தியாவுக்குள் வந்தது என்பது எத்தகைய வரலாற்று பிழை என்று தெரிகிறது. பார்ப்பனீயம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளச் செய்யும் ஆபத்தான தந்திரங்களில் இதுவும் ஒன்று. உணவுக்கான அவரவர் உரிமையில் யாரும் தலையிடக்கூடாது என்று உரத்து முழங்க வேண்டிய காலம் இது.

நன்றி - வண்ணக்கதிர்


Monday 2 July 2018

இந்துக்களின் புனித நூல் எது?


இந்துக்களின் புனித நூல் எது?

உதயசங்கர்

உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என்றால், இஸ்லாமுக்கு குரான், பார்சிகளுக்கு ஜெண்ட் அவஸ்தெ. அதே போல எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு கடவுள், ஒரு இறைத்தூதர், ஒரு மதத்தலைவர், ஒரு புனித ஸ்தலம் இருக்கின்றன. பிதாவின் பரிசுத்த ஆவி, யேசு, போப் ஆண்டவர், வாடிகன் நகரம், என்றோ கடவுள், அல்லா, இமாம், மெக்கா, என்றோ இருக்க, இந்துக்களுடைய கடவுள், இறைத்தூதர், மதத்தலைவர், புனித ஸ்தலம் என்ன? என்ற கேள்விக்கு விடை தேடலாம். ஆங்கிலேயேரின் வருகைக்கு முன்பு ஆதியில் ஆரியர்களின் வேதங்கள் அவர்களுக்குப் புனித நூல். ஆரியர்களின் தெய்வம் இந்திரன். வேதப்பாடல்களை இயற்றிய சப்தரிஷிகளே இறைத்தூதர்கள். கைபர்,போலன் கணவாய் வழியாக கண்ணுக்குத் தெரியாத அப்பாலை நிலங்களில் இருந்து வந்ததினால் அவர்களுடைய புனிதஸ்தலங்களை இமயமலை தாண்டி வானத்தில் வைத்தார்கள். அதுமட்டுமல்ல ஆரியர்கள் தங்களை இந்துக்கள் என்று ஆரம்பத்தில் சொன்னதுமில்லை. எழுதியதுமில்லை. வேதப்பாடல்களில் இந்து என்ற வார்த்தையும் வரவில்லை. வேதங்களை ஆரியக்குடும்பத்தில் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் கற்றுக்கொள்ள அநுமதிக்கவில்லை. வேதங்கள் புனிதமானவை. காற்றிலே வந்திறங்கியவை. கேள்விகளுக்கு அப்பாற்பட்டவை. பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் வேதங்களைக் கற்றாலோ, கேட்டாலோ அவர்களின் நாக்கை அறுத்து, காதில் ஈயத்தைக்காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று எழுதி அதை நடைமுறைப்படுத்தியவர்கள்.
வேதங்களில் யாகங்கள் நடத்துகிற நடைமுறைகளைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்ததாலே தத்துவச்சாரமாக பிரம்மத்தையும், உபநிடதங்களையும், பிரமாணங்களையும் உருவாக்கியவர்கள் ஆரியர்கள். காலப்போக்கில் வேதங்கள் காற்றில் பிறந்தவை என்று சொன்னவர்கள் ஸ்மார்த்த மரபினர்களாகவும், சிவன் அருளியது என்று சொன்னவர்கள் சைவர்களாகவும், விஷ்ணுவே சொல்லியது என்று சொன்னவர்கள் வைணவர்களாகவும் ஆனார்கள்.  இவையெல்லாம் என்னவென்றே தெரியாத பெரும்பான்மையான பௌத்த, சமண, சாங்கிய, தாந்திரீக, பூதவாத, தேகவாத, நாட்டார் தெய்வமரபினர்களும் இருந்தார்கள். பண்டைய காலத்திலிருந்தே பன்மைக்கலாச்சாரம் கொண்ட பிரதேசமாக இந்தியா என்று இன்று சொல்லப்படுகிற பிரதேசத்தில் இருந்த நாடுகளும் மக்களும் இருந்தனர். என்ன எழுதப்பட்டிருக்கிறது என்றே தெரியாத வேதங்கள் இந்துக்களின் புனிதநூலாகவோ சிவன், விஷ்ணு, பிரம்மன், போன்ற கடவுளரின் வருகைக்குப்பின் பின்வரிசைக்குப் போய்விட்ட இந்திரனை ( வேதங்களில் இவர் தான் தலைமைக்கடவுள் ) கடவுளாகவும், உயிரோடு யாராலும் போகமுடியாத வைகுண்டத்தையும் கைலாயத்தையும் புனித ஸ்தலங்களாகவும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
 பகவத்கீதை தான் இந்துக்களின் புனிதநூல் என்று புதிய கதை ஒன்று வெகுகாலமாக நிலவி வருகிறது. பகவத்கீதையில் சொல்லப்பட்டிருக்கிற அட்வைஸ்களைப் பின்பற்றி அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடித்தால் ஒரு சிறந்த இந்துவாகவோ மனிதனாகவோ வாழ்ந்து விடலாம் என்றும் எல்லோராலும் சொல்லப்பட்டும், எழுதப்பட்டும் வருகிறது. சாமானிய இந்துக்கள் பகவத்கீதையை தங்களுடைய புனித நூலாகக் கருதுகிற போக்கும் இருக்கிறது. நிறைய வீடுகளில், கடைகளில் பகவத்கீதை வசனங்கள் என்று கடமையைச்செய் பலனை எதிர்பாராதே, என்று தொடங்கி பத்தோ பதினைந்தோ கட்டளைகள் எழுதப்பட்ட சித்திரங்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
உண்மையில் பகவத்கீதை புனிதநூல் தானா? அதன் காலம் என்ன? அதில் சொல்லப்படும் பொருள் என்ன? அதன் தத்துவம் என்ன?
மகாபாரதம்
பண்டைய இந்தியாவில் இரண்டு சத்திரியகுல மன்னர்களுக்கிடையே குருஷேத்திரம் ( (இன்றைய பானிபட் நகருக்கு அருகில் ) என்ற இடத்தில் 18 நாட்கள் நடந்ததாகச் சொல்லப்படுகிற யுத்தமே மகாபாரதயுத்தம் என்று சொல்லப்படுகிறது. இந்த யுத்தத்தில் யாதவகுல சத்திரிய அரசனான கிருஷ்ணன் பாண்டவச்சகோதரரில் ஒருவனான அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாக இருந்தான். போர்க்களத்தில் இருபக்கமும் நின்ற சொந்தக்காரர்களைப் பார்த்து செயலிழந்து நின்ற அர்ச்சுனனுக்கு கிருஷ்ணன் சொன்ன அறிவுரைகளே பகவத்கீதை என நம்பப்படுகிறது.. இந்த அறிவுரைகளை மகாபாரதத்தை எழுதிய கிருஷ்ண துவைப்பாயன வியாசர் 100000 பாடல்களாக எழுதியிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த மகாபாரதத்திற்கு மூலமான ஜெயசம்ஹித எனும் நூல் கிடைக்கவில்லை.
மகாபாரதம் ஒரு மாகாவியம். உண்மையான நிகழ்வின் மீது கட்டப்பட்ட மகத்தான மிகைபுனைவு. உயர்வுநவிற்சியாகச் சொல்லப்பட்ட வீரகதை. மகாபாரதம் நடந்ததாகச் சொல்லப்படுகிற காலத்தில் கி.மு.10 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் இரும்பு அறிமுகமாகவில்லை. அதுமட்டுமில்லை கி.மு.6 ஆம் நூற்றாண்டிற்குப்பிறகு தான் இரும்பின் வாசனையை இந்தியத்துணைக்கண்டம் அறிந்தது. அதேபோல மகாபாரதப்பாடால்களின்படி குருசேத்திரத்தில் நடந்த பதினெட்டு நாள் யுத்தத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐம்பது லட்சமாக இருக்கவேண்டும். ஐம்பது லட்சம் வீரர்களுக்கு ஈடாக உதவியாளர்கள், களப்பணியாளர்கள், அவ்வளவுபேர்களுக்கு உணவளிக்கத் தேவையான விவசாயம், விவசாயிகள் என்று கிட்டத்தட்ட 20 கோடிபேர் இருந்தால் மட்டுமே நடந்திருக்க முடியும். ஆனால் இந்தியாவைப்பொறுத்தவரை ஆங்கிலேயேர்கள் இங்கு வரும்வரை அத்தகைய எண்ணிக்கை ஒட்டுமொத்த இந்தியாவிலேயே கிடையாது. ஒரு அல்லது பல கவிஞர்கள், நாட்டுப்புறக்கதைசொல்லிகள், பழங்கதைகள், சேர்ந்த ஒரு இலக்கியப்பிரதி. அது நாட்குறிப்போ வரலாற்று ஆவணமோ தொல்லியல் சான்றோ இல்லை.
பகவத்கீதையின் காலம்
மகாபாரதயுத்தம் கி.மு.1000-க்கும் கி.மு.850-க்கும் இடையில் நடந்திருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். ஆனால் பகவத்கீதை கி.மு.500 முதல் கி.மு.200 வரையிலான காலகட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் இயற்றப்பட்டு மகாபாரதத்தில் இடைச்செருகலாகச் செருகப்பட்டது என்பது வரலாற்றாசிரியர்களின் துணிபு.  பகவத்கீதையின் பாடல்களில் காணப்படும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட மொழிநடை, சொற்றொடர் அமைப்பு, பொருள், கருத்து, தத்துவம், என்ற நோக்கில் பார்க்கும்போது குறைந்தது மூன்று பேர்களால் இயற்றப்பட்டிருக்க வேண்டும். ஆதியில் சுவேதாசவதார உபநிடதம் போன்றதோர் உபநிடதமாக இருந்து வந்தது பகவத்கீதை. குப்தர்கள் காலத்திற்கு முன்பாக எழுதப்பட்டிருப்பதற்கான வாய்ப்பில்லை. வைணவ சமயத்தைப் பரப்ப எழுதப்பட்ட தனிநூல் பகவத்கீதை என்ற பார்வையும் உண்டு.
மகாபாரதம் பதினெட்டு பருவங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாகும். அதில் ஆறாவது பருவமான பீஷ்ம பருவத்தில் வருகிற மூன்றாவது உபபர்வமே கீதாபருவம். பீஷ்மபருவத்தில் 13 முதல் 42 வரையுள்ள அத்தியாயங்கள் இருக்கின்றன. அவற்றில் 25 முதல் 42 வரையுள்ள 18 அத்தியாயங்களே பகவத் கீதை. கர்ம காண்டம், உபாசனா காண்டம், ஞான காண்டம் என்ற மூன்று பாகங்களாகவும் ஒவ்வொரு பாகத்திலும் ஆறு அத்தியாயங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது. கர்ம காண்டத்தில் 278 சுலோகங்களும் உபாசனா காண்டத்தில் 207 சுலோகங்களும், ஞான காண்டத்தில் 212 சுலோகங்களுமாக மொத்தம் 697 சுலோகங்கள் பகவத் கீதையில் உள்ளன.
கீதையின் கதை
குருசேத்திர யுத்தத்தின் பத்தாம் நாள் பீஷ்மர் காயமுற்று அம்புப்படுக்கையில் வீழ்கிறார். சஞ்சயன் இந்த விவரத்தை பிறவிக்குருடரான திருதராஷ்டிரனிடம் தெரிவிக்கிறான். அதைக்கேட்டு பதட்டத்துடன் போர் ஆரம்பம் முதல் அது வரை நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்லச்சொல்கிறார் திருதராஷ்டிரன். அதிலிருந்து துவங்குகிறது கீதையின் கதை.
போரின் துவக்கத்தில் இரண்டு பக்கமும் அணிவகுத்து நிற்கிற சேனைகளின் நடுவில் நின்று கொண்டு அர்ச்சுனனின் தயக்கங்களுக்கும், ஐயங்களுக்கும், பதில் சொல்கிறான் கிருஷ்ணன். போர்க்களத்தில் நின்று கொண்டு போரைப்பற்றி மட்டுமல்ல சமூகம், நன்னெறிகள், உணவுப்பழக்கம், இறைத்தத்துவம், என்று நீண்டதொரு விவாதத்தில் கிருஷ்ணனும் அர்ச்சுனனும் இறங்குகிறார்கள் என்று இயற்றப்பட்டிருக்கும் கற்பனை யதார்த்தத்துக்கு ஒவ்வாதது.
இருபுறமும் தன்னுடைய தாயாதிகள் நிற்பதைப்பார்த்த அர்ச்சுனன் போரில் ஈடுபடத்தயங்குகிறான். அவனைப் போரில் ஈடுபடச்செய்து சொந்தங்களைக்கொல்லும் துணிவை வரவழைப்பதற்கு சாம, தான, தண்ட, பேத யுக்திகளைப் பயன்படுத்துகிறான் கிருஷ்ணன். ஆக கொலைகள் செய்யத்தயங்குகிறவனை கொலை செய்யத்தூண்டுகிற செயலையே கிருஷ்ணன் செய்கிறான். ஒரு அரசைக் கைப்பற்றுவதற்கான பெரும்போர் நடைபெறப்போகிறது என்பதையே கீதை கட்டியம் கூறுகிறது. 697 சுலோகங்களைத் தொடர்ந்து சொல்வதற்கு குறைந்தது மூன்றுமணி நேரம் ஆகும். அந்தக்காலகட்டாத்தில் யுத்தத்தில் என்னென்னவோ நடக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் குருசேத்திரத்தில் கிருஷ்ணன் அர்ச்சுனனின் சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்லி அவன் அப்போதும் மசியாதபோது விசுவரூபம் எடுத்து மிரட்டிப் பணிய வைத்து கீழே போட்ட காண்டீபத்தைக் கையில் எடுக்கும் வரை யுத்தகளம் அப்படியே ஸ்டில்லாக நிற்கிறது. என்ன ஒரு கற்பனைவளம்! கடைசியில் வேறுவழியில்லாமல் அர்ச்சுனன் போரில் ஈடுபடுகிறான்.
பகவத்கீதையின் உள்ளடக்கம்
பகவத்கீதையை ஆழ்ந்து கற்ற கையர் என்ற அறிஞரின் கருத்துப்படி மொத்தம் 32 விஷயங்களைப் பற்றி கீதை பேசுகிறது. அவற்றில் சில விஷயங்கள் திரும்பத் திரும்ப வருகின்றன. எட்டு விஷயங்கள் ஆறோ ஏழோ முறை வந்துள்ளன. அப்போது நிலவி வந்த பல்வேறு தத்துவ மார்க்கங்களை தன்னுடையது போன்று கிருஷ்ணன் சொல்கிறான். எல்லாவற்றையும் ஒன்றிணைக்க முயற்சி செய்வதால் பகவத்கீதை முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருக்கிறது. கிருஷ்ணன் ஒரே நேரத்தில் மனிதனாகவும் தெய்வமாகவும் பேசுகிறான்.
அர்ச்சுனனின் தயக்கம் வேதகால அறநெறி. உறவினரைக்கொன்று அதிகாரத்தைக் கைப்பற்றி நிம்மதியுடன் இருந்து விடமுடியாது என்று கருதுகிறான் அப்போது அந்த வேதகால அறத்தை நிந்திக்கிறான் கிருஷ்ணன்.
“ வேதச்சடங்குகளைச் செய்வதன் மூலம் அதிகாரத்தையும் செல்வச்செழிப்பையும் அடைந்து விடலாம் என்ற நம்பிக்கையில் வேதங்களைப்பிடித்துதொங்குகிறவர்கள் அனைவரும் அறிவிலிகளே! ( ப.கீ. 2.42-44 )
அதே கிருஷ்ணன் இன்னொரு சுலோகத்தில்
பிதாஹமஸ்ய ஜகதோ மாதாதாதா பிதாமஹ
வேத்யம் பவித்ரமோங்கார ருக் ஸாம யஜூரேவச
( ப.கீ.9-17 )
இந்த உலகின் தந்தை நான், இதன் தாயும் நான், இதை உருவாக்கியவன் நான், இதன் பாட்டன் நான், இதன் அறியப்படும்பொருளும் நான், தூய்மை செய்வதும் நான், ரிக் வேதமும், சாம வேதமும், யஜூர் வேதமும் நானே.
என்றும் முரணாகக்கூறுகிறார். அதேபோல கர்ப்பகாலத்தொடக்கத்தில் பிரஜாபதி பிரஜைகளைப் படைத்தார் என்று 3-10 சுலோகத்திலும்,
குணகர்மங்களுடைய நான்கு வருணங்கள் என்னால் படைக்கப்பட்டன என்று 4-13 சுலோகத்திலும்,
நான் எனது இயற்கையை ஆதாரமாகக்கொண்ட சகலபூத சமூகத்தையும் அவைகளின் குணங்களுக்கேற்ப மீண்டும் மீண்டும் சிருஷ்டிக்கிறேன் என்று 9-8 சுலோகத்திலும்
கூறிவிட்டு இவைகளுக்கு முரணாக அன்னத்தினின்று பிராணிகள் உற்பத்தியாகின்றன. அன்னம் மழையினால் உண்டாகின்றது. மழை யாகங்கள் செய்வதினால் உண்டாகின்றது. யாகங்கள் கர்மத்தினால் உண்டாகின்றது. ( ப.கீ. 3-14 )
என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. வருணங்களைப் படைத்தது தான் தான் என்று சொல்கிற சுலோகமான 4-13 – ல் கீழ்க்கண்டவாறு சொல்லப்படுகிறது.
சாதுர்வர்ண்யம் மயாஸ்ருஷ்டம் குணகர்மவிபாகஸ:
தஸ்யகர்த்தாரமபிமாம் வித்யகர்த்தாரமவ்யயம்
குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வருணங்களைப் படைத்தேன். நானே இதன் கர்த்தா என்றாலும் அந்த அபிமானம் எனக்கு இல்லாததினால் நான் செய்கையற்றவனாகவும் அழிவற்றவனாகவும் இருக்கிறேன்.
ஆனால் வருணங்கள் அவரவர் பிறப்பினடிப்படையிலேயே அமைகிறது. அவரவர் சாதி தர்மத்தைக் கடைப்பிடிப்பதே சிறந்தது. தன்னுடைய கர்மங்களை விட்டு விட்டு மற்ற சாதியின் கர்மங்களைச் செய்யக்கூடாது என்று கீதையின் பதினெட்டாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
பகவத்கீதை அத்தியாயம் 9 – 32 ஆவதுபாடலில்
மாம் ஹி பார்த்த! வ்யாபாஸ்ரித்ய
யே பிஸ்யூ: பாபயோனய:
ஸ்த்ரீயோ வைஸ்யஸ்ததாஸூத்ர
ஸ்தேபி யாந்தி பராம்கதி
பார்த்தா! பெண்களோ, வைசியர்களோ, சூத்திரர்களோ, நீசகுலத்தில் பிறந்தவர்களே. எவரானாலும் என்னைப்பணிவாராயின் அவர்கள் பரகதியை அடைவர்.
அப்படியென்றால் பகவத்கீதை யாருக்காக எழுதப்பட்டிருக்கிறது?  உயர்வகுப்பைச் சார்ந்த பிராமணர்களுக்காக மட்டுமே எழுதப்பட்டிருக்கிற நூல். மனிதர்கள் யாவரையும் சமமாக பாவிக்கிற நூல் இல்லை என்பது புலனாகிறது. அதுமட்டுமைல்லை மனிதர்களில் உயர்வுதாழ்வை நியாயப்படுத்துவதாக இருக்கிறது.
அதேபோல மகாபாரதக்கதையில் போகிற இடங்களில் எல்லாம் வேறு வேறு குலங்களில் இனங்களில் மனைவிகளைத் தேடிக்கொள்கிற அர்ச்சுனன் ( நாகமன்னரின் மகள் உலூபி, சித்ஹிராங்கதன் மகள் சித்திராங்கதை, கிருஷ்ணனின் தங்கை சுபத்திரா ) சொல்கிறான். யுத்தம் நடந்தால் குலங்கள் நாசமாகிவிடும். சநாதன குலதர்மங்கள் அழிந்து விடும். தர்மம் அழிவதனால் குலம் முழுவதையும் அதர்மம் சூழ்கின்றது ( ப.கீ1-40 ) என்றும் அதர்மம் சூழ்வதனால் குலப்பெண்கள் கெட்டுப்போகிறார்கள். விருஷ்ணி குலத்தோன்றலே! பெண்கள் கெடுவதால் வருணக்குழப்பம் உண்டாகின்றது ( ப.கீ.1-41 ) என்று வருணக்கலப்பு நேரும் அபாயத்தைச் சொல்வதாக கீதை எழுதப்பட்டிருக்கிறது. இதனால் இது மகாபாரதத்தின் காலத்துக்கு மிகவும் பிந்தைய இடைசெருகல் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
நிஷ்காம கர்மம் என்று பகவத்கீதையில் சொல்வதையே சாமானியர்கள் கீதாசாரம் என்று கருதுகிறார்கள். தன்னலமற்ற கடமை உணர்வைப்பேசுகிற இந்த சுலோகம் ( 2.47 _ 51 ) இன்பம், துன்பம், லாபம், நட்டம், வெற்றி, தோல்வி, இப்படி எதனாலும் பாதிக்கபடாதவனாக பற்றற்றவனாக தனது கடமையைச் செய்ய வேண்டும். என்று மீண்டும் மீண்டும் வருணங்களின் கடமையைப்பற்றிப் பேசுகிறது பகவத்கீதை. இப்படி வருணதர்மங்களைக் காப்பாற்றுகிற நன்னெறிகளை பரப்புரை செய்கிற பகவத்கீதை எப்படி சமத்துவத்தை சொல்லும்?
கீதையின் தத்துவப்போக்குகள்
பகவத்கீதை ஒரு தனித்த தத்துவ நூல் கிடையாது. ஸ்வேதாதசவதார உபநிடதமே பகவத்கீதையின் மூலமாக இருந்தாலும் பகவத்கீதை எழுதப்பட்ட காலத்தில் நிலவி வந்த பல்வேறு தத்துவப்போக்குகளும் கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக சாங்கிய, புத்தமதக் கருத்துகளும் உபநிடதக்கருத்துகளும் அதில் எடுத்துக் கையாளப்பட்டிருக்கின்றன. பகவத்கீதை பக்தி என்ற புதிய விஷயத்தை அறிமுகப்படுத்தியது. அதோடு ஒற்றைக்கடவுள் கொள்கையை முன்னிறுத்தியதின் மூலம் அரசன் ஆண்டவனுக்கு இணையானவன் என்பதை வலியுறுத்தியது. அதனால் ஓரளவு சமத்துவம் நிலவிய பழங்குடிச்சமூகத்தின் மீது நிலப்பிரபுத்துவம் ஆதிக்கம் செலுத்த உதவி செய்தது.
கிருஷ்ணனின் அறிவுரையில் ஓங்கி ஒலிப்பது ஒற்றைக்கடவுள் நம்பிக்கை. சாங்கியமும் பௌத்தமும், லோகாயதமும் கோலோச்சிய காலகட்டத்தில் எழுதப்பட்ட நூல். வேதங்களின் செல்வாக்கு குறைந்த காலம். மக்களிடையே குறைந்து வந்த கடவுள் நம்பிக்கையை உயிர்ப்பிக்கும் நோக்கத்துடன் புனையப்பட்ட பாடல்கள் வருணக்கலப்பு சாதாரணமாக நடந்து கொண்டிருந்த காலத்தில் அப்படி வருணக்கலப்பு நடக்கக்கூடாது என்றும் பகுத்தறிவுக்கெதிரான வெளிப்படையான அழித்தொழிப்பை பிரகடனப்படுத்திய நூலும் இதுதான்.
 பொருள் பற்றிய அறிவை மட்டும் வலியுறுத்துகிறவர்களையும், கடவுள் நம்பிக்கையைச் சந்தேகிக்கிறவர்களையும், கடவுள் மறுப்பாளர்கள் மற்றும் பொருள்முதல்வாதிகளைப்போன்றே அழித்தொழிக்க வேண்டும் ( ப.கீ.4.40 – 42 )
பிராமணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட அதிகாரப்போட்டியில் பிராமணமேலாதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்தி சத்திரியர்களோடு ஒரு சமரசப்போக்கைக் கடைப்பிடிக்க முன்வைத்த யுத்தியாகவும் இந்தப்பாடல்களைப் பார்க்க முடியும். அதை ஒரு சத்திரியனான கிருண்னனைக் கொண்டு பேச வைத்திருப்பது தான் பிராமணியத்தின் உச்சபட்ச தந்திரம்.
ஒருவகையில் இந்திய வரலாற்றின் முக்கியமான காலகட்டத்தை பகவத்கீதை பிரதிபலிக்கிறது என்று சொல்லலாம். பழங்குடிச்சமூகமாக இருந்த இந்தோ-ஆரிய சமூகம் உயர் காட்டுமிராண்டி நிலையிலிருந்து ஆதி நாகரிக நிலைக்கு மாறிக்கொண்டிருந்த காலம். அந்தந்தக்காலகட்டத்தின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியையொட்டியே உற்பத்தி உறவுகள் நிலைபெறும். இந்த உற்பத்தி உறவுகளின் ஒட்டு மொத்த வடிவம் தான் சமூகத்தின் பொருளாதார அமைப்பாகும். மகாபாரதப்போர் நடந்த காலத்தில் ஒரு புதிய சமூகம் பிறக்கும் வேதனையிலிருந்தது. மறைந்து கொண்டிருந்த பழங்குடிச்சமூகத்தின் பொருளாதார அமைப்பு புதிய நிலப்பிரபுத்துவ அமைப்பாக மாறிக்கொண்டிருந்தது. அதாவது பழைய சமூகத்தின் குணாதிசயங்களான கூட்டு உழைப்பு, கூட்டு நுகர்வு மாறி வருணங்களின் வழியாக உழைப்புப்பிரிவினை, அடிமைத்தனம் ஆகியவற்றை தோற்றுவித்தது. மாற்றத்தின் வழியில் பழைய சமூகத்தின் அறநெறிகள் சுமையாகி விட்டன. அதை உதறித்தள்ளுகிற புதிய சிந்தனைகளின் தொகுப்பே பகவத்கீதை.
ஆக பகவத்கீதை எக்காலத்துக்குமான மானுட நன்னெறிகளுக்கான அருளுரை இல்லை. பல கவிஞர்கள் எழுதிய முரண்பாடுகள் கொண்ட தொகுப்பு. அக்காலத்தில் நிலவி வந்த எல்லாத்தத்துவங்களிலிருந்தும் தழுவப்பட்ட கோட்பாடுகளைக் கொண்டது. ஆண்டான் அடிமை என்கிற அமைப்பை  நிலை நிறுத்த எழுதப்பட்டது. வருணக்கோட்பாடுகளை கடவுளின் பெயரால் புனிதப்படுத்தும் நோக்கம் கொண்டது. அதற்கு பக்தி எனும் புதிய விஷயத்தைப் பயன்படுத்திக்கொண்டது. முடியரசுகள் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள உருவாக்கிய தத்துவக்கோட்பாடான பகவத்கீதை இன்றைய நவீன காலத்திற்குச் சற்றும் பொருத்தமில்லாதது. அது மதவெறிச்சக்திகளின் வரலாற்றுச்சக்கரத்தை பின்னுக்குத் தள்ளும் முயற்சிக்குத் துணை போகும் அபாயம் நம் கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
துணைநூல்கள்
இந்திய வரலாற்றில் பகவத்கீதை
பகவத்கீதை ஒரு ஆய்வு
பார்த்தனும் சாரதியும்

நன்றி- செம்மலர்