Tuesday 6 November 2012

மனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2

 

நோய் என்றால் என்ன?.

உதயசங்கர்

health

நோய் என்றால் என்ன? நம்முடைய வழக்கமான வேலைகளைச் செய்ய விடாமல் உடல் தரும் தொந்திரவுகள் எல்லாமே நமக்கு நோய் தான். எல்லோருக்குமே தங்களுடைய வழக்கம் பாதிக்கப்படும் போது டென்ஷன் வந்து விடுகிறது. உடனே மருத்துவரைப் பார்த்து மருந்துகளை, ஊசிகளைப் போட்டு உடனே குணமாகி உடனே நம்முடைய ரொட்டீனுக்குத் திரும்பி விட வேண்டும். இது தான் அநேகமாக எல்லோரும் நினைப்பது.

நோய் என்றால் நம்முடைய மன, உடலியக்கத்தில் ஏற்படுகின்ற மாறுதல் அல்லது மாறுமை. உதாரணத்துக்கு புகை, தூசு, மாசு, மிகுந்த இடங்களில் நாம் இருக்க நேரிடும் போது நம்முடைய உடலுக்கு ஒவ்வாத இந்த புகை, மாசு, தூசு, இவற்றினால் சுவாசக்கோளங்களில் அரிப்பும், எரிச்சலும் ஏற்படுகிறது. நுரையீரலில் இவை சேர்ந்து விடாமலிருக்க நுரையீரல் ஒரு கணம் தன் முழுசக்தியையும் திரட்டி தும்மலாக வெளியேற்றுகிறது. அப்படியும் சுவாசத்தில் நுழையும் ஒவ்வாத இந்த அந்நியப்பொருட்களை சளிச்சவ்வுகளைத் தூண்டி விட்டு அதிகமான சளிநீரைச் சுரக்கச் செய்து மூக்கின் வழியாக வெளியேற்றுகிறது. இதன் மூலம் உடலுக்குள் அந்நிய விஷப்பொருள் நுழைவதைத் தடுக்க முயற்சிக்கிறது. மனநிலையிலும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. அநேகமாக ஜலதோஷம் பிடித்த எல்லோருக்கும் இந்த உணர்வு வரும். இது ஆரம்பகட்டம். இதுவே சுவாசகோசங்களினால் சமாளிக்க முடியாத அளவுக்கு அந்நியப்பொருள் உள்ளே நுழைந்து விட்டால் அதை அந்தந்த இடத்திலேயே சளிநீர் மூலமாக அரெஸ்ட் செய்து சிறைப்படுத்துகிறது. பின்பு சிறைப்பட்ட அந்த அந்நியனை பிடதியைப் பிடித்து வெளித்தள்ள இருமலை உண்டு பண்ணுகிறது. இருமலுடன் சளி வெளியேறுகிறது கூடவே சிறைப்பட்ட அந்த அந்நியனும். நாம் நம்முடைய உடலுக்குச் செய்த தீங்கு தெரியாமல் உடனே ” மூக்கால தண்ணியா ஒழுகுது டாக்டர்..” என்றோ ” ஒரே சளி, இருமல் டாக்டர் “ என்றோ மருத்துவரிடம் செல்கிறோம்.

இன்னொருவகை ஒவ்வாமையென்பது நாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல தனித்துவமான ஒவ்வொரு மனிதனையும் தனித்துவப்படுத்துவதில் அவனுடைய தனிவெப்பநிலை ( THERMOSTAT ) முக்கிய பங்கு வகிக்கிறது. அவனுடைய தனிவெப்பநிலை குளிர் என்றால் அவனுக்குக் குளிர், குளிர்ந்த தட்பவெப்பம் ஒவ்வாது. அதேபோல அவனுடைய தனி வெப்பநிலை சூடு என்றால் வெப்பம், வெப்பமான சீதோஷ்ணம் ஒவ்வாது. குளிர், சூடு, இரண்டுமே ஒவ்வாதவர்களும் இருக்கிறார்கள். இந்த ஒவ்வாமையினாலும் ஜலதோஷம், சளி, இருமல், ஆகியவை தோன்றலாம். இந்த ஒவ்வாமை கூடும்போது ஈளை ( ASTHMA ) நோயாக மாற வாய்ப்புகள் உண்டு.

முதலில் சொன்ன ஒவ்வாமை உடனடி தீவிர ( ACUTE ) நோய் என்றால் பின்னால் சொல்லப்பட்ட ஒவ்வாமை என்பது நீண்ட கால ( CHRONIC ) நோயாக மாறும் வாய்ப்புள்ள ஒவ்வாமை.

ஆக நோய் என்பது ஒருவர் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், பாதிப்படைந்து அதனால் புறவயத்தில் அவருடைய இயல்பு மாறித் தோன்றும் தோற்றம், அடையாளம், செயல், நடவடிக்கை.

ஆக நோய் என்பது ஒரு மனிதனின் உடல், மன, இயக்கத்தை ஒருங்கிணைக்கும் உயிராற்றலில் ஏற்படும் பாதிப்பும் அதன் விளைவாக வெளியே தோன்றும் அறிகுறிகளும் கொண்ட தொகுப்பு.

ஆக நோய் என்பது ஒருவரது இயல்பான சுபாவத்தில், ( உடல்செயல்பாட்டில், உடலின் பாதிப்பினால் மனமோ, மனதின் பாதிப்பினால் உடலோ அடைகின்ற ) ஏற்படுகின்ற மாற்றங்களின் தொகுப்பு.

நலம் காக்க தொடர்வோம்..

5 comments:

  1. அருமையான மருத்துவப் பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  2. நன்றியுடனும் பாராட்டுக்களுடனும்...
    எனது முகநூலில் பதிவு செய்துள்ளேன் !

    ReplyDelete
  3. வணக்கம்

    இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் பார்வையிட இதோ
    http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_5267.html?showComment=1382955845842#c7408636866649208400

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. அருமையான தகவல்...

    ReplyDelete