Thursday 28 April 2016

தமிழின் பெருமை தமிழ்த்தாத்தா உ.வே.சா.

தமிழின் பெருமை தமிழ்த்தாத்தா உ.வே.சா.
உதயசங்கர்

ஐக்கிய நாடுகளின் கல்வி மற்றும் சமூகப்பண்பாட்டு அமைப்பு உலகத்தில் தற்போது புழங்கி வரும் 6000 மொழிகளில் ஆறு மொழிகளை மட்டுமே செவ்வியல் மொழிகளாக அங்கீகரித்திருக்கிறது. தமிழ், சீனம், சமஸ்கிருதம், லத்தீன், ஹீப்ரு, கிரீக், ஆகிய மொழிகளே அவை. அவற்றில் லத்தீனும், கிரீக்கும் வழக்கிழந்து போய்விட்டன. சமஸ்கிருதம் கோவில்களில் மட்டும் புழங்கும் மந்திர மொழியாகி விட்டது. வெகுமக்களால் பேசப்படும் மொழிகளாக சீனமும், தமிழும் மட்டுமே உள்ளன. அதிலும் சீனமொழி ஓவியங்களை எழுத்துருக்களாக கொண்டது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மாற்றமடையாத எழுத்துருக்களை கொண்டது தமிழ்மொழி. பன்னாட்டு மொழியாகவும், வெகுமக்களின் பேச்சு, எழுத்து மொழியாகவும், சமூக விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப தன்னை வளர்த்துக் கொண்டே வருகின்ற மொழியாகவும் இருக்கின்ற மொழி நம்முடைய தமிழ்மொழி.
இத்தனை பெருமைகளையும் உடைய நம்முடைய தமிழ்மொழியின் தொன்மையையும், இலக்கியவளத்தையும், தனித்துவத்துவதையும் உலகிற்கு முன்னால் நிலைநிறுத்தியவர் உத்தமதானபுரம் வே.சாமிநாதைய்யர் என்ற நம்முடைய தமிழ்த்தாத்தா உ.வே.சா. இன்று நாம் நம்முடைய பழம்பெருமை பேசுவதற்கு எடுத்துக்காட்டாக சங்க இலக்கியங்களையும், புறநானூறு, அகநானூறு ஐம்பெருங்காப்பியங்கள், என்று சொல்லிக் கொண்டிருக்கிறோமே இவை அத்தனையையும் ஓலைச்சுவடிகளிலிருந்து படியெடுத்தவர் உ.வே.சா. படியெடுத்த பிரதிகளைப் பாடபேதம் பார்த்து, புரியாத பதங்களுக்காக சமண, பௌத்த சமய மரபுகளைக் கற்றவர் உ.வே.சா. படியெடுத்து பாடபேதம் பார்த்து அவற்றை நூல்களாக பதிப்பித்தவர் உ.வே.சா. 62 ஆண்டுகால உழைப்பில் 102 நூல்களை அவர் பதிப்பித்திருக்கிறார். தமிழ்த்தாத்தா உ.வேசா. எந்தப் பிரதிபலனும் பார்க்காமல் அவர் செய்த அருந்தொண்டினால் தான் உலக மொழிகளில் தமிழ் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது.
1855 ஆண்டு தஞ்சை மாவட்டம் சூரிய மூலை கிராமத்தில் வாழ்ந்து வந்த வேங்கட சுப்பையருக்கும் சரசுவதியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் உ.வே.சா. அவருடைய பதிமூணாவது வயதில் மதுராம்பாளை திருமணம் செய்து கொண்டார். அவருடைய வாழ்வின் திருப்புமுனையாக கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராக வேலை பார்த்துவந்த தியாகராஜ செட்டியார் இருந்தார். திருவாவடுதுறை ஆதீனத்தில் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் தமிழ்ப்பாடம் கற்றுக் கொண்டிருந்த உ.வே.சா. மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் மறைவுக்குப் பின்னர் தியாகராஜ செட்டியாரின் கடும் முயற்சியினால் ஆதீனத்திலிருந்து வெளிவந்து கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராக வேலையில் சேர்ந்தார். . 25-வது வயதில் தற்செயலாக கும்பகோணம் முன்சீப்பாக வேலை பார்க்க வந்த சேலம் ராமசாமி முதலியாரைப் பார்க்கப்போன உ.வே.சா.வுக்கு அதுவரை தான் பாடம்படித்த நூல்களைத் தாண்டி வேறொரு புதிய இலக்கிய உலகம் இருப்பதை அறிந்தார். அன்றிலிருந்து தொடங்கியது உ.வே.சாவின் முடிவில்லாத பயணம். சேலம் ராமசாமி முதலியார் கொடுத்த சீவக சிந்தாமணியே அவருடைய தேடலைத் தூண்டியது.  
அதுவரை பக்தி இலக்கியங்களே அதுவும் சைவம் சார்ந்த நூல்களே தமிழின் தொன்மை நூல்களாக இருந்தன. சைவ சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் உ.வே.சா வின் சமயம் கடந்த தமிழ்ப்பணியினால் தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தமிழினத்தின் பண்பாட்டை, வீரத்தை, ஞானத்தை, வரலாற்றை இன்று நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
பதிப்பு பணியென்றால் கிடைத்ததை அப்படியே அச்சில் ஏற்றுவதல்ல. எல்லாப்பாடங்களையும் பாடபேதங்களையும் புரிந்து கொள்ள கடுமையான உழைப்பைச் செலுத்தினார்.உ.வே.சா. சமண இலக்கியப்பிரதிகளான சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், போன்றவற்றை புரிந்து கொள்ள சமண சமயத்தைச் சார்ந்தவர்களைச் சென்று சந்தித்தார். பௌத்த இலக்கியமான மணிமேகலையிலுள்ள சந்தேகங்களைத் தெரிந்து கொள்ள பௌத்தர்களைச் சென்று சந்தித்தார். கிராமங்களில் இருந்த கவிராயர்களையும் புலவர்களையும், அறிஞர்களையும் சென்று சந்தித்து ஐயந்திரிபற உணர்ந்த பின்னரே அனைத்து நூல்களையும் பதிப்புகளாகக் கொண்டு வந்தார். அதன் மூலம் தமிழின் பெருமையையும், தமிழனின் பெருமையையும் மீட்டெடுத்திருக்கிறார் தமிழ்த்தாத்தா உ.வே.சா.
தேசிய அரசியலின் எழுச்சிக்கு தமிழனின் பெருமையைப் பறைசாற்றும் புறநானூற்றை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரத்தைத் பாரதி துவக்கினான்  என்றாலும் தேசியத்தலைவர்கள் அதை நிராகரித்து சநாதன மதம் சார்ந்தே எழுச்சியைக் கட்டமைத்தனர். அதே போல திராவிட அரசியலின் வெகுஜன எழுச்சிக்கு உ.வே.சா. பதிப்பித்த புறநானூறும் சங்க இலக்கியங்களும் பேருதவி புரிந்திருக்கின்றன என்றால் மிகையில்லை.
தன்னுடைய பரந்த அறிவாலும் ஞானத்தாலும் உ.வே.சா. செய்த அருந்தமிழ்ப்பணி அவரை காலத்தில் அழியாத காவியமாக்கி விட்டது. தமிழின் பெருமையும் தமிழனின் பெருமையும் தமிழ்த்தாத்தா உ.வே.சாவினால் தலைநிமிர்ந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.
நன்றி - மின்னம்பலம்

Wednesday 27 April 2016

கிளிக்கூண்டுக்கனவு

கிளிக்கூண்டுக்கனவு

உதயசங்கர்

மத்தியான நேரம். கிருஷ் அவனுடைய பள்ளிக்கூடத்தில் இருந்த வேப்பமரத்தில் இரண்டு கிளிகள் பறந்து பறந்து விளையாடிக்கொண்டிருந்ததைப் பார்த்தான். இளம்பச்சை நிறமும் கரும் பச்சை நிறமும் கலந்த உடல். கழுத்தைச் சுற்றி வரைந்து வைத்த மாதிரி ஒரு கருப்புக் கோடு., அழகான சிவந்த அலகுகள். உருண்டை விழிகள். நீளமான வால். அடடா..எவ்வளவு அழகாக இருக்கிறது. கிருஷுக்கு உடனே அதைத் தொட்டுத் தடவிப் பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. அந்தக் கிளிகள் கீ கீகீ கீக்கீ என்று பேசிக்கொண்டு ஒவ்வொரு கொப்பாகத் தாவித் திரிந்து கொண்டிருந்தன.
அப்போது கூட இருந்த அபி
“ டேய் கிளியைப் பிடிச்சி கூண்டில வச்சு வளப்பாங்க.. அது நாம சொல்றத அப்படியே திருப்பிச்சொல்லும்… எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு பாட்டி வளக்கிறாங்க.. அவங்க வீட்டுக்கு யார் போனாலும் அது யார் நீங்க…யார் நீங்க…ன்னு கேக்கும்… நல்லாருக்கும்ல… “
அதைக் கேட்ட கிருஷ் அண்ணாந்து கிளிகளை ஆசையோடு பார்த்தான். கிளிகள் மேலே வானத்தில் பறந்து கொண்டிருந்தன.
சாயந்திரம் வீட்டுக்குப் போனதும் அம்மாவிடம் “ அம்மா எனக்குக் கிளி வேணும்..” என்றான். அவனுடைய அம்மா, “ கிளி பொம்மையெல்லாம் இப்ப கிடையாதுடா…” என்று சொன்னாள். உடனே கிருஷ்ஷுக்கு கோபம் வந்து விட்டது. “ எனக்கு உயிரோட கிளி வேணும் நான் வளக்கப்போறேன்..” என்று சொன்னான். அதைக் கேட்ட அவனுடைய அம்மா திரும்பி கிருஷ்ஷைப் பார்த்தார். அவன் அழுது விடுவதைப் போல முகத்தைக் கோணினான்.
“ அதெல்லாம் பாவம்டா கிருஷ்… பறக்கிற பறவையைக் கூண்டில அடைக்கக்கூடாதுடா..கண்ணு ..எஞ்செல்லமில்ல.சொன்னா கேளுடா.”
அதைக் கேட்டதும் அழவே ஆரம்பித்து விட்டான் கிருஷ். அழுது கொண்டே,
“ எனக்கு வேணும்.. நான் அதுக்குப் பேசச் சொல்லிக் கொடுப்பேன்…எனக்கு விளையாட யாரிருக்கா…” என்று சொன்னான். கிருஷ் அழுவதைப் பார்த்த அம்மாவுக்கு சங்கடமாகி விட்டது. அவள் கிருஷை பக்கத்தில் இழுத்து அவனுடைய தலைமுடியைக் கோதி விட்டாள்.
“ அழக்கூடாதுடா செல்லம்.. இப்ப என்ன உனக்குக் கிளி வேணும் அவ்வளவு தானே அப்பா வரட்டும் சொல்லி பிடிச்சித்தரச் சொல்றேன்… ஆனா கொஞ்சம் யோசிச்சிப்பாரேன்.. நல்லா ஓடியாடித் திரியற உன்னயப் பிடிச்சி ஒரு கூண்டுக்குள்ள போட்டு ஆடறா.. பாடறா.ன்னு சொன்னா செய்வியா….”
அம்மா சொன்னதைக் கேட்டதும் கிருஷ் கத்தி அழ ஆரம்பித்து விட்டான்.. அப்போது அலுவலகத்திலிருந்து அப்பா வந்து விட்டார். கிருஷ் அழுவதைப் பார்த்த அவர்,
 “ ஏண்டா கண்ணா அழறே..”
என்று கேட்டார். கிருஷ் அழுகையை அடக்கிக் கொண்டே அவன் பள்ளிக்கூடத்தில் பார்த்த கிளிகளைப் பற்றிச் சொன்னான். அவனுடைய ஆசையைச் சொன்னான். உடனே அப்பா,
“ இவ்வளவு தானே நாளைக்கி குருமலை கந்தசாமி அண்ணாச்சிகிட்ட சொல்லி ரெண்டு கிளியப் பிடிச்சித்தாங்கன்னு சொன்னாப்போச்சி… இதுக்குப் போயி அழலாமா? ..”
என்று சிரித்துக் கொண்டே சொன்னார். உடனே கிருஷின் அழுகை சட்டென நின்று விட்டது. உடனே அப்பாவிடம்,
“ நாளைக்கே கிடைச்சிருமாப்பா..”
என்று கேட்டான். அதற்கு அப்பா, “ இன்னும் மூணு நாளைக்குள்ள உங்கூட கிளிகள் பேசிக்கிட்டிருக்கும்… சரியா..” என்று சொன்னார். கிருஷ் முகம் மலர்ந்து சிரித்தான். உடனே சுறுசுறுப்பாய் பாடங்களைப் படித்தான். அம்மா சுட்டுத் தந்த தோசைகளை முரண்டு பண்ணாமல் சாப்பிட்டான். அவனுடைய நினைவில் எல்லாம் பள்ளிக்கூடத்தில் பார்த்த கிளிகளின் ஞாபகம் தான். படுத்தவுடன் தூங்கியும் விட்டான்.
அப்போது தான் விடிந்திருந்தது.  கிளிகளின் கீச்சட்டம் அவனை எழுப்பியது. கண்விழித்துப் பார்த்தான். அவனைச் சுற்றிலும் கிளிகள். பறந்து கொண்டும் கீ கீ என்று பேசிக் கொண்டும் நடந்து கொண்டும் இருந்தன. சில கிளிகள் பறந்து அவனுடைய படிப்பு மேசை மீது உட்கார்ந்திருந்தன. ஒரு கிளி சன்னல் கம்பியில் தலைகீழாக நடை பழகிக் கொண்டிருந்தது. ஒரு கிளி மின்விசிறி மீது உட்கார்ந்து தலையைத் திருப்பி எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்தது. இரண்டு கிளிகள் தங்களுடைய அலகுகளால் ஒன்றோடொன்று உரசிக் கொஞ்சிக் கொண்டிருந்தன. அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்பாவிடம் ரெண்டு கிளிகள் தானே கேட்டோம். எதுக்கு இத்தனை கிளிகளை வாங்கிட்டு வந்தார் என்று நினைத்தான். திரும்பி அப்பாவைக் கூப்பிட வாயெடுத்தான். அய்யோ அவனால் திரும்பவே முடியலயே. அசைய முடியாமல் கிடந்தான். அப்போது தான் அவனுக்குத் தெரிந்தது அவன் ஒரு கூண்டுக்குள் அடைபட்டிருப்பது. அவனுக்கு அருகில் ஒரு கிண்ணத்தில் அவனுக்குப் பிடித்த நெய்ச்சோறு, ஒரு தண்ணீர் பாட்டில். எல்லாம் இருந்தன. ஆனால் அவனால் நிமிர்ந்து நிற்கவோ, நடக்கவோ முடியவில்லை. அவன் உட்கார மட்டுமே இடமிருந்தது. அம்மாவையோ அப்பாவையோ காணவில்லை. அவனைச் சுற்றி பெரிய வயதான கிளிகள், இளம் கிளிகள், குஞ்சுக்கிளிகள் என்று கூட்டமாக இருந்தன. அவனுடைய கூட்டைச் சுற்றி பெரிய கிளிகள் நின்று கொண்டு கீ…கீ..கீ..கீ… என்று தொடர்ந்து கத்திக் கொண்டிருந்தன. அவனுக்கு அழுகையாக வந்தது. அவன் அம்மாவையும் அப்பாவையும் கத்திக் கூப்பிட்டான். கூண்டை திறக்க முயற்சித்தான். எதுவும் நடக்கவில்லை. வயிறு பசித்தது. அவனுக்குப் பிடித்த நெய்ச்சோறு அருகில் இருந்தது. ஆனால் சாப்பிடப்பிடிக்கவில்லை. அவனுக்கு இப்போது பள்ளிக்கூடம் போகவேண்டிய நேரம். அவன் ஒரு நாள் கூட பள்ளிக்கூடத்துக்குப் போகாமல் இருந்ததில்லை.
அவனுடைய வீட்டுக்குள் பறந்து கொண்டிருந்த கிளிகள் எல்லாம் சேர்ந்து ஒரே குரலில் கீ கீ கீ கீ என்று கத்தின. முதலில் எதுவும் புரியவில்லை. அப்புறம் தான் தெரிந்தது. அந்தக் கிளிகள் அதனுடைய மொழியை அவனுக்குச் சொல்லிக் கொடுக்க முயற்சிக்கின்றன. அவனுடைய முகம் கோணியது. அழுகை பொங்கி வர பெரிய குரலில் அழத்தொடங்கினான்.
அம்மா கிருஷைப் படுக்கையிலிருந்து எழுப்பிக் கொண்டிருந்தாள். கண்விழித்துப் பார்த்தான் கிருஷ். கூண்டையோ கிளிகளையோ காணவில்லை. எழுந்து உட்கார்ந்து ஒரு நிமிடம் அவன் கண்ட பயங்கர கனவை நினைத்துப் பார்த்தான். உடனே அம்மாவிடம், “ அம்மா எனக்கு கிளி வேண்டாம்மா…நான் மரத்திலேயே பாத்து ரசிக்கிறேன்.. பறவைன்னா பறக்கணும்.. மனுசன்னா நடக்கணும் ..இல்லியாம்மா….” என்று சொன்ன கிருஷை ஆச்சரியத்துடன் பார்த்தாள் அம்மா.

( மீள்பதிவு )

Tuesday 26 April 2016

சுற்றுலா போன சுட்டிக்கட்டெறும்பு

சுற்றுலா போன சுட்டிக்கட்டெறும்பு

உதயசங்கர்

சுட்டிக்கருப்பன் என்று அந்தக்கட்டெறும்புக்கு எப்படி பெயர் வந்தது தெரியுமா? அவன் எப்போதும் கூட்டத்தோடு இருக்க மாட்டான். எல்லோரும் ஒரு வழி போனால் சுட்டிக்கருப்பன் கட்டெறும்பு மட்டும் தனிவழி போவான். அதனால் எல்லோரும் சுட்டிக்கருப்பன் என்று அவனைத் திட்டுவார்கள். ஆனால் அவன் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டான். அவன் சுற்றித்திரிந்து பார்த்த இடங்களைப் பற்றி புற்றுக்குள் வந்து கதை கதையாகச் சொல்வான். அவன் காணாமல் போகும்போது திட்டுகிற எல்லோரும் அவன் கதை சொல்லும்போது அவனைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு கண்ணிமைக்காமல் அவனுடைய பாவனை நடிப்பையும் அவனுடைய பேச்சையும் கேட்டு விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ஆனால் உணவு சேகரிக்கும் கூட்டத்தின் தலைவன் மட்டும் சிரிக்க மாட்டான். அவன் கடுமையாக சுட்டிக்கருப்பனைத் திட்டுவான். ஆனால் சுட்டிக்கருப்பன் அதைப் பற்றி கவலைப்படமாட்டான். காலில் பட்ட தூசியைத் தட்டிவிடுவது மாதிரி தட்டி விடுவான்.
அன்றும் அப்படித்தான். உணவு சேகரிக்கும் கூட்டத்தின் தலைவன் அதிகாலையிலேயே சுட்டிக்கருப்பனின் உணர்கொம்புகளைத் தட்டி,
“ டேய் ஒழுங்கா கூட்டத்தோட வரணும்… அங்க இங்க போனே தோலை உரிச்சிருவேன்… எம்பின்னாடியே தான் வரணும்.. இன்னிக்கு மக்காச்சோளம் விளைஞ்சிருக்கிற மேகாட்டுக்குப் போறோம்… இன்ன.. தெரிஞ்சிதா?..”
என்று சொல்லியது. சுட்டிக்கருப்பன் கட்டெறும்பு குதியாட்டம் போட்டுகிட்டு ஆளுக்கு முன்னாடி மேகாட்டுக்குக் கிளம்பியது. தலைவன் முன்னால் போனான். அவனுக்குப் பின்னால் அணிவகுத்து அனைவரும் வரிசை மாறாமல் காடுமேடு வழியாகச் சென்று கொண்டிருந்தனர். அடிக்கடி தனக்குப் பின்னால் சுட்டிக்கருப்பன் கட்டெறும்பு வருகிறதா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு தலைவன் போனான்.
. கொஞ்ச தூரத்தில் இருந்த மக்காச்சோளக் காட்டில் ஒரு இயந்திரம் விளைந்த மக்காச்சோளக்கதிர்களை அறுவடை செய்து கொண்டிருந்தது.. அறுவடை நடக்கிறது என்றால் நிறைய மக்காச்சோளம் சிந்தும். அவற்றை சேகரித்துக் கொண்டு வந்து விடலாம். வேலை எளிதாக முடிந்து விடும். ஆனால் மனிதர்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இயந்திரமும் மேலும் கீழும் வரும். எனவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள்.
சுட்டிக்கருப்பன் அறுவடை நடந்து கொண்டிருந்த  மக்காச்சோளக்காட்டின் குறுக்கே மறுக்கே நடந்தான். ஓடினான். அலைந்து திரிந்தான். ஒரு முறை ஒரு மனிதனின் காலில் மிதிபடத் தெரிந்தான். ஒரு முறை ஓடிக்கொண்டிருந்த இயந்திரத்தின் அருகிலேயே போய் விட்டான். நல்லவேளை… தப்பித்து விட்டான். ஆடி ஓடிக் களைத்த சுட்டிக்கருப்பன் அருகிலிருந்த ஒரு புளிய மரத்தின் நிழலுக்குப் போனான். புளிய மரத்தின் அடியில் புளியம்பூக்கள் உதிர்ந்து கிடந்தன. ஒவ்வொரு புளியம்பூவின் இதழ்களையும் துழாவினான். அதில் ஒட்டியிருந்து இத்துணூண்டு தேனை உறிஞ்சினான். அப்படியே குடித்துக் குடித்து கொட்டாம்பெட்டி மாதிரி வயிறு நிறைந்து விட்டது. தேன் குடித்த மயக்கத்தில் அருகில் இருந்த ஒரு பிளாஸ்டிக் வயர்க்கூடைக்குள் புகுந்தான். அவ்வளவு தான் தெரியும் சுட்டிக்கருப்பனுக்கு.
சிலுசிலுவென காற்று முகத்தில் அடித்தது. அதுவரை கிறங்கிப் போயிருந்த சுட்டிக்கருப்பன் கண்விழித்தான். அவன் இருந்த வயர்க்கூடை காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. மெல்ல காற்றை எதிர்த்து வந்து கூடையின் மேல் நின்று பார்த்தான். ஆகா அவன் இருந்த கூடை ஒரு சைக்கிளில் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் காற்றில் பறந்து விடுவான் போல சைக்கிள் பறந்தது. சுட்டிக்கருப்பன் பயந்து போய் விட்டான். ஐய்யய்யோ.. நம்ம கூட்டத்தை விட்டு வந்து விட்டோமே… கூட்டத்தலைவனும் ராணியும் சிக்கினால் தோலை உரித்து விடுவார்களே! என்ற பயமும் வந்தது. அப்போது சைக்கிள் ஒரு இடத்தில் நின்றது. கூடையைத் தூக்கிக் கொண்டு போய் ஒரு சிறிய ஓட்டு வீட்டுக்குள் கீழே வைத்தான் சைக்கிளை ஓட்டியவன். உடனே ஒரு குழந்தை “ப்பா…ப்பா..ப்பா…” என்று மழலையில் பேசிக் கொண்டே கூடைக்கருகில் தவழ்ந்து வந்தது. கூடையை அப்படியே கவிழ்த்தது குழந்தை. கூடையிலிருந்த தூக்குவாளி, துண்டு அழுக்குச்சட்டை எல்லாவற்றையும் இழுத்துப் போட்டது. கூடை கவிழ்ந்ததுமே ஆகா..செத்தோம்… என்று பயந்த சுட்டிக்கருப்பன் உள்ளேயே பதுங்கியது. கூடையில் தின்பண்டத்தை எதிர்பார்த்த குழந்தை தின்பண்டம் இல்லை என்றதும் அழத்தொடங்கியது. அப்போது கூடையின் அடியில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த சுட்டிக்கருப்பனைப் பார்த்து விட்டது. உடனே சுட்டிக்கருப்பனைப் பிடிக்க உள்ளே கையை விட்டது. ஐயோ  சுட்டிக்கருப்பனைத் தொட்டே விட்டது…..
நல்லவேளை அந்தக்குழந்தையின் அம்மா குழந்தையைத் தூக்கி விட்டாள். உடனே குழந்தை பெரிதாக அழத்தொடங்கியது.
 “ பிள்ளைக்கு திம்பண்டம் வாங்கிட்டு வரணும்னு தெரிய வேண்டாமா.. அப்படியே வீசுன கையும் வெறுங்கையுமாவா வர்ரது… பாருங்க எப்படி அழுதான்னு..போங்க போய் உடனே பிஸ்கட் வாங்கிட்டு வாங்க…..”
என்று குழந்தையின் அம்மா சத்தம் போட்டதும் சைக்கிளில் வந்தவர் மறுபடியும் வயர்க்கூடையை எடுத்து சைக்கிளில் வைத்துக் கொண்டு கிளம்பினார். ஒரு ரெண்டு தெரு தாண்டியிருக்கும் சைக்கிள். அங்கே ஒரு பலசரக்குக் கடைக்கு முன்னால் போய் நின்றது. கூடையைக் கீழே வைத்ததும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று சுட்டிக்கருப்பன் பாய்ந்து பலசரக்குக் கடைக்குள் நுழைந்து விட்டான்.
அடடா.. என்ன வாசனை! புளி, சீரகம், மிளகு, வெல்லம், சீனி, அரிசி, கோதுமை, பிஸ்கட் பாக்கெட்டுகளில் உள்ள மணமூட்டிகளின் வாசனை. சேவு, மிக்சர், சீவல், இவற்றின் எண்ணெய் வாசனை, என்று எல்லாம் காற்றில் கலந்து ஒரு கலவையான வாசனை வந்தது. உணர்கொம்புகளை நீட்டி வாசனைகளை முகர்ந்த படியே ஒவ்வொரு பொருளாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. குஷியில் இரண்டு கால்களால் நின்று கொண்டு ஆடியது. நமது கூட்டத்தை இங்கே கூட்டிகிட்டு வந்து விட்டால் போதுமே… ஆகா..ஆனந்தமே…! அப்போது சுட்டிக்கருப்பன் மீது பெரிய போர்வையைப் போல இருட்டு மூடியது. சுட்டிக்கருப்பனுக்கு எதுவும் புரியவில்லை. ஆள் நடமாட்டமும் இல்லை. இருட்டில் விதவிதமான பூச்சிகளும், எறும்புகளும், கரப்பான்பூச்சிகளும், சுண்டெலிகளும், கடைக்குள் சர்வ சாதாரணமாக சுற்றிக் கொண்டிருந்தன. சுட்டிக்கருப்பன் வெளியே வரவில்லை. அப்படியே அது ஏறிய வெல்லம் இருந்த மூடையில் கிடந்தது. இப்போது தான் கூட்டத்தை விட்டு வெளியேறியதற்காக முதல் முறையாக வருத்தப்பட்டது. இனி எக்காரணம் கொண்டும் நமது கூட்டத்தை விட்டு வெளியே வரக்கூடாது. என்று நினைத்தது. பிழைச்சிருந்தா மறுபடியும் நம்ம கூட்டத்தைப் பார்ப்போம். என்று நினைத்த படியே உறங்கி விட்டது.
மறுநாள் சுட்டிக்கருப்பன் கண்விழிக்கும் போது சுட்டிக்கருப்பனைச் சுற்றி அவனுடைய தோழர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
எப்படி தெரியுமா?
காலையில் பலசரக்குக்கடைக்கு வந்த சைக்கிள்காரர் கம்மங்கஞ்சிக்குத் தொட்டுக்கொள்ள வெல்லம் வாங்கினார். வெல்லத்தில் சுட்டிக்கருப்பனும் இருந்தான். சைக்கிள்காரருக்கு இன்று சுட்டிக்கருப்பன் கூட்டத்தினர் இருந்த பகுதியில் தான் உழவு வேலை. அவர் கம்மங்கஞ்சியைச் சாப்பிட வெல்லம் எடுத்தபோது அதில் கிறங்கிக் கிடந்த சுட்டிக்கருப்பனை எடுத்து வெளியில் வீசினார். நேற்றிலிருந்து காணாமல் போன சுட்டிக்கருப்பனைத் தேடி அலைந்து திரிந்து கொண்டிருந்த வெல்லத்தின் வாசனையில் அருகில் வந்தால் அங்கே கிடக்கிறான் சுட்டிக்கருப்பன்!
அப்புறம் என்ன?
விடிய விடிய சுட்டிக்கருப்பன் அவன் சுற்றுலா  போன கதையை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான்.

  

Monday 25 April 2016


இத்தனைக்கும் மேலே இனி ஒன்று ஐயா

உதயசங்கர்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இலக்கிய வளம் கொண்ட தமிழ்ச்சமூகம் அதனுடைய அறிவுலக, இலக்கியப் படைப்பாளிகளை எங்ஙனம் வைத்திருந்தது? எங்ஙனம் வைத்திருக்கிறது? என்று யோசித்தோமானால் என்ன தவம் செய்தனையோ இங்கு வந்து எழுத்தாளனாவதற்கு என்ற இழிவரல் தான் தோன்றுகிறது. இது நவீன இலக்கியத்துக்கு மட்டும் கொடுக்கப்பட்ட சாபமா? பழந்தமிழ் இலக்கியம்  படைத்தவர்கள் எல்லோரும் சமூகத்தில் மிகுந்த மரியாதையுடன் இருந்தார்களா? சங்கப்பாடல்களில் பாதிக்கு மேல் அழிந்து விட்டது. அதை எழுதியவர்களின் பெயரே தெரியவில்லை. அந்தக்காலத்திலேயே ஔவை ஊர் ஊராய் நாடு விட்டு நாடு ஒரு சாண் வயிற்றுக்காக அலைந்து திரிந்திருக்கிறார். ஒரு வேளை சாப்பாட்டுக்காய் பாட்டு எழுதியிருக்கிறார். சடையப்ப வள்ளல் என்ற புரவலர் இல்லையென்றால் கம்பர் வீட்டுக் கட்டுத்தறி களி கிண்டத்தான் பயன்பட்டிருக்கும். அப்போதும் அரச கட்டளைக்குப் பயந்து தான் மக்கள் கோவில்களுக்குச் சென்று இதிகாசங்களைக் கேட்டிருக்கிறார்கள். மற்றபடி இப்பமாதிரியே அப்பவும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையைச் சமாளிக்கவே மிகுந்த சிரமத்துக்குள்ளாகியிருக்கிறார்கள்.

நவீன காலத்தில் படைப்பும் அறிவும் ஜனநாயகப்படுத்தப்பட்ட பின்னர் என்ன நிலைமை? ஏற்கனவே வசதி படைத்தவர்கள் எழுதினால் எப்படியோ தப்பித்துக் கொண்டார்கள்.ஆனால் புதிதாக படித்த மத்தியதர வர்க்கத்தினர் எழுத்தையே லட்சியமாகக் கொண்டு வாழ்ந்து விடலாம் என்று எண்ணிக் குதித்தவர்கள் பாழுங்கிணத்தில் குதித்தவர்களானார்கள். மீளவே முடியவில்லை. புதுமைப்பித்தன் தொடங்கி இன்று புதிதாய் மாயமானைப் பார்த்து எழுந்த சீதாகிளர்ச்சியினால் எழுத்தே லட்சியமாய் எழுதத்தொடங்கிய இளவல்கள் வரை எல்லோரையும் பார்த்து புதுமைப்பித்தன் சிரிக்கிறார்.

பலபேர் புதுமைப்பித்தன் என்ற பெயரைக் கேட்டதும் சார் அது புதுமைப்பித்தன் இல்லை புலமைப்பித்தன் சினிமாவுல பாட்டு எழுதுவாரு..அவரைத்தானே சொல்றீங்க..என்பார்கள். விதியே தமிழ்சமூகத்தை என்ன செய்யப்போகிறாய்? என்று கேட்டுக் கொண்டு விலகிப் போய்விட வேண்டியது தான்
.
 நவீன தமிழிலக்கியத்தினை உலக இலக்கியத்துக்கு இணையாகப் பேச வைத்த படைப்பாளிகளில் மிக முக்கியமானவர் புதுமைப்பித்தன். இலக்கியத்துக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த கலை ஆளுமை. தமிழ்ச்சிறுகதைகளின் போக்கையே மாற்றியமைத்தவர். யாரோடும் ஒப்பிட முடியாத சுயம்புவான படைப்பாளி புதுமைப்பித்தன். அவருடைய எழுத்தின் வேகத்திலும் அறச்சீற்றத்திலும் உண்மை சுடர் விடும். அவர் முழுமையுமாய் ஒரு கலைஞனாக இருந்தார். இலக்கியத்தைத் தன் வாழ்வென நினைத்து வாழ்ந்து மறைந்தவர்
.
காலத்தைக் கண்ணாடியெனக் கலைஞனே காட்டுகிறான். கலையின் வழியே காலம் மீண்டும் தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறது. அடிமுடியில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் காலப்பேரருவியில் கலைஞன் அள்ளும் கை நீரே அவனுடைய படைப்புகள். படைப்பை வாசிக்கும்போது கண்முன்னே ஆடும் காட்சித் தோற்றங்கள், மனித மனதில் வாழ்க்கை மதிப்பீடுகளை, சமூக உணர்வை ஏற்படுத்துகிறது.

சோகை பிடித்திருந்த தமிழ்ச்சிறுகதைகளுக்குப் புது ரத்தமும் புது வேகமும் கொடுத்தவர் புதுமைப்பித்தன். எல்லோரும் எழுதத் தயங்கிய விஷயங்களைத் துணிச்சலாக எழுதி அந்தக்காலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியவர். அவருடைய பொன்னகரம், சங்குத்தேவன் தர்மம், மகாமசானம், கயிற்றரவு, கபாடபுரம், சித்தி, செல்லம்மாள், துன்பக்கேணி, இன்னும் பல கதைகளும் புதுமைப்பித்தனை இன்றளவும் தமிழ்ச்சிறுகதை மேதை என்று கொண்டாட வைப்பவை. தமிழ்ச்சிறுகதைகளில் மட்டுமின்றி கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரைகள், என்று எல்லாத்துறைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர் புதுமைப்பித்தன்.
 
15 ஆண்டுகால இலக்கிய வாழ்வில் 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு, விமரிசனங்கள், பத்திரிகைத் தொழில், சினிமா, என்று சிலாவரிசை போட்டு கம்பு சுத்திய புதுமைப்பித்தன் தன்னுடைய 42-ஆவது வயதில் காசநோயினால் இறந்து போனார்.


இத்தனைக்கும் மேலே
இனி ஒன்று
ஐயா நான்
செத்ததற்குப் பின்னால்
நிதிகள் திரட்டாதீர்
நினைவை விளிம்பு கட்டி
கல்லில் வடித்து
வையாதீர்
வானத்து அமரன்
வந்தான் காண்
வந்தது போல்
போனான் காண்
என்று புலம்பாதீர்
அத்தனையும் வேண்டாம்
அடியேனை விட்டு விடும்

என்று பகிடி செய்த புதுமைப்பித்தன் தன்னுடைய கடைசி நாட்களில் தமிழ்ச்சமூகத்திடம் தான் உயிர்வாழ பிச்சை கேட்டார். அவரை மட்டுமா? பாரதியின் நிலை என்ன? எம்.வி.வெங்கட்ராமை வறுமையினால் அழவைத்தது. கு.ப.ராவின் கண்பார்வையைப் பறித்தது. சி.சு.செல்லப்பாவின் நூல்கள் பதிப்பிக்கத் தயாரில்லை. க.நா.சு.விற்கு டைப்ரைட்டரை மட்டும் விட்டு வைத்தது. ஆத்மநாமைத் தற்கொலைக்குத் தள்ளியது. ஜி.நாகராஜனை மதுரையின் தெருக்களில் அலைய வைத்தது. விக்ரமாதித்தியனை ஊர் ஊராக அலைய வைத்துக் கொண்டிருக்கிறது. கோணங்கிக்கு குடும்பஅமைப்பு அலர்ஜியாகியிருக்கிறது. இத்தனைக்கும் தமிழ் எழுத்தாளர்கள் வேண்டுவது என்ன? அவர்களுடைய படைப்புகள் பரவலாக வாசிக்கப்பட வேண்டும். எழுத்தாளனாக ஜீவியம் செய்ய வழிவகை வேண்டும். மற்றபடி லத்தீன் அமெரிக்க, ஐரோப்பிய எழுத்தாளர்களைப் போல பண்ணை வீடுகளையோ, மாடமாளிகைகளோ இல்லையே.

ஆனால் ஏன் இன்னமும் போலிகளை, பொய்களை, தலையில் வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது நம்முடைய தமிழ்ச்சமூகம்.? தமிழ்ச்சமூகத்தின் உளவியல் குறித்து ஆராய வேண்டியுள்ளது.

( இன்று புதுமைப்பித்தன் பிறந்த தினம் .)

 25-4-2016




Sunday 24 April 2016

பிரமீள் மேதையின் குழந்தமை

. பிரமீள் மேதையின் குழந்தமை

உதயசங்கர்

திருநெல்வேலியிலிருந்து விளாத்திகுளத்துக்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு வேலை மாற்றலாகி வந்த ஜோதிவிநாயகம் கோவில்பட்டியில் எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துத் தலையை கழுத்துக்கு ரெண்டடி மேலே தூக்கிக்கிட்டு திரிந்த எங்கள் தலையில் ஒரு தட்டு தட்டி ( அப்படி தட்டுகிற அளவுக்கு எங்கள் எல்லோரையும் விட ஆறடி உயரத்தில் இருந்தார் ) ஏல உங்களுக்கு என்னல தெரியும் உலக இலக்கியம் பத்தி? என்று கேட்டார். அதுவரை எங்களைக் கேள்வி கேட்க யாரிருக்கா என்று தெருக்களில் யாரும் இல்லாத ராத்திரிகளில் பேட்டை ரவுடிகள் மாதிரி கர்ஜித்து புகை விட்டுத் திரிந்து  கொண்டிருந்தோம். அவருடைய கேள்வியினால் எங்களுக்கானால் வெளம். எங்களைப் பார்த்து எப்படிக் கேட்கலாம்? எங்களைப் பார்த்து எப்படிக் கேட்கலாம்? அதுக்கும் ஒரு காரணம் இருந்தது.

கோவில்பட்டிக்காரர்களான எங்களுக்கு ஒரு சிறப்புக்குணம் இருந்தது. அங்கே எழுதிக் கொண்டிருந்த, எழுதிக் கொண்டிருக்கிற, நேற்றுத்தான் எழுதத் தொடங்கியிருக்கிற எல்லோருமே தாங்கள் எழுதுகிற ஒவ்வொரு எழுத்தும் உலக இலக்கியம் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். அதோடு ஒருத்தரை ஒருத்தர் தெரியாத்தனமாகக்கூட பாராட்டி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். ஒவ்வொருத்தரும் மற்றவர்கள் படைப்பை கொலைவெறியுடன் விமர்சனம் செய்தோம். எதிரிகள் போல பாவித்து விவாதம் செய்தோம். தத்துவங்கள் வழி பிரிந்து கிடந்தோம். பல இரவுப்பொழுதுகளில் கோவில்பட்டி காந்திமைதானம் தீப்பிடித்து எரிந்தது. ஆனாலும் தினமும் சந்தித்தோம். தினமும் விவாதித்தோம். இந்த சண்டை சச்சரவெல்லாம் எங்களுக்குள் தான். வெளியூரிலிருந்து யாராவது படைப்பாளிகள் வந்து விட்டார்களென்றால் அவர்கள் முதலில் ஓவியர் மாரீஸைத் தான் சந்திப்பார்கள். அவர் அவருடைய வீட்டில் தங்க வைத்து உணவளித்து ஓய்வெடுக்க வைத்து விட்டு ஊரிலுள்ள எழுத்தாளர்களுக்கு இப்படி இன்னாரின்னார் வந்திருக்கிறார்.. வாய்ப்பு இருக்கிறவர்கள் வந்து சந்தியுங்கள், என்று முரசறைவார். இப்போதென்றால் ஒரு குறுஞ்செய்தியோ, ஃபோனோ போதும். அது பழைய காலம் பெரும்பாலும் கால்நடையாக நடந்து ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் சென்று தகவல் சொல்ல வேண்டும். அதைச் சலிக்காமல் செய்தார் மாரீஸ்.

இப்படித் தகவல் கிடைத்ததும் எங்களுடைய ஆயுதங்களைத்தீட்டிக் கொண்டு அதுவரை பிரிந்து சண்டை போட்டுக் கொண்டிருந்த நாங்கள் ஒரே ஆளாக மாறி வியூகம் அமைத்து வந்தவர் மீது எல்லாவிதமான ஆயுதங்களைக் கொண்டும் தாக்குதல் நடத்துவோம். அவர் படைப்பைப் பற்றி பேசினால் நாங்கள் தத்துவம் பற்றி கேள்வி கேட்போம். அவர் தத்துவம் பற்றிப் பேசினால் அரசியல் பற்றிக் கேள்வி கேட்போம். இப்படி அவரைச் சுத்திச் சுத்தி வளைச்சு அவர் களைச்சுப்போய் சரணாகதி அடையும்வரை இந்த விவாதத்தின் முடிவுக்காகத் தான் இந்த உலகம் கண்மூடாமல் காத்துக் கொண்டிருப்பதாக நினைத்து உரத்த குரலில் சத்தம் போடுவோம். ஒத்தை ஆள் பாவம் என்ன செய்வார்? கடைசியில் சரணாகதி அடைந்து விடுவார். நாங்களும் வெற்றிக் களிப்புடன் அவருடன் சேர்ந்து அவருடைய காசில் டீயும் சிகரெட்டும் புகைத்து விட்டு கலைந்து விடுவோம். இப்படிக் கொள்ளைப்பேரை கலாய்ச்சிருக்கோம். அதனால் எங்களிடம் ஜோதிவிநாயகம் கேட்டபோது தயாரானோம் மற்றுமொரு யுத்தத்துக்கு.

நீளமான தலைமுடியை ஆட்டி ஆட்டி நீண்ட கைகளையும் விரல்களையும் நடன நிருத்தியங்களைப் போல் விரித்தும் நீட்டியும் எங்களிடம் பேசிய ஜோதிவிநாயகத்திடம் நாங்கள் அனைவரும் சரணாகதி அடைந்தோம். ஒரே நாளிரவில் எங்களையெல்லாம் வென்று விட்டார் ஜோதி. அப்படிக் கட்டுண்டிருந்தோம் அவரிடம். அவருடைய பேச்சு, விசாலமான அறிவு, உலக இலக்கிய அறிவு, அளவிலாத அன்பு, எல்லோரையும் அரவணைத்த மனம், இப்படி நாங்கள் அதுவரை கண்டிராத ஆளுமையாக இருந்தார் ஜோதி. அவருடைய உலகளாவிய இலக்கியப்பார்வை எங்களுக்கு எவ்வளவு கொஞ்சமாய் தெரிந்திருந்தது என்பதை உணர்த்தியது. கொஞ்சநாளுக்கு எங்களுடைய சந்திப்பின் மையம் காந்திமைதானத்திலிருந்து விளாத்திகுளம் வைப்பாற்று மணலுக்கு மாறி விட்டது. அது மட்டுமல்ல எப்போதும் யாராவது ஒருத்தர் ஜோதியின் கூடவே இருந்து கொண்டிருந்தோம்.

எல்லாஎழுத்தாளர்கள் மனதிலும் ஒரு ரகசியக்கனவு இருக்கும். அது தாங்கள் ஒரு பத்திரிகை நடத்த வேண்டும் என்பது தான். அந்தப் பத்திரிகை மட்டும் வெளியானால் போதும் தமிழிலக்கியமே தலைகீழாகப் புரண்டுவிடும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். கடைசிவரை இப்படியே ரகசியமாய் கனவுகண்டே காலத்தைக் கழிப்பவர்களும் இருப்பார்கள். சிலர் அசட்டுத் தைரியத்தில் கண்ட கனவை யதார்த்தத்தில் நிகழ்த்திவிட ஆசைப்படுவார்கள். ஆசை தானே எல்லா நல்லதுக்கும் கெட்டதுக்கும் காரணம். ஜோதியும் அப்படி ஒரு கனவு கண்டிருக்கிறார். பிறகென்ன அவருக்கு அருள் வர ஆரம்பித்துவிட்டது. போதாதுக்கு நாங்கள் வேறு ரெண்டாங்கு மேளத்தை டண்டனக்க டன் டண்டணக்க டன் என்று அடித்து அவருடைய அருள் குறையாமல் பார்த்துக் கொண்டோம்.

தேடல் என்ற நாமகரணம் சூட்டி காலாண்டிதழாக அந்தப் பத்திரிகை வெளிவந்தது. அந்தச் சமயத்தில் கோவில்பட்டிக்கு வருகிற எழுத்தாளர்கள் எல்லோரும் விளாத்திகுளத்துக்கும் செல்வதை வழக்கமாக்கியிருந்தனர். கவிஞர் தேவதேவன் தூத்துக்குடியிலிருந்து அடிக்கடி கோவில்பட்டி வந்து செல்வார். அப்போது கவிஞர் பிரமீளுடன் மிக நெருக்கமாக இருந்தார். நவீன கவிதையின் மிகச் சிறந்த கவிஞர் பிரமீள். அவருடைய கண்ணாடியுள்ளிருந்து தொகுப்பு அப்போது தமிழ்க்கவிதையுலகில் பெரும்சலனத்தை ஏற்படுத்தியிருந்தது. எனக்கு அவருடைய கவிதை மீது மிகப்பெரும் காதல் இருந்தது. அவருடைய விமர்சனக்கட்டுரைகள், கலை இலக்கிய கோட்பாடுகள் பற்றிய கட்டுரைகள் எல்லாம் புதிய ஒளியுடன் மனதுக்குள் வெளிச்சம் பாய்ச்சின. அவருடைய கவிதைகளை விட அவருடைய கட்டுரைகளை ஜோதிக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய மேதாவிலாசத்தைப் பற்றி, அவர் சொல்லியுள்ள கருத்துகளின் புதுமை பற்றி மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டிருப்பார்.

பிரமீள் இலங்கையில் பிறந்தவரென்றாலும் அவருடைய முப்பதுகளிலேயே இந்தியாவுக்கு வந்து விட்டார். இலங்கையிலிருக்கும்போதே அவருடைய இருபதுகளில் சி.சு. செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையில் தன் எழுத்துப் பயணத்தைத் தொடங்கிவிட்டார். அவர் இந்தியாவுக்கு வந்த காலம் புதுக்கவிதை இயக்கமும் விமர்சன மரபும், தமிழில் வேரூன்றத் தொடங்கியிருந்த காலம். அதன் பிறகு அவர் தமிழ் எழுத்தாளராகவே தான் அறியப்பட்டார். நவீன தமிழ் இலக்கியத்தில் மகத்தான ஒரு ஆளுமை பிரமீள். புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம், ஓவியம், சிற்பம், என்று பலதுறைகளிலும் தன் ஆளுமையை வெளிப்படுத்தியரென்றாலும் பிரமீளின் மேதைமை புதுக்கவிதையிலும் விமர்சனத்துறையிலும் விகசிக்கிறது. யாருக்கும் அஞ்சாமல் தயவு தாட்சண்யமில்லாமல் தன் கருத்துக்களை முன்வைக்கும் வல்லமை அவரிடம் இருந்தது. தமிழில் முழுமையான படிமக்கவிஞராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். புதுக்கவிதையின் இன்றைய வளர்ச்சிக்கு அவருடைய வாழ்நாள் முழுவதும் கவிதையை தன் வாழ்வின் இயக்கமாகக் கொண்டு இயங்கியதும் ஒரு காரணம்.  ஆரம்பத்தில் தன்னுடைய கவிதை இயக்கத்தை இதுவரை தமிழ்க் கவிதை உலகில் முன்னெப்போதும் ஒப்புவமை சொல்ல முடியாத படிமங்களின் வெளிச்சத்தைப் பாய்ச்சியவர் பிரமீள்.

 அவருடைய விடிவு என்ற கவிதையில்,

பூமித்தோலில்
அழகுத்தேமல்
பரிதிபுணர்ந்து
படரும் விந்து
கதிர்கள் கமழ்ந்து
விரியும் பூ
இருளின் சிறகைத்
தின்னும் கிருமி
வெளிச்சச்சிறகில்
மிதக்கும் குருவி.

என்று படிமங்களின் அழகியலில் வாசகனுக்குப் பிரமிப்பூட்டிய பிரமீள் பின்னால் கவிதையின்வழி ஆன்மீகப்பயணத்தைத் தொடர்ந்தார். அவருடைய E=Mc2 என்ற கவிதையும், கண்ணாடியுள்ளிருந்து கவிதையும் காவியம் கவிதையும், என்றென்றும் பிரமீளின் பெயர் சொல்லும் பல கவிதைகளில் சில. அந்த மகத்தான கவியாளுமையின் கவிதையியக்கத்தை இத்தனை சிறிய கட்டுரையில் சொல்லிவிட முடியாது. பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பின்பு தமிழில் தோன்றிய மகத்தான ஒரு ஆளுமைக்கு உரிய கௌரவத்தை தமிழிலக்கியம் தரவில்லை என்றே அஞ்சுகிறேன்.

தமிழ் விமர்சன மரபென்பது இன்னமும் சோனிக்குழந்தையாகவே இருக்கிறது. அந்தத் துறையில் இயங்குவதற்கான தெம்பும் திராணியும் நம் இலக்கியவாதிகள் அநேகம்பேருக்கு இல்லை. ஆனால் தன்னுடைய இருபதுகளிலே சுயமான மதிப்பீட்டு உணர்வுடன் தமிழிலக்கியத்தில் இயங்கியவர் பிரமீள். அன்று அவருடன் வெங்கட்சாமிநாதன், கைலாசபதி, நா.வானமாமலை, தொ.மு.சி., சுந்தரராமசாமி, கா.சிவத்தம்பி போன்றோர் வேறு வேறு கோணங்களில் இயங்கினார்கள். ஆனால் இன்று அப்படிப்பட்ட விமர்சன மரபு தொடரவே இல்லை என்பது தமிழின் துரதிருஷ்டம் தான். அ. மார்க்ஸ்ஸையும் எழுத்தாளர் ஜெயமோகனையும் தவிர வேறு யாரும் அத்தகைய சுயமான மதிப்பீடுகளுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றனரா என்பது சந்தேகம். இப்போதைய விமர்சனங்கள் எல்லாம் ரசனை சார்ந்த மதிப்புரைகளாகவே இருக்கின்றன என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். கால சுப்பிரமணியன் பிரமீளின் தமிழின் நவீனத்துவம் என்ற நூலின் முன்னுரையில்,

“ விமர்சனத்தை ஒரு கலை வடிவாக அமைத்தவர் பிருமீள்.  அழகியல் ரீதியிலான அநுபவத்தைச் சொல்லும் ஒரு தோரணையாக விமர்சனத்தை மாற்றினார். சுயமான விமர்சனச் சித்தாந்தத்தை உருவாக்கிக் கொடுத்தார். “

என்று சொல்வதை அவருடைய விமர்சனக்கட்டுரைகளை வாசிக்கிற எல்லோரும் ஏற்றுக் கொள்ளவே செய்வர். அத்தகைய ஆளுமையின் வாழ்நாள் முழுவதும் அன்றாட வாழ்க்கைக்குத் தடுமாறிக் கொண்டிருந்தார். மிகுந்த கூர்மையான தன்னுணர்வு மிக்கவராகவும், கூருணர்வுடையவராகவும் இருந்ததால் இந்தச் சமூகத்தோடும், நண்பர்களோடும் எல்லாநேரமும் எல்லாக்காலமும் ஒத்துப் போக முடியவில்லை. அதனால் ஏற்பட்ட காயங்கள், அவருடைய எழுத்தில் வெளிப்பட்டது. எனக்கு அந்தக் குழாயடிச் சண்டைகள் அதுவும் குறிப்பாக மிகவும் தனிப்பட்ட முறையில் எழுத்தாளர்களை கேரக்டர் அஸாஸினேஷன் செய்கிற மாதிரி எழுத்துகள் அருவெருப்பையே ஏற்படுத்தின. அந்த மகா ஆளுமையின் சித்திரத்தில் தவறுதலாக விழுந்துவிட்ட கோடுகளாகவே அவை தெரிந்தன. ஆனால் இவற்றையெல்லாம் சுண்டுவிரலால் புறந்தள்ளி விடுகிற அளவுக்கு மகத்தான படைப்பாளியாக பிரமீள் திகழ்ந்தார். அவருக்குத் தமிழ்ச்சமூகம் எந்த நியாயத்தையும் வழங்கவில்லை. தன்னுடைய சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் தன்னுடைய அறிவார்ந்த ஆளுமையைப் பற்றி அதற்கு கிஞ்சித்தும் கவலையில்லை. கால சுப்பிரமணியன் போன்ற மிகச்சில நண்பர்களின் உண்மையான அன்பிலேயே தன் பிற்காலத்தைக் கழித்தார். உடல் நலக்குறைவினால் 1997- ல் வேலூர் அருகிலுள்ள கரடிக்குடியில் மறைந்தார். இப்போதும் பிரமீளின் எழுத்துகள் அனைத்தும் நமக்குக் கிடைப்பதற்கு கால சுப்பிரமணியன் தான் காரணகர்த்தாவாக இருக்கிறார். இந்த ஒரு காரியத்துக்காகவே நம்முடைய தமிழ்ச்சமூகம் கால சுப்பிரமணியத்துக்கு நன்றிக்கடன் பாராட்ட வேண்டும். ஆனால் தமிழ்ச்சமூகத்தின் எருமைத்தோலில் எந்த வெயிலோ, மழையோ எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லையே. அதற்கு அன்றிலிருந்து இன்று வரை திரைப்படம் ஒன்று தான் ஞானப்பாலூட்டி வளர்க்கும் தாயாக இருக்கிறது.

80- களில் பிரமீளின் ஒரு கட்டுரைத் தொகுப்பு ஒன்றை வெளிக்கொண்டுவர கவிஞர் தேவதேவன் முயற்சி எடுத்தார். அதற்காக அவருடைய கைப்பிரதிகளை வாங்கி படியெடுத்துக் கொடுக்க என்னிடம் கொடுத்திருந்தார் தேவதேவன். மகத்தான சந்தர்ப்பமென அவற்றை நானும் வாங்கி படியெடுக்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் நினைத்தபடி வேலையை உடனே முடிக்க முடியவில்லை. வேலையில்லாமல் சும்மா சுற்றிக் கொண்டிருப்பதால் வீட்டில் கடும்நெருக்கடி. பாதி நாள் வீட்டிலில்லாமல் யார் எந்த ஊருக்குக் கூப்பிட்டாலும் போய்க் கொண்டிருந்தேன். அப்புறம் காதல் நெருக்கடிகள் வேறு. இதனால் தேவதேவன் எவ்வளவோ அவகாசம் கொடுத்தும் அந்தக் கட்டுரைகளை படியெடுத்து முடிக்கவில்லை. இது தெரியாமல் பிரமீள் தேவதேவனைக் கடிந்து ஒரு கடிதம் எழுதிவிட்டார். அந்தக் கடிதம் ஏற்படுத்திய வருத்தத்தில் தேவதேவனும் எனக்கு கோபமாக எல்லா கைப்பிரதிகளையும் திருப்பி அனுப்பச் சொல்லி கடிதம் போட்டார். கடிதம் கண்டவுடன் நான் குற்றவுணர்ச்சி பொங்க என் சூழ்நிலையை விளக்கி ஒரு கடிதத்தை தேவதேவனுக்கு எழுதி விட்டு சில நாட்களிலேயே அந்தக் கைப்பிரதிகளைப் படியெடுத்து ஒரிஜினலையும் சேர்த்து அனுப்பி விட்டேன். பின்னர் அதை மறந்தும் விட்டேன். ஒரு மாதம் கழித்து ஒரு அஞ்சலட்டை வந்தது. பிரமீள் எழுதியிருந்தார். அவர் தவறுதலாக தேவதேவனைக் கடிந்ததின் விளைவே தேவதேவன் உங்களைக் கடிந்து விட்டார் என்று வருத்தம் தெரிவித்தும், நன்றி பாராட்டியும் எழுதியிருந்தார். எப்படியிருக்கும்? அந்தக் கடிதத்தை நான் காட்டாத ஆளில்லை.

என் ஆதர்சமான ஆளுமையிடமிருந்து கடிதமென்றால் சும்மாவா? அதன் பிறகு 90-களில் எழுதிய கட்டுரை ஒன்றில் நம்பிக்கையளிக்கும் வகையில் சிறுகதை எழுதிக் கொண்டிருப்பவர்கள் பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றிருந்தது. அவர் தூத்துக்குடிக்கு தேவதேவனைப் பார்ப்பதற்காக வந்தவர் விளாத்திகுளத்துக்கும் ஜோதியைப் பார்ப்பதற்காக வந்தார். நான் தற்செயலாக அன்று விளாத்திகுளத்தில் இருந்தேன். அவரைப் பார்த்தால் மிகச் சாதாரணமாகத் தெரிந்தது. அவருக்கு ஒரு புறம் தேவதேவனும், இன்னொருபுறம் ஜோதியும் ஒரு பரவச உணர்வோடு நடந்து கொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்குப் பின்னே குட்டோட்டமாக வந்து கொண்டிருந்தேன். ஒரு மேதையின் அறிவு விசாலத்தை அன்று நேரில் கண்டேன். எந்த சிரமமுமில்லாமல் அலட்டலுமில்லாமல் அத்தனை விஷயங்களைப் பற்றியும் ஆதாரபூர்வமாக, விளக்கமாக, எளிமையாக, சொல்லிக் கொண்டு வந்தார். அவர் பேசியதைக் கேட்டபோது அதிலிருந்த தெளிவு என்ன அதிசயப்படுத்தியது. எந்த விஷயம் குறித்தும் தயங்காமல் பேசினார். நாங்கள் மூன்று பேரும் அப்படியே மெய்ம்மறந்த மாதிரி நடந்து கொண்டிருந்தபோது  விளாத்திகுளம் பேரூந்து நிலையத்துக்குள் ஒரு பேரூந்து அப்படியே  வளைந்து திரும்பியது. ஒரு கணம் தான் பிரமீள் தன் உதடுகளைப் பிதுக்கி ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று ஒலியெழுப்பியபடியே சின்னப்பயனைப் போல இரண்டு கைகளையும் ஸ்டீயரிங்கை வளைத்துக் கொண்டு ரோட்டில் கொஞ்சதூரம் ஓடிப் போனார். பின் நின்று திரும்பி மறுபடியும் எங்களிடம் வந்தார். நாங்கள் அப்படியே அசந்துபோய் நின்றோம். அருகில் வந்ததும் புன்னகை மாறாமல் விட்ட இடத்திலிருந்து பேசத் தொடங்கினார் அந்த கவியாளுமை.

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னால் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஒரு கூட்டத்துக்காக நான் விளாத்திகுளம் சென்றிருந்தேன். பேருந்து நிலையம் மாறவில்லை. அன்று போலவே பேருந்து வளைந்து திரும்புகிறது. அதோ எனக்கு முன்னால் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ற சத்தமெழுப்பியபடி பிரமீள் ஓடிக் கொண்டிருக்கிறார். அந்த மேதையின் குழந்தமை விளாத்திகுளம் பேருந்து நிலையப் புழுதியில் அழியாக்கல்வெட்டாய் பதிந்திருக்கிறது. 
பிரமீள்..எங்கள் அன்புக்குரிய பிரமீள்…
( மீள்பதிவு )





Saturday 23 April 2016

வாசிப்பு என் மூச்சு


வாசிப்பு என் மூச்சு

உதயசங்கர்

மிகச்சிறிய வயதிலேயே வாசிப்பதில் எனக்கு ஆர்வம் இருந்தது. அதற்கான விதையை என்னிடம் ஊன்றியது என்னுடைய அம்மா கமலம். அந்தக் காலத்து நான்காவது ஃபாரம் படித்திருந்த என்னுடைய அம்மா குமுதம், கல்கண்டு, ஆகியவற்றின் வாசகியாக இருந்தார். அந்தப்புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கிற நானும் அந்தப்புத்தகங்களை முதலில் பார்க்கவும் பின்பு படிக்கவும் தொடங்கினேன். அத்துடன் அன்றாடம் என் அப்பா சாப்பிடும்போது பழைய சோத்துக்கு தொட்டுக்கொள்ள மொச்சை, பக்கோடா, மிக்சர், என்று பக்கத்து கடைகளில் வாங்கிக் கொண்டு வருவேன். அந்தக்காகிதங்களில் என்ன எழுதியிருந்தாலும் வாசித்தேன். பின்பு நாங்கள் குடியிருந்த தெருவிலிருந்த கொஞ்சம் வசதியான பையன்கள் வாங்கிப்படிக்கிற அம்புலிமாமா, அணில், கண்ணன், இரும்புக்கை மாயாவி, மாயாவிகதைகள், பஞ்சதந்திர கதைகள், நண்பன் நாறும்பூநாதன் கொண்டு வந்து கொடுத்த ரஷ்யச் சிறுவர்கதைகள், இப்படி வாசித்தேன். எப்படியோ நண்பர்கள் மூலம் கோவில்பட்டி தெற்கு பஜாரில் இருந்த நூலகத்துக்குப் போனேன். ஓய்வு நேரங்களில் அங்கே சென்று என் கையில் கிடைக்கிற சிறுவர் நூல்களை வாசித்தேன். நான் பயின்ற ஆயிர வைசிய பள்ளிக்கூடத்தில் நெசவு வகுப்பு பெரும்பாலும் நூலக வகுப்பாகவே இருந்தது. பள்ளிக்கூட நூலகத்திலிருந்த புத்தகங்களில் கண்ணில் பட்டதை வாசித்தேன்.

 எந்த நோக்கமுமற்று வாசித்தேன். கதை கேட்பதற்கும் கதை சொல்வதற்கும் எனக்கு ஆர்வம் இருந்தது. நான் வாசித்த, கேட்ட, கதைகள் எல்லாம் என் கனவுகளில் வந்தன. ஏழு ராஜகுமாரர்கள், ஏழு ராஜகுமாரிகள், ஏழு குதிரைகள், அரக்கர்கள், பூதங்கள், மந்திரவாதிகள், தேவதைகள் பேய்கள், பிசாசுகள், ரத்தக்காட்டேரிகள், முனி, என்று என் கனவுகளில் அலைந்து திரிவார்கள். அந்த சாகசங்களை அருகிலிருந்து நான் பார்த்துக் கொண்டிருப்பேன். கனவுகளில் அவர்களை என் இஷ்டப்படி ஆட்டி வைப்பேன். அதே போல கதை சொல்லும்போதும் என் பாட்டுக்கு கதைகளை வளைத்து நெளித்து கதை சொல்வேன். பையன்களை விட பொம்பிளைப் பிள்ளைகளிடம் கதை சொல்வது ரெம்பப் பிடிக்கும். பையன்கள் கொஞ்ச நேரத்துக்கு மேலே பொறுமையாகக் கதை கேக்க மாட்டார்கள். இல்லையென்றால் விளையாடலாம் விளையாடலாம் என்று நச்சரிப்பார்கள். ஆனால் பொம்பிளைப்பிள்ளைகளிடம் பேய்க்கதை சொல்கிறேன் என்று சொன்னால் போதும் அப்படியே குறளி வித்தைக்காரன் முன்னால் மந்திரித்து விட்ட மாதிரி நிற்கிற கூட்டத்தைப் போல அப்படியே இருப்பார்கள். காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் டி.எஸ்.பாலையாவுக்கு கதை சொல்லும்போது டி.எஸ்.பாலையா பயப்படுவாரே அதமாதிரி பயமாருக்கு.. வீல்..கீச்.. என்று அவயம் போட்டுக் கொண்டும் கண்களை மூடிக்கொண்டும் முகத்தைப் பொத்திக்கொண்டும் அசையாமல் ஆனால் உன்னிப்பாகக் கவனிப்பார்கள்.

இத்தனைக்கும் நான் விளையாட்டில் சோடை கிடையாது. தெருக்களில் விளையாடும் பம்பரம், கோலி, செதுக்கு முத்து, கிட்டிப்புள், பீட்டர் லாஸ்ட், கல்லா மண்ணா, கண்ணாமூச்சி, கபடி, தொட்டுப்பிடிச்சி, எறிபந்து, ஒத்தையா ரெட்டையா, சிகரெட் அட்டை விளையாட்டு, தீப்பெட்டிப்படம் விளையாட்டு, சீட்டுக்கட்டு, என்று எல்லா விளையாட்டுகளையும் விளையாடுவதோடு கோவில்பட்டி ஃபேமஸ் ஹாக்கியையும் விளையாடுவேன். கல்லூரிக்காலத்தில் கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், வேலைக்குப் போனபிறகு பால் பேட்மிண்டன், ஷட்டில் காக், என்று விளையாடிக் கொண்டிருந்தேன். இப்போது விளையாட்டுகள் என்னை விட்டுப் போய் விட்டன. ஆனால் என்னுடைய வாசிப்பு இன்னும் தொடர்கிறது.

இப்போதும் என் கனவுகளில் புதுமைப்பித்தன் சுற்றிலும் நாங்கள் நிற்க யாரையோ ஒரு எழுத்தாளரைக் கேலி செய்து தன் எத்துப்பற்கள் தெரிய வெற்றிலைச்சாறு தெறிக்கச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். மௌனி தன் வெறித்த பார்வையுடன் காந்தி மைதானத்தில் செண்பகவல்லியம்மன் கோவிலுக்குப் போகும் பெண்களை உற்றுப்பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறார். கு.ப.ரா. தன் மென்மையான குரலில் அவருடைய சிறிது வெளிச்சம் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். நாங்கள் குறைந்த அந்த ஒளியில் எங்கள் கண்முன்னே அந்தக் கதை நிகழ்வதைப் பார்க்கிறோம். ஜெயகாந்தனின் கம்பீரமான குரல் மேடைக்கு முன்னால் வசீகரிக்கிறது. கி.ரா.வின் கீற்றான உதடுகளின் அசைவில் கரிசக்காடு அசைந்து புரள்கிறது. தி. ஜானகிராமனின் ஜமுனாவை மோகித்த முள்ளாக நான் காத்திருக்கிறேன். புளியமரத்தடியில் சுந்தரராமசாமியின் ஜே.ஜே. கலையின் அத்துகள் பற்றி பேசும்போது அந்த மரத்தடியைக் கடந்து ரத்னாபாய் போய்க்கொண்டிருக்கிறாள்.

 டவுண் நயினார் குளம் கலுங்குக்கல்லில் உட்காந்திருக்கும் கோமதிக்குப் பக்கத்தில் இருந்த பாப்பையாவின் முகத்தை நெருங்கிப் பார்க்கும்போது அது நானாக இருக்கிறேன். என்னுடன் இருக்கும் வண்ணநிலவன் “ வே.. அது நான் தாம்வே..கோட்டி..கோட்டி..” என்று சொல்லிச் சிரிக்கிறார். மரங்களடர்ந்த பங்களாத்தெருவில் தூரத்தில் வருகிற தனலட்சுமியாக நானே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எதிரே வந்து கொண்டிருக்கிற செபாஸ்டியன் எப்படி வண்ணதாசனாக மாறினான்? வடக்கூரானைப் போட்டுத்தள்ளி விட்டு தலைமறைவாய் திரிகிற பூமணிக்கு தூக்குவாளியில் சாப்பாடு கொண்டுட்டு போகிறேன். அசோகமித்திரனின் புலிக்கலைஞன் என்னிடம் அந்த அடவுகளைச் செய்து காட்டிக் கொண்டிருக்கிறான். உள்மனிதனின் விவகாரங்களைக் காரசாரமாக எங்கள் அருமை மேலாண்மை பொன்னுச்சாமி விவாதித்துக் கொண்டிருக்கிறார். கந்தர்வனின் துண்டு என் தோளில் கிடக்கிறது.கோணங்கியின் கருப்புரயில் என் மகளின் விளையாட்டு பொம்மையாக என் வீட்டு தட்டட்டியில் ஓடிக்கொண்டிருக்கிறது. கிடைக்காத வார்த்தைக்காக விக்கித்துப் போய் உட்கார்ந்திருக்கும் தமிழ்ச்செல்வனின் கையை ஆதரவாய் பிடித்துக் கொண்டிருக்கிறேன். மந்திரமலரைக் கொடுத்து விட்ட போன அந்தக்குழந்தை எங்கிருந்து வந்தாள்? எங்கே போனாள்? என்று விமலாதித்த மாமல்லனிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். வெயிலைக் கொண்டுவாருங்கள் என்று இருட்டுக்குள்ளிருந்து எஸ்.ரா.விடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நிமிர்ந்து பார்க்காமல் டைப் அடித்துக் கொண்டேயிருக்கும் ஜெயமோகனின் கணிணியில் உள்ள விஷ்ணுபுரம் கோபுரத்தில் ஏறிக் கொண்டிருக்கிறேன். காவல்கோட்டத்தின் வரலாற்றை ஓங்கிய குரலில் சொல்லிக் கொண்டிருக்கும் சு.வெங்கடேசனைப் பார்த்து பிரமித்து போயிருக்கிறேன். லிபரல் பாளையத்தை கேள்வி கேட்கும் ஒரே ஆளான மனுவிரோதி ஆதவன் தீட்சண்யாவுடன் ஒரு டீ குடித்துக் கொண்டிருக்கிறேன். மூவலூர் ராமாமிருதத்தம்மாளை கண்முன்னே நடமாட விட்ட எழுத்தாளர் ஜீவசுந்தரியிடம் அவருடைய அநுபவங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இப்படி நேற்று வாசித்த தமிழ்க்குமரனோடு அலைபேசியில் அவருடைய கதைகளைப் பற்றி சொல்லும்போது குறுக்கே பொன்ராஜ் கிராஸ்பண்ணி பேசுகிறார். என் அருமை நண்பன் நாறும்பூநாதனின் ஆச்சி எனக்கு கொழுக்கட்டை அவித்து கொடுத்து “ ஏல தின்னுல மூதி..எப்படி மெலிஞ்சி போயிக்கிடக்கே..” என்று அங்கலாய்க்கிறார். இப்படி அனுதினமும் நான் புத்தகங்களையே கனவுகளாகக் கண்டு கொண்டிருக்கிறேன். அப்படி கனவுகள் காண்பதற்காகவே வாசித்துக் கொண்டிருக்கிறேன். என் கனவுகளில் வருகிற கதாபாத்திரங்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், தத்துவவாதிகள் என்னோடு உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடனான உரையாடல் என் வாழ்வை அர்த்தப்படுத்துகிறது. அந்த அர்த்தம் தான் என் வாழ்வின் சாராம்சம் என்று உறுதியாக நம்புகிறேன்.

என் வாழ்வின் சாராம்சத்தை செழுமைப்படுத்தவே நான் இன்னமும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசிக்கும்போது என் மனம் விசாலமாகிறது. வாசிக்கும்போது என் மனதில் ஈரம் படர்கிறது. வாசிக்கும்போது என் மனதில் அன்பு ஊற்றெடுக்கிறது. வாசிக்கும்போது என் மனதில் மாற்றம் நிகழ்கிறது. வாசிக்கும்போது ஜனநாயகம் தழைக்கிறது. வாசிக்கும்போது சமூகத்தை மாற்றச் சொல்கிறது. வாசிக்கும்போது சமத்துவம் பிறக்கிறது. எனவே நான் வாசிக்கிறேன்.


  

       

Sunday 17 April 2016

க.நா.சு.வின் சிரிப்பு

க.நா.சு.வின் சிரிப்பு


இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாமல் தான் எழுத ஆரம்பித்தேன் என்று சொன்னால் சிரிக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். இலக்கியம் என்பது தமிழாசிரியர்களின் டிபார்ட்மெண்ட் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கும் காரணம் இருந்தது. எங்கள் வீடு இருந்த கன்னி விநாயகர் கோவில் தெருவிலிருந்து காந்திமைதானம் ஐம்பதடி தூரத்தில் தான் இருந்தது. கோவில்பட்டியில் நடைபெறும் அத்தனை முக்கியமான அரசியல் கூட்டங்கள், இலக்கிய கூட்டங்கள் எல்லாம் அங்கே தான் நடைபெறும். எல்லாக்கூட்டங்களிலும் மேடைக்கு முன்னால் புழுதி பரப்பியபடி சிறுவர்கள் நாங்கள் விளையாடிக் கொண்டிருப்போம். பலசமயம் கூட்டம் ஆரம்பித்த பிறகும் கூட எங்கள் அட்டகாசம் தொடரும். யாராவது பெரியவர்கள் வந்து சத்தம் போட்டுக் கொண்டேயிருப்பார்கள். நாங்கள் அசரணுமே. மிரட்டல்களும், சிலசமயம் அடிகளும் கூட கிடைக்கும்.
இலக்கியக்கூட்டங்கள் என்றால் பட்டிமன்றங்கள் தான். புலவர்கள், பேராசிரியர்கள் என்று பழந்தமிழ் இலக்கியப்பாடல்களை செந்தமிழில் பாடவும், பேசவும் செய்வார்கள். அவர்கள் பேசுகிற மொழியே எங்களுக்குப் புதியதாக இருக்கும். அப்படியே வாயைப் பிளந்தபடியே பேசுகிறவர்களின் வாயை ஆச்சரியத்துடன் பார்த்தபடியே உட்கார்ந்திருப்போம். ஆக இலக்கியம் என்றால் அது வேறு மொழியில் இருக்கும் போல என்று தான் நினைத்திருந்தேன். ஏனெனில் நான் மற்ற பயல்களுடன் பேசுகிற மொழியில் அது இல்லை. ஆனால் அந்த மேடைப்பேச்சு கவர்ச்சியாக இருந்தது. அதைப்போல தெருவில் பேசி பகடி செய்திருக்கிறேன். பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரியில் படிக்கும்போது கூட எதுகை மோனையோடு எழுதப்படாத கவிதைகளைக் கவிதைகள் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. எனவே நானும் எதுகைமோனையோடு கவிதைகளை எழுதி கவிதாதேவியை அர்ச்சனை செய்து வந்தேன். நல்லவேளை மாரீஸ் கவிதாதேவியைக் காப்பாற்றினான். எப்படித்தெரியுமா?
நீலக்குயில் என்று ஒரு இலக்கியப்பத்திரிகை நான் சிறுபையனாக இருந்தபோது திரு.அண்ணாமலை என்னும் பெரியவரால் நடத்தப்பட்டு முக்தியடைந்த பிறகு மாரீஸின் வடிவமைப்பில் ( அப்போது டெடில் பிரஸ் தான் ) வித்யாஷங்கரை ஆசிரியராக கொண்டு எண்ணங்கள் என்ற பத்திரிகை வெளிவந்தது. அந்தப் பத்திரிகைக்கு என்னுடன் கூடப்படித்த பாவத்துக்காக என்னிடம் கவிதை தரும்படி கேட்டான் மாரீஸ். கவிதைகளால் நோட்டுகளை சிறுகாலியிடம் கூட விடாமல் நிரப்பிக் கொண்டிருந்த நான் உடனே எதுகை மோனை உருவகம், உவமை, உவமேயம் என்று வார்த்தைகளை நெருக்கி அடுக்கி எண்ணங்கள் வாழ்க வண்ணங்கள் எழுக என்கிற மாதிரி ஒரு மகத்தான கவிதையை அடித்தல் திருத்தல் இல்லாமல் நாலு பேப்பரை வேஸ்ட்டாக்கி எழுதிக் கொண்டு போய் கவிஞனுக்கேயுரிய கம்பீரத்துடன் நீட்டினேன். மாரீஸ் வாங்கிப் படித்துவிட்டு ஒரு மர்மப்புன்னகையுடன் சரி ஆசிரியரிடம் கொடுக்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டான். எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். கவிதையைப்படித்தவுடன் கண்டேன் கவிதையை என்று என்னைக் கட்டித்தழுவிப் பாராட்டி ( கொஞ்சம் ஓவரா இருக்கோ ) முதல்பக்கத்தில் பிரசுரித்து விடுவோம் என்று சொல்வான் என்று எதிர்பார்த்திருந்தேன். சரி. பரவாயில்லை. அவனுக்குத் தெரியாவிட்டால் போகட்டும். எப்படியும் ஆசிரியர் படித்துவிட்டு என்னைத் தேடி வருவார் என்று நினைத்தபடி வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தேன்.
இரண்டு நாட்களுக்குப்பிறகு எண்ணங்கள் ஆசிரியர் என்னைப் பார்க்கவிரும்புவதாக மாரீஸ் சொன்னான். உற்சாகமாக தெரு முக்கிலிருந்த டீக்கடைக்குப் போனேன். அங்கே வித்யாஷங்கர் என்னைப் பார்த்துச் சிரித்தபடி என் தோளில் கையைப் போட்டு மென்மையாக தம்பி நீ எழுதியிருக்கறது கவிதையில்லையே என்றார். எனக்கு அப்போதே கவிதைகள் நிரம்பிய என்னுடைய நோட்டுகள் என்னைச் சுற்றிக் கும்மியடிக்க ஆரம்பித்துவிட்டன. அவர் கவிதையைப்பற்றி நிறையச் சொன்னார். எனக்கு அவர் பேசியது ஒரு அட்சரம் கூடப்புரியவில்லை. கடைசியில் அவர் கையில் வைத்திருந்த அபியின் மௌனத்தின் நாவுகள் என்ற கவிதைப்புத்தகத்தை என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். அதற்குப் பிறகுதான் கலைகளின் அரசியான கவிதாதேவியை எவ்வளவு புண்ணாக்கியிருக்கிறேன் என்று எனக்குப் புரிந்தது. அந்தச் சமயத்தில் மட்டும் மாரீஸ் என்னிடம் கவிதை கேட்காமலோ, வித்யாஷங்கர் என்னைத் தேடிவந்து அபியின் கவிதை நூலைத் தராமலோ போயிருந்தால் என்னவாயிருக்கும் என்று ஒரு கணம் யோசித்துப் பார்க்கிறேன். உடல் நடுங்குகிறது. என் வீடு முழுவதும் நோட்டுகளில் நிரம்பிய கவிதைகள் நெருக்கடி தாளாமல் மூச்சுத்திணறி கூட்டம் கூட்டமாக செத்துப்போயிருக்கும். நானும் அவைகள் செத்தது தெரியாமல் புத்தகங்களாக அச்சிட்டு தமிழ்கூறு நல்லுலகத்தில் ஊர்வலம் போகச்செய்திருப்பேன். நல்லவேளையென்று நீங்கள் பெருமூச்சு விடுவது எனக்குத் தெரிகிறது.
இப்படி ஆரம்பித்த இலக்கியப்பெரும்பயணத்தின் துவக்கத்திலிருந்து என்னை அரவணைத்தது இடதுசாரிகள் தான். எமர்ஜென்சிக்குப் பிறகு எழுந்த ஜனநாயக எழுச்சியினால் இடதுசாரிகள் புத்துணர்ச்சி பெற்றிருந்த தருணம். மீண்டும் லட்சியவாதம் தன் பதாகையை உயர்த்திக் கொண்டிருந்தது. புரட்சிக்கு அணுவும் குறையாத கனவு இடதுசாரிகளிடம் தினசரி பூத்துக் கொண்டிருந்தது. நாங்கள் ருஷ்ய இலக்கியங்களையும், சீன இலக்கியங்களையும், வாசித்தோம். சோவியத்தின் சோசலிச இலக்கியக்கோட்பாடுகளைப் பற்றி விவாதித்தோம். தமிழில் முற்போக்கு இலக்கியப்படைப்புகளைப் படித்தோம். அந்தக்காலகட்டத்தில் தான் இலக்கியத்தில் இருக்கிற அரசியல் பற்றி எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத்தொடங்கியது. கோவில்பட்டியிலேயே வேறு ஒரு இலக்கிய அணியும் இருப்பது தெரியவந்தது. அவர்கள் தான் முதன்முதலில் க.நா.சு. என்ற பெயரை உச்சரித்தார்கள். உலகத்துச்சிறந்த நாவல்கள் குறித்த க.நா.சு.வின் புத்தகம் வாசிக்கக்கிடைத்தது. அந்த நாவல்களின் அறிமுகத்தில் வேறொரு உலகம் விரிந்தது.
நான் பழகிக் கொண்டிருந்த இடதுசாரிகளிடம் க.நா.சு.வைப்பற்றிக் கேட்டன். அவர்கள் க.நா.சு. கலை கலைக்காக என்ற கொள்கைவாதி. அவர் ஒரு சி.ஐ.ஏ. ஏஜெண்ட். அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்று சொன்னார்கள். நான் முதலில் நம்பினேன். பிறகும் நம்பினேன். ஆனால் இடதுசாரிகள் புதுமைப்பித்தனை அவநம்பிக்கைவாதியென்றும், , பூமணியை போலீஸ் இன்பார்மர் என்றும்,  கிராம்ஷியை ஐரோப்பிய குறுங்குழுவாதகம்யூனிஸ்ட் என்றும், புதுக்கவிதையை பெட்டிபூர்ஷ்வாக்களின் கலை வடிவமென்றும் வீதி நாடகங்களை தீவிரவாத வடிவமென்றும் ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொருவருக்கும் ஒரு முத்திரை குத்தியபோது சந்தேகப்பட்டேன். இடதுசாரிகளின் தியாக உணர்வும், அர்ப்பணிப்பும், போராட்டகுணமும் மகத்தானது. இன்றும் இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை அவர்கள் தான். அவர்கள் அரசியல், பொருளாதாரக்காரணிகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை கலை, இலக்கிய,பண்பாட்டுக்காரணிகளுக்குக் கொடுக்காததினால் வந்த விளைவு என்று நினைத்தேன். அதனால் மாற்றுக்கருத்துகளிடமிருந்து தங்களையும் தங்கள் ஆதரவாளர்களையும் பாதுகாத்துக் கொள்ள இந்த முத்திரைகளைப் பயன்படுத்தினர். இதைத் தங்களுடைய சொந்தத் தோழர்களிடமும் பயன்படுத்தினர் என்பது இன்னும் பெரிய சோகம்.
ஆனால் இதற்கு எதிராக உள்ளிருந்து பெரும்போராட்டம் நடந்தது என்பதும், உலகச்சூழல் மாறியதும் இடதுசாரிகளின் வறண்டபார்வை மாறுவதற்கு உதவின என்று சொன்னால் மிகையாகாது என்று தான் நினைக்கிறேன்.
க.நா.சு. என்ற தனிமனிதர் இல்லையென்றால் தமிழ் இலக்கிய உலகத்துக்கு நிலவளம் எழுதிய நட் ஹாம்சனைத் தெரிந்திருக்காது. அவமானச்சின்னம் எழுதிய நதானியல் ஹாதர்னைத் தெரிந்திருக்காது. தாசியும் தபசியும் எழுதிய அனடோல் பிரான்ஸைத் தெரிந்திருக்காது. மந்திரமலை எழுதிய தாமஸ் மன்னைத் தெரிந்திருக்காது. சித்தார்த்தனை எழுதிய ஹெர்மன் ஹெஸையைத் தெரிந்திருக்காது. விலங்குப்பண்ணை எழுதிய ஜார்ஜ் ஆர்வெல்லைத் தெரிந்திருக்காது. தேவமலர் எழுதிய செல்மா லாகர் லவ்வைத் தெரிந்திருக்காது. இன்னும் எட்கர் ஆலன்போவை, காஃப்காவை, சோல்ஜெனித்சனை, என்று உலக இலக்கியங்களை தமிழ் இலக்கியப்பரப்பில் பார்வைக்கு வைத்தவர். உலக இலக்கியவாதிகளை தமிழ்நாட்டில் உலவ விட்டவர். நாங்கள் அவருடைய உலக இலக்கிய வரிசை நூல்களைத் தேடித்தேடிப் போட்டி போட்டுக் கொண்டு படித்தோம். ( உபயம் – கோணங்கி ) மிகப்பரந்த வாசிப்பும், மிகச்சிறந்த ரசனையும் கொண்ட, இலக்கியத்துக்காகவே வாழ்ந்து தீர்த்த க.நா.சு.வை எது இங்ஙனம் செய்யும்படி எது இயக்கியது? கடைசிக்காலம் வரை அவருடைய ஒரே துணையான அந்த டைப்ரைட்டர் அவரிடம் என்ன சொல்லியிருக்கும்?. தன்னை விளம்பரப்படுத்தும் கலைநுட்பம் மலிந்த இன்றைய இலக்கிய உலகில் அவருடைய படைப்புகளின் மதிப்பீடு என்ன? காற்றில் அலையும் கேள்விகள்!
பொய்த்தேவு என்ற அவருடைய நாவல் அன்று நான் முதலில் படித்த க.நா.சு.வின் படைப்பு. இப்போது யோசித்துப்பார்க்கும்போது தமிழில் அது முதல் இருத்தலியல் நாவலாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. சோமு என்ற மேட்டுத்தெரு ஜீவனின் வாழ்க்கைச் சித்திரம் தான் அந்த நாவல். சோமுவின் பரிணாம வளர்ச்சி எப்படியெல்லாம் அந்தந்த காலநேர சமய சந்தர்ப்பங்களுக்கேற்றபடியெல்லாம் மாறுகிறது என்பதை கவனிக்கும் போது அவன் வாழ்வில் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளுக்கும் பின்னால் எந்த தர்க்கநியாயமும் இல்லை என்றும் புரிகிறது. நாவலின் வளரும்போது சோமுவின் வளர்ச்சியும் வாசகன் எதிர்பாராத திசைகளில் வளர்ந்து கொண்டே போகிறது. சோமு, அவனுடைய அம்மா, ராயர், ராயரின் மகள், தாசி சகோதரிகள், என்று க.நா.சு.என்னும் கதைசொல்லியின் கதாபாத்திரங்கள் யதார்த்தத்தோடு இயைந்தும், யதார்த்தத்தை மீறியும், வளர்கின்றனர். தமிழிலக்கியத்தில் சோமுவுக்கு ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் க.நா.சு. படைப்பிலக்கியத்தில் தனக்கும் ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார் என்று சொல்லலாம்.
சி.ஐ.ஏ. ஏஜெண்ட் தான் என்று நான் நம்பிய க.நா.சு, அமெரிக்காவின் டைம்ஸ் ஆப் இண்டியா பத்திரிகையில் எழுதிய க.நா.சு., அமெரிக்க, ஐரோப்பிய இலக்கியங்களை மட்டுமே உயர்த்திப்பிடித்த க.நா.சு, ருஷ்ய, சோவியத் இலக்கியங்களைப் பற்றிப் பேசாத க.நா.சு, முற்போக்கு இலக்கியங்களை கலைவறட்சி மிகுந்த பிரச்சாரம் என்று ஒதுக்கித் தள்ளிய க.நா.சு, எனக்கு நேரிடையாகவே ஒரு அதிர்ச்சியைத் தந்தார். 1988 – ஆம் ஆண்டு என்னுடைய முதல் சிறுகதைத்தொகுதியான ‘ யாவர் வீட்டிலும் ’ வெளியானது. வெளியான ஒரு மாதத்திற்குள்ளாகவே தினமணியில் தமிழ்ச்சிறுகதை வளம் என்ற தலைப்பில் க.நா.சு. என்னுடைய சிறுகதைத்தொகுதி பற்றியும், கௌதமசித்தார்த்தன் எழுதிய மூன்றாவது சிருஷ்டி என்ற சிறுகதைத்தொகுதி பற்றியும் பாராட்டி எழுதியிருந்தார். எப்படியிருக்கும் பாருங்கள்! என்னால் இன்னமும் நம்பவே முடியவில்லை. சோடாபுட்டி கண்ணாடி வழியே க.நா.சு.வின் கண்கள் ஆதூரத்துடன் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போலவே உணர்ந்தேன். க.நா.சு. பற்றிய என்னுடைய பழைய மதிப்பீடுகள் தகர்ந்த தருணம் அது. தமிழிலக்கியத்தில் க.நா.சு. என்ற ஆளுமை மட்டும் இல்லாதிருந்தால் என்ன நடந்திருக்கும்? என்ற கேள்விக்கு ஒரு நண்பர் பதில் சொன்னார். ஒரு ஐம்பது வருடங்கள் பின் தங்கியிருக்கும்.
நான் ஒரு தோழரிடம் க.நா.சு. எழுதிய கட்டுரையைப் படிக்கக் கொடுத்திருந்தேன். படித்து முடித்த அவர் தீவிரமான முகபாவத்துடன் அருகில் வந்தார்.
” தோழர் ஜாக்கிரதையா இருங்க.. சி.ஐ.ஏ. ஒங்கள குறி வைச்சிட்டாங்க ”  என்று சொல்லி விட்டுப்போனார்.
க.நா.சு. வின் சிரிப்புச் சத்தம் கேட்கிறதா உங்களூக்கு?.


நன்றி- மேன்மை ஏப்ரல்16

Monday 4 April 2016

கரை

கரை

உதயசங்கர்



நெல்லையப்பபிள்ளை குறுக்குத்துறையை நோக்கி வேகமாக சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார். இரவு மணி பத்துக்கும் மேலருக்கும். அன்று மதியம் தென்காசிக்குப் போயிருந்தார். அவருடைய ஒண்ணுவிட்ட அண்ணன் மகள் துர்கா தூக்கு மாட்டிச் செத்துப்போனாள். சவத்துமூதி புருஷனைப் பிடிக்கலைன்னா அத்து எறிஞ்சிட்டு வரவேண்டியது தானே…வர வர பிள்ளைகளுக்குத் தைரியம் காணமாட்டேங்கி… சேதி தெரிந்தபிறகு போகாமல் இருக்க முடியாது. அவர் வேலைபார்த்த அரிசிக்கடையில் ஒரு நாள் லீவு சொல்லி விட்டு துட்டி வீட்டுக்குப் போய்விட்டு இப்போது தான் திரும்பியிருந்தார். உடனே சைக்கிளை எடுத்துக் கொண்டு குறுக்குத்துறை தாமிரபரணியில் குளிக்கக் கிளம்பி விட்டார். பிரளயமே வந்தாலும்  அவருக்கு இரண்டுவேளை குறுக்குத்துறை இசக்கியம்மன் படித்துறையில் ரெண்டு முங்காச்சி போட வேண்டும். அதற்கு நேரம் காலமெல்லாம் கிடையாது. எந்த ராத்திரியாய் இருந்தாலும் சரி. கோடையோ, மழையோ, குளிரோ, எப்படியிருந்தாலும் சரி. போய்க்குளித்து விடுவார். வெளியூர் போயிருக்கிற நாட்களில் ஏங்கிப் போய்விடுவார். ஊரிலிருந்து வந்தவுடன் ஆத்துக்குக் கிளம்பி விடுவார். அதுவும் குறுக்குத்துறை இசக்கியம்மன் படித்துறையில் தான் குளிப்பார். எவ்வளவு கூட்டமிருந்தாலும் சரி. எவ்வளவு வெள்ளம் வந்தாலும் சரி. அந்த இடத்தைத் தவிர வேறு எங்கேயும் குளிக்க மாட்டார். இன்னிக்கு சைக்கிள் சாலையில் போவதே தெரியவில்லை. வழுக்கிக் கொண்டு போய்க் கொண்டிருந்தது. கடையத்திலிருக்கிறவரைக்கும் ஏன் திருநெல்வேலி வந்து சேர்கிற வரைக்கும் கூட மனசு கனத்துக் கிடந்தது. ஆனால் சைக்கிளை எடுத்து ஒரு மிதி மிதித்து ஏறி உட்கார்ந்ததும் அப்படியே மனசில் காற்று வீசியது. லேசாகி பறக்க ஆரம்பித்தது. அவருக்குக் கொஞ்சம் பார்வைக் குறைபாடு உண்டு தான். இருந்தாலும் இன்னிக்கு அந்த இரவு விசித்திரமாக புகைபோன்ற பனித்திரை விழுந்து ஓவியம் போலத் தெரிந்தது. அவர் அந்த ஓவியத்துக்குள் தன்னுடைய பழைய கீச்சிடும் ஹெல்குலீஸ் சைக்கிளோடு போய்க் கொண்டிருந்தார்.
வானத்தில் நட்சத்திரங்கள் கைகளினால் பறித்து விடலாம் போல அவ்வளவு பக்கத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. நட்சத்திரங்களின் ஒளியில் சைக்கிள் மிதந்த மாதிரி ஓடியது. சாலையின் இரண்டு பக்கங்களிலும் இருந்த ஓங்கி வளர்ந்த மருத மரங்களின் கிளைகள் காற்றில் அவருக்குப் பிடித்தமான சட்டி சுட்டதடா கை விட்டதடா நெஞ்சில் பட்டதடா  என்ற பாடலை அப்படியே பாடிக் கொண்டிருந்தன. இந்தப்பாட்டை வீட்டில் கொஞ்சம் உற்சாகமாக இருக்கும்போதெல்லாம் பாடுவார். அவர் பாடத்தொடங்கியதும் அவருடைய மகள் சங்கரகோமதி
 “ ஏளா அப்பாவைப் பாரு திரும்பவும் அந்தப்பாட்டையே படிக்க ஆரம்பிச்சிட்டா…..”
என்று கத்துவாள். உடனே வடிவு
 “ உங்களுக்கு வேற பாட்டே கெடைக்கலியா…இதென்ன பாட்டு சவத்துப்பய பாட்டப்போட்டிருக்கான் பாரு…”
என்று கோபிப்பாள். அவர் உடனே பாட்டை நிறுத்திவிடுவார். எப்படி அவரிடம் இந்தப்பாட்டு ஒட்டிக்கொண்டது என்று தெரியவில்லை. ஆனால் இந்தப்பாட்டை கேட்குபோதோ, பாடும்போதோ அவருடைய மனதில் ஒரு பேரமைதி நிலவும். வெளியில் உள்ள எந்த இரைச்சலும் கேட்காது. சாந்தி..சாந்தி..அவர் மௌனமாகி விடுவார்.
சைக்கிளை அவர் ஓட்டுவதைப் போலத் தெரியவில்லை. சைக்கிள் அவரை அழைத்துக் கொண்டு போவதைப் போல இருந்தது. குறுக்குத்துறைச்சாலையின் இரண்டு பக்கச்சரிவிலும் விரிந்திருந்த வயக்காட்டிலிருந்த நெற்பயிர் பால் பிடிக்கத்தொடங்கியிருந்த காலமாக இருந்தது அது. இரவின் வெளியெங்கும் அந்தப்பாலின் பச்சைமணம் பெருகியது. அந்த மணத்தின் ருசியில் ஆண்களும் பெண்களும் தாய்ப்பால் குடித்த நினைவின் சுருள் விரிய வாயைச் சப்புக்கொட்டிக் கொண்டே திரும்பிப் படுத்தனர். ஒரு கணம் நெல்லையப்பபிள்ளைக்கும் அம்மையின் ஞாபகம் வந்தது. ஏழு வயது வரை அம்மையிடம் பால் குடித்துக் கொண்டு திரிந்தவர். அந்த முலைகளின் வெதுவெதுப்பும், குளிர்மையும் இப்போது அவருடைய உடலில் ஓடி மறைந்தது. அந்த கருஞ்சாம்பல் நிற இரவும், குளிரும் காற்றும் அவருக்கு ஒரு அபூர்வக்கனவைபோலவே இருந்தன. அவருக்குக் கனவுகளே வருவதில்லை. படுத்த இரண்டாவது நிமிடத்தில் குறட்டை விடுகிற வர்க்கத்தைச் சேர்ந்தவர். ஆண்டுக்கு ஒன்றோ இரண்டோ கனவுகள் வந்தால் ஆச்சரியம். மிகுந்த பிரச்னைகளினால் மனம் கிலேசமுற்று இருக்கும்போது தான் கனவுகள் திடீரென முளைத்து வரும். அந்தக்கனவுகளில் அவருடைய அம்மையிடம் அவர் பால் குடித்துக் கொண்டிருப்பார். சிலநேரம் ஐம்பத்தைந்து வயதான அவர் அம்மையின் மடியில் படுத்துக் கொண்டு பால் குடிக்கிற காட்சி கொஞ்சம் ஐயறவாகத்தான் இருக்கும். ஆனால் கனவிலிருந்து முழிக்கும்போது மனம் லேசாக இருப்பதைப் போல உணர்வார்.
ஒருவேளை அம்மையின் கதகதப்பான அரவணைப்பைத் தேடித்தான் ஆத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறாரோ. படித்துறையின் படியில் இறங்கி அந்தத் தண்ணீரில் முதல் காலை வைக்கும்போது ஒரு சிலிர்ப்பு உயிருக்குள் ஓடும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீருக்குள் உடம்பு இறங்க இறங்க கதகதப்பாய் தழுவும் நீர் அவரை அறியாமல் அம்மா என்று முனக வைக்கும். தாமிரபரணியும் களக்..ப்ளக்… என்று கொஞ்சிக் கொண்டு போகும். அந்தக் கொஞ்சலைக் கேட்கும்போது ஒரு பெண்ணின் சிணுங்கலைப் போல, ஒரு குழந்தையின் மிழற்றலைப் போல ஒரு கிழவியின் பொக்கைவாய்ச் சிரிப்பைப் போல தோன்றும். அவர் ஆத்தில் குளிக்கும்போது தன்னை மறந்து விடுவார். அவரும் தாமிரபரணியும் மட்டும் தான் இந்த உலகத்தில் இருப்பதைப் போல மெய்ம்மறந்திருப்பார். யார் அவரைக் கடந்து போனாலும் சரி, யார் அவரிடம் “ என்ன அண்ணாச்சி இன்னைக்கி சீக்கிரமே வந்துட்டீஹ..” என்றாலும் சரி பதிலே சொல்ல மாட்டார். எங்கேயோ பித்தநிலையில் இருப்பவரைப்போல ஒரே முழியாய் அருகில் இருக்கும் கருப்பந்துறையைப் பார்த்து முழித்துக் கொண்டு குளித்துக்கொண்டிருப்பார். சிலசமயம் கருப்பந்துறையில் எரிந்து கொண்டிருக்கும் சிதையிலிருந்து மேலெழும் புகையைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பார். காற்றில் அலைவுறும் அந்தப்புகையின் உருவங்களை வைத்த கண் மாறாமல் பார்த்து பெருமூச்சு விடுவார்.
நெல்லையப்பபிள்ளை குளிக்கிறதுன்னா அப்படி இப்படி குளியல் இல்லை. எவ்வளவு நேரம் குளித்தாலும் அவருக்குத் திருப்தி வராது.  சரி போகலாம் என்று ரெண்டு அடி கரையை நோக்கி எடுத்துவைப்பார். அப்புறம் ரெண்டு முங்கு போடுவார். அப்புறம் ரெண்டு அடி எடுத்து வைப்பார். மறுபடியும் ரெண்டு முங்கு போடுவார். சில நேரம் படித்துறையில் நின்று தலையைத் துவட்டி முடித்த பின்னரும் திடீரென்று நினைத்தாற்போல மீண்டும் ஆத்துக்குள் இறங்கி விடுவார். அவருடைய மனைவி வடிவு கூட “ அப்படி என்ன தான் ஆத்துல வைச்சிருக்கோ உங்களுக்கு… எதிலயும் ஒரு நிதானம் வேணும் ஆம்பளைக்கி..” என்று செல்லமாகச் சடைத்துக் கொள்வாள். அந்தச் சடைவில் ஒளிந்திருக்கும் அந்தரங்க சல்லாபத்தை நெல்லையப்ப பிள்ளையால் மட்டுமே குறிப்பால் உணர முடியும்.
அவருக்கு இந்த வாழ்க்கையைப் பற்றி பெரிய புகார் எதுவும் இல்லை. எப்படியோ வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. அவருடைய பிள்ளைகளுக்கு பெரியதாய் எதுவும் செய்ய முடியவில்லையென்றாலும் அவர் ஏண்டவரை செய்தார். பையன் முத்துக்குமார் குடும்பத்துக்கேற்ற மாதிரி கஷ்டப்பட்டான். கடுமையாகப் படித்து அரசு வேலைக்குப் போய் விட்டான். போனதும் மூத்தவள் சங்கரகோமதிக்கு வரன் பார்த்து எளிமையாகக் கலியாணத்தையும் முடித்து விட்டார். மாப்பிள்ளை மருந்துக்கம்பெனி பிரதிநிதியாக இருந்தார். வடிவு ஒரு சுத்து பெருத்துத் தான் போய்விட்டாள். முன்பு முகத்தில் இருந்த புகைமூட்டம் மறைந்து ஒரு ஒளி பரவியிருந்தது. இப்போது நெல்லையப்பபிள்ளைக்குக் கூடுதல் கவனிப்பும் கிடைத்தது. ஆனால் அவருக்குள் ஒரு அதிருப்தி கனன்று கொண்டேயிருந்தது.
இரவின் கருமையைக் கிழித்து ஒளிவீசிக் கொண்டு அவ்வப்போது .இருசக்கர வாகனங்கள் அவரை முன்னும் பின்னும் கடந்து போய்க் கொண்டிருந்தன. அந்த ஒளியினால் அவர் எந்த சலனமும் அடையவில்லை. இருளுக்குள் இருள்துணுக்காக போய்க் கொண்டிருந்தார். வண்டிகளைத் தவிர ஆள்நடமாட்டம் எதுவும் இல்லை. வயக்காட்டிலிருந்து வந்து பூச்சிகளின் ரீங்காரம் ஒரு பின்னணி இசையைப் போல ஒரே இடைவெளியில் விட்டு விட்டு கேட்டது. கூடு தவறிய ஒற்றைக் கொக்கின் கதறல் இரவின் திரையில் கோடு கிழித்தது. எங்கிருந்தோ ஒரு குயிலின் கேவல் நீண்டு ஒலித்தது. சாலையின் நடுவில் சென்று கொண்டிருந்த நாய் நெல்லையப்பபிள்ளையின் சைக்கிள் சத்தத்தில் பதறி விலகி சாலையின் ஓரத்திற்குச் சென்று ஓடியது. அட மூதி.. என்று சொல்லிய நெல்லையப்பபிள்ளை சைக்கிளை விட்டு இறங்கி ஒரு மரத்திற்குக் கீழே சைக்கிளை சாத்தி வைத்துப் பூட்டி விட்டு இசக்கியம்மன் படித்துறையை நோக்கிப் போனார்.
படித்துறையை நெருங்க நெருங்க ஓடிக் கொண்டிருக்கும் தண்ணீரின் சளப் சளப் என்ற சத்தம் விடாமல் கேட்டது. அவர் படித்துறையின் படிக்கட்டில் வேட்டி, சட்டையைச் சுருட்டி வைத்து அதற்கு மேலே துண்டைப் போட்டு போர்த்தினார். பின்னர் பட்டாபட்டி டவுசரோடு ஆத்துக்குள் இறங்கப்போனார். அதுவரை மிக அருகில் கேட்டுக்கொண்டிருந்த தண்ணீரின் சத்தம் இப்போது வெகுதூரத்தில் கேட்டது. அவர் கூர்ந்து பார்த்தார். படித்துறையிலிருந்து வெகுதூரத்தில் ஒரு சிறிய ஓடையைப் போல தண்ணீர் மினுங்கியது. அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. நேற்று கூட படியைத் தொட்டுக் கொண்டு ஓடியதே. அதுக்குள்ளயும் எப்படி இப்படி ஒடுங்கியது. அவர் ஆத்துக்குள் இறங்கினார். மணல் இல்லை. வெறும் சல்லிக்கல் தரை பாதங்களில் குத்தியது. அவர் குனிந்து பார்த்தார். இருளில் எதுவும் தெரியவில்லை. ஆனால் அடுத்த அடியில் பெரும்பாறையில் வலது கால் இடித்து விட்டது. அவரை அறியாமல் அம்மா என்று கத்தி விட்டார். அப்படியே கொஞ்ச நேரம் நின்றார். அவருக்கு ஏதோ விசித்திரமாக இருந்தது. கால்களால் பாறையைத் தடவி தடம் பார்த்து விட்டு அடுத்த அடியை எடுத்து வைத்தார். அது பெரும்பள்ளமாக இருந்தது. அப்படியே தடுமாறிக் கீழே விழுந்து விட்டார். இருட்டில் கை வைத்த இடத்தில் பிசுபிசுவென ஏதோ ஒட்டியது. சே….என்ன கருமாந்திரமோ என்று குனிந்து தரையில் கையைத் தேய்த்தார். அப்படியே மேடும் பள்ளமாக இருந்த தரையில் ஊர்ந்து போனார். சிறிது நேரத்தில் அவருடைய கண்கள் பழகி விட்டன. அவருக்கு ஆச்சரியம் என்னவென்றால் ஆத்தில் துளி மணலைக் காணோம். கட்டாந்தரையாக இருந்தது. என்னவோ மாயம் நடக்கிறது என்று அவருக்கு அரிச்சலாகத் தோன்றியது. அப்படியே முன்னால் தண்ணீரைப் பார்த்து நடந்தார்.
தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த இடத்துக்கு அருகில் வந்த பிறகும் தண்ணீரின் சத்தமே இல்லை. மிக அருகில் போனபோது தண்ணீர் அந்த இரவை விட கருப்பாய் ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். ஒரு மோசமான சாக்கடை நாத்தம் அதுவும் கெட்டிக்கிடந்த சாக்கடை நாத்தம் மயக்கம் வருகிற அளவுக்குத் தீவிரமாய் நெல்லையப்பபிள்ளையைத் தாக்கியது. அவருக்கு நடந்து கொண்டிருப்பது எதுவும் புரியவில்லை. நேற்று பார்த்த ஆறு எங்கே போச்சு? சுற்றுமுற்றும் பார்த்தார். ஒரே இருள். இசக்கியம்மன் படித்துறை எங்கோ தூரத்தில் இருந்தது. இது நாள்வரை பேய்,பிசாசு, முனி, என்று பயந்தவரில்லை நெல்லையப்பபிள்ளை. ஆனால் இப்போது ஏதோ முனியின் காட்சிதானோ இது என்று யோசித்தார். திரும்பிவிடலாம் என்று நினைத்தபோது ஒரு பேரிரைச்சல் கேட்டது. ஒரு கணநேரத்தில் அவரைச் சுற்றி வெள்ளம் பெருகியது. பெரிய சத்தத்துடன் தண்ணீர் அலை பாய்ந்து அவரைச் சூழ்ந்த தண்ணீர் அவருடைய கழுத்து வரை உயர்ந்தது. அவர் கைகளால் தண்ணீரை அளைந்து நிதானம் கொள்ள முயற்சித்தார். ஆனால் தண்ணீரின் வேகம் அவரைத் தள்ளியது. தண்ணீரின் அளவு கூடிக்கொண்டே போகப்போக அவருக்குப் பயம் வந்து விட்டது. அவர் கைகளையும் கால்களையும் அவசர அவசரமாக வீசி அடித்தார். தண்ணீரின் பாய்ச்சலில் அவர் துரும்பு போல அடித்துச் செல்லப்பட்டார். தண்ணீருக்குள் முங்கி எழுந்தார். பயம் மறுபடியும் நெல்லையப்பபிள்ளையை தண்ணீருக்குள் இழுத்தது. அவர் வாயிலும் மூக்கிலும் தண்ணீர் நுழைந்தது. தண்ணீரைக் குடித்தபோது உப்புக்கரித்தது. மிகுந்த பிரயாசையுடன் தண்ணீருக்கு மேல் தலையைத் தூக்கினார். கருப்பந்துறையிலில் எரிந்து கொண்டிருந்த சிதை தெரிந்தது. அந்த சிதையில் கிடந்த முகம் யார்? தெரிந்த முகமாக இருந்தது. அதுவும் மிகவும் பழகிய முகம். ஆம் அது அவருடைய முகமே தான். தீ கிளம்பி எழுந்தபோது சிதையிலிருந்த நெல்லையப்பபிள்ளை கைகளை ஆட்டினார். கால்களால் உதைத்தார். நான் சாகவில்லை.. நான் சாகவில்லை என்று கத்தினார். வாய் அசைந்ததே தவிர குரல் வரவில்லை. நிமிட நேரத்தில் பெருநெருப்பாய் கிளர்ந்த தீ புகையைக் கக்கியது.
நெல்லையப்பபிள்ளைக்கு மூச்சுத்திணறியது. தண்ணீருக்குள் அவர் தத்தளித்துக் கொண்டிருந்தார். அம்மையின் ஞாபகம் வந்தது. அவளிடம் குடித்த தாய்ப்பாலின் மணம் திடீரென அவரைச் சுற்றிப் பரவியது. அம்மையின் அரவணைப்பின் கதகதப்பு உடம்பில் பரவியது. அவருக்குள் ஒரு அமைதி பரவ ஆரம்பித்தது. அவர் தண்ணீரைக் குடிக்க ஆரம்பித்தார். ஆவலுடன் அம்மையிடம் எப்படி தாய்ப்பாலைக் குடித்தாரோ அப்படி தண்ணீரைக் குடிக்க ஆரம்பித்தார். அது முதலில் உப்புக்கரித்தது. சாக்கடை நாத்தமெடுத்தது. பன்னீரின் மணம் வந்தது. தாமிரவாசம் வயிற்றை நிறைத்தது. எல்லாவற்றையும் அவர் குடித்தார். என்ன இருந்தாலும் அது அவருடைய அம்மையின் பால். அவருக்கு உயிரூட்டிய பால். அவருடைய உடல் வளர்த்த பால். அவர் கொஞ்சமும் அசூயைப் படாமல் குடித்துக் கொண்டேயிருந்தார். அப்போது தான் அந்தக்குரல் அவருடைய காதுகளில் அசரீரி போல கேட்டது. அம்மையின் குரல். நெல்லையப்பா…என்ராசா,,,நெல்லையப்பா… அவருக்கு உறக்கத்திலிருந்து முழிப்பு வந்தது போல திடுக்கிட்டு விழித்து தண்ணீருக்கு மேல் தலையைத் தூக்கிப் பார்த்தார். இசக்கியம்மன் படித்துறையில் அவருடைய அம்மை நின்று கொண்டிருந்தாள். அவரைப் பார்த்துக் கைகளை ஆட்டி “ சீக்கிரம் வாலே போதும் குளிச்சது…” என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவர் பார்க்க கரை வெகுதூரத்திலிருந்தது. தண்ணீர் வேகவேகமாகப் போய்க் கொண்டிருந்தது. தண்ணீருக்கு மேல் செத்தை, குப்பை, இலை, தழை, அடித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தது. அவர் அவற்றை விலக்கித்தள்ளினார். ஒரு இரண்டு அடி நீந்தியிருப்பார். அவர் மேலே மோதி ஒரு பிணம் நின்றது. அவர் பயத்தில் வெளிறிப்போனார். கைகளால் அதைத் தள்ளி விட்டார். சற்று தொலைவில் இன்னும் சில பிணங்கள் மிதந்து போய்க்கொண்டிருந்தன. அவர் கரையைப் பார்த்தார். கொஞ்சம் கூட தூரம் குறையவில்லை. இப்போதும் அம்மையின் குரல் கேட்டது. நீரின் இளகிய திரையில் அவர் அம்மையைப் பார்த்தார். அம்மை இப்போதும் கைகளை ஆட்டிக் கொண்டிருந்தாள்.
மூச்சை இழுத்துப்பிடித்து கொண்டு அவர் படித்துறையைப் பார்த்து நீந்தத் தொடங்கினார். நீந்த நீந்த கரை விலகிக் கொண்டேயிருந்தது. ஆனால் கரையில் நின்று கொண்டு அம்மை விளிப்பதும் கேட்டுக் கொண்டே தான் இருந்தது. ஒருபோதும் அவர் கரைக்குச் சென்று சேர முடியாதோ என்று கூடத் தோன்றியது. ஒருவேளை அவர் வெறுந்தரையில் தான் நீந்திக் கொண்டிருக்கிறாரோ….அவருக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ ஒரு மாயச்சுழலில் சிக்கிக் கொண்டதாக நினைத்தார். இந்த மாயத்திலிருந்து எப்படி வெளியேறுவது என்று அவருக்குத் தெரியவில்லை. இருள் மெல்ல கலைந்து கொண்டிருந்தது. வானத்தில் நட்சத்திரங்கள் மங்கத் தொடங்கின. கிழக்கில் விடிவெள்ளியின் ஒளியில் ஆறு ததும்பிக் கொண்டிருந்தது. பாலத்தின் மீது ஒளிக்கோடென ஒரு ரயில் நெல்லையப்பா என்று கூவிக் கொண்டே போனது. அது அவருடைய அம்மையின் குரலாகக் கேட்டது. அவர் விடாமல் மறுபடியும் கரையை நோக்கி நீந்திக் கொண்டிருந்தார். அவர் நீந்த


 நீந்த கரை விலகிக் கொண்டே போனது.

நன்றி-அம்ருதா