Tuesday 22 June 2021

குட்டி இளவரசர்களின் கைகளில் ஆதனின் பொம்மைகள்

 

 


குட்டி இளவரசர்களின் கைகளில் ஆதனின் பொம்மைகள்

உதயசங்கரின் ஐந்து குழந்தை இலக்கிய நூல்களை முன்வைத்து


கமலாலயன்



   தமிழில் குழந்தை இலக்கியங்களின் வரவும்,வளர்ச்சியும் பலரின் கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கியிருக்கிறது. பல புதிய எழுத்தாளர்கள் குழந்தைகளுக்காகவும்,இளையோருக்காகவும் நிறைய புதிய கதைகளை எழுதத் தொடங்கியுள்ளனர்.கதை சொல்லிகள் பலரும் ஆடிப்பாடி, கொண்டாட்டங்களுடன் இந்தக்கதைகளையும்,ஏற்கெனவே மரபு வழி வந்திருக்கும் கதைகளையும் சிறார்களிடம் நேரடியாக அல்லது இணையவழி நிகழ்வுகளின் மூலம் சொல்லி வருகின்றனர்.

   உதயசங்கரின் ஐந்து நூல்கள் மிக சமீபகாலத்தில் வெளியாகியுள்ளன.2021, பிப்ரவரி மாதத்திலேயே ஆதனின் பொம்மை, அலாவுதீனின் சாகசங்கள், புலிக்குகை மர்மம், பொம்மைகளின் நகரம் ஆகிய நான்கும், கடந்த 2020 அக்டோபரில் குட்டி இளவரசனின் குட்டிப்பூ என்ற இளையோர் நாவலும் வந்துள்ளன. பிரெஞ்சு மொழியில் அந்துவான் செயிண்ட் எக்ஸ்பெரி எழுதியலிட்டில் ப்ரின்ஸ்என்ற நாவலைத் தமிழில் வெ. ஸ்ரீராம் - மதனகல்யாணிமொழிபெயர்த்துகுட்டி இளவரசன்என்ற நாவலாகத் தந்திருக்கிறார். தமிழ் எழுத்தாளர்கள், தேர்ந்த வாசகர்கள் அனைவரின் மனங்களிலும் அவன் அழியாத இடம் பெற்று விட்டவன். இப்போது, உதயசங்கர் அந்தக் குட்டி இளவரசனைத் தேடி மீண்டும் சஹாரா பாலைவனத்திற்கு அந்துவானை அனுப்பி ஒரு தேடலை நிகழ்த்தியிருக்கிறார். அந்துவானையே ஒரு விண்கலமாக மாற்றி பால்வெளியின் கோள்கள் பலவற்றுக்கு குட்டி இளவரசனைப் பயணிக்கச் செய்திருக்கிறார்.

சிறந்த தமிழ்மொழிபெயர்ப்பாளரான முனைவர் கே. கணேஷ்ராம்,( சுழலும் சக்கரங்கள், காஃப்காவின் நுண்மொழிகள் உள்ளிட்ட பல மொழிபெயர்ப்புகளின் ஆசிரியர் )  தன் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார் : ” ‘குட்டி இளவரசனின் குட்டிப்பூதமிழ்ச்சிறார் புனைவெழுத்தின் ஒரு மைல்கல். முதல் ஊடிழைப்பிரதி என்னும் பெருமையும் இதற்குண்டு.“ அதோடு, இந்தக் குறுனாவலில், “ குட்டி இளவரசனைக் குழந்தைமை நிரம்பியவனாகவும், அதே சமயம் சமகால வாழ்வை வளரிளம் பருவத்தினருக்கும் விளக்கிச் சொல்லும் சமூக அரசியல் சூழலியல் கூரறிவு நிரம்பியவனாகவும் உதயசங்கர் படைத்திருக்கிறார்எனவும் கணேஷ்ராம் பாராட்டுகிறார்.இந்த நூலை மிக அழகான வண்ணப்படங்களுடன் நல்ல தாளில் வானம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஓவியர் ராஜனின் அட்டைப்படமும்,ஓவியங்களும் அருமை.

அந்துவான் செயிண்ட் எக்ஸ்பெரிக்கு, தான் படைத்த, கி.பி.1942-இல் சஹாரா பாலைவனத்தில் சந்தித்துப் பிரிந்த குட்டி இளவரசனை மீண்டும் தேடிப் போய்ப் பார்த்தாக வேண்டும் என்ற தீரா விருப்பம்.பழுதடைந்து கிடக்கும் தன் பழைய விமானத்தைச் சரி செய்துகொண்டு சஹாராவை நோக்கிப் பறக்கிறார். அதே இடத்தில்,முன்பு போலவே விமானம் மணலில் மோதி இறங்குகிறது. கொஞ்ச தூரத்திலேயே, ஒரு கிணற்றுக்குள் எட்டிப் பார்த்துக்கொண்டு நிற்கும் குட்டி இளவரசனையும் பார்த்து விடுகிறார்.அவனை மறுபடிப் பிரிய மனமின்றி, தானே ஒரு விண்கலமாக மாறி, அவனுடனேயே பால்வெளியில் ஒவ்வொரு கோளாகப் பயணம் செய்யத் தொடங்குகிறார்.

குட்டி இளவரசனின் குட்டிக்கோளான பி-612 இல், அவனுடைய அன்புக்குரிய குட்டிப்பூவும் அவனும் மட்டுமே இருந்தார்கள்.அவர்களுக்கிடையே நிலவி வந்த எல்லையற்ற பேரன்பே பெரும் வெறுப்பாக மாறியதன் விளைவு, அவனே ஓர் ஆட்டை உருவாக்கி பூவை விழுங்கச் செய்து விடுகிறான். பூவோ தன் பங்குக்குத் தன்னைச் சுற்றி விஷ முள்களை வளர்த்திருக்கிறது. தான் நேசித்த பூவையே கொன்று விட்டோமே என்ற கழிவிரக்கம்,மனதில் ஊறிய வெறுப்பின் விஷம் தலைக்கேறிய நிலையில் விழுந்து கிடக்கிறான்.

அந்துவான் விண்கலமாக மாறி இளவரசனுடன் பறக்கிறார். கோ கோளின் ராஜாவான கோரா அதிகாரக்கோமாளியாகக் கூத்தடித்துக் கொண்டிருக்கும் கொடுமையைக் கண்டு, “ அதிகாரம் கோமாளித்தனத்தின் உச்சம்என்று அவனைத் துச்சமாக அலட்சியப்படுத்திப் பறக்கிறான் குட்டி இளவரசன். ஒரு காலத்தில் தண்ணீர்,காற்று,மலை,கடல் ஆறு,ஏரி,மீன்கள் பறவைகள், உயிரினங்கள் எல்லாமும் இருந்த ஒரு கோளில் இன்று எதுவும் இல்லை. சுவாசிக்கக் காற்றும் இல்லாதவாறு அங்கே மனிதர்களின் நுகர்வுப் பேராசையின் கோர விளைவுகள் அரங்கேறியுள்ளன.மீண்டும் அங்கே எல்லாவற்றையும் உயிர்ப்பித்துத் தந்துவிட்டு தன் பயணத்தைத் தொடர்கிறான். தற்பெருமைத் தவளைகளின் கோள், அடிமைகளின் சங்கிலிகளால் அதிர்ந்து கொண்டிருக்கும் கோள், எண்கோணக்கோள் என அடுத்தடுத்துப் போகும் கோள்களில் மனிதர்கள் தங்களைத் தாங்களே அலைபேசிகளின் திரையுடன் பிணைத்துக்கொண்டு செயலிகளின் கட்டளைகளுக்கேற்ப அடிமை வாழ்வை நடத்தும் கொடுமைகளைக் காண்கிறான். வாழ்க வாழ்க கோளில் கட் அவுட்டுகளில் வாழும் கதானாயகர்களுக்குப் பாலபிஷேகம் செய்து கொண்டு வாழும் மனிதர்களைக் கான்கிறான்., குப்பை மலைகளின் நடுவே பெரும்பான்மை மக்களை வாழச் செய்துவிட்டு உயர்ந்தவர்கள்என அதிகாரம் செய்து கொண்டிருக்கும் மிபூ கோளின் நிலை கண்டு கொதித்துப்போய் அந்தக்கோளையே பால்வெளியில் இருந்த தடம் தெரியாமல் அழித்து விட்டுப்போகிறான் குட்டி இளவரசன்.

 திரும்பும் வழியில், பி-867 கோளில், குட்டி இளவரசியைச் சந்தித்து ,அவள் இழந்துவிட்ட புஸ்ஸி பூனையை வரைந்து மீட்டுத்தந்த குட்டி இளவரசன், அவளுடன் உரையாடுகிறான். “ அன்பு,வற்றாமல் ஓடும் ஜீவனதிஇரு கரை தொட்டு எல்லா உயிர்களும் செழிக்க உயிர் தரும் அற்புதம்.அது நமக்கானது மட்டுமல்லஅழிவற்றது அது. பூத்துக்கொண்டேயிருக்கும் பூவைப்போன்றது. அன்பு நிபந்தனைகளற்றது…” என குட்டி இளவரசி தெளிவுபடுத்துகிறாள்.

அவரவர் வாழ்க்கைக்கு அவரவர் அனுபவங்களிலிருந்தே ஒளி கிடைக்கும். அடுத்தவர் ஒளியில் நாம் நடக்க முடியாதுஎன்ற அந்த இளவரசியின் வார்த்தைகளோடு குட்டி இளவரசன்,தன் கோளான பி-612 இல் வந்து இறங்குகிறான்.ஆட்டின் வயிற்றுக்குள் சிறைப்பட்டிருந்த தன் குட்டிப்பூவை விடுவிக்கிறான்.” ஆத்திரத்தில் அறிவிழந்து விட்டேன்இனி நீயில்லாமல் என்னால் ஒரு கனமும் தனியே இருக்க முடியாதுஎன்று பூவிடம் மன்னிப்புக் கோருகிறான். பூவின் முகம் மெல்ல மலரத் தொடங்குகிறது. அதன் நறுமணம் கோள் முழுவதும் பரவி, அதில் அன்பின் அமுதம் வழிந்தோடியது. அதன் தேன்சுவையில் கோள் மட்டுமன்றி பால் வெளியே நனைந்தது.


புலிக்குகை மர்மம்ஒரு சுவாரசியமான துப்பறியும் கதை போன்ற ஜாலியான கதை.வானம் பதிப்பக வெளியீடு இது.அட்டைப்படம் ஆவலைத்தூண்டும். ஓவியர்.பிள்ளையின் கைவண்ணத்தை உள்ளோவியங்களிலும் காண்கிறோம். கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிக்காகப் புலிக்குகை மைதானத்துக்குப் போகிறார்கள், பாலுவும் அவனுடைய குழுவினரும். சொர்ணமலையின் அடிவாரத்தில், மேற்குத்திசையைப் பார்த்து,பிரம்மாண்டமாக வாயைத் திறந்து ஒரு புலி உறுமுவதைப் போன்ற தோற்றம் தரும் குகை அது. அங்கே சில அயல் மனிதர்களின் நிழலான நடமாட்டம் பாலுவின் கவனத்தைக் கவர்கிறது. புலிக்குகைக்குள் போகவும் வரவுமாக அவர்கள் அங்கே தென்படும் காட்சிகள்,அவன் கவனத்தில் பதிந்தாலும், கிரிக்கெட் மேட்சின் மும்முரத்தில் அந்தக் குழு ஈடுபட்டிருக்கிறது. மேட்ச் முடியும் நேரத்தில், மாதாங்கோயில் டீமில் நாகுவின் தம்பி மாரியைக் காணோம். இதை மிகத்தாமதமாகவே உணர்கிறார்கள் பாலுவும்,குழுவினரும். பிறகு ? தேடல் தொடங்குகிறது. கேப்டன் பாலுவும்,குழுவும் நிகழ்த்தும் வீரசாகசங்களால், மாரி கிடைப்பதோடு, செண்பகவல்லியம்மன் கோயிலின் மண்டபத்துக் கல்பலகைக்குக் கீழே இருக்கும் புதையலை எடுக்க சதிவேலை செய்யும் சமூகவிரோதிகளும் பிடிபடுகிறார்கள். ஒரே நாளில், இந்தக்குழு புகழ் பெற்று விடுகிறது.


கையடக்கமான வடிவில், அழகான அட்டை,உள்ளோவியங்களுடன் வானம் பதிப்பகம் வெளியிட்டுள்ள  ஆதனின் பொம்மைமற்றோர் இளையோர் நாவல். கேப்டன் பாலு,தன் மாமா வீட்டுக்கு விடுமுறையில் போகிறான். கீழடி என்ற அந்த குக்கிராமம், வைகைக்கரையில் இருக்கிறது. அங்கே கிடைக்கும் சுடுமண் ஓட்டில் வரையப்பட்டிருக்கும் பொம்மை, மூவாயிரம் வருடங்களுக்கு முந்தைய ஆதனின் பொம்மையாக இருக்கறது . ஆதன், பாலுவைச் சந்தித்து தங்கள் பூர்வகுடி வரலாற்றைச் சொல்கிறான். சிந்துவெளியில் தொடங்கும் அந்தக் கதை,இங்கே கீழடி மண்ணில் புதையுண்ட ஓடுகளில்,பொம்மைகளில் மீண்டும் உயிர்த்தெழுகிறது ! வரலாற்றையும், புனைவையும் சமகால இளையோரின் விருப்பு வெறுப்புகளையும் கீழடி மண்ணோடு குழைத்துத் தந்திருக்கிறார் உதயசங்கர்.

ஆதி மதுரையம்பதி நகரில், வற்றாத வைகை நதி ஓடிக்கொண்டிருந்த காலம்இன்றைய பாலுவின் மூதாதையருள் ஒருவனான ஆதன், தங்கை வெண்ணிலையுடன் ஓடி விளையாடிய தெருக்களில் மீண்டும் ஒரு பயணத்தை னிகழ்த்துகிறான் கேப்டன் பாலு. கால ஊஞ்சலில் ஆதனும், பாலுவும் ஆடும் ஆட்டம், கடந்த கால வரலாற்றின் ஒளி மிகுந்த பக்கங் களையும், அதோடு அதிகார மையங்களின் போட்டிகளால் சிதைந்த சிந்து வெளியின் வண்ணமிகு வரலாற்றையும் நம் கண்களின் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது.இந்த நாவலில், மதுமிதா என்ற பெண், பாலுவின் மாமா மகள். இன்றைய சமகாலப்பெண்களின் முன்மாதிரியாகத் திகழக்கூடிய ஓர் ஆளுமை மிக்க கதாபாத்திரம்.


பாரதி புத்தகாலயம் சமீப காலமாக குழந்தைகளுக்கென நிறைய நூல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. புக்ஸ் ஃபார் சில்ட்ரென் சார்பில் பாரதி வெளியிட்டுள்ள ‘அலாவுதீனின் சாகசங்கள்மற்றொரு புனைவு. ஓவியர் வாசனின் அழகான அட்டையும்,உள்ளோவியங்களும் கதையின் சுவாரசியத்தை அதிகரிக்கின்றன. அற்புத விளக்கினுள் அடைபட்டிருந்த ஜீனி பூதத்தை விடுதலை செய்த முந்தைய அலாவுதீனைத் தேடி, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் தமிழ்னாட்டின் தெற்குப்பகுதியில், ஊத்துமலைக்குப் பக்கம் கான்சாபுரம் வந்து சேர்கிறதுஅந்த பூதம். இன்றைய அலாவுதீன்,அந்த ஊரின் ஏழை டெய்லர் மகன்.ஜீனி பூதம்,அலாவுதீன், மாய மோதிரம் மூவரும் இணைந்த கூட்டணி சாகசப் பயணங்களை நிகழ்த்துகிறது. மணல்கோட்டையினுள் அடைபட்டுக்கிடக்கும் குழந்தைகளை விடுவிக்கிறது. கடவுளின் பெயரால் மூவாயிரம் ஆண்டுகளாகச் சண்டையிட்டுக்கொண்டி ருக்கும் திசா நாட்டின் அவலத்துக்குக் காரணமான நெட்டை முனிகளை விரட்டியடிக்கிறார்கள். விசித்திரக்குள்ளர்களையும்,குள்ளிகளையும் ஏமாற்றி அவர்களை மோதவிடும் சூனியக்கார மந்திரவாதிகளை வெல்கின்றனர். அழகுபுரம் நாட்டின் அழகுராஜா உலகெங்குமிருந்து அழகுக்கலை னிபுணர்களைக் கொண்டு தன்னை அழகுபடுத்துவதையே முழுனேர வேலையாகச் செய்து கொண்டிருக்கிறார்.’ஆரோக்கியமே அழகுஎன்பதை அந்த நாட்டு மக்களுக்கு உணர்த்தும் அதே வேளையில் அலாவுதீன்ஜீனி குழு, திருந்த மறுக்கும் அழகுராஜாவை வாலில்லாக் குரங்காக்கி விடுகிறது ! குழந்தைகள்,பெண்கள்,ஆண்கள் யாரும் யாரையும் பரஸ்பரம் சந்திக்க விடாமல் பெரும் சுவர்களால் பிரித்து வைத்திருக்கும் உத்தர் நாட்டு ராஜாவால் ஏற்படும் தீமைகளை எதிர்த்துப் போராடி வெற்றி காணும் அலாவுதீனும்,ஜீனியும் சமகாலத்தில் கொரானா வைரசை ஒழிக்கப் போராடுவதுடன் இந்த நாவல் நிறைவடைகிறது.


 தமிழ்னாடு அறிவியல் இயக்கம் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து அறிவியல் நூல்களை தமிழில் ’அறிவியல் வெளியீடு’கள் மூலம் வெளியிட்டு குழந்தைகளுக்கும்,இளைய வாசகர்களுக்கும் சேவை செய்து வருகிறது. இப்போது இளையோருக்கான புனைவு இலக்கியத்திலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.  பொம்மைகளின் நகரம் நாவல் அந்த வகையில் ஒரு புது வரவு.சசி மாரீசின் ஓவியங்கள் வித்தியாசமானவை.  . பழங்கோட்டை என்ற ஊரின் எல்லைக்கப்பால், வெகுதூரத்தில் இருக்கும் கனவுக்காடு அந்த ஊர் மக்களின் கனவுகளில் மட்டுமே வருகிறது. அந்தக்கனவு காண்பவர்களை அதன்பிறகு ஊருக்குள் பார்க்கவும் முடிவதில்லை. அவர்களை எங்கே காண்பது ? தன் அப்பா பாண்டியனை அதே போல் கனவுக்குப்பின் பார்க்க முடியாமல் தவிக்கும் தமிழ்ச்செல்வன், கனவுக்காட்டுக்குள் எப்படியேனும் நுழைந்தே தீருவது என முடிவு செய்கிறான். அவனும்,அவனுடைய பிரியத்துக்குரிய நண்பர்களான சியான் வெள்ளெலி, கருப்பன் எறும்பு, தேன் சிட்டுகளின் ராஜாவான தேசி ஆகியோருடன் புறப்பட்டுப்போகிறான்.

யாரும் நுழையாக் காட்டைச் சூழ்ந்து நீரும், நெருப்பும், மணலும்,வானமும், காற்றும் காவலிருந்தன. அவற்றைத்தாண்டி காட்டுக்குள் நுழைய சியான் வெள்ளெலி தன் எலிப்படையையே திரட்டி வந்து உதவுகிறது.இப்படியே அடுத்தடுத்து எதிர்ப்படும் அண்டரண்டப்பட்சி,ஆமைச்சிங்கம்,கழுகுராஜா போன்ற தடைகளை வென்று பொம்மைகளின் நகருக்குள் நுழைந்து விடுகிறார்கள் தமிழ்ச்செல்வனின் குழுவினர். பொம்மைராஜாவும்,அவனுடைய படைகளும் அழிந்ததுமே பொம்மைகளாக்கப்பட்டிருந்த மனிதர்கள், தமிழ்ச்செல்வனின் அப்பா பாண்டியன் உள்பட அவ்வளவு பேரும் விடுதலையடைந்து விடுகிறார்கள். வீட்டுக்குப் போகும் தமிழ்ச் செல்வனையும்,குழுவையும் கண்டதும், “ எங்கேடா போய்ட்டு வர்றே, இவ்வளவு நேரமா ?” என்று கேட்கிறார் பாண்டியன். “சும்மா…” என்று சிரிக்கிறான் தமிழ்ச்செல்வன். சியானும், கருப்பனும், தேசிராஜாவும் சேர்ந்து சிரிக்கிறார்கள்.பாண்டியனும்தான் !

ஆக, குட்டி இளவரசர்களின் கைகளில் ஆதனின் பொம்மைகள் இப்போது வந்து சேர்கிற காலம் ! இந்த நாள்களில் மனிதர்களின் பேராசையால் உலகமே அங்காடிக்கோள் ஆக்கப்பட்டிருக்கின்ற சூழல். ஆளும் அழகு ராஜாக்களின் கோட்டுகளும் சூட்டுகளும் இலட்சக்கணக்கில் விலையாகின் றன.கொரானா வைரசால் கொத்துக்கொத்தாக மனிதர்கள் சாகும் சூழலில், புதிய பாராளுமன்றக்கட்டடங்களும், ராஜமாளிகைகளும் கட்டும் பணிகளே முன்னுரிமை பெறுகின்றன. சுற்றுச்சூழல் சார்ந்தும், உலகமய வணிகச் சதிகள் சார்ந்தும், சாதி-மத மோதல்களை உருவாக்கி மனிதர்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மோதவிட்டு இரத்தம் குடிக்கும் அதிகார வெறியர்கள் குறித்தும் குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. காரணம், நாளைய சமுதாயம் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்காக எதை மீதம் வைத்திருக்கிறது என்ற கேள்வியை உரத்துக்கூவ வேண்டியவர்களாக அவர்கள் உள்ளனர். மாபெரும் எழுத்தாளர்களும், புகழ் பெற்ற பத்திரிகையாளர்களும் கூட, இன்றைக்கு நடக்கும் மேற்கண்ட அக்கிரமங்கள் குறித்து வாய்திறவாமல் கள்ளமவுனம் சாதிக்கும் சூழல். அதைவிட மோசம், இந்த மனிதவிரோதச்செயல்களை தமது சுயலாபங்களுக்காக ஆதரித்துப் பேசவும்,எழுதவும் அவர்கள் தயாராகி வரும் நிலை.இவற்றையெல்லாம் குழந்தைகளும்,இளையோரும் புரிந்து கொள்ள இந்த ஐந்து நாவல்களுமே பெரிதும் பயன்படக்கூடியவையாக உள்ளன. எதையும் வெளிப்படையாகப் பேசாமல்,புனைவின் மொழியில் தந்திருக்கிறார் உதயசங்கர் ! இவற்றை நல்ல முறையில் வெளியிட்டுள்ள பாரதி புத்தகாலயம், வானம் பதிப்பகம்,அறிவியல் வெளியீடுகள் ஆகிய வெளியீட்டாளர்களுக்கு வாழ்த்துகளும்,பாராட்டுகளும்.               

 நன்றி புத்தகம் பேசுது ஜூன் 2021   

 

     

   

Saturday 19 June 2021

இப்போதும் இடைசெவலில் இருக்கிறார் கி.ரா.

 


இப்போதும் இடைசெவலில் இருக்கிறார் கி.ரா.

உதயசங்கர்

எப்போதையும் விட இந்த வருடம் கரிசல்க்காட்டில் வெயில் அதிகம். வானத்தில் மேகங்களில்லை. நீலவானம் தகதகத்தது. நின்று பொழிந்தது வெயில். இதில் ஆச்சரியப்படுதவற்கு ஏதுமில்லை. எப்போதும் அடிவானவிளிம்புவரை கானல் நதிகள் ஓடிக்கொண்டிருக்க விருவுகளோடிய தன் மானாவாரிப்பிஞ்சையில் தன்னந்தனியனாய் நின்று ஓரேர் போட்டு உழுதுகொண்டோ, களையெடுத்துக் கொண்டோ, விதை மூட்டையிலிருந்து விதைகளை எடுத்து கடவாப்பெட்டியில் போட்டுக்கொண்டோ, அடிக்கடி வானத்தைப் பார்த்து மந்திரம் பொல் சொற்களை வீசிக்கொண்டோ ஒரு விவசாயி வேலை செய்து கொண்டிருக்கிறார். மழை வருமா என்று அவருக்குத் தெரியாது. மண்நனையுமா என்று தெரியாது. விதை முளைக்குமா என்று தெரியாது. வெள்ளாமை கிடைக்குமா என்று தெரியாது. வெள்ளாமை வீடு வந்து சேருமா என்று தெரியாது. தான் பட்ட கடன்களையெல்லாம் அந்த வெள்ளாமை தீர்த்துவிடுமா என்று தெரியாது. எத்தனையோ ஆண்டுகள் மழை பொய்த்திருக்கிறது. ஒரு பொக்கு கூட விளையாமல் காடு ஏமாற்றியிருக்கிறது. ஆனால் அவர் ஒருபோதும் நம்பிக்கையிழக்கவில்லை. மீண்டும் மீண்டும் விருவுகளோடி கன்னங்கரேலென்று பெருமூச்சுகளை தீயென வெளியே விட்டுக்கொண்டிருக்கும் தன் நிலத்தை உழுது வைக்கிறார். விதை விதைக்கிறார். விளைச்சலுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். நம்பிக்கையுடன். கரிசல் சம்சாரியின் வாழ்க்கையின் ஒருதுளி சாராம்சமே ஒரு பெருங்கடலாக விரிகிறது. அந்தக்கடலிலே முக்குளித்து அள்ள அள்ள தீராமல் தொன்னூற்றியொன்பது வயது வரை எழுதிக்கொண்டேயிருந்த கி.ரா. என்னும் மாபெரும் கதைசொல்லியின் விரல்கள் ஓய்வெடுத்துக் கொண்டன. 

கரிசல் இலக்கியத்தின் கதாசூரியன் மறைந்து விட்டார்.

கி.ரா. என்ற எழுத்தாளரின் பிறப்பு

கி.ரா. என்ற கி.ராஜநாராயணன் என்ற ராயங்கலம் ஸ்ரீகிருஷ்ண ராஜ நாராயணப்பெருமாள் ராமானுஜன் இடைசெவலில் 1922 ஆம் ஆண்டு பிறந்தபோது அந்த ஊர் அறிந்திருக்கவாய்ப்பில்லை. இப்படியொரு பெருமையைக் கொண்டு வந்து சேர்க்கப்போகிறது இந்தக்குழந்தை என்று யாருக்கும் தெரியாது. ஏன் கி.ராஜாநாராயணனுக்கே தெரியாது. காசநோயினால் அவதிப்பட்ட பாலியகாலமும் பள்ளிக்கூடத்துக்கு மழைக்கு ஒதுங்கிய கால்களும் மழையை வேடிக்கை பார்த்த கண்களுமாய் வாழத்துடித்துக் கொண்டிருந்த கி.ரா. ஏழாம் வகுப்புக்கு மேல் போகவில்லை. பக்கத்து வீட்டுக்காரனான கு.அழகிரிசாமி உயிர்ச்சிநேகிதனாகி கி.ராவை ஆற்றுப்படுத்தினான். காசநோய் உச்சத்திலிருந்த சமயம் நாட்களையோ, மாதங்களையோ கெடு வைத்து விட்டுப்போன வைத்தியரையும் வாசலிலேயே தயாராக நின்று கொண்டிருந்த மரணத்தையும் எப்படியோ கண்ணாமூச்சி விளையாடி ஏமாற்றி வளர்ந்து வாலிபத்துக்கு வந்தார் கி.ரா.

நண்பர்கள் இருவருக்கும் சங்கீதப்பைத்தியம். சங்கீதவித்துவான் குருமலை பொன்னுச்சாமிப்பிள்ளையிடம் வாய்ப்பாட்டு படித்தார்கள். இசைஞானசாகரம் விளாத்திகுளம் சுவாமிகளைத் தேடிப்போனார்கள். காருக்குறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வரத்திலும் சாத்தூர் பிச்சைக்குட்டியின் இசையிலும் மயங்கிக்கிடந்தார்கள். சிறந்ததொரு சங்கீதக்காரனாகி விடவேண்டும் என்பதே கி.ரா.வின் லட்சியமாக இருந்தது. நண்பர்கள் இருவரும் இசையின் நுட்பங்களை இடைசெவலின் காடுகரையெங்கும் விதைத்துக் கொண்டே அலைந்து திரிந்தார்கள். இசைத்தாகமும், பழந்தமிழிலக்கிய மோகமும் திருநெல்வேலியில் வட்டத்தொட்டி என்ற இலக்கிய அமைப்பை நடத்திக்கொண்டிருந்த ரசிகமணி டி.கே.சிதம்பரநாதமுதலியாரிடம் கொண்டு சேர்த்தது. ரசிகமணி கி.ரா. கு.அழகிரிசாமி இருவர் மீதும் பெருமதிப்பு கொண்டிருந்தார்.

1940 –களில் எட்டக்காபட்டி முத்துச்சாமி என்ற ஆங்கிலம் தெரிந்த  எளிய விவசாயித்தோழர் தான் கி.ரா.வுக்கும் அழகிரிசாமிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வாசிக்கக்கொடுத்திருக்கிறார். ஆண்டன் செகாவை வாசிக்கக் கொடுத்திருக்கிறார். டால்ஸ்டாயை அறிமுகப்படுத்தியிருக்க்றார். மாக்சிம்கார்க்கியை வாசிக்கச்சொல்லியிருக்கிறார். சோவியத் இலக்கியங்களையும் வாசிக்கக்கொடுத்தார்.  அவற்றை வாசித்து முடித்தபோது நண்பர்கள் இருவரும் கம்யூனிஸ்டுகளாக மாறியிருந்தார்கள். இடைசெவலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக கு.அழகிரிசாமி சிறிது காலம் பொறுப்பேற்றிருந்தார். விவசாயிகள் சங்கத்தின் செயலாளராக கி.ரா. பொறுப்பேற்றிருந்தார். 1943 –ல் குடும்பச்சூழல் காரணமாக கு.அழகிரிசாமி சென்னை சென்றுவிட தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும், விவசாயிகள் சங்கத்திலும் பணியாற்றினார். கட்சி தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் கி.ரா. இடைசெவலில் கம்யூனிஸ்ட் கொடியேற்றினார்.

இன்னொருகாட்சி கூட நடந்தது. தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் கோவில்பட்டியில் மே தின ஊர்வலத்தை நடத்திக்காட்டியிருக்கிறார்கள் இடைசெவல் மக்கள். கோவில்பட்டி மார்க்கெட் சாலையில் ஒரு ஐம்பது அறுபதுபேர் கடைகளில் சாமான்கள் வாங்குவது போல ஒதுங்கி நின்றிருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சமிக்ஞையில் அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி மார்க்கெட் சாலையில் மே தினக்கோஷங்களை முழங்கிக்கொண்டு ஊர்வலமாகப் போய் சட்டெனக் கலைந்து போனார்கள். தகவலறிந்து வந்து போலீசாருக்கு எதுவும் புரியவில்லை.

விவசாயிகள் சங்கத்தின் பலபோராட்டங்களை கோவில்பட்டியில் முன்னின்று நடத்தியிருக்கிறார் கி.ரா. அதனால் தான் 1949 –ல் காங்கிரஸ் அரசு இரண்டாவது முறையாக நெல்லைச்சதி வழக்கை போட்டு அதில் நல்லகண்ணு, ஏ.நல்லசிவன், ஆர்.எஸ்.ஜேக்கப், போன்ற தலைவர்களுடன் கி.ரா.வையும் சேர்த்து வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். தகவலறிந்த டி.கே.சி. அப்போதைய காங்கிரஸ் முதலமைச்சரான ஓமந்தூராரிடம் அந்தப்பையன் எழுத்தாளரப்பா..என்று சொல்லி அவரை வழக்கிலிருந்து விடுவித்திருக்கிறார். 1964 – ஆம் ஆண்டுவரை இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த கி.ரா. கம்யூனிஸ்ட் கட்சியின் பிளவைத் தாங்கமுடியாமல் கட்சியிலிருந்து விலகினாரென்றாலும் இறுதிவரை அவர் இடதுசாரியாகவே வாழ்ந்தார்.

கி.ரா. எழுத்தாளரான கதை

போன நூற்றாண்டின் துவக்கத்தில் தான் நவீன இலக்கியவடிவங்கள் ஒவ்வொன்றாய் தமிழில் அறிமுகமாகத் தொடங்கின. 1916 –ல் தமிழின் முதல் நவீனச்சிறுகதை வ.வே.சு. ஐயரால் எழுதப்பட்டது. ந.பிச்சமூர்த்தியால் 1950 –களில் புதுக்கவிதை தொடங்கப்பட்டது. ஏற்கனவே நாவல் இலக்கியம் 1876-ல் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருந்தது. மார்க்சீயத்தின் தாக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கம் இந்திய, தமிழிலக்கியத்திலும் ஒரு புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியது. சாமானியர்கள் கதாநாயகர்களானார்கள். நவீன வாழ்க்கையின் சிக்கல்கள் புதிய பாடு பொருட்களாயின. அரசர்களை, வள்ளல்களை, கடவுளரைப் பாடும் நிலப்பிரபுத்துவ இலக்கியமதிப்பீடுகள் சரிந்தன. முதலாளித்துவம் புதிய நவீன மனிதனை உருவாக்கியது. உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி சாதனங்களுக்குமிடையே புதிய உறவு உண்டானது. உற்பத்தியும், உழைப்பும் கூலியும் சுரண்டலும் பிரதானமாயின. அதனால் உற்பத்தி உறவுகள் புதிதாக மாறின. ஆண்டான் அடிமை என்ற உறவு மாறியது. அரசு, முதலாளி, தொழிலாளி விவசாயி என்ற புதிய வர்க்கங்கள் உருப்பெற்றன. இந்த வர்க்கங்கள் உருப்பெற்றதும் அவற்றின் நலன்களே முன்னுக்கு வந்தன.

இந்தக் காலகட்டத்தில் வர்க்க முரண்களையும் அதற்கான தீர்வையும், முன் வைத்தது மார்க்சீயம் மட்டுமே. இழப்பதற்கு எதுவுமில்லை எதிரில் இருப்பதோ பொன்னுலகம் என்ற முழக்கத்துடன் மார்க்சீய அழகியல் கொள்கைகளின் அடிப்ப்படையில் பாட்டாளிகள் விவசாயிகளின் வாழ்க்கையும் அவர்களுடைய உணர்வுகளும் இலக்கியத்தில் பிரதிநிதித்துவமாயின. அதற்கு சோவியத் இலக்கியம் இங்கே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. படித்த உயர்தட்டு அறிவாளிகள் மட்டுமே எழுதிக்கொண்டிருந்த ராஜபாட்டையில் புதிது புதிதாக தாம்போதிகள் வந்து கலந்தன. அப்படி வந்து கலந்த தாம்போதியே கி.ரா. அவரே பின்னால் ஒரு பெருநதியாக மாறி தமிழிலக்கியத்துக்கு ஆகப்பெரும் பங்களிப்பு செய்தார் என்பது வரலாறு.

எழுத்து இலக்கியத்துக்கும், வாய்மொழி இலக்கியத்துக்கும் பாரதூரமான ஏற்றதாழ்வுகள் இருந்த காலம். அழகோ, நளினமோ, ஒழுங்கோ, இலக்கணமோ, இல்லாமல் கொச்சைத்தனமானது வாய்மொழி இலக்கியம் என்ற நம்பிக்கைகள் உலவிக் கொண்டிருந்த காலத்தில் மார்க்சீயம் மக்கள் பண்பாட்டையும் வாழ்க்கையையும் உயர்த்திப்பிடிக்க அறைகூவல் விட்டது. 1957 –ல் இந்திய கம்யூனிஸ்ட கட்சி முதலாம் சிதந்திரப்போராட்டத்தின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடி பொழுதில் கட்சியின் செயலாளராக பி.சி.ஜோஷி இருந்தார். அந்த அரசியல் மாநாட்டுக்கு நா.வானமாமலையும், கி.ரா. வும் சென்றிருக்கிறார்கள். அந்த மாநாட்டில் தான் வெகுமக்களின் பண்பாட்டை, பழக்கவழக்கங்களையும், கதைகளையும், பாடல்களையும், பதிவு செய்யவேண்டும். சாமானிய மக்களின் வாழ்க்கையை இலக்கியமாகப் படைக்கவேண்டும் என்ற திட்டங்கள் முன்வந்தன. அதன்பிறகு இடதுசாரி ஆயவறிஞரான நா.வானமாமலை  நாட்டுப்புற இலக்கியம் பற்றிய ஆய்வுகளைத் தொடங்கிச் சேகரிக்கத் தொடங்கினாரென்று சொல்லலாம்.

இந்த வெளிச்சம் கி.ரா.வுக்கு ஒரு புதிய பாதையை காட்டியது. மார்க்சீயத்தின் தத்துவக்கருத்தியலான மக்கள் வரலாற்றையும் பண்பாட்டையும் மீட்டெடுக்கும் ஒரு புதிய பாதை. கி.ராவின் இலக்கிய வருகைக்கும் தமிழில் நாட்டார் வழக்காற்றியலின் தோற்றத்துக்கும் காத்திரமான தொடர்பு இருக்கிறது.

தன்னுடைய பாதையைத் தெரிந்து கொண்டபிறகு கி.ரா. திரும்பிப்பார்க்கவில்லை. தயங்கி நிற்கவில்லை. யாராவது தன்னைப் பின்தொடர்கிறார்களா என்று கவலைப்படவில்லை. உடல்நிலை காரணமாக முறை சார்ந்த கல்வியைக் கற்கமுடியாமல் ஏழாம் வகுப்பைத் தாண்டமுடியவில்லை என்றாலும் சுய கற்றலை அவர் விடவில்லை. பழந்தமிழ் இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரை அவரும் கு.அழகிரிசாமியும் வாசித்தார்கள். அதுவே அவருடைய காலடியிலேயே இருக்கும் மிகப்பெரிய பொக்கிஷத்தை அவருக்குக் காட்டிக்கொடுத்தது. கிராமப்புற வேளாண்மரபிலிருந்து வந்த கி.ரா.வுக்கு தன் மக்களின் தொன்மங்கள், வாழ்க்கை, பண்பாடு, மொழி,  சடங்குகள், என்று எல்லாவற்றையும் கலையாக மாற்றுகிற ஆவேசத்தைக் கொடுத்தது.

நாட்டார் இலக்கியப்பங்களிப்பு

நாட்டார் வழக்காறு என்று ஒரு துறையே தமிழில் துளிர் விடாத காலத்தில் நா.வானமாமலை, கி.ரா. ஆ.சிவசுப்பிரமணியன், நா.வானமாமலை நடத்திய ஆராய்ச்சி பத்திரிகையில் எழுதிய இளம் ஆய்வறிஞர்கள் நாட்டார் வழக்காற்றை, சேகரிக்கவும் ஆவணப்படுத்தவும் தொடங்கி விட்டார்கள். அதிலும் யாரும் செய்யத்துணியாத மாபெரும் வேலையை கி.ரா. செய்தார். வட்டாரவழக்குச்சொல்லகராதியைத் தொகுத்தார். தான் வாழ்ந்த, தான் அறிந்த மண்ணின் மக்கள் பேசும் மொழி மற்ற பகுதி மக்களின் மொழியிலிருந்து வேறுபட்டிருப்பதற்கான காரணங்களைத் தேடினார். அப்போதுதான் வாழ்க்கை தான் மக்கள் மொழியைக் கட்டமைக்கிறது என்பதை கண்டு கொண்டதும் அந்த மொழியில் அலகுகளான வார்த்தைகளைப் பதிவு செய்யத் தொடங்கினார். 1970-களில் தொடங்கிய அந்தப்பணியை தனியொரு மனிதராகத் தொகுத்து வகைப்படுத்தி 1980 –களில் பதிப்பித்தார். பல நண்பர்கள், எழுத்தாளர்கள் வார்த்தைச்சேகரத்துக்கு உதவினார்கள் என்றாலும் அவற்றை ஒரு அகராதியாக மாற்றியது கி.ரா. என்றால் அவருடைய அறிவுப்புலமையின் ஆழத்தை அறிந்து கொள்ளலாம்.

நாட்டுப்புறக்கதைக் களஞ்சியம், நாட்டுப்புற பெண்கதைகள், சிறுவர் நாடோடிக்கதைகள், பாலியல் கதைகள், என்று நாட்டார் வழக்காற்றின் எல்லாவகைமை முன்னத்தி ஏராக இருந்தார்.

1987-ல் புதுச்சேரி மத்தியப்பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக நாட்டுப்புற இலக்கியம் குறித்து தமிழ் இலக்கிய மாணவர்களுக்குச் சொல்லித்தர அப்போதைய துணைவேந்தர் கி.வேங்கடசுப்பிரமணியனால் நியமிக்கப்பட்டார். எப்போதும் புதுமையாய் செய்வதில் ஆர்வமுடன் இருக்கும் கி.ரா. பல்கலைக்கழகத்திலும் வகுப்புகளை மரத்தடியில் நடத்தியிருக்கிறார். மாணவர்களைப் பேசச்சொல்லி, கதைகளைச் சொல்லச்சொல்லி உற்சாகப்படுத்தியிருக்கிறார். அந்தக் காலத்திலிருந்து புதுவை மாநிலம் அவரைத் தத்தெடுத்துக் கொண்டது. அதன்பிறகு அதிகமாக அவர் கோவில்பட்டிக்கோ, இடைசெவலுக்கோ வந்து போகவில்லை. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. 1990 – களில் எழுந்த அடையாள அரசியலின் விளைவாக சாதிச்சங்கங்கள் மீண்டும் உயிர்பெற்று எப்படியாவது ஏதாவது ஒரு பிரச்னையை உருவாக்கி தங்களுடைய வலிமையைக் காட்ட வேண்டும் என்ற வெறியுடன் இருந்த காலத்தில் கி.ரா. எழுதிய ஒரு கதையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்தி எழுதிவிட்டாரென்றும் அதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் அந்த சாதித்தலைவர்கள் கண்டன ஊர்வலம் போய் போலீஸில் புகாரும் அளித்திருக்கிறார்கள்.

அவருடைய 90 – ஆவது வயதில் ஒரு நேர்காணலில் அவர் சொன்ன வார்த்தையைத் தவறாகப்புரிந்து கொண்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்து அந்த வழக்கு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குமேல் நடந்தது. சாமானிய மக்களின் வாழ்க்கையை தன் வாழ்நாள் முழுவதும் எழுதித்தீர்த்த ஒரு மாபெரும் படைப்பாளியை நம்முடைய சமூகம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இழிவு படுத்த முயற்சித்துக் கொண்டேயிருந்தது என்பதையும் பதிவு செய்யவேண்டியிருக்கிறது. இவற்றையெல்லாம் புறந்தள்ளியே அவர் கரிசல்க்காட்டு கதாசூரியனாக எழுந்தார்.

இதில் நகைமுரண் என்னவென்றால் பள்ளிக்கல்வியை பாதியில் விட்ட கி.ரா. தான் புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றினார் என்பதும் இன்றைக்கு நாட்டார் வரலாறு என்றதொரு கல்விப்புலமே உருவாகி அவரைப் படித்துக்கொண்டிருக்கிறது என்பதும் தான். முறை சார்ந்த கல்வியை விட விருப்பார்ந்த முறைசாராக்கற்றல் எத்தகைய ஆளுமையை உருவாக்கியிருக்கிறது என்பதற்கும் கி.ரா.வே உதாரணம்.

கி.ராவின் படைப்புகள்

1945 –ல் அவருடைய முதல் கதையான சொந்தச்சீப்பு கு.அழகிரிசாமி ஆசிரியராக இருந்த சக்தி பத்திரிகையில் வெளிவந்தாலும், கி.ரா. அதைத் தன்னுடைய முதல் கதையாகக் குறிப்பிடுவதில்லை. 1958 –ல் தான் அவருடைய முதல்கதை மாயமான் சரஸ்வதியில் வெளியானது. அன்று தொடங்கிய படைப்புப்பயணம் 2021 வரைத் தொடர்ந்தது. முதல்கதையான மாயமான் சரஸ்வதி பத்திரிகையில் வெளிவரும்போது கி.ராவுக்கு வயது முப்பத்தியைந்து. ஆரம்பத்தில் அவர் எழுதிய கதவு, வேட்டி, கரண்டு, ஜடாயு, தோழன் ரங்கசாமி, போன்ற கதைகளை கிராமப்புற மதிப்பீடுகள் யந்திரமயமான நவீன அரசின் மூர்க்கத்தனத்தை எதிர்கொண்டவை என்றே சொல்லலாம். புதிய விட்டேத்தியான முகமான நவீன அரசின் நகர்ப்புறம் எப்போதும் நெருக்கமாக நெய்யப்பட்ட உறவுகளைக் கொண்ட கிராமப்புரத்துக்கு எதிர்நிலையிலேயே இருந்தது எனலாம். கி.ரா.வின் காலத்தில் எழுதப்பட்டுக்கொண்டிருந்த நவீனத்துவ கதைகள் தனிமனித அகவுலகம் புறவுலகத்தோடு மோதும்போது ஏற்படும் முணுமுணுப்புகளையோ, கொந்தளிப்புகளையோ பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தன. தனிமனிதவாதமும், அந்நியமாதலும், உறவுகளின் வெறுமையும், பேசுபொருள்களாக இருந்தன.

கி.ரா. தன்னுடைய விரிந்த படைப்புவெளி முழுவதும் ஒரு படைப்பில் கூட நவீனத்துவத்தின் கூறுகளை எழுதிப்பார்க்கவில்லை. அவருக்கு கிராமப்பொருளாதாரக்கட்டமைப்பின் மக்களின் கூட்டு மனநிலையின் மீதும், வரலாற்றின் கூட்டு நனவிலியின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அதைத் தான் அவர் தன்னுடைய கதைகளில் எழுதிப்பார்த்தார். வாய்மொழி மரபில் கதை சொல்லலை அவர் தேர்ந்தெடுத்ததின் வழியாக நவீனத்துவத்துக்கு எதிராக தனித்துவமான பாதையை ஏற்படுத்திக் கொண்டார். ஆனால் அந்தத் தனித்துவமான வாய்மொழிமரபுக்கு நவீன வடிவத்தைக் கொடுத்தது தான் கி.ரா.வின் மிகப்பெரிய பங்களிப்பு.

 கலகத்தை நவீனத்துவ வடிவத்தில் செய்தார். அதனால் தான் அவருடைய படைப்புகளை நவீன இலக்கியம் வாசிக்கும் வாசகர்களும் வாசிக்கிறார்கள். அத்துடன் கடந்த காலத்தின் கிராமப்புற வாழ்வின் அங்ககக்கூறுகளை உயிர்த்துடிப்பான மொழியில் கி.ரா. எழுதியதை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவருடைய கடந்த கால கிராமப்புற வாழ்வின் நனவிலி மனதில் ஒளியேற்றி விடுகிறது என்பதை யோசிக்கும்போது கி.ரா.வின் படைப்புகளின் முக்கியத்துவம் தெரியும்.

கி.ரா. தமிழ் மொழியை புதுமையாக்கினார். உரைநடைத்தமிழில் மட்டுமே எழுதப்பட்டுக்கொண்டேயிருந்த இலக்கியத்தில் பேச்சு வழக்கிலேயே எழுத முடியும் என்பதையும் அதன் மூலம் வாசகர்களை ஈர்க்க முடியும் என்பதையும் நிலை நிறுத்தினார். அதற்கான ஒரு நியாயமான கருத்தையும் அவர் உருவாக்கிக்கொண்டார். தொல்காப்பியம் தொடங்கிய தமிழ் இலக்கண நூல்கள் எல்லாம் செய்யுள் எழுதுவதற்கான இலக்கணமுறையே தவிர உரைநடை எழுத்துக்கான இலக்கணமில்லை. உரைநடைக்கு இனிமேல் தான் இலக்கணம் எழுதப்படவேண்டும் என்று அவர் சொன்னார். மக்கள் மொழி என்பது அவர்களுடைய உயிர்த்துடிப்பான வாழ்க்கையிலிருந்து வருகிறது. அந்த மொழிதான் அந்த மக்களின் வாழ்க்கையைச் சொல்வதற்கு ஏற்றது என்ற கருத்தில் உறுதியாக இருந்தார்.

 அவர் தமிழ் இலக்கியத்துக்குள் புதிய நிலத்தை அறிமுகப்படுத்தினார். அதுவரை யாரும் கவனித்திராத கரிசல் மண்ணை தமிழுக்குக் கொண்டுவந்தார். கடவுள் விடும் வெப்பப்பெருமூச்சைப்போல கனன்று பிளவுண்டு கிடக்கும் மண்ணின் மக்களும் கூடவே வந்தார்கள். அவர்களுடன் அவர்களுடைய கதைகளும் வந்தன. அந்தக்கதைகளில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள், வயதானவர்கள், கோட்டிகள், மாற்றுப்பாலினத்தவர், தலித்துகள் எல்லாரும் வந்தார்கள். அவர்களை படைக்கும் போது கி.ரா. கிராமிய மனம் கொண்டு கனிந்து எழுதினார். நவீனமனத்தின் குரூரங்களின் நிழல் கூட படாமல் பார்த்துக்கொண்டதில் தான் அவருடைய கலையின் தனித்துவம் இருக்கிறது.

முன்னுதாரணமில்லாத உள்ளடக்கம், வடிவத்தில் எழுதப்பட்ட அவருடைய கோபல்லகிராமமாக இருக்கட்டும் கோபல்ல புரத்து மக்களாக இருக்கட்டும் கிராமத்தின் கூட்டுமனதின் பிரதிநிதியாக  தன்னைப் பாவித்து எழுதியதால் தான் அந்தப் படைப்புகளில் கிராமப்புறமனதின் தொன்மங்களும், அதீத கற்பனைகளும், மாயாஜாலங்களூம் உயிர்த்துடிப்போடு வெளிப்பட்டது. மனிதர்களும் இயற்கையும் உயிர்த்துடிப்போடு இருந்தார்கள். கிடையாக இருந்தாலும் சரி, மற்ற அவருடைய கதைகளில் புற உலகம் அவருடைய கதையின் ராகத்துக்கு இசைந்து வரும். புற உலகச்சித்தரிப்பின்றி அவர் எழுதியதில்லை என்பதாலேயே அவருடைய படைப்புகள் மனிதமையமாக இல்லாமல் இயற்கைமையமாக திகழ்கின்றன. இயற்கை மையமாக இருப்பதனால் தான் அவருடைய கதைகளில் ஆடு, மாடு, காகம், குருவி, நாய், வல்லயத்தான், என்று விலங்குகளும், மரங்களும் செடிகளும் கொடிகளும், மண்ணும், காட்சிரூபமாக சித்தரிக்கப்பட்டு வாசகன் தன் புலன்களை உணர்வெழுச்சியில் இழக்க வைக்கும் வித்தகராக கி.ரா. விளங்குகிறார்.

அவருடைய கதவு தொடங்கி பல கதைகளில் சிறார்கள் கதபாத்திரங்களாக வந்திருந்தாலும் சிறார்களுக்காகத் தனியாக பிஞ்சுகளை எழுதினார். அதில் பதின்பருவத்துச் சிறார்களின் மனநிலையை அவ்வளவு அழகாகச் சித்தரித்திருந்தார். அவருக்கு ஒருபோதும் கதாபாத்திரங்களுக்குப் பஞ்சம் வந்ததேயில்லை. என்னை எழுது என்னை எழுது என்று முண்டியடித்துக்கொண்டு அவருக்கு முன்னால் கூட்டமாக நின்றார்கள். 

கி.ரா. ஒரு கதைசொல்லியாகக் கதையை நிகழ்த்துகிறார். அப்படி நிகழ்த்தும்போது வாசகன் கவனம் திசை திரும்பாமலிருக்க ரசனையின் அழகியலை ஆங்காங்கே நறுமணத்தைலம் போல தெளிக்கிறார். ஆனால் கதைகளுக்கான கருவைத் தேர்ந்தெடுக்கும்போதும் சரி, அதை நாட்டார்வழக்காற்றியல் வழியில் கட்டமைக்கும்போதும் சரி அவருடைய இடதுசாரிப்பார்வை அடிநாதமாக ஓடிக்கொண்டேயிருக்கிறது. கி.ரா.வின் கதைகளில் உள்ள கலை அமைதி அது திட்டமிடப்படாமலே இயல்பாக அமைந்தது போல தோன்றும். அதுதான் அவருடைய விஷேசம். கலைநேர்த்திக்காக பலமுறை எழுதிப்பார்க்கக்கூடிய கடுமையான உழைப்பாளியாக இருந்தார் கி.ரா. கூர்ந்து வாசிக்கும் வாகசர்களுக்கு அந்த நுட்பம் புரியும். அவருடைய கதைகளில் வரும் பெண்கதாபாத்திரங்கள் அத்தனைபேரும் சாதாரண உழைப்பாளிகள். வாழ்க்கையையே உழைப்பாகப் பார்க்கக்கூடிய மனம் கொண்டவர்கள். விசித்திரங்களின் துளிநேர மாயங்களில் தங்களை இழந்து மீள்பவர்கள். ஆண்கள் உண்மையிலேயே விசித்திரமான குணபாவங்களைக் கொண்டவர்களாக வருவார்கள். ஆனால் அவருடைய கதைகளில் வருகிற எல்லாமனிதர்களிடமும் வாழ்வைப் புரிந்து கொண்ட ஒரு முதிர்ச்சி இருக்கும். அவருடைய கதைகள் தமிழிலக்கியத்துக்கு பெருங்கொடையென்றால் அதீதமான கணிப்பாகக் கொள்ளமுடியாது.

 தமிழிலக்கியத்தில் வெகுமக்களை கதாபாத்திரங்களைக் கொண்டு வந்து சேர்த்த முன்னோடி கி.ரா. மக்கள் இலக்கியம் எழுதும், எழுதவேண்டும் என்று நினைக்கிற எல்லாரும் கி.ரா.விடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது ஏராளம்.

படைப்பாளிகளை உருவாக்கினார் கி.ரா.

கி.ரா. அதிர்ந்து பேசாதவரென்பதால் அவருடைய கடுமையான விமரிசனங்கள் கூட நீவி விடுவதைப்போலவே இருந்தன. யாரையும் புண்படுத்தும் வார்த்தைகளை அவர் பயன்படுத்தியதில்லை. நெருக்கமான சொற்களின் வழியே அவர் இளைஞர்களை ஈர்த்தார். அவர்களுடைய படைப்புகளைப் படித்து விட்டு ரெண்டு வரி கடுதாசி எழுதுகிற பழக்கம் இருந்தது. நேரில்பார்க்கும் போது அப்படிக் கொண்டாடுவார். இதெல்லாம் தான் கி.ரா. என்ற மாமனிதரை நோக்கி எழுத்தாளர்களும் வாசகர்களும் படையெடுத்துக் கொண்டேயிருப்பதற்கான காரணங்கள். மொழியின் ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஒரு கதையைச் சொல்லுவார் கி.ரா.

1980-களில் வட்டார இலக்கியம் குறித்த அவநம்பிக்கையான பேச்சுகள் தமிழிலக்கியவெளியில் உலவிக்கொண்டிருந்த சமயத்தில் கி.ரா.வே முன்னோடியாக யாரும் செய்யாத ஒரு காரியத்தைச் செய்தார். அது தான் கரிசல் வட்டாரத்தில் அப்போது எழுதிக்கொண்டிருந்த 21 எழுத்தாளர்களிடமிருந்து கதைகளைச் சேகரித்து கரிசல் கதைகள் என்று ஒரு தொகைநூலை வெளியிட்டார். அந்த நூல் ஒரு அதிர்வலையை தமிழில் ஏற்படுத்தியது. இத்தனை எழுத்தாளர்களா என்று எல்லாரையும் ஆச்சரியப்படவைத்தது. அந்த ஆச்சரியம் இன்னும் குறைந்தபாடில்லை. இப்போதும் முப்பதுக்கும் குறையாத எழுத்தாளர்கள் நவீன இலக்கியத்தில் புழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது சாதாரண விஷயமில்லை.

      கி.ரா.எனும் பிரம்மாண்டமான ஆலமரத்திலிருந்து ஏராளமான விழுதுகள்  பூமியிலிறங்கி வேர் பிடித்திருக்கின்றன. அந்த ஆலமரமே பல ஆலமரங்களை உருவாக்கியிருக்கிறது. அந்த ஆலமரத்தின் நிழலில் லட்சக்கணக்கான பறவைகளும், சின்னஞ்சிறு உயிரினங்களும் ஓய்வெடுத்து தங்களை ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இப்போதும் கூட அந்த ஆலமரம் இடைசெவலில் நின்று கொண்டிருக்கிறது.

அங்கே கி.ரா மீளாத்துயில் கொண்டிருக்கிறார். இன்னும் தான் சொல்லவேண்டிய அபூர்வமான விஷயங்களை அசைபோட்ட படி. தன்னுடைய வேர்களையும் விழுதுகளையும் இலைகளையும் பூக்களையும் காய்களையும் கனிகளையும் அவற்றைத் தின்னவரும் குருவிகளையும் வேடிக்கை பார்த்தபடி.

கி.ரா. எங்கள் சூரியனே!