Sunday 31 August 2014

சூரியனைச் சிறைப் பிடியுங்கள்

 

உதயசங்கர்

மண்டியா தேசத்தில் மண்டு ராஜா மண்டு ராஜா என்று ஒரு ராஜா ஆண்டு வந்தார். அவரிடம் அடிமண்டு அடிமண்டு என்று ஒரு மந்திரி வேலை பார்த்தார். ராஜா என்றால் சும்மாவா? ரத கஜ துரபதிகளுடன் எல்லா ராஜாக்களையும் போல அரண்மனை அரசசபையிலிருந்து கொண்டே,

” அடிமண்டு மந்திரி நாட்டில் மாதம் மும்மாரி பெய்கிறதா ? “

என்று கேட்பார். உடனே அடிமண்டு மந்திரியும்

“ அப்படியே மன்னா..”

என்று கூவுவார்.

ஆனால் இருவருமே அரண்மனையை விட்டு வெளியே போனதில்லை. வெளியே வெயிலடிக்கிறதா மழை பெய்கிறதா என்று கூடத் தெரியாது. ஏனெனில் மண்டு ராஜா ஏற்கனவே ஒரு உத்தரவு போட்டிருந்தார். அடிமண்டு மந்திரி எப்போதும் அவரைத் தனியே விட்டுவிட்டு போகக் கூடாது. மண்டு ராஜா தூங்கப் போகும்போது மட்டும் தான் அவர் போகலாம். மறுநாள் காலையில் மண்டு ராஜா எழுந்திரிக்கும் போதே அவர் கண்முன்னால் அடிமண்டு மந்திரி இருக்க வேண்டும். அதனால் அவர்கள் இருவருக்குமே அரண்மனைக்கு வெளியே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியாது. சூரியன், சந்திரன், தெரியாது. நட்சத்திரங்கள் தெரியாது. புல்,பூண்டு, தெரியாது. செடி, கொடி, தெரியாது பறவைகள், விலங்குகள் தெரியாது. அரண்மனையில் எழுந்து குளித்து, உடை உடுத்தி சாப்பிட்டு , பின்னர் குளித்து, உடை உடுத்தி, சாப்பிட்டு, பின்னரும் குளித்து, உடை உடுத்தி சாப்பிட்டு, இப்படியே இரவு வரை பொழுது போகும். இதில் சலிப்பு ஏற்படும்போது ஆட்டம் பாட்டம் பார்ப்பார்கள். சிலசமயம் பல்லாங்குழி, தாயம், விளையாடுவார்கள்.

திடீரென்று ஒரு நாள் மண்டு ராஜாவின் தோலின் நிறம் பாலைப் போல வெளுத்துப் போயிருந்தது. கண்ணாடியில் அவரைப் பார்த்து அவரே பயந்து போனார். உடனே அரண்மனை வைத்தியர்களும் ஜோசியர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்குப் பார்த்த உடனேயே தெரிந்து விட்டது. வைட்டமின் டி சத்துக் குறைபாட்டினால் வந்துள்ள தோல் நோய். அதற்கு ஒரே ஒரு மருந்து தான் இருக்கிறது. சூரிய ஒளியில் குளித்தால் எல்லாம் சரியாகி விடும். ஆனால் இதை மண்டு ராஜாவிடம் சொன்னால் தலை போய்விடும். எனவே எல்லோரும் சேர்ந்து ஒரே குரலில்,

” மன்னா.. இந்த நோய் கோடியில் ஒருவருக்கு வரக்கூடிய நோய்.. எங்களுக்கு ஒரு வாரகாலம் அவகாசம் கொடுங்கள்..”

என்று கூவினர். அதைக்கேட்ட உடனே ராஜாவுக்குப் பெருமை தாங்க முடியவில்லை. கோடியில் ஒருவரல்லவா அவர்.

“ம்ம்சரி..”

என்று உறுமினார்.

ஒருவாரம் கழித்து வந்த வைத்தியர்கள் தேங்காய் எண்ணெய்க்கு நிறமேற்றி கொண்டு வந்து ராஜா முன்னால் வைத்தனர்.

“ மண்டு ராஜா மண்டு ராஜா தினமும் காலையிலும் மாலையிலும் இந்த எண்ணெயை உடலில் தேய்த்துக் கொண்டு மூன்று சுற்றுகள் அரண்மனையைச் சுற்றி வர வேண்டும். இது அரண்மனை தோஷம் எனவே அரண்மனையைச் சுற்றினால் தான் மருந்து வேலை செய்யும் “

என்று கூவினர். “ சரி அப்படியே ஆகட்டும்..” என்று ராஜா உறுமினார். மறுநாள் காலையில் மண்டுராஜாவும் அடிமண்டு மந்திரியும் எழுந்து உடல் முழுவதும் எண்ணெயைத் தேய்த்துக் கொண்டு அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். அப்போது தான் சூரியனும் அடிவானிலிருந்து வெளியே வந்தான். சூரியஒளி அன்றைக்குத் தான் மண்டுராஜாவின் உடலிலும் அடிமண்டு மந்திரியின் உடலிலும் பட்டது. சூரியனின் வெளிச்சத்தையும் அதன் சூட்டையும் மண்டுராஜாவால் பொறுக்க முடியவில்லை. உடனே அவர்,

“ அடிமண்டு மந்திரி.. அடிமண்டு மந்திரி.. யார் இந்த விளக்கை அங்கே மாட்டியது.. உடனே அதை அணைக்கச் சொல்லும்..”

என்று உறுமினார். அடிமண்டு மந்திரியும் காவலாட்களை அழைத்து,

“ யாரங்கே.. உடனே அந்த விளக்கை அணையுங்கள்.. ராஜாவுக்கு சூடு தாங்க முடியவில்லை….”

என்று கத்தினார். உடனே காவலாட்கள் சூரியனை அணைத்துவிடுவதற்காக துணி, போர்வை, பஞ்சு, தண்ணீர் என்று சகல பொருட்களுடன் போனார்கள். பகல் முழுவதும் நடந்தனர். சூரியனும் தூரமாய் போய்க் கொண்டிருந்தான். மாலையானதும் மறையத் தொடங்கினான். தங்களைப்பார்த்து பயந்துதான் சூரிய விளக்கை அணைத்து விட்டார்கள் என்று மகிழ்ச்சியுடன் கத்திக் கொண்டு வந்து மண்டுராஜாவிடம் சொன்னார்கள். மண்டு ராஜாவுக்கும் மகிழ்ச்சி. எல்லோருக்கும் பரிசு கொடுக்கச்சொன்னார். ஆனால் மறுநாள் காலையில் மறுபடியும் சூரியன் வந்து விட்டான். மண்டுராஜா, அடிமண்டு மந்திரி தலைமையில் மறுபடியும் விளக்கை அணைக்க எல்லோரும் ஓடினர். மறுபடியும் மாலையானதும் சூரியன் மறைந்து விட வெறுங்கையுடன் திரும்பி வந்தனர்.

மண்டு ராஜாவும் அடிமண்டு மந்திரியும் நாடெங்கும் முரசு முழங்கி செய்தி சொல்லச் சொன்னார்கள்.

“ இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் காலையில் தோன்றி மாலையில் தலைமறைவாகி விடும் சூரியனைத் தேடப்படும் குற்றவாளியாக மண்டியா தேசம் அறிவிக்கிறது. சூரியனைப் பிடித்துக் கொண்டு வருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்….”

நாடே எல்லாவேலைகளையும் விட்டு விட்டு சூரியனைப் பிடிக்க காலையில் புறப்பட்டுப் போவதும் மாலையில் திரும்புவதுமாக இருந்தார்கள். இப்போது மண்டுராஜாவுக்கோ, அடிமண்டு மந்திரிக்கோ மண்டியா தேச மக்களுக்கோ எந்தத் தோல் நோயும் இல்லை. எல்லாம் குணமாகிவிட்டது. ஆனால் மண்டு ராஜாவும், அடிமண்டு மந்திரியும் சர்வதேச நாடுகளுக்கும் சூரியனைப் பிடித்துத் தரசொல்லி ஓலை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் நாட்டுக்கும் ஓலை வந்திருக்கிறதா கேட்டுப்பாருங்கள்.!

நன்றி – தமிழ் இந்துfat-king-cartoon-fantasy-character-illustration-funny-fairytale-36067727

Saturday 30 August 2014

குழந்தைகளின் அற்புத உலகில்

kuzhanthaikalin arputha ulagil உதயசங்கர்

நம் நாட்டில் பூமியெங்கும் கதைகள் இடைவெளியின்றி முளைத்துக் கிடக்கின்றன.

குழந்தைகள் பிறந்து பாடுகின்ற தாலாட்டில் உறவு முறைகளை குழந்தைக்கு அறிமுகப்படுத்துவதும்,( மாமா அடிச்சாரோ மல்லிகைப்பூ செண்டாலே, அத்தை அடிச்சாரோ அல்லிப்பூ செண்டாலே, ) குழந்தைகள் விளையாடும் போது வரலாற்று நிகழ்வுகளைக் கதைப் பாடலாகப் பாடுவதும் ( ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூ பூத்தது… இம்புட்டு பணம் தாரேன் விடுடா துலுக்கா.. விடமாட்டேன் மலுக்கா..) இப்படி கதைகளோடு பிறந்து கதைகளோடு வளர்ந்து வருகிறோம். ஆனால் இன்று குழந்தைகள் எப்படியிருக்கிறார்கள்? ஏன் கதைகள் குழந்தைகள் உளவியலில் ஒரு தீர்மானகரமான முக்கிய பாத்திரம் வகிக்கிறது என்று நாம் நினைக்கிறோம். நம்முடைய குழந்தைகளிடம் நாம் கதைகளைச் சொல்லியிருக்கிறோமா? நம் பள்ளிக்கூடங்களில் கதைகளைச் சொல்வதற்கான ஏதாவது ஏற்பாடு இருக்கிறதா?

வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டி வந்ததிலிருந்து குடும்ப உறுப்பினர்களே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை என்றான பிறகு குழந்தைகளிடம் மட்டும் பேசுவதற்கு நேரம் கிடைத்து விடவா போகிறது? அப்படியே பேசினாலும் பாடம், பரீட்சை, மதிப்பெண், ரேங்க், இவைகளைத் தவிர வேறு விசயங்கள் பேச முடிகிறதா? நிதானமாக பொறுமையாக, குழந்தைகளிடம் அவர்கள் பார்க்கிற இந்த உலகத்தைப் பற்றி, பள்ளிக்கூடத்தைப் பற்றி, அவன்/ அவளுடைய நண்பர்கள் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டறிந்திருக்கிறோமா? குழந்தைகளின் மன அழுத்தம் பற்றி நாம் என்றாவது கவலைப்பட்டிருக்கிறோமா? நம்முடைய குழந்தைகளை தொலைக்காட்சிப்பெட்டி, சினிமா, ரஜினி, விஜய், அஜித், என்று யார் யாரோ வளர்க்க அநுமதிக்கிறோமே, நாம் என்றாவது நம்முடைய குழந்தையை நாம் தான் வளர்க்கவேண்டும் என்று நினைத்திருக்கிறோமா? அப்படி நினைத்திருந்தால் நாம் நம்முடைய குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லியிருக்கவேண்டும். சொல்லியிருக்கிறோமா?

வெளியீடு- என்.சி.பி.ஹெச்.

விலை.ரூ.90