Monday 25 December 2017

காகம் கொண்ட தாகம்

காகம் கொண்ட தாகம்

உதயசங்கர்
ஒரு ஊரில் ஒரு ஆலமரம் இருந்தது. அந்த ஆலமரத்தில் இரண்டு காகங்கள் இருந்தன. ஒரு காகத்தின் பெயர் ஒல்லிக்குச்சி. இன்னொரு காகத்தின் பெயர் குண்டுப்பாச்சா. அப்போது கோடைகாலம். அதனால் வெயில் அதிகமாக இருந்தது. காகங்களுக்குத் தாகம் எடுத்தது. எங்கும் தண்ணீர் இல்லை. காகங்களுக்குத் தொண்டை வறண்டு போய் விட்டது. மூன்று நாட்களாக ஒரு சொட்டுத்தண்ணீர் குடிக்கவில்லை. காகங்களால் பேசக்கூட முடியவில்லை.
ஒல்லிக்குச்சி காகம் தன்னுடைய நண்பனைச் சைகையால் அழைத்தது. அருகில் மெல்ல தத்தித் தத்தி நடந்து வந்தது குண்டுப்பாச்சா காகம். அதன் காதில்
“ கா..கா..கா..நாம் இங்கிருந்து போய்விடுவோம். இங்கே தண்ணீர் கிடைக்காது. வேறு இடத்தில் தண்ணீர் கிடைக்கலாம்.. வா.பறந்து போகலாம் கா கா கா.”
என்று சொல்லியது. குண்டுப்பாச்சா காகம் ஒரு சோம்பேறி. அது உடனே,
“ காகாகா காகாகா… கடவுள் கைவிட மாட்டார்…எப்படியும் மழை பெய்யும்… தண்ணீர் கிடைக்கும்.. ஏன் வீணாக அலைய வேண்டும்? பேசாமல் இங்கேயே இருப்போம்…கா  கா ”
என்று ஒல்லிக்குச்சிக்காகத்திடம் கத்தியது. ஒல்லிக்குச்சிக்காகம் மறுபடியும் குண்டுப்பாச்சா காகத்தை அழைத்தது. குண்டுப்பாச்சா காகம் அசையவில்லை. கண்ணை மூடி உறங்கியது.
ஒல்லிக்குச்சி காகம் சிறகுகளை விரித்து அந்த ஆலமரத்தை விட்டுப் பறந்தது. வெகுதூரம் பறந்தது. எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று பரிதவித்தது. செடி கொடிகள் காய்ந்து கருகிப் போய் இருந்தன. தண்ணீர் இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை.
ஒல்லிக்குச்சி காகத்துக்குச் சிறகுகள் வலித்தன. பறக்க முடியாமல் கீழே விழுந்து விடுவோமோ என்று பயந்தது. அப்போது தூரத்தில் ஒரு குடிசை வீடு தெரிந்தது. அந்த வீட்டின் முற்றத்தில் ஒரு சிறுமி ஒரு தட்டில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள். அந்தத் தண்ணீரை எடுத்து வர அவள் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து போய் வந்தாள். அவள் தட்டில் தண்ணீரை ஊற்றியதும் அவளைச் சுற்றி சிட்டுக்குருவிகள், தவிட்டுக்குருவிகள், மைனாக்கள், காகங்கள், புறாக்கள், சின்னஞ்சிறு வட்டம் போட்டு பறந்து கொண்டிருந்தன.
அவள் தண்ணீரை ஊற்றியதும் எல்லோரும் அந்தத் தட்டைச் சுற்றி நின்று தண்ணீர் குடித்தன. ஒல்லிக்குச்சி காகம் அந்த முற்றத்தில் இறங்கியது. மெல்ல நடந்து தண்ணீர் இருந்த தட்டிலிருந்து தண்ணீரை சளப் சளப் என்று குடித்தது. தண்ணீரைக் குடித்தபிறகு தான் அதற்கு உயிர் வந்தமாதிரி இருந்தது. அந்தச் சிறுமியைப் பார்த்து
“ கா…கா…க்கா.. மிக்க நன்றி.. மிக்க நன்றி..”
என்று கத்தியது. அந்தச்சிறுமி ஒல்லிக்குச்சி காகத்தைப் பார்த்துச் சிரித்தாள்.
ஒல்லிக்குச்சி காகம் மீண்டும் தட்டில் இருந்து தண்ணீரை உறிஞ்சி வாயில் வைத்துக் கொண்டது. தாகத்தில் தவித்துக் கொண்டிருக்கும் தன்னுடைய நண்பன் குண்டுப்பாச்சா இருக்கும் ஆலமரத்தை நோக்கிப் பறந்தது. அப்போது ஒல்லிக்குச்சி காகம் நினைத்தது.
“ முயற்சி தான் கடவுள் “
நன்றி - வண்ணக்கதிர்



Wednesday 20 December 2017

ஒற்றுமையே பலம்

ஒற்றுமையே பலம்

உதயசங்கர்

ஒரு ஊரில் ஒரு சிறிய காடு இருந்தது. அந்தக்காட்டில் அணில், ஓணான், மரவட்டை, சில்வண்டு, கருவண்டு, தேனீக்கள், குளவிகள், விட்டில்கள், கட்டெறும்பு, சிற்றெறும்பு, கடுத்தவாலி எறும்பு, கருப்பு எறும்பு, என்று எல்லாவிதமான பூச்சி வகைகளும் இருந்தன.
காட்டின் நடுவில் ஒரு கட்டெறும்புக்கூட்டம் புற்று கட்டி அதில் குடியிருந்தன.
ஒரு நாள் காலை புற்றின் வாசலில் ராட்சசன் போல ஒரு ஓணான் உட்கார்ந்திருந்தது. அதன் முதுகில் ஊசியான செதில்கள் இருந்தன. உடல் முழுவதும் கவசம் அணிந்தது போல தோல் சொரசொரப்பாக இருந்தது. அதன் முட்டைக்கண்கள் இரண்டு பக்கமும் தனித்தனியாக சுழன்றன. தலையை மட்டும் ஆட்டிக் கொண்டே இருந்தது.
காலையில் உணவு தேடுவதற்கு வரிசையாக வேலைக்காரக் கட்டெறும்புகள் புறப்பட்டன. புற்றின் வாசலுக்கு வெளியே வந்தது தான் தெரியும். ப்சக் என்று எதோ பசை போல ஒட்டி இழுத்தது. அடுத்த நொடியில் ஓணாண் வயிற்றுக்குள் போய் விழுந்தார்கள் கட்டெறும்புகள்.
பதறி அடித்து புற்றுக்குள் வந்த வேலைக்காரக்கட்டெறும்புகள் ராணியிடம் சென்று முறையிட்டன. கட்டெறும்பு ராணி மெதுவாக வாசல் அருகே பாதுகாப்பாக நின்று ஓணாணைப் பார்த்தாள். அது தன் வாயிலிருந்து நீட்டி இழுக்கும் நாக்கையும் பார்த்தாள். அதன் உருவத்தைப் பார்த்து அவளுக்கே பயம் வந்தது.
இரண்டு நாட்கள் கட்டெறும்புகள் வெளியே போகவில்லை.
மறுநாள் காலை மறுபடியும் உணவு தேடி புற்றின் வாசலுக்கு வந்தால் அங்கே ஓணான் நின்று நாக்கை சுழட்டிக் கொண்டிருந்தது. அன்றும் ஒரு நூறு கட்டெறும்புகள் ஓணான் வயிற்றில் போய் விழுந்தன. புற்றை விட்டு வெளியே வரவே பயமாக இருந்தது.
இப்படியே இதை விட்டால் ஒரு கட்டெறும்பு கூட மிஞ்சாது என்று கட்டெறும்பு ராணி நினைத்தாள்.
அன்று இரவு அனைவரையும் அழைத்து ஆலோசனை நடத்தினாள். இறுதியில் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தார்கள்.
அந்த முடிவு…………………
மறுநாள் காலை கிழக்கு திசையில் இருந்து சூரியன் உதித்தான். வெளிச்சம் வந்த உடனேயே புற்றின் வாசலுக்கு ஓணான் வந்து உட்கார்ந்து கொண்டது. எந்த சத்தமும் இல்லை. வாசலில் ஒரு கண்ணும் வெளியில் ஒரு கண்ணுமாய் நாக்கைச் சப்புக்கொட்டிக் கொண்டிருந்தது ஓணான்.
திடீரென சரசரவென்று சத்தம். புற்றிலிருந்த அத்தனை கட்டெறும்புகளும் வாசல் வழியே வெளியே வந்தன. அவ்வளவு கட்டெறும்புகளைப் பார்த்ததும் ஓணான் திகைத்து நின்று விட்டது.
முன்னால் கட்டெறும்பு ராணி வந்தாள். பெரிய படை போல கட்டெறும்புகள் ஓணான் மீது ஏறிக் கடித்தன. ஓணானின் கண், மூக்கு, வாய், நாக்கு, கைகள், கால்கள், வால், செதில்கள், என்று உடம்பின் அத்தனை இடங்களிலும் கடித்தன.
தங்களுடைய ரம்பம் போன்ற பற்களால் வலிமையாகக் கடித்தன. ஓணானால் ஓடக்கூட முடியவில்லை.
அங்கேயே ஓணான் இறந்து விட்டது.
கட்டெறும்பு ராணி அனைவரிடமும் நம் ஒற்றுமையே நம் வெற்றி என்று முழங்கியது. கட்டெறும்புகளுக்கு அது ஏற்கனவே தெரிந்து விட்டது இல்லையா?
நன்றி - வண்ணக்கதிர்




Wednesday 13 December 2017

எறும்பும் ரோஜாவும்

எறும்பும் ரோஜாவும்

உதயசங்கர்
ஒரு ஊரில் ஒரு பூந்தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் மல்லிகை, முல்லை, பிச்சி, அரளி, ரோஜா, செம்பருத்தி, சாமந்தி, கனகாம்பரம், போன்ற பூச்செடிகள் இருந்தன.
வசந்தகாலம் வந்து விட்டது.
தோட்டத்தில் பூக்கள் பூத்துக்குலுங்கின.
பூக்களின் மணம் தேனீக்கள், தேன் சிட்டுகள், ஈக்கள், எறும்புகள், வண்டுகள், வண்ணத்துப்பூச்சிகள், என்று எல்லோரையும் அழைத்தது. அந்தத்தோட்டத்தில் ஒரு மூலையில் மண்ணிற்குக் கீழே சிற்றெறும்புக்கூட்டம் வீடு கட்டிக் குடியிருந்தது. அந்த எறும்புகள் சுறுசுறுப்பானவை. ஒரு விநாடி கூட சோம்பலாய் இருப்பதில்லை. எப்போதும் ஒற்றுமையாய் இருந்தன. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து அன்புடன் வாழ்ந்து வந்தன.
அந்தக்கூட்டத்தில் ஒரு சுட்டி எறும்பு இருந்தது. அந்த எறும்பு யாருடனும் சேராது. தனியாகப் போகும் தனியாக வரும். யாராவது உதவி கேட்டால் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய் விடும்.
ஒரு நாள் காலையில் சுட்டி எறும்பு தூக்கம் கலைந்து எழுந்தது. அந்தச் சுட்டி எறும்புக்கு சரியான பசி. உணவைத்தேடி அலைந்தது. ஒரு ரோஜாச்செடியின் உச்சியில் ஒரே ஒரு ரோஜா பூத்திருந்தது. அந்த ரோஜாவின் வாசனை மூக்கைத் துளைத்தது. சுட்டி எறும்பு எப்படியாவது அந்த ரோஜா இதழ்களில் உள்ள தேனைக் குடித்து விட வேண்டும் என்று நினைத்தது.
  ரோஜாச்செடியில் ஏற வேண்டும். என்ன செய்வது? முட்கள் குத்தாமல் எப்படி ஏறுவது என்று யோசித்தது. அந்த ரோஜாச்செடியைச் சுற்றிச் சுற்றி வந்தது.
அப்போது காற்று வீசியது. அந்தக் காற்றில் ரோஜாச்செடியின் மீது ஒரு சிறுகுச்சி பறந்து வந்து சாய்ந்து நின்றது. சுட்டி எறும்புக்கு மகிழ்ச்சி. அந்த குச்சியின் மீது ஏறி நேரே ரோஜாச்செடியின் உச்சிக்குச் சென்று விட்டது.
மேலே சென்றதும் வேறு யாரும் அந்தக்குச்சி வழியாக வந்து விடக்கூடாது என்று சுட்டி எறும்பு நினைத்தது.
உடனே சுட்டி எறும்பு அந்தக்குச்சியைக் கீழே தள்ளிவிட்டது.
தனியாக அந்த ரோஜாப்பூவின் உள்ளே இருந்த தேனை வயிறு முட்டக்குடித்தது. வயிறு நிறைந்ததும் சுட்டி எறும்புக்கு உறக்கம் வந்தது. அப்படியே குறட்டை விட்டுத் தூங்கி விட்டது.
கண்விழித்துப்பார்த்தால் சுற்றிலும் ஒரே இருட்டு. வானத்தில் நட்சத்திரங்கள் மட்டும் மின்னிக்கொண்டிருந்தன. இருட்டைக் கண்டால் எப்போதும் சுட்டி எறும்புக்குப் பயம். கீழே இறங்கலாம் இருட்டில் எப்படி இறங்க முடியும்? குச்சியும் இல்லை. சுட்டி எறும்புக்கு அழுகை வந்தது.
“ ஞீம்ம் ஞீம்ம்..நான் வீட்டுக்குப்போணும்… நான் வீட்டுக்குப் போணும்..” என்று அழுது கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று ரோஜாச்செடியின் மீது ஒரு குச்சி தெரிந்தது. அதைப்பார்த்த சுட்டி எறும்பு யோசிக்கவே இல்லை. வேகம் வேகமாக அந்தக்குச்சி வழியாகக் கீழே இறங்கியது.
அதனுடைய வீட்டை நோக்கி வேகமாக ஓடியது. பின்னால் ஏதோ சர சரவென்ற சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தது சுட்டி எறும்பு.
சுட்டி எறும்பு இறங்கி வந்த குச்சியும் அதன் பின்னால் வந்து கொண்டிருந்தது.
திகைத்து நின்ற சுட்டி எறும்பைச் சுற்றி சிற்றெறும்புக்கூட்டம்.
எல்லோரும் சுட்டி எறும்பைத் தூக்கித் தலையில் வைத்து கொண்டாடினார்கள்.
கண்டு பிடித்தோம் சுட்டியைக் கண்டு பிடித்தோம்
கண்டு பிடித்தோம் சுட்டியைக் கண்டு பிடித்தோம்
என்று பாட்டுப்பாடின. சுட்டி எறும்பு என்ன செய்து கொண்டிருந்தது தெரியுமா?
சுட்டி எறும்பு எல்லோருக்கும் தனித்தனியாக நன்றி சொல்லிக் கொண்டே இருந்தது.
நன்றி - மாயாபஜார்
( 5+ குழந்தைகளுக்கான கதை )



Wednesday 6 December 2017

அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது

எஸ்.ஆர். எம். குழுமத்தின் தமிழ்ப்பேராயம் வழங்கும் அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது என். சி. பி.ஹெச். வெளியீடான பச்சை நிழல் குழந்தை இலக்கிய நூலுக்கு வழங்கப்படுகிறது.

Monday 4 December 2017

குபீர்ராஜாவின் திட்டம்

குபீர்ராஜாவின் திட்டம்

உதயசங்கர்
குப்பையூர் நாட்டு ராஜா படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தார். கண்களைக் கசக்கிவிட்டுத் திறந்தார். ஒரு பெரிய கொட்டாவி விட்டார். அந்த கொட்டாவி வழியே இரவில் அவர் தின்று முடித்த ஸ்விட்சர்லாந்து காளைக்கன்று வெளியே குதித்தது. அதோடு சேர்த்துத் தின்ற இங்கிலாந்து புறாக்களும், பின்லாந்து குறும்பை ஆடுகளும் வெளியேறி விடக்கூடாதே என்று நினைத்த குபீர்ராஜா படக்கென்று வாயை மூடிக் கொண்டார். கண்களைத் திறந்ததும் அவர் பார்த்தது ஒரு சிலந்தி. அவர் படுத்து உறங்கிய சப்பரமஞ்சத்திலிருந்து எதிரே இருந்த இரவு விளக்குக்கு வலை பின்னிக் கொண்டிருந்தது. சற்று நேரம் அதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். அடடா.. என்ன அழகாய் வலை பின்னுகிறது. நாமும் அப்படி வலைபின்னி அந்தரத்தில் தொங்கினால் எப்படி இருக்கும்? அப்போது ஒரு ஏடிஸ் கொசு அவருடைய பரந்த முதுகில் உட்கார்ந்து கடித்தது. குபீர்ராஜா கைகளை அங்கும் இங்கும் வீசினார். முதுகைத் தொடக்கூட முடியவில்லை. கைகளை வீசியதால் சோர்ந்து போய் வலியைப் பொறுத்துக் கொண்டு அப்படியே இருந்தார்.
அவருடைய உடம்பிலிருந்து பி பாசிட்டிவ் ரத்தத்தை வயிறு முட்டக்குடித்த ஏடிஸ் கொசு அப்படியே கிறங்கிப்போய் மேலே பறந்தது. அப்படியே மேலே பறந்து பறந்து…. டக்.. சிலந்தி வலையில் போய் மாட்டிக்கொண்டது. அதைப்பார்த்த குபீர்ராஜாவுக்கு மகிழ்ச்சி. கைகளைத் தட்டி கெக்க்கெக்க்கே… என்று சிரித்தார். அவருடைய கைதட்டல் சத்தம் கேட்டு வேலைக்காரர்கள் ஓடிவந்தார்கள். குபீர்ராஜா கைகளைத் தட்டிச் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். அவர்களுக்கு ராஜா ஏன் சிரிக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் ராஜா சிரிக்கிறாரே. உடனே அவர்களும் கைகளைத் தட்டிச் சிரித்தனர். சிரிப்பாணி முடிந்து கட்டிலிலிருந்து கீழே இறங்கினார் ராஜா. தரையில் நெறுநெறுவென்று சத்தம். சன்னல் வழியே உள்ளே வந்து விழுந்த இலைகள் பழுத்துச் சருகாகிக் கிடந்தன. படுத்துப்போர்த்திய போர்வை கசங்கிக் கிடந்தது. அவருடைய படுக்கையில் ஒரே புழுதிக்காடு. வேலைக்காரர்கள் சுத்தம் செய்யப்போனால் குபீர்ராஜாவுக்குக் கோபம் வந்து விடும். அவருக்கு சுத்தமாக இருப்பது பிடிக்காது. யாரும் அவருடைய அறைக்குள் நுழையக்கூடாது என்று உத்தரவே போட்டுவிட்டார்.
அன்று அரண்மனைக்கு வெளியே ஒரே சத்தக்காடு. குப்பையூர் நாட்டின் எல்லாப்பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்களுடைய குறைகளைச் சொல்வதற்காக வந்திருந்தார்கள். விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய முடியவில்லை. மழைவரி! மண்வரி! விதை வரி! உரவரி! பூச்சிக்கொல்லி வரி! செடி வரி, பூ வரி, காய் வரி, என்று விதம் விதமாக வரிகள்! விவசாயிகளால் அவ்வளவு வரிகளைக் கொடுக்க முடியவில்லை. இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அரசாங்க வேலைகளில் எல்லாம் வெளிநாட்டினருக்கு வேலை கொடுக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு கொடுக்கும் சம்பளம் பத்தவில்லை. ராஜாவே கடன் கொடுத்தார். பின்னர் கந்து வட்டி வசூலித்தார். கல்வி சரியில்லை என்று மாணவர்களும் ஆசிரியர்களும் வந்திருந்தார்கள்.  பள்ளி, கல்லூரிகளை அந்த நாட்டு வியாபாரிகளிடம் விற்று விட்டார். வியாபாரிகள் கல்வியைக் கூவிக் கூவி விற்றார்கள். பணம் இருப்பவர்கள் மட்டுமே படிக்க முடியும். எல்லோரும் குரல் கொடுத்தனர். அரண்மனையின் சுவர்கள் அதிர்ந்தன. ராஜாவால் அரண்மனையில் இருக்க முடியவில்லை.
குபீர்ராஜா உடனே மந்திரிசபையைக் கூட்டினார்.
” என்னய்யா இப்படி தினமும் கூப்பாடா இருக்கு..”
“ அரசே! மக்கள் அப்படித்தான் எதையாச்சும் கேட்டுக் கொண்டேயிருப்பார்கள்…. நாம் தான் சமாளிக்க வேண்டும்…”
“ என்ன செய்யலாம் என்று ராஜகுருவிடம் கேட்டீர்களா? “
“ இல்லை அரசே!..”
“ உடனே அந்த ஐ ஃபோனை எடுத்து அவரை அழையுங்கள்..”
மந்திரிகள் ஐ ஃபோனில் ராஜகுருவிடம் பேசினார்கள். பின்பு வாய் எல்லாம் பல்லாக இளித்துக்கொண்டே குபீர்ராஜாவிடம் வந்தார்கள்.
“ நம்முடைய நாட்டிலுள்ள பிரச்னைகளுக்குக் காரணம் குப்பை, தூசு, புழுதி.. “
குபீர்ராஜாவுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அப்போது மதிமந்திரி அரசரிடம்,
“ நாட்டில் குப்பைகள் அதிகமாகி விட்டதால் தான் விவசாயம் நடக்கவில்லை, நாட்டில் குப்பைகள் அதிகமாகி விட்டதால் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.. நாட்டில் குப்பைகள் அதிகமாகி விட்டதால் சம்பளம் கொடுக்க முடியவில்லை…”
என்று பாட்டு படித்தார். அதைக் கேட்ட குபீர்ராஜா ஆச்சரியத்துடன் கைகளால் தன்னுடைய பெரிய முகத்தைத் தாங்கிப் பிடித்து,
“ அப்படியா மந்திரியாரே..”
“ அப்படித்தான் சொல்ல வேண்டும் அரசே..”
குபீர்ராஜாவுக்குப் புரிந்து விட்டது. அவ்வளவு தான். மறுநாள் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள், எல்லாவற்றிலும்
 ” குப்பையூரை மாற்றுவோம். சுத்தவூர் ஆக்குவோம் ”
என்ற தலைப்பு செய்திகளுடன் குபீர்ராஜாவின் அறிக்கை வெளிவந்தது. நாட்டிலுள்ள எல்லாத்தெருக்களிலும் தண்டோரா போடப்பட்டது.
“ இனி யாரும் குப்பையைத் தெருவில் கொட்டக்கூடாது. எல்லோரும் தினமும் அரண்மணையில் உள்ள சேமிப்புக்கிடங்கில் கொண்டு வந்து கொட்ட வேண்டும்.”
குபீர்ராஜாவும் அரண்மனைக்கு முன்னால் குப்பை பொறுக்குகிற மாதிரி சில நிமிடங்கள் நடித்தார். பத்திரிகைகளும் தொலைக்காட்சி சேனல்களும் போட்டி போட்டுக் கொண்டு அதை ஒளிபரப்பினார்கள். மந்திரிகள் எல்லோரும் எல்லா நகரங்களிலும் போய் குப்பை பொறுக்கிய மாதிரியே நடித்தார்கள். ஆனால் மக்கள் உண்மையாகவே குப்பைகளை அள்ளினார்கள். அரண்மனை சேமிப்புக்கிடங்கில் கொண்டுபோய் கொட்டினார்கள். சில நாட்களிலே குப்பையூர் நாட்டில் குப்பைகள் இல்லை. எல்லாக்குப்பைகளும் அரண்மனையில் தான் குமிந்து கிடந்தது. மக்கள் மறுபடியும் குபீர்ராஜாவின் அரண்மனைக்கு வந்து தங்களது தேவைகளைச் சொல்லிக் கூப்பாடு போட்டார்கள்.
உடனே குபீர்ராஜா ஆணையிட்டார்.
தினமும் அரண்மனைக்குப்பைக்கிடங்கிலிருந்து குப்பைகளை அள்ளிக் கொண்டு போய் எல்லா ஊர்களிலும் போட வேண்டும். அதை மக்கள் அள்ளிக்கொண்டு வந்து அரண்மனையில் சேர்க்க வேண்டும்.
மக்களால் வேறு எந்த வேலையும் செய்யமுடியவில்லை. நாள் முழுவதும் குப்பைகளை அள்ளிக்கொண்டே இருக்கும்படி ஆயிற்று. மக்களுக்குக் கோபம் வந்தது. குபீர்ராஜாவிடம் போய் முறையிட்டனர். குபீர்ராஜா அவர்களை விரட்டி அடித்தார்.
ஊருக்கு வெளியே இருந்த குப்பைதேவதையிடம் சென்று முறையிட்டார்கள். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த குப்பை தேவதைக்குக் கோபம் வந்தது. குப்பைதேவதை ஒரு மந்திரம் சொன்னாள்.
என்ன ஆச்சு தெரியுமா?
குப்பையூர் நாட்டில் உள்ள அத்தனை நகரங்களில் இருந்தும் கிராமங்களில் இருந்தும் குப்பைகள் பறந்து வந்து குப்பைராஜாவின் அரண்மனையில் விழுந்தன. குப்பைகள் மலைபோல் குமிந்து அரண்மனையை மூடி விட்டன. அந்தக்குப்பைஅரண்மனைக்குள்ளே குபீர்ராஜாவும் மந்திரிகளும் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அதற்குப்பிறகு எழுந்திரிக்கவே இல்லை.
குப்பையூர் நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் எல்லோரும் கூடி ஒரு புதிய ராஜாவைத் தேர்ந்தெடுக்க ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். குப்பைதேவதை மக்களின் மகிழ்ச்சியைப் பார்த்துச் சிரித்தாள்.



Saturday 11 November 2017

பொன்மாலைப்பொழுது- கு.அழகிரிசாமியும் நானும்




அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொன்மாலைப்பொழுது - நிகழ்ச்சியில்
29-10-17 அன்று கு.அழகிரிசாமியும் நானும் என்ற தலைப்பில் ஆற்றிய உரை





https://youtu.be/2c_FO0lr2ao

மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிக்கொண்டிருந்த பேனா இன்னும் மூடப்படவில்லை –

மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிக்கொண்டிருந்த பேனா இன்னும் மூடப்படவில்லை –

உதயசங்கர்
” காலத்தின் மனசாட்சி தான் நல்ல இலக்கியம். சமகாலத்துப்பிரச்னைகள், துயரங்கள், சீரழிவுகள், சிதைவுகள், மக்கள் வாழ்வின்னல்கள், பற்றியெல்லாம் அக்கறைப்படாமல் உன்னத இலக்கியம் பற்றியெல்லாம் பேனா ஜம்பம் அடிக்கிறவர்களை வெறுக்கக்கற்றுக் கொள்ள வேண்டும் மக்களைப்பற்றிக் கவலைப்படுகிற கலை இலக்கியம் தான் அசலான மக்கள் இலக்கியமாக இருக்க முடியும். “  - பூமாயன் சிறுகதைத்தொகுப்பு முன்னுரையில் மேலாண்மை பொன்னுச்சாமி.
1972- நவம்பர் மாதச்செம்மலரில் பரிசு என்ற சிறுகதையின் மூலம் தன் எழுத்துப்பயணத்தைத் துவக்கிய செ.பொன்னுச்சாமி தன்னுடைய இறுதி நாட்கள் வரை எழுதிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிற மேலாண்மை பொன்னுச்சாமி ராஜபாளையத்துக்கு அருகில் உள்ள மேலாண்மறை என்ற குக்கிராமத்திலிருந்து இலக்கியத்துக்குள் அடி எடுத்து வைத்தவர். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவருடைய பால்யகாலமும் இளமைக்காலமும் அவ்வளவு உவப்பானதல்ல. ஊர் ஊராக சைக்கிளில் சென்று புளி விற்றிருக்கிறார். கருப்பட்டி விற்றிருக்கிறார். கருவாடு விற்றிருக்கிறார்.
வாழ்க்கையோடு மல்லுக்கட்டிக்கொண்டு இடதுசாரித்தோழர்களுடைய தொடர்பினால் வாசிக்கவும் எழுதவும் தொடங்கியிருக்கிறார். அப்போது ஒன்றாக இருந்த ராமநாதபுரம் மாவட்டச்செயலாளராக செயலாற்றிய தோழர்.எஸ்.ஏ.பி. அவருக்கு ஆசானாக இருந்திருக்கிறார். மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் எழுதி வைத்திருந்த ஒரு குயர் நோட்டை வாசித்து அவரை உற்சாகப்படுத்தியிருக்கிறார். எஸ்.ஏ.பி. வாசித்ததில் இருந்து தேர்ந்தெடுத்து செம்மலருக்கு அனுப்பச்சொல்லி வழிகாட்டியிருக்கிறார். அப்படித்தான் மேலாண்மை பொன்னுச்சாமி என்கிற சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் உதித்தார்.
 பெருந்தமிழ் வாசகப்பரப்பிற்கு எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியின் பெயர் எளிய கிராமப்புற மக்களின் வாழ்க்கைப்பாடுகளை, பிரச்னைகளைத் தன்னுடைய சிறுகதைகளில், நாவல்களில் வெளிப்படுத்துகிற எழுத்தாளுமையாகவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.70-களில் தமிழ் இலக்கியத்தில் அதுவரை உயர்சாதியினர் மட்டுமே கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டம் முடிவுக்கு வரத்தொடங்கியிருந்தது. தமிழிலக்கியம் இதுவரை கண்டிராத புதிய திசைகளிலிருந்து புதிய குரல்கள் புதிய வாழ்க்கைப்பாடுகளைப் பேசத்தொடங்கியிருந்தது. குறிப்பாக நாகம்மாவை எழுதி வட்டார இலக்கியப்போக்கைத் துவக்கி வைத்த ஆர்.ஷண்முகசுந்தரம், வட்டார இலக்கியப்போக்கை ஆழமாக ஏர் பிடித்து உழுது பதமாக்கிய கி.ராஜநாராயணன், தொடர்ந்து பயிர்செய்து படைப்புகளை அறுவடை செய்த  பொன்னீலன், நாஞ்சில்நாடன், பூமணி, என்ற படைப்பாளிகளுக்குப் பின்னால் வறண்ட கரிசல் மண்ணிலிருந்து எளிய மக்களின் குரலாக ஒலித்த குரல் மேலாண்மை பொன்னுச்சாமியின் குரல்.
அதேபோல முற்போக்கு இலக்கியத்தில் தொமுசி, சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், விந்தன், கு.சி.பா. என்று படைப்பாளிகளின் வரிசையில் தன்னை முற்போக்கு எழுத்தாளன் என்ற பிரகடனத்தோடு இணைத்துக் கொண்டவர் மேலாண்மை பொன்னுச்சாமி. எழுதி எழுதியே தன்னுடைய எழுத்தைச் செதுக்கியவர். அவரைச்சுற்றி அவர் கண்ட மக்களின் வாழ்க்கை அவருக்குள் ஏற்படுத்திய நெருக்கடியே அவரை எழுதத்தூண்டியது. ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மக்களின் வாழ்க்கைப்பாடுகளிலிருந்து சற்றும் விலகாமல் தன்னுடைய கதைகளை எழுதியவர்.
மனிதவாழ்வின் அவலங்களை மட்டுமல்ல அவனுடைய உன்னதங்களையும் எழுதிப்பார்த்தவர் மேலாண்மை பொன்னுச்சாமி. உள்மனிதன் என்ற கதையில் காலை நேர டவுண்பஸ் நெருக்கடி, கோபம், தாபம், வசவுக்காடு, என்று பஸ்ஸே எரிச்சலுடன் நகர்ந்து கொண்டிருக்கும். திடீரென பிரசவவலி வந்த பெண்ணின் அவஸ்தையில் பஸ்ஸே தாயாக மாறி பணிவிடை செய்யும். அந்தப்பெண்ணை ஆஸ்பத்திரியில் சேர்த்தபிறகு மறுபடியும் பஸ் கசகசவென மாறிவிடும். மனிதன் அவசியம் நேரும்போது தன்னுடைய உன்னதத்தைக் காட்டுகிறான். அந்த உன்னததருணத்தை அவனே தாங்க முடியாமல் மறுபடியும் சாதாரணணாகி விடுகிறான். அதேபோல மயிலும் கிளியும் என்ற கதையில் கரிசக்காடுகளில் வெள்ளாமையை அழிச்சாட்டியம் பண்ணுகிற கிளிக்கழுதைகளையும், மயில்ச்சனியன்களையும் விரட்டுவதற்கு அங்கும் இங்கும் ஓடி அம்மா படுகிறபாட்டைப் பார்த்து பரிதவிக்கிற மகன் கிளிகளையும் மயில்களையும் கொல்வதற்காக மருந்து வாங்கி வைக்கிறான். தற்செயலாய் கேட்கிற அம்மாவின் உரையாடலில் பொங்கும் தாய்மையுணர்வு அந்தக்கிளிகளையும் மயில்களையும் கூட தன் பிள்ளைகளைப்போல நினைக்கிற பரிவு அவனிடம் மாற்றத்தை உருவாக்கி விடுகிறது.
. 1970-களில் துவங்கப்பட்ட செம்மலர் இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்த கே.எம்.முத்தையாவைத் தன்னுடைய ஞானத்தந்தையாக குறிப்பிடுவார் மேலாண்மை. கே.எம்.முத்தையாவின் ஊக்கமும் உற்சாகமும் அவரை நேரடி அரசியலில் இருந்து தீவிர எழுத்துப்பணிக்குத் திருப்பியது. ஒரு நேரத்தில் ஒரே செம்மலரில் மேலாண்மை பொன்னுச்சாமியின் இரண்டு கதைகள் கூட வந்திருக்கின்றன. முற்போக்கு சிறுகதைகள் என்றால் மேலாண்மை பொன்னுச்சாமியின் பெயர் முதலில் தோன்றுகிற அளவுக்குத் தன்னுடைய அயராத உழைப்பால் எழுத்துப்பணியைச் செய்தார்.
2.
 70-களில் கோவில்பட்டியில் இருந்த பால்வண்ணம், ஆர்.எஸ்.மணி, தேவப்ரகாஷ், போன்ற நண்பர்களிடம் ஒவ்வொரு மாதமும் செம்மலரில் வெளிவந்த அவருடைய கதைகளைப் பற்றிய கருத்துகளையும் விமரிசனங்களையும் கேட்பதற்காக ஊரிலிருந்து சைக்கிளை மிதித்து வருவாராம். அவர்களும் அவருக்கு டீ,வடை, வாங்கிக் கொடுத்து கடுமையான விமரிசனங்களை அவரிடம் சொல்வார்கள். எல்லாவற்றையும் கேட்டுக் கொள்வாராம். அவர்கள் சொன்னதையெல்லாம் கருத்தில் கொண்டு அடுத்த கதையை எழுதி செம்மலருக்கு அனுப்பி வைப்பார். அந்தக் கதை வந்ததும் மறுபடியும் கோவில்பட்டிக்கு வருவார். இப்படி அவர் விமரிசனங்களை விரும்பி வாங்கியிருக்கிறார். அதை அவருடைய அனைத்துத் தொகுப்புகளிலும் கூடப் பார்க்க முடியும். முன்னுரையின் முடிவில்
 “ உங்கள் பாராட்டுகள் என் பேனாவுக்கு இன்னும் மையூற்றும். நீங்கள் கண்டுணர்ந்து சொல்கிற குறைகளும் கூட என்னைச் செதுக்கி மேலும் கூர்மையாக்கும். இரண்டுமே இலக்கியத்துக்குச் சிறப்பு செய்யும். “
என்று எழுதியிருக்கிறார்.
 அவர்களுக்குப்பின்னால் நேரடியாக புதுமைப்பித்தனிலிருந்து வாசிப்பைத் துவங்கிய என்னைப் போன்றவர்களின் கருத்துக்களையும் விமரிசனங்களையும் கேட்டுக் கொள்வார்.
விமரிசனங்களைக் கண்டு அஞ்சி நடுங்குகிற – விமரிசனங்களைத் தவிர்க்க நினைக்கிற-எழுத்தாளர்கள் மத்தியில் விமரிசனங்களைத் தேடிப்போய் வாங்குகிற எழுத்தாளராக இருந்தார் மேலாண்மை பொன்னுச்சாமி. கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு சாகித்ய அகாடமி விருது பெறுகிற அளவிற்கான படைப்புகளை எழுதியிருக்கிற மேலாண்மையின் அர்ப்பணிப்பு எல்லோரும் பின்பற்றத்தக்கது. கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணனின் வழி தன்னை ஒரு கதை சொல்லியாக நிலை நிறுத்திக்கொண்டவர். யதார்த்தவாதம், விமரிசன யதார்த்த வாதம், சோசலிச யதார்த்தவாதம், என்ற இலக்கியக்கோட்பாடுகளில் உரத்து நின்று எழுதியவர்.
அவருடைய சிக்கல், சிடுக்குகள் இல்லாத எளிய முறையிலான கதை சொல்லல் தான் அவருடைய பாணி என்று சொல்லலாம். மத்தியதரவர்க்க எழுத்தாளர்களிடம் இருக்கும் ஒருவித எழுத்துப்பாசாங்கு அவரிடம் கிடையாது. நேரிடையாகக் கதை சொல்வார். தான் கண்ட கேட்ட கிராமத்து மனிதர்களைப் பற்றி, ( பூமாயன் ) ஆண் பெண் உறவுச்சிக்கல்களைப் பற்றி ( மன உடைப்பு, விளக்குமாறு ) கிராமங்களில் வாழும் விவசாயிகளின் பிரச்னைகளைப் பற்றி ( ஊர்ப்பண்பு)  அவருடைய கதைகளில் கையாண்ட விதமும், மனித உணர்வுகளின் பேதங்களை மட்டுமல்ல, உன்னதங்களையும், உணர்ச்சித்ததும்பல்களையும்,உரத்துச்சொன்ன மகத்தான படைப்பாளி மேலாண்மை பொன்னுச்சாமி. தன்னுடைய படைப்புகளில் கலை அமைதி, வடிவ நேர்த்தி, உள்ளடக்கப்பொருத்தம் என்று பெரிய அளவில் கவலைப்பட்டவரில்லை. உணர்ச்சி கொப்பளிக்கும் நிகழ்வுகள், விவாதங்கள், உரத்துப்பேசும் கரிசல் மனிதர்கள், என்று ஒரு கிராமத்தையே  தன்னுடைய படைப்புகளில் உலவவிட்டவர்.
கல்கி, பத்திரிகை நடத்திய சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பரந்த வாகசப்பரப்புக்குள் வந்த மேலாண்மை பொன்னுச்சாமி, ஆனந்த விகடனில் முத்திரைக்கதைகள் எழுதி பெரும் புகழ் பெற்றார். மானுடம் வெல்லும், சிபிகள், கூரை, உள்மனிதன், பூக்காத மாலை, பூச்சுமை, மானுடப்பிரவாகம், மனப்பூ, மின்சாரப்பூ, பூமாயன், போன்ற 20-க்கும் மேற்பட்ட சிறுகதை நூல்களையும், கோடுகள், தழும்பு, மரம், பாசத்தீ, போன்ற குறுநாவல் தொகுப்புகளையும், முற்றுகை, இனி, அச்சமே நரகம், ஊர்மண், போன்ற நாவல்களையும், சிறுகதைப்படைப்பின் உள்விவகாரம் என்ற கட்டுரை நூலையும் எழுதியுள்ளார் மேலாண்மை பொன்னுச்சாமி. தான் ஒரு இடது சாரி எழுத்தாளன் என்பதை எந்த ஒரு இடத்திலும் உரத்துப்பேசுகிறவர். எல்லோர் மீதும் மிகவும் உரிமையுடன் பழகுகிற, ஆலோசனை சொல்கிற, ஆலோசனை கேட்கிற எளிய மனிதர்.
1975- ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவர். தமுஎகச அமைப்பை வளர்ப்பதிலும் வழிகாட்டுவதிலும் பெரும் ஈடுபாடு காட்டியவர். தமுஎகச வின் தலைவராகவும், துணைப்பொதுச்செயலாளராகவும், துணைத்தலைவராகவும் பலமுறை தேர்வு செய்யபட்டவர். முற்போக்கு எழுத்தாளர் படை ஒன்றினை உருவாக்க கடுமையாக உழைத்தவர். எழுத்தும் இயக்கமும் என்று இடையறாது இயங்கியவர். சிறந்த படைப்புகளை மனம் திறந்து பாராட்டுவார். வெகுளித்தனமான அவருடைய உரையாடல் எல்லோரையும் மிக நெருக்கமாக்கிக் கொள்ளும். என்மீது தனிப்பட்ட அக்கறையும் அன்பும் கொண்ட மேலாண்மை பொன்னுச்சாமியிடம் ஒரு பழக்கம் உண்டு. எப்போதும் ஒரே நேரத்தில் இரண்டு டீ குடிப்பார். வெளிப்படையான வெள்ளந்தியான அவருடைய எளிய குணம் என்னை ஆச்சரியப்படுத்தும். இதோ டீக்கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருக்கிறேன். என்னருகில் இருந்த நண்பர் கேட்டார்,
”“ என்ன அதிசயமா அடுத்தடுத்து ரெண்டு டீ குடிக்கிறீங்க?..”
நான் மேலாண்மை பொன்னுச்சாமி என்ற மகத்தான படைப்பாளிக்கு, தமிழ் இலக்கியத்துக்கும் முற்போக்கு இலக்கியத்துக்கும் மகத்தான பங்களிப்பு செய்த எழுத்தாளுமைக்கு விடை கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
போய் வாருங்கள் எங்கள் அருமைத்தோழரே!
உங்கள் எழுத்துகளை நாங்கள் இப்பொழுதும் எப்பொழுதும் வாசித்து உங்களை நினைவு கூர்வோம்!
நன்றி - தீக்கதிர் இலக்கியச்சோலை




Thursday 28 September 2017

பேசும் தாடி

பேசும் தாடி

முதலில் இந்த அருமையான படைப்பை கொண்டுவந்தஎழுத்தாளர் உதயசங்கர் ,பதிப்பாளர் மணிகண்டன் மற்றும் ஓவியர் அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்
இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது சூர்யாவும் சுகானாவும் பத்து சித்திர குள்ளன்களும் பத்து சித்திர குள்ளிகளும் நம்மையும் அவர்களுடன் சேர்த்து பறக்க வைக்கின்றனர். தேனீக் கூட்டுக்குள்ளையும் , எறும்பின் வீட்டிற்கும் பட்டாம்பூச்சி முதுகில் உப்பு மூட்டையும் ஏற்றி சுற்றி காட்டுகின்றனர் என்றே சொல்ல வேண்டும். எனது மகளுக்கு கடந்த ஒரு வாரமாக கொஞ்சம் கொஞ்சமாக வாசித்துக் காட்டினேன். தினமும் சின்ன இடைவேளை அடுத்த நாள் என்ன நடக்கும் என்ற ஆர்வத்துடன் அவள் காத்திருப்பதை அழகாக ரசித்தேன். கடந்த இரண்டு மாதங்களாக அவளுக்கு கதை சொல்வதை விட புத்தகத்தை வாசித்துக் காட்டிக்கொண்டிருக்கிறேன். இந்தப் புத்தகத்திற்கு அவளுக்கு அதிகாமக விளக்கம் சொல்லவில்லை. அவளே வாசிக்கையில் புரிந்துக்கொண்டிருந்தாள். உதயசங்கர் அவர்களின் எளிமையான மொழி அதற்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம். அத்துடன் இந்தக் கதைகளம் வீட்டில் நடப்பதால் கதையை தனதாக்கிக் கொண்டாள். கதையின் முடிவில் தாத்தா-பாட்டி ஊருக்கும் செல்லும் போது இவள் இங்கு சோகமாகிவிட்டாள். "எனக்கு இந்தக் கதையே பிடிக்கல" என்ற அழவும் செய்துவிட்டாள். ஆனால் கதையுடன் முழுவதும் மூழ்கிவிட்டாள் என்பதே நிதர்சனம்.
கதையில் தாத்தா தாடியிலிருந்த அந்த பத்து சித்திர குள்ளனும் ஆச்சியின் சுருக்கு பையிலிருந்த சித்திர குள்ளியும் தற்பொழுது எங்கள் வீட்டில் தான் இருக்கிறார்கள். நீங்கள் யாராவது எங்க வீட்டிற்கு வந்தால் உங்கள் மீதும் வண்ண வண்ணப் பொடிகளை தூவி உங்களையும் எங்களுடன் சேர்த்து குட்டியாக மாற்றி வண்ணத்திப் பூச்சி முதுகில் ஏற்றிவிடுவார்கள்.

பிரபு ராஜேந்திரன்