Wednesday 20 December 2017

ஒற்றுமையே பலம்

ஒற்றுமையே பலம்

உதயசங்கர்

ஒரு ஊரில் ஒரு சிறிய காடு இருந்தது. அந்தக்காட்டில் அணில், ஓணான், மரவட்டை, சில்வண்டு, கருவண்டு, தேனீக்கள், குளவிகள், விட்டில்கள், கட்டெறும்பு, சிற்றெறும்பு, கடுத்தவாலி எறும்பு, கருப்பு எறும்பு, என்று எல்லாவிதமான பூச்சி வகைகளும் இருந்தன.
காட்டின் நடுவில் ஒரு கட்டெறும்புக்கூட்டம் புற்று கட்டி அதில் குடியிருந்தன.
ஒரு நாள் காலை புற்றின் வாசலில் ராட்சசன் போல ஒரு ஓணான் உட்கார்ந்திருந்தது. அதன் முதுகில் ஊசியான செதில்கள் இருந்தன. உடல் முழுவதும் கவசம் அணிந்தது போல தோல் சொரசொரப்பாக இருந்தது. அதன் முட்டைக்கண்கள் இரண்டு பக்கமும் தனித்தனியாக சுழன்றன. தலையை மட்டும் ஆட்டிக் கொண்டே இருந்தது.
காலையில் உணவு தேடுவதற்கு வரிசையாக வேலைக்காரக் கட்டெறும்புகள் புறப்பட்டன. புற்றின் வாசலுக்கு வெளியே வந்தது தான் தெரியும். ப்சக் என்று எதோ பசை போல ஒட்டி இழுத்தது. அடுத்த நொடியில் ஓணாண் வயிற்றுக்குள் போய் விழுந்தார்கள் கட்டெறும்புகள்.
பதறி அடித்து புற்றுக்குள் வந்த வேலைக்காரக்கட்டெறும்புகள் ராணியிடம் சென்று முறையிட்டன. கட்டெறும்பு ராணி மெதுவாக வாசல் அருகே பாதுகாப்பாக நின்று ஓணாணைப் பார்த்தாள். அது தன் வாயிலிருந்து நீட்டி இழுக்கும் நாக்கையும் பார்த்தாள். அதன் உருவத்தைப் பார்த்து அவளுக்கே பயம் வந்தது.
இரண்டு நாட்கள் கட்டெறும்புகள் வெளியே போகவில்லை.
மறுநாள் காலை மறுபடியும் உணவு தேடி புற்றின் வாசலுக்கு வந்தால் அங்கே ஓணான் நின்று நாக்கை சுழட்டிக் கொண்டிருந்தது. அன்றும் ஒரு நூறு கட்டெறும்புகள் ஓணான் வயிற்றில் போய் விழுந்தன. புற்றை விட்டு வெளியே வரவே பயமாக இருந்தது.
இப்படியே இதை விட்டால் ஒரு கட்டெறும்பு கூட மிஞ்சாது என்று கட்டெறும்பு ராணி நினைத்தாள்.
அன்று இரவு அனைவரையும் அழைத்து ஆலோசனை நடத்தினாள். இறுதியில் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தார்கள்.
அந்த முடிவு…………………
மறுநாள் காலை கிழக்கு திசையில் இருந்து சூரியன் உதித்தான். வெளிச்சம் வந்த உடனேயே புற்றின் வாசலுக்கு ஓணான் வந்து உட்கார்ந்து கொண்டது. எந்த சத்தமும் இல்லை. வாசலில் ஒரு கண்ணும் வெளியில் ஒரு கண்ணுமாய் நாக்கைச் சப்புக்கொட்டிக் கொண்டிருந்தது ஓணான்.
திடீரென சரசரவென்று சத்தம். புற்றிலிருந்த அத்தனை கட்டெறும்புகளும் வாசல் வழியே வெளியே வந்தன. அவ்வளவு கட்டெறும்புகளைப் பார்த்ததும் ஓணான் திகைத்து நின்று விட்டது.
முன்னால் கட்டெறும்பு ராணி வந்தாள். பெரிய படை போல கட்டெறும்புகள் ஓணான் மீது ஏறிக் கடித்தன. ஓணானின் கண், மூக்கு, வாய், நாக்கு, கைகள், கால்கள், வால், செதில்கள், என்று உடம்பின் அத்தனை இடங்களிலும் கடித்தன.
தங்களுடைய ரம்பம் போன்ற பற்களால் வலிமையாகக் கடித்தன. ஓணானால் ஓடக்கூட முடியவில்லை.
அங்கேயே ஓணான் இறந்து விட்டது.
கட்டெறும்பு ராணி அனைவரிடமும் நம் ஒற்றுமையே நம் வெற்றி என்று முழங்கியது. கட்டெறும்புகளுக்கு அது ஏற்கனவே தெரிந்து விட்டது இல்லையா?
நன்றி - வண்ணக்கதிர்




No comments:

Post a Comment