Thursday 6 August 2015

வேதங்களின் சாரம் உபநிடதங்களா?

 

உதயசங்கர்

vedas

அரை நாடோடிக்கூட்டமான வேதகால ஆரியர்கள் வடமேற்கு இந்தியா வழியாக சிந்துசமவெளிப்பிரதேசத்துக்குள் நுழைந்து சில காலம் நாடோடிகளாகவே சுற்றித்திரிந்தனர். கடைசியில் கங்கையின் மேற்குப்பகுதிக்கும் யமுனைக்கும் இடையில் குடியேறினர். குடியேறிய பிறகு அவர்களுக்கு முன்பாகவே இந்திய சமவெளிகளில் குடியிருந்த இந்திய பூர்வகுடிகளுக்கும் இடையிலான எல்லையை, உறவை வரையறுத்துக் கொள்ள விரும்பினார்கள். கலாச்சார ரீதியாக தங்களுடன் ஏற்கனவே கொண்டு வந்திருந்த வேதங்களையே தங்களையும் இந்திய பூர்வ குடிகளையும் பிரித்துக் கொள்ள முதன்மைப் படுத்தினர். எனவே வேதங்களுக்கு புனிதத்தை ஏற்றும் கைங்கர்யத்தைச் செய்தனர். முதலில் வேதங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல காற்றில் வந்தது, கேட்கப்பட்டது,( ஸ்ருதி ) என்ற பொருள் படும் ” அபௌருஷ்ய “ என்ற சொல்லால் சுட்டினர். அபௌருஷ்ய என்றால் அமானுஷ்ய என்று பொருள்..அதாவது வேதங்கள் தெய்வத்தன்மை கொண்டவை. வேதங்கள் ஆரியர்களை மற்றவர்களிடமிருந்து பிரித்து அடையாளம் காட்டவே முதன்மைப் படுத்தப்பட்டது. அதோடு வேதங்களில் சொல்லப்பட்டுள்ள சடங்கியல் முறைகளுக்கு அத்தியாவசியமான யக்ஞம், அக்னி, மந்திரங்கள் இவற்றை பாதுகாக்க நடைமுறைப்படுத்த ஆரியர்களில் ஒரு பிரிவினராக பிராமணர் தோன்றினர்.

வேதங்களுக்கு ஏற்றப்பட்ட புனிதத்தன்மை காரணமாக அவற்றை பிற மக்கள் தெரிந்து கொள்வதிலிருந்து தடை செய்ய முடிந்தது. வேதங்களின் புனிதம், யக்ஞங்களின் புனிதம், வேள்வித்தீயின் புனிதம், மந்திரங்களின் இவற்றைப் பாதுகாத்த பிராமணரின் புனிதம் என்று எல்லாவற்றையும் யாரும் கேள்வி கேட்க முடியாத உயர்ந்த நிலையில் வைத்தனர். சார்பியல் தத்துவத்தின் படி ஒன்றை இன்னொன்றுடன் தொடர்பு படுத்தியே கருத்துகள் உருவாகின்றன. எனவே புனிதம் என்ற ஒன்றை உருவாக்கும்போது புனிதமற்றது என்பதும் வருகிறது. வேதங்களைப் புனிதமாகவும் அதற்கு முன்பு இருந்த பூர்வகுடிகளின் கலாச்சார, வழிபாட்டு முறைகளை புனிதமற்றவை என்றும் உருவகிக்கப்பட்டது. வேதகால ஆரியர்கள் தங்களுடைய அடையாளக்கலப்பையும், ரத்தக்கலப்பையும் தடை செய்த முயற்சிகளே இவை.

வேதகாலத்திலேயே அங்கு அவர்களுக்கு முன்னால் இருந்த பூர்வகுடிகளிடம் பல்வேறு வழிபாட்டு முறைகளும், தத்துவச்சிந்தனைகளும் இருந்தன. அவை நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டவை. சிந்து சமவெளி நாகரிக காலத்தில் இருந்த தாய்த்தெய்வ வழிபாடு, அத்துடன் தொடர்புடைய தாந்திரிக வழிபாட்டு முறைகள், பிரகிருதி என்னும் இயற்கையை வணங்கும் சாங்கிய வழிபாட்டு முறை, சாங்கியத்தோடு தொடர்புடைய யோக தத்துவ மரபு, யோக தத்துவ மரபில் யோகாசனங்கள் பற்றிய குறிப்புகள், அதாவது சிந்து சமவெளி நாகரிக காலத்திலேயே உடலில் மறைந்து கிடக்கும் ஆற்றல்களைத் திரட்டவும், மிக நுட்பமான உடல், சுவாசம், மனப்பயிற்சிகளை கொண்டது யோக மரபு., தேகவாதம், பூதவாதம், காலவாதம், எதேச்சாவாதம் எனப்பலவகையான ஆதிப்பொருள்முதல்வாதத்துவங்களின் சேர்க்கையில் பிறந்த சாருவாக தத்துவம், ஆசிவகம்-சமணம் என்று பலவகையான தத்துவ மரபுகளும், வழிபாட்டு மரபுகளும் இருந்தன. வேதங்களில் எந்த தத்துவச்சாரமும் இருந்ததில்லை. வேதங்களுக்கு வெளியில் இருந்த தத்துவ மரபுகளின் தாக்கத்தால் தங்களுக்கும் தத்துவ ரீதியாக ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளவே உருவானது உபநிடதங்கள் எனலாம்.

வேதங்களுக்குப் பின்பு முதலில் இயற்றப்பட்டது பிராமணங்கள், ஆரண்யகங்கள், என்ற இரண்டு வகை இலக்கியங்கள் தான். இவற்றிலும் சடங்கியல் முறைகளே சொல்லப்பட்டன என்றாலும் சில வித்தியாசங்கள் இருந்தன. பிராமணங்களில் பிரம்மன், பிரம்மம், பிராமணன், என்ற சொற்களை புனிதமானதாக அதன் முழு அர்த்தத்தில் உருவாக்கின. ஆரண்யகங்கள் கானகங்களில் வாழ்ந்த வேத ரிஷிகள் இயற்றியவை. ஆரியரிஷிகள் இங்கிருந்த பூர்வ குடி மக்களிடம் இருந்த தவம், தியானம், யோகம், பூசை போன்ற சமயவழிபாடுகள், தத்துவநெறிமுறைகள், ஆகியவற்றைக் கற்றுக்கொண்டு அவற்றை தங்களுடைய சமய, தத்துவ நெறிமுறைகளோடு இணைத்து உருவாக்கியவை ஆரண்யகங்கள். இதற்குப் பின்பே உபநிடதங்கள் உருவாகின்றன.

வேதகாலத்திற்கு மிகவும் பின்னால் உருவானதே பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள் .எனவே தான் வேதாந்தம் என்று அழைக்கப்படுகின்றன. வேதாந்தம் என்பதற்கு இரண்டு விதமான அர்த்தங்கள் உள்ளது. வேதங்களின் அந்தம் அதாவது இறுதி என்றும் வேதங்களின் சாரம் என்றும் கூறலாம். இன்னொரு வகையில் உபநிஷத் என்றால் ” கீழே அருகில் அமர்க “ என்று அர்த்தமாகிறது. அதாவது அருகில் உட்கார்ந்து உபதேசங்களைக் கேள் என்று பொருள். ஆனால் மாக்ஸ் முல்லர் கோட்பாடு, ரகசியக்கோட்பாடு என்று பொருள் படும் விதமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறார். என்றாலும் காலப்போக்கில் வேதங்களின் சாரம் என்ற அர்த்தபாவத்திலேயே உபநிடதங்கள் கருதப்பட்டன. வேதாந்தம் என்ற சொல் தத்துவ ஞானம் என்ற அர்த்தத்தில் தைத்திரீய ஆரண்யகத்திலும், முண்டக உபநிடதத்திலும் கூறப்படுகிறது.

உபநிடதங்கள் வேத இலக்கியத்தின் பகுதியாகவோ, அதன் தொடர்ச்சியாகவோ கருதப்படவில்லை. முண்டக உபநிடதத்தில்

“ …………………………………… தாழ்ந்ததில் ருக்வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம், உச்சாரணம், இலக்கணம், விளக்கவுரை, யாப்பு, வானநூல் ஆகியவை அடங்கும், உயர்ந்த விஞ்ஞானமாவது என்றும் அழியாததை அறிவதாகும்..”,

உபநிடதங்கள் வேதங்களைத் தாழ்ந்தவையாக கருதின என்பதற்கான மேலும் ஒரு சான்றாக, சாந்தோக்கிய உபநிடதம் சொல்வதைப் பாருங்கள். நாரதர் சனத்குமாரரை அணுகி தனக்கு கற்பிக்குமாறு கேட்க சனத்குமாரர் உமக்கு என்ன தெரியும் என்று கேட்கிறார். அதற்கு நாரதர், “ நான் ருக் வேதம், சாம வேதம், யஜூர் வேதம், அதர்வண வேதம், இதிகாசங்கள், ஐந்தாவது வேதமான புராணங்கள், பிதுர் கிரியைகள், கணிதம், சகுனம், தர்க்கம், அறநெறி, தேவர்களைப் பற்றிய விஞ்ஞானம், மதநூல் அறிவு, பேய், பிசாசுகள், பற்றிய நூல்கள், போர்க்கலை, நடத்திரங்களைப் பற்றிய அறிவு, பாம்புகளையும், தெய்வங்களையும் பற்றிய விஞ்ஞானங்கள் ஆகியவற்றைப் பயின்றிருக்கிறேன். மரியாதைக்குரியவரே, நான் மந்திரங்களைப் பற்றி மட்டுமே அறிந்திருக்கிறேன்.. ஆன்மாவைப் பற்றி அறியாமலிருக்கிறேன், ஆனால் ஆன்மாவை அறிந்தவன் துன்பத்தை வெல்கிறான் என்று தங்களைப் போன்ற பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்….” என்று சொல்ல அதற்கு சனத்குமாரர், “ நீர் கற்றதெல்லாம் வெறும் பெயர்களேயன்றி வேறொன்றுமில்லை. ருக் வேதம் என்பது வெறும் பெயரே, அவ்வாறே தான் யஜூர் வேதம், சாம வேதம் ,அதர்வண வேதம், இதிகாசங்கள்….”

ஆக உபநிடதங்களை வேதங்களை அலட்சியப்படுத்தின. அதே போல வேதங்களை முன்வைத்த பிராமணர்கள் உபநிடதங்களை புறந்தள்ளினர். அவற்றை அனுலோமப்பிரதிகள் என்று சொல்லினர். இவற்றிலிருந்து சிராமண மதப்பிரிவுகள் மேலோங்கி வளர்ந்த காலத்தில் அவற்றின் சாரத்தையும், பூர்வகுடிகளின் தத்துவசாரத்தையும் இணைத்து உருவாக்கிய உபநிடதங்களை முதலில் சடங்கியல் முறைகளை புறந்தள்ளினர். ஆனால் காலப்போக்கில் உபநிடதங்கள் வேத, பிராமண, ஆரண்யகங்களுக்கு அடுத்ததாக, அவற்றின் வாரிசாக மாற்றப்பட்டன. வேத, பிராமண, ஆரண்யகங்களை சடங்குகள் செய்வதற்கான நூல்கள் என்ற அர்த்தத்தில் கர்ம காண்டங்கள் என்றும், உபநிடதங்களை தத்துவ அறிவு குறித்த நூல்கள் என்ற முறையில் ஞான காண்டம் என்றும் குறிப்பிட்டார்கள். ஆனால் வேதங்கள் கூறும் சடங்குகளுக்கும், உபநிடதங்கள் கூறும் தத்துவ விசாரணைகளுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி, மாறுபாடு இருக்கிறது. இந்த இடைவெளிக்கான காரணம் என்ன?

வேத கால ஆரியர்கள் இந்திய பூர்வ குடிகளை எதிகொண்ட போது தங்களுடைய வேதச்சடங்கியல் அடையாளங்களின் மூலமும் அகமண முறையின் மூலமும் தங்களை வேறுபடுத்திக் காட்ட முடிவு செய்தார்கள். அதை இன்று வரை நடைமுறைப்படுத்தவும் செய்கிறார்கள். இப்போதும் நடைமுறையில் வேதங்களின் புனிதம், மந்திரங்களின் புனிதம், பிராமணர்களின் புனிதம், என்று தொடர்கிறது. பின்னால் வந்த உபநிடதகால சிந்தனையாளர்கள் தங்களுடைய வைதீகத்தைக் காப்பாற்றிக் கொள்ள புனிதத்தை நிலைநிறுத்த, மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட சடங்கியல்களைத் தாண்டி தத்துவக்காப்பும் தேவை என்று கருதியிருக்கிறார்கள். அது அந்தக் காலகட்டத்தின் அவசியமாகவும் இருந்திருக்கிறது. நாடோடிச் சமூக பொருளாதார அமைப்பில் உருவான சடங்கியல் முறைகள் மாறிக்கொண்டிருந்த நிலப்பிரபுத்துவ காலப்பொருளாதாரச் சூழலுக்குப் பொருத்தமற்றதாக இருந்ததினால் மக்கள் மத்தியில் பௌத்தமும், சமணமும், வேறு சமய மரபுகளும் வளரத்தொடங்கின.ஆக வேதகால புனிதத்தைக் காப்பதற்கு உபநிடதங்கள் தோன்றின. அவை தோன்றிய போது சடங்கியல் முறைகளை மறுப்பது போலத் தோற்றம் காட்டினாலும் மேலே குறிப்பிட்டதைப் போல கர்ம காண்டமாகவும் ஞான காண்டமாகவும் தங்களுடைய கலாச்சார அரசியலை செய்து வருகின்றன.

வேதங்களில் சொல்லப்படுகிற சடங்கியல் முறைகளுக்கும் உபநிடதங்களில் சொல்லப்படுகிற பிரம்மம் குறித்த தத்துவத்தேடலுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. வேதங்களும் உபநிடதங்களும் ஒன்றுகொன்று எதிரானதாகவே தோன்றியிருக்கின்றன. வேதங்களின் சாரமாக உபநிடதங்கள் இல்லை.

துணை நூல்கள் – 1. வேதாந்தத்தின் கலாச்சார அரசியல்- ந.முத்துமோகன்

2. அம்பேத்கர் தொகுப்பு நூல்கள்

Sunday 2 August 2015

அருள், அனுபூதி, சாமியாடுதல்..பேயாடுதல் உண்மை என்ன?

 

உதயசங்கர்

meditation

ஆடி மாதம் தொடங்கி விட்டால் அநேகமாக நாட்டார் தெய்வக்கோவில்களில் கொடைவிழாக்கள் தொடங்கி விடும். ரண்டனக்கு..ரண்டா..ரண்டனக்கு ரண்டா.. என்று நையாண்டி மேளம் முழங்கும். தீபாராதனைகள், குலவைச்சத்தம், கொட்டுச்சத்தம் முழங்கும் போது ஏய்ய்ய்ய்….ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..என்ற சத்தத்துடன் அங்கங்கே அருள் வந்து சாமியாடுவார்கள். சில சாமிகள் ஓட்டமும் சாட்டமுமாக நாக்கைத்துருத்திக் கூட்டத்தைப் பிளந்து கொண்டு ஆட, சில சாமிகள் அமைதியாக நின்ற இடத்திலேயே முகத்தை சுளித்து கோணிக்கொண்டு உடம்பு மட்டும் அதிர நிற்பார்கள். பொம்பிளை சாமிகளோ கேட்கவே வேண்டாம்..தலைமுடி விரித்து தலையைச் சுழட்டி அமானுஷ்யக்குரலில் வீல்..வீல்..என்று கத்தியபடியே ஆடுவார்கள். நாட்டார் தெய்வக்கோவில்களில் மட்டும் தான் மாடசாமி, கருப்பசாமி, சுடலை, அய்யனார், சாஸ்தா, இசக்கி, பேய்ச்சி, பேராச்சி, போன்ற சாமிகள் ஆடும். ஒரு நாளும் பெருந்தெய்வக்கோவில்களில் யாருக்கும் அருள் வருவதில்லை. சாமி ஆடுவதில்லை. நெல்லையப்பர், மீனாட்சியம்மன், காமாட்சியம்மன், காசி, ராமேஸ்வரம், கேதாரிநாத், பத்ரிநாத் கோவில்களில் யாரும் சாமி ஆடுவதில்லையே ஏன்? கிறித்தவர்களின் ஜெபக்கூட்டங்களிலும் வழிகிற கண்ணீர் தெரியாமல் அருள் வந்ததைப்போல நெஞ்சில் அடித்து ஆடுவதும், ஏதோ ஒளியைப் பார்த்ததாகவோ, கேட்காத காது கேட்டதாக, நடக்க முடியாத கால்களில் பெலம் வந்து நடந்ததாக, எல்லோருக்குள்ளும் இருக்கிற சாத்தானை விரட்டிட இரவு முழுவதும் பாட்டு, ஜெபம், என்று நிகழ்த்தப்படுகிறது. அங்கேயும் அருள் வருகிறது. சாமி ஆடுகிறது. என்ன அங்கே கருப்பசாமி அருள்! இங்கே யேசப்பா அருள்!

இன்னும் கொஞ்சம் எலைட் பார்ட்டிகள் தியானம், மனஒருமை, அப்பாலை தியானம் , (TRANSCENDENTAL MEDITATION ) ஒன்றுமற்ற நிலை, ஆதி உணர்வு, என்று கிளம்பி பூஜ்யம், சூன்யம், யோகி, அவதாரம், அம்மா, மாதா, என்று விதவிதமாக நாமகரணம் சூடிய நவீன சாமியார்களிடம் பணத்தைக் கொட்டிக் கொடுக்கிறார்கள். அவர்களும் தங்களுடைய பங்குக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சொத்துக்களை வாங்கிக் குவித்து கோடீசுவரர்களாக பொம்பிளைப்பொறுக்கிகளாக, கேடிகளாக, மொள்ள மாறி, முடிச்சவிக்கிகளாக மாறி சமூகத்திலும், அந்தஸ்துக்குரியவர்களாக்கி விடுகிறார்கள். இவர்களை நோக்கி தங்களுடைய அமைதி தேடி தியானம் செய்ய போனவர்களும் தியானத்தின் போது ஏதேதோ வண்ணங்கள், காட்சிகள், தெரிந்ததாக சொல்கிறார்கள். சிலர் வெறுமையாக ஒன்றுமில்லாததாக இருந்ததாக சொல்கிறார்கள். கிறித்துவ ஜெபக்கூட்டங்களைப் போலவே கூட்டாகத் தியானம், ஆட்டம், பாட்டம், என்று கார்களில் வந்திறங்கி கொண்டாடுகிறார்கள். லட்சாதிபதிகள் முதல் கோடீசுவரர்கள் வரை வாடிக்கையாளர்கள். இவர்களில் நம்மூர் அறிவுஜீவிகளும், எழுத்தாளர்களும் உண்டு.

இதல்லாமல் இன்றைய சினிமா டிரண்டாக இருக்கும் காத்து, கருப்பு, பேய், பிசாசு, வேறு ஆட்களைப் பிடித்தாட்டுகிறது. கிராமங்களில் மட்டுமல்லாமல் நகரங்களிலும் விதவிதமாக பேயோட்டுபவர்கள், குட்டிச்சாமியார்கள், குறி சொல்பவர்கள், என்று ஒரு பெருங்கூட்டமே இருக்கிறது. பெரும்பாலான மக்கள் மேலே சொன்ன அத்தனையையும் முழுமனதாக நம்புகிறார்கள். சிலர் எல்லாவற்றையும் நம்பியும் நம்பாமலும் இருக்கிறார்கள். சிலர் காத்து, கருப்பு, பேய்பிடித்தல், அருள்வந்து, சாமியாடுதலைக் கேலி செய்தாலும் தியான வகையறாக்களை நம்புகிறார்கள். சமூகம் நவீனமாக நவீனமாக பழமை, மரபு சார்ந்த அத்தனை நம்பிக்கைகளுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும் அறிவியல் விளக்கம் கொடுக்கும் பணி ஜோராக நடை பெறுகிறது. பழமை மீது எல்லோருக்கும் ஒரு காதல் (NOSTALGIA ) இருக்கிறது. அதனால் பழமை போற்றும் பக்திமணம் பத்திரிகைகள் தொடங்கி அனைத்து தொலைக்காட்சி, சினிமா, சமூகம் எல்லாவற்றிலும் இருக்கிறது. சரி இவற்றையெல்லாம் நம்புவதா? நம்பாமல் இருப்பதா? கண்முன்னால் நடக்கிறபோது எப்படி நம்பாமல் இருக்க முடியும். உண்மை தான்.

மனிதன் விசித்திரமானவன். ஏனெனில் லட்சக்கணக்கான வருடங்களாக பரிணாம வளர்ச்சி பெற்ற அவனுடைய மூளையின் புதிர்களை அவன் இப்போது தான் அவிழ்க்கத்தொடங்கியிருக்கிறான். ஆனால் சில ஆயிரம் வருடங்களுக்குள்ளாகவே அவன் கணக்கிலடங்காத ஏராளமான மூட நம்பிக்கைகளுக்கு ஆளாகி உயிர்ப்பலி கொடுத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் இந்த அருள், சாமியாடுதல், எல்லாவற்றுக்கும் காரணம் உளவியல் நோய் தான் என்று சொன்னால் எத்தனை பேர் நம்புவார்கள்?

ஆதி மனிதன் இயற்கையின் உற்பாதங்களை, தன்னைச்சுற்றி இருந்த சூழ்நிலையின் தாக்கத்தை புரிந்து கொள்ள முடியாததினால் எல்லாவற்றையும் வழிபட்டான். நோய், மரணம், எதைப்பற்றியும் அவனுக்குத் தெரியவில்லை. இறந்தவர்களும் உயிரோடு தங்களுடன் இருப்பதாக நம்பினான். இந்த நம்பிக்கை அப்போது அவனுக்கு அவனுடைய வாழ்க்கைச்சூழ்நிலைக்கு ஆறுதலாக இருந்தது. கூடுதலான பலம் சேர்த்தது. இறந்தவர்களுக்கு அவர்களுக்கு விருப்பமான உணவைப் படையலாக வைத்து வழிபட்டான். இறந்தவனின் பாவனைகளையோ, குரலை, போலச் செய்தான். இதன் மூலம் அவனுடைய ஆவி இன்னொருவன் மீது இறங்கி இருப்பதாக நம்பினான். ஆவி இறங்கியதாகச் சொல்லப்பட்டவன், அல்லது சாமியாடுபவன் உள்ளமுக்கப்பட்ட உணர்வுகள் பீறிடும்போது சாமியாடுகிறான் அல்லது பேயாடுகிறான்.

மனிதமனதில் அதாவது மூளையில் மூன்று நிலைகள் உள்ளன. 1. வெளிமனம்( CONSCIOUS MIND ) 2.உள்மனம்( SUB CONSCIOUS MIND ) 3.ஆழ்மனம் ( UNCONSCIOUS MIND ). இவற்றில் வெளிமனம் லௌகீக நடவடிக்கைகளைக் கவனித்துக் கொள்கிறது. உள்மனம் வெளிமனத்திற்கும் ஆழ்மனத்திற்கும் பாலமாக இருக்கிறது. ஆழ்மனதில் உள்ளமுக்கப்பட்ட ஆசைகள், கோபம், வஞ்சம், பகைமை, பாலுணர்வு எண்ணங்கள் எல்லாம் தாங்க முடியாத நெருக்கடியின் போது பீறிடுகிறது. இது ஒரு மனப்பிறழ்வு நோய். ஆக சாமியாடுதல் அல்லது பேயாடுதல் மனப்பிறழ்வு நோய்க்கூறுகள் தான். உளவியல் அறிஞர் ஃபிராய்டின் கருத்துப்படி மனிதமனதின் பண்புகள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1.இத் ( id ) – இன்பம் 2.ஈகோ ( Ego ) - நடைமுறை 3.சூப்பர் ஈகோ( Super Ego ) – நீதி. இத்துக்கு இன்பம் ஒன்று தான் குறி. அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத்தூண்டும். சூப்பர் ஈகோவைப் பொறுத்தவரை எதைச் செய்ய வேண்டும். எப்படிச் செய்ய வேண்டும் என்று ஈகோவுக்குச் சொல்கிறது. நீதி,நேர்மை இவற்றைக் குறிக்கோள்களாகக் கொண்டது. சுருக்கமாகச் சொன்னால் இது தான் மனசாட்சி. ஈகோ இத்தையும் சமாளித்து சூப்பர் ஈகோவையும் சமாளிக்கிறது. இந்த ஈகோவே சூழ்நிலையின் ஆதிக்கத்தை எதிர்த்தோ, அனுசரித்தோ செயலாற்றுகிறது. ஈகோ பலவீனமடையும் போது இத் ஆதிக்கம் செலுத்துகிறது. மனப்போராட்டங்கள் அதிகரிக்கிறது. மனப்பிறழ்வு நோய் உருவாகிறது.இத், ஈகோ, சூப்பர் ஈகோ, இந்த மூன்றும் சமநிலையில் இயங்கும்போது மனிதன் சக்தி வாய்ந்தவனாக சமூக நியதிகளுக்குக் கட்டுப்பட்டவனாக வாழ்கிறான்.

சரி. ஆனால் சாமியாடுபவர்களுக்கும் பேயாடுபவர்களுக்கும் சில காட்சிகள், உருவங்கள் தெரிகிறதே. அது எப்படி? இந்த மாயத்தோற்றங்கள் எப்படி உருவாகிறது? அதே போல தியானத்தின் போது நான் என்னும் உணர்வு மறைந்து இந்த பிரபஞ்சத்தோடு கலந்து விட்ட உணர்வு தோன்றுகிறதே. அது எப்படி? என்று சிலர் கேட்கலாம். அவர்கள் அனுபவித்தது உண்மை தான். அந்த அனுபூதி நிலைமைக்கும், சாமியாடுகிற அல்லது பேயாடுகிற தன்னிலை மறந்த நிலைமைக்கும், ஜெபக்கூட்டங்களில் ஒரு அரை மயக்கநிலையில் யேசப்பாவை பார்த்ததாகச் சொல்லும் நிலைமைக்கும் காரணம் நம்முடைய மூளையின் செயல்பாட்டில் ஏற்பட்ட மாறுபாடே. நம்முடைய கேட்கும் திறன், பேசும் திறன், நினைவாற்றலைக் கட்டுப்படுத்துகிற திறன் மூளையின் ஒரு பகுதியான ” டெம்போரல் லோப் “ ( TEMPORAL LOBE ) என்னும் பகுதிக்கு உள்ளது. இந்தப்பகுதி சரியான முறையில் செயல்படாத போது, வலிப்பு நோயின் போது, விசித்திரமான அநுபவங்கள் ஏற்படுகின்றன என்கிறார் கனடா நாட்டின் நரம்பியல் விஞ்ஞானி மைக்கேல் பெர்சிங்கர். அதேபோல கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் நம் நாட்டு நரம்பியல் விஞ்ஞானி விலயனூர் ராமச்சந்திரன் மின் அதிர்வுகளால் டெம்போரல் லோப் பகுதிக்கும் மூளையின் மற்ற பகுதிகளுக்கும் உள்ள தொடர்பை வலுப்படுத்தும் போது இறை உணர்வுகள் பொங்குகின்றன என்கிறார். மைக்கேல் பெர்சிங்கர் மூளையில் காந்தப்புலத்தை உருவாக்க வல்ல ஒரு தலைக்கவசத்தின் மூலம் எந்த நரம்பியல் நோயும் இல்லாத நூற்றுக்கணக்கான மனிதர்களை அவரவர் கலாச்சாரப்பின்புலத்தில் அவரவர்களுடைய கடவுள்களை பார்க்க வைத்தார். டேவிட்சன் என்ற விஞ்ஞானி ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சிந்தனையின் மீது மட்டுமே கவனம் குவிக்கப்படும் போது திசை மற்றும் வெளி குறித்த பிரக்ஞையை வழங்குகிற பாரிடல் லோப் ( PARIETAL LOBE ) செயலிழந்து போவதைக் கண்டறிந்தார். இதனாலேயே தியானத்தின் போது ” தான் ” என்பது இல்லாமல் பிரபஞ்சத்தோடு கரைந்து விட்ட பரவசஉணர்வு ( இறையுணர்வு ? ) தோன்றுகிறது. ஆக பாரிடல் லோப் செயலிழந்து போவதனால் தோன்றுவதே இத்தைகைய பிரம்மை. மூளையின் உட்பகுதியில் இருக்கும் பீனியல் சுரப்பி ( pienial gland ) யிலிருந்து வெளிவரும் டைமெதில்டிரிப்டா மைன் என்ற வேதிப்பொருள் மாயத்தோற்றங்களை உருவாக்க வல்லது என்கிறார் ரிக் டிராஸ்மேன் என்ற அறிவியல் அறிஞர். இதோடு போதைப்பொருட்களான கஞ்சா, அபின், ஹெராயின் போன்றவற்றை உபயோகப்படுத்தும் போது இந்த டெம்போரல் லோப் தூண்டப்பட்டு மாயக்காட்சிகளும், மாய ஒலிகளூம் கேட்கின்றன. சில நவீன சாமியார்கள் தங்களுடைய ஆசிரமங்களில் ஏன் கஞ்சாவைப் பயன்படுத்துகிறார்கள் தெரிகிறதா?

அருள், சாமியாடுதல், பேயாடுதல், தியானம், இறையுணர்வு கடவுளின் தோற்றம் எல்லாம் மூளைக்கோளாறுகளே. தவிர வேறு எந்த புண்ணாக்கும் இல்லை. தேவை நல்ல மருத்துவச்சிகிச்சை. அறிவியல் நோக்கு, பகுத்தறிவுச்சிந்தனை, வேறொன்றுமில்லை.

துணை நூல் – காத்து கருப்பு- நேயம் சத்யா

sami