சாதியின் தத்துவம்
Sunday, 3 August 2025
சாதியின் தத்துவம் - 1
Thursday, 3 December 2015
புதிய நூல் வெளியீடு
பௌத்தத்தை வீழ்த்தி புஷ்யமித்திர சுங்கன் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு நிகரானதொரு கொண்டாட்ட மனநிலையை பார்ப்பன மேலாதிக்கவாதிகள் பாரதிய ஜனதாவின் இப்போதைய ஆட்சி ஏற்பட்டதிலிருந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். முகலாயர் ஆட்சி, பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் காலனியாட்சிகள், பௌத்தம், சமணம், இஸ்லாம், கிறித்துவம், குடியாட்சிமுறை, மார்க்சீயம், பெரியாரியம், அம்பேத்காரியம், ஆகியவற்றின் குறுக்கீடுகளால் சாதியத்தில் ஏற்பட்ட சின்னஞ்சிறு மாற்றங்களைக் கூட அடித்துநிரவி மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுபோக அவர்கள் அஞ்சத்தக்க வேகத்தில் பணியாற்றி வருகிறார்கள். பார்ப்பன மேலாதிக்கவாதிகள் அரசியல்ரீதியாக தமக்குக் கிடைத்துள்ள வெற்றியைப் பண்பாட்டு மேலாதிக்க வெற்றியாக மாற்றிக் கொள்வதற்காக மேற்கொண்டு வரும் முயற்சிகள் வெற்றி பெறுமானால் இந்தியச்சமூகம் கடந்த காலத்தின் இருளுக்குள் மூழ்கடிக்கப்பட்டுவிடும் என்கிற அபாயத்தை முன்னுணரும் கூருணர்ச்சி கொண்ட அரசியல் விலங்குகளாக எழுத்தாளர்கள் மாற வேண்டியுள்ளது. ----
ஆதவன் தீட்சண்யா
( முன்னுரையிலிருந்து )
வெளியீடு-நூல்வனம்
விலை-ரூ75/-
Thursday, 6 August 2015
வேதங்களின் சாரம் உபநிடதங்களா?
உதயசங்கர்
அரை நாடோடிக்கூட்டமான வேதகால ஆரியர்கள் வடமேற்கு இந்தியா வழியாக சிந்துசமவெளிப்பிரதேசத்துக்குள் நுழைந்து சில காலம் நாடோடிகளாகவே சுற்றித்திரிந்தனர். கடைசியில் கங்கையின் மேற்குப்பகுதிக்கும் யமுனைக்கும் இடையில் குடியேறினர். குடியேறிய பிறகு அவர்களுக்கு முன்பாகவே இந்திய சமவெளிகளில் குடியிருந்த இந்திய பூர்வகுடிகளுக்கும் இடையிலான எல்லையை, உறவை வரையறுத்துக் கொள்ள விரும்பினார்கள். கலாச்சார ரீதியாக தங்களுடன் ஏற்கனவே கொண்டு வந்திருந்த வேதங்களையே தங்களையும் இந்திய பூர்வ குடிகளையும் பிரித்துக் கொள்ள முதன்மைப் படுத்தினர். எனவே வேதங்களுக்கு புனிதத்தை ஏற்றும் கைங்கர்யத்தைச் செய்தனர். முதலில் வேதங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல காற்றில் வந்தது, கேட்கப்பட்டது,( ஸ்ருதி ) என்ற பொருள் படும் ” அபௌருஷ்ய “ என்ற சொல்லால் சுட்டினர். அபௌருஷ்ய என்றால் அமானுஷ்ய என்று பொருள்..அதாவது வேதங்கள் தெய்வத்தன்மை கொண்டவை. வேதங்கள் ஆரியர்களை மற்றவர்களிடமிருந்து பிரித்து அடையாளம் காட்டவே முதன்மைப் படுத்தப்பட்டது. அதோடு வேதங்களில் சொல்லப்பட்டுள்ள சடங்கியல் முறைகளுக்கு அத்தியாவசியமான யக்ஞம், அக்னி, மந்திரங்கள் இவற்றை பாதுகாக்க நடைமுறைப்படுத்த ஆரியர்களில் ஒரு பிரிவினராக பிராமணர் தோன்றினர்.
வேதங்களுக்கு ஏற்றப்பட்ட புனிதத்தன்மை காரணமாக அவற்றை பிற மக்கள் தெரிந்து கொள்வதிலிருந்து தடை செய்ய முடிந்தது. வேதங்களின் புனிதம், யக்ஞங்களின் புனிதம், வேள்வித்தீயின் புனிதம், மந்திரங்களின் இவற்றைப் பாதுகாத்த பிராமணரின் புனிதம் என்று எல்லாவற்றையும் யாரும் கேள்வி கேட்க முடியாத உயர்ந்த நிலையில் வைத்தனர். சார்பியல் தத்துவத்தின் படி ஒன்றை இன்னொன்றுடன் தொடர்பு படுத்தியே கருத்துகள் உருவாகின்றன. எனவே புனிதம் என்ற ஒன்றை உருவாக்கும்போது புனிதமற்றது என்பதும் வருகிறது. வேதங்களைப் புனிதமாகவும் அதற்கு முன்பு இருந்த பூர்வகுடிகளின் கலாச்சார, வழிபாட்டு முறைகளை புனிதமற்றவை என்றும் உருவகிக்கப்பட்டது. வேதகால ஆரியர்கள் தங்களுடைய அடையாளக்கலப்பையும், ரத்தக்கலப்பையும் தடை செய்த முயற்சிகளே இவை.
வேதகாலத்திலேயே அங்கு அவர்களுக்கு முன்னால் இருந்த பூர்வகுடிகளிடம் பல்வேறு வழிபாட்டு முறைகளும், தத்துவச்சிந்தனைகளும் இருந்தன. அவை நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டவை. சிந்து சமவெளி நாகரிக காலத்தில் இருந்த தாய்த்தெய்வ வழிபாடு, அத்துடன் தொடர்புடைய தாந்திரிக வழிபாட்டு முறைகள், பிரகிருதி என்னும் இயற்கையை வணங்கும் சாங்கிய வழிபாட்டு முறை, சாங்கியத்தோடு தொடர்புடைய யோக தத்துவ மரபு, யோக தத்துவ மரபில் யோகாசனங்கள் பற்றிய குறிப்புகள், அதாவது சிந்து சமவெளி நாகரிக காலத்திலேயே உடலில் மறைந்து கிடக்கும் ஆற்றல்களைத் திரட்டவும், மிக நுட்பமான உடல், சுவாசம், மனப்பயிற்சிகளை கொண்டது யோக மரபு., தேகவாதம், பூதவாதம், காலவாதம், எதேச்சாவாதம் எனப்பலவகையான ஆதிப்பொருள்முதல்வாதத்துவங்களின் சேர்க்கையில் பிறந்த சாருவாக தத்துவம், ஆசிவகம்-சமணம் என்று பலவகையான தத்துவ மரபுகளும், வழிபாட்டு மரபுகளும் இருந்தன. வேதங்களில் எந்த தத்துவச்சாரமும் இருந்ததில்லை. வேதங்களுக்கு வெளியில் இருந்த தத்துவ மரபுகளின் தாக்கத்தால் தங்களுக்கும் தத்துவ ரீதியாக ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளவே உருவானது உபநிடதங்கள் எனலாம்.
வேதங்களுக்குப் பின்பு முதலில் இயற்றப்பட்டது பிராமணங்கள், ஆரண்யகங்கள், என்ற இரண்டு வகை இலக்கியங்கள் தான். இவற்றிலும் சடங்கியல் முறைகளே சொல்லப்பட்டன என்றாலும் சில வித்தியாசங்கள் இருந்தன. பிராமணங்களில் பிரம்மன், பிரம்மம், பிராமணன், என்ற சொற்களை புனிதமானதாக அதன் முழு அர்த்தத்தில் உருவாக்கின. ஆரண்யகங்கள் கானகங்களில் வாழ்ந்த வேத ரிஷிகள் இயற்றியவை. ஆரியரிஷிகள் இங்கிருந்த பூர்வ குடி மக்களிடம் இருந்த தவம், தியானம், யோகம், பூசை போன்ற சமயவழிபாடுகள், தத்துவநெறிமுறைகள், ஆகியவற்றைக் கற்றுக்கொண்டு அவற்றை தங்களுடைய சமய, தத்துவ நெறிமுறைகளோடு இணைத்து உருவாக்கியவை ஆரண்யகங்கள். இதற்குப் பின்பே உபநிடதங்கள் உருவாகின்றன.
வேதகாலத்திற்கு மிகவும் பின்னால் உருவானதே பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள் .எனவே தான் வேதாந்தம் என்று அழைக்கப்படுகின்றன. வேதாந்தம் என்பதற்கு இரண்டு விதமான அர்த்தங்கள் உள்ளது. வேதங்களின் அந்தம் அதாவது இறுதி என்றும் வேதங்களின் சாரம் என்றும் கூறலாம். இன்னொரு வகையில் உபநிஷத் என்றால் ” கீழே அருகில் அமர்க “ என்று அர்த்தமாகிறது. அதாவது அருகில் உட்கார்ந்து உபதேசங்களைக் கேள் என்று பொருள். ஆனால் மாக்ஸ் முல்லர் கோட்பாடு, ரகசியக்கோட்பாடு என்று பொருள் படும் விதமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறார். என்றாலும் காலப்போக்கில் வேதங்களின் சாரம் என்ற அர்த்தபாவத்திலேயே உபநிடதங்கள் கருதப்பட்டன. வேதாந்தம் என்ற சொல் தத்துவ ஞானம் என்ற அர்த்தத்தில் தைத்திரீய ஆரண்யகத்திலும், முண்டக உபநிடதத்திலும் கூறப்படுகிறது.
உபநிடதங்கள் வேத இலக்கியத்தின் பகுதியாகவோ, அதன் தொடர்ச்சியாகவோ கருதப்படவில்லை. முண்டக உபநிடதத்தில்
“ …………………………………… தாழ்ந்ததில் ருக்வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம், உச்சாரணம், இலக்கணம், விளக்கவுரை, யாப்பு, வானநூல் ஆகியவை அடங்கும், உயர்ந்த விஞ்ஞானமாவது என்றும் அழியாததை அறிவதாகும்..”,
உபநிடதங்கள் வேதங்களைத் தாழ்ந்தவையாக கருதின என்பதற்கான மேலும் ஒரு சான்றாக, சாந்தோக்கிய உபநிடதம் சொல்வதைப் பாருங்கள். நாரதர் சனத்குமாரரை அணுகி தனக்கு கற்பிக்குமாறு கேட்க சனத்குமாரர் உமக்கு என்ன தெரியும் என்று கேட்கிறார். அதற்கு நாரதர், “ நான் ருக் வேதம், சாம வேதம், யஜூர் வேதம், அதர்வண வேதம், இதிகாசங்கள், ஐந்தாவது வேதமான புராணங்கள், பிதுர் கிரியைகள், கணிதம், சகுனம், தர்க்கம், அறநெறி, தேவர்களைப் பற்றிய விஞ்ஞானம், மதநூல் அறிவு, பேய், பிசாசுகள், பற்றிய நூல்கள், போர்க்கலை, நடத்திரங்களைப் பற்றிய அறிவு, பாம்புகளையும், தெய்வங்களையும் பற்றிய விஞ்ஞானங்கள் ஆகியவற்றைப் பயின்றிருக்கிறேன். மரியாதைக்குரியவரே, நான் மந்திரங்களைப் பற்றி மட்டுமே அறிந்திருக்கிறேன்.. ஆன்மாவைப் பற்றி அறியாமலிருக்கிறேன், ஆனால் ஆன்மாவை அறிந்தவன் துன்பத்தை வெல்கிறான் என்று தங்களைப் போன்ற பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்….” என்று சொல்ல அதற்கு சனத்குமாரர், “ நீர் கற்றதெல்லாம் வெறும் பெயர்களேயன்றி வேறொன்றுமில்லை. ருக் வேதம் என்பது வெறும் பெயரே, அவ்வாறே தான் யஜூர் வேதம், சாம வேதம் ,அதர்வண வேதம், இதிகாசங்கள்….”
ஆக உபநிடதங்களை வேதங்களை அலட்சியப்படுத்தின. அதே போல வேதங்களை முன்வைத்த பிராமணர்கள் உபநிடதங்களை புறந்தள்ளினர். அவற்றை அனுலோமப்பிரதிகள் என்று சொல்லினர். இவற்றிலிருந்து சிராமண மதப்பிரிவுகள் மேலோங்கி வளர்ந்த காலத்தில் அவற்றின் சாரத்தையும், பூர்வகுடிகளின் தத்துவசாரத்தையும் இணைத்து உருவாக்கிய உபநிடதங்களை முதலில் சடங்கியல் முறைகளை புறந்தள்ளினர். ஆனால் காலப்போக்கில் உபநிடதங்கள் வேத, பிராமண, ஆரண்யகங்களுக்கு அடுத்ததாக, அவற்றின் வாரிசாக மாற்றப்பட்டன. வேத, பிராமண, ஆரண்யகங்களை சடங்குகள் செய்வதற்கான நூல்கள் என்ற அர்த்தத்தில் கர்ம காண்டங்கள் என்றும், உபநிடதங்களை தத்துவ அறிவு குறித்த நூல்கள் என்ற முறையில் ஞான காண்டம் என்றும் குறிப்பிட்டார்கள். ஆனால் வேதங்கள் கூறும் சடங்குகளுக்கும், உபநிடதங்கள் கூறும் தத்துவ விசாரணைகளுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி, மாறுபாடு இருக்கிறது. இந்த இடைவெளிக்கான காரணம் என்ன?
வேத கால ஆரியர்கள் இந்திய பூர்வ குடிகளை எதிகொண்ட போது தங்களுடைய வேதச்சடங்கியல் அடையாளங்களின் மூலமும் அகமண முறையின் மூலமும் தங்களை வேறுபடுத்திக் காட்ட முடிவு செய்தார்கள். அதை இன்று வரை நடைமுறைப்படுத்தவும் செய்கிறார்கள். இப்போதும் நடைமுறையில் வேதங்களின் புனிதம், மந்திரங்களின் புனிதம், பிராமணர்களின் புனிதம், என்று தொடர்கிறது. பின்னால் வந்த உபநிடதகால சிந்தனையாளர்கள் தங்களுடைய வைதீகத்தைக் காப்பாற்றிக் கொள்ள புனிதத்தை நிலைநிறுத்த, மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட சடங்கியல்களைத் தாண்டி தத்துவக்காப்பும் தேவை என்று கருதியிருக்கிறார்கள். அது அந்தக் காலகட்டத்தின் அவசியமாகவும் இருந்திருக்கிறது. நாடோடிச் சமூக பொருளாதார அமைப்பில் உருவான சடங்கியல் முறைகள் மாறிக்கொண்டிருந்த நிலப்பிரபுத்துவ காலப்பொருளாதாரச் சூழலுக்குப் பொருத்தமற்றதாக இருந்ததினால் மக்கள் மத்தியில் பௌத்தமும், சமணமும், வேறு சமய மரபுகளும் வளரத்தொடங்கின.ஆக வேதகால புனிதத்தைக் காப்பதற்கு உபநிடதங்கள் தோன்றின. அவை தோன்றிய போது சடங்கியல் முறைகளை மறுப்பது போலத் தோற்றம் காட்டினாலும் மேலே குறிப்பிட்டதைப் போல கர்ம காண்டமாகவும் ஞான காண்டமாகவும் தங்களுடைய கலாச்சார அரசியலை செய்து வருகின்றன.
வேதங்களில் சொல்லப்படுகிற சடங்கியல் முறைகளுக்கும் உபநிடதங்களில் சொல்லப்படுகிற பிரம்மம் குறித்த தத்துவத்தேடலுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. வேதங்களும் உபநிடதங்களும் ஒன்றுகொன்று எதிரானதாகவே தோன்றியிருக்கின்றன. வேதங்களின் சாரமாக உபநிடதங்கள் இல்லை.
துணை நூல்கள் – 1. வேதாந்தத்தின் கலாச்சார அரசியல்- ந.முத்துமோகன்
2. அம்பேத்கர் தொகுப்பு நூல்கள்
Tuesday, 26 May 2015
வேதங்களின் அறம்
அறம் என்றும் அறவுணர்ச்சி என்றும் அறவிழுமியங்கள் என்றும் பலவாறு சொல்லப்படுகிற சொல்லின் அரத்தம் என்ன? மனித குல வரலாற்றில் எப்போதும் அறவிழுமியங்கள் ஒன்று போல இருந்திருக்கிறதா? எல்லாக்காலத்துக்கும் பொதுவான அறம் என்ற ஒன்று இருக்கிறதா? வேதகாலம் பொற்காலம் என்றும் அதில் உன்னதமான அறவிழுமியங்கள் இருந்ததாகவும் கூறப்படுவது உண்மையா? அப்படி ஏதேனும் அறவிழுமியங்கள் இருந்தால் அவை எப்படிப்பட்டவையாக இருந்தன?
அறம் என்றால் அந்தந்தக்கால சமூக வாழ்க்கையில் உருவான மதிப்பீடுகள், தர்ம அதர்மக்கோட்பாடுகள், நாகரீக வளர்ச்சியினால் பெறப்படும் மதிப்பீடுகள், அறிவியல் வளர்ச்சியினால் ஏற்படும் மாற்றங்கள் குறித்த மதிப்பீடுகள், என்று சொல்லலாம். இந்த சமூக அறவிழுமியங்கள் தனிமனிதர்களையும், சமூகத்தையும் தார்மீகமாக அல்லது மானசீகமாகக் கட்டுப்படுத்துகிறது. சமூகத்தின், தனிமனிதர்களின் பொது வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் நன்மை, தீமைகளைச் சொல்கிறது. பண்பாடு, பழக்கவழக்கங்களைக் காப்பாற்றுவதற்கு உதவுகிறது. சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகளின் வழி சமூக மனதையும், தனி மனித மனதையும், கட்டமைக்கிறது. கிட்டத்தட்ட அந்தந்தக்கால சமூகப்பொருளாதார அமைப்பின் ஆன்மாவாகச் செயல்படுகிறது எனலாம்.
உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்திக்கருவிகளுக்கும் இடையில் ஊடாடும் உறவையே நாம் உற்பத்தி உறவுகள் என்கிறோம். இந்த உற்பத்தி உறவுகள் நீடித்திருக்க உற்பத்தி சக்திகளைக் கையில் வைத்திருக்கும் ஆளும் வர்க்கமானது பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, நீதிநெறிமுறைகளை, சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயங்களை, உணவு, உடை, உறையுள், முதலான லௌகீக வாழ்க்கையை, இவையெல்லாவற்றின் அடிப்படையில் உருவாக்கிய அறவிழுமியங்களை நடைமுறைப்படுத்துகிறது. அதற்கு தன்னுடைய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது. தன்னுடைய இருத்தலை நியாயப்படுத்துகிற விதத்தில் கலை, இலக்கியம், அறிவியல், பண்பாடு, சட்டம், நீதி, மதம், என்று எல்லாவிதங்களிலும் தன்னுடைய ஆக்கிரமிப்பை மக்கள் மனங்களின் மீது செலுத்துக்கிறது. இந்த கலாச்சாரமேலாண்மை மூலம் தன் அதிகாரத்துக்குத் தேவையான இசைவை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறது. உற்பத்திசக்திகளின் நிலைத்த தன்மைக்கு அறவிழுமியங்களும் அவசியம் என்று தெரிகிறது.
வர்க்க சமூதாயத்தில் வர்க்க அறமே மேலோங்கியிருக்கும். முதலாளித்துவம் தனக்குச் சாதகமான அறவிழுமியங்களையே பிரச்சாரம் செய்யும். முன்னெடுக்கும். இதற்கு மாற்றாக பாட்டாளிவர்க்கம் வரலாற்றிலுள்ள முற்போக்கான அறவிழுமியங்களையெல்லாம் தொகுத்து ஒரு மாற்று, புதிய பாட்டாளி வர்க்க அறவிழுமியங்களை முன்னெடுக்கும். அதற்கு முதலில் எல்லாக்காலத்துக்கும் பொதுவான அறம் என்ற ஒன்றும் எல்லாவர்க்கத்துக்கும் பொதுவான அறம் என்ற ஒன்றும் கிடையாது என்பதை புரிந்து கொள்வோம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதால் அறவிழுமியங்களும் மாறும். அப்படியானால் வேதகாலத்தில் எப்படிப் பட்ட அறவிழுமியங்கள் இருந்தன?
சிந்து வெளி நாகரீகத்தின் பொற்காலம் என கி.மு.2500 ஆம் ஆண்டைக் குறிப்பிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் தான் ஆரியர்கள் சிந்துவெளிப்பிரதேசத்துக்குள் நுழைகிறார்கள். அதாவது இந்தியாவில் ஆரியர்கள் கி.மு. 1500 –க்கு முன்னால் வந்திருக்க வாய்ப்பில்லை. வேதங்களில் மிகப்பழமையான ரிக் வேதத்தை முதலில் இயற்றிய ரிஷிகளான பரத்வாஜரும், வசிஷ்டரும், விஸ்வாமித்திரரும், குறைந்தது முந்நூறு வருடங்களுக்குப் பின்னால் வந்தவர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ரிக் வேதத்தில் ஆரியர்களுக்கும் சிந்து வெளி மக்களுக்கும் இடையில் நடந்த சண்டை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த சண்டையாகக் காட்டப்படுகிறது. அதன் பிறகு ஆரிய மன்னர்களான திவோதாஸ்-சுதாஸ் காலமான கி.மு. 1200 ஆம் ஆண்டு வரையிலான காலம் பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்தில் இல்லை.
ஆரியர்கள் கால்நடை மேய்ச்சலும் விவசாயமும் கலந்த ஒரு பொருளாதாரத்தைக் கொண்ட அரை நாடோடிகளாகவும் இருந்தனர். அப்போது அவர்களிடையே எந்த உடமை வர்க்கமும் உருப்பெறவில்லை. ஒருவகையான ஆதிப்பொதுவுடைமை சமுதாயமாக இருந்ததெனக் கருதலாம். மேய்ச்சல் நிலம் தேடியே வந்தவர்கள். சிந்துவெளியில் அப்போதிருந்த நாகரீக வளர்ச்சி என்பது பழங்குடிச்சமூகத்திலிருந்து கிட்டத்தட்ட புராதன நிலவுடைமைச் சமூகமாக மாற்றமடைந்திருக்கும் நிலைமையை ஒத்திருந்தது. வர்க்க வேறுபாடுகள் தோன்றியிருந்தன என்பதை அங்கிருந்த குடியிருப்புகள் காட்டுவதாக தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அவ்வளவு முன்னேறிய சமூகத்தையே நாகரீகத்தில் மிகவும் பின் தங்கிய காட்டுமிராண்டிகாலத்தின் உயர்ந்த நிலையில் இருந்த ஆரியர்கள் அழித்திருக்கிறார்கள்.. எனவே ரிக், வேதத்தில் உள்ள பாடல்களில் பாரம்பரியமாக தாங்கள் வணங்கும் இந்திரன் முதலான கடவுள்களின் புகழைப்பாடியும், எதிரிகளை வெற்றி கொள்ள வேண்டியும், அதற்காக சோமபானம் அருந்த வேண்டியும், வேள்விகளைப் பற்றியும், உடல் நலம், செல்வம், நீண்ட ஆயுள், பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது. இதில் எதிரிகளாக தாசர்களையும் தஸ்யூக்களையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். வேதகாலத்துக்கு முன்பும் பல ஆரிய இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்குள்ளும் சண்டை நடந்திருக்கிறது. இப்படி முழுக்க முழுக்க யுத்தங்களைப் பற்றிய பாடல்கள் கொண்டதே ரிக் வேதம். இந்த யுத்தமும் சமயக்கோட்பாடுகளின் வேற்றுமையினால் விளைந்ததாகவே ரிக் வேதம் சொல்கிறது. யாகங்களையோ, பலிகளையோ செய்யவில்லை, இந்திரனைக் கும்பிடவில்லை, எனவே ஆரியரல்லாத அவர்களை அழிக்க வேண்டும். ரிக் வேதத்தின் ஒவ்வொரு பாடலிலும் அதைப் பாடிய ரிஷி குறிப்பிட்ட நோக்கத்தை அடைய விரும்பி குறிப்பிட்ட கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்கிற பாடல்களின் தொகுப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம்.
” நீங்கள் எப்போது யக்ஞம் செய்தாலும் தேவர்களான இந்திரனையும், அக்னியையும், புகழத் தவறாதீர்கள். அவர்கள் நிலையை உயர்த்தி அவர்களது புகழைக் காயத்திரி சந்தத்தில் பாடுங்கள்” ( ரிக் வேதம் 1.21.2 )
” இந்திரன், வருணன், அக்னி, ஆகியோரின் மனைவியர் என் வீட்டுக்கு வந்து சோமரசம் பருக விரும்புகிறென்.”
“ ஓ இந்திரனே நீ வீரன். நீ வந்து நாங்கள் தயாரித்திருக்கும் சோமரசத்தைப் பருகி எங்களுக்குச் செல்வத்தைக் கொடு. உனக்கு நிவேதனம் கொடுக்காதவர்களின் செல்வத்தைக் கொள்ளையடித்து அதை எங்களுக்குக் கொடு.” ( ரிக் வேதம் 1.81-8-9 )
” இந்திரனே எங்களைக் காப்பாற்றும்! நீர் எங்களைப் பகைவர்களிடமிருந்து பாதுகாப்பவர். நீர் எங்கள் விருப்பங்களை நிறைவேற்றுபவர். மலைகளைத் தூளாக்கும் வஜ்ராயுதம் படைத்தவர் நீர். குதிரைகள் மேல் சவாரி செய்யும் நீர் எங்களுக்கு பலவித உணவு வகைகளையும், செல்வங்களையும் வழங்குவீர்! “ ( 6-17-2 )
இதைத்தவிர அறநெறிகளாகவோ, ஆன்மீகதத்துவமாகவோ மனிதனை ” உயர்ந்த “ நிலைக்குக் கொண்டு செல்பவை என்று எதையும் சொல்ல முடியாது. சரி ரிக் வேதம் தான். இப்படி யென்றால் யஜூர் வேதம் வேள்விச் சடங்குகளுக்கான மந்திரங்களைப் பற்றிய தொகுப்பு. அசுவமேத யாகத்தில் என்ன மந்திரங்களை ஓத வேண்டும். ராஜசூய யாகத்தில் என்ன மந்திரங்களை ஓத வேண்டும் என்பது போன்ற பாடல்களின் தொகுப்பு எனலாம். அவையும் பெரும்பாலும் ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டவையே.
பிந்தைய வேதமான அதர்வண வேதத்தில் பேய், பிசாசு, பில்லி,சூனியம் நோய்நொடி, இவற்றை விரட்டுவதற்கான மந்திரங்களின் தொகுப்பு. உதாரணத்துக்கு, காய்ச்சலுக்கெதிரான மந்திரம், மலச்சிக்கல், சிறுநீர் போகாமை இவற்றுக்கான மந்திரம், கண்டமாலை நோய்க்கெதிரான மந்திரம், பொறாமையைச் சாந்தப்படுத்தும் மந்திரம், எலும்பு முறிவுக்கு மந்திரம், குழந்தைகளிடம் காணப்படும் புழுக்களுக்கெதிரான மந்திரம், பாம்பு நஞ்சுக்கெதிரான மந்திரம், கணவனை அடைவதற்கு மந்திரங்கள், கருத்தரிப்பதற்குத் தாயத்தாக கையில் அணியும் காப்பு, சுகப்பிரசவத்துக்கு மந்திரம், பெண்ணின் தீவிர அன்பைப் பெறுவதற்கு மந்திரம், ஆணின் தீவிர அன்பைத் தூண்டுவதற்கு மந்திரம், ஆணின் ஆண்மையை அழிக்கும் மந்திரம், குழந்தைக்கு முதல் இரண்டு பல் ஒழுங்கின்றி முளைப்பதன் தோஷத்தை நீக்கும் மந்திரம், கால்நடைகள் செழிக்க மந்திரம், சூதாட்டத்தில் வெற்றி பெற பிரார்த்தனை, என்று அன்றாட வாழ்வின் அத்தனை விஷயங்களுக்கும் மந்திரங்கள், மருத்துவம் என்று நிரம்பி வழிகிறது அதர்வண வேதம். சாம வேதமோ ரிக் வேதத்தை கிட்டத்தட்ட திரும்பச்சொல்வதைப் போன்றது. நாகரிகத்தின் ஆரம்பநிலையில் இருந்த ஒரு இனக்குழுவின் வாழ்க்கைப்பிரச்னைகள் அதற்கான கற்பனையான தீர்வுகளாகவே அதர்வண வேத சுலோகங்கள் இருக்கின்றன.
ஆரியமொழி பேசிய இனக்குழுக்கள் மேய்ச்சல் வாழ்க்கையிலிருந்து நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கியிருந்து வேளாண் சமூகமாக மாறத் தொடங்கிய காலத்தில் எழுதப்பட்ட வேதங்களில் நாகரிகமற்ற, புராதன, தொன்மங்களைச் சமயங்களாகக் கொண்ட ஒரு மக்கள் திரளின் சமயக்கோட்பாடே வெளிப்படுகிறது. அந்தச் சமயக்கோட்பாட்டுக்கு எதிரான அல்லது மாற்றான சமயக்கோட்பாட்டைக் கொண்டவர்களை எதிரிகளாகப் பாவித்ததும் அவர்களை வெற்றி கொள்ள தங்களுடைய இஷ்ட தெய்வங்களைப் போற்றி பிரார்த்திக்கும் பாடல்கள் நிறைந்தது. உணவு, உடை, உறையுள், பாலியல் உறவுகள், பழக்கவழக்கங்கள் ஆகிய எல்லாவற்றிலும் புராதன இனக்குழு சமுதாயத்தின் எச்சங்கள் இருப்பதைக் காணமுடிகிறது. எந்த வேதத்திலும் மனிதனை மேன்மைப்படுத்தும் அறநெறிகள் இல்லை.
வேதங்களில் எந்த அறவிழுமியங்களும் இல்லை என்று வேதகாலத்திலேயே ஆதிப்பொருள்முதல்வாதிகளான சார்வாகர்கள், பிரகஸ்பதிகள் முழங்கியிருக்கிறார்கள்.
“ அக்னிஹோத்திரம், மூன்று வேதங்கள், சன்னியாசி, திரிதண்டம், சாம்பலைப் பூசிக்கொள்வது இவையெல்லாம் ஆண்மையும் அறிவும் இல்லாதவர்களுக்கு வயிறு வளர்க்கும் வழிகளே..” என்றும்
“ சிரார்த்தம் நடத்துவது இறந்தவர்களுக்குத் திருப்தியளிக்கும் என்றால் இங்கேயும்கூட பயணம் செய்பவர்கள் புறப்படும்போது அவர்களுக்கு உணவுப் பொருட்களைக் கொடுத்து விடுவது அவசியமில்லை…..”
“ வேதங்கள் மூன்று குறைபாடுகளால் கறைப்பட்டுள்ளது.- உண்மையில்லாதது, தனக்குத் தானே முரண்படுவது, கூறியது கூறல் என்பவை இந்த முரண்பாடுகள்..”
என்றும் கூறுகிறார்கள். நாகரிகத்தின் ஆரம்பநிலையில் உள்ள விசித்திரமான சித்திரங்களே வேதங்கள். இந்த விசித்திரங்களையோ, காலத்துக்கு ஒவ்வாத பிரார்த்தனகளையோ, வேள்விகளையோ யாரும் கேள்வி கேட்டு விடக்கூடாதென்பதற்காகவே வேதங்கள் புனிதமானவை என்றும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவையென்றும் வெளிப்படையான தோற்றத்தை விட உள்ளார்ந்த ரகசியங்கள் நிரம்பியது என்றும் வேதங்களைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் சுழல வைக்கப்படுகிறது. மனுவின் வர்ணாசிரமம் இந்திய சமூகத்தை பிறப்பின் அடிப்படையில் வருணங்களாகப் பிரித்தது. சாதிகளாகப் பிரித்தது. சாதிவாரியாகத் தொழில்களைப் பிரித்தது. எல்லா சாதியினருக்கும் சாஸ்திர சடங்கியல், வழிபாட்டு முறையில் படிநிலைகளை ஏற்படுத்தி அதன் சிகரத்தில் பிராமணியத்தை வைத்ததன் மூலம் இந்து சமூகத்திற்கு நிர்வாகரீதியான சட்டத்திட்டங்களை, தண்டனைகளை உருவாக்கியது மனுவின் வர்ணாசிரமம். இந்த கூம்பு வடிவ சமூக அமைப்பிற்கு தலைமையில் பிராமணர்களும் அடுத்தடுத்த கீழ்நிலையில் மற்றவர்களையும் வைத்தது. இந்துத்வ பழமைவாதிகள் தங்களுடைய உண்மையான நோக்கம் தெரியாமலிருக்க தங்களுடைய நோக்கங்களுக்கு புனிதத்தையும் பழம்பெருமையும் வேண்டி வேதங்களைக் கையிலெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கங்கே வேளாண்மை செய்த அரைநாடோடி இடையர் குலம் தங்களுடைய புராதன சமய வழிபாடு, தெய்வங்கள், நம்பிக்கைகள், வேண்டுதல்கள், பிரார்த்தனைகள், இனக்குழு பழக்கங்கள் இவைகளைப் பற்றி பாடித் தொகுத்த தொகுப்பே வேதங்கள். மற்றபடி வேதங்களில் என்றும் நிலைத்திருக்கும் அறவிழுமியங்கள் என்று ஒரு சுக்கும் இல்லை.
துணை நூல்கள்- 1. பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் தொகுப்பு நூல்கள்
2. ரிக் வேதகால ஆரியர்கள்-ராகுல்ஜி
3. வேதங்கள் ஒரு ஆய்வு- சனல் இடமருகு
4. பண்டைக்கால இந்தியா – டி.என்.ஜா
நன்றி - வண்ணக்கதிர்
Tuesday, 19 May 2015
சடங்கு சாஸ்திரம் பெண்கள் – ஒரு பார்வை
உதயசங்கர்
பெரும்பாலான வீடுகளில் குடும்பத்தாரின் ஆன்மீக நடவடிக்கைகளை வீட்டுப்பெண்களே தீர்மானிக்கிறார்கள்.அஷ்டமி, நவமி, ராகு, குளிகை, எமகண்டம், சூலம், பரிகாரம், ஜாதகம், ஜோசியம் ராசி, லக்கினம், நட்சத்திரம், நாள், கிழமை, நட்சத்திரம், பூஜை, புனஸ்காரங்கள், நைவேத்தியங்கள், நேர்த்திக்கடன்கள், மற்றும் விரதங்கள், அமாவாசை, பௌணர்மி, ஏகாதசி, துவாதசி, சஷ்டி சதுர்த்தி, கார்த்திகை, சிவராத்திரி, மஹாசிவராத்திரி, என்று நாள் தவறாமல் விரதங்களையும் பெண்கள் தங்களுடைய குடும்பத்தாரை முழுமையாகவோ, பகுதியாகவோ கடைப்பிடிக்கச் செய்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், தினசரி வீட்டு வாசலில் கோலம் போடுவது, வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் வீட்டை மொழுகிச் சுத்தம் செய்வது, மாலையில் குத்துவிளக்கை ஏற்றி மாலை சூடி, பூஜை செய்வது, என்று பக்தி மணம் கமழ வீட்டை மாற்றி விடுகிறார்கள். இதோடு பெயர்ச்சிகள் வேறு. குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி, கிரகணங்கள், என்று பெயர்ச்சிகளின் போது குடும்பத்தாரின் யோகங்களைப் பற்றிய கவலைகள். அதற்குப்பரிகாரங்கள் என்று அனுகணமும் மதத்தின் சாஸ்திர சம்பிரதாயங்களைத் தவறாமல் கடைப்பிடிக்கிறார்கள் பெண்கள்.
ஏற்கனவே வீட்டு நிர்வாகத்தை இருபத்திநாலு மணி நேரமும் செய்துகொண்டேயிருக்கும் பெண்களின் தலையில் குடும்பத்தின் நலன்களைப் பராமரிக்க சாஸ்திர சம்பிரதாய சடங்குகளைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம். கணவர், குழந்தைகள், வீடு, என்று எப்போதும் சிலந்தி வலையில் மாட்டிய ஈயைப் போல உழன்று கொண்டேயிருக்கிறார்கள். பெரும்பாலான ஆண்கள் இதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை அல்லது கவலைப்படாத மாதிரி நடந்து கொள்கிறார்கள். “ அதெல்லாம் அவுக டிபார்ட்மெண்ட்..” என்று மேம்போக்காய் சொல்லி விட்டு ஒரு சடங்கு விடாமல் எல்லாவற்றையும் கிரமமாய் செய்வார்கள் ஆண்கள். இதில் மதங்களுக்கேற்றவாறு சாதிகளுக்கேற்றவாறு சடங்குகள் சாஸ்திரங்கள் மாறலாம். அவ்வளவு தான். மதத்தின் சாஸ்திர சம்பிரதாயங்களை இவ்வளவு கர்மசிரத்தையோடு, செய்கிற பெண்களைப் பற்றி இந்த சடங்கு, சாஸ்திரங்களைச் செய்யச்சொல்கிற மனு தர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா?
“ வேதங்களைப் படிப்பதற்குப் பெண்களுக்கு உரிமையில்லை அத னால் அவர்களின் சடங்குகள் வேதமந்திரங்கள் இல்லாமல் நடத்தப்படவேண்டும். மதத்தைப் பற்றி பெண்களுக்கு எந்த ஞானமும் கிடையாது. ஏனெனில் வேதங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு உரிமையில்லை. பாவத்தைப் போக்குவதற்கு வேத மந்திரங்களை உச்சரிப்பது பயனுள்ளதாகும். பெண்களால் வேதமந்திரங்களை உச்சரிக்க முடியாததாகையால் அவர்கள் பொய்யைப் போன்றவர்கள். “
( 18. ஒன்பதாம் அத்தியாயம் மனுதர்ம சாஸ்திரம் அம்பேத்கார் நூல்தொகுப்பு 36 )
அறிவு பெறும் உரிமையை மறுத்துவிட்டு அவர்களுக்கு எந்த ஞானமும் கிடையாது என்றும் அவர்கள் பொய்யைப் போன்றவர்கள் என்றும் இழிவு படுத்துகிறது மனுதர்ம சாஸ்திரம். இப்படி பெண்களின் ஆன்மீக உரிமையை புறந்தள்ளுவது மட்டுமல்லாமல் அவர்களுடைய இருத்தலையே இழிவானதாகச் சித்தரிக்கின்றன கீழ்க்கண்ட விதிகள்.
“ இந்த உலகில் ஆண்களை மயக்கி தவறான வழியில் செல்லத்தூண்டுவது பெண்களின் இயல்பாகும். அந்த காரணத்திற்காகவே விவேகமுள்ளவர்கள் பெண்களுடன் சகவாசம் செய்யும்போது உஷாராயில்லாமல் ஒருபோதும் இருக்க மாட்டார்கள். “ ( 213, அத்தியாயம் 2 மனுதர்மசாஸ்திரம் )
“ ஏனெனில் இந்த உலகில் பெண்கள் ஒரு முட்டாளை மட்டுமின்றி ஒரு கல்விமானையும் பாதை தவறிச் செல்லச் செய்வதற்கும் மற்றும் தமது விருப்பத்திற்கும், கோபத்திற்கும் அடிமையாக்குவதற்கும் வல்லமை உடையவர்கள். “ ( 214. அத்தியாயம் 2. மனுதர்மசாஸ்திரம் )
“ அவர்களை உருவாக்கும்போது கடவுள் பெண்களுக்கு அவர்களின் பதவி, நகைகள், ஆகியவற்றின் மீது பிரேமையையும், மற்றும் தூய்மையற்ற விருப்பங்கள் ஆங்காரம், நேர்மையற்ற தன்மை, தீங்கான கெட்ட நடத்தை, ஆகியவற்றை உடையவர்களாகவும் படைத்தார். “
( 17. அத்தியாயம் 9 மனுதர்மசாஸ்திரம்)
பெண்களை இழிவு படுத்தும் மனு, புத்தருக்குப் பின் வந்தவர். புத்த மதம் செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில் பெண்களுக்கு இருந்த சுதந்திரத்தை பறிக்கவும், இழிவுபடுத்தவும் இத்தகைய விதிகளை எழுதியுள்ளார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
ஆதி மனிதகுலத்தில் நிலவி வந்த தாய்வழிச்சமூகத்தில் பெண்ணே தலைமைப் பொறுப்பை வகித்து வந்தாள். வேட்டைச்சமூகமாக இருந்தவர்கள் நிலையாக ஓரிடத்தில் வாழத்தொடங்கிய பின்னர் விவசாயம் வளர வளர கிடைத்ததைப் பகிர்ந்துண்ட வேட்டைச்சமூக மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. தேவையைத் தாண்டிய உபரி தனிச்சொத்துடமையை அறிமுகம் செய்தது. தனிச்சொத்துடமையின் விளைவாகவே பெண்ணின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டது. குறிப்பாக பெண்களின் பாலியல் சுதந்திரம்.
ஒரு காலத்தில் உற்பத்தி / மறு உற்பத்தியின் குறீயீடாக பெண்ணின் யோனி வணங்கப்பட்டது. அப்போது தாயே வாரிசுகளுக்கு அடையாளமாக இருந்தாள். ஆண்களுக்கு முக்கியத்துவம் இல்லை. சொத்துடமை தோன்றிய பிறகு ஆண் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நாட்டத் தொடங்கினான். அதற்காகவே பெண்ணின் பாலியல் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த விரும்பினான். பெண்ணின் பாலியல் சுதந்திரத்தின் பத்தினி / பரத்தை என்று ஆணை மையமாக வைத்து எதிர்மைகளை உருவாக்கினான். உற்பத்தியின் ஊற்றாக இருந்த யோனி இப்போது பாவக்குழியாகியது. உற்பத்தியின் முன்னறிவிப்பான பூப்பு இப்போது தூமையென்று இழிவானதாக, தீட்டாக, உருவகிக்கப்பட்டது. இந்தத் தீட்டை உற்பத்தி செய்கிற பெண்ணும் இழிவானவளாக கருதப்பட்டாள்..
பெண்கள் தங்கள் விருப்பம் சார்ந்து பாலியல் தேவைகளை நிறைவேற்றுவது பாவம் என்றும் அதற்குக் கடுமையான தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டன / நிறைவேற்றப்படுகின்றன. இதில் எல்லாமதங்களும் ஒன்று போல கை கோர்த்து செயல்படுவது யதேச்சையானதாகக் கருத முடியாது. அவர்கள் உலவும்சமூகவெளியைச் சுருக்கி வீட்டுக்குள் முடக்கினார்கள். அதோடு அவர்களின் அறிவுச்சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தி கல்வியை மறுத்தார்கள். வீட்டிலும் கூட பெண் சுதந்திரமானவளாக இருக்க அநுமதிக்கப்படவில்லை.
“ ஒரு சிறு பெண்ணோ, ஓரு இளம் பெண்ணோ, அல்லது வயதான பெண்ணும் கூட - தனது சொந்த வீட்டிலும் கூட - எதையும் சுதந்திரமாகச் செய்யக்கூடாது. “ ( 147. அத்தியாயம் 5 மனுதர்மசாஸ்திரம் )
“ குழந்தைப் பருவத்தில் ஒரு பெண் தனது தகப்பனாருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இளமைப்பருவத்தில் தனது கணவருக்கும், கணவர் இறந்ததற்குப் பின்னர் தனது மகன்களுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஒரு பெண் ஒருபோதும் சுதந்திரமாக இருக்கக்கூடாது.”
( 148. அத்தியாயம் 5. மனுதர்மசாஸ்திரம் )
ஏன் பெண் சுதந்திரமாக இருக்கக்கூடாது? மீண்டும் வாசிக்க 213. அத்தியாயம் 2-டை. பெண்ணின் புழங்குவெளியைச் சுருக்குவதன் மூலம் அவளுடைய பாலியல் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவே இந்த இழிமொழிகள். எனவே வீடு, வீட்டின் மூலையில் சமையலறை, இரவானால் படுக்கையறை, தன் கணவன், மக்கள் நலனைத் தவிர சமூகத்தில் எதைப்பற்றியும் கவலைப்படமுடியாத அளவுக்கு சாஸ்திரங்கள், சடங்குகள், என்று தன்னை இழிவு படுத்துகிற மதத்தின் கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையில் இருக்கிறாள்.
அதுமட்டுமில்லாமல் பிறந்ததிலிருந்து ஆடை, ஆபரணங்கள், அலங்காரங்கள், தலைமுடி வளர்த்து பூச்சூடி, பொட்டிட்டு, அறிந்தோ அறியாமலோ ஆண்களின் கண்களுக்குக் காமப்பண்டமாகவும், அதே ஆடை அலங்கார விவகாரங்களே பெண்ணின் விலங்குகளாகவும் மாறி விடும் விந்தையினை நாம் பார்க்கிறோம். பெண்ணை வெறும் உடலாகப் பார்க்கும் ஆணாதிக்கம் அதன்மீது தன் வக்கிரங்களை எழுதிப்பார்க்கிறது. பெண்ணின் சமூகஅதிகாரம் பறிக்கப்பட்டபிறகு நடந்த வரலாற்றின் சுவடுகளில் பெண்ணின் இரத்தமும் தெறித்திருக்கின்றன. பெண்ணின் பாலியல் சுதந்திரம் பறிக்கப்படுவதற்கு சாதித்தூய்மை அல்லது இனத்தூய்மைக் கொள்கையும் ஒரு காரணம். இன்றளவும் சாதியத்தூய்மையைக் காப்பாற்றும் காவலாளியாகப் பெண்ணையே பொறுப்பாக்குகிறார்கள். வர்ணாசிரம அதர்மத்தின் அரிய கண்டுபிடிப்பான அகமணமுறையின் மூலம் சாதியத்தூய்மையைக் காப்பாற்ற பெண் நிர்ப்பந்திக்கப்படுகிறாள். இந்த அகமணமுறையக் காப்பாற்றவே வர்ணாசிரமத்தைக் காப்பாற்றவே இத்தனை சடங்குகளும் சாஸ்திர சம்பிரதாயங்களும் உருவாக்கப்பட்டன. அவற்றை தீட்டு / புனிதம் என்ற கருத்தாக்கங்களின் மூலம் மனங்களில் விதைத்து வளர்ப்பதன் மூலம் நிலை பெறச்செய்கின்றனர் சநாதன வாதிகள்.
கொடுமை என்னவென்றால் எந்த அநீதியான இழிவான கற்பிதமான நெறிகளைச் சொல்லி பெண்ணின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தினார்களோ அந்த நெறிகளை பெண்களே மனமுவந்து ஏற்றுக் கொள்ள வைத்திருப்பதில் தான் சநாதனத்தின் சாமர்த்தியம். எந்த சாஸ்திர சம்பிரதாய சடங்குகளிலும் பெண்களை முன்னிறுத்துவதில்லை. ஆனால் பெண்கள் அதைப்பற்றி எந்த எதிர்ப்புமின்றி அந்த சடங்குகளையும் சாஸ்திரங்களையும் கறாராகக் கடைப்பிடிக்க நினைக்கின்றனர். அப்படி கடைப்பிடிக்கவில்லையென்றால் தன்னுடைய குடும்பநலன் பாதிக்கப்படும் என்று நம்பவைக்கப்பட்டிருக்கிறாள்.
பெண்ணுக்குச் சொத்தில்லை என்று மனுதர்மசாஸ்திரம் அத்தியாயம் 9-ல் 416 ஆம் விதி கூறுகிறது. பெண்களை அடிக்கலாம் என்று அத்தியாயம் 8-ல் 299 ஆம் விதி கூறுகிறது. இதெல்லாவற்றையும் விட கொடிய விதி அத்தியாயம் 11-ல் 67-ஆம் விதி கூறுகிறது.
“ குடிகாரர்கள், ஸ்திரிகள், சூத்திரர்கள், வைசியர்கள், அல்லது ஷத்திரியர்கள், மற்றும் கடவுள் நம்பிக்கையில்லாதவர்களைக் கொல்வது ஆகிய யாவும் சிறிய குற்றங்களேயாகும். “
பிராமணர்களைக் கொல்வது மட்டுமே பெரும்பாதகம். மற்றவர்களையெல்லாம் கொல்வது சிறிய பாவம் என்று மனுதர்மத்தில் எழுதப்பட்டிருக்கிறது. பெண்களை ஒரு பொருட்டாகவே மதிக்காத மனுதர்மத்தைக் கடைப்பிடிக்க நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சடங்குகளிலிருந்து, சாஸ்திரங்களிலிருந்து பெண்கள் தங்களை விடுவிக்காதவரை மனிதகுல விடுதலை முழுமையடையாது.
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்.


Show details
