இந்து மதம் ஒரு
கற்பிதமா?
உதயசங்கர்
முதலில் இந்து என்ற பெயர் மதம்
சார்ந்ததோ, இனம் சார்ந்ததோ, சாதி சார்ந்ததோ இல்லை என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது
அவசியம். இந்து என்ற வார்த்தை பூகோளரீதியாகவே தோன்றியிருக்கிறது. சிந்து அல்லது இண்டஸ் நதியைச் சுற்றியிருந்த நிலப்பகுதியில்
வாழ்ந்தவர்களைக் குறிக்கும் சொல்லாகவே அது குறிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலத்தில்
வசித்த அனைவரும் பூகோளரீதியாக இந்துக்கள் என்று அழைக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இது புதிய
குடியேறிகளின் பார்வையில் ” மற்றவர்கள் “ ( OTHERS ) என்ற அர்த்ததிலேயே இருந்தது. அதே
போல ஆரம்ப கால வெளிநாட்டுத் தொடர்புகளின் மூலமாக இந்தியாவுக்குள் வந்தவர்களை இனரீதியாக
துருக்கியர் என்றோ, பூகோளரீதியாக யவனர் என்றோ, கலாச்சார ரீதியாக மிலேச்சர் என்றோ (
அதாவது சமஸ்கிருதம் பேசாதவர்கள், சாதியமைப்புக்கு வெளியில் இருந்தவர்கள், தூய்மையற்றவர்கள்,
கீழ்ச்சாதியினர், பழங்குடியினர், மற்றும் அந்நியர்கள் ( அவர்கள் உயர்செல்வாக்குடையவர்களாக
இருந்த போதிலும் அனைவரும் மிலேச்சர் தான் ) அழைக்கப்பட்டனர். எனவே ஆரம்பகாலங்களில்
மக்களுக்கு மத அடையாளம் இல்லை.
மதம் என்ற கருத்தாக்கமே பத்தொன்பதாம்
நூற்றாண்டில் பிரிட்டிஷாரின் வருகைக்குப் பின் இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட ஒன்று.
வெள்ளைக்காரர்களுக்கு இங்குள்ள பல சமயப்பிரிவுகளைப் புரிந்து கொள்ள முடிய வில்லை. அவர்கள்
தங்களுடைய மதமான கிறித்துவ மதத்தைப் போல ஒற்றை நிறுவன மதத்தை கற்பனையாக உருவாக்கினர்.
மதம் என்ற கருத்தாக்கத்துக்கு சகல அதிகாரம் கொண்ட ஒற்றை நிறுவனம், திருச்சபை, ஒற்றைக்கடவுள்,
கடவுளின் தூதர், ஒற்றைப்புனித நூல், என்ற அக உறுப்புகள் கொண்டது. உதாரணத்திற்கு கிறித்துவமாக
இருந்தால் கத்தோலிக்க திருச்சபை, கடவுளாக பிதா, கடவுளின் தூதராக ஏசு, புனித நூலாக பைபிள்,
என்று பார்க்கலாம். ஆனால் அப்படி ஒரு ஏற்பாடே இந்து மதத்தில் கிடையாது. ஏன்?
..சமயம் என்பது நிறுவனமயமாகாத
சிறு குழுக்கள் தனித்தனியாகவோ, சேர்ந்தோ, இனரீதியாகவோ, சாதி ரீதியாகவோ, ஏராளமான தெய்வங்களை
வழிபடும் முறை என்று கூறலாம். இந்தச் சமயக்குழுக்கள் தங்கள் வழிபாட்டுச் சடங்கியல்
முறைகளில் மிகுந்த வேறுபாடுகளும் மாறுபாடுகள் கொண்டவர்கள். ஆதியிலிருந்தே ஏராளமான சமயக்குழுக்களே
இங்கிருந்தன ஆரியர்கள் வேதமரபான ஸ்ருதி ( வேதங்கள் ), ஸ்மிருதி ( வேதங்களின் துணை நூல்கள்,
தர்ம சாத்திர நூல்கள் ), இவைகளை அடிப்படையாகக் கொண்டே தங்களுடைய சமய மரபைக் கடைப்பிடித்தனர்.
அவர்களுக்கு முன்பு இங்கே இருந்த பழங்குடியினரை தஷ்யூக்கள் என்று அழைத்ததும் அவர்களோடு
போரிட்டதும் சமய வழிபாட்டு சடங்கியல் வேறுபாடுகளுக்காகவே. எனவே ஆரியர்களின் தர்மசாத்திரக்கோட்பாட்டின்
படி இரு பிறப்பாளர்களான ( துவிஜர் ) பிராமணர், சத்திரியர்,களுக்கு மட்டுமே ஆரம்பத்தில்
வேதங்களை ஓதவும், கேட்கவும் உரிமையுண்டு. எனவே வேதங்கள் எல்லோருக்குமான புனித நூலாக
எப்போதும் இருந்ததில்லை.
ஆதியில் வேதமதமான பிராமண மதமும்,
பௌத்த, சமண, ஆசீவகம் இணைந்த சிராவண மதமுமே இரு பெரும் சமயக்குழுக்களாக இருந்திருக்கின்றன.
பிராமண மதத்திற்கும், சிராவண மதத்திற்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் இருந்தன. பிராமணியத்துக்கும்
சிராவணத்துக்கும் இடையிலான பகை கடுமையாக இருந்தது. வேத மதமான பிராமணிய மதத்தில் யாகச்சடங்குகளே
முக்கியப்பங்கு வகித்தன. அஸ்வதமேத, புருஷ, ராஜ சூய, என்று யாகங்களும் பலிகளும் மட்டுமே
கொண்டது யாகச்சடங்குகளை மட்டுமே வலியுறுத்திய வேத மரபிலிருந்து விக்கிரக வழிபாட்டை
மேற்கொண்ட புராண மதம் தோன்றியது. வேதங்கள் காற்றில் சுயமாக உருவானது அதாவது அபௌருஷயம்
என்று வைதீக மரபும், வேதங்கள் சிவனால் அருளப்பட்டது என்று சைவர்களும் வேதங்கள் விஷ்ணுவால்
அருளப்பட்டது என்று வைணவர்களும் நம்புகின்றனர்.
அதன் பிறகு புராண மதக்கடவுள்களாக
சிவனும் விஷ்ணுவும் பிரதானப்பாத்திரங்களை ஏற்றார்கள். சைவர்கள் வைணவர்களுக்கு எதிராகவும், வைணவர்கள் சைவர்களுக்கெதிராகவும்,
இருவரும் வேத மதத்தினருக்கெதிராகவும் சண்டையிட்டனர். இவர்கள் மூவரும் சேர்ந்து சிராவணப்பிரிவுகளைச்
சேர்ந்து எதிர்த்தனர்.. இவையெல்லாவற்றையும் எதிர்த்தன சிராவணப்பிரிவுகளான பௌத்தம்,
சமணம், ஆசீவகம், சாக்தம். இந்தப் பிரிவுகளின்றி, தாந்தரீக வழிபாடு, தாய்த்தெய்வ வழிபாடு,
நாட்டார் சமய மரபுகள் என்று நூற்றுக்கணக்கான பிரிவுகளும் வேறுபட்ட சடங்கியல் வழிபாட்டு
முறைகளோடு முரண்பட்டு நின்றார்கள். வெகு மக்களைப் பொறுத்தவரை சாதி இருந்தது சாமி இருந்தது.
சடங்கு இருந்தது. இதை மட்டுமே தங்களுடைய அடையாளங்களாகக் கொண்டிருந்தனர். இத்துடன் வேதகாலத்திலேயே
தோன்றிய நாத்திக மரபான சாருவாகம்,இருந்தது.
இந்தியச் சமூக அமைப்பைப் புரிந்து
கொள்ளவும், நிர்வாக நலனுக்காகவும், இந்திய மக்களை வகைப்படுத்தி, தொகுக்கும் வேலையைத்
தொடங்கியது. 1871 – ஆம் ஆண்டு டபிள்யூ.ஹெச்.எல்லீஸ் என்ற ஆங்கிலேய அதிகாரியின் தலைமையில்
சென்சஸ் எடுக்கப்பட்டது. அத்துடன் அவர் “ THE CODE OF HINDU LAW “ என்னும் கட்டுரையையும்
எழுதினார். அதோடு இந்திய சமூகத்தை ஆங்கிலேயக்கிறித்துவக்கண் (அதாவது ஒற்றைமதக்கோட்பாடு ) கொண்டு பார்த்ததின்
விளைவாக அனைத்து சமயக்குழுக்களும் ஒற்றை மதத்தின் குடைக்குக் கீழ் கொண்டுவரப்பட்டனர்.
ஸ்மார்த்தம், சைவம், வைணவம், காளி வழிபாடு, முருகவழிபாடு, தாந்திரீக வழிபாட்டு, தாய்த்தெய்வ
வழிபாடு, சாக்தம், சாங்கியம், என்று எண்ணற்ற மாறுபட்ட முரண்பட்ட சமயங்களைக் கொண்டவர்களை
இந்து என்ற ஒற்றை வார்த்தையில் அடைத்து வைத்தனர். கெடுவாய்ப்பாக அந்த இந்து என்ற அந்த
ஒற்றை வார்த்தையின் சிம்மாசனத்தில் வேத பிராமணர்களான ஸ்மார்த்த மரபினர் உட்கார வைக்கப்பட்டனர்.
அதே ஆங்கிலேயர்கள் இந்து மதத்தை உருவாக்கிய மாதிரி இந்து மதக்கோட்பாட்டையும் உருவாக்கினர்.
புனித நூலாக வேதங்களையும் பகவத்கீதையையும் இந்து மதச்சட்ட நூலாக மனு தர்மசாஸ்திரத்தையும்
முன் வைத்தனர். சைவ ஆகமத்தையும் வைணவ ஆகமத்தையும் புறந்தள்ளினர். அதுமட்டுமல்லாமல்
மனுதர்ம சாஸ்திரத்தை அங்கீகரித்ததின் மூலம் கொடிய சாதியப்படிநிலைகள் நிலைத்திருக்க
வழி செய்து விட்டனர்.. இப்படித்தான் வரலாற்றில் நவீன இந்து மதம் கற்பிதமாக உருவாக்கப்பட்டது.
மறைந்த சந்திரசேகர சங்கராச்சாரியார் அவருடைய தெய்வத்தின் குரல் என்ற நூலில் சென்சஸ்
எடுத்து எல்லாசமயக்குழுக்களையும் இந்து என்ற ஒரே குடையின்கீழ் தன்னுடைய அதிகாரத்தின்
வழியாக ஒன்று திரட்டியதைப் பாராட்டுகிறார் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
“ நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக்
கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம்
பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் ‘ஹிந்து’ என்று
பெயர் வைத்திருக்காவிட்டால், ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருக பக்தர்,
பிள்ளையார் உபாசகர், ஐயப்பன் பக்தர், எல்லையம்மனைக் கும்பிடுகிறவர் என்று நம்மைப் பிரித்துக்
கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம். இப்போது ‘ஹிந்து சமூகம்’ என்று பொதுப்
பெயரில் சொல்லப்படும் சமுதாயத்தை இப்படி ஏழெட்டாகத் தனித்தனி மதம் என்று பிரித்துவிட்டால்,
அதற்கப்புறம் ஒவ்வொர் ஊரிலும் முஸ்லீம், கிறிஸ்துவர்கள் போன்ற மதஸ்தர்கள்தான் அதிகத்
தொகை இருப்பார்கள். அதாவது, இப்போது தேசத்தின் இரண்டு பக்கங்களில் மட்டும் பாக்கிஸ்தான்
முளைத்திருப்பதுபோல் இல்லாமல், நம் தேசம் முழுவதுமே பாக்கிஸ்தானாகியிருக்கும். எத்தனையோ
கிருத்திருமங்கள் செய்து பாக்கிஸ்தானைப் பிரித்த அதே வெள்ளைக்காரன்தான், எத்தனையோ யுக்திகள்
செய்து நம்மை ஆரியர்-திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன் தன்னையும்
அறியாமல் நமக்கு ‘ஹிந்து’ என்று பொதுப் பெயரைத் தந்து, இன்று இந்தியா தேசம் என்று ஒன்று
இருக்கும் படியான மகா பெரிய நன்மையைச் செய்திருக்கிறான்! “
ஆங்கிலேயர்கள் உருவாக்கிய இந்து
மத அடையாளமே அவர்களுக்கு எதிரான அரசியல் அணி திரட்டலுக்குப் பயன்படுத்தப்பட்டது. வேதகாலப்பழமையைப்
போற்றவும் வர்ணாசிரமத்தை உறுதிப்படுத்தவும், புராண இதிகாசங்களை விடுதலைப்போராட்டத்துக்கான
பிரசாரக்கருவிகளாக மாற்றிய புதிய நடுத்தரவர்க்கம் தோன்றியது. இந்த நடுத்தர வர்க்கம்
ஒரே நேரத்தில் பழமையான சாநானதனத்தைப் போற்றவும், நவீன மாற்றங்களை வரவேற்கவுமான இரட்டை
முகத்தை காட்டியது. பழமையைப் போற்றிய பிராமணிய நடுத்தர வர்க்கம் மாறி வரும் புதிய அரசியல்
சூழலில் தன்னை மேலாதிக்க சக்தியாக மாற்றிக் கொள்ள, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற இந்து
கலாச்சார தேசிய வாதத்தை உருவாக்கியது. அதுவே இன்று ஆர்.எஸ்.எஸ்ஸாக, பாரதிய ஜனதாவாக
உருமாறி பாசிச வழியில் செல்ல முயற்சிக்கிறது. இந்தியாவின் பன்முக சமய வழிபாட்டு முறைகளையும்,
நம்பிக்கைகளையும், கோட்பாடுகளையும் ஒற்றைக் கலாச்சாரக் கொடுங்கரத்தால் அடக்க நினைக்கிறது.
அதற்காக வரலாற்றைத் திருத்தவும் மாற்றவும் புரட்டி எழுதவும் முனைகிறது. கற்பனையான இந்து
மதத்தின் ஒற்றைக்கலாச்சாரத்திற்கெதிராக இந்தியாவின் பாரம்பரியமான பன்முகக்கலாச்சாரத்தை
முன்னெடுக்க வேண்டியது இப்போதைய அவசர அவசியக்கடமை.
நன்றி- தீக்கதிர் 4-6-15