Saturday 30 June 2012

பூனை குறுக்கே போனா!

 

உதயசங்கர்

OciCatB_004

பூனை குறுக்கே போனா என்ன? என்னவா. சரியாப்போச்சு. போகிற வேலை நடக்காது. எடுத்த காரியம் உருப்படாது. அதாவது நாம் ஒரு காரியத்துக்காகப் புறப்பட்டு போகும் வழியில் ஒரு பூனை குறுக்கே போனால் அன்று அந்த வேலை நடக்காது. அப்படியா ?

இதைச் சகுனம் என்று சொல்கிறார்கள் . அடிக்கடி சகுனம் சரியில்லை என்று சொல்லக் கேட்டிருக்கிறீர்களா ? சரி சகுனம் என்றால் என்ன? நடக்கப்போவதைப் பற்றி முன்கூட்டியே தெரிவிக்கிற சிக்னல்கள் அல்லது சமிக்ஞைகள் என்று சொல்லப்படுகிறது. இது உண்மையா/ இல்லை.

அறிவியல் சரியாக வளராத காலத்தில் நமது தாத்தாக்களுக்கு, தாத்தாக்களுக்கு, தாத்தாக்கள் நடந்த நிகழ்ச்சிகளுக்கு அவர்களுக்குத் தெரிந்த விளக்கத்தைச் சொல்லி வைத்து விட்டுப் போய் விட்டார்கள். அவைகள் எல்லாம் மூட நம்பிக்கைகளாக வளர்ந்து விட்டன.

அப்படின்னா தாத்தாக்கள் சொன்னதெல்லாம் தப்பா? இல்லை. அப்படிச் சொல்லமுடியாது. பழைய காலத்தில், மனிதர்கள் தங்களுடைய கஷ்டங்களுக்கும், நஷ்டங்களுக்கும், காரணம் தெரியாமல் தவித்தார்கள். அதே போல் தற்செயலாக நடக்கிற பல விஷயங்களும் அவர்களுக்குப் புரியவில்லை. எல்லாத்துக்கும் காரணம் தேடினார்கள். அப்போது தற்செயலாகப் பாதையின் குறுக்கே போன பூனை அன்று நடக்காமல் போன காரியத்துக்குக் காரணமாக ஆகிவிட்டது. உடனே பூனை மனிதர்களுடைய வாழ்வில் ஒரு கெட்ட சகுனமாக மாறி விட்டது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், மனிதர்களை விட குறைந்த அறிவுள்ள பூனையால் நாம் செய்யப் போகிற காரியத்தை நடக்கவிடாமல் செய்ய முடியுமா? யோசித்துப் பாருங்களேன்.

பூனை ஏன் பாதையின் குறுக்கே போகிறது? பாதையிலோ, சாலையிலோ, இடது புறமாகவே நடக்க வேண்டும் என்பது நமக்கு மட்டும் தானே. மிருகங்கள், பறவைகள், பூச்சிகளுக்குக் கிடையாதே. அவற்றுக்கு எங்கே உணவு கிடைக்குமோ அந்த இடத்தை நோக்கிப் போகும் இல்லையா? எலிகள் இருக்கும் இடத்தைத் தேடியோ, பாலும் தயிரும் இருக்கும் இடத்தைத் தேடியோ பூனை அங்கும் இங்கும் வரும் போகும் இல்லையா?

இப்படித் தன் பாட்டுக்கு சாப்பாட்டுக்கு அலைகிற அப்பிராணியைப் போய் நம்முடைய காரியத்தை நடக்கவிடாமல் செய்வதாகச் சொல்வது நியாயமா?

இது மூடநம்பிக்கையா. இல்லையா.

அடுத்ததாகப் பல்லி, சுவர்களில் விளக்கு வெளிச்சத்துக்கு வரும் பூச்சிகளைத் தின்பதற்கு அலைவதை நாம் பார்த்திருக்கிறோம். அது சுவரில் நடப்பதற்கு தன் ஐந்து விரல்களுக்கு நடுவே வெற்றிடத்தை உருவாக்குகிறது. அதன் மூலம் சுவரைப் பற்றிக் கொண்டு நடக்கிறது. தலைகீழாகவும், அதனால் இரையைப் பிடிக்க ஓட முடிகிறது. அதன் வேகம், பதுங்கி வாலைச் சுழட்டியபடி நாக்கை வினாடிக்கும் குறைவான நேரத்தில் பூச்சிகளை லவட்டுகிற லாவகம். பார்க்க, பார்க்க நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இல்லையா!

அந்தப் பல்லியையும் எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே குறி சொல்கிற மூடநம்பிக்கைக்குள் இழுத்து வந்து விட்டார்கள். எப்படித் தெரியுமா?

பல்லி சொல்லும் பலன், பல்லி விழும் பலன், என்று இரண்டு விதமாகப் பிரித்துச் சகுனம் சொல்லியிருக்கிறார்கள். கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது சரி தானா?

சுவரில் பறந்து வந்து ஒட்டுகிற சிறு பூச்சிகளை நோக்கி வேகமாகப் போகும் போது எப்போதாவது அதன் பிடிமானம் தவறாதா? அப்படி அதன் நிலை தவறிக் கீழே விழும்போது மனிதர்கள் யாராவது இருந்தால் அவர்கள் மீது தானே விழும். அதற்குப் பல்லி பொறுப்பாக முடியுமா? அப்படி விழும்போது, சரி இவன் காலில் விழுவோம் என்றோ, அவன் தலையில் விழுவோம் என்றோ, இன்னொருத்தன் கையில் விழுவோம் என்றோ முடிவு செய்தா விழும்?

சரி எங்கே விழுந்தாலும் உயிர் பிழைக்க வேண்டும் என்கிற பதட்டம் தானே அதுக்கு இருக்கும். பாவம் அதைப் போய் தலையில் விழுந்தால் கலகம், நெற்றியில் விழுந்தால் பதவி என்று மனிதர்களுடைய உறுப்பு வாரியாகப் பலன் எழுதியிருக்கிறார்களே! வேடிக்கையாக இல்லை.

எங்கே விழுந்தாலும் பாவம் பல்லி. இசகு பிசகா விழுந்துட்டா பல்லியல்லவா செத்து விடும். யோசித்துப் பாருங்கள்.

வீட்டுச் சுவரில் அலைந்து கொண்டு அற்பமான பூச்சிகளைத் தின்று வாழும் பல்லியினால் நமது வாழ்க்கையில் நடக்கப் போகிற நிகழச்சிகளைத் தீர்மானிக்க முடியுமா? அறிவியல் பூர்வமாக இதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா?

அடுத்ததாக பல்லி ஏன் கத்துகிறது? பொதுவாக இரண்டு காரணங்கள் இருக்கும். ஒன்று உணவை அதாவது பூச்சிகளைப் பார்த்து சப்புக் கொட்டி எழுப்பும் ஒலி. அல்லது பெண் துணையைத் தேடி ஆணோ, ஆண் துணையைத் தேடிப் பெண்ணோ, இனப்பெருக்கத்துக்காக அழைக்கும் ஒலி. இல்லையென்றால் எதிரியுடன் சண்டையிடும் போதோ, எதிர் பாராத வேதனையின் போதோ, ஒலி எழுப்பலாம்.

ஆனால் இதைப் போய் பல்லி மனிதர்களுக்குப் பலன் சொல்கிறது என்று மனிதர்களாக நினைத்துக் கொண்டால் பாவம் பல்லி என்ன செய்யும்? இப்படியான மூடநம்பிக்கையை என்னவென்று சொல்வது? அதிலும் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு திசையில் இருந்து கொண்டு பல்லி குரல்கொடுத்தால் ஒவ்வொரு விதமான பலன் உண்டாகுமாம்.

பல்லிக்குக் கிழமை தெரியுமா?

பல்லிக்குத் திசை தெரியுமா?

என்ன முட்டாள்த்தனம்!

ஆறறிவு படைத்த மனிதனால் செய்ய முடியாத ஒரு காரியம் ஒரு பல்லி தன்னுடைய கீச்சுக் குரலில் கத்துவதால் மட்டும் நடந்து விடுமா?

யோசித்துப் பாருங்கள்!

பூனை, பல்லியோடு மட்டும் விடவில்லை. ஆந்தை கத்தும் பலன், காகம் கரையும் பலன், கழுதை கத்தும் பலன், கருடனைப் பார்க்கும் பலன் என்று எதையும் விட்டு வைக்கவில்லை.

நல்லவேளை சிங்கம் கர்ஜிக்கும் பலன், புலி உறுமும் பலன், என்று சொல்லாமல் விட்டார்கள்!

இவைகளையெல்லாம் அறிவியல்பூர்வமாக, பகுத்தறிவுப்பூர்வமாக கடுகளவாவது ஏற்றுக் கொள்ள முடியுமா?

தாத்தாக்களுக்குத் தாத்தாக்களுக்குத் தாத்தாக்கள் சொன்னவை எல்லாவற்றையும் நாம் அப்படியே சரி என்று ஏற்றுக் கொள்ள முடியுமா? முடியாது. ஏன்?

அறிவியல் வளர்கிறது. மனிதர்களின் அறிவும் அநுபவமும் வளர்கிறது. எனவே சகுனம் என்றும், பல்லி, ஆந்தை, கருடன், கழுதை சொல்லும் பலன்கள் என்றும் சொல்லி மனிதனின் வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளக் கூடாது.

பூனை குறுக்கே போவதைப் பார்த்து எலிகள் பயந்து ஓடி ஒளியலாம்.

ஆனால் நாம் மனிதர்கள்.lizard

Friday 29 June 2012

பேனா தொலைந்து போகவில்லை

 

உதயசங்கர்

296354_223030614425623_100001560597711_608844_2065706084_n

கலை தன்னைத் தேர்ந்து கொண்டவர்களை சூதின் புதிர்வழிகளுக்குள் சிக்க வைக்கிறது. விந்தையான வாழ்வின் கணந்தோறும் கலைஞன் தன்னை இழந்து கொண்டேயிருக்கிறான். ரத்தப்பலி கேட்கும் இந்த வாதனையை மிகுந்த மகிழ்ச்சியோடே ஏற்றுக் கொள்கிற கலைஞனுக்கு தன் கலையைத் தவிர மற்ற எல்லாமே இரண்டாம பட்சம் தான். தன்னுடைய உன்னதமான வாழ்வுக்காக அல்ல மானுடத்தின் உன்னதவாழ்வுக்காகவே கலைஞன் தன் வாழ்நாள் முழுவதும் போராடுகிறான். இந்தப் போராட்டத்தில் பட்டினி கிடக்க நேர்ந்தாலும் கஞ்சனின் கைப்பணம் போலத் திரும்பத் திரும்பத் தன் கலையை உச்சிமுகர்ந்து நெஞ்சோடணைத்துக் கொள்கிறான். ஆனால் வாழ்க்கை சவால் விட்டுக் கொண்டே செல்கிறது. கைக்கும் வாய்க்குமான போராட்டத்தில் தன் கலையின் அத்துகளைக் கரையான்கள் அரித்து விடாமல் பாதுகாத்து வருவதே மிகப் பெரிய சாதனை.

கடந்த இருபது வருடங்களாகத் தான் எழுதிய கதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கும் மு.அப்பணசாமி எண்பதுகளில் கோவில்பட்டியிலிருந்து வேர் விட்டுக் கிளம்பிய இலக்கிய ஆளுமைகளில் ஒருவர். சுதந்திரப் பத்திரிகையாளராக, வாய்மொழி வரலாற்று ஆசிரியராக, நாடக ஆசிரியராக, எல்லோராலும் அறியப் பட்டவர். ஆறாம்திணை என்ற முதல் இணைய இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். அவருடைய பேனா தொலைந்து போனது என்ற சிறுகதைத் தொகுப்பில் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளினூடாக ஆழ்ந்த அர்த்தத்தைத் தேடிப் பயணப்படுகிற கதைகளாகக் கோர்க்கப் பட்டிருக்கின்றன.

சலிப்பூட்டும் அன்றாட வாழ்வின் கசங்கல்களின் இருளில் கலைஞனே தன் கலை மொழியின் மூலம் புதிய வெளிச்சத்தைக் காட்டுகிறான். பெரும்பாலான கதைகளில் பெண் என்ற படிமம் தன் பன்முகதரிசனத்தைக் காட்டுகிறவளாக உருவாகியிருக்கிறாள்.வாழ்வின் கொடூரங்களுக்குத் தன்னைப் பலி கொடுத்தவளாக வருகிறாள். “ தாயீயாக” அழிந்தபோதில் அக்காவாகக் ”கிணற்றில்” அம்மாவாகப் “ பஞ்சினிருளில் “ கண்ணம்மாவாக ”விரல்களின் ஸ்ருதியில் “ என்று அழுத்தமான சித்திரங்களாக மனதில் பதிகிற பெண்கள் நம்மைக் கலங்க வைக்கின்றனர். அதே போல விட்டேத்தியான, வன்முறை நிறைந்த ஏலாத அப்பாக்களும் வருகிறார்கள். தொகுப்பில் விரவிக் கிடக்கிற கதைகளின் வழியே அம்மா அப்பாவின் ஆகிருதிகள் வளர்ந்து வருவதை உணர முடிகிறது.

எல்லா எழுத்தாளர்களுக்குமே பழைய நினைவுகளைப் போற்றுதல் என்பது ஒரு இயல்பான குணாதிசயம். அப்பணசாமியும் பேனா தொலைந்து போனது, அனாந்தரம், நான் ஊருக்குத் திரும்பிப் போய்க் கொண்டிருக்கிறேன் அங்கு யாரும் இல்லை. போன்ற கதைகளின் வழியே தன் பால்ய கால வாழ்க்கையை, எழுதிப் பார்க்கிறார். மனித மன விகாரங்களைச் சொல்லும் கதைகளாக, இது கதையல்ல், அகம் பிரம்மாச்மி, பாஷாணகிரந்தம், போன்றவை திகழ்கின்றன.

தமிழில் மிகவும் அருகிப்போன உருவகக்கதையை நரிக்குரல் சிம்மம் வழியே எழுதியிருக்கிறார் அப்பணசாமி. வேலையின்மையின் வெம்மையை, வீட்டின் நெருக்குதல்களை, புளிச்சக்கைகளுக்கு நடுவே வெண் தாள் சுவடிகள் கதைகளிலும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். அதிலும் குறிப்பாக புளிச்சக்கைகளின் நடுவே என்ற கதையின் வெறுமை நம்மை மூச்சடைக்க வைக்கிறது.

முதலில் இருக்கக்கூடிய மூன்று கதைகளும் மிகச் சமீபத்தில் எழுதப்பட்ட கதைகள் என்பது மொழி நடையிலும் உத்தியிலும் வெளிப்பட்டிருக்கிறது. மற்ற கதைகளின் மொழி அபூர்வமான கவித்துவமும் நுட்பமும் கூடிய மொழியாக அமைந்துள்ளது.

‘ ஆட்டு மந்தை போல் கடல் காற்று உடலை உராய்ந்து உராய்ந்து நீவி விட்டது’

-அனாந்தரம்

‘ குட்டியான செட்டைகள் கொண்ட குருவியின் மனம் அலையும் தூரத்துக்கும், நீண்ட செட்டைகள் கொண்ட கிறீச்சிட்டான் பறவையின் மனம் அலையும் தூரத்துக்கும் தன் மனதைப் படர விட்டு, சுண்டி இழுத்தாள்’.- தாயீ

’ தனது ஆழம் காணமுடியாது வறண்டு கிடந்த மனதைப் போல கானல் சுரந்து புதைந்த பள்ளம் போல வெட்ட வெளியில் ஒரு கிணறு’- கிணறு

‘ கான்கிரீட் கண்கள் நிறைந்த கபாலங்களாகக் கட்டிடங்கள் ‘- முரண் சிதைவு

நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் ஊசலாடி ஊசலாடி அவநம்பிக்கையின் இருள் பள்ளத்திலேயே விழுகிறவர்களாக அப்பணசாமியின் கதாபாத்திரங்கள் இருக்கின்றனர். இன்றைய வாழ்வின் நெருக்கடியும், அவலமும், அது தானே. ஒவ்வொரு கதையிலும் மொழிநடை, உத்தி, பாணி, என்று வெவ்வேறு விதமாக பரிசோதனை முயற்சிகளைச் செய்து பார்த்திருக்கிறார் அப்பணசாமி. இருளின் விதவிதமான வர்ணஜாலங்களைப் பிரதிபலிக்கிற தனித்துவமான கதைகளை எழுதியுள்ளார். வளமான தமிழ்ச் சிறுகதை உலகிற்கு பேனா தொலைந்து போனது மூலம் தன் அழுத்தமான வரவைப் பதிவு செய்திருக்கிறார்.

காலத்தின் நீள்பரப்பில், வாழ்க்கைப்போராட்டத்தில் கசப்பை விழுங்கி, விழுங்கி, கைத்துப் போன மன உலகில் தன்னை அவநம்பிக்கைவாதியென்று பிரகடனப்படுத்த வேண்டிய அளவுக்கு கொண்டு தள்ளியிருக்கிற சமூகச் சூழலில் அப்பணசாமி என்ற கலைஞன் தன் கலையின் மூலம் தன்னை நிருபித்துக் கொண்டிருக்கிறார். அதற்குப் பெரும் சாட்சியாக பேனா தொலைந்து போனது என்ற இந்தத் தொகுப்பு விளங்குகிறது. அப்பணசாமியின் கைப்பான புன்னைகையின் மீது கலை தன் ஒளியை வீசுகிறதே…….

பேனா தொலைந்து போனது

அப்பணசாமி

விலை – 60/

வெளியீடு – பாரதி புத்தகாலயம்

சென்னை -600018

நன்றி- புத்தகம் பேசுது.

Thursday 28 June 2012

இனிக்கும் திராட்சை

உதயசங்கர்red-fox-and-grapes-shakila-malavige

அன்று இருட்டியதிலிருந்தே நரியாருக்கு எதுவுமே சாப்பிடக் கிடைக்கவில்லை. என்றுமே இப்படி நடந்தது கிடையாது. பொழுது அடையும் போது படுத்து உறங்கிய புதரிலிருந்து வெளியே வந்து உடம்பை நெளித்து நீட்டி நீண்ட கொட்டாவி விடுவார் நரியார்.

தலையை உதறி கண்களை அகலத் திறந்து பார்த்தால் எதிரே அவர் தின்பதற்கு ஏதாவது தயாராக இருக்கும். ஒரு முயல் மேய்ந்து கொண்டிருக்கும். ஒரு காட்டுக் கோழி உட்கார்ந்து கொண்டிருக்கும். ஒரு கௌதாரி பம்மிக் கொண்டிருக்கும். அட, ஒண்ணுமில்லைன்னா ஒரு காட்டெலியாவது அலைந்து திரிந்து கொண்டிருக்கும். உடனே மின்னலடித்த மாதிரி மூளை சுறுசுறுப்படையும். உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் ரத்தம் துடிக்கும். அப்படியே பாய்ந்து அதை லபக்கென்று பிடித்து உணவாக்கிக் கொள்வார். அப்படிச் சாப்பிடும் போதே பற்களையும் துலக்கிக் கொள்வார்.

ஆனால் இன்னிக்கு அதிசயமாய் இருக்கிறது. தூங்கி எழுந்து வெளியே வந்து பார்த்தால் ஒரு சுடுகுஞ்சியைக் கூடக் காணவில்லை. ஒரு முயலோ,ஒரு எலியோ, அட ஒரு வெட்டுக்கிளியைக் கூடப் பார்க்கமுடியவில்லையே. எல்லோரும் வேறு காட்டுக்கு ஓடிப் போய் விட்டார்களா? நரியாருக்கு எதுவும் புரியவில்லை. பசி வயிற்றைக் கவ்வியது.

உணவைத் தேடி ஓட வேண்டிய நிலைமை வந்து விட்டதே. காற்றில் மூக்கால் வாசனையை உறிஞ்சி உறிஞ்சிப் பார்த்தது. பசியும் அதிகரித்துக் கொண்டே வந்தது. ஆனால் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தார் நரியார். இதுவரை கண்ணுக்கு எதுவுமே அகப்படவில்லை. என்ன சோதனை இது?

நிலவு பொழிந்து கொண்டிருந்தது. கொஞ்சம் நின்று யோசிக்கலாம் என்று நினைத்த நரியார் சட்டென நின்றார். சுற்றும் முற்றும் பார்த்தார். காட்டை விட்டு வெகுதூரம் வந்திருந்தார் நரியார். ஏதோ ஒரு வாசனை காற்றில் மிதந்து வந்தது. ஒரு பழவாசனை. சரி இன்னிக்கு சைவச்சாப்பாடு தான் என்று முடிவு செய்து கொண்டார். பழவாசனையை முகர்ந்து கொண்டே அதன் பின்னால் ஓடினார்.

திராட்சைப் பழத்தோட்டம். அங்கே திராட்சைப் பழங்கள் கொத்துக் கொத்தாய் பழுத்துத் தொங்கிக்கொண்டிருந்தன. நன்றாகப் பழுத்த கருந்திராட்சைப் பழங்கள். நரியாரின் நாக்கில் எச்சில் ஊறியது. உடனே நரியார் நல்ல வாகான தூரத்தில் போய் நின்று திரும்பி ஓடி வந்து துள்ளிக் குதித்தார். பழங்களைத் தொடக் கூடமுடியவில்லை. திரும்பவும் போய் ஓடி வந்தார். ம்ஹூம்..

சோர்வாய் இருந்தது. அப்போது அவருடைய கொள்ளுத் தாத்தா சொன்ன கதை ஞாபகத்துக்கு வந்தது. அதான் ச்சீ..ச்சீ..இந்தப் பழம் புளிக்கும் என்று தாத்தா சொன்னாரோ. கிடைக்கலன்னா இப்படி ஏதாச்சிம் சொல்லிக் கிட வேண்டியதான். அப்படியே திராட்சை கொடி நிழலில் உட்கார்ந்து யோசித்தார். திரும்பிப் போய் வேறு உணவு தேடலாமா என்று நினைத்தார். இத்தனை முறை முயற்சி செய்தும் கிடைக்கவில்லயே. இல்லை. கொள்ளுத்தாத்தாவைப் போல் மனந்தளரக் கூடாது. மாத்தி யோசிக்க வேண்டும். என்ன செய்யலாம்? சில நொடிகளில் பளிச் சென்று ஒரு யோசனை வந்தது.

சுற்றும் முற்றும் பார்த்தார் நரியார். ஒரு பெரிய கல் கிடந்தது. அதை மூக்கால் தள்ளிக் கொண்டு வந்தார். திராட்சைப் பழங்களுக்குக் கீழே வைத்து விட்டு, கல்லிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளிப் போய் நின்றார். ஓடி வந்து அந்தக் கல்லில் முன்கால்களை ஊன்றி பின்கால்களை காற்றில் உதைத்து ஓங்கி ஒரு குதி குதித்தார்.

என்ன ஆச்சரியம்!

குதித்திறங்கிய நரியாரின் வாயில் ஏராளமான பழக்குலைகள். மேலும் நிறையப் பழங்கள் தரையில் விழுந்து சிதறின.

வயிறு முட்ட அந்தப் பழங்களைத் தின்றார்.

பின்பு “ அடடா.. இந்தப் பழம் இனிக்கும்..” என்று சொல்லிக் கொண்டே காட்டைப் பார்த்து ஓடினார்.

Wednesday 27 June 2012

கடைசியாய் ஒரு வாய்ப்பு

உதயசங்கர்

sher-christopher-1

இன்னும் கூட

கடைசியாய் ஒரு வாய்ப்பு

உங்களுக்கு இருக்கிறது

நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதற்கும்

இறந்து கொண்டிருப்பதற்குமிடையில்

கடைசியாய் ஒருவாய்ப்பு

உங்கள் மதுக்கோப்பையிலிருந்து

கடைசிச் சொட்டு உங்கள் நாவை நோக்கி

பேரரருவியென வீழும் முன்னால்

உன்மத்த இசைக்கோவை

உங்கள் மூளைவெளியைத்

தன் நாவால் சுருட்டி விழுங்கும் முன்னால்

இருள் தன் சிறகுகள் வீசி ஒளியின் இறுதிக்கணத்தை

தன் அடி வயிற்று மடிப்புகளில்

மறைத்துக் கொள்வதற்கும் முன்னால்

ஒரு விபத்து தன் குரூரக்கரங்களால்

உங்களை அரவணைக்கும் முன்னால்

அதிகாரக் கொலையாளியின் கரங்களில்

உயிர் குடிக்கும் கைவாளாய்

ஏதுமறியாத நீங்கள் மாறுவதற்கும் முன்னால்

கடைசியாய் ஒரு வாய்ப்பு

வாழ்வின் இக்கணமே காத்திருக்கிறது

நீங்கள் கடந்தும் சென்றிருக்கலாம்

கவனிக்காமலும் சென்றிருக்கலாம்

ஆனாலும் இன்னும்கூட

கடைசியாய் ஒரு வாய்ப்பு.

Tuesday 26 June 2012

கொண்டையில்லாத சேவல்

மலையாளத்தில்- மாலிsculptures71

தமிழில்- உதயசங்கர்

 

அந்தச் சேவலுக்கு ஒரு கெட்டகுணம் இருந்தது. தேவையில்லாமல் அதிகமாய் பேசுவான். ஒருமுறை அவன் கூனன்பூனையைப் பார்த்தான். அவனிடம்,” டேய்! கூனா..உசுப்பிராணின்னா தலையில் கொண்டை வேணும்..உன் தலையில் கொண்டை இல்லை..அதனால நீ உசுப்பிராணியே இல்லை..” என்று சொல்லி முடிக்கும்முன்பே கூனன்பூனை பாய்ந்து ஒரு கடி! சேவல் தலைக் கொண்டை பூனையின் வாயில்!

அன்றிலிருந்து அந்தச் சேவலுக்கு ஒரு பட்டப்பெயர் உண்டானது-’கொண்டையில்லாச் சேவல்’.

அவன் பக்கத்துவீட்டுக் கோழியிடம்,”ஏடி! நான் மேகத்தைவிட உயரமாகப் பறக்கப் போறேன் தெரியுமா?” என்றான்.

அதற்கு அந்தக் கோழி,”கொண்டையில்லாச் சேவலே! என்ன இருந்தாலும் நீ ஒரு கோழியினம் தானே! அதனால பறப்பே..ஒத்துக்கிறேன்..ஆனால் ரொம்ப உயரமா எல்லாம்முடியாது..ரொம்ப தூரத்துக்கும் முடியாது..உன்னோட ஆசையை நீ விட்ரு!” என்று உபதேசம் செய்தது.

கொண்டையில்லாச் சேவல் விடவில்லை. அவனுக்கு பிடிவாதமும் கௌரவமும் உண்டு. உயரப் பறக்க படித்தே ஆக வேண்டும். அவன் போய் காக்காவைப் பார்த்தான்.

“காக்கா! நீ எனக்குச் சொல்லிக்கொடு..” என்று வேண்டினான்.

அதைக் கேட்ட காக்கா,” கொண்டையில்லாச் சேவலே! நீ கொஞ்சம் அடக்கஒடுக்கமா இருந்துக்கோ..அதான் உனக்கு நல்லது..” என்று சொல்லி விட்டுப் பறந்து சென்றது. கொண்டையில்லாச் சேவல் மைனாவைப் போய்ப் பார்த்தது.

”மைனா மைனா எனக்குச் சொல்லிக்கொடு..”என்று வேண்டினான்.

“கொண்டையில்லாச் சேவலே எனக்கு வேற வேலை இருக்கு...!”என்று மைனா சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விட்டது.

காக்காவும் கைகழுவி விட்டது. மைனாவும் கைகழுவி விட்டது.இவர்களை விட கழுகன் பலசாலி. கொண்டையில்லாச்சேவல் கழுகனைப் போய் பார்த்தான்.

”கழுகா, எனக்குச் சொல்லிக்கொடு..சும்மா ஒண்ணும் வேண்டாம்! தெரியுதா.. எனக்குக் கிடைக்கிற புழுக்கள்ல பாதிப் புழுக்கள் உனக்குத் தாரேன்..” என்று கொண்டையில்லாச் சேவல் சொன்னான்.

“கொண்டையில்லாச் சேவலே! உயரப் பறக்கிறது உனக்கு ஒத்து வராது..சும்மா ஆசைப் பட்டு பிரயோசனமில்லை..நீ உன் வேலையைப் பாரு..” என்று கழுகன் சொன்னான்.

கொண்டையில்லாச்சேவல் விடவில்லை. அவன் கழுகனைத் தொந்தரவு செய்தான். கழுகனுக்கு இரக்கம் வந்தது.

“சரி! நான் சொல்லிக் கொடுக்கிறேன்..முதல் பாடத்தை ஆரம்பிப்போமா..நீ என் முதுகில் ஏறிக்கோ..நான் உன்னைய தூக்கிகிட்டு உயரத்தில் பறக்கிறேன்..”என்று கழுகன் சொன்னான்.

கொண்டயில்லாச்சேவல் உற்சாகமாகி விட்டான். அவன் கழுகனின் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டான். கழுகன் சிறகுகளை விரித்து உயரே பறக்கத் தொடங்கினான்.கொண்டையில்லாச்சேவல் கண்களை மூடிக் கொண்டான்.திறக்கவில்லை. இரண்டு பேரும் எங்கே போயிருந்தாங்க தெரியுமா? தென்னை மரத்தை விட உயரமாய் பறந்து போனார்கள். கொண்டையில்லாச்சேவல் இவ்வளவு உயரமாய் பறப்பது இதுதான் முதல்தடவை. தலை சுற்றுவது போல் இருந்தது.கொஞ்சநேரம் கழிந்தது. அப்போது? கொண்டையில்லாச்சேவல் கீழே பார்த்தது. கீழே..ரொம்ப கீழே..கிடந்தது, பூமி. தென்னைமரமே புல்லு மாதிரி தான் தெரிந்தது.

கழுகன் இன்னும் மேலே பறந்து கொண்டிருந்தான்.கொண்டையில்லாச்சேவல் மிகவும் பயந்து போய்விட்டான்.அவன் கழுகனோட இறகுகளை இறுகப் பிடித்துக் கொண்டான்.பிடியை விட்டால்..அவ்வளவுதான்.முடிஞ்சது காரியம்!

“கழுகா! தயவு செஞ்சு என்னைக் கீழே இறக்கி விடேன்..” என்று கெஞ்சினான்.

ஆனால் கழுகன் உயரே போய்க் கொண்டேயிருந்தான்.கொண்டையில்லாச்சேவலுக்குக் கீழே பார்ப்பதற்கே பயம். அவன் கண்களை இறுக்கி மூடிக் கொண்டான்.

“கொண்டையில்லாச்சேவலே! நான் இப்போ உன்னை தள்ளிவிடப் போறேன்..” என்று கழுகன் சொன்னான்.

”அய்யோ தள்ளிராதே..நான் செத்துருவேன்..என்னைக் காப்பாத்து..உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்..” என்று கொண்டையில்லாச்சேவல் .

“இனிமேல் நீ மேகங்களை விட உயரமா பறக்கணுமா..” என்று கழுகன் கேட்டான்.

“இல்ல வேண்டாம்..” என்று கொண்டையில்லாச்சேவல் சொன்னான்.பின்னர் கழுகன் அவனைக் கீழே இறக்கி விட்டான்.

பக்கத்துவீட்டுக்கோழி “என்னாச்சு உன் முதல்பாடம்..” என்று கேட்டது.

கொண்டையில்லாச்சேவல் கொஞ்சமும் தயங்காமல்,” கழுகன்,காக்கா, மைனா, எல்லாம் மோசமான பறவைங்க..உயரப் பறக்கிறது..அவங்களுக்குச் சரிதான்..கோழியின் அந்தஸ்துக்கு அது தேவையில்லை..” என்று சொன்னான்!

Monday 25 June 2012

காலத்தின் கலைஞன் சாதத் ஹசன் மண்ட்டோ

உதயசங்கர்

Manto-02

முடிவிலியாக ஓடிக் கொண்டிருக்கும் காலம் தனக்கான ஆளுமைகளை வரலாற்றின் வழி உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. காலத்தின் குரலாய் கலைஞனே இருக்கிறான். அவனே இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அத்தனை ஜீவராசிகள் மீதும் பேரன்பு செலுத்துகிறவனாக இருக்கிறான். பிரதிபலன் பாராத பேராறாக ஓடுகிறான். தன்னுடைய சிறிய கைகளினால் இந்தப் பிரபஞ்சத்தையே அரவணைக்கும் பேராவல் கொள்கிறான். உயிர்களின் மீது கொண்ட தீராத காதலினால் பாடல்களைப் பாடிக் கொண்டேயிருக்கிறான். அவனுக்கு எல்லாஉயிர்களும் மகிழ்வோடு வாழவேண்டும் என்பதே லட்சியம். ஏற்றத்தாழ்வில்லாத, சமத்துவமிக்க, யாரும் யார் மீதும் ஒரு துரும்பைக் கூட போடாத, போட்டிகளற்ற, சமநிலை தவறாத, ஜாதி,மதமாச்சரியங்களற்ற, மனிதன் தான் மனிதனாக வாழ்வதில் பெருமிதம் கொள்கிற ஒரு அழகிய உலகமே அவன் கனவு. அந்த கனவு நனவாக அவன் தன் கலையின் மூலம் புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறான். மனிதமன இருளை, இருட்குகையினுள் அடைந்துகிடக்கும் மனவக்கிரங்களை தன் படைப்புகளில் ஆராய்ச்சி செய்கிறான். நாமே அறியாத நம் மனதின் அத்தனை மூலைமுடுக்குகளிலும் அவன் பயணிக்கிறான். அங்கே கொட்டிக் கிடக்கும் சாக்கடையையும், சகதியையும், அள்ளியெடுத்து வெளியே எறிந்து சுத்தப்படுத்துகிறான். அங்கே கலையின் பொன்னொளியால் அன்பெனும் சுடரை ஏற்றுகிறான்.

இந்த பிரபஞ்சத்தை நேசிக்கும் கலைஞன் அதற்காகத் தன்னையே விலையாகக் கொடுக்கிறான். தன் வாழ்வை அர்ப்பணம் செய்கிறான். உலகில் நிகழும் அத்தனைதுயரங்களையும் அவனே அனுபவிக்கிறான். பசியுடன் ஒருவன் இந்த உலகில் இருந்தால் அதற்காக இந்த ஜெகத்தினை அழிக்கும் கோபம் கொள்கிறான். மனித இழிவுகளுக்காக வருந்துகிறான். மனித அவலங்களுக்காக புலம்புகிறான். தன்னைப் பற்றியோ, தன் சுற்றம் பற்றியோ கவலைகொள்ளாமல் எப்போதும் இந்த பிரபஞ்சத்தைப் பற்றியே கவலைப்படுகிறான் கலைஞன். அரசியல்வாதிகளைப் போல அதிகாரத்துக்காக அலைவதில்லை. மக்கள்மீது போலியான அன்பைப் பொழிவதில்லை. அதிகாரத்தில் இருக்கும்போது ஒரு குணமும், அதிகாரத்தில் இல்லாதபோது ஒரு குணமும் கொள்வதில்லை கலைஞன். அவனுடைய அன்பின் நதி எல்லோரையும் அணைத்து ஈரமாக்குகிறது. எல்லோர் மனதிலும் ஈரத்தை ஊற்றெடுக்க வைக்கிறது. எனவே தான் காலத்தில் உருவாகிற கலைஞன் காலத்தைத் தாண்டியும் வாழ்கிறான். எப்படி வாழ்கிறான் கலைஞன்? அறம் சார்ந்த மனிதமதிப்பீடுகளைத் தன் படைப்புகளில் வெளிப்படுத்துவதின் மூலம், காலம் அவனை, அவனுடைய படைப்புகளைப் பொக்கிஷமாகத் தன் இதயத்தில் பாதுகாத்து வைக்கிறது.

அப்படி காலம் போற்றும் கலைஞர்களில் இந்தியத் துணைக்கண்டத்திலேயே தலைசிறந்த படைப்பாளியான சாதத் ஹசன் மண்ட்டோ மிக முக்கியமானவர். உருது இலக்கியத்தின் உன்னதமான படைப்பாளியான மண்ட்டோ தன்னை அழித்து தன் படைப்புகளை உருவாக்கியவர். 1912 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி பிறந்த அவருடைய நூற்றாண்டு இதோ துவங்கியிருக்கிறது. ஆனால் அவருடைய படைப்புகளில் அவர் எதையெல்லாம் பற்றி எழுதியிருந்தாரோ அந்தத் துயரங்கள் எல்லாம் தீர்ந்து விடவில்லை. மாறாக இன்னும் அபாயகரமாகியிருக்கிறது. மதவெறியெனும் பைத்தியக்காரநோய் விடுதலை அடையும் முன்னரே ஒன்றாகவிருந்த இந்தியாவைப் பீடித்து விட்டது. பிரித்தாளும் பிரிட்டிஷ் சூழ்ச்சியாலும், சுயநலமிக்க அரசியல் சக்திகளாலும் உரமேற்றி வளர்க்கப் பட்ட அந்த நோய் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது உச்சக்கட்டத்தில் தலைவிரித்தாடியது. சாமானியர்களைக் கபளீகரம் செய்தது. கண்ணில் பட்ட எல்லாவற்றையும் சூறையாடியது. கொள்ளையடித்தது. கொலைகளைச் செய்தது. காட்டுமிராண்டிகளை விட கொடூரமாக தன் சக மனிதர்களையே கொன்று குவித்தது. பெண்களின் உடல் மீது மதச்சின்னங்களை வரைந்து மகிழ்ந்தது. குழந்தைகளைக் காவு கொண்டது. அந்தந்த மதத்தில் இருப்பதைத் தவிர வேறெந்தப் பாவத்தையும் அறியாத சாதாரண மக்களை மதவெறிப்பைத்தியம் தன் பலிபீடத்தில் பலி கொண்டது. அப்போது எந்த தெய்வமும் வந்து யாரையும் காப்பாற்றவில்லை.

மதம் என்ற ஒரு நம்பிக்கைக்காக இத்தனை உயிர்களைப் பலி கொண்ட பிரிவினையின் துயரங்களைப் பற்றி சாதத் ஹசன் மண்ட்டோவின் படைப்புகளை வாசிக்கும் ஒருவருக்கு மதத்தின் மீதான நம்பிக்கையே போய் விடும். ஆனால் மண்ட்டோவை பிரிவினை காலப் படைப்பாளியாகச் சுருக்கி விடமுடியாது. கொந்தளிக்கும் காலகட்டத்தில் கொந்தளிக்கும் மனதோடு நிலை தப்பி வாழ்ந்த ஒரு படைப்பாளி மண்ட்டோ. அவருடைய முதல் சிறுகதை ’தமாஷா’ ஜாலியன் வாலாபாக் படுகொலையை அடிப்படையாகக் கொண்டது. அதிலிருந்து துவங்கிய மண்ட்டோவின் இலக்கியப்பயணம் சிறுகதைகள், சொற்சித்திரங்கள், நினைவோடை, திரைக்கதை, என்று தொடர்ந்து கொண்டிருந்தது. யாராலும் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாத படைப்பாளியாக மண்ட்டோ இருந்தார் என்பதே அவர் அவருடைய மனசாட்சியின் குரலைப் பின்பற்றினார் என்பதற்கு ஆதாரம். அவருடைய சிறுகதைகளுக்காக அவர் பலமுறை நீதிமன்றத்தில் ஏறியிருக்கிறார். அவரைக் கம்யூனிஸ்ட் எழுத்தாளன் என்று அரசாங்கம் குற்றப்படுத்தியது. செத்துப்போனவர்களைப் பற்றி எழுதிச் சம்பாதிப்பவன் என்றும், ஆணவம் கொண்டவன் என்றும், பிற்போக்குவாதியென்றும், ஆபாசஎழுத்தாளன் என்றும், எல்லாவிதமாகவும் மண்ட்டோ விமரிசிக்கப்பட்டார். இந்த எல்லாவிமரிசனங்களையும் புறங்கையினால் தள்ளி விட்டு உண்மையை உரத்துச் சொன்ன கலைஞன் மண்ட்டோ.

1936 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் உயிர்த் துடிப்போடு இயங்கி வந்தார் மண்ட்டோ. அதுவரை மேட்டுக்குடி மக்களின் வியர்வைப்புழுக்கத்தையே இலக்கியமாகக் கருதியிருந்த நிலையில் மண்ட்டோ அவருடைய படைப்புகளில் சாதாரண அடித்தட்டு மக்கள், விளிம்புநிலை மக்கள், பாலியல்தொழிலாளிகள், என்று சாமானியர்களின் வாழ்வை, அவர்கள் படும் அவலங்களை வலுவாக வாசகமனம் அதிரும்படி சொன்னவர். சமன்குலைந்த சமூகத்தில் சமன் குலையச்செய்யும் எழுத்தே உண்மையான எழுத்து. அப்படிப்பட்ட சமன் குலையச் செய்யும் எழுத்துகளே வாசகனைத் தொந்திரவு செய்து இந்த நிலை மாற ஏதாவது செய்ய வேண்டும் என்று தூண்டுகிறது. மாண்ட்டோ தன் வாழ்நாள் முழுவதும் எல்லாஅதிகாரங்களையும் எதிர்த்தவன். நிறுவனக்களுக்கு எதிரானவன். நிறுவப்பட்ட எல்லாகருத்துகளுக்கும் எதிராகக் கலகம் செய்தவன். எப்போதும் சாதாரண அடித்தட்டுமக்களின் பக்கமே நின்று குரல் கொடுத்தவன்.

சுதந்திரப்போராட்டகாலத்தில் இந்திய சமூகத்தில் என்ன நிகழ்ந்து கொண்டிருந்தது என்பதற்கான வரலாற்று ஆவணமே மண்ட்டோவின் படைப்புகள். சுயநல அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் பிளவுண்ட இந்து, முஸ்லீம், சமூகமக்கள் எப்படியெல்லாம் மன அலைக்களிப்புகளூக்கு ஆளானார்களோ அத்தனை அலைக்களிப்புகளுக்கும் மண்ட்டோவும் ஆளானார். அதனால் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்தியாவிலிருப்பதா அல்லது பாகிஸ்தானுக்குப்போவதா என்ற மனப்போராட்டத்தில் இருந்தார். இறுதியில் பாகிஸ்தானுக்குச் சென்ற அவரை சுதந்திரபாகிஸ்தானும் அவருடைய படைப்புகளின் வெக்கை தாளமாட்டாமல் அடிக்கடி நீதிமன்ற கூண்டில் ஏற்றியது. ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை வாசிக்கும் போது மண்ட்டோ மனம் கொதித்துப் போவார். அவருடைய கொந்தளிப்பை மதுவே கொஞ்சம் சமனப்படுத்தியது. சுமார் இருநூற்றைம்பது சிறுகதைகளுக்கும் மேல் எழுதிய மண்ட்டோவின், மிகச்சிறந்த சிறுகதைகள், சொற்சித்திரங்கள், நினைவோடைகளைத் தொகுத்து மொழிபெயர்த்து அருமை நண்பர் ராமாநுஜம் தமிழில் மண்ட்டோ படைப்புகள் என்ற பெரும் நூலாகக் கொண்டு வந்திருக்கிறார். தமிழிலக்கியத்துக்கு ராமாநுஜம் பெருங்கொடை அளித்துள்ளார் என்றால் மிகையில்லை.

இதோ மண்ட்டோவின் கதைகள் என் முன்னே விரிகின்றன. மிகச்சுத்தமான வெள்ளை பருத்திப்பைஜாமாவும் குர்தாவும் அணிந்து அவருடைய வீட்டில் புத்தகங்கள் குவிந்திருக்கும் மேஜையின் அருகிலுள்ள பெரிய நாற்காலியில் குத்துக்கால் வைத்து உட்கார்ந்திருக்கிறார். கையில் எழுதும் அட்டையுடனும் பேனாவுடனும் யோசித்துக் கொண்டிருக்கிறார். அவர் யாரைக் கண்டும் எதைக் கண்டும் பயந்தவரல்ல. அவருடைய கதாபாத்திரங்கள் ஒவ்வொருவராக வருகிறார்கள். ’காலித்’தின் மும்தாஜ், ’அவமானத்தில்’ வரும் பாலியல்தொழிலாளி ஜமுனா, தன் மகளைத் தேடிக் கண்டடையும் ’ திற” வில் வரும் சிராஜூதின், ’சிவப்பு நிறமழைக்கோட்டணிந்த பெண் ‘ணில் வரும் ஓவியக்கலைஞர் மிஸ். எஸ், ‘மோஸலில்” வரும் மோஸல், குருமூக்சிங்கின் கடைசி விருப்பத்தில் வரும் குருமூக்சிங், எத்தனையெத்தனை கதாபாத்திரங்கள் மண்ட்டோவின் ரத்தத்திலிருந்து உருவானவை. சமூக அவலங்களைக் கண்டு அவருடைய துயரப்பெருமூச்சாய் வெளிவந்தவை. நம் மனசாட்சியை உலுக்கி நம் உறக்கம் கெடுப்பவை. எல்லாம் சரியாகவே இருக்கிறது என்ற மொண்ணைத்தனத்தின் மீது சவுக்கடி கொடுப்பவை. மண்ட்டோ கலைந்த தன் தலைமுடியைக் கோதி விடுகிறார். அருகில் உள்ள பீரோவிலிருந்து விஸ்கியை எடுத்து ஒரு மிடறு விழுங்குகிறார். மறுபடியும் யோசித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய கல்லறைக்குறிப்பை எழுதவே அவர் உட்கார்ந்திருக்கிறார். எத்தனையோ முறை மருத்துவர்கள் அவருக்குத் தேதி குறித்தார்கள். ஆனால் எப்போதும் கலகம் செய்வதைப் போல மரணத்திடமும் கலகம் செய்து தப்பித்துக் கொண்டேயிருந்தார். அவருக்குத் தெரியும் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு ரெம்ப நாளைக்கு நீடிக்காது என்று. எவ்வளவு நாளைக்கு நீடிக்கமுடியுமோ அவ்வளவு நாளைக்குத் தள்ளிப்போடலாமே என்று முடிவு செய்திருந்தார். அவ்வப்போது அவர் இருமும்போது ரத்தமும் சேர்ந்து வருகிறது.. சாதத் ஹசன் என்ற மனிதனை, அவனுடைய சிந்தனைகளை, செயல்களை அவனுடைய குடும்பத்தார், நண்பர்கள், யாரும் புரிந்து கொள்ளவில்லை. அவனை ஒரு பைத்தியக்காரனாகவே நினைத்தார்கள். ஆனால் மண்ட்டோ என்ற படைப்பாளியை, தன் ஊனை உருக்கி, உயிரைச் செலுத்தி, அவன் படைத்த மகத்தான படைப்புகளை உலகம் இன்னமும் கொண்டாடுகிறது. அது மண்ட்டோவுக்கும் தெரியும். அதனால் தான் அவன் தன்னுடைய கல்லறைக்குறிப்பை தான் இறப்பதற்கு ஒரு வருடத்துக்கு முன்பே எழுதமுடிந்திருக்கிறது.

” இங்கே கிடக்கிறான் சாதத் ஹசன் மண்ட்டோ.. அவனுடன் சிறுகதை கலையின் அனைத்து மர்மங்களும், கலைத்திறமும் புதைக்கப்பட்டு விட்டன. டன் கணக்கிலான மண்ணுக்கடியில் கிடக்கும் அவன் கடவுளை விட மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளன் அவன் தானோ என்று வியந்து கொண்டிருக்கிறான். “

கடந்த இருபதாண்டுகளில் மீண்டும் ஜாதியும் மதமும் தங்கள் பைத்தியக்காரத் தொற்றுநோயைப் பரப்பி வருகின்றன. அடையாளங்கள் மீதான மோகம் பெருகி வருகிற காலமாக இருக்கிறது நம் காலம். ஒரே சமயத்தில் உலகமயமாக்கல் எல்லாவற்றையும் சந்தைமயமாக்குவதற்காக பன்முகஅடையாளங்களை அழிக்க முயற்சிப்பதும், அதே நேரம் சனாதனம் காலாவதியாகிப் போன பழைய அடையாளங்களைப் புணருத்தாரணம் செய்யவுமான முயற்சிகள் நடக்கின்றன. இந்த நேரத்தில் மண்ட்டோ மிக முக்கியமாகத் தேவைப்படுகிறார். மனிதத்திற்கு எதிராக போர் தொடுப்பவர்களோடு போரிட மண்ட்டோவின் படைப்புகளே நமக்கு பேராயுதம். அந்த ஆயுதங்களை நாம் தரித்துக் கொள்வோம். அந்த ஆயுதங்களை நமக்குப் படைத்தளித்த மண்ட்டோவைப் போற்றுவோம். மண்ட்டோவின் நூற்றாண்டில் அவர் படைப்புகளை மீண்டும் மீண்டும் வாசிப்போம்.மண்ட்டோமாமா நீங்கள் உங்கள் படைப்புகளில் சிந்திய ரத்தம் வீணாகாது. வீணாகாது. வீணாகாது. எங்கள் மண்ட்டோமாமா!

நன்றி- மீடியா வாய்ஸ்

Sunday 24 June 2012

எழுத்தாளனின் பிறப்பு

 

பொன்குன்னம் வர்க்கி

ponkunnam-varkey

தமிழில்- உதயசங்கர்

நான் ஒரு எழுத்தாளனா? இது நான் பலசமயம் என்னுடைய மனசாட்சியிடம் கேட்கிற ஒரு கேள்வி. இதற்குப் பதில் சொல்வதற்கான முழு அதிகாரம் நிறையப்பேர்களுக்கு இருப்பதால் நான் அவர்களை நெருங்குவதற்குத் தயாரானேன். என்னுடைய அழைப்பில்லாமலே வரக்கூடிய ஏராளமான பதில்களுக்கு நான் விலை கொடுத்திருக்கிறேன். அவற்றில் சில அநுபவங்களைத் தான் இங்கே நான் தெளிவுபடுத்த ஆசைப்படுகிறேன். என்னுடைய கதைகளைப் பற்றி எனக்கு ஆத்மநம்பிக்கை தந்த அநுபவங்கள் அவை.

மீனச்சில் தாலுக்காவில் ஓரிடத்தில் ஒரு கயிறு விற்கும் கடையின் பின்னாலுள்ள சிறிய ஒரு அறையிலிருந்து கொண்டு நான் கதை எழுதிக் கொண்டிருப்பேன். தடியனான ஒரு ஆள் வந்து நின்றான். நிலையில் கைகளை ஊன்றிக் கொண்டு சரிந்து தாழ்கிற தலையோடு அவன் ஏதோ சொன்னான். தனிமையில் அகப்பட்டிருந்த என்னுடைய மனமோ, செவிகளோ, அதைக் கவனிக்கவில்லை.

“ டேய் போதும் என்ன? “ என்று கத்தினான்.

” போ………வனே..நீ கதை எழுதுகிறவனாடா? “

போதையின் உச்சத்தினால் அவனுடைய தலை நேராக நிற்கவில்லை. ஆனால் அந்தச் சிவந்தகண்களிலிருந்து வெறுப்பை வெளிப்படுத்திக் கொண்டே அவன் தொடர்ந்து கேட்டான்,

“ நீ சோகேனின் மகனாடா? “

ஆள் தெரியாமல் தவறாகப் பேசுகிறானோ. நான் சந்தேகப்பட்டேன். அந்த மனிதனை எப்போதோ பார்த்திருக்கிறேன். அவ்வளவு தான். நான் கேட்டேன்,

“ எங்கிட்ட தான் பேசுறீங்களா? “

“ பின்ன யாரிட்டடா உங்கப்பங்கிட்டயா.”

என்று அவனும் கேட்டான். எனக்கு வியர்த்து விட்டது. கள்ளு குடிக்காமலேயே என்னுடைய தலை பம்பரம் போலச் சுற்றிக் கொண்டிருந்தது. தலையைப் பிடித்துக் கொண்டே நான் மேசையின் மீது சாய்ந்தேன். இந்த நேரத்தில் அங்கே ஆட்கள் சிலர் வந்தனர். அவர்கள் அவனை என்னுடைய அறைக்கு முன்னாலிருந்து தள்ளிக் கொண்டுபோக முயற்சி செய்தனர்.

அவனைத் தூரமாய் கொண்டுபோய் விட்ட பின்பு சிலர் என்னிடம் என்ன காரணம் என்று கேட்டனர். எனக்கும் அது தான் தெரியவில்லை.

“ நீ கதை எழுதுவாய் இல்லையாடா? “ என்று கேட்டதன் ரகசியமும் புரியவில்லை. கொஞ்சநாட்களுக்கப்புறம் அவன் என்னுடைய சிநேகிதனாகி விட்டான். அந்த மனிதனிடமிருந்து முன்பு அவன் அப்படி நடந்ததற்கு என்ன காரணம் என்ற ரகசியத்தைப் புரிந்து கொண்டேன். பிரபலமான ஒரு புரோகிதர் தான் அவனை என்னிடம் அனுப்பியது. கள்ளு குடிக்க ஐந்து ரூபாய் கொடுத்து,

“ அவனை அவமானப்படுத்த வேண்டும்.. எழுதறதுக்காக ரெண்டடி கொடுக்கவேண்டும் “

என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். காரணம் நான் வைதீகர்களைப் பற்றிக் கதையெழுதியது தான்.

ஒரு தடவை ஒரு பெண் என்னுடைய பெயருக்கு ஒரு கடிதம் அனுப்பி அவள் என்னை ஒரு தடவை பார்க்கவேண்டும் என்று எழுதியிருந்தாள். வருவது வரட்டும் என்று முடிவு செய்து கொண்டு நான் போனேன். அழகு மிளிர்கிற ஒரு இருபது வயதுக்காரி. அவள் கண்ணீரோடு ஒரு கதையைச் சொன்னாள். மனதை உருக்கும் ஒரு காதல்கதை. அது என்னை மிகவும் பாதித்துவிட்டது. அவளுடைய காதலன் அவளை வஞ்சித்து விட்டான். அவன் அந்தக் கன்னிப்பெண்ணை கர்ப்பிணியாக்கிய பின்பு காந்தியசோசலிஸ்டாக மாறி விட்டான். அவளுடைய வாழ்வுத் துன்பத்தை நான் ஒரு கதையாக்க வேண்டும். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உணர்ச்சிமிக்க மொழியில் அனைவரையும் ஈர்க்கக் கூடிய சித்தரிப்பாக இருக்கவேண்டும். அவள் ஒரு நல்ல வாசகியாக இருந்தாள். நான் அவளுடைய ஆத்மகதையை ஒரு கதையாக்கி அந்த வஞ்சகனுக்கு ஒரு நல்ல பாடம் கற்பித்தால் அவள் ஆசை நிறைவேறிவிடும். ஜென்மசாபல்யமடைவாள். புகார் செய்ய வேண்டும் என்றல்ல. அவமானப்படுத்த வேண்டும் என்றல்ல. நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றல்ல. ஒரு கதை எழுத வேண்டும். இது தான் அவளுக்குத் தேவை. அதன் பிறகு ஒரு நாற்பது நாற்பத்தைந்து நாட்கள் கழித்து அவள் தற்கொலை செய்து கொண்டாள்.

நன்றி- கிரந்தாலோகம் மார்ச் 1950

பொன்குன்னம் வர்க்கி

தமிழில்- உதயசங்கர்

நான் ஒரு எழுத்தாளனா? இது நான் பலசமயம் என்னுடைய மனசாட்சியிடம் கேட்கிற ஒரு கேள்வி. இதற்குப் பதில் சொல்வதற்கான முழு அதிகாரம் நிறையப்பேர்களுக்கு இருப்பதால் நான் அவர்களை நெருங்குவதற்குத் தயாரானேன். என்னுடைய அழைப்பில்லாமலே வரக்கூடிய ஏராளமான பதில்களுக்கு நான் விலை கொடுத்திருக்கிறேன். அவற்றில் சில அநுபவங்களைத் தான் இங்கே நான் தெளிவுபடுத்த ஆசைப்படுகிறேன். என்னுடைய கதைகளைப் பற்றி எனக்கு ஆத்மநம்பிக்கை தந்த அநுபவங்கள் அவை.

மீனச்சில் தாலுக்காவில் ஓரிடத்தில் ஒரு கயிறு விற்கும் கடையின் பின்னாலுள்ள சிறிய ஒரு அறையிலிருந்து கொண்டு நான் கதை எழுதிக் கொண்டிருப்பேன். தடியனான ஒரு ஆள் வந்து நின்றான். நிலையில் கைகளை ஊன்றிக் கொண்டு சரிந்து தாழ்கிற தலையோடு அவன் ஏதோ சொன்னான். தனிமையில் அகப்பட்டிருந்த என்னுடைய மனமோ, செவிகளோ, அதைக் கவனிக்கவில்லை.

“ டேய் போதும் என்ன? “ என்று கத்தினான்.

” போ………வனே..நீ கதை எழுதுகிறவனாடா? “

போதையின் உச்சத்தினால் அவனுடைய தலை நேராக நிற்கவில்லை. ஆனால் அந்தச் சிவந்தகண்களிலிருந்து வெறுப்பை வெளிப்படுத்திக் கொண்டே அவன் தொடர்ந்து கேட்டான்,

“ நீ சோகேனின் மகனாடா? “

ஆள் தெரியாமல் தவறாகப் பேசுகிறானோ. நான் சந்தேகப்பட்டேன். அந்த மனிதனை எப்போதோ பார்த்திருக்கிறேன். அவ்வளவு தான். நான் கேட்டேன்,

“ எங்கிட்ட தான் பேசுறீங்களா? “

“ பின்ன யாரிட்டடா உங்கப்பங்கிட்டயா.”

என்று அவனும் கேட்டான். எனக்கு வியர்த்து விட்டது. கள்ளு குடிக்காமலேயே என்னுடைய தலை பம்பரம் போலச் சுற்றிக் கொண்டிருந்தது. தலையைப் பிடித்துக் கொண்டே நான் மேசையின் மீது சாய்ந்தேன். இந்த நேரத்தில் அங்கே ஆட்கள் சிலர் வந்தனர். அவர்கள் அவனை என்னுடைய அறைக்கு முன்னாலிருந்து தள்ளிக் கொண்டுபோக முயற்சி செய்தனர்.

அவனைத் தூரமாய் கொண்டுபோய் விட்ட பின்பு சிலர் என்னிடம் என்ன காரணம் என்று கேட்டனர். எனக்கும் அது தான் தெரியவில்லை.

“ நீ கதை எழுதுவாய் இல்லையாடா? “ என்று கேட்டதன் ரகசியமும் புரியவில்லை. கொஞ்சநாட்களுக்கப்புறம் அவன் என்னுடைய சிநேகிதனாகி விட்டான். அந்த மனிதனிடமிருந்து முன்பு அவன் அப்படி நடந்ததற்கு என்ன காரணம் என்ற ரகசியத்தைப் புரிந்து கொண்டேன். பிரபலமான ஒரு புரோகிதர் தான் அவனை என்னிடம் அனுப்பியது. கள்ளு குடிக்க ஐந்து ரூபாய் கொடுத்து,

“ அவனை அவமானப்படுத்த வேண்டும்.. எழுதறதுக்காக ரெண்டடி கொடுக்கவேண்டும் “

என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். காரணம் நான் வைதீகர்களைப் பற்றிக் கதையெழுதியது தான்.

ஒரு தடவை ஒரு பெண் என்னுடைய பெயருக்கு ஒரு கடிதம் அனுப்பி அவள் என்னை ஒரு தடவை பார்க்கவேண்டும் என்று எழுதியிருந்தாள். வருவது வரட்டும் என்று முடிவு செய்து கொண்டு நான் போனேன். அழகு மிளிர்கிற ஒரு இருபது வயதுக்காரி. அவள் கண்ணீரோடு ஒரு கதையைச் சொன்னாள். மனதை உருக்கும் ஒரு காதல்கதை. அது என்னை மிகவும் பாதித்துவிட்டது. அவளுடைய காதலன் அவளை வஞ்சித்து விட்டான். அவன் அந்தக் கன்னிப்பெண்ணை கர்ப்பிணியாக்கிய பின்பு காந்தியசோசலிஸ்டாக மாறி விட்டான். அவளுடைய வாழ்வுத் துன்பத்தை நான் ஒரு கதையாக்க வேண்டும். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உணர்ச்சிமிக்க மொழியில் அனைவரையும் ஈர்க்கக் கூடிய சித்தரிப்பாக இருக்கவேண்டும். அவள் ஒரு நல்ல வாசகியாக இருந்தாள். நான் அவளுடைய ஆத்மகதையை ஒரு கதையாக்கி அந்த வஞ்சகனுக்கு ஒரு நல்ல பாடம் கற்பித்தால் அவள் ஆசை நிறைவேறிவிடும். ஜென்மசாபல்யமடைவாள். புகார் செய்ய வேண்டும் என்றல்ல. அவமானப்படுத்த வேண்டும் என்றல்ல. நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றல்ல. ஒரு கதை எழுத வேண்டும். இது தான் அவளுக்குத் தேவை. அதன் பிறகு ஒரு நாற்பது நாற்பத்தைந்து நாட்கள் கழித்து அவள் தற்கொலை செய்து கொண்டாள்.

நன்றி- கிரந்தாலோகம் மார்ச் 1950

Saturday 23 June 2012

எழுத்தாளனின் பிறப்பு

 

கிரேஸி

தமிழில்- உதயசங்கர்Gracy

நான் எப்படி எழுத்தாளரானேன்? எனக்குத் தெரியவில்லை. பதினைந்து வயதுவரை பாடப்புத்தகங்களும், ஸ்கூல் லைப்ரரியிலிருந்து கிடைக்கிற சிறிய ஆங்கிலப்புத்தகங்களும் தவிர வாசிப்பு உலகம் எனக்கு அந்நியமாகவிருந்தது.

எனக்குக் கிடைத்த ஒரே கூட்டாளி என்னுடைய அப்பாவின் அப்பா. சாயங்கால நேரங்களில் தாத்தா பனங்கள்ளு குடித்து விட்டு ஏராளமான கதைகள் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்தக் கதைகளிலெல்லாம் மனிதர்கள் குறைவாகவே இருந்தனர். பிரதானபாத்திரம் குட்டிச்சாத்தான் தான். பலவிதமான பாம்புகளும், யானை, புலி, காட்டெருமைகளும், வருகிற கதையில் கொடிய காட்டினை விவரித்துச் சொல்லும்போது நான் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருப்பேன். அந்தக் கதைகளெல்லாம் என்னை வேறொரு உலகத்திற்கே கூட்டிக் கொண்டு போய்விட்டன.

என்னுடைய டீச்சரிடம் முட்டத்துவர்க்கியினுடைய நாவல்களின் தொகுப்பு இருந்தது. அவர் அதை வேறு யாருக்கும் கொடுக்காமல் அலமாரியில் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தார். ‘ மயிலாடும் குன்று ’ வாங்கிக் கொண்டு வந்த அன்று மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் அம்மாயி அதைச் சத்தமாக வாசிப்பதை ஐந்து வயதுக்காரியான நான் நள்ளிரவு வரை கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன். அப்போது தான் மிருகங்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் கதைகள் இருக்கிறதென்று நான் தெரிந்து கொண்டேன். அந்தக் கதைகள் பல சமயங்களில் கண்னீரிலேயே முடிந்து போயின.

வகுப்பில் பிள்ளைகள் இரண்டு அணிகளாகப் பிரிந்து வார்த்தை சுலோகப்போட்டி நடத்தும்போது நான் சங்கடத்தோடு ஒளிந்து கொள்வேன். இவர்கள் எல்லாரும் எங்கிருந்து இவ்வளவு சுலோகங்களையும் மனப்பாடம் செய்தார்கள் என்று எனக்குப் புரியவில்லை. முடிவில் இரண்டு பேர் சொல்லிக் கொடுத்து நான் ஒரு சுலோகத்தை உருவாக்கினேன். இப்படியொரு சுலோகத்தை நாங்கள் கேள்விப்பட்டதேயில்லை என்று பிள்ளைகள் கோபித்தனர். மலையாளவாத்தியார் அதைச் சொல்லச் சொல்லிக் கேட்டபோது அப்போதே மறந்துபோய் வியார்த்து விறுவிறுத்துப் போனேன். வாத்தியார் கேலி செய்யவும் பிள்ளைகள் கைகொட்டிச் சிரிக்கவும் செய்தனர். நான் கண்ணீரில் வழிந்தோடிப் போனேன். அப்படி வழிந்தோடி, வழிந்தோடி, ஏதேதோ பூமிகளூடே பிரயாணம் செய்தேன். யாருக்கும் தெரியாமல் ஏராளமான நாலுவரிக் கவிதைகளை துண்டுக் காகிதங்களில் எழுதி ஒளித்து வைத்திருந்தேன். அப்ப்டி எழுத்தில் வடிக்காதவற்றை மனசில் பத்திரமாக அடைத்து வைத்தேன்.

காரூரினுடைய ‘ குடை நன்னாக்கானுண்டோ ‘ என்ற கதையைப் பாடப்புத்தகத்தில் வாசித்தபோது கதையினுடைய சாத்தியங்களைக் குறித்து புரிந்தமாதிரி இருந்தது. என்னுடைய சின்னச் சின்னத் துக்கங்களை கதைகளில் சொல்லி நான் சிறிய கவிதைகளைக் காப்பாற்றினேன். ஆனால் ஒரு நாள் அந்தத் துண்டுக்காகிதங்கள் எல்லாம் சேர்ந்து அடுப்பிற்குள் ஏறி விழுந்ததை நான் பார்த்தேன். நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்குழந்தைகளுக்கு ஏற்ற வேலை இதொன்றும் இல்லையென்ற தாக்கீது தீச்சூட்டோடுப் பதிலாகக் கிடைக்கவும் செய்தது.

அறுவடை முடிந்த வயற்காட்டில் நான் ஆண்பிள்ளைகளோடு சேர்ந்து கைப்பந்து விளையாடினேன். கிட்டிப்புல் விளையாடினேன். தூண்டில் போட்டு மீன் பிடித்தேன். மழை வெள்ளத்தில் பெரிய வள்ளத்தைச் செலுத்திப் போயிருக்கிறேன். மிகவும் உயரமான மாமரத்தின் கிளைகளைப் பிடித்து மரம் ஏறியிருக்கிறேன். பெண்பிள்ளை என்பதையே மறந்து போயிருந்தேன். அதனால் தானோ பொம்பிளைதானே என்ற ஏளனமும் குற்றச்சாட்டும் பிற்காலத்தில் என்னைப் பாதிக்கவில்லை.

எதுவும் செய்யாமலிருக்கும்போது இயற்கையை உற்று நோக்கியவாறு அமர்ந்திருப்பேன். எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் என்னால் அப்படியிருக்கமுடியும். இயற்கையை நான் உயிரைப் போல நேசிக்கத் தொடங்கியது அப்படித்தான். பெண்ணும் இயற்கையும் ஒன்றுதான் என்ற ஞானம் அப்போது தான் கை வந்தது. பெண்ணுக்கு எதிரான எதுவும் இயற்கைக்கு எதிரானது என்றும் புரிந்து கொள்ளமுடிந்தது.

பத்தாவது வகுப்பில் பரீட்சை முடிந்து முடிவு தெரிவதற்காகக் காத்திருக்கும் போது மார்த்தாண்டவர்மா என்ற நாவல் முழுமையும் படித்தேன். அதில் வரும் அனந்தபத்மநாபனோடு நெருங்கிப் பழகிவிட்டேன். சுபத்ரா என்ற ஆதர்ச கதாபாத்திரமாகவே மாறியும் விட்டேன். அழுது புரண்டு தான் அம்மாயியிடமிருந்து முட்டத்துவர்க்கியின் நாவல்களை வாங்கினேன். அப்படியே வாசிப்பு எனக்கு ஒரு போதை மாதிரி ஆகிவிட்டது.

கல்லூரியில் சேர்ந்தபோது லைப்ரரியிலிருந்து இஷ்டம் போல எடுத்து வாசிக்கலாம் என்றாகி விட்டது. வகுப்புகள் நடக்கிறசமயத்தில் மலையாற்றூரினுடைய, தகழியினுடைய, புத்தகங்கள் பின்பெஞ்சிலிருக்கிற எனக்குத் தோழமையாயிருந்தன. மலையாளம் பி.ஏ. வில் சேர்ந்தபோது இன்னும் சுதந்திரமானவளானேன். வாசிப்பு மட்டுமல்ல எழுதுவதும் மிகவும் மரியாதைக்குரியது என்று நினைத்தேன். பி.ஏ. மூன்றாம் வருடம் படிக்கும்போது ஜனயுகம் வாரப்பதிப்பில் என்னுடைய முதல்க்கதை பிரசுரமானது. ‘ அஸ்தமயம் “ என்ற அந்தக் கதையைக் குறித்து மலையாளநாடு பத்திரிகையில் சாகித்ய வாரபலன் பகுதியில் எம். கிருஷ்ணன்நாயர் எழுதியிருந்ததைப் படித்தபோது மிகுந்த சந்தோஷம் தோன்றியது. அந்தக் காலத்தில் கேரளகௌமுதி வாரப்பத்திரிகையில் புதிதாக எழுதத் தொடங்கியவர்களுக்கென்று ஒரு இடம் இருந்தது. நான் அதில் அவ்வப்போது தலைகாட்டினேன். அதனுடைய மேற்பார்வையாளரான ரோஸ்சந்திரன் என் கதைகளின் குற்றங்குறைகளைச் சொல்லி என்னை உற்சாகப்படுத்தினார். கார்டில் அவர் எனக்கு எழுதுகிற கடிதவரிகளில் அப்போது தான் பிறந்த சிசுவினுடைய நிர்வாணத்தின் பரிசுத்தம் இருக்கும்.

இது நான் கதை எழுதிய சரித்திரம். ஆனால் இந்தச் சரித்திரத்திலிருந்து நான் எப்படி எழுத்தாளரானேன் என்று கண்டு பிடிக்கமுடியாதல்லவா. ஒருவர் பாடகராவது எப்படி? ஓவியராவது எப்படி? சிற்பியாவது எப்படி? எழுத்தாளராவது எப்படி? யாரால் சரியான பதில் தரமுடியும்?

நன்றி- கரண்ட் புக்ஸ் புல்லட்டின் அக்டோபர் 2001

Friday 22 June 2012

எழுத்தாளனின் பிறப்பு

 

வைக்கம் முகமது பஷீர்basheer-the-man-thalani-poil-sreedharan

தமிழில்- உதயசங்கர்

 

நான் எழுத்தாளனாகியது தானாக நடந்த நிகழச்சியல்ல. ஒன்பது பத்து வருடகாலம் லகானில்லாமல் என்று சொல்வார்களே அப்படி இந்திய மகாராஜ்ஜியத்தில் சுற்றியலைந்தேன். ராஜ்யங்கள் முழுவதும் வலை வீசியபடி அலைந்து திரிந்தேன். நிச்சயமில்லாத காலகட்டம். வெயிலையும், மழையையும், சூட்டையும், குளிரையும், சகித்துக் கொண்டு பிரயாணம் செய்தேன்.

முடிவில் சொந்த மண்ணான கேரளத்துக்குத் திரும்பினேன். என்னுடைய மொத்தச்சொத்து ஒரு பேனா மட்டுமே. அடுத்தது என்ன செய்ய? உயிர்வாழ ஆகாரம் வேண்டும். தங்குவதற்கு ஒரு வீடு வேண்டும். மற்ற தேவைகளும் இருக்கிறதல்லவா? அதற்கொரு வேலை வேண்டும். என்ன செய்யலாம்? தீவிரமாக யோசித்தேன்.

அரசியல்வாதியாகலாம். அப்படி ஆகியிருந்தால் குறைந்தபட்சம் முதல்மந்திரியாகவாவது ஆகியிருப்பேன். பட்டாளத்தில் சேர்ந்திருந்தால் கேப்டனல்ல கமாண்டர் இன் சீஃப்பாகவே ஆகியிருப்பேன். ஆனால் இதற்காக சாதாரண நடைமுறை வாழ்க்கையை மறக்கவேண்டும். நல்ல விசாலமான அறிவும், ஞாபகசக்தியும் வேண்டும். முதல் மந்திரியானால் சரளமாகப் பேசத் தெரியவேண்டும். ஓடி நடந்து பிரசங்கிக்க வேண்டும். விழாக்கள், நாடாவெட்டல்கள், குத்துவிளக்கேற்றல்கள், இரவு பகலும் இதே வேலை தான். அடங்கியொடுங்கி நன்றாக ஓரிடத்தில் அமைதியாக இருக்கமுடியுமா? சாதாரண வாழ்க்கை வாழமுடியாது. வெயிலில் காயவும், மழையில் நனையவும், சத்தம் போடவும் முடியாது. தோன்றும்போது தோன்றிய மாதிரி வாழ்கிற சோம்பேறி நான். சோம்பேறிகளான படவாக்களுக்கு ஏற்ற வேலை எதுவென்று தலையைப் பிய்த்துக் கொண்டபோது புதையல் கிடைத்தமாதிரி ஒரு சிந்தனை வந்தது. இலக்கியம். எழுத்தாளனாகலாம். பெரிய அறிவு ஒன்றும் வேண்டாம். சும்மா எங்கேயாவது குந்தியிருந்து எழுதினால் போதும் அநுபவங்கள் ஏராளம் இருக்கிறதல்லவா? அவற்றையெல்லாம் காய்ச்சினால் போதும். ஆக எழுதினேன். இப்படித்தான் நான் எழுத்தாளனானேன். அவ்வளவு தான். சொல்லியிருக்கேனில்லையா நான் எழுதுகிறமாதிரி யார் வேண்டுமானாலும் எழுதலாம். அப்படி இப்படி அநுபவங்கள் இல்லாத மனிதனோ, மனுஷியோ யாராவது உண்டா இந்த உலகத்தில்?

நான் எழுத்தாளனான கதையைச் சொல்லியாயிற்று. சோம்பேறியானதால் தான் எழுத்தாளரானேன். அதனால் ஒன்றும் துக்கமில்லை. சந்தோஷம் தான். என்னுடைய புத்தகங்கள் சிறியவை. விலையும் மிகவும் குறைவு. ஆட்களுக்கு வாங்கக் கஷ்டம் ஒன்றுமில்லை. இங்கேயுள்ள இந்துக்களும், கிறித்தவர்களும், முஸ்லீம்களும், வாங்குகிறார்கள். அதனால் பெரிய அளவுக்குக் கஷ்டமில்லாமல் வாழ்கிறேன். புத்தகங்களை யாரும் வாங்கவில்லையென்றால் நான் வேறு வேலைக்குப் போய்விடுவேன். எனக்கு வேலி கட்டத் தெரியும். நிலத்தைக் கொத்திப் பண்படுத்தத் தெரியும். தென்னைமரம் ஏறத் தெரியும். தூண்டில் போட்டு மீன் பிடிக்கத் தெரியும் வீட்டு வேலைகளும் தெரியும். எனவே வீடுகளிலோ, ஹோட்டல்களிலோ குக் ஆகி விடுவேன்.

நன்றி- ஜனபதம் ஆகஸ்ட் 1949.

Thursday 21 June 2012

சொர்க்கமும் நரகமும்

மலையாளத்தில் – மாலி

தமிழில் – உதயசங்கர்

 

என் வீட்டில் ஒரு தென்னைமரம் காய்த்தது.ஆனால் தேங்காய்குலைக்குப் பதிலாக மாங்காய்க்கொத்து காய்த்திருந்தது. மாங்காய்க்கொத்தில்

பதினோரு மாங்காய்கள்.ஆந்தைகள் மாங்காய்களைத் தின்று விட்டன. மாங்காய் கொட்டைகளை குளத்தில் நட்டு வைத்தேன்.

பதினோரு மாங்காய் கொட்டைகளும் சேர்ந்து ஒன்றாகி ஒரு பலாக் கொட்டையாகி விட்டன. பலாக் கொட்டையிலிருந்து ஒரு பாக்குமரம்

முளைத்தது. ஒரே நாளில் பாக்குமரம் பெரிதாக வளர்ந்தது.மரத்தின் உச்சியே கண்ணுக்குத் தெரியவில்லை. அவ்வளவு உயரம்! மரத்தில் ஒரு

வாசகம் எழுதப் பட்டிருந்தது. ’என் மீது ஏறி சொர்க்கம் போகலாம்’

 

நான் மரத்தின் மீது ஏறினேன்.வேகமாக மேலே ஏறி விட்டேன்.அப்போது பாக்குமரத்தின் உச்சி தெரிந்தது. கீழே பார்த்தேன். பூமி தெரியவில்லை.

மேலே பார்த்தால் பாக்குமரத்தில் நெல்லிக்காய்கள். ஒவ்வொரு நெல்லிக்காயும் ஒரு ரத்தினம். வலது பக்கத்தில் ஒரு இடம் தெரிந்தது.அங்கே

போவதற்கு பாக்குமரத்தின் உச்சியில் ஒரு பாலம் இருந்தது. நான் பாலம் கடந்து அந்த இடத்தை அடைந்தேன். மிகவும் அகலமான ஒரு நதி

அங்கே ஓடிக் கொண்டிருந்தது. அந்த நதியில் ஒரு வண்டி இருந்தது. அந்த வண்டியில் நான்கு தேனீக்களைப் பூட்டியிருந்தார்கள்.வண்டிக்காரன்

ஒரு பெருச்சாளி. நான் வண்டியில் ஏறி அமர்ந்தேன். பெருச்சாளி சாட்டையால் தேனீக்களை அடித்தது. தேனீக்கள் வண்டியை இழுத்துக் கொண்டு

நதியைக் கடந்தது. நான் அக்கரையில் இறங்கினேன்.அங்கே சிவப்பு நிறமான ஒரு வயல். அதில் பச்சைநிறமுள்ள மிளகு நிறைந்து

இருக்கிறது.ஒவ்வொரு பச்சைமிளகின் நீளமும் ஒரு அடி நீளம்.பச்சைமிளகினை அன்னப்பறவைகள் கொத்தித் தின்கின்றன.”பரவாயில்லையே!

காரத்தை இஷ்டப் பட்டு திங்கிற அன்னங்கள்” என்று நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். ஒரு அன்னப்பறவை ஒரு மிளகைக் கொத்தி

எடுத்து என்னிடம் நீட்டியது.பிறகு,” கொஞ்சம் சாப்பிட்டுப் பாரேன்” என்று சொன்னது. மரியாதைக்காக நான் அந்த மிளகினை வாங்கினேன்.

சந்தேகத்தோடு ஒரு நுனியில் லேசாகக் கடித்தேன். சர்க்கரையைப் போல என்ன ஒரு இனிப்பு! நான் நான்கு மிளகுகள் தின்று தீர்த்தேன்.

 

பின்னர் வயலைத் தாண்டி கடைவீதிக்கு வந்தேன்.இதற்கிடையில் தாகம் அதிகமாகிவிட்டது. நிறைய இனிப்பு சாப்பிட்டாச்சில்லியா? கடைவீதியில்

ஒரு கடையைப் பார்தேன். ‘இங்கே குடிப்பதற்கு காற்று விற்கப்படும்’ என்று எழுதி வைக்கப் பட்டிருந்தது. நான் அந்த கடைக்குள் சென்றேன்.

கடைக்காரன் ஒரு ஓணான்.பல வண்ணமுள்ள பலூன்கள் அங்கே தொங்கிக் கொண்டிருந்தன.ஓணான் ஒரு பச்சைப் பலூனை அவிழ்த்துக்

கொடுத்தது.நான் பலூன் காற்றைக் குடித்தேன். காற்று தொண்டையின் வழியாக வயிற்றில் இறங்கியது.இளநீரின் குளிர்மையும் இனிப்பும்

அதற்கு இருந்தது. பின்பு ஆரஞ்சு காற்றைக் குடித்தேன். கடைசியில் எலுமிச்சைக் காற்றையும் குடித்தேன்.இரண்டு ரூபாய் எடுத்துக் கொடுத்தேன்.

ஓணான்,” காற்று குடிக்கிறவர்கள் பணம் கொடுக்கவேண்டியதில்லை. பணம் வாங்கிக் கொள்ளவேண்டும். அதுதான் இங்கே வழக்கம். “ என்று

சொல்லி ஐந்து ரூபாயை எடுத்துக் கொடுத்தது.

 

நான் கடையிலிருந்து இறங்கி நடந்தேன். ஒரு திருப்பத்தை அடைந்தேன்.’நரகத்திற்குப் போகும் வழி’ என்று எழுதி வைக்கப் பட்டிருந்தது. நான்

அந்த வழியில் நடந்து போனேன். அங்கே ஒரு ராட்சசன் நின்று கொண்டிருந்தான்.ராட்சசன் என்னை உயரே தூக்கினான்.குகை மாதிரி இருந்த

வாயைத் திறந்தான்.என்னை வாயில் போட்டு வாயை மூடினான். என்னைச் சுற்றிலும் ஒரே இருட்டு. நான் தட்டுத் தடுமாறி முன்னால்

போனேன். தூரத்தில் ஒரு வெளிச்சம்.நான் அதைப் பார்த்துக் கொண்டே போனேன்.வெளிச்சம் பெரியதாகிக் கொண்டே வந்தது.அது

ராட்சசனுடைய காது. நான் அந்தக் காது வழியே தோளில் இறங்கினேன். கையில் தொங்கி கீழே நிலத்தில் குதித்தேன். அங்கே எட்டடி நீளத்திற்கு

ஒரு புழு கிடந்தது.”நான் உனக்கு நரகத்தை காண்பிக்கிறேன்” என்று புழு சொன்னது.பிறகு என்னை மேலே ஏற்றிக் கொண்டு பறந்து சென்றது.

ஒரு நெருப்புக்கோட்டைக்குக் கொண்டு சென்றது.

 

புழு நெருப்புக்கோட்டையினைத் தாண்டிச் சென்றது.அங்கே ஒரு பெரிய மைதானம். மைதானத்தில் கார்மேகங்கள் ஓடி விளையாடிக்

கொண்டிருந்தன. கார்மேகங்களின் பின்னால் கழுகுகள் ஓடின. கழுகுகள் பாட்டுகள் பாடின. புழுவும் நானும் பாட்டைக் கேட்டோம். முன்னால்

குனிந்து நான் புழுவிடம்,”நரகத்துக்கு இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு?”என்று கேட்டேன்.

 

புழு அதற்கு,” ரொம்பத் தூரமில்லை..கொஞ்சதூரம் தான்..” என்று சொன்னது. திடீரென எனக்கு வீட்டு ஞாபகம் வந்துவிட்டது. நான்,”புழுவே!

நரகம் பார்ப்பதற்கு இன்னொரு தடவை வாரேன்..இப்போ வீட்டுக்குப் போகணும்” என்று சொன்னேன். அதற்குப்புழு,”அதுக்கு ஒரு வழி செய்ரேன்..”

என்றது.

 

பின்பு ஒரு குழலை எடுத்து ஊதியது. உடனே ஒரு தவளை வந்தது. வரும்போது ஒரு பீரங்கியையும் உருட்டிக் கொண்டு வந்தது. தவளை

என்னிடம்,” பீரங்கிக்குள்ளே ஏறு!” என்று சொன்னது. நான் உள்ளே ஏறினேன். பயங்கரமான ஒரு சத்தம்! நான் பீரங்கியின் வாயிலிருந்து பாய்ந்து

காற்றில் பறந்தேன். எரிநட்சத்திரக் கல்லைப் போல வேகமாகப் பறந்தேன்.ஒரு மணிநேரம் கழித்து நிலத்தில் இறங்கினேன்.பார்த்தால் எங்கள்

வீட்டு முற்றம்! வானில் ஒரு வானவில்லைப் பார்த்தேன். வானவில்லில் ஒரு வாசகம் தெரிந்தது.’சொர்க்கமும் நரகமும் பூமியில் தான்

 images (1) இருக்கிறது.’

Wednesday 20 June 2012

என் பெரியப்பா புதுமைப்பித்தன்

உதயசங்கர்

  puthumai pithan

எல்லோருக்கும் போலவே எனக்கும் ரோல் மாடல்கள் இருந்தார்கள். ஒவ்வொரு பிராயத்துக்கும் ஏற்ப அவர்கள் இடம் மாறிக் கொண்டே

இருந்தார்கள். எனது சிறுபிராயத்தில் வசந்தன் மாமா எனது ரோல் மாடலாக இருந்தார். சிவந்த நிறமும், சுருள் சுருளான தலைமுடியும், சிரித்த

முகமும், ஏதோ ஒரு சாயலில் எம்.ஜி.ஆரைப் போல இருந்ததாக எல்லோரும் சொல்லிய பெருமையுடன் இருந்த வசந்தன் மாமா என்னுடைய

கனவுநாயகனாகவே இருந்தார். அது மட்டுமல்ல அடிக்கடி அவர் கோவில்பட்டியில் அப்போது மிகவும் பேமஸாக இருந்த மனோரமா

ஹோட்டலில் வாங்கிக் கொடுத்த தோசையும் சாம்பாரும் கூட ஒரு காரணம். அவர் மின்சாரத்துறையில் வயர்மேனாக வேலைபார்த்தார். அவர்

எங்கு போனாலும் மரியாதை தான். எல்லோரும் அவருக்கு ஏதோ ஒரு வகையில் சலுகை செய்தனர். இதையெல்லாம் பார்க்கப் பார்க்க எனக்கு

அதிசயமாக இருக்கும். நான் பெரியவனான பிறகு என் வசந்தன் மாமாவைப் போல வயர்மேனாகப் போக வேண்டும் என்று நினைத்தேன்.

ஏனெனில் அப்போது வேணுங்கிறபோதெல்லாம் சாம்பார் தோசை சாப்பிடலாமே.

 

ஆறாங்கிளாஸ் படிக்கிறபோது தமிழய்யா நாகராஜன். அவர் இனிமையான குரலில் தமிழ் செய்யுள்களை பாடும்போது வகுப்பே கட்டுண்டு

கிடக்கும். அவரைப் போலவே பாடவேண்டும் என்று நினைத்து சினிமா பாடல்களை தொண்டை கிழிய கத்தித் தீர்த்திருக்கிறேன். அப்போது

டி.எம்.சௌந்திரராஜன் மாதிரி, எஸ்.பி. பாலசுப்ரமணியன் மாதிரி பெரிய பாடகராக வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். அதற்காக

கோவில்பட்டியில் வெகுவிமரிசையாக வருடந்தோறும் நடந்து கொண்டிருந்த திருவாதிரை இசைவிழாவில் முன்னாடி போய் உட்கார்ந்து பெரிய

ஆட்கள் பாட்டின் சுதிக்கேற்ப விரல்களை ஆட்டுவதைப் போல நானும் எதுவும் தெரியாமலே ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்

. கடைசியில் எங்கள் கன்னிவிநாயகர் கோவில் தெருவில் என் வீட்டு முற்றத்திலிருந்து கொண்டு தீப்பெட்டிக்கட்டு ஒட்டிக்கொண்டோ,

தீப்பெட்டிக்கட்டை அடுக்கிக்கொண்டோ, நான் போடும் கூப்பாட்டை எல்லோரும் என் அம்மாவுக்காகச் சகித்துக் கொண்டார்கள் என்று

நினைக்கிறேன்.

 

ஒன்பதாம் வகுப்பு படிக்கிறபோதே என் சிந்தனையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தவர் தமிழாசிரியர் குருசாமி. வழக்கமான

தமிழாசிரியர்களைப் போல அவர் செந்தமிழில் பேசுவதில்லை. சாதாரணமாகவே பாடம் நடத்தினார். ஆனால் அவர் எந்தப்பாடத்தை

நடத்தினாலும் அதனூடாக பகுத்தறிவு கருத்துகளை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். மூடநம்பிக்கைகளைக் கேலியும் கிண்டலும் செய்தார்.

என்னுடைய சிந்தனையில் மிக முக்கியமான திருப்புமுனையை அவர் தான் ஏற்படுத்தினார் என்றால் மிகையில்லை. அத்தனை சிறிய வயதில்

கடவுளைக் கிண்டல் செய்து வீட்டில் அடி வாங்கிய ஞாபகங்கள் இருக்கின்றன. காந்திமைதானத்தில் பெரியாரின் கூட்டத்தை முன் வரிசைப்

புழுதியில் உட்கார்ந்து கேட்டிருக்கிறேன். ஆனால் தமிழாசிரியர் குருசாமியைப் போல ஆக வேண்டும் என்று ஏனோ தோன்றவில்லை. அப்போது

நான் படித்த ஆயிரவைசிய உயர்நிலைப்பள்ளியில் புதிதாக இரண்டு ஆசிரியர்கள் சேர்ந்திருந்தனர். ஸ்கூல் பையன்கள் எல்லோரின் கண்களும்

அவர்கள் மீது தான். அவ்வளவு ஸ்மார்ட்டாக, ஸ்டைலாக, இருந்தார்கள். அவர்கள் வகுப்பு எடுக்கும் விதமே அலாதியாக இருந்தது. யாரையும்

டேய்..டோய் என்று கூப்பிடுவதில்லை. எல்லோரையும் ஐயா என்ற விகுதியுடனே அழைத்தார்கள். எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவர்

அறிவியல் பாடம் எடுத்த தவசிராஜ், இன்னொருவர் கணக்குப்பாடம் எடுத்த பழனிமுத்து. அவர்களை அண்ணாந்து பார்த்தபடியே அவர்கள்

வகுப்புப்பையன்களும், அந்தப் பையன்கள் சொன்னதைக் கேட்டு மற்ற பையன்களும் ஈக்களை மாதிரி அவர்களை மொய்த்தார்கள். எனக்கு

கணக்கு மூணாங்கிளாஸிலிருந்தே பிணக்கு. எனவே கணக்கில் எப்போதும் பார்டரைத் தாண்டி கொஞ்சம் மதிப்பெண்கள் வாங்கித் தப்பித்து

விடுவேன். எனவே பழனிமுத்து மீது எனக்கு அவ்வளவு ஈர்ப்பில்லை. அறிவியலில் எனக்கு ஆர்வம் அதிகம். அதோடு சின்னப்பத்தில் எனக்கு

வகுப்பாசிரியராகவும் தவசிராஜ் இருந்ததால் அவரைப் பூஜித்தேன். அவரை மாதிரியே பேசவும். நடக்கவும், தலைப்பட்டேன். இது எது வரை

போனதென்றால் அவருடைய கையெழுத்தைப் போட்டுப் பழகி, அதைத் தவறுதலாக என்னுடைய ரிகார்டு நோட்டிலேயே போடுகிற அளவுக்கு

எனக்கு பைத்தியம் முற்றி விட்டது. என்னை ஆகர்சித்த ஆளுமைகளை அனுகணமும் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

 

இப்படி ஹாக்கி விளையாடும்போது ஹாக்கி பிளேயர்கள் பின்னாலேயே சுற்றுவது, நேரங்காலம் தெரியாமல் அதிகாலை, உச்சிவெயில், மாலை,

இரவு என்று எந்த நேரமும் ஹாக்கி மட்டையோடு திரிவது என்று எதையெடுத்தாலும் அதே சிந்தனையாக இருப்பது என்று இருந்தேன். நான்

கிரிக்கெட் விளையாடப் பழகும்போது தொலைக்காட்சி கிடையாது. இந்தியாவில் விளையாடும்போது மட்டுமே ரேடியோ வர்ணனை. மற்றபடி

எல்லாம் செய்தித் தாள்கள் வழிதான். ஆனால் நான் டைப்ரைட்டிங் படித்துக்கொண்டிருந்த இன்ஸ்டிடியூட் ஆசிரியர் ஹிந்து பத்திரிகை

ஏஜெண்டாகவும் இருந்தார். அதனால் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் பத்திரிகை அங்கே வரும். அதை அவ்வப்போது சுட்டுக் கொண்டு வந்து அதிலுள்ள

கிரிக்கெட் வீரர்களின் வண்ணப்புகைப்படங்களை ஆல்பம் மாதிரி என்னுடைய பழைய நோட்டில் ஒட்டி வைத்து தினமும் ஒரு முறையாவது

அவர்களைப் பார்த்து விடுவேன். கவாஸ்கர், சௌகான், மொகிந்தர் அமர்நாத், சுரீந்தர் அமர்நாத், கிர்மானி, பிரசன்னா, சந்திரசேகர்,

வெங்கட்ராகவன், கெய்க்வாட், இளம் கபில்தேவ், என்று அத்தனை கிரிக்கெட் வீரர்களையும் தரிசனம் செய்து விடுவேன். இவர்களுக்கடுத்தது

எனக்கு மிகவும் பிடித்த வெளிநாட்டு வீரர்களான ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி, தாம்ஸன், மேற்கிந்தியத் தீவுகளின் கேரி சோபர்ஸ்,

விவியன் ரிச்சர்ட்ஸ், ஹோல்டிங், என்று அவர்களின் படங்களை ஒட்டி வைப்பது அதைப்பார்ப்பதென்பது எனக்கு ஏதோ ஒரு வகையில்

உத்வேகம் தருவதாக ஒரு கற்பிதம் இன்னமும் இருக்கிறது.

 

கல்லூரிக்காலத்தில் இலக்கியம் அறிமுகமாயிற்று. கல்லூரியில் நாங்கள் சென்று வந்த சுற்றுலா பற்றிய கட்டுரையே பிரசுரமான என்னுடைய

முதல் படைப்பு என்று ஞாபகம். அப்போது எனக்கு தமிழ்ப்பேராசியர்களாக இருந்த அரங்கராசன், விஜயராகவன், இரண்டுபேருமே என்னை

அழைத்துப் பாராட்டினார்கள். அந்த உற்சாகத்தில் நான் கல்லூரி நூலகத்திலிருந்து நிறையப் புத்தகங்களை எடுத்துப் படித்தேன்.

எல்லாஇளைஞர்களைப் போல நானும் கவிதை எழுத ஆரம்பித்தேன். சிற்பி, அபி,தமிழன்பன், கங்கைகொண்டான், புவியரசு,இன்குலாப், என்று

வானம்பாடி கவிஞர்கள் என்னை ஈர்த்தனர். அவர்களைப் போலவே கவிதைகள் எழுதிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பின்பு தான்

கோவில்பட்டியில் இலக்கியகுழாம் ஒன்று இருப்பது தெரிய வந்தது. அதன்பின்பு என் உலகம் மாறி விட்டது.

 

புதுமைப்பித்தன் சிறுகதைகள் என்ற புத்தகம் தான் நான் முதன்முதலில் வாசித்த சிறுகதைப்புத்தகம் என்று நினைக்கிறேன். அதை வாசித்தவுடன்

அதுவரை ஏற்படாத ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நான் எனக்குள் உணர ஆரம்பித்தேன். நான் வாசித்திருந்த அத்தனையையும் புரட்டிப் போட்டு

விட்டார் புதுமைப்பித்தன். மொழியின் உக்கிரத்தை அவர் உச்சகதியில் உணரச் செய்தவர். உலகைப்பற்றி, மானுட அவலங்களைப் பற்றி,

மனிதமனவக்கிரங்களை, விகசிப்புகளை, துயரங்களை, அவரை விட வலிமையாகத் தமிழிலக்கியத்தில் யார் சொல்லியிருக்கிறார்கள். அவர் இந்த

உலகத்தையே எள்ளலோடு விமரிசித்தார். அந்த விமரிசனத்தின் ஆழத்தில் மானுடத்தின் மீதான பேரன்பு கவிந்திருந்தது. இதை உணராதவர்கள்

அவரை அவநம்பிக்கைவாதி என்று குற்றம் சாட்டினார்கள். அவர் இந்த உலகத்தின் மீது, மானிடவர்க்கத்தின் மீது, நம்பிக்கை கொள்ளவே

நினைத்தார். ஆனால் யதார்த்தம் அப்படியில்லையே. எனவே அதை விமரிசனம் செய்தார். அவருடைய புத்தகங்களைத் தேடித் தேடி வாசித்தேன்.

நம் காலத்தின் மகத்தான கலைஞனாக புதுமைப்பித்தன் திகழ்ந்தார்.

 

தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தன் வரலாற்றை வாசிக்கும்போது எனக்கு தமிழ்ச்சமூகத்தின் மீது ஆறாக்கோபம் வந்தது.

மானுடமேன்மைக்காக,இலக்கியத்தை வழியாகக் கொண்டு, அதற்காக தன் வாழ்வையே பணயம் வைத்த அந்த உன்னதக்கலைஞன் தன்

வாழ்நாள் முழுவதும் வறுமையின் முட்கிரீடம் சுமந்தே வாழ்ந்து தீர்த்தான். அவர் அவருடைய துணைவியாருக்கு எழுதிய கடிதங்களின்

தொகுப்பான கண்மணி கமலாவுக்கு.. என்ற கடிதத் தொகுப்பைப் படிக்கிற யாருக்கும் கண்ணீர் வராமல் இருக்காது. காலணாவுக்கும், ஒரு

ரூபாய்க்கும் அவர் பட்டபாடு …..அப்போதிருந்து சினிமாவின் மீது தமிழ்ச்சமூகம் கொண்டிருக்கும் மோகத்தில் ஒரு சதவீதமரியாதை

இலக்கியத்தின்மீது இருந்திருந்தால் நாம் புதுமைப்பித்தனை மட்டுமல்ல, பல எழுத்தாளர்களை இழந்திருக்கமாட்டோம். விதியே விதியே என்ன

செய்யப் போகிறாய் என் தமிழ்ச்சமூகத்தை?

 

புதுமைப்பித்தன் காலத்திய மற்ற எழுத்தாளர்களை விட இலக்கிய மேதையாக புதுமைப்பித்தன் ஏன் சித்தரிக்கப்படுகிறார் என்ற கேள்விக்கு

அவருடைய படைப்புகள் தான் பதில் சொல்லும். கலைஞன் தான் காலத்தைக் கேள்வி கேட்கிறான். கலைஞன் தான் காலத்தைக் கேலி

செய்கிறான். கலைஞன் தான் காலத்தை நிறுத்தி வைக்கிறான். கலைஞன் தான் காலத்தை அடைகாக்கிறான். கலைஞன் தான் காலத்தை

மாற்றுகிறான். தன் படைப்புகளின் மூலம் மனிதமனசாட்சியைத் தட்டியெழுப்புகிறான். மனிதகுலத்தை மேன்மையான வாழ்வை நோக்கி உந்தித்

தள்ளுகிறான். இதற்கான தவமாகவே இலக்கியவாழ்வை மேற்கொள்கிறான். வறுமையில் உழன்று, கண்ணீர் சிந்தி, புறக்கணிப்புகளைத் தாங்கிக்

கொண்டு, அவமானங்களைச் சகித்துக் கொண்டு சாதாரண லௌகீக வாழ்வின் சுகங்களை இழந்து, தனக்கும் தன் குடும்பத்துக்கும்

துயரங்களையே பரிசளித்து, கலையின் பலிபீடத்தில் தன்னையே பலி கொடுக்கிறான். பாரதி, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, கு.ப.ரா.

கரிச்சான்குஞ்சு, எம்.வி. வெங்கட்ராம், தமிழ் ஒளி, தருமு சிவராம், ஜி.நாகராஜன், ஆத்மநாம்,…..என்று எத்தனையெத்தனை பேர்?

 

புதுமைப்பித்தனும் அப்படி தன்னைப் பலி கொடுத்தவன். அவனுடைய சாகாவரம் பெற்ற படைப்புகளான, சாபவிமோசனம், சிற்பியின் நரகம், ஒரு

நாள் கழிந்தது, அகல்யை, பிரம்மராஷஸ், கபாடபுரம், செல்லம்மாள், காலனும் கிழவியும், கடவுளும் கந்தசாமிபிள்ளயும், துன்பக்கேணி, கல்யாணி,

மகாமசானம், இப்படி எத்தனை கதைகள்? காலச்சுவடு பதிப்பகம் செம்பதிப்பாக புதுமைப்பித்தனின் கதைகளை வெளியிட்டிருக்கிறது. ஆனால்

இன்னமும் தமிழ்ச்சமூகத்துக்கு உணர்வு வரவில்லையே. ஏனெனில் யாரிடமாவது புதுமைப்பித்தனைப் பற்றிப் பேசினால் “ யாரு சினிமாவில

பாட்டெழுதுவாரே அந்த புலமைப்பித்தனையா சொல்றீங்க? “ என்று கேட்கிறார்கள். நம்முடைய உண்மையான மதிப்பு மிக்க ஆளுமைகள்

யாரென்றே சமூகத்துக்குத் தெரியவில்லையே என்ற ஆழ்ந்த வருத்தம் உண்டாகிறது.

 

நான் என்னுடைய வழக்கம் மாறாமல், இலக்கியம் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் புதுமைப்பித்தனை என்னுடைய மானசீகக்குருவாக வரித்துக்

கொண்டிருந்தேன். புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாற்றுப்புத்தகத்தில் இருந்த புதுமைப்பித்தனின் புகைப்படத்தை எடுத்து கண்ணாடிக்கடையில்

கொடுத்து பிரேம் போட்டு என் வீட்டில் மாட்டியிருந்தேன். தினமும் அந்தப்புகைப்படத்திலுள்ள புதுமைப்பித்தனோடு பேசுவதுமுண்டு. அப்போது

முருகேசன் என்ற கவிஞர் என் வீட்டுக்கு வந்திருந்தார். அவருடைய கவிதைகள் ஒன்றோ இரண்டோ தினமலர், தினத்தந்தி வாரமலர்களில்

வெளிவந்திருந்தது. அவர் பேசும்போதும் சரி, எழுதும்போதும் சரி கவிஞர்.முருகேசன் என்றே தன்னை அழைத்துக் கொள்வார். அவர் என்

வீட்டிற்கு வந்ததிலிருந்து புதுமைப்பித்தனின் புகைப்படத்தையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பேச்சினூடே அடிக்கடி அந்தப்

புகைப்படத்தைப் பார்த்த அவரிடம் நான்,

 

“ என்ன பாக்கிறீங்க “ என்று கேட்டேன்.

 

“ இல்ல போட்டோவில யாரு உங்க அப்பாவா? “

 

நான் ஒரு கணம் அமைதி காத்தேன். புதுமைப்பித்தனைத் திரும்பிப் பார்த்தேன். அந்த ஏறுநெற்றியும், ஒளிபொருந்திய கண்களும், சற்றே

உதடுகளைப் பிரித்துக் கொண்டு வெளித் தெரிந்த தெற்றுப்பற்களோடு என் புதுமைப்பித்தன் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். நான் திரும்பி

கவிஞர்.முருகேசனிடம் சொன்னேன்.

 

“ இல்லை.. என் பெரியப்பா..”

நன்றி- மீடியா வாய்ஸ்

Monday 18 June 2012

குழந்தைகளும் கதைகளும்

உதயசங்கர்

mother-and-child-bob-botha

பொதுவாகவே கதை கேட்பது எல்லோருக்கும் பிடிக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். கதைகள் என்ன செய்கின்றன?கதைகளைக் கேட்கும்போது மனம் அந்தக் கதையில் வருகிற சம்பவங்கள், பாத்திரங்கள், இவைகளைச் சுற்றியே யோசித்துக் கொண்டிருக்கும். அந்த சம்பவங்களோ நாம் நம்முடைய வாழ்வில் பார்த்திராதது. ஆனால் மனம் அதைச் சுலபமாகக் கற்பனை செய்கிறது. அதேபோல அந்தக் கதாபாத்திரங்களும் நாம் முன்பின் கேள்விப்பட்டிராததாக இருந்தாலும் மனம் அதற்கு ஒரு உருவத்தைக் கொடுக்கிறது. இதன் மூலம் நாம் முன் பின் அறிந்திராத சம்பவங்களும் நம் வாழ்வின் அநுபவஎல்லைக்குள் சேகரமாகி நம் அறிவின் எல்லையை விரித்துச் செல்கிறது. மீண்டும் மீண்டும் இந்த கதைகளைப் பற்றிப்பேச அவை நம் வாழ்வின் ஒரு அங்கமாகி விடுகிறது.

கதைகளைக் கேட்கும் போது கதையின் சம்பவங்களுக்கு ஏற்ப, கதாபாத்திரங்களுக்கு ஏற்ப, எதிர்வினை புரிகிறோம். அதுவே நாம் அந்தக் கதையைச் சொல்லும்போது, விசயங்களைக் கற்பனையில் பெரிதாக்கி, அதற்கு வண்ணம் சேர்த்து, நம் வசதிக்கு ஏற்ப கதை நிகழ்வுகளை மாற்றிச் சொல்கிறோம். நாம் எதை முக்கியம் என்று நினைக்கிறோமோ அதில் கூடுதல் கவனம் செலுத்தி கதையைச் சொல்ல முயற்சிக்கிறோம். இதனால் கதை சொல்கிறவர் ஒரு நிகழ்கலைக்கலைஞரைப்போல மாறிக் கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை உருவாக்கவும் அதை அந்தக் கதை வழியே நடத்திச் செல்லவும் செய்கிறார். இதன் மூலம் பாவனையான அநுபவங்களில் விதவிதமான குணபாவங்களில் பாவனையாக வாழ்கிற நிலை ஏற்படுகிறது. கோபம், குரோதம், மகிழ்ச்சி, அமைதி, அன்பு, என்று எல்லாக்குணபாவங்களுக்கும் கதைசொல்லி பிரயாணம் செய்வதால் மனதில் ஒரு சமநிலை கிடைக்கிறது. இந்தச் சமநிலை யதார்த்த வாழ்வில் அவர்கள் சந்திக்கின்ற அநுபவங்களை அவர்கள் எப்படியெல்லாம் எதிர்கொள்ளலாம் என்று கற்பிக்கிறது. அதன் மூலம் அவர்கள் நல்லுணர்வை வளர்க்கிறது.

அதே போல கதைசொல்லியின் உளவியலில் தன்னை முன்னிலைப் படுத்தி,தன் குரல் வழியே அந்தக் கதை சொல்லப்படும் போது மிக அபூர்வமான நிறைவு ஏற்படுகிறது. அத்துடன் தன்னுடைய பாணியில் தானே தேர்வு செய்த மொழியில்( அது எத்தனை பழைய கதையாக இருந்தாலும்) சொல்லும்போது அது ஒரு புதிய வடிவம் பெறுகிறது. புதிய படைப்பு ஒன்றைப் படைத்த பூரண திருப்தி கிடைக்கிறது. மற்றவர்களின் கவனம் முழுவதையும் கதைசொல்லி தன் பக்கம் இழுப்பதால் தலைமைப்பண்பு உருவாகிறது. கதையை நடத்திச் செல்லும்போது கதாபாத்திரங்களின் வழியே தானும் பேசுவதால் தன் சிந்தனைகளை, தன் எண்ணங்களை, தன் கற்பனையைத் தெளிவாக வெளியிடுகிற திறமை வளர்கிறது. கதைகளில் வரும் நெருக்கடிகளைக் கதாபாத்திரங்கள் சந்தித்து அதைச் சாமர்த்தியமாக வெற்றி கொள்கிறபோது கதைசொல்லிக்கும் அது தன்னம்பிக்கையைத் தருகிறது.

கதை கேட்கும் போது என்ன நேர்கிறது? ஈர்ப்பான கதைகளைக் கேட்கிறபோது அதை உள்வாங்கும் ஆர்வம் கூடுகிறது. ஆர்வம் கூடுவதால் ஒருமுகத்தன்மை வளர்கிறது. கதைஉலகத்தில் கதைசொல்பவருடனே பிரயாணம் செய்ய கற்பனைத் திறன் வளர்கிறது. கதாபாத்திரங்கள் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்போது பாவனையான நெருக்கடிக்கு கதைகேட்பவரும் ஆளாகிறார். அந்த நெருக்கடியிலிருந்து கதாபாத்திரம் மீள்வதற்கான சாத்தியங்களை தானும் யோசிக்கிறார். அந்த நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பாவனையான திறன் வளர்கிறது. அந்த நெருக்கடிகளிலிருந்து கதாபாத்திரங்கள் மீளும்போது கதாபாத்திரங்களுக்கு ஏற்படுவதைப்போலவே மகிழ்ச்சியும் விடுதலையுணர்வும் கதைகேட்பவருக்கும் ஏற்படுகிறது. இதனால் யதார்த்தவாழ்வில் குழந்தைகள் எதிர்கொள்ள நேரிடும் நெருக்கடிகளின் போது திகைப்பு ஏற்படுவதில்லை. அதிர்ச்சி அடைவதில்லை. என்ன செய்யப்போகிறோமோ என்ற பதைபதைப்பு உண்டாவதில்லை. மன அழுத்தத்தில் சிக்குவதில்லை. அதற்குப் பதில் கதைகளைக் கேட்டபோது பாவனையாக ஏற்பட்ட உணர்வு நிலைகள் இப்போது மனதை ஆறுதல் படுத்துகின்றன. இப்போது எதிர்கொள்ளவிருக்கும் நெருக்கடிகளுக்கான தீர்வை நிதானமாக யோசிக்கவைக்கின்றன.

அதோடு குழந்தைகளிடம் நன்மை, தீமை, குறித்த அறவுணர்வை கதைகள் வளர்க்கின்றன. இதற்கு குழந்தைகள் ஈடுபாடு கொள்ளும்படியான கதைகளைச் சொல்லவேண்டும். அவர்கள் கதையோடு ஏதோ ஒருவிதத்தில் தங்களைத் தொடர்பு படுத்திக் கொள்ளும் படியாக கதை சொல்லுதல் இருக்கவேண்டும். எப்படியானாலும் ஒவ்வொரு குழந்தையும் கதையைக் கேட்கும்போது தன்னுடைய பாணியில் கதையோடு தொடர்பு படுத்திக் கொள்ளவே செய்கிறார்கள். கதையில் நிகழும் நிகழ்வுகளில் ஏதோ ஒரு நிகழ்வு மற்ற நிகழ்வுகளை விட மனதில் பாதிப்பை ஏற்படுத்தலாம். கதையையும் அதன் கதாபாத்திரங்களையும் தங்களுக்கே உரிய முறையில் விளங்கிக்கொள்ளவும், அதை மாற்றிக் கொள்ளவும் செய்யலாம். இதன் மூலம் சுதந்திரமான கற்பனைத் திறனும், சிந்திக்கும் ஆற்றலும், மொழிப்புலமையும் வளர்கிறது.

எல்லாவயது குழந்தைகளுக்கும் பொதுவான கதைகள் என்று ஒன்றில்லை. குழந்தைகளின் உளவியல் வளர்ச்சியும், வாசிப்புத் திறனும், புறவுலக அநுபவங்களும் , மொழியறிவும் வளர வளர குழந்தைகள் ஈடுபாடு கொள்ளும்கதைகளும் வேறு படுகின்றன. குழந்தைகள் ஆரம்பத்தில் ஓசை நயம் மிக்க பாடல்களைப் பாடச் சிரமப்படும் குழந்தைகள் பின்னர் இரட்டை அர்த்தமும் மறைபொருள் அர்த்தமும் கொண்ட விடுகதைகளை விடுவிக்கிறார்கள். எனவே குழந்தைகளின் வளர்ச்சிநிலைகளுக்கு ஏற்ப அவர்களுக்கான படைப்புகளும் மாற வேண்டியுள்ளது.

மொழிப்பயிற்சியின் ஆரம்பகாலத்தில் சைகை மொழியுடன் கூடிய எளிய கதைகள், ஓசை நயமிக்க கதைப்பாடல்கள் திரும்பத் திரும்பச் சொல்லுதல் வேண்டும். ஐந்து வயது முதல் ஏழெட்டு வயது வரை எளிய அறிவியல் உண்மைகளைச் சொல்லும் விலங்குகள், பறவைகள், பூச்சிகள், பூக்கள் பேசுகிற மாதிரியான குட்டிக் கதைகள். எட்டு வயதுக்கு மேல் அற்புதங்களும், ஆச்சரியங்களும், விநோதங்களும் நிறைந்த புனைவுக்கதைகள், நல்லுணர்வுகளை அடிநாதமாகக் கொண்டு நெய்து பின்னிய கேட்பதற்க்குச் சுகமான சாகசக் கதைகள். அறிவியல் கதைகள், அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகளைப் பற்றியக் கதைகள், பதினான்கு வயதுக்கு மேல் யதார்த்தமான வாழ்க்கைச் சித்தரிப்புகளைக் கொண்ட கதைகளும், வாழ்க்கை மதிப்பீடுகள் பற்றிய புதிய பார்வையை உருவாக்கும் கதைகளும், சமகால வாழ்க்கை, பண்பாடு, மீதான புதிய கேள்விகளை மனதில் எழுப்பும் கதைகளும், மதம், சாதி, மூடப்பழக்கவழக்கங்கள் குறித்த விவாதங்களைத் தூண்டும் கதைகளும் சொல்லப்பட வேண்டும். இது ஒரு மிக எளிய வரையறையே. இவற்றைக் குறித்த ஆழ்ந்த விவாதங்கள், உரையாடல்கள் நடைபெற வேண்டும்.

தமிழில் குழந்தை இலக்கியம் என்பது குறிப்பிடத் தகுந்ததாக இல்லை. தமிழில் குழந்தை இலக்கியம் என்றபெயரில் ஏராளமான நூல்கள் வந்து கொண்டிருந்தாலும் ,அவற்ரில் மிகச் சில நூல்களைத் தவிர மற்றவை குழந்தை இலக்கியத்துக்கு எந்த வகையில் நியாயம் செய்யக் கூடியவை என்பது கேள்விக்குறியே. கடந்த காலத்தில் பாரதி, பாரதிதாசன், கவிமணி,தொடங்கி அழ. வள்ளியப்பா பெ.தூரன், வாண்டுமாமா, கிருஷ்ணன்நம்பி, வரையில் குறிப்பிடத்தகுந்த குழந்தை இலக்கிய எழுத்தாளர்கள் இருந்திருக்கின்றனர். தற்போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு.

மற்றெல்லாத் துறைகளிலும் இருப்பதைப் போல குழந்தைகள் இலக்கியத்திலும் சில உட்பிரிவுகள் இருக்கின்றன. அது பற்றிய உரையாடல்கள் தேவை. பொதுவாக இதுவரை வெளி வந்துள்ள குழந்தை இலக்கிய நூல்களை வைத்து குழந்தைகள் இலக்கியத்தை மூன்று வகையாக பிரிக்கலாம்.

1. குழந்தைகள் எழுதும் குழந்தைகள் இலக்கியப்புத்தகங்கள்.

2. குழந்தைகள் வாசிப்பதற்காக பெரியவர்கள் எழுதும் புத்தகங்கள்

3. குழந்தைகளைப் பற்றிப் பெரியவர்கள் அறிந்து கொள்ள பெரியவர்கள் எழுதும் புத்தகம்.

இது குறித்தும் நிறைய விவாதிக்க இடமுண்டு. பெரும்பாலான குழந்தைகள் இலக்கிய நூல்களை அதன் சாராம்சத்தை வைத்து கீழ்க்கண்ட வகைகளில் அடக்கி விடலாம்.

1. அறிவுரை, நீதிபோதனைக் கதைகள்

2. பழங்கதைகளின் மறுகூறல்

3. மலிவான துப்பறியும் கதைகள்

4. புராண இதிகாசக் கதைகளின் மறுகூறல்

5. கடவுள்பக்தி, சநாதன வாழ்க்கைமுறை குறித்த கதைகள்

6. அறிவியல்கதைகள்

உத்தேசமாக இந்தப் புத்தகங்கள் எப்படி இருக்கின்றன. எந்தப் பருவத்துக் குழந்தைகளுக்கானது என்ற தெளிவின்றி கைக்கு வந்த மொழியில் எழுதப்பட்டு பொது நூலகங்களிலும் பள்ளி நூலகங்களிலும்,புத்தக அலமாரிகளை அலங்கரிக்கின்றன. ஏன் இந்த நிலைமை?

பொது வாசிப்புத் தளத்திலும் படைப்புத் தளத்திலும் குழந்தைகளின் பங்கேற்பை அலட்சியப்படுத்துகிற சமூகமனோபாவம் கல்வி முறைமையிலும், பள்ளியின் செயல்முறைத் திட்டத்திலும்,குழந்தைகளின் படைப்பூக்கவுணர்வை, பொது வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க எந்தத் திட்டங்களோ பொறுப்புணர்வோ இல்லாமை. இவையும் இவை தாண்டியும் காரணங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. இந்தக் காரணங்களை மாற்றும் வழிகளைப் பற்றி யோசிக்க வேண்டிய காலம் இது. யோசிப்போமா?

Sunday 17 June 2012

கர்வம்

உதயசங்கர்

vangoh

எந்தப் புத்தகத்திலிருந்தோ எழுந்து

என் கூடவே வந்து விட்டாள் அவள்

எந்தப் புத்தகம் என்பது மறந்தும் விட்டது

அவள் பெயரும் கூட தெரியவில்லை

அவள் வயதும் நான் அறியவில்லை

எப்படி வந்தாள் என்ற கேள்விக்குப்

பதிலே இல்லை

எழுதியவனைப் பிடிக்கவில்லையா?

எழுத்தைத் தாண்டி வளர்ந்து விட்டாயா?

எழுத்தில் வாழ விருப்பமில்லையா?

எந்தக் கேள்விக்கும் பதிலில்லை

என்னுடன் உண்டு உறங்கி குடும்பம் நடத்தினாள்

கர்வம் தன் படமெடுக்கத் தலைகுழம்பிக்

கேட்டு வைத்தேன் ஒருநாள்

என்னை உனக்குப் பிடித்திருக்கிறதா?

கேள்வியின் ஒலிச்சப்தம் தேய்ந்த

அக்கணம் மறைந்தாள்.

Saturday 16 June 2012

கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுகின்றனவே, நான் என்ன செய்ய?

உதயசங்கர்


எனக்குள் ஏற்பட்ட புத்தக வேட்கைக்கும் வாசிப்பு ருசிக்கும் துவக்கப்
புள்ளியாக என் அம்மா இருந்தாள். அந்தக் காலத்து நான்காவது பாரம்
படித்திருந்த அம்மா குமுதம், கல்கண்டின் தீவிரமான வாசகி. ஒவ்வொருDSC01504
வெள்ளிக்கிழமை மாலை அல்லது சனிக்கிழமை காலை கோவில்பட்டி கடைத்
தெருக்களிலிருந்து வெகுதூரத்தில் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத ரயில்வே
ஸ்டேஷனுக்குப் போய் அங்கே உள்ள குமுதம் ஏஜெண்ட் திரு. ஏகாந்தலிங்கம்
புத்தகக் கட்டு பிரிக்கும்போதே வாங்கிக்கொண்டு வீட்டிற்கு ஓடி வருவேன்.
வரும் வழியிலேயே கல்கண்டில் வந்து கொண்டிருந்த தமிழ்வாணனின் துப்பறியும்
சங்கர்லால் தொடரைப் படித்து விடுவேன்.
என்னுடைய அம்மா குமுதத்தில் வந்து கொண்டிருந்த சாண்டில்யன்,
ரா.கி.ரங்கராஜன், லஷ்மி, இவர்களின் தொடர்களைத் தொடர்ந்து வாசிப்பார்
வாரப்புத்தகத்திலுள்ள தொடர்களைக் கிழித்து வரிசைக் கிரமமாகச் சேகரித்து
வைப்பேன். இப்படித்தான் எங்கள் வீட்டில் புத்தகங்கள் உருவானது.
வீடு எட்டுக்குப் பத்து குச்சுதான். அதுவே எனக்கு அப்பா, அம்மா,
தம்பிகள், தங்கை எல்லோருக்கும் வரவேற்பறை படிப்பறை, படுக்கையறை என்று
காலத்தின் மாற்றத்திற்கேற்ப உருமாறிக் கொண்டேயிருக்கும். இதைவிடச் சிறிய
ஒரு ஓட்டுச் சாய்ப்பு சமையலறை. முன்னால் சிறிய வானவெளி. அதன் ஓரத்தில்
ஓடும் சாக்கடை. அதுவே எங்களுக்கு முற்றம், குளியலறை, இரவு நேரங்களில்
அங்கணக்குழி. காற்றில் எப்போதும் முனகிக் கொண்டேயிருக்கும் தகரக் கதவு.
மூன்று பக்கங்களிலும் சாக்கடை ஓடும் ரெண்டடிச் சந்தும் ஒரு பக்கத்தில்
தார்சா போட்ட பெரிய வீட்டின் பின்புறமும் இருந்தது. எங்களுடைய வரவேற்பறை,
படிப்பறை, படுக்கையறையில் அட்டாலை மீது இருந்தது அந்தப் பெட்டி.
கன்னங்கரேலென்று கருப்பாய் ஒரு அடி உயரத்தில் இரண்டடி அகலத்தில் பாதி
அடைக்கப்பட்ட, மீதியில் சொருகு பலகை கொண்டு சொருகி மூடுகிற மாதிரியான
மூடியுடன் கூடிய பெட்டி. அது தான் என் முதல் புத்தகப் பெட்டி.
நான் ஆறாவது வகுப்பு படிக்கிறபோது எனக்கு அந்த அலாவுதீனின் அற்புத
விளக்கு கிடைத்தது. அதில்தான் என்னுடைய பள்ளிக்கூடப்
பாடப்புத்தகங்களையும், நோட்டுக்களையும், ஒரு கைக்கடக்கமான சிறிய
பாரதியார் கவிதைப்புத்தகமும், பென்சில்கள், தீப்பெட்டிப் படங்கள்,
சிகரெட் அட்டைகள், கோலிக்குண்டுகள், பம்பரம், புளியமுத்து, குன்னிமுத்து,
கீழே கண்டெடுத்த அழகிய நைலான் பொத்தான்கள், கலர் பாட்டில்களின் சிப்பி
மூடிகள், எங்கள் வீட்டுப் பின்புறமுள்ள புளிய மரத்தில் எப்போதாவது
வந்தமரும் கருப்பும் வெள்ளையும் கலந்த சாமரவால் கொண்ட குருவியின் ஒற்றை
இறகும், எம்.ஜி.யார், சிவாஜி படங்களின் பிலிம் துண்டுகளுமாக இருந்தன.
இவற்றை யார் தொடவும் விடமாட்டேன்.
மிகுந்த தயக்கமும், தாழ்வுணர்ச்சியும் கொண்ட நான் பள்ளிக்கூடத்தில்
நடக்கும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, பாட்டுப்போட்டி என்று
எல்லாவற்றிலும் கலந்து கொள்ள பேராவல் கொள்வேன். ஆனால் எனக்கே என் மீது
நம்பிக்கை கிடையாது. அதனால் ஒன்று சேரமாட்டேன் அல்லது தெரியாத்தனமாகச்
சேர்ந்து விட்டால் போட்டி நடைபெறும் நாளன்று பள்ளிக்கூடத்துக்கு மட்டம்
போட்டுவிடுவேன். அபூர்வமாகக் கலந்துகொண்ட போட்டிகளில் பரிசுகள் எதுவும்
வாங்கியதில்லை. ஆனால் பரிசு வாங்குகிறவர்களைப் பார்த்தால் முதலில்
பொறாமையுணர்ச்சியும் ஈர்ப்பும் ஏற்படும். நான் ஒன்பதாவது வகுப்பு
கோவில்பட்டி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது பதினொராவது வகுப்பு
படித்துக் கொண்டிருந்த, பேச்சுப் போட்டியில் கண்களைச் சிமிட்டிச்
சிமிட்டி திராவிட இயக்கப் பேச்சாளர்களைப் போல நீட்டி முழக்கிப் பேசிய
இளங்கோவைப் பார்த்தேன். எதுகைமோனையோடும் ஒரு சங்கீத லயம்போல அவர் பேசி கை
தட்டல் வாங்கியதைக் கண்டு வியந்திருக்கிறேன். பின்னாளில் அவர் என்
நெருங்கிய நண்பராக தமிழ் இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக கோணங்கியாக
உருமாறுவார் என்று அனுமானிக்க முடியவில்லை. அதேபோல அருமை நண்பர்
நாறும்பூநாதன் நிறைய்யப் பரிசுகள் வாங்குவார்.  நான் பரிசு வாங்க முடியாத
ஏக்கத்தைப் பரிசு வாங்கியவர்களோடு நட்பு பாராட்டி நெருக்கம் கொள்வதில்
திருப்தியடைய முயற்சி செய்தேன்.
குமுதம், கல்கண்டு, தொடர்களைக் கிழித்து சேகரித்து புத்தகங்களாக்கி
வாசித்த ருசியிலிருந்துதான் கல்லூரி சென்ற பிறகு கவிதை எழுதுகிற ஆர்வம்
வந்தது. அபி, சிற்பி, புவியரசு, நா.காமராசன், இன்குலாப், கங்கைகொண்டான்
என்று வாசித்துத் தள்ளினேன். அப்படியே என் சின்னஞ்சிறிய கருத்து புத்தகப்
பெட்டி நிறைந்து வழியத் தொடங்கியது. வேலையின்றித் திரிந்த காலங்களில்
கோவில்பட்டியில் போட்டிபோட்டுக் கொண்டு வெறித்தனத்துடன் வாசித்தோம். ஒரே
நாளில் மூன்று நான்கு, புத்தகங்களைக்கூட வாசித்திருக்கிறோம்.
கோணங்கி சென்னையிலிருந்து அவர் சேகரித்த புத்தகங்களை அனுப்பி வைத்தார்.
தமிழ்ச்செல்வன் வீட்டில் ஒரு நூலகம் துவங்கினோம். எல்லோரிடமிருந்தும்
புத்தகங்களை வாங்கி அவற்றைத் தொகுத்து, பிரித்து, பட்டியலிட்டு,
வரிசைப்படுத்தி, எண்கள் இட்டு இப்படி அந்த நாட்களின் இருபத்தி நான்கு மணி
நேரமும் புத்தகங்களின் வாசனையோடு கழிந்தது. இப்படி சேகரிக்கிற
காலங்களிலும், அவரவர்கள் அவரவர்களுக்குப் பிடித்த புத்தகங்களை;
அமுக்குகிற வேலையையும் செய்தார்கள். இதிலொன்றும் ஆச்சரியமில்லை.
புத்தகங்களைச் சுவாசிக்கிற யாவரும் செய்கிற காரியம்தான்.
புத்தகங்களுக்குள் எனக்கென்று பிரத்யேகமான ஒரு உலகம் காத்திருந்தது. நான்
அந்த உலகத்துக்குள் எந்தத் தயக்கமோ தாழ்வுணர்ச்சியோ இன்றி சுதந்திரமாகச்
சுற்றித் திரிந்தேன். ஸ்தெப்பி புல்வெளியில் அலைந்து திரிந்தேன்.
பீட்டர்ஸ்பர்க்கின் பனி இரவில் நடுங்கிக் கொண்டே வோட்கா குடித்து என்னைக்
கதகதப்பாக்கிக் கொண்டேன். இங்கிலாந்தின் நகரங்களில் சுற்றித் திரிந்தேன்.
ஜெர்மனியின் சிந்தனைப் பள்ளிகளின் விவாதங்களில் கலந்து கொண்டேன்.
பிரான்ஸின் பாரீஸ் நகர யுவதிகளோடு காதல் செய்தேன். கேரளாவிலும்,
கர்நாடகத்திலும், வங்காளத்திலும், ஆந்திரத்திலும் பறந்து திரிந்தேன்.
தமிழ்நாட்டின் எல்லாப் பிரதேசங்களிலும் என் காலடி பதிந்தது.
ஒவ்வொருமுறையும் ஒரு புதிய புத்தகத்தை வாசிக்கும்போதும் பரவச உணர்வு
பொங்க தடுமாற்றத்தோடு முதல் காதலின் ஈரம் ததும்பும் முதல் முத்தம் பெற்ற
உளக்கிளர்ச்சி ஏற்படும்.
என் சின்னஞ்சிறிய அலாவுதீனின் அற்புத விளக்கைத் தேய்க்கும் தோறும்
புத்தகங்கள் வந்து கொண்டேயிருந்தன. வேலைக்குச் சென்ற பிறகு இந்த
மாயாஜாலத்தின் வேகம் கூடிக் கொண்டேயிருந்தது. இந்த அற்புதமகிமை என்
துணைவியாருக்கு அச்சலாத்தியாக இருந்தது. ஆள்நடமாட்டமில்லாத ரயில்வே
குவார்ட்டர்ஸில் பேச்சுத்துணையின்றி அவர் தவித்துக் கொண்டிருக்க நான்
புத்தகங்களோடு உரையாடிக் கொண்டிருந்தால் என்ன நடக்குமோ அது நடந்தது.
அவருக்கு புத்தகங்களின் மீது மின்னிடும் பொறாமையுணர்வை அது வளர்க்க
ஆரம்பித்தது. தவிர்க்க இயலாமல், மிகுந்த பொறுமையோடு என் கிறுக்குத்
தனங்களைப் பொறுத்துக் கொள்பவர் மாற்றல் வந்து சாமான்களைக் கட்டும்போது
ஆரம்பித்துவிடுவார். வீட்டுச் சாமான்களுக்கு ஈடாகப் புத்தகங்களும்
இருந்தால் என்ன செய்ய முடியும்?
நானும் வருடத்தில் ஒருமுறை எப்போதாவது வேண்டாத புத்தகங்களைக் கழிக்கிற
வேலையில் ஈடுபடுவதாகச் சொல்லி உட்காருவேன். என் துணைவியாரும் மிகுந்த
நம்பிக்கையுடன் காத்திருப்பார். ஆனால் நான் கஞ்சன் தன் சேகரத்தை
திரும்பத் திரும்ப எண்ணிப்பார்ப்பதைப்போல ஒவ்வொரு புத்தகமாக எடுத்து
விரித்து அதன் வழியே மின்னல் பொழுதில் பயணம் சென்று வருவேன். ஒரு
வேட்டைநாயைப் போல என் வாசிப்பின் பழைய தடங்களை முகர்ந்து ரசிக்கின்ற
தருணங்களாக அது மாறிவிடுவதை யார் என்ன செய்ய முடியும்? எல்லாப்
புத்தகங்களையும் என்னைச் சுற்றிப் பரத்தி வைத்துக்கொண்டு மிகப் பெரிய
செல்வந்தனைப் போன்ற பெருமித உணர்விலோ, முற்றிய பைத்தியக்காரனின்
மோனநிலையிலோ நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்து கொண்டிருப்பேன்.
துணைவியாரின் எச்சரிக்கைக் குரலின் சூடு கொஞ்சம் கொஞ்சமாக கூடிக் கொண்டே
போகும். வேறுவழியின்றி, மனசேயில்லாமல் எழுந்து வந்து, நான் ரொம்பக்
கஷ்டப்பட்டுக் கழித்ததாக ஒரு நாலைந்து புத்தகங்களைக் கொண்டு போய் என்
துணைவியாரிடம் காட்டுவேன். பாவம் என் துணைவியார் என்ன செய்வார்?
சொந்தவீடு கட்டி வீட்டில் புத்தகங்களுக்கென்று நான்கு பெரிய அலமாரிகள்
கட்டியாயிற்று. ஆனாலும் ஒவ்வொருமுறையும் என் சின்னஞ்சிறிய கருத்த அற்புதப்
பெட்டியை நினைக்குந்தோறும் புத்தகங்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு
கொட்டுகின்றனவே நான் என்ன செய்ய? அலமாரிகளை நிறைத்து அங்கிருந்து
துணிமணிகள் வைத்திருக்கும் அலமாரியிலும், குழந்தைகளின் கல்லூரிப்
புத்தகங்களுக்கு நடுவிலும், சீப்பு பவுடர் வைத்திருக்கும் ஷெல்பிலும்,
டி.வி. ஸ்டாண்டிலும் ஏறி உட்கார்ந்து கொள்கின்றன. மேஜை மீது புத்தகங்கள்
அலைந்து திரிந்து விளையாடிப் புழுதிக் காடாக்கி விடுகின்றன. யாராவது
நண்பர்கள் வந்தால் டீப்பாயில் டீ வைக்க முடியவில்லை. புத்தகங்கள் எம்பிக்
குதித்துத் தட்டி விடுகின்றன. இப்போதும் என் துணைவியாரின் குரல் கேட்டுக்
கொண்டேயிருக்கிறது. அந்தக் குரலைக் கேட்டதுமே நல்ல பிள்ளைகளைப் போல
புத்தகங்கள் ஒழுங்காக கையைக் கட்டி வாயைப் பொத்தி வரிசையாக
உட்கார்ந்திருக்கின்றன.
கொஞ்ச நேரத்திற்குப் பிறகு எனக்கே அந்த அமைதியும் ஒழுங்கும்
பிடிக்கவில்லை. சுதந்திரமாக விளையாட விடுகிறேன். புத்தகங்கள் ஓவென்ற
இரைச்சலோடு என் வீடெங்கும் இரைந்து கிடக்கின்றன. அதைப் பார்த்து  என்
முகத்தில் தோன்றும் பைத்தியக்காரப் புன்னகையை மறைக்க முயற்சி செய்து
கொண்டிருக்கிறேன். வைக்கம் முகமதுபஷீர் அவருடைய அறையில் குவிந்து
கிடக்கும் புத்தகங்களுக்கு நடுவே உட்கார்ந்திருந்த அபூர்வமான புகைப்படம்
என் கண்ணில் நிழலாடுகிறது. அதோ பஷீர் சுருக்கங்கள் விழுந்த, பல்லில்லாத
பொக்கைவாய் வழியே பீடிப் புகையை ஊதுகிறார் என்னை நோக்கி. அது சுழன்று
சுழன்று என்னைத் தூக்கிக் கொண்டு பறக்கிறது. பஷீர் சிரிக்கிறார். அது
அவருடையதா இல்லை என்னுடையதா குழம்பிக் கொண்டிருக்கிறேன். புத்தகங்கள்
என்னை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

 

நன்றி- புத்தகம் பேசுது

Thursday 14 June 2012

சுறா

shark தால்ஸ்தோய்

தமிழில்-உதயசங்கர்

எங்களுடைய கப்பல் ஆப்பிரிக்காவின் கரையோரம் நங்கூரமிட்டிருந்தது. அந்த நாள் அற்புதமாக இருந்தது. கடலிலிருந்து புதிய காற்று வீசியது. ஆனால் மாலையில் காலநிலை மாறி விட்டது. புழுக்கம் கூடிக் கொண்டே போனது. சகாரா பாலைவனத்தின் சூடான காற்று எங்களை அடுப்பிலிருந்து வரும் வெப்பத்தைப் போல எங்களைத் தாக்கியது.

சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன்னால் கப்பல் கேப்டன் மேல்தளத்திற்கு வந்தான். “நீச்சல் குளத்தைத் தயார் செய்யுங்கள்” என்று கத்தினான். ஒரு நொடியில் மாலுமிகள் கடலுக்குள் பாய்ந்தனர். தாழ்ந்து வரும் கப்பல்பாயைக் கீழே கட்டி ஒரு நீச்சல்குளத்தை உள்ளேயே உருவாக்கினார்கள்.

கப்பலில் இரண்டு பையன்கள் எங்களோடு இருந்தார்கள். அவர்கள் முதலில் குதித்தனர்.ஆனால் சிறிது நேரத்திலேயே கூட்டம் அதிகமாகி விட்டது. உடனே அவர்கள் நேரடியாக கடலில் குதிக்க முடிவு செய்தார்கள். முதலைகள் இறங்குவதைப் போலத் தண்ணீருக்குள் நழுவினர். நங்கூரத்தின் மீது மிதக்கும் மிதவையை அடைய முயற்சித்தனர்.

ஒரு பையன் இன்னொரு பையனை விட முந்திச் சென்று விட்டான்.பிறகு அப்படியே பின்னால் சென்று விட்டான். அவனுடைய அப்பா பழைய துப்பாக்கிவீரர் கப்பல்தளத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்தார். அவருடைய மகன் பின்தங்கிய போது அவர் அவனைப் பார்த்து,”விடாதே..இன்னும் கொஞ்சம் முயற்சி செய்” என்று கத்தினார்.

ஆனால் அப்போது யாரோ கப்பல்தளத்திலிருந்து,”அதோ..சுறா..” என்று கத்தினார்கள். நாங்கள் தண்ணீருக்குள் மிதந்து வரும் அந்த கொடூரமிருகத்தின் முதுகைப் பார்த்தோம்.

சுறாமீன் அந்த பையன்களை நோக்கியே விரைந்து கொண்டிருந்தது. துப்பாக்கிவீரர்”திரும்பி வா..திரும்பி வா..” என்று முழங்கினார். ஆனால் அது அந்தப் பையன்களுக்குக் கேட்கவில்லை.அவர்கள் நீந்திக் கொண்டிருந்தனர்.சிரித்துக் கொண்டும் முன்பை விட சத்தமாகக் கத்திக் கொண்டுமிருந்தனர்.

துப்பாக்கிவீரரால் அசையமுடியவில்லை.அப்படியே வெளுத்துப் போய் விட்டார். மாலுமிகள் ஒரு படகை கடலில் இறக்கி அதில் ஏறிக் கொண்டனர். அவர்களுடைய முழு பலத்தை செலுத்தி துடுப்பை வலித்தனர். ஆனால் பையன்களோ வெகுதூரத்திலிருந்தார்கள்.சுறா அவர்களுக்கு இருபதடி தூரத்திலேயே இருந்தது.

எங்களுடைய எச்சரிக்கை அலறல்களை அந்தப் பையன்கள் கேட்கவில்லை. சுறாமீனையும் பார்க்கவில்லை. திடீரென ஒரு பையன் திரும்பினான்.நாங்கள் அவனுடைய அலறலைக் கேட்டோம். அவனும் அவனுடைய விளையாட்டுத்தோழனும் தனித்தனியே துள்ளிக் குதித்தனர்.

அந்த அலறல் துப்பாக்கிவீரரின் அமைதியைக் குலைத்துவிட்டது. ஒரு நொடியில் அவர் பீரங்கி இருந்த இடத்தை அடைந்தார். பீரங்கிக் குழாயை அசைத்து அதன்மீது கவிழ்ந்து குறி பார்த்தார். பின்னர் திரியை இழுத்து விட்டார்.

கப்பலில் இருந்த அத்தனை பேரும் கற்சிலை மாதிரி அசையாமல் இருந்தனர். என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கக் காத்துக் கொண்டிருந்தனர்.

பீரங்கி முழங்கியது.துப்பாக்கிவீரர் அப்படியே பீரங்கியின் அடியில் முகத்தை மூடிக் கொண்டு விழுந்து கிடப்பதை நாங்கள் பார்த்தோம்.அந்த சுறாவுக்கும் பையன்களுக்கும் என்ன நேர்ந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை.ஏனெனில் பீரங்கிக் குண்டின் புகை சற்று நேரம் அவர்களை மறைத்து இருந்தது.

தண்ணீருக்கு மேலே புகை கலையத் தொடங்கியபோது முதலில் ஒரு முணுமுணுப்பு தோன்றியது. அது வளர்ந்து சந்தோசக் கூச்சலாக மாறியது.

அந்த பழைய துப்பாக்கிவீரர் தன் முகத்திலிருந்து கைகளை எடுத்துவிட்டு வெளியே கடலைப் பார்த்தார். இறந்து போன சுறாமீனின் மஞ்சள் வயிறு தண்ணீரின் மேற்பரப்பில் மிதந்தது. சில நொடிகளுக்குள்ளே எங்கள் படகு அந்த பையன்கள் இருந்த இடத்தை அடைந்தது. அவர்களைக் கப்பலுக்கு அழைத்து வந்தது.

Wednesday 13 June 2012

என்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு

safdar உதயசங்கர்

ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கோவில்பட்டியில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் தலைமையில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது தான் இளம் மொட்டுகளாக நான், நாறும்பூநாதன், முத்துச்சாமி, சாரதி, மொட்டுகள் என்ற கையெழுத்துப் பத்திரிகை மூலமாக கோவில்பட்டி இலக்கிய அரங்கத்துக்குள் பிரவேசித்தோம். பெரிய வாசிப்பனுபவமோ, இலக்கிய அனுபவமோ, எங்களுக்குக் கிடையாது. அப்படி ஏதாவது கொஞ்சநஞ்சம் தெரிந்திருந்தது என்றால் அது நாறும்பூநாதனோடு சேர்ந்திருந்த வாசனையால் தான். நாறும்பூநாதனின் அண்ணன் ஆர்.எஸ். மணி வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவருடைய அரசியல், தொழிற்சங்க ஈடுபாட்டினால் வாங்கிச் சேகரித்திருந்த சோவியத் புத்தகங்களை நாறும்பூநாதன் வாசித்துவிட்டு எங்களிடம் விடுகின்ற கதைகளை நாங்கள் வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருப்போம். அவனுடைய முயற்சியினாலேயே அந்தக் கையெழுத்துப்பத்திரிகை சாத்தியமாயிற்று. எங்களுடைய சிந்தனைத்துளிகளும் கவிதைப்பிரவாகங்களும், புரட்சிக்கட்டுரைகளும் அதில் கொட்டிக்கிடந்தன. அதைப் படிப்பதற்காகச் சுற்றுக்கு விட்டோம். அதிலிருந்து பிடித்தது இந்த இலக்கியக்கோட்டி.

ஊரில் இரண்டு இலக்கியக்கோஷ்டிகள் இருந்தது எங்களுக்குத் தெரியாது. ஒரு அணி பலமாக எங்களை வரவேற்க, இன்னொரு அணியோ எங்களை நசுக்கிவிடத் துடித்தது. அப்போது தான் எங்களுக்கு இலக்கியத்திலும் அரசியல் உண்டு என்பது தெரிந்தது. ஆனாலும் நாங்கள் அசரவில்லை. அதுவரை நாங்கள் அறிந்திராத புதியபிரதேசத்தின் கவர்ச்சியில் மயங்கிக் கிடந்தோம். யார் பேசினாலும் கேட்டோம். அவர்கள் சிந்திய ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே பத்திரமாகப் பொறுக்கியெடுத்தோம். அதைச் சுமந்து கொண்டு போய் இன்னொரு கோஷ்டியிடம் இறக்கினோம். அவர்கள் சிந்தியதை எதிர்கோஷ்டியிடம் கொண்டு சேர்த்தோம். இப்படியே எங்களை நாங்களே உரமேற்றிக் கொண்டோம். அப்போது சென்னை சோழமண்டலத்தில் மேற்கு வங்கத்திலிருந்து நாடகாசிரியர், மூன்றாவது அரங்கின் முன்னோடி, பாதல் சர்க்கார் பயிற்சி கொடுக்க ஒரு பயிற்சிப்பட்டறை நடந்தது. அதன் வீச்சில் தமிழகத்தில் பல இடங்களில் புதிய முறையிலான வீதி நாடகக் குழுக்கள் உருவாயின. கோவில்பட்டியிலும் தர்சனா என்ற பெயரில் ஒரு நாடகக்குழு உருவானது. எழுத்தாளர்கள், கௌரிஷங்கர், வித்யாஷங்கர், தேவதச்சன், மனோகர்( திரைக்கலைஞர் சார்லி), மாரீஸ், திடவைப்பொன்னுச்சாமி, உதயசங்கர், நாறும்பூநாதன், சாரதி, ராம், அப்பாஸ், என்று பெரிய கூட்டமே அதில் ஈடுபட்டோம். பேரா.ராமானுஜத்தின் நாடகங்கள், தேவதச்சனின் நாடகங்கள், நாங்களாகக் கூட்டு முயற்சியில் உருவாக்கிய நாடகங்கள் என்று பத்து நிமிடம், இருபது நிமிட நாடகங்களை உருவாக்கினோம்.

நாடகச்செயல்பாட்டில் கோவில்பட்டி பாணி ஒன்று தானாகவே உருவானது. அதாவது நாடக ஸ்கிரிப்டோ, வசனமனப்பாடங்களோ , மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் ஒத்திகைகளோ இன்றி, எல்லோரும் கூடிப் பேசுவதின் மூலம் நாடக ஸ்கிரிப்டை, வசனங்களை சிருஷ்டித்தோம். ஆனாலும் அது மாறிக் கொண்டே யிருக்கும். ஒவ்வொரு இடங்களில் போடப்படும்போது அடிப்படைச் சாராம்சம் மாறாமல் உருமாறி வேறொன்றாக மாறும். இதன் புதுமையில் எங்களுக்கு பெரிய ஈர்ப்பு வந்தது. கோவில்பட்டியைச் சுற்றி ஏராளமான கிராமங்களில் நாங்கள் நாடகம் போட்டோம். இந்திய சோவியத் நட்புறவுக்கழகத்தின் சார்பிலும், தொழிற்சங்கங்களின் அனைத்து நிகழ்ச்சி நிரல்களிலும் எங்கள் தர்சனா நாடகக்குழு இருந்தது. கௌரிஷங்கர், வித்யாஷங்கர், மனோகர், வேலை தேடி, வேலை கிடைத்து கோவில்பட்டியை விட்டு இடம் பெயர்ந்து விட்டனர். தர்சனாவின் ஆரக்கால்களில் முக்கியமான ஆரக்கால்கள் அவர்கள். தர்சனா முடங்கியது. இதற்குள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயல்பாடுகள் பல்கிப் பெருகியது. இயல்பாகவே எங்கள் மனம் தமுஎச வில் இருந்தது. அங்கே ஒரு புதிய நாடகக்குழு தமிழ்ச்செல்வன் தலைமையில் துவங்கப் பட்டது. சிருஷ்டி என்ற அந்த நாடகக்குழுவில் தான் பால்ராமசுப்புவை நான் சந்தித்தேன்.

பால் என்ற அடைமொழி அவர் ஆவின் பால்பண்ணையில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் வந்து சேர்ந்து கொண்டது. கட்டையான உருவம், முன் வழுக்கை விழுந்த தலை, துறுதுறுவென்ற உடல்மொழி, கொஞ்சமும் யோசிக்காமல் கடகடவென வருகிற பேச்சு, எப்போதும் சிரிப்பு, இயல்பான நகைச்சுவையுணர்வு, எல்லோரிடமும் எந்த கௌரவமோ, வயது வித்தியாசமோ இல்லாமல் பழகுகிற தன்மை, யாருக்குத் தேவையென்றாலும், எந்த உதவியும் செய்கிற தோழமை, இவையெல்லாம் சேர்ந்து எங்கள் ஜமாவிலும், சிருஷ்டி நாடகக்குழுவிலும் முக்கியமான ஒரு ஆளுமையாகவும் எங்கள் அன்புக்குரிய அண்ணனாகவும் மாறி விட்டார் பால்ராமசுப்பு. நாங்கள், தத்துவம், அரசியல், இலக்கியம், என்று புத்தகங்களாகப் படித்து பெரிய அறிவுஜீவிகள் மாதிரி பாவனை செய்து கொண்டு திரிந்தோம். அதனால் நாங்கள் எங்கள் நாடகங்களுக்கு ஒத்திகை தேவையில்லை. ஏனெனில் நாடகநிகழ்வுகளில் எதிர்பாராமல் நேரும் எந்தச் சூழ்நிலையையும் நாங்கள் சமாளித்து விடுவோம் என்று இறுமாப்பு எங்களுக்கு இருந்தது. ஆனால் பால்ராமசுப்பு பெரிய படிப்பாளியில்லை. தேவைக்குக் கொறிக்கிறவர். நாடகங்களில் வெளிப்படும் அவருடைய உடல்மொழியும், டைமிங்கான வசனங்களும் மிகத் தேர்ந்த கலைஞன் என்று எங்களுக்கு உணர்த்தியது. அவருடைய லகுவான தொடர்புமொழியால் மிக விரைவில் சிருஷ்டி நாடகக்குழுவின் மேலாளராகவும் விட்டார். நாடக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிற வேலையையும் செய்தார். எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. தமிழ்ச்செல்வனிடம் கேட்க முடியாததை அண்ணன் பால்ராமசுப்புவிடம் உரிமையுடன் கேட்போம். அவரும் எங்களுக்கு எந்தக் குறையும் – கேட்ட நேரத்தில் டீ, சிகரெட்,- இல்லாமல் பார்த்துக் கொண்டார்.

எப்போதும் போல, எல்லா விஷயங்களிலும் நடப்பது போல தமுஎச இந்த வீதி நாடகச் செயல்பாடுகளை உடனே அங்கீகரிக்க வில்லை. சந்தேகத்தின் கூர்வாளால் வீதி நாடகச்செயல்பாட்டாளர்களான அஸ்வகோஷ், தமிழ்ச்செல்வன், பிரளயன், போன்றோரிடம் சண்டையிட்டது. ஆனால் விடாப்பிடியான முயற்சிகளாலும், நாடகங்களுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பினாலும், இந்த வீதி நாடகச்செயல்பாடுகளை ஏற்றுக் கொண்டது. ஆனாலும் திருப்தியில்லை. எங்களைச் சீர்படுத்த வேண்டும் என்று நினைத்தது. எனவே அப்போது நாடகவிற்பன்னர்களாக இருந்த எஸ்.வி.சகஸ்ரநாமம், கோமல்சுவாமிநாதன், போன்றோரின் தலைமையில் சென்னையில் ஒரு பயிற்சிப்பட்டறையை ஏற்பாடு செய்தது. எப்போதும் நாடகங்களில் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்காகவெல்லாம் சிரமப்படமாட்டார் பால்ராமசுப்பு. அவர் அவராகவே வந்து அந்தக் கதாபாத்திரத்தை அவருக்கான கதாபாத்திரமாக மாற்றி விடுவார். அவருக்குப் பயிற்சி கொடுக்க மிகுந்த சிரமப்பட்டனர். பாரதியின் பாஞ்சாலி சபதத்தை நாடகப்பயிற்சிக்கு எடுத்தவர்கள், பால்ராமசுப்புவை துச்சாதனன் வேடத்துக்குத் தேர்வு செய்தனர். அஞ்சவில்லை பால்ராமசுப்பு. துச்சாதனனை கட்டுடைத்து விட்டார். கொடிய வில்லனான துச்சாதனனை விழுந்து விழுந்து சிரிக்கும்படியாகக் காமெடியனாக்கி விட்டார். அவர் மீது தவறில்லை. அவர் இயல்பு அது. நாடகம் வேறு ஒரு பரிமாணத்துக்குப் போய்க் கொண்டிருந்தது. ஆனால் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு அது உவப்பாகயில்லை. உடனே அவரைக் கண்டித்து அந்தக் கதாபாத்திரத்தை அவரிமிருந்து பிடுங்கி விட்டார்கள்.

பணம், புகழ், அங்கீகாரம், இப்படி எதையாவது எதிர்பார்த்துச் செயல்படும்போது தானே அவை கிடைக்காத போது ஏமாற்றமும் சோர்வும் ஏற்படும். நான் பல முறை அப்படி சோர்வும் விரக்தியும் அடைந்திருக்கிறேன். ஆனால் பால்ராமசுப்பு ஒரு நாளும் சோர்வடைந்தோ, உற்சாகமின்றியோ இருந்து பார்த்ததில்லை. எப்போதும் ஒரு இடத்தில் கட்டிப்போட முடியாதபடிக்குத் தன் வாழ்வை உற்சாகமாக வைத்திருந்தார். எல்லோருக்கும் அவர் ஏதோ ஒரு விஷயத்துக்காகத் தேவைப்பட்டார். தோழர் வீட்டு கலியாணங்களை அவரே முன் நின்று எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். மரணவீடாக இருந்தாலும் அவரே எல்லாவற்றையும் சிரமேற்கொண்டு செய்து முடிப்பார். அவர் இருக்கும் இடமே உற்சாகமாகி விடும். நாங்கள் சிருஷ்டி நாடகக்குழுவில் இயங்கிக் கொண்டிருக்கும்போது அடிக்கடி பால்ராமசுப்புவின் வீட்டில் கோழிச்சோறு சாப்பிடுவோம்.அப்போது அவருடைய துணைவியார் கொஞ்சம் கூச்சத்துடனும், மிகுந்த அக்கறையுடனும் எங்களுக்கு உணவு பரிமாறுவதைப் பார்த்திருக்கிறேன்.

நான் வேலை கிடைத்து வெளியூர்களில் அலைந்து திரிந்து வந்தபோது அவருடைய துணைவியார் ஆர்.. மல்லிகா இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் இருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மிகுந்த தன்னம்பிக்கையும், கம்பீரமும் கொண்ட தலைவராக அவருடைய துணைவியார் மாறியிருந்தார். பின்னர் கோவில்பட்டி நகர் மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்தினார். அடிக்கடி அதைச் சொல்லிச் சொல்லிப் பெருமைப்படுவார் பால்ராமசுப்பு.

“ எல உங்க அக்காவுக்கு இவ்வளவு திறமை இருக்கும்னு உனக்கு தெரியுமால..”

என்று சொல்லுவார். எனக்கு மிக அபூர்வமான மனிதராகவே தெரிந்தார் பால்ராமசுப்பு.

கோவில்பட்டியை விட்டு போனபிறகு சில வருடங்களிலே நாடகங்களை மறந்து விட்டேன். பின்னர் நாடகங்களைப் பார்க்கிற பார்வையாளனாக மட்டுமே நான் மாறிப் போனேன். ஆனால் பால்ராமசுப்பு அப்படியில்லை. இன்றும் தமிழ்நாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அத்தனை நாடகக்குழுக்களோடும், கலைக்குழுக்களோடும் உயிரோட்டமுள்ள தொடர்பை வைத்திருக்கிறார். இப்போதும் எந்த நாடகக்குழுவிலும் நடிகராகி விடுகிறார். கலைக்குழுவினர் வந்தால் பின்பாட்டு பாடுகிறார், அல்லது ஹார்மோனியம் இசைக்கிறார். கலைஞர்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் செய்கிறார். இப்போது தான் இங்கே தான் பார்த்த மாதிரி இருக்கும், அங்கே இருப்பார். அறுபதைக் கடந்த பின்னரும் அவருடைய சுறுசுறுப்பின் வேகம் குறைய வில்லை. உற்சாகத்தின் எல்லை சுருங்கவில்லை.

அதோ ஒரு தோழரின் வீட்டுத் திருமண வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் பால்ராமசுப்பு. மதியம் இனாம் மணியாச்சி பகுதியில் விவசாயிகள் சங்க உறுப்பினர் பதிவு போடவேண்டும். மாலையில் புதுகை பூபாளம் கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சியை நாலாட்டின்புத்தூரில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டியதிருக்கிறது. எப்போதும் பம்பரம் போல சுற்றிக் கொண்டேயிருக்கும் அவரைப் பார்க்கும்போதெல்லாம் பிரமிப்பாய் இருக்கும் தன்னலமற்ற இந்தத் தோழர்களின் உழைப்பால் புதிய மாற்றம் நிகழ்ந்திடும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

இதோ கிடுகிடுவென என்னை நோக்கிச் சிரித்துக்கொண்டே வந்து கொண்டிருக்கிறார் என்றும் இளைஞன், எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு!

நன்றி- மீடியா வாய்ஸ்

Tuesday 12 June 2012

சிராஜ்

சதத் ஹசன் மண்ட்டோ

தமிழில்- உதயசங்கர்Manto-02 

நாக்பரா போலிஸ்நிலையத்தையும் அதற்கு அடுத்து இருந்த ஈரானியன் தேநீர்க்கடையையும் பார்த்த மாதிரி அந்த சிறிய பூங்கா இருந்தது. தோண்டூவை அங்கே எப்போதும் பார்க்கலாம். விளக்குக் கம்பத்தில் சாய்ந்தபடி வாடிக்கையாளருக்காகக் காத்துக் கொண்டிருப்பான்.

யாருக்கும் அவனுடைய உண்மையான பெயர் தெரியாது. ஆனால் எல்லோரும் அவனை தோண்டூ- தேடுபவன், கண்டுபிடிப்பவன், என்ற அர்த்தத்தில்- அது அவனுக்கு பொருத்தமாகவும் இருந்தது. ஏனென்றால் அவனுடைய தொழிலே எல்லாவகையான, எல்லா விதமான, பெண்களையும் வாடிக்கையாளர்களுக்காக தேடுகிற, கண்டுபிடிக்கிற, வாங்குகிற மாமாத் தொழில்தான்.

கடந்த பத்து வருடங்களாக அவன் இந்தத் தொழிலில் இருந்து வருகிறான். இந்தக் காலகட்டத்தில் அவன் கைகள் வழியாக நூற்றுக்கணக்கான பெண்கள் – எல்லா மதத்தைச் சேர்ந்தவர்கள், இனத்தைச் சேர்ந்தவர்கள், எல்லாவிதக் குணாதிசயங்களைக் கொண்டவர்களும்- கடந்து போயிருக்கிறார்கள்.

நாக்பரா போலிஸ் தலைமையகத்துக்கு முன்னால், ஈரானியன் தேநீர்க் கடைக்கு எதிரே இருக்கும் விளக்குக் கம்பம் எப்போதும் அவனுடைய இருப்பிடமாக இருந்து வந்தது. அந்த் விளக்குக் கம்பம் அவனுடைய வியாபார அடையாளமாகவே மாறி விட்டது. அடிக்கடி நான் அந்த வழியே போகும் போது அந்த விளக்குக் கம்பத்தைப் பார்ப்பேன். நான் உண்மையில் வெற்றிலைக் கறை படிந்த அழுக்கான உடையோடு நிற்கிற தோண்டூவைப் பார்ப்பதாகவே உணர்வேன்.

அந்த விளக்குக் கம்பம் உயரமாக இருந்தது. தோண்டூவும் உயரமாக இருந்தான். பல திசைகளிலிருந்து ஏராளமான மின்சாரக் கம்பிகள் இந்த அசிங்கமான இரும்புத்தூணின் உச்சியிலிருந்து கிளம்பி அருகிலுள்ள கட்டிடங்களுக்கும், கடைகளுக்கும், ஏன் மற்ற விளக்குக் கம்பங்களுக்கும் சென்று கொண்டிருந்தது.

தொலைபேசித்துறை ஒரு சிறிய டெர்மினலை அந்த விளக்குக் கம்பத்தில் வைத்திருந்தது. அவ்வப்பொழுது டெக்னீசியன் அதைப் பரிசோதிப்பதைப் பார்க்க முடியும். சிலநேரங்களில் தோண்டூ கூட அந்த விளக்குக் கம்பத்தோடு இணைந்த ஒரு டெர்மினல் தான். அவனுடைய வாடிக்கையாளர்களின் பாலியல் சமிக்ஞைகளை சரிபார்க்கிற அல்லது இணைக்கிற ஒரு தொடர்புப் பெட்டிதான் என்று எனக்குத் தோன்றும். அவனுக்கு உள்ளூர்வாசிகளை மட்டுமல்ல, நகரத்திலுள்ள பெரிய சேட்டுகளையும் கூடத் தெரியும். அவர்கள் மாலை நேரத்தில் அவர்களுடைய பாலியல் ரகசியத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக அவனிடம் வருவார்கள்.

அவனுக்கு இந்தத் தொழிலில் உள்ள பெரும்பாலான பெண்கள் எல்லோரையும் தெரியும், அவன் வாங்கித் தருகிற உடைகளையே அவர்கள் உடுத்துவதினால் அவ்னுக்கு அவர்களுடைய உடல்களைப் பற்றிய அந்தரங்க விபரங்கள் எல்லாம் தெரியும். அதோடு அவர்களுடைய குணாதிசயங்களைப் பற்றியும் அவன் நன்றாக அறிந்திருந்தான். எந்தப் பெண் எந்த வாடிக்கையாளரைச் சந்தோஷப் படுத்துவாள் என்றும் மிகச் சரியாகத் தெரிந்து வைத்திருந்தான். ஆனால் அதிலும் ஒரு விதி விலக்கு இருந்தது. அது சிராஜ். ஆனால் அவளைப் பற்றிப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

தோண்டூ அடிக்கடி என்னிடம் சொல்லுவான்.

“ மாண்டோ சாகிப்.. இது அடங்காதது.. அவளை ஒரு வழிக்கும் கொண்டு வர என்னால முடியல.. அவளை மாதிரி ஒரு பொண்ணை நான் பார்த்ததேயில்லை.. அவ குணம் மாறிக்கிட்டேயிருக்கு.. அவ சந்தோசமா இருக்கா.. மனசு விட்டு சிரிச்சிகிட்டிருக்கான்னு நீங்க நினைச்சிகிட்டிருக்கும் போதே திடீரென அவ அழுது குமுறுவா.. அவளால சாதாரணமா யாரோடும் ஒத்துப் போக முடியவில்லை..எல்லா பயணிகளோடயும் சண்டை.. நான் ஆயிரந்தடவை சொல்லிட்டேன்.. அவளைச் சரி பண்ணிக்கச் சொல்லி.. ஆனா அதெல்லாம் அவகிட்ட எதுவும் நடக்கமாட்டேங்கு.. பல தடவை நான் அவளை எங்கேயிருந்து வந்தாளோ அங்கேயே போகச் சொல்லிட்டேன்.. அவ முதல்ல பாம்பேயிலிருந்து வந்தா.. அப்ப பாத்துருக்கீங்களா.. உண்மையைச் சொல்லப் போனா உடுத்தறதுக்கு அவ கிட்ட நல்ல துணியோ அவ பேரில ஒரு நயாபைசாவோ கிடையாது.. அப்படியிருந்தும் அவ நான் கூட்டிட்டு வற ஆளுகளோட பந்து விளையாட மாட்டேங்கா.. என்ன பிடிவாதமான, குழப்பமான ஜென்மமோ…”

நான் சில தடவை சிராஜைப்  பார்த்திருந்தேன். அவள் ஒல்லியாகவும் அழகாகவும் இருந்தாள். அவளுடைய கண்கள் அவளுடைய நீள் வட்ட முகத்திற்குச் சற்றும் பொருத்தமில்லாமல் பெரிய சன்னல்களைப் போலிருந்தன.உங்களால் சாதாரணமாக அதைப் பார்க்காமல் தாண்டிப் போக முடியாது. நான் முதன் முதலில் கிளேர் சாலையில் அவளைப் பார்த்த போது நான் அவளுடைய கண்களைப் பார்த்து ,

“ தயவு செய்து கொஞ்சம் ஓரமாய் ஒரு நிமிடம் நிற்க முடியுமா? நான் இந்தப் பெண்ணை கொஞ்சம் பார்க்கட்டும்..”

என்று சொல்லவேண்டும் போல உணர்ந்தேன். அவள் மெலிந்திருந்தாள். ஆனாலும் அவளிடம் அவ்வளவு இருந்தது. கண்ணாடிக்கோப்பை நிறைய வழிந்து, நுரை பொங்கும் பலமான நீர்த்துப்போகாத மதுவைப் போல, வெளிப்படையான ஒரு அமைதியின்மையுடன் அவள் இருந்தாள். ஏனெனில் அவளுடைய ஆளுமையில் ஏதோ ஒன்று கூர்மையாகவும் கொடுக்கைப்போல கொட்டுவதாகவும் இருந்தது. ஆனாலும் இந்த குழப்பமான கலவையில் யாராவது கொஞ்சம் தண்ணீரை ஊற்றி அந்தத் தீயை அணைத்து விடலாம் என்று நினைத்தேன். அவளுடைய எரிச்சலூட்டும் நடத்தையை மீறி அவளுடைய பெண்மை துலங்கியது. அவளுடையத் தலைமுடி அடர்த்தியாக இருந்தது. கழுகின் மூக்கைப் போல கூர்ந்திருந்தது அவளுடைய மூக்கு. அவளுடைய விரல்கள் எனக்கு வரைபட நிபுணர்கள் பயன்படுத்தும் கூர்மையான பென்சில்களை நினைவு படுத்தின. அவள் எல்லாவற்றின் மீதும் லேசான கோபம் கொண்டவளைப் போலத் தோற்றம் தந்தாள். தோண்டூ மீது, அவன் எப்போதும் நின்று கொண்டிருக்கும் அந்த விளக்குக் கம்பத்தின் மீது, அவன் அவளுக்குக் கொண்டு வந்து கொடுக்கும் பரிசுப் பொருட்களின் மீது, ஏன் அவளுடைய முகத்தை விட்டு வெளியே ஓடும் அவளுடைய கண்கள் மீது கூட அவ்ள் கோபம் கொண்டவள் போலத் தோன்றினாள்.

ஆனால் இதெல்லாம் ஒரு கதைசொல்லியின் மனப்பதிவுகள். தோண்டூ அவனுக்கென்றே பிரத்யேகமான பார்வைகள் கொண்டிருந்தான். ஒரு நாள் என்னிடம் அவன்,

“ மண்டோ சாகிப் இன்னிக்கி இந்த மச்சினிச்சி சிராஜ் என்ன செய்ஞ்சா தெரியுமா? அண்ணே எனக்கு அதிர்ஷ்டம்! நாக்பரா போலிஸின் அன்பு மட்டும் இல்லைன்னா இந்நேரம் என்னய வேக வைச்சிருப்பாங்க.. அது உண்மையிலே பெரிய நாசமாப் போயிருக்கும்….”

என்று சொன்னான்.

“ என்ன நடந்தது? “

“ வழக்கம்போல தான்.. எனக்கு என்ன ஆச்சுன்னே தெரியல.. மூளை குழம்பிப் போயிருக்கணும்னு நெனைக்கிறேன்.. அவ.. என்னய சிக்கல்ல மாட்டி விடறது இது முதல் தடவையில்ல.. ஆனாலும் நான் அவளை இழுத்துகிட்டே அலையிறேன்.. நான் அவளை இப்பவே கை கழுவணும்.. அவ என் தங்கச்சியும் இல்ல.. அம்மாவும் இல்ல.. நான் ஏன் கஷ்டப் பட்டு அவளைக் காப்பாத்தணும்.. சீரியஸா சொல்றேன்..மண்டோசாகிப்.. எனக்கு என்ன செய்றதுன்னே விளங்கலே..”

நாங்கள் இருவரும் ஈரானியன் தேநீர் விடுதியில் உட்கார்ந்து கொண்டு தேநீரை உறிஞ்சிக் கொண்டிருந்தோம் தோண்டூ அவனுடைய கோப்பையிலிருந்த தேநீரை சாஸரில் ஊற்றினான். அவன் எபோதும் குடிக்கிற காப்பியோடு கலந்து அந்தச் சிறப்புக் கலவையை உறிஞ்சத் தொடங்கினான்.

“ உண்மை என்னன்னா.. நான் இந்த மச்சினிச்சி சிராஜுக்காக வருத்தப்படறேன்..”

“ ஏன்?”

“ ஏன்னு கடவுளுக்குத் தான் தெரியும்.. நான் நெனக்கிறதைச் செய்றேன்..”

அவனுடைய தேநீரைக் குடித்து முடித்தான். பின்னர் சாஸரின் மேல் அந்தக் கோப்பையைக் கவிழ்த்து வைத்தான்.

“ அவ இன்னும் கன்னிதான்னு உங்களுக்குத் தெரியுமா? “

“ இல்லை.. தோண்டூ.. எனக்குத் தெரியாது…”

தோண்டூவுக்கு என் குரலில் இருந்த சந்தேகம் புரிந்து விட்டது. அது அவனுக்குப் பிடிக்கவில்லை.

“ நான் உங்ககிட்ட பொய் சொல்லல..மண்டோ சாகிப்.. அவ நூறு சதவீதம் கன்னிப்பெண்.. பந்தயம் கட்டறீங்களா நீங்க…”

“ எப்படி அது சாத்தியம் தோண்டூ?”

என்று நான் கேட்டேன்.

“ ஏன் முடியாது..? சிராஜ் மாதிரி ஒரு பொண்ணு.. நான் சொல்றேன்…. அவ இந்தத் தொழில்ல வாழ்க்கை பூரா இருந்தாலும் கன்னிப்பொண்ணாவே இருக்கமுடியும்.. விசயம் என்னன்னா.. அவளை ரெம்பத் தொடறதுக்கு யாரையும் அவ விடறதில்லை.. எனக்கு அவளோட கேடு கெட்ட சரித்திரமெல்லாம் தெரியும்.. அவ பஞ்சாபிலிருந்து வந்தான்னு தெரியும்.. லைமிங்டன் சாலையில் இருந்த அந்த அம்மா நடத்திகிட்டிருந்த தனி வீட்டில தான் இருந்தா.. ஆனா அங்கேயிருந்து.. வெளியேத்தப்பட்டா.. காரணம் பயணிகளோட அவ பண்ணின முடிவில்லாத சச்சரவுகள் தான்.. அவ அங்கே மூணு மாசம் இருந்ததே ஆச்சரியம் தான்..ஆனால் அந்த நேரத்தில அந்த அம்மா இருபது பொண்ணுங்களை வைச்சிருந்தாங்க.. ஆனால் மண்டோசாகிப் எவ்வளவு நாளைக்கித்தான் மனுசங்க உங்களுக்கு சாப்பாடு போடுவாங்க..? ஒரு நாள் அந்த அம்மா அவளை கட்டின துணியைத் தவிர வேற எதுவும் இல்லாம.. வெளியே விரட்டிட்டாங்க.. அதுக்கப்புறம் அவ பாராஸ் சாலையிலிருக்கிற இன்னொரு அம்மாகிட்ட போனா ஆனா அவ அவளோட குணத்தை மாத்திக்கவேயில்லை.. ஒரு நாள் அவ உண்மையில ஒரு பயணியைக் கடிச்சிட்டா..

அங்கேயும் ஒரு ரெண்டு மாசத்துக்கு மேல நீடிக்கல… அவகிட்ட என்ன பிரச்னைன்னு எனக்குத் தெரியல.. அவ அப்படியே கொதிச்சிப் போயிருக்கா.. யாராலயும் அதை அமத்த முடியல.. பாரஸ் சாலையிலிருந்து கேட்வாரியிலிருந்த ஒரு ஓட்டலுக்குப் போய்ச் சேர்ந்தாள்..அங்கேயும் அவளோட வழக்கமான பிரச்னை தான்.. ஒரு நாள் அந்த மானேஜர் அவளை நடையைக் கட்டச் சொல்லி விட்டான். நான் என்ன சொல்றது..மண்டோ சாகிப்.. இந்த மச்சினிக்கு.. எதிலயும் ஆர்வமில்லையே.. துணிமணி..சாப்பாடு.. நகை.. நீங்க எத வேணா சொல்லுங்க.. ..பேன் அவ துணிமணிகள்ல ஊர்ந்தலைகிற வரைக்கும்.. மாசக்கணக்கா குளிக்க மாட்டா..யாராவது.. கஞ்சா கொடுத்த அவ சந்தோசமா இரண்டு இழுப்பு.. இழுப்பா.. சில நேரங்களில் அவ ஹோட்டலுக்கு வெளிய நின்னு இசையைக் கேட்டுக்கிட்டிருப்பதை..நான் பார்த்திருக்கேன்..”

“ ஏன் அவள நீ திருப்பி அனுப்பல.. நான் என்ன சொல்றேன்னா .. அவளுக்கு இந்தத் தொழில்ல ஆர்வமில்லன்னு… வெளிப்படையா தெரியுது.. அவளோட டிக்கெட்டுக்கு நான் காசு… தர்றேன்…”

என்று நான் யோசனை சொன்னேன். தோண்டூ அதை விரும்பவில்லை.

“ மண்டோ சாகிப் மச்சினிச்சிக்கி டிக்கெட் காசு ஒரு பெரிய விஷயமில்லை.. நான் கொடுக்கமாட்டேனா.. என்னய கொல்லாதீங்க…”

“ அப்புறம் ஏன் அவள நீ திருப்பி அனுப்பல..”

அவன் காது மடிப்பிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான். ஆழமாக இழுத்து புகையை அவனுடைய மூக்கு வழியாக வெளியே விட்டுக் கொண்டே,

“ அவ போறதை நான் விரும்பல…”

“ நீ அவளைக் காதலிக்கிறியா..? “ என்று நான் கேட்டேன்.

அவன் இரண்டு காதுகளையும் பொத்திக் கொண்டு,

“ என்ன பேசறீங்க.. மண்டோ சாகிப்..குரான் மேல சத்தியமாச் சொல்றேன்.. அப்படி ஒரு இழிவான எண்ணம் எப்போதும் என் தலையில ஏறாது.. அது சும்மா…சும்மா… எனக்கு அவளைக் கொஞ்சம் பிடிச்சிருக்கு…அவ்வளவு தான்..”

“ ஏன்? “

“ ஏன்னா அவ மத்த எல்லோரையும் மாதிரி..பணத்திலேயே குறியா இல்ல.. இது தான் பெரிய வித்தியாசம்… நான் அவளுக்காக ஒரு பேரம் பேசினா.. அவ ரெம்ப விருப்பத்தோட.. போவா.. நான் அவள பயணியோட ஒரு டாக்சியில ஏத்தி அனுப்பிருவேன்… மண்டோ சாகிப் பயணிகள் அவங்களோட பொழுதைக் கழிக்க வர்றாங்க.. அவங்க பணமும் செலவழிக்கிறாங்க.. அவங்களுக்கு என்ன கிடைக்குதுன்னு பாக்க விரும்புறாங்க.. அதை அவங்களோட கைகளால உணரவிரும்புறாங்க.. அங்கே தான் பிரச்னையே ஆரம்பிக்குது….அவ யாரையும் தொடக்கூட விடறதில்ல.. உடனே.. அவங்கள அடிக்க ஆரம்பிச்சுடறா… அந்த ஆள் கொஞ்சம் கனவானா இருந்தா அமைதியா பின் வாங்கிப் போயிருவான்.. வேற மாதிரின்னா அவ்வளவு தான்..நரகமாயிரும்.. நான் பணத்தைத் திருப்பிக் கொடுத்து மண்டியிட்டு தொழ வேண்டியதிருக்கும்….குரான் மேல சத்தியமா…சொல்றேன்.. நான் ஏன் இதைச் செய்யணும்.. எல்லாம் சிராஜுக்காகத் தான்.. மண்டோ சாகிப் உங்க தலைல.. அடிச்சிச் சத்தியம் பண்றேன்.. இந்த மச்சினிச்சியால என்னோட தொழில் பாதியா கொறைஞ்சிருச்சி.. “

ஒருநாள் நான் தோண்டூவின் நற்சேவையில்லாமலே சிராஜைப் பார்க்க முடிவு செய்தேன். அவள் பம்பாயிலுள்ள சேரிகளிலேயே மிகவும் அசுத்தமான ஒரு சேரியில் இருந்தாள். தெருக்களில் குவிந்துள்ள குப்பை குவியலுக்குள் நடக்கவே முடியவில்லை. நகரநிர்வாகம் ஏழைகளுக்காக நிறைய தகரக் கொட்டகைகளைக் கட்டியிருந்தது. அதில் ஒன்றில் தான் அவள் இருந்தாள்.

அவளுடைய வீட்டுக்கதவுக்கு வெளியே ஒரு வெள்ளாடு கட்டப்பட்டிருந்தது. நான் நெருங்கியபோது அது கத்தியது. ஒரு வயதான பெண் அவளுடைய கம்பில் சாய்ந்து நொண்டியபடியே வெளியே வந்தாள். நான் அங்கேயிருந்து போக யத்தனித்த போது கதவுக்குப் பின்னால் தொங்கிக் கொண்டிருந்த முரடான கந்தல் துணியிலிருந்த ஒரு ஓட்டை வழியே – அது தான் திரைச்சீலையாகப் பயன்பட்டது- செவ்வக முகத்திலிருந்த பெரிய கண்களை நான் பார்த்தேன்.

அவள் என்னைத் தெரிந்து கொண்டாள். அவள் ஏதோ செய்து கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால் உடனே அவள் வெளியே வந்தாள்.

“ இங்கே என்ன செய்றீங்க..”LADY

என்று அவள் கேட்டாள்.

“ நான் உன்னைப் பாக்கிறதுக்குத் தான் வந்தேன்..”

” உள்ளே வாங்க..”

“ இல்ல நீ எங்கூட வெளியில வரணும்னு விரும்புறேன்..”

அப்போது அந்த வயதான பெண்,

“ அதுக்கு பத்துரூபா வேணும்.. வச்சிருக்கியா..”

என்று கேட்டாள். நான் என்னுடைய மணிபர்ஸிலிருந்து பணத்தை எடுத்து அவளிடம் கொடுத்தேன்.

“ வா”

என்று நான் சிராஜிடம் சொன்னேன். அவள் சன்னல் போல இருந்த அவளுடைய கண்களால் என்னைப் பார்த்தாள். மீண்டும் ஒரு முறை எனக்குத் தோன்றியது. அவள் அழகி. ஆனால் உள்சுருங்கி உறைந்த மாதிரி பதப் படுத்தப்பட்ட,ஆனால் சரியாக பாதுகாக்கப்பட்ட ராணி.

நான் அவளை ஒரு ஹோட்டலுக்குக் கூட்டிக் கொண்டு போனேன். அவள் அங்கே எனக்கு முன்னால் அவ்வளவாகச் சுத்தமில்லாத உடைகளில் உட்கார்ந்திருந்தாள். வெளி உலகத்தைக் கண்களால் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவை மிகப் பெரியவை. அவளுடைய முழு அழகுமே அதற்கு அடுத்த பட்சம் தான்.

நான் சிராஜுக்கு நாற்பது ரூபாய் கொடுத்தேன். அவள் அமைதியாக இருந்தாள். அவளுக்கு அருகில் நெருங்குவதற்கு நான் வேகமாக ஏதாவது குடிக்க வேண்டும். நான்கு லார்ஜ் விஸ்கியைக் குடித்தபிறகு நான் பயணிகள் செய்வதைப்போல என்னுடைய கரங்களை அவள் மீது போட்டேன். ஆனால் அவள் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. பிறகு நான் ஏதோ ஆபாசமாகச் செய்தேன். கண்டிப்பாக அவள் துப்பாக்கி மருந்து பீப்பாயைப் போல வெடிப்பாள் என்று நினைத்தேன். ஆனால் ஆச்சரியப்படும் படியாக அவள் எந்த எதிர்வினையையும் காட்டவில்லை. அவளுடைய பெரிய கண்களால் சும்மா என்னைப் பார்த்தாள். பின்பு,

“ எனக்கு கஞ்சா வேணும்…” என்று சொன்னாள். நான்,

“ கொஞ்சம் குடியேன்..” என்று யோசனை சொன்னேன்.

“ இல்லை.. எனக்கு கஞ்சா தான் வேணும்..” என்றாள் அவள்.

நான் அதற்காக ஒரு ஆளை அனுப்பினேன். அது எளிதாகக் கிடைக்கும். அநுபவம் வாய்ந்த கஞ்சா புகைஞர்களைப் போல அவள் அதை இழுக்க ஆரம்பித்தாள். அவளுடைய கண்கள் ஆக்கிரமிக்கும் அதன் இருப்பை எப்படியோ இழந்தது. அவளுடைய முகம் சூறையாடப்பட்ட ஒரு நகரத்தைப் போல இருந்தது. ஒவ்வொரு சுருக்கமும், ஒவ்வொரு பகுதியுமழிவைக் காட்டியது. ஆனால் இந்த அழிவு தான் என்ன? அவள் முழுமையடைவதற்கு முன்பே சூறையாடப் பட்டுவிட்டாளா? அஸ்திவாரம் எழும்புவதற்கு வெகுகாலத்துக்கு முன்பே அவளுடைய உலகம் அழிக்கப் பட்டுவிட்டதா?

அவள் கன்னிப்பெண்ணா இல்லையா என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் அவளிடம் பேச விரும்பினேன். ஆனால் அவளுக்கு அதில் ஆர்வமில்லை. அவள் என்னோடு சண்டை போட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவள் அலட்சியமாக இருந்தாள். கடைசியில் நான் அவளை வீட்டில் விட்டு விட்டேன்.

தோண்டூவுக்கு என்னுடைய ரகசிய நடவடிக்கை தெரியவந்தபோது அவன் அதிருப்தி அடைந்தான். ஒரு நண்பனாகவும், தொழில் நடத்துபவனாகவும், அவனுடைய உணர்வுகள் காயப்பட்டு விட்டன. விளக்கம் சொல்வதற்கு ஒருவாய்ப்பைக் கூட அவன் எனக்குத் தெரியவில்லை. அவன் சொன்னதெல்லாம்,

“ மண்டோ சாகிப் ….உங்க கிட்டயிருந்து இதை நான் எதிர்பார்க்கல…”

அவ்வளவுதான். பிறகு அவன் நடந்து போய் விட்டான்.

மறுநாள் நான் அவனைப் பார்க்கவில்லை. அவனுக்கு உடல்நிலை சரியில்லை என்று நான் நினைத்தேன். ஆனால் அவன் அதற்கடுத்த நாளும் கூட வரவில்லை. ஒரு வாரம் கழிந்தது. ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது என்னுடைய வேலைகாரணமாக தோண்டூவின் தலைமையகத்தைத் தாண்டிச் செல்வது வழக்கம். நான் அந்த விளக்குக் கம்பத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவனை நினைத்துக் கொள்வேன்.

ஒரு நாள் நான் சிராஜைப் பார்ப்பதற்குக் கூடப் போனேன். ஆனால் அங்கே என்னை வரவேற்பதற்கு அந்த வயதான கிழவி மட்டுமே இருந்தாள். நான் அவளிடம் சிராஜைப் பற்றிக் கேட்டபோது, அவள் இது போன்ற மாமிகளின் ஆயிரமாண்டு காலப் புன்னகையைச் சிந்தினாள். பிறகு,

“ அது போய் விட்டது.. ஆனா நான் வேறொண்ணை உனக்குத் தாரேன். “

என்று சொன்னாள். அவள் எங்கே என்பது தான் கேள்வி. தோண்டூவுடன் ஓடிப்போய் விட்டாளா? ஆனால் அது நடக்கவே முடியாது. அவர்கள் காதலிக்கவில்லை. அதோடு தோண்டூ அந்த மாதிரியான ஆளும் இல்லை. அவன் அன்பு செலுத்துகிற மனைவியும் குழந்தைகளும் அவனுக்கு இருந்தார்கள். ஆனால் இரண்டு பேரும் எங்கே போய் மறைந்தார்கள் என்பது தான் கேள்வி.

ஒருவேளை தோண்டூ கடைசியில் அவளை வீட்டில் கொண்டு போய் விடுவதற்கு முடிவு செய்திருக்காலாமோ, என்று நான் யோசித்தேன். அவன் அதைப் பற்றிய யோசனையுடன் எப்போதும் இருந்தான். ஒரு மாதம் கழிந்தது.

ஒரு நாள் மாலையில் நான் அந்த ஈரானியன் தேநீர் விடுதியைக் கடந்து செல்லும் போது விளக்குக் கம்பத்தில் சாய்ந்து கொண்டிருந்த தோண்டூவைப் பார்த்தேன். அவன் என்னைப் பார்த்துப் புன்னகைத்தான்.

நாங்கள் தேநீர் விடுதிக்குள் சென்றோம். அவனிடம் நான் எதுவும் கேட்கவில்லை. அவனுக்குக் காப்பி கலந்த ஸ்பெஷல் தேநீரும், எனக்கு சாதரணத் தேநீரும் கொண்டு வரச் சொன்னான். அவனுடைய நாற்காலியில் திரும்பி உட்கார்ந்தான். அதைப் பார்க்கும் போது ஏதோ அவன் ஒரு நாடகத் தனமான உரையாடலை நடத்தப் போகிற மாதிரி இருந்தது. ஆனால் அவன் சொன்னதெல்லாம்,

“ எல்லாம் எப்படி இருக்கு..மண்டோ சாகிப்..”

அவ்வளவு தான்.

“ ஏதோ வாழ்க்கை போய்க்கிட்டிருக்கு தோண்டூ…”

என்று நான் பதில் சொன்னேன்.

“ நீங்க சொல்றது சரிதான்.. வாழ்க்கை போய்க்கிட்டிருக்கு.. இது விசித்திரமான உலகம் இல்லையா..! “

என்று சொல்லிப் புன்னகைத்தான்.

“ நீ அதை மறுபடியும் சொல்லலாம்…”

என்று நான் சொன்னேன். நாங்கள் தேநீரைக் குடித்துக் கொண்டிருந்தோம். தோண்டூ தன்னுடைய கலவையை சாஸரில் ஊற்றி ஒரு மிடறு குடித்து விட்டு,

“மண்டோ சாகிப் அவள் எல்லாக் கதையையும் சொல்லிவிட்டாள்.. என்னுடைய நண்பருக்கு அதாவது நீங்க ஒரு பைத்தியம்னு…..அவள் சொன்னாள்.”

“ ஏன்? “ என்று கேட்டுச் சிரித்தேன்.

“ அவள் சொன்னாள்.. நீங்க அவளை ஒரு ஹோட்டலுக்கு கூட்டிட்டுப் போயி நிறையப் பணம் கொடுத்தீங்களாம்.. நீங்க செய்வீங்கன்னு அவ நெனச்சாளாம்.. ஆனா நீங்க செய்யல…”

“ அது தான் அதுக்கு வழி..தோண்டூ..”

என்று நான் சொன்னேன். அவன் சிரித்தான்.

“ எனக்குத் தெரியும்.. அன்னிக்கு ஏதாவது கோபப் பட்டிருந்தா மன்னிச்சிருங்க.. எப்படியோ இப்ப எல்லா வேலையும் முடிஞ்சிருச்சு…”

“ என்ன வேலை?”

“ வேறென்ன…சிராஜோட வேலை தான்..”

“ என்ன நடந்தது..தோண்டூ….?”

“ நீங்க அவள வெளியில கூட்டிட்டுப் போன நாள உங்களுக்கு ஞாபகமிருக்கா.. அப்புறம் அவ நேரா என்கிட்ட வந்தா.. அவகிட்ட நாப்பது ரூபாய் இருப்பதாகவும் நான் அவளை லாகூருக்குக் கூட்டிட்டுப் போகணும்னு சொன்னா.. நான் அவகிட்ட மச்சினி எந்தப் பிசாசு உம்மேல இறங்கிருக்குன்னு கேட்டேன்.. அதுக்கு அவ சொன்னா.. வா..தோண்டூ.. எனக்காக கூட்டிட்டுப் போ… மண்டோ சாகிப்.. உங்களுக்குத் தெரியுமா? நான் அவகிட்ட இல்லன்னு மறுத்துச் சொன்னதேஇல்லை.. நான் அவள விரும்புறேன்.. அதனால நான் சரி.. அதத் தான் நீ விரும்புறேன்னா போவோம்னு சொன்னேன்…

நாங்க ரயில் டிக்கெட்டுகளை வாங்கினோம்… பின்பு லாகூர் போய்ச்சேர்ந்தோம்.. நாங்க எந்த ஓட்டலில் தங்க வேண்டும் என்று கூட அவளுக்குத் தெரிந்திருந்தது…

அடுத்த நாள் அவ என்கிட்ட தோண்டூ எனக்கு ஒரு பர்தா வாங்கிட்டு வா..என்றாள். நான் வெளியே போய் அவளுக்கு ஒரு பர்தா வாங்கிட்டு வந்தேன்…அதன் பிறகு நாங்க சுத்த ஆரம்பிச்சோம்.. அவ காலையில புறப்பட்டு குதிரைவண்டியில் என்னோட தொணையோட லாகூரின் தெருக்களில் முழுநாளையும் செலவழிச்சா.. அவ எதைத் தேடறான்னு என்கிட்ட சொல்லவும் இல்ல…

நான் எனக்குள்ளே சொல்லிகிட்டேன்.. தோண்டூ நீ என்ன வாழைப்பழமாகி விட்டாயா?.. ஏன் நீ பம்பாயிலிருந்து இந்தப் பைத்தியக்காரப்பொண்ணோட வந்தே…?

பிறகு மண்டோ சாகிப்.! ஒரு நாள் அவ குதிரைவண்டி தெருவின் நடுவே போய்க்கிட்டிருக்கும்போது நிறுத்தச் சொன்னா… நீ அந்த ஆளப் பாத்தியா.. அவனை என்கிட்ட கூட்டிட்டு வரமுடியுமா? இப்போ நான் ஹோட்டலுக்குப் போறேன்….

நான் குழம்பிவிட்டேன்.. ஆனா குதிரைவண்டியை விட்டு கீழே இறங்கி அவ காண்பிச்ச அந்த மனிசன் பின்னாலேயே போனேன்.. நல்லவேளை.. கடவுள் புண்ணியம்..என்னால மனுசங்களைச் சரியாக் கணிக்க முடியுது.. நான் அவங்கிட்ட பேச ஆரம்பிச்சேன்.. ரெம்ப நேரம் ஆகல.. அவனும் பொழுதை நல்லவிதமா கழிக்க தயாரா இருக்கான்னு கண்டு பிடிச்சிட்டேன்..

நான் அவங்கிட்ட ரெம்ப ஸ்பெஷலான சரக்கை நான் பம்பாயிலிருந்து கொண்டு வந்திருக்கேன்.. உடனே அவன கூட்டிட்டுப் போகச் சொன்னான்.. ஆனா நான் சொன்னேன்.. அவ்வளவு வேகம் வேண்டாம் நண்பா.. முதல்ல உன் ரூபாய் நோட்டு நிறத்தை எனக்குக் காட்டு.. அவன் ஒரு கனத்த கத்தை நோட்டுகளை என் முகத்தில் வீசினான்.. எனக்கு என்ன புரியலன்னா ஏன் இவ்வளவு பெரிய லாகூரில் சிராஜ் இவனைத் தேர்ந்தெடுத்தா…எப்படியோ நான் எனக்குள் சொல்லிகிட்டேன்.. தோண்டூ எல்லாம் நல்லபடியாப் போய்க்கிட்டிருக்கு.. நாங்க ஓட்டலுக்குப் போறதுக்கு ஒரு குதிரைவண்டி அமத்தினோம்..

நான் உள்ளே போனேன்.. சிராஜிடம் அந்த மனுசன் வெளியே காத்திருக்கான்னு..சொன்னேன்..அவ கூட்டிட்டு வா..ஆனா நீ வெளியே போகாதேன்னு சொன்னா நான் அவன உள்ள கூட்டிட்டு வந்தேன்.. அவன் அவளப் பார்த்ததும்..வெளியே ஓட முயற்சி பண்ணினான்.. ஆனா சிராஜ் அவனை இறுக்கிப் பிடிச்சிகிட்டா…”

“ அவ அவன இறுக்கிப் பிடிச்சிக்கிட்டாளா..” என்று நான் இடைமறித்தேன்.

“ ஆமா சாகிப்.. சிராஜ் அந்த மச்சானை இறுக்கிப்பிடிச்சிகிட்டு அவங்கிட்ட நீ எங்கே போறே.. ஏன் என்ன வீட்ட விட்டு ஓடிவரச் சொன்னே.. நான் உன்னக் காதலிச்சேன்னு உனக்குத் தெரியும்..ஞாபகமிருக்கா நீயும் என்ன காதலிக்கிறதா சொன்னே.. ஆனா நான் என் வீட்ட , என் அப்பா அம்மாவை, என்னோட சகோதரர்கள என்னோட சகோதரிகள, விட்டுட்டு அம்ரித்சரிலிருந்து லாகூருக்கு உன்கூட ஓடி வந்தேன்.. இதே ஓட்டல்ல தான் தங்கியிருந்தோம்.. அன்னிக்கு ராத்திரியே என்னய விட்டுட்டு நீ ஓடிப் போயிட்டே.. அதுவும் நான் தூங்கிக்கிட்டிருக்கும்போது.. ஏன் என்னய கூட்டிட்டு வந்தே.. ஏன் என்னய வீட்ட விட்டு ஓடி வரச் சொன்னே… உனக்குத் தெரியும் நான் எல்லாத்துக்கும் தயாராத் தான் இருந்தேன்.. நீ என்ன ஏமாத்திட்டே ஆனா நான் திரும்பி வந்து உன்ன கண்டுபிடிச்சிட்டேன்.. நான் இன்னமும் உன்ன காதலிக்கிறேன்.. எதுவும் மாறல எங்கிட்ட…

மண்டோ சாகிப்! அவ அவனச் சுற்றிக் கைகளப் போட்டா.. அந்த மச்சான் அழ ஆரம்பிச்சிட்டான்.. அவகிட்ட அவன மன்னிக்கச் சொல்லிக் கேட்டுக்கிட்டேயிருந்தான்.. அவன் அவளுக்குத் துரோகம் செய்ஞ்சிட்டதா சொல்லிகிட்டேயிருந்தான்.. அவன் குளுந்து போய் நடுங்கிக்கிட்டிருந்தான்.. இனிம அவள விட்டுட்டுப் போகவே மாட்டேன்னு சொல்லிகிட்டிருந்தான்.. அவன் திரும்பத் திரும்ப அதையே சொல்லிகிட்டிருந்தான்… அவன் என்ன கழிசடையைப் பேசிக்கிட்டிருந்தான்னு அந்தக் கடவுளுக்குத் தான் வெளிச்சம்..

பிறகு சிராஜ் என்ன வெளியே போகச் சொன்னா.. நான் வெளியே இருந்த வெறும் கட்டில்ல படுத்துகிட்டேன்.. ஏதோ ஒரு நேரத்தில உறங்கியும் போனேன்.. அவ என்ன எழுப்பறப்போ பொழுது விடிஞ்சிருச்சி… தோண்டூ…நாம.. போவோம்..”

என்று சொன்னாள் சிராஜ். நான்,

“ எங்கே? “ என்று கேட்டேன்.

” நாம பம்பாய்க்குத் திரும்பிருவோம்..”

“ எங்கே அந்த மச்சான்…?” என்று நான் கேட்டேன்.

“ அவன் தூங்கிக்கிட்டிருக்கான்.. நான் அவனோட முகத்தை என்னோட பர்தாவால மூடிட்டேன்…”

என்று அவள் பதில் சொன்னாள்.

தோண்டூ இன்னொரு கோப்பை காப்பி கலந்த தேநீருக்குச் சொன்னான். நான் நிமிர்ந்து பார்த்த போது சிராஜ் ஹோட்டலுக்குள் நுழைவது தெரிந்தது. அவளுடைய நீள் வட்ட முகம் ஜொலித்துக் கொண்டிருந்தது. ஆனால் அவளுடைய பெரிய இரண்டு கண்களும் தாழ்ந்து இறங்கி விட்ட ரயில்வே சிக்னல்களைப் போல இருந்தன.