Monday, 27 July 2015
பிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்
Sunday, 26 April 2015
மந்திரச்சடங்குகளும் பண்பாட்டு அசைவுகளும்
உதயசங்கர்
ஆதியில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக மந்தைகளாக வாழ்ந்தனர். கைகளின் உழைப்பின் வழியே மூளை வளர்ச்சி பெற பகுத்தறிவு பிறந்தது. பகுத்தறிவு வளர இனக்குழுவாக மாறினர். மந்தைகளாக இருந்த போது இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த ஆதிமனிதர்கள் இனக்குழுவாக மாறிய போது இயற்கையுடன் போராடி தங்களுடைய வாழ்க்கை நிலைமைகளை மாற்றத்தொடங்கினர். குகைகளிலிருந்தும் மரப்பொந்துகளிலிருந்தும் வெளியேறி குடியிருப்புகளைக் கட்டிப்பார்த்தனர். விவசாயம், மீன் பிடித்தல், துணி நெய்தல், கால்நடைகளை வளர்த்தல், போன்ற தொழில்களை செய்யத் தொடங்கினர். இயற்கையின் மீதான அவர்களுடைய தலையீடு எப்போதும் சாதகமாக இல்லை. இயற்கையின் இயக்கவியலைப் புரிந்து கொள்கிற அளவுக்கு அவர்களுடைய பகுத்தறிவோ, அறிவியலறிவோ முதிர்ச்சி பெற வில்லை. எனவே அவர்கள் இயற்கையில் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற இறந்து போன அனைத்துப்பொருட்களிலும் ஆவி இருப்பதாக கற்பனை செய்தனர். அந்த ஆவிகள் தான் தங்களின் மீது வினை புரிகிறது என்று நம்பினர். அதனால் அந்த ஆவிகளை வழிபடுவதன் மூலம் தங்களுக்கு தேவையான நல்ல விளைவுகளைப் பெற்றுக் கொள்ளலாம். அதே போல தங்களுக்குத் தீமை செய்யும் கெட்ட விளைவுகளைக் கட்டுபடுத்தலாம் என்று நினைத்தனர். அதற்காக கற்பனைச்சித்திரங்களை உருவாக்கி அதன் மூலம் புறவயமான யதார்த்தத்தைக் கட்டுப்படுத்தலாம் என்று கருதினர்.
இந்த வழிபாட்டு முறையே மந்திரச்சடங்குகளாக மாறியது. மொழி தோன்றுவதற்கு முன்னால் இந்த ஆதி மந்திரங்கள் வெறும் பாவனையாக மட்டுமே இருந்தது. மந்திரங்களை உருவாக்கியதற்கு ஆன்மீக அல்லது கடவுள் நம்பிக்கை காரணமல்ல. பொருளாதாரக்காரணங்கள் தான். ஆரம்ப காலத்தில் உற்பத்திக்கருவிகளும் திட்ட மிட்ட விளைவுகளை உருவாக்குகிற அளவுக்கு சிறப்பாகவோ, போதுமானதாகவோ இல்லை. எனவே இந்த மந்திரச்சடங்குகள் மனிதர்களின் உளவியலில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதனால் உழைப்புச்சக்தி அதிகமானது. அதாவது உற்பத்திக்கருவிகளின் போதாமையை இந்த மந்திரச்சடங்குகள் ஈடுகட்டியது. இந்த வகையில் அப்போது மந்திரச்சடங்குகள் உற்பத்திக்கருவிகளின் ஒரு அங்கமாகவே திகழ்ந்தது. மனிதனுடைய பொருளாதார , வாழ்வாதார செயல்பாடுகள் அனைத்திலும் மந்திரச்சடங்குகள் பெரும்பங்கு வகித்திருக்கின்றன.
குழந்தைப்பருவத்தில் இருந்த மனித குலம் காலப்போக்கில் வழிபட்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்துப் பொருட்களுக்கும் மனித உருவங்களைக் கற்பனை செய்தது. மனிதன்..குலமரபுச்சின்னங்களை உருவாக்கினான். தொன்மங்களை உருவாக்கினான். அறிவியலறிவின் ஆதிப்பருவத்தில் இருந்த மனிதன் இந்தக் கற்பனையான உருவங்கள் அதீத ஆற்றல் கொண்டவையென நமபத் தொடங்கினான். ஆக ஆரம்பத்தில் மந்திரச்சடங்குகள் உற்பத்திக்கருவிகளோடு உற்பத்திக்கருவியாகவே செயல்பட்டிருக்கிறது.
உற்பத்திக்கருவியாகச் செயல்பட்ட மந்திரச்சடங்குகள் உற்பத்தி சக்திகளைக் ( இயற்கை) கட்டுப்படுத்தி தங்களுக்குத் தேவையான உற்பத்தியைப் பெருக்க முயற்சித்தன. எனவே தான் இத்தகைய மந்திரச்சடங்குகளில் இயற்கையின் செயல்களை ஒத்த செயல்களையே பாவனையாக செய்து வழிபட்டனர். கனடாவில் உருளைக்கிழங்கு வளர்வதற்காக உருளைக்கிழங்குச் செடி எப்படி செழிப்பாக வளர வேண்டும் என்று பாவனை நடனம் ஆடினர். .பிரேசிலில் மழை வேண்டி வாயில் தண்ணீரை வைத்து மழை பொழியும் சத்தம் போல ஒலியெழுப்பவர். பின்னர் கையில் கொஞ்சம் தண்ணீரை எடுத்து வானில் எறிந்து இதோ பார்.. இது போலவே செய்.. என்று சத்தமிடுவார்கள். நமது ஊர்களில் பயிர்கள் செழித்து வளர்வதற்கு நவதானியங்களை விதைத்து முளைப்பாரி வளர்த்து அம்மனை வழிபாடு நடத்துவது, உரக்குழி அம்மன் வழிபாடு, என்று பெரும்பாலும் விவசாய வேலைகள் சார்ந்தே சடங்குகள் இருக்கின்றன. அம்மனை வழிபடுவதற்கான காரணம் புராதன சமூகத்தில் பெண்களே விவசாயத்தைக் கண்டுபிடித்தவர்கள் ஆவர். அதுமட்டுமில்லாமல் மனிதகுல உற்ப்பத்திக்கும் காரணமாக இருக்கும் பெண்களைச் செழிப்பின் அடையாளமாகவே புராதன சமூகம் கண்டது. அதே போல தானியங்களைப் பெண்களாக உருவகிப்பதும் பல நாடுகளில் இருக்கிறது.
உழைப்பினோடு இயைந்த மந்திரசடங்குகளில் உடலசைவுகள், அருள் வந்து ஆடுதல், பொங்கலிடுதல், போன்ற சடங்குகளில் ஒத்தது ஒத்ததை உருவாக்கும் என்ற நம்பிக்கையே தொழிற்படுகிறது. இறந்தவர்களுக்குச் செய்யப்படும் சடங்குகளில் கூட வேளாண்சமூகத்தின் செயல்பாடுகளே பாவனையாகச் செய்யப்படுகின்றன. தீயாற்றுகிற சடங்கின் போது இறந்தவரின் எலும்புகளை எடுத்து வைத்து நவதானியங்களை விதைத்து பயிரிட்டு அவை முளைத்து செழிப்பாக வளர்வதை ஒத்த சடங்குகளை நாம் பார்க்கலாம். உற்பத்திக்கருவிகளைக் கும்பிடுதல், இயற்கையை வழிபடுதல், படையல் வைத்தல் பலியிடுதல், போன்ற செயல்கள் உற்பத்தி சக்திகளை திருப்திப்படுத்துவதாகவும், வேண்டுவதாகவும், கட்டளையிடுவதாகவும் அமைகின்றன. இத்தகையச் சடங்குகள் வேட்டைச்சமூகத்தில் தோன்றி வேளாண்மை சமூகத்தில் வளர்ந்து நிலை பெற்றிருக்கின்றன. இனக்குழுக்கள் தங்களுக்குத் தேவையான உற்பத்தியை அதிகரிக்கவே இத்தகைய மந்திரச்சடங்குகளை உருவாக்கியுள்ளன. இவற்றில் ஒவ்வொரு இனக்குழுவின் பண்பாட்டு அசைவுகளும், பண்பாட்டு சேகரங்களும் கலந்திருக்கும். இந்தச் சடங்குகளை நிகழ்த்த தனியான மந்திரங்கள் பொதுவாக இல்லை. அந்தந்த இனக்குழுவிலுள்ள ஒருவரே இந்தச் சடங்குகளை நிகழ்த்துபவராக இருப்பார். இந்தச் சடங்குகள் நிகழும் காலம் தவிர மற்ற காலங்களில் அவரும் இனக்குழுவில் ஒரு அங்கத்தினராக உழைப்புச் செயல்பாட்டில் ஈடுபட்டிருப்பார். இந்த மந்திரச்சடங்குகளில் கூட்டான உளவியல் சக்தி ஓருமுகப்படுத்தப்பட்டு புறவயமான யதார்த்தத்தின் மீது வினை புரிந்து அதை மாற்றுகிறது.
புரோகிதச்சடங்குகள்
இதற்கு மாறாக புரோகிதச்சடங்குகள் எல்லாம் வேதங்களை அடிப்படையாகக் கொண்டவை. குறிப்பாக ரிக் வேதத்திலும், யஜூர், அதர்வ வேதங்களிலும் ஏராளமான யாகவேள்விகள் குறித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 400 யாகவேள்விகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வேதங்கள் ஆரியர்களின் ஆக்கிரமிப்பின் போது இயற்றப்பட்டவை. நாடோடிகளாக, ஆடுமாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு இனம் சிந்து சமவெளியை ஆக்கிரமித்து அங்கிருந்த தஸ்யூக்களோடு சணடையிட்டு நிலைபெறத்தொடங்கிய காலத்தில் தங்களுடைய போர்வெற்றி, பகைவர் அழிவு, பாபச்செயல்கள், நோய் சாந்தி, கருவுறுதல், கருப்பாதுகாப்பு, அன்ன சித்தி, ஐஸ்வரியம், இதையே அஸ்வமேத யாகம், ( ராஜீய அதிகரிக்க நடத்தப்படும் யாகம். இதில் குதிரையைப் பலி கொடுப்பர் ) ராஜசூய யாகம்,( அரசர்கள் தங்கள் மேலாண்மையை சிற்றரசர்களுக்கு அறிவிக்க நடத்தப்படும் யாகம். இந்த யாகத்தில் சூதாட்டம் ஒரு முக்கியமான சடங்கு ) புருஷமேதம்,( நரபலி கொடுக்கும் யாகம்) கோமேத யாகம்,( பசுவைப் பலியிட்டு அதன் பாகங்களை பிராமணர்கள் பங்கிட்டுக் கொள்கிற யாகம்) சர்வ மேதம்,( தானாக முன்வந்து அக்னியில் இறங்கி தற்கொலை செய்து கொள்ளும் யாகம் ) சுதர்சன யாகம் ( எதிரிகளை அழிக்கச்செய்யப்படும் யாகம் ) என்று எல்லாயாகங்களிலும் தீ வளர்த்து அதில் பலி பொருட்களை ஆகுதியாக்கி, பால் நெய் போன்ற பொருட்களை தீயிலிட்டு, புரியாத மந்திரங்களை ஓதி தங்களுடைய ஆன்மீகமேலாண்மையை நிலை நாட்டிக் கொண்ட புரோகிதர்களின் காலம் அது. இன்றும் புரோகிதச்சடங்குகள் இன்று பரவலாகி விட்டன. புதுமனைப்புகுவிழாவுக்கு கணபதி ஹோமம், திருமணச்சடங்கு, பெண் பூப்பெய்த தீட்டுக்கழிக்கும் சடங்கு, குழந்தைக்குப் பெயரிடும் சடங்கு, இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் சடங்கு என்று வாழ்நாள் முழுவதும் புரோகிதச்சடங்குகள் எல்லோர் குடும்பங்களிலும் நடந்து கொண்டேயிருக்கின்றன. புரோகிதச்சடங்குகளில் எல்லாம் மாடு மிகுந்த முக்கியத்துவம் பெறும். மாட்டு மூத்திரம் இல்லாமல் எந்தச் சடங்கும் இருக்காது. காரணம் அவர்களுடைய வேள்விகளிலெல்லாம் ஆடு, மாடு, குதிரை போன்ற மிருகங்கள் பலி கொடுக்கப்பட்டு உணவாக்கப்பட்டன. ரிக் வேதப்பாடல்களில் பலியிடப்படும் மாடுகளின் எந்தெந்தப் பகுதிகள் எப்படிப்பட்ட சுவையுடன் இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. இப்போது நடத்தப்படும் எல்லாச்சடங்குகளிலும் பலிப்பொருட்கள், உயிர்களின் பெயர்களைச் சொல்லும் மந்திரங்கள் இருக்கும். ஆனால் அதற்கு மாற்றாக வேறு பொருட்களை வேள்வியில் இட்டுக் கொள்வார்கள்.
தீ வளர்த்து செய்யப்படும் புரோகிதச்சடங்குகள் எந்த உற்பத்தியோடு தொடர்புடையவை? உற்பத்தியோடு எந்தத் தொடர்புமில்லாத யாருக்கும் புரியாத சமஸ்கிருத மொழியில் உச்சரிக்கப்படுகின்ற வேத மந்திரங்களின் உண்மையான அர்த்தமே ஆரியர்களின் போரும் அதன் வெற்றியும் ஆக்கிரமிப்பும், பகைவர் அழிப்பும் அவர்களுடைய செழிப்பும் தான். தந்தைவழிச்சமூகமான ஆரியர்கள் தங்களுடைய சடங்கு முறைகளை ரிஷிகோத்திரம் என்று சொல்லப்படுகிற தந்தைவழி கோத்திரம் சார்ந்தே நடத்துகின்றனர். ஆனால் தாய் வழிச்சமூகமாகவே வெகுகாலம் இருந்த உழைப்பாளி மக்களுக்கு அந்தக் கோத்திரம் கிடையாது.. ஏழு ரிஷிகளின் கோத்திரத்தில் வந்த பிராமணர்களைத் தவிர மற்ற எல்லோருக்கும் ஒரே கோத்திரம் சிவகோத்திரம் தான். இப்படி பல முரண்பாடுகளைக் கொண்ட புரோகிதச்சடங்குகளை நடத்துவதில் எந்த அர்த்தமும் கிடையாது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் ஆரியர்கள் இயற்றிய இந்த வேதங்கள் இன்றும் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருப்பதற்கான அடிப்படையான காரணம் மநு தர்மம். மநு தர்மத்தில் வேதங்களைப் பகுத்தறிய முயலக்கூடாது. அவை கடவுளுடைய வார்த்தைகள். அதை ஓதுகிற புரோகிதர்களும் கடவுளுக்கு நிகரானவர். வேதங்களைக் கேள்வி கேட்கவோ, ஆராயவோ கூடாது என்று ஆன்மீக அதிகாரத்தை வேதங்களுக்கு ஏற்றி வைத்ததன் காரணமே இன்றும் அவை செல்வாக்கோடு இருக்கிறது..
எல்லாவற்றையும் தன்வயப்படுத்துவதின் மூலம் தன்னை மீண்டும் மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ளும் பிராமணியம் இப்போது இந்த இனக்குழுவின் பண்பாட்டு அசைவுகளையும் கபளீகரம் செய்து அதற்கு சமஸ்கிருதத்தன்மையை ஏற்றுகிறது. உதாரணத்துக்கு அறுவடைத்திருநாளான பொங்கல் மகர சங்கராந்தியாக மாற்றப்படுகிறது. உழைப்பாளிகள் தங்களுடைய உற்பத்திக்கருவிகளைக் கும்பிடும் நாள் இன்று சரஸ்வதி பூஜையாகி விட்டது. கார்த்திகைத்திருவிழா தீபாவளிக்கு முன்னால் ஒளி மங்கி விட்டது. இது போக பௌணர்மி, அமாவாசை, பிரதோஷம், பாட்டிமை, அஷ்டமி, நவமி, ராகு, குளிகை, எம கண்டம், சூலம், பரிகாரம் என்று வாழ்க்கை முழுவதும் பிராமணியமாக்கல் நடக்கிறது. எல்லோர் வீடுகளிலும் ஏதோ ஒரு வகையில் தங்களுக்குச் சற்றும் புரியாத புரோகிதச்சடங்குகள் நடந்து கொண்டேயிருக்கின்றன. வீடு கட்டினால் கணபதி ஹோமம், குழந்தை பிறந்தால் பெயரிடும் சடங்கு, பெண் பெரியவளானால் புண்ணியானம் என்று சொல்லப்படுகிற தீட்டுக்கழிக்கும் சடங்கு, திருமணச்சடங்கு, இறந்தவருக்கு திதி கொடுக்கும் சடங்கு, சந்தானப்பாக்கியத்துக்குச் சடங்கு, என்று பெரும்பாலும் புரோகிதச்சடங்குகள் நடைபெறாத வீடுகளே இல்லை எனலாம். இதற்கு முக்கியமான உளவியல் காரணம் பிராமணியத்தின் மேல்நிலையாக்கம் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் தான். பிராமணரைக் கூட்டிக் கொண்டு வந்து சமஸ்கிருத மந்திரங்களைச் சொல்லி நடத்தப்படும் சடங்குகள் சமூகத்தில் மதிப்பு மிக்கவையாக இருப்பதனால் முன்பை விட இப்போது பிராமணப்புரோகிதர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.
புராதன சமூகத்தில் தோன்றி நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் நிலைபெற்ற இந்த மந்திரச்சடங்குகள் இன்றைய நவீன முதலாளித்துவ காலத்தில் பொருளற்றவை தானே. அறிவியல் வளர்ச்சியையும் நவீன விஞ்ஞான சாதனங்களின் கண்டுபிடிப்பையும் முதலாளித்துவம் தன்னுடைய லாபவேட்டைக்குப் பயன்படுத்துவதற்காக நிலப்பிரபுத்தோடு செய்துகொண்ட சமரசத்தினால் மீண்டும் பழமைவாதமும், சநாதனவாதமும், மதவெறியும் முன்னுக்கு வந்திருக்கின்றன. உலக நிதி மூலதனத்தின் நெருக்கடிகளைத் தற்காலிகமாகத் திசை திருப்ப இவை உதவக்கூடும். மக்களிடம் அறிவியல் நோக்கோடு கூடிய சமூகப்பார்வையை வளர்ப்பதும்தான் மநுவையும், புரோகிதச்சடங்குகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் ஒழிப்பதற்கு உதவும்.
துணை நூல்கள்- 1) மந்திரமும் சடங்குகளும்-ஆ.சிவசுப்பிரமணியன்
2) வேதங்கள் ஒரு ஆய்வு—சனல் இடமருகு
நன்றி-வண்ணக்கதிர்
Friday, 24 August 2012
தீண்டாமையின் அர்த்தவிநோதங்கள்
உதயசங்கர்
தீண்டாமை என்ற சொல் அதனுடைய எதிர்வான தீண்டுதலையும் உள்ளடக்கியே இருக்கிறது. அதே போல பருப்பொருளாகத் தீண்டப்பட முடியாதவையெல்லாம் தீண்டாமை என்ற அர்த்தத்துக்குள் அடங்குவதுமில்லை. உதாரணமாக வெளி, காலம், போன்ற கருத்துருக்களும் அன்பு, காதல், போன்ற குணநலன்களும் பருண்மையாகத் தீண்டப்பட முடியாதாவை. சமூகத்தின் விதிமுறைகளின் படி எதிர்பாலினத்தை, ஆண் பெண்ணையோ, பெண் ஆணையோ திருமணச்சடங்குகளின்றி தீண்ட முடியாது. அதே போல அடுத்தவர் மனைவியையோ, கணவனையோ சமூகக்கட்டுப்பாட்டின் படி தீண்ட முடியாது. ஆனால் இவையெல்லாம் தீண்டாமை என்ற அர்த்தத்துக்குள் வருவதில்லை. ஆக தீண்டாமையும் அதன் எதிர்வான தீண்டுதலும் வேறொரு எதிரிணைவையும் கொண்டு வருகிறது. சுத்தம் எதிர்வு அசுத்தம், அல்லது தூய்மை எதிர்வு தூய்மையின்மை என்ற சொல்லாடலையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
தீட்டு தூய்மையின்மையையும் அதைக் கழிக்கும் சடங்கு தூய்மையையும் பிரதிநிதித்துவப்படுத்துவால் தற்காலிகத் தீண்டாமையாகத் தீட்டைக் கருதுகிறார்கள். தீட்டுச் சடங்கு முடிந்த பிறகு குளித்து உடலைத் தூய்மை செய்த பின்னர் அந்தத் தற்காலிகத் தீண்டாமை மறைந்து விடுகிறது. அந்தச் சடங்கைச் செய்யும் பிராமணரும் அந்தச் சடங்கு முடிந்த பின்னர் அந்த வீட்டிலிருந்த தீட்டை ஏற்றுக் கொண்டு அவரும் தீட்டாகி விடுகிறார். அவரும் குளித்த பிறகே தற்காலிகத் தீண்டாமையிலிருந்து விடுவிக்கப்படுகிறார். வருணாசிரமப் படிநிலையிலிருக்கும் அனைத்துச் சாதியினரும் இந்தத் தற்காலிகத் தீண்டாமைக்கு ஆளாகின்றனர். தூய்மை, தூய்மையின்மை, என்ற கருத்தாக்கங்களின் வழி ஆன்மிக அதிகாரத்திலிருக்கும் பிராமணியம் இந்தத் தற்காலிகத் தீண்டாமையை எல்லோருக்கும் விதிக்கிறது.
எனவே தீண்டாமை என்பது பிராமணியத்தின் அடிப்படையாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பிராமணியம் தன்னுடைய அடிப்படைப் பண்பான தீண்டாமையை அனைத்து சாதியினரையும் பின்பற்ற வைத்ததில் பெற்ற வெற்றியே இன்று வரை பிராமணியத்தை ஆன்மீக அதிகாரத்தில் வீற்றிருக்க வைத்திருக்கிறது. தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் தீண்டாமையை வாழ்வின் ஆதார நிகழ்வுகளுடன் பிறப்பு, இறப்பு, திருமணம், எல்லாவற்றுடனும் இணைத்து என்றென்றும் தன் நிலையை அசையாமல் இருக்க வழி வகை செய்துள்ளது. இதற்குள் இருக்கும் பொருளாதாரப்படிநிலையினையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். உழைக்கும் வர்க்கமான தலித்துகளை நிரந்தரத்தீண்டாமை நிலையில் வைப்பதன் மூலமும், அதற்கான அங்கீகாரத்தை மற்றெல்லாசாதியினரிடமிருந்தும் பெறுவதன் மூலமும் முடிவில்லாத உழைப்புச் சுரண்டலை பிராமணியம் உத்தரவாதப்படுத்தியிருக்கிறது. அசுத்தமான (?) வேலைகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட தலித்துகளை அந்த வேலைகளைக் காட்டியே தீண்டத் தகாதவர்களாக மாற்றியிருப்பது என்பது பிராமணியத் தந்திரமன்றி வேறென்ன? இதற்கான ஒப்புதலை மற்ற சாதியினரிடமிருந்து பெறுவதற்காகவே தீட்டு என்ற தற்காலிகத் தீண்டாமை என்று கருத இடமுண்டு. ஏனெனில் அசுத்தத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தி விட்டால் தீட்டு கழிந்து எல்லாப்பொருட்களையும், எல்லாமனிதர்களையும் தீண்ட முடியும் என்ற கருத்தியலையும் நடைமுறைப்படுத்தியதால், தற்காலிகமான தூய்மையின்மையை சடங்குகளின் மூலம் உடனடியாகத் தூய்மைப்படுத்தி விடலாம், ஆனால் நிரந்தமான தூய்மையின்மையை எந்தச் சடங்கின் மூலமும் தூய்மைப்படுத்த முடியாது. உண்மையில் அப்படி எந்தச் சடங்கும் தீண்டத்தகாதவர்களுக்கு இல்லை. எனவே அவர்கள் நிரந்தரமாகத் தீண்டத்தகாதவர்கள். தர்க்கபூர்வமாக எல்லா சாதியினரும் இந்தக் கருத்தியலுக்கு வந்து சேரும் வகையில் மனுதர்மசாஸ்திரத்தைக் கட்டமைத்திருக்கிறது.
சாதியப்படிநிலையில் கீழ்நிலையில் இருக்கும் தலித்துகளைப் போல சாதியப்படிநிலையில் மேல் நிலையில் இருக்கும் பிராமணரும் தீண்டத்தகாதவரே. அவரும் பிற சாதியினரைத் தீண்ட முடியாது. பிற சாதியினரும் அவரைத் தீண்ட முடியாது. அப்படி யாரையேனும் அவர் தீண்டி விட்டாலோ, அல்லது அவரை யாரேனும் தீண்டி விட்டாலோ அவர் தீட்டாகி விடுகிறார். அவர் குளித்தபிறகே அவருடைய மடி நீங்குகிறது. ஆனால் அவரைத் தீண்டியவர்கள் தீட்டாவதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். அவர்கள் குளித்து தீட்டைக் கழிக்க வேண்டியதில்லை. இது அப்படியே தலைகீழாக தலித்துகளிடம் நிகழ்கிறது. தீண்டத்தகாதவர் மற்றவர்களைத் தொட்டு விட்டாலோ அல்லது மற்றவர்கள் அவர்களைத் தொட்டு விட்டாலோ தீண்டத்தகாதவர் தீட்டாவதில்லை. அவர்கள் குளித்து மற்றவர்கள் தீண்டிய தீட்டைக் கழிப்பதில்லை. ஆனால் அவரைத் தொட்டவர்கள் அல்லது அவரால் தொடப்பட்டவர்கள் தீட்டாகி விடுகிறார்கள். அவர்கள் குளித்து தங்களுடைய தீட்டைக் கழிக்கிறார்கள். இரண்டு நிலைகளில் இருக்கும் தீண்டத்தகாதவர்களில் எவ்வளவு மாறுபாடு? மேல்நிலையிலுள்ள பிராமணர் தீண்டத்தகாதவரேயாயினும் அவர் தீண்டியதற்காக அல்லது அவரைத் தீண்டியதற்காக மற்றவர்கள் குளிப்பதில்லை. ஆனால் அவர் குளிக்கிறார். அதே போல கீழ்நிலையில் வைக்கப்பட்ட தீண்டத்தகாதவர் மற்றவர்களைத் தீண்டியதற்காகவோ, அல்லது தீண்டப்பட்டதற்காகவோ அவர் குளிப்பதில்லை, ஆனால் மற்றவர்கள் குளிக்கிறார்கள். ஏனெனில் மேல்நிலையில் உள்ள தீண்டத்தகாதவரிடம் ( பிராமணரிடம் ) ஆன்மீக அதிகாரம் இருக்கிறது. எனவே அவர் தீண்டத்தகாதவராக இருப்பதற்காக பெருமைப்படுகிறார். மற்றவர்களையும் அவர் தீண்டத்தகாதவராக இருப்பதற்காகப் பெருமைப்பட வைக்கிறார். ஆனால் கீழ்நிலையில் உள்ள தீண்டத்தகாதவரிடம் இழிவும் அவமானமும் மட்டுமே இருக்கின்றன.
ஆக ஒரே செயலை முற்றிலும் வேறுபட்ட இரண்டு எதிர்நிலைகளில் செயல்பட வைப்பதில் பிராமணியமும், மனுதர்மமும் வெற்றி பெற்றிருக்கின்றன. தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்றால் நாம் கேள்வி முறையின்றி கடைப்பிடித்து வரும் சடங்குகளை ஒழிக்க வேண்டும். மனுதர்மசாஸ்திரத்தை ஒழிக்க வேண்டும். பிராமணியத்தை ஒழிக்க வேண்டும். அப்போது தான் முழுமையான மனித விடுதலை சாத்தியமாகும்.
Tuesday, 21 August 2012
தீட்டு, தீண்டாமை, விலக்குதல்…….
உதயசங்கர்
இந்திய சமூகத்தின் நடைமுறை வாழ்வில், தீட்டு, தீண்டாமை, விலக்குதல், இந்த மூன்று செயல்களும் மிக முக்கியமானவையாகக் கடைப்பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எந்தக் கேள்வியுமின்றி, எந்த விமர்சனப்பார்வையுமின்றி இவற்றை மக்கள் மனதார ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இதை பண்பாட்டு விழுமியங்களாக, பாரம்பரிய உன்னதங்களாகக் கருதுபவர்களும் இருக்கிறார்கள். அதனால் தான் சாதாரண மக்களே,
“ அதுக்காக நம்ம பாரம்பரியத்தை, பழக்க வழக்கத்தை சம்பிரதாயத்தை விட்டுர முடியுமா? “
“ தீட்டுக் கழியாம எங்கேயும் போகக் கூடாது..”
“ அதைத் தொடாதே.. தீட்டாயிரும்..”
என்று சொல்வதைக் கேட்க முடிகிறது. அது மட்டுமல்ல. ஜனநாயகஎண்ணம் கொண்டவர்களுக்குக் கூட இந்த கொடிய நடைமுறைகள் கண்ணை உறுத்துவதில்லை. அநுதாபமும், பரிதாபமும், உதவியும் செய்தால் போதுமானது என்ற சிந்தனை வருகிறது. ஒட்டு மொத்தமாக இந்த நடைமுறைகளை ஒழிப்பதற்கான செயல் திட்டம் பண்பாட்டுத் தளத்தில் துவங்கப்பட வேண்டியிருக்கிறது. அதற்கு முதலில் பிராமணியமும், மனுதர்மமும் எப்படி தீட்டை, தீண்டாமையை, விலக்குதலை, மக்கள் மனதில் தந்திரமாகப் புகுத்தியது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இவற்றின் உள்ளார்ந்த தத்துவம் என்ன? என்பதையும் அந்தத் தத்துவத்தின் நடைமுறைகள் என்ன? என்பதைக் குறித்தும் புரிந்து கொண்டால் தான் பண்பாட்டுத் தளத்தில் அதை எதிர் கொள்வதற்கான புதிய பண்பாட்டு ஆயுதங்களை உருவாக்கமுடியும்.
விலக்குதல், தீட்டு, தீண்டாமை, என்ற வார்த்தைகள் மேலோட்டமாகப் பார்க்க ஒரே அர்த்தமுள்ளவை போலத் தோன்றினாலும் அடிப்படையில் மிக ஆழமான வேறுபாடுகளைக் கொண்டவை. பெரும்பாலும் தங்களுடைய தொடர்பெல்லைக்கு வெளியே நிறுத்துதல் என்ற அளவில் இந்த மூன்று செயல்களும் ஒரே மாதிரியான அர்த்தம் தருவதாகக் கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் அடிப்படை வாழ்வாதாரமான உடல், உணவு, உடை, உறைவிடம், தான். ஆனால் விலக்குதலும், தீட்டும், தற்காலிகமானவை. நடைமுறையில் எல்லோர் வாழ்விலும் இந்தத் தீட்டும், விலக்குதலும், அவர்களுடைய வாழ்வனுபங்களூடாக நடக்கின்றன. தலித்துகள் உட்பட எல்லோரும் இதைக் கடைப்பிடிக்கின்றனர்.
விலக்குதலை மிகச் சாதாரணமாக, சுய காரணங்களாக, எனக்குக் கத்தரிக்காய் பிடிக்காது, எனக்கு முட்டை பிடிக்காது, சாப்பிட்டால் ஒவ்வாமை வந்து விடும். உடல் நலம் கெட்டுவிடும் அவரைப் பிடிக்காது, இவரைப்பிடிக்காது பச்சை நிறம் பிடிக்காது இன்ன பிற விஷயங்களைச் சொல்லலாமென்றால் சமூகக் காரணங்களாக ஊர் விலக்கம், சாதி விலக்கம், வீட்டு விலக்கம் என்று சொல்லலாம். சுயகாரணங்கள் ஒவ்வொரு தனிநபரைப் பொறுத்தும் மாறிக் கொண்டேயிருக்கும். ஒவ்வொருவருடைய விருப்பு வெறுப்புகளைப் பொறுத்தும் வேறு வேறு பொருட்கள், வேறு வேறு நபர்கள், வேறு வேறு விஷயங்கள் என்று மாறிக் கொண்டேயிருக்கும். அதே போல சாதி விலக்கம், ஊர் விலக்கம், வீட்டு விலக்கமும் ஒரு இனக்குழு அல்லது சாதியின் எழுதப்படாத விதிமுறைகளைப் பின்பற்றாததற்கான தண்டனையாக அந்த இனக்குழு அல்லது சாதியின் கூட்டுச் சமூகம் எடுக்கிற முடிவுப்படி ஒரு தனி நபர் அல்லது ஒரு குடும்பம் அந்த இனக்குழு அல்லது சாதியிலிருந்து விலக்கப்படும். ஆனால் இதில் மிக முக்கியமான விஷயம் விலக்கப்பட்ட அந்தத் தனிநபர் அல்லது குடும்பம் மீண்டும் அந்த இனக்குழு அல்லது சாதியில் மீண்டும் சேருவதற்குப் பரிகாரம் உண்டு. அதை அந்த இனக்குழு அல்லது சாதியின் கூட்டுச் சமூகமே பரிகாரத்தைச் சொல்லிவிடும். பரிகாரம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இதே மாதிரி தான் ஊர் விலக்கமும், வீட்டு விலக்கமும். இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் விலக்குதலுக்கு பரிகாரம் இருக்கிறது என்பதும் அதைச் செய்தால் மீண்டும் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்பது தான். விலக்குதல் சேர்த்தலையும் இணைத்தபடியே தான் வருகிறது. இதையும் தீண்டாமை என்று சொல்லலாமென்றால் அது தற்காலிகமானது என்பது மட்டுமல்ல அதில் தீண்டுதலுக்கான நடைமுறையும் இருக்கிறது.
மனிதனின் பிறப்பு, இறப்பு, பூப்படைதல், பெண்களின் மாதவிடாய் நாட்கள், போன்றவற்றை தீட்டாக கற்பித்து வந்திருக்கிறார்கள். இதெல்லாவற்றுக்கும் அசுத்தம் எதிர்வு தூய்மை என்ற கருதுகோளை முன்வைத்தும், அசுத்தமான இடங்களில் தான் ஆவிகள் நடமாடும் என்ற கற்பிதத்தின் அடிப்படையிலும் தீட்டைக் கடைப்பிடிக்கிறார்கள். குழந்தை பிறந்த வீடென்றால் பதினாறு நாட்கள் கழித்து தாயையும், குழந்தையும் வீட்டோடு சேர்க்க ‘ வீடு சேர்த்தல் ‘ என்ற சடங்கை நிகழ்த்துகிறார்கள். அன்றிலிருந்து வீட்டுக்குள் தாயும் குழந்தையும் சேர்க்கப்பட்டு அன்றாட நடைமுறை வாழ்வில் இணைகிறார்கள். அவர்கள் இப்போது வெளியே வரலாம். எல்லோருடனும் கலந்து பழகலாம். அது வரை அவர்கள் தீட்டானவர்கள். தீண்டத்தகாதவர்கள். ஆக பிள்ளை பிறந்தவீட்டுத் தீட்டு ஒரு சடங்கின் ( பரிகாரம் ) மூலம் கழிக்கப்படுகிறது.
பெண் பூப்படைதலும் தீட்டு. அவளைத் தனியே வீட்டு முற்றத்திலோ, தனிக்குடிலிலோ, தனிமைப்படுத்தி வெளியுலகிலிருந்து விலக்கி வைத்து, தலைக்குத் தண்ணீர் ஊற்றினாலும், புண்ணியார்த்தனம் என்ற சடங்கை ( பரிகாரம் ) ஒரு பிராமணர் வந்து செய்த பிறகே அந்தத் தீட்டு கழிகிறது. தீட்டுக் கழிந்த பின்னே அந்தப்பெண் வெளியுலகோடு கலந்து பழகலாம். அது வரை இருந்த தற்காலிகத் தீண்டாமை மாறி தீண்டுதலுக்கான நடைமுறை வந்து விடுகிறது. அதன் பிறகும் அது தொடர்கிறது என்பது பெரிய கொடுமை. ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நாட்களில் பெண் தனிமைப்படுத்தப் படுவதும், மூன்று நாட்களோ ஐந்து நாட்களோ கழிந்து அவள் குளித்தபிறகு தான் வீட்டுக்குள் மற்ற பொருட்களைத் தீண்ட அநுமதிக்கப்படுவாள். அது வரை அவளுக்குத் தனித் தட்டு, தம்ளர், படுக்கை, உடை, உறைவிடம். வயதாகி மாதவிடாய் நிற்கும்வரை அந்தப் பெண் இந்தத் தற்காலிகத் தீண்டாமையிலிருந்து தப்பமுடியாது. ( இப்போது நகரங்களில் நவீன வாழ்வின் பல காரணிகளால் இந்தப் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது ) இங்கேயும் தீண்டாமை தற்காலிகமானது. தீண்டப்படுவதற்கான பரிகாரத்தையும் கொண்டிருக்கிறது.
இறப்பு வீட்டிலும் பதினாறாவது நாள் விஷேசம் முடியும் வரை அந்த வீடும் அந்த வீட்டிலுள்ள உறுப்பினர்களும் தீட்டாகவேக் கருதப்படுகிறார்கள். கருமாதி விஷேசம் ( பரிகாரம்) முடிந்ததும் அந்த வீடும், வீட்டிலுள்ளவர்களும் தீட்டுக் கழிந்தவர்களாகி விடுகிறார்கள். அதன் பிறகு அவர்கள் மற்றவர்களைத் தீண்டுவதோ மற்றவர்கள் அவர்களைத் தீண்டுவதோ தீட்டாகாது. இதுவும் தற்காலிகமான தீண்டாமை தான்.
மேலே குறிப்பிட்ட தீட்டு குறித்த முக்கியமான நிகழ்வுகளில் தற்காலிக தீட்டினால் விலக்கப்பட்ட மனிதர்களை, பொருட்களை, தீட்டு கழியுமுன்பே தீண்டிவிட்டால் தீண்டியவர் தன்னுடைய உடலைக் கழுவிச்( குளித்து) சுத்தம் செய்வதன் மூலம் உடனே அந்தத் தீட்டைக் கழித்து விடலாம். தீட்டினால் விலக்கப்பட்டவர்கள் தான் தீட்டு கழிவதற்காகக் குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து சடங்கு நடத்திய பின்பே மற்றவர்களைத் தீண்ட முடியும். ஆனால் மற்றவர்களுக்கு அது தேவையில்லை. தீட்டுக்காரரைத் தொட்ட தீட்டை குளித்தால் போக்கி விடலாம். தீட்டு நிகழ்வுகள் நடைபெற்ற வீட்டுக்காரர்கள் சில நாட்கள் தீண்டத் தகாதவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அவர்களைத் தீண்டியவர்கள் சிறிது நேரத்துக்கு தீண்டத் தகாதவர்களாக இருந்து உடனே குளித்து தன் தீண்டாமையைப் போக்கிக் கொள்ளலாம்.
இப்படிச் சில நாட்கள், சிறிது நேரம் தீண்டத் தகாதவர்களாக, மற்றவர்களிடமிருந்து விலக்கப்பட்டவர்கள், விலக்கப்பட்ட பொருட்கள், விலக்கப்பட்ட இடம், சில சடங்குகளைச் செய்வதன் மூலம் மீண்டும் தீண்டத்தக்கவர்களாக மாறுகிறார்கள். இப்படி தன் வாழ்நாள் முழுவதும் பிறப்பு, சாவு, பூப்படைதல், மாதவிடாய் காலம், என்று மாறி மாறி தற்காலிகமாகத் தீண்டத்தகாதவர்களாகவும், பரிகாரங்களுக்குப்பின் தீண்டத்தக்கவர்களாகவும் நிலை மாறிக் கொண்டேயிருக்க வைப்பதன் மூலம் பிராமணியம் தீண்டாமை என்ற வருணாசிரமத்தின் இழிவான நடைமுறையை எல்லோரையும் பின்பற்ற வைத்துள்ளது. இது தான் பிராமணியத்தின் இழிவான தந்திரம்.
நடைமுறையில் எல்லாசாதியினரும் தங்கள் வாழ்நாளில் சில காலம் தீட்டினால் தீண்டத் தகாதவர்களாக இருப்பதனால் தீண்டாமைக்கு அவர்களுடைய மனம் வசமாகிவிட்டது. அதை இயல்பாகப் பார்க்கும் மனநிலை உருவாகிறது. சாதியப்படிநிலையை ஏற்றுக் கொள்ள வைத்ததன் மூலம் வருணாசிரமப்படிநிலையில் கீழ் நிலையில் இருக்கும் தலித்துகளை தீண்டத்தகாதவர்களாக வைத்திருப்பதை எந்தக் கேள்வியும் இன்றி உறுதிப்படுத்தும் நடைமுறை உருவாகிறது. தலித் மக்களின் எழுச்சியை, விழிப்புணர்வைச் சகிக்க முடியாத மனநிலை பிராமணியத்தால் சமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இந்தச் சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயம், தீட்டு எல்லாம் பயன்படுகிறது. பண்பாட்டுத் தளத்தில் முற்போக்கு எண்ணம் கொண்ட எல்லோரும் குறிப்பாக இடது சாரிகள் இந்தச் சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயங்களுக்கு எதிராக சமரசமில்லாத யுத்தம் தொடுக்க வேண்டிய காலம் இது.
புகைப்படம் – மோகன்தாஸ் வடகரா
Saturday, 30 June 2012
பூனை குறுக்கே போனா!
உதயசங்கர்
பூனை குறுக்கே போனா என்ன? என்னவா. சரியாப்போச்சு. போகிற வேலை நடக்காது. எடுத்த காரியம் உருப்படாது. அதாவது நாம் ஒரு காரியத்துக்காகப் புறப்பட்டு போகும் வழியில் ஒரு பூனை குறுக்கே போனால் அன்று அந்த வேலை நடக்காது. அப்படியா ?
இதைச் சகுனம் என்று சொல்கிறார்கள் . அடிக்கடி சகுனம் சரியில்லை என்று சொல்லக் கேட்டிருக்கிறீர்களா ? சரி சகுனம் என்றால் என்ன? நடக்கப்போவதைப் பற்றி முன்கூட்டியே தெரிவிக்கிற சிக்னல்கள் அல்லது சமிக்ஞைகள் என்று சொல்லப்படுகிறது. இது உண்மையா/ இல்லை.
அறிவியல் சரியாக வளராத காலத்தில் நமது தாத்தாக்களுக்கு, தாத்தாக்களுக்கு, தாத்தாக்கள் நடந்த நிகழ்ச்சிகளுக்கு அவர்களுக்குத் தெரிந்த விளக்கத்தைச் சொல்லி வைத்து விட்டுப் போய் விட்டார்கள். அவைகள் எல்லாம் மூட நம்பிக்கைகளாக வளர்ந்து விட்டன.
அப்படின்னா தாத்தாக்கள் சொன்னதெல்லாம் தப்பா? இல்லை. அப்படிச் சொல்லமுடியாது. பழைய காலத்தில், மனிதர்கள் தங்களுடைய கஷ்டங்களுக்கும், நஷ்டங்களுக்கும், காரணம் தெரியாமல் தவித்தார்கள். அதே போல் தற்செயலாக நடக்கிற பல விஷயங்களும் அவர்களுக்குப் புரியவில்லை. எல்லாத்துக்கும் காரணம் தேடினார்கள். அப்போது தற்செயலாகப் பாதையின் குறுக்கே போன பூனை அன்று நடக்காமல் போன காரியத்துக்குக் காரணமாக ஆகிவிட்டது. உடனே பூனை மனிதர்களுடைய வாழ்வில் ஒரு கெட்ட சகுனமாக மாறி விட்டது.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், மனிதர்களை விட குறைந்த அறிவுள்ள பூனையால் நாம் செய்யப் போகிற காரியத்தை நடக்கவிடாமல் செய்ய முடியுமா? யோசித்துப் பாருங்களேன்.
பூனை ஏன் பாதையின் குறுக்கே போகிறது? பாதையிலோ, சாலையிலோ, இடது புறமாகவே நடக்க வேண்டும் என்பது நமக்கு மட்டும் தானே. மிருகங்கள், பறவைகள், பூச்சிகளுக்குக் கிடையாதே. அவற்றுக்கு எங்கே உணவு கிடைக்குமோ அந்த இடத்தை நோக்கிப் போகும் இல்லையா? எலிகள் இருக்கும் இடத்தைத் தேடியோ, பாலும் தயிரும் இருக்கும் இடத்தைத் தேடியோ பூனை அங்கும் இங்கும் வரும் போகும் இல்லையா?
இப்படித் தன் பாட்டுக்கு சாப்பாட்டுக்கு அலைகிற அப்பிராணியைப் போய் நம்முடைய காரியத்தை நடக்கவிடாமல் செய்வதாகச் சொல்வது நியாயமா?
இது மூடநம்பிக்கையா. இல்லையா.
அடுத்ததாகப் பல்லி, சுவர்களில் விளக்கு வெளிச்சத்துக்கு வரும் பூச்சிகளைத் தின்பதற்கு அலைவதை நாம் பார்த்திருக்கிறோம். அது சுவரில் நடப்பதற்கு தன் ஐந்து விரல்களுக்கு நடுவே வெற்றிடத்தை உருவாக்குகிறது. அதன் மூலம் சுவரைப் பற்றிக் கொண்டு நடக்கிறது. தலைகீழாகவும், அதனால் இரையைப் பிடிக்க ஓட முடிகிறது. அதன் வேகம், பதுங்கி வாலைச் சுழட்டியபடி நாக்கை வினாடிக்கும் குறைவான நேரத்தில் பூச்சிகளை லவட்டுகிற லாவகம். பார்க்க, பார்க்க நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இல்லையா!
அந்தப் பல்லியையும் எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே குறி சொல்கிற மூடநம்பிக்கைக்குள் இழுத்து வந்து விட்டார்கள். எப்படித் தெரியுமா?
பல்லி சொல்லும் பலன், பல்லி விழும் பலன், என்று இரண்டு விதமாகப் பிரித்துச் சகுனம் சொல்லியிருக்கிறார்கள். கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது சரி தானா?
சுவரில் பறந்து வந்து ஒட்டுகிற சிறு பூச்சிகளை நோக்கி வேகமாகப் போகும் போது எப்போதாவது அதன் பிடிமானம் தவறாதா? அப்படி அதன் நிலை தவறிக் கீழே விழும்போது மனிதர்கள் யாராவது இருந்தால் அவர்கள் மீது தானே விழும். அதற்குப் பல்லி பொறுப்பாக முடியுமா? அப்படி விழும்போது, சரி இவன் காலில் விழுவோம் என்றோ, அவன் தலையில் விழுவோம் என்றோ, இன்னொருத்தன் கையில் விழுவோம் என்றோ முடிவு செய்தா விழும்?
சரி எங்கே விழுந்தாலும் உயிர் பிழைக்க வேண்டும் என்கிற பதட்டம் தானே அதுக்கு இருக்கும். பாவம் அதைப் போய் தலையில் விழுந்தால் கலகம், நெற்றியில் விழுந்தால் பதவி என்று மனிதர்களுடைய உறுப்பு வாரியாகப் பலன் எழுதியிருக்கிறார்களே! வேடிக்கையாக இல்லை.
எங்கே விழுந்தாலும் பாவம் பல்லி. இசகு பிசகா விழுந்துட்டா பல்லியல்லவா செத்து விடும். யோசித்துப் பாருங்கள்.
வீட்டுச் சுவரில் அலைந்து கொண்டு அற்பமான பூச்சிகளைத் தின்று வாழும் பல்லியினால் நமது வாழ்க்கையில் நடக்கப் போகிற நிகழச்சிகளைத் தீர்மானிக்க முடியுமா? அறிவியல் பூர்வமாக இதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா?
அடுத்ததாக பல்லி ஏன் கத்துகிறது? பொதுவாக இரண்டு காரணங்கள் இருக்கும். ஒன்று உணவை அதாவது பூச்சிகளைப் பார்த்து சப்புக் கொட்டி எழுப்பும் ஒலி. அல்லது பெண் துணையைத் தேடி ஆணோ, ஆண் துணையைத் தேடிப் பெண்ணோ, இனப்பெருக்கத்துக்காக அழைக்கும் ஒலி. இல்லையென்றால் எதிரியுடன் சண்டையிடும் போதோ, எதிர் பாராத வேதனையின் போதோ, ஒலி எழுப்பலாம்.
ஆனால் இதைப் போய் பல்லி மனிதர்களுக்குப் பலன் சொல்கிறது என்று மனிதர்களாக நினைத்துக் கொண்டால் பாவம் பல்லி என்ன செய்யும்? இப்படியான மூடநம்பிக்கையை என்னவென்று சொல்வது? அதிலும் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு திசையில் இருந்து கொண்டு பல்லி குரல்கொடுத்தால் ஒவ்வொரு விதமான பலன் உண்டாகுமாம்.
பல்லிக்குக் கிழமை தெரியுமா?
பல்லிக்குத் திசை தெரியுமா?
என்ன முட்டாள்த்தனம்!
ஆறறிவு படைத்த மனிதனால் செய்ய முடியாத ஒரு காரியம் ஒரு பல்லி தன்னுடைய கீச்சுக் குரலில் கத்துவதால் மட்டும் நடந்து விடுமா?
யோசித்துப் பாருங்கள்!
பூனை, பல்லியோடு மட்டும் விடவில்லை. ஆந்தை கத்தும் பலன், காகம் கரையும் பலன், கழுதை கத்தும் பலன், கருடனைப் பார்க்கும் பலன் என்று எதையும் விட்டு வைக்கவில்லை.
நல்லவேளை சிங்கம் கர்ஜிக்கும் பலன், புலி உறுமும் பலன், என்று சொல்லாமல் விட்டார்கள்!
இவைகளையெல்லாம் அறிவியல்பூர்வமாக, பகுத்தறிவுப்பூர்வமாக கடுகளவாவது ஏற்றுக் கொள்ள முடியுமா?
தாத்தாக்களுக்குத் தாத்தாக்களுக்குத் தாத்தாக்கள் சொன்னவை எல்லாவற்றையும் நாம் அப்படியே சரி என்று ஏற்றுக் கொள்ள முடியுமா? முடியாது. ஏன்?
அறிவியல் வளர்கிறது. மனிதர்களின் அறிவும் அநுபவமும் வளர்கிறது. எனவே சகுனம் என்றும், பல்லி, ஆந்தை, கருடன், கழுதை சொல்லும் பலன்கள் என்றும் சொல்லி மனிதனின் வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளக் கூடாது.
பூனை குறுக்கே போவதைப் பார்த்து எலிகள் பயந்து ஓடி ஒளியலாம்.
