Showing posts with label மதம். Show all posts
Showing posts with label மதம். Show all posts

Tuesday, 19 May 2015

சடங்கு சாஸ்திரம் பெண்கள் – ஒரு பார்வை

உதயசங்கர்

revolution 4

பெரும்பாலான வீடுகளில் குடும்பத்தாரின் ஆன்மீக நடவடிக்கைகளை வீட்டுப்பெண்களே தீர்மானிக்கிறார்கள்.அஷ்டமி, நவமி, ராகு, குளிகை, எமகண்டம், சூலம், பரிகாரம், ஜாதகம், ஜோசியம் ராசி, லக்கினம், நட்சத்திரம், நாள், கிழமை, நட்சத்திரம், பூஜை, புனஸ்காரங்கள், நைவேத்தியங்கள், நேர்த்திக்கடன்கள், மற்றும் விரதங்கள், அமாவாசை, பௌணர்மி, ஏகாதசி, துவாதசி, சஷ்டி சதுர்த்தி, கார்த்திகை, சிவராத்திரி, மஹாசிவராத்திரி, என்று நாள் தவறாமல் விரதங்களையும் பெண்கள் தங்களுடைய குடும்பத்தாரை முழுமையாகவோ, பகுதியாகவோ கடைப்பிடிக்கச் செய்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், தினசரி வீட்டு வாசலில் கோலம் போடுவது, வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் வீட்டை மொழுகிச் சுத்தம் செய்வது, மாலையில் குத்துவிளக்கை ஏற்றி மாலை சூடி, பூஜை செய்வது, என்று பக்தி மணம் கமழ வீட்டை மாற்றி விடுகிறார்கள். இதோடு பெயர்ச்சிகள் வேறு. குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி, கிரகணங்கள், என்று பெயர்ச்சிகளின் போது குடும்பத்தாரின் யோகங்களைப் பற்றிய கவலைகள். அதற்குப்பரிகாரங்கள் என்று அனுகணமும் மதத்தின் சாஸ்திர சம்பிரதாயங்களைத் தவறாமல் கடைப்பிடிக்கிறார்கள் பெண்கள்.

ஏற்கனவே வீட்டு நிர்வாகத்தை இருபத்திநாலு மணி நேரமும் செய்துகொண்டேயிருக்கும் பெண்களின் தலையில் குடும்பத்தின் நலன்களைப் பராமரிக்க சாஸ்திர சம்பிரதாய சடங்குகளைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம். கணவர், குழந்தைகள், வீடு, என்று எப்போதும் சிலந்தி வலையில் மாட்டிய ஈயைப் போல உழன்று கொண்டேயிருக்கிறார்கள். பெரும்பாலான ஆண்கள் இதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை அல்லது கவலைப்படாத மாதிரி நடந்து கொள்கிறார்கள். “ அதெல்லாம் அவுக டிபார்ட்மெண்ட்..” என்று மேம்போக்காய் சொல்லி விட்டு ஒரு சடங்கு விடாமல் எல்லாவற்றையும் கிரமமாய் செய்வார்கள் ஆண்கள். இதில் மதங்களுக்கேற்றவாறு சாதிகளுக்கேற்றவாறு சடங்குகள் சாஸ்திரங்கள் மாறலாம். அவ்வளவு தான். மதத்தின் சாஸ்திர சம்பிரதாயங்களை இவ்வளவு கர்மசிரத்தையோடு, செய்கிற பெண்களைப் பற்றி இந்த சடங்கு, சாஸ்திரங்களைச் செய்யச்சொல்கிற மனு தர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா?

“ வேதங்களைப் படிப்பதற்குப் பெண்களுக்கு உரிமையில்லை அத னால் அவர்களின் சடங்குகள் வேதமந்திரங்கள் இல்லாமல் நடத்தப்படவேண்டும். மதத்தைப் பற்றி பெண்களுக்கு எந்த ஞானமும் கிடையாது. ஏனெனில் வேதங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு உரிமையில்லை. பாவத்தைப் போக்குவதற்கு வேத மந்திரங்களை உச்சரிப்பது பயனுள்ளதாகும். பெண்களால் வேதமந்திரங்களை உச்சரிக்க முடியாததாகையால் அவர்கள் பொய்யைப் போன்றவர்கள். “

( 18. ஒன்பதாம் அத்தியாயம் மனுதர்ம சாஸ்திரம் அம்பேத்கார் நூல்தொகுப்பு 36 )

அறிவு பெறும் உரிமையை மறுத்துவிட்டு அவர்களுக்கு எந்த ஞானமும் கிடையாது என்றும்  அவர்கள் பொய்யைப் போன்றவர்கள் என்றும் இழிவு படுத்துகிறது மனுதர்ம சாஸ்திரம். இப்படி பெண்களின் ஆன்மீக உரிமையை புறந்தள்ளுவது மட்டுமல்லாமல் அவர்களுடைய இருத்தலையே இழிவானதாகச் சித்தரிக்கின்றன கீழ்க்கண்ட விதிகள்.

“ இந்த உலகில் ஆண்களை மயக்கி தவறான வழியில் செல்லத்தூண்டுவது பெண்களின் இயல்பாகும். அந்த காரணத்திற்காகவே விவேகமுள்ளவர்கள் பெண்களுடன் சகவாசம் செய்யும்போது உஷாராயில்லாமல் ஒருபோதும் இருக்க மாட்டார்கள். “ ( 213, அத்தியாயம் 2 மனுதர்மசாஸ்திரம் )

“ ஏனெனில் இந்த உலகில் பெண்கள் ஒரு முட்டாளை மட்டுமின்றி ஒரு கல்விமானையும் பாதை தவறிச் செல்லச் செய்வதற்கும் மற்றும் தமது விருப்பத்திற்கும், கோபத்திற்கும் அடிமையாக்குவதற்கும் வல்லமை உடையவர்கள். “ ( 214. அத்தியாயம் 2. மனுதர்மசாஸ்திரம் )

“ அவர்களை உருவாக்கும்போது கடவுள் பெண்களுக்கு அவர்களின் பதவி, நகைகள், ஆகியவற்றின் மீது பிரேமையையும், மற்றும் தூய்மையற்ற விருப்பங்கள் ஆங்காரம், நேர்மையற்ற தன்மை, தீங்கான கெட்ட நடத்தை, ஆகியவற்றை உடையவர்களாகவும் படைத்தார். “

( 17. அத்தியாயம் 9 மனுதர்மசாஸ்திரம்)

பெண்களை இழிவு படுத்தும் மனு,  புத்தருக்குப் பின் வந்தவர். புத்த மதம் செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில் பெண்களுக்கு இருந்த சுதந்திரத்தை பறிக்கவும், இழிவுபடுத்தவும் இத்தகைய விதிகளை எழுதியுள்ளார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

ஆதி மனிதகுலத்தில் நிலவி வந்த தாய்வழிச்சமூகத்தில் பெண்ணே தலைமைப் பொறுப்பை வகித்து வந்தாள். வேட்டைச்சமூகமாக இருந்தவர்கள் நிலையாக ஓரிடத்தில் வாழத்தொடங்கிய பின்னர் விவசாயம் வளர வளர கிடைத்ததைப் பகிர்ந்துண்ட வேட்டைச்சமூக மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. தேவையைத் தாண்டிய உபரி தனிச்சொத்துடமையை அறிமுகம் செய்தது. தனிச்சொத்துடமையின் விளைவாகவே பெண்ணின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டது. குறிப்பாக பெண்களின் பாலியல் சுதந்திரம்.

ஒரு காலத்தில் உற்பத்தி / மறு உற்பத்தியின் குறீயீடாக  பெண்ணின் யோனி வணங்கப்பட்டது. அப்போது தாயே வாரிசுகளுக்கு அடையாளமாக இருந்தாள். ஆண்களுக்கு முக்கியத்துவம் இல்லை. சொத்துடமை தோன்றிய பிறகு ஆண் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நாட்டத் தொடங்கினான். அதற்காகவே பெண்ணின் பாலியல் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த விரும்பினான். பெண்ணின் பாலியல் சுதந்திரத்தின் பத்தினி / பரத்தை என்று ஆணை மையமாக வைத்து எதிர்மைகளை உருவாக்கினான். உற்பத்தியின் ஊற்றாக இருந்த யோனி இப்போது பாவக்குழியாகியது. உற்பத்தியின் முன்னறிவிப்பான பூப்பு இப்போது தூமையென்று இழிவானதாக, தீட்டாக, உருவகிக்கப்பட்டது. இந்தத் தீட்டை உற்பத்தி செய்கிற பெண்ணும் இழிவானவளாக கருதப்பட்டாள்..

பெண்கள் தங்கள் விருப்பம் சார்ந்து பாலியல் தேவைகளை நிறைவேற்றுவது பாவம் என்றும் அதற்குக் கடுமையான தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டன / நிறைவேற்றப்படுகின்றன. இதில் எல்லாமதங்களும் ஒன்று போல கை கோர்த்து செயல்படுவது யதேச்சையானதாகக் கருத முடியாது. அவர்கள் உலவும்சமூகவெளியைச் சுருக்கி வீட்டுக்குள் முடக்கினார்கள். அதோடு அவர்களின் அறிவுச்சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தி கல்வியை மறுத்தார்கள். வீட்டிலும் கூட பெண் சுதந்திரமானவளாக இருக்க அநுமதிக்கப்படவில்லை.

“ ஒரு சிறு பெண்ணோ, ஓரு இளம் பெண்ணோ, அல்லது வயதான பெண்ணும் கூட - தனது சொந்த வீட்டிலும் கூட - எதையும் சுதந்திரமாகச் செய்யக்கூடாது. “ ( 147. அத்தியாயம் 5 மனுதர்மசாஸ்திரம் )

“ குழந்தைப் பருவத்தில் ஒரு பெண் தனது தகப்பனாருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இளமைப்பருவத்தில் தனது கணவருக்கும், கணவர் இறந்ததற்குப் பின்னர் தனது மகன்களுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஒரு பெண் ஒருபோதும் சுதந்திரமாக இருக்கக்கூடாது.”

( 148. அத்தியாயம் 5. மனுதர்மசாஸ்திரம் )

ஏன் பெண் சுதந்திரமாக இருக்கக்கூடாது? மீண்டும் வாசிக்க 213. அத்தியாயம் 2-டை. பெண்ணின் புழங்குவெளியைச் சுருக்குவதன் மூலம் அவளுடைய பாலியல் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவே இந்த இழிமொழிகள். எனவே வீடு, வீட்டின் மூலையில் சமையலறை, இரவானால் படுக்கையறை, தன் கணவன், மக்கள் நலனைத் தவிர சமூகத்தில் எதைப்பற்றியும் கவலைப்படமுடியாத அளவுக்கு சாஸ்திரங்கள், சடங்குகள், என்று தன்னை இழிவு படுத்துகிற மதத்தின் கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையில் இருக்கிறாள்.

அதுமட்டுமில்லாமல் பிறந்ததிலிருந்து ஆடை, ஆபரணங்கள், அலங்காரங்கள், தலைமுடி வளர்த்து பூச்சூடி, பொட்டிட்டு, அறிந்தோ அறியாமலோ ஆண்களின் கண்களுக்குக் காமப்பண்டமாகவும், அதே ஆடை அலங்கார விவகாரங்களே பெண்ணின் விலங்குகளாகவும் மாறி விடும் விந்தையினை நாம் பார்க்கிறோம். பெண்ணை வெறும் உடலாகப் பார்க்கும் ஆணாதிக்கம் அதன்மீது தன் வக்கிரங்களை எழுதிப்பார்க்கிறது. பெண்ணின் சமூகஅதிகாரம் பறிக்கப்பட்டபிறகு நடந்த வரலாற்றின் சுவடுகளில் பெண்ணின் இரத்தமும் தெறித்திருக்கின்றன. பெண்ணின் பாலியல் சுதந்திரம் பறிக்கப்படுவதற்கு சாதித்தூய்மை அல்லது இனத்தூய்மைக் கொள்கையும் ஒரு காரணம். இன்றளவும் சாதியத்தூய்மையைக் காப்பாற்றும் காவலாளியாகப் பெண்ணையே பொறுப்பாக்குகிறார்கள். வர்ணாசிரம அதர்மத்தின் அரிய கண்டுபிடிப்பான அகமணமுறையின் மூலம் சாதியத்தூய்மையைக் காப்பாற்ற பெண் நிர்ப்பந்திக்கப்படுகிறாள். இந்த அகமணமுறையக் காப்பாற்றவே வர்ணாசிரமத்தைக் காப்பாற்றவே இத்தனை சடங்குகளும் சாஸ்திர சம்பிரதாயங்களும் உருவாக்கப்பட்டன. அவற்றை தீட்டு / புனிதம் என்ற கருத்தாக்கங்களின் மூலம் மனங்களில் விதைத்து வளர்ப்பதன் மூலம் நிலை பெறச்செய்கின்றனர் சநாதன வாதிகள்.

கொடுமை என்னவென்றால் எந்த அநீதியான இழிவான கற்பிதமான நெறிகளைச் சொல்லி பெண்ணின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தினார்களோ அந்த நெறிகளை பெண்களே மனமுவந்து ஏற்றுக் கொள்ள வைத்திருப்பதில் தான் சநாதனத்தின் சாமர்த்தியம். எந்த சாஸ்திர சம்பிரதாய சடங்குகளிலும் பெண்களை முன்னிறுத்துவதில்லை. ஆனால் பெண்கள் அதைப்பற்றி எந்த எதிர்ப்புமின்றி அந்த சடங்குகளையும் சாஸ்திரங்களையும் கறாராகக் கடைப்பிடிக்க நினைக்கின்றனர். அப்படி கடைப்பிடிக்கவில்லையென்றால் தன்னுடைய குடும்பநலன் பாதிக்கப்படும் என்று நம்பவைக்கப்பட்டிருக்கிறாள்.

பெண்ணுக்குச் சொத்தில்லை என்று மனுதர்மசாஸ்திரம் அத்தியாயம் 9-ல் 416 ஆம் விதி கூறுகிறது. பெண்களை அடிக்கலாம் என்று அத்தியாயம் 8-ல் 299 ஆம் விதி கூறுகிறது. இதெல்லாவற்றையும் விட கொடிய விதி அத்தியாயம் 11-ல் 67-ஆம் விதி கூறுகிறது.

“ குடிகாரர்கள், ஸ்திரிகள், சூத்திரர்கள், வைசியர்கள், அல்லது ஷத்திரியர்கள், மற்றும் கடவுள் நம்பிக்கையில்லாதவர்களைக் கொல்வது ஆகிய யாவும் சிறிய குற்றங்களேயாகும். “

பிராமணர்களைக் கொல்வது மட்டுமே பெரும்பாதகம். மற்றவர்களையெல்லாம் கொல்வது சிறிய பாவம் என்று மனுதர்மத்தில் எழுதப்பட்டிருக்கிறது. பெண்களை ஒரு பொருட்டாகவே மதிக்காத மனுதர்மத்தைக் கடைப்பிடிக்க நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சடங்குகளிலிருந்து, சாஸ்திரங்களிலிருந்து பெண்கள் தங்களை விடுவிக்காதவரை மனிதகுல விடுதலை முழுமையடையாது.

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்.

Show details

Monday, 31 December 2012

ஆபத்தான சமூகமா? ஆபத்தான காலமா?

1 nature scenery (www  

உதயசங்கர்

 

சமீபகாலமாக நமது சமூகத்தில் நடந்து வருகிற நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது நாம் வாழும் இந்தக் காலம் ஆபத்தானதாக மாறியிருக்கிறதா? இல்லையெனில் நமது சமூகமே ஆபத்தானதாக மாறி விட்டதா? என்ற அச்சம் தோன்றுகிறது. ஆபத்தான காலகட்டம் என்றால் நாம் அதைப் போராடிக் கடந்து விடலாம். ஏனெனில் இந்தக் காலகட்டம் மாறுவதற்கான, மாற்றுவதற்கான, காரணிகள் காலத்தின் கர்ப்பத்திலேயே உருக்கொண்டுவிடும். ஆனால் சமுகமே ஆபத்தானதாக மாறிவிட்டால் பெரும்நாசம். சீரழிவு. பெரும்பான்மை சமூகம் மனசாட்சியற்றுப் போய் விட்டதோ என்ற பயம் தோன்றுகிறது. எப்போதுமே சமூகத்த்தின் மேன்மை குறித்து சிந்திக்கும் முற்போக்கான சக்திகள் செயல்திட்டமின்றி செயலிழந்து நிற்கிறதோ என்ற சந்தேகம் தோன்றுகிறது. சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதி, மத வேறுபாடுகள் மீண்டும் எழுச்சி கொண்டிருக்கிறன. உலகமயமாக்கலின் நவீன நுகர்வுக்கலாச்சாரத்தினால் நமது அறமாண்புகள் இழிவுப்படுத்தப்படுகின்றன. பழமைவாதத்தையும் நவீனத்தையும் தனித்தனியே போற்றிப் பாதுகாப்பாய் நமது மனங்களில் கொலுவிருக்கச் செய்வதில் ஆட்சியாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பழமைவாதத்தை, சாதிவேர்களை, வர்ணாசிரமத்தை, பெண்ணடிமைத்தனத்தைக் ஆணாதிக்கத்தைக் காப்பாற்றும் பொறுப்பைப் பெண்களே செய்கிற அவலத்தைக் கண்கூடாகக் காணமுடிகிறது. நாம் எங்கே நிற்கிறோம்? காட்டுமிராண்டிக்காலத்திலா? கற்காலத்திலா? மனிதமனதில் இத்தனை நூற்றாண்டுகளாக உருவாகிவந்த அறம், தயை, நேசம், அன்பு, கருணை, எல்லாம் எங்கே போயின? எந்த ஒரு கணத்திலும் மனிதன் விலங்காக இப்படிச் சொல்வதுகூட தவறு, கொடூரமான காட்டுமிராண்டியாக மாறி விடுகின்ற சந்தர்ப்பங்களைப் பார்க்கும்போது மனித இனத்தின் பெரும் அவநம்பிக்கை தோன்றுகிறது. இப்படி ஒரு இனம், சமுகம் இல்லாதொழியட்டும் என்று சாபமிடத் தோன்றுகிறது.

உலகமயமாக்கலின் ஏகாதிபத்தியத்தின், வேட்டைக்காடாக நமது சமுகத்தை மாற்றுகிற வேலையை நமது ஆட்சியாளர்கள் திறம்பட செய்து கொண்டிருக்கிறார்கள். ஏகாதிபத்தியநாடுகள் எதை விற்றாலும் வாங்குவதற்குத் தயாராக இந்தியா இருக்கிறது. அதில் ஒன்று தான் அணு உலை விற்பனையும். ஜான் பெர்கின்ஸின் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் புத்தகத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த பிறகு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் எல்லாம் எப்படி முன்கூட்டியே திட்டமிடப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டு அரசமைப்பு, அரசு நிர்வாகம், முதலாளித்துவ ஊடகங்கள், அரசியல் கட்சிகள் எல்லாம் அந்த ஒத்திகையின் அட்சரம் பிசகாமல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சொந்த நாட்டு மக்களின் அச்சத்தை விட அந்நிய நாட்டு நலன் முக்கியமானதாக போய்விட்டது. தங்களூக்காக மட்டுமல்ல ஒட்டு மொத்த சமூகத்தின் பாதுகாப்புக்காக போராடிக் கொண்டிருக்கும் கூடங்குள மக்களின் மகத்தான போராட்டம் ஓராண்டைத் தாண்டியும் அதற்கான எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. அடக்குமுறைகளால் அந்த மக்களின் போரட்ட உணர்வை அழித்து விட நினைக்கும் அரசு நிர்வாகம் அந்த ஊரைத் தனித்தீவாக்கி போகும் பாதைகளிலெல்லாம் அடக்குமுறை யந்திரங்களை நிறுத்தி பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. முதலாளித்துவ ஜனநாயகத்தின் கோரமுகத்தை அங்கே பார்க்கமுடிகிறது., சமுகத்தின் வாழ்வு, தங்கள் வாழ்வாதாரம், அழிந்துவிடும் என்ற அச்சத்தில் போராடிக் கொண்டிருக்கும் மக்களின் மீது தேசத்துரோக வழக்குகள், சதி வழக்குகள் லட்சக்கணக்கில் போடப்பட்டுள்ளன. எந்த அரசியல், பொருளாதாரப்பின்புலமற்ற அந்த எளிய மக்களின் போராட்டம் நமது சமூகத்தின் மனசாட்சியை ஏன் உலுக்கவில்லை. எல்லா நிகழ்வுகளும் நமக்கு சாயங்காலநேரத்து ஸ்னாக்ஸ் ஆகி விட்டதா? பயமாக இருக்கிறது. இது ஆபத்தான காலமா? இல்லை ஆபத்தான சமூகமா?

அடையாள அரசியலின் ஒரு முகமாக சாதி அரசியல் முன்னெப்போதையும் விட இப்போது நமது சமூகத்தில் ஓங்கியிருக்கிறது. துரதிருஷ்டவசமாக இந்த சாதி அரசியலை அதன் ஆரம்பகாலத்தில் ஊக்குவித்து அதற்குத் தத்துவார்த்தபின்புலத்தை நமது அறிவுஜீவிகளில் இலக்கியவாதிகளில் பலர் கொடுத்ததை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. ஏற்கனவே வர்ணாசிரமக் கோட்பாட்டினால் ஈராயிரம் ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு சமுகத்தில் இந்தச் சாதி அரசியல் என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தமிழ் அறிவுஜீவிகள் முன்னுணரவில்லை. தங்களை முன்னிறுத்தும் போராட்டகளத்தில் இதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். தன்வாழ்நாள் முழுவதும் வர்ணாசிரமத்துக்கு எதிராக, பிராமணியத்துக்கு எதிராகப் போராடிய நமது சமுகத்தின் கலகக்காரச் சிந்தனையாளர் பெரியாரின் அத்தனை உழைப்பையும் மிகச் சில வருடங்களிலே துடைத்தழித்து விட்டது சாதி அரசியல். விளைவு சாதிகள் தோறும் புதிய மனிதக்கடவுள்களின் தோற்றம், வழிபாடு, அந்தக் கடவுள்களின் பெயரால் வன்முறை, கொலை, கொள்ளை. சமுகத்தின் மனசாட்சி என்னவாயிற்று? பரமக்குடி, மதுரை, சம்பவங்களின் உள்ளர்த்தம் இது தானே.

அகமணமுறையின் மூலமே சாதியத் தூய்மையைக் காப்பாற்ற முடியும் என்ற மனுதர்மசிந்தனையை யார் யாருக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்? ஆனால் சமுகம் அதைக் கடைப்பிடிக்கிறதே. அதுவும் சாதிப்படிநிலையில் கீழ்நிலையில் வைக்கப்பட்டிருக்கிற சாதிகளுடனான திருமணம் என்றால் ரத்தம் கொதித்து, கௌரவக்கொலை தொடங்கி, தருமபுரியில் நடந்திருப்பதைப் போல கூட்டுக்கொள்ளை, என்று சமூகமே திரண்டு நடத்திய வன்முறை அரங்கேற்றத்தைப் பார்க்கும்போது நாம் மீண்டும் நமது கற்காலத்திற்குத் திரும்பி விட்டோமா? என்ற அச்சம் எழுகிறது. இது ஆபத்தான காலமா? இல்லை ஆபத்தான சமூகமா?

தனித்தனியாக இருக்கும்போது எத்தனை நல்லவனாக அறவுணர்ச்சி மிக்கவனாக, சமூகமனிதனாக, அன்பு, தயை, கருணை, மிக்கவனாக இருக்கிறான் மனிதன்! ஆனால் கும்பலாக மாறும்போது அவனிடம் காட்டுமிராண்டித்தனத்தைத் தவிர வேறு எதுவும் இல்லாமல் போகிறதே. இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக மானுடம் தன் அநுபவத்தின் வழியாகக் கற்றுணர்ந்த நாகரீகம், பண்பாடு, அறவிழுமியங்கள் எல்லாம் வேஷம் தானோ? இல்லை போர்வை போர்த்திய காட்டுமிராண்டி தானோ மனிதன்? பண்பாட்டு அறிஞர் கே.என். பணிக்கர் மதச்சார்பின்மைக்கான கலாச்சார நடவடிக்கைகளைப் பற்றிப் பேசும்போது எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் எல்லாமத, இன, மொழி, மக்களையும் உள்ளடக்கிய கலாச்சார அமைப்புகளை உருவாக்கி பரஸ்பரம் அந்நியோன்யத்துடன் அனைத்து விழாக்கள், நிகழ்ச்சிகள், என்று உறவுகளைப் பலப்படுத்தச் சொல்லுவார். ஆனால் தருமபுரியில் நடந்த பொருளாதார அழித்தொழிப்பு சம்பவத்தை நடத்தியிருப்பது எங்கிருந்தோ வந்த வேற்று மனிதர்களல்ல. அந்தந்த ஊர்களின் வழியே போய்வந்து கொண்டிருக்கும், வியாபாரம், கொடுக்கல் வாங்கல், என்று உறவுகளைக் கொண்டிருந்தவர்கள் தான். வன்முறை நடக்கும் போது ஒரு பெண் கேட்கிறார், “ ஐயா, பழகுன ஆட்களே இப்படிச் செய்யுறீங்களே..” அதற்கு கொள்ளையடித்துக் கொண்டிருந்த மனிதர் சொல்லியிருக்கிறார், “ பழகுனா சம்பந்தம் பண்ணிக்க முடியுமா..” அங்கே பிராமணர்கள் யாரும் கிடையாது. பிராமணியம் என்றால் என்னவென்றே அவருக்குத் தெரியாது. வேதங்கள் என்றால் என்னவென்றோ, மனுதர்மம் என்றால் என்னவென்றோ தெரியாது. வருணாசிரமக் கோட்பாட்டின் படி தான் எந்த இடத்தில் இருக்கிறோம். தன்னுடைய சாதியைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றும் தெரியாது. மனுதர்மத்தில் எப்படியெல்லாம் தான் இழிவு படுத்தப்பட்டிருக்கிறோம் என்றும் தெரியாது. ஆனால் அவருடைய பொதுப்புத்தியில் வருணாசிரமும், மனுதர்மமும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறதே. அது தான் அவரை இப்படிப் பேசச் சொல்கிறது. அது தான் அவருடைய கட்சித்தலைவரையும் பேசச்சொல்கிறது. தன்னுடைய அரசியல் பதாகைகளில் பெரியாரையும், அம்பேத்கரையும், காரல்மார்க்ஸையும், வைத்துக் கொண்டே பிராமணியத்தின் கொடிய நடைமுறையைக் கடைப்பிடிக்கச் சொல்கிறது. சமூகமும் இந்த பலவேசத்தைப் பார்த்து வாளாவிருக்கிறது. இது ஆபத்தான காலமா? இல்லை ஆபத்தான சமூகமா?

சமீபத்தில் மறைந்த இனவெறி அரசியலின் பிதாமகர் பால்தாக்கரேயின் அரசியல் வாழ்க்கை பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் அத்தகைய வெறுப்புஅரசியலை நடத்திய அவருடைய இறுதி நிகழ்ச்சிக்கு ஐந்திலிருந்து பத்து லட்சம் பேர் கூடியிருந்தார்கள் என்ற செய்தி உண்மையில் அதிர்ச்சியளித்தது. அதை விட பெரிய அதிர்ச்சி. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, இடதுசாரிகளைத் தவிர மற்றவர்கள் அவர் ஏதோ நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தலைவரைப் போல எந்த விமர்சனமுமின்றி உரைச்சித்திரம் நிகழ்த்தியது அதை விட பெரிய கொடுமை. எல்லோருக்குள்ளும் ஒரு ஹிட்லர் இருக்கிறானா? சந்தேகமாயிருக்கிறது. இது ஆபத்தான காலமா? இல்லை ஆபத்தான சமூகமா?

இது எல்லாவற்றுக்கும் உச்சகட்டமாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போவது. பெண் பிறப்பதற்கு முன்பே கருவாக இருக்கும்போதே அவளுடைய போராட்டம் தொடங்கி விடுகிறது. பிறந்து, நோய், ஊட்டச்சத்துக்குறைபாடு, குடும்பத்தில் அலட்சியம், அவமானம், வீட்டுவேலைகள் என்ற ஆபத்துகளோடு வளரும்வரை குடும்பத்தோடு போராட்டம் என்றால் கல்வி கற்கத் தொடங்குவதிலிருந்து தன் இறுதிக் காலம் வரை சமூகத்தோடு போராட்டம். ஒரு சமூகத்தையே எதிர்த்து வளர்கிறாள். பிறந்ததிலிருந்தே ஆண்சமூகம் அவளை ஒரு பாலியல்கருவியாக நினைக்கிற அவலத்தை என்னவென்று சொல்ல? தந்தை, சகோதரன், சொந்தக்காரன்கள், அக்கம்பக்கத்துகாரன்கள், பழகியவன்கள், அந்நியன்கள், எங்கும் ஒரு பெண்ணுக்கு எதிரிகளாகவே இருக்கிற சமூகம் உயிர்வாழ வேண்டுமா? திரைப்படம், பத்திரிகைகள், மின்னணு ஊடகங்கள், இணையதளங்கள், என்று எங்கும் பெண் உடல் காட்சிப்பொருளாய் மாற்றப்பட்டுள்ள, அதற்கு எதிராக ஒரு சுட்டுவிரலைக் கூட அசைக்காத இந்த ஆணாதிக்கக்குடிமைச் சமூகம் உயிர்வாழத்தான் வேண்டுமா?

டெல்லியில் நிர்பயா, தாதன்குளத்தில் புனிதா, இன்னும் இன்னும் தினசரிகளில் பெண்குழந்தைகளுக்கு நேரும் பாலியல்வன்முறைகளைக் கேள்விப்படும் போது உடல் நடுங்குகிறது. இப்போது தான் நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு பெண்கள் படிக்கவும், மிகக்குறைந்த சதவீதமானவர்கள் வேலைக்குச் செல்லவும், சற்றே பொருளாதார ரீதியாகச் சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கவும் ஆரம்பித்திருக்கும் வேளையில் பெண்ணுடலைச் சிதைத்து அவர்களை மீண்டும் முடமாக்க நினைக்கிற இந்த ஆணாதிக்கச் சமூகம் உயிர் வாழத்தான் வேண்டுமா? இது ஆபத்தான காலமா? இல்லை ஆபத்தான சமூகமா?

குடிமைச்சமூக மக்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியாது. போலி அரசியல்வாதிகள் பின்னால் அணிதிரள்கிறார்கள். பொருளாதாரச்சுரண்டல் என்றால் என்னவென்று தெரியாது. தமக்கு வாய்ப்புக் கிடைத்தால் முதலாளியாகி விட நினைக்கிறார்கள். குறுக்குவழியில் சம்பாதிக்க ஓடுகிறார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் கவலையில்லையென்று குவாட்டருக்கும் பணத்துக்கும் ஓட்டளிக்கிறார்கள். இனவெறி, மதவெறி, சாதிவெறி, என்று எல்லா வெறிகளுக்கும் மிகச்சுலபமாக பலிகடா ஆகிறார்கள். தன்னைத்தவிர வேறு யாரும் இந்த உலகத்தில் இல்லையென்ற எண்ணத்திலோ, இருக்கக்கூடாதென்ற ஆசையிலோ சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள். சமூகத்தின் ஏற்றதாழ்வுகளைப்பற்றிக் கவலைப்படாதவர்களாக, ஏழ்மை, இல்லாமை, சமூக அவலங்கள் இதைப் பற்றிக் கவலைப்படாதர்களாக இருக்கிறார்கள். பகுத்தறிவற்றவர்களாக, மூடநம்பிக்கையின் முடைநாற்றமெடுப்பவர்களாக இருக்கிறார்கள். உண்மை எது? பொய் எது? என்று தெரியாதவர்களாக இருக்கிறார்கள். எளிமை கண்டு இகழ்கிறார்கள். ஆடம்பரத்தைக் கண்டு பிரமிக்கிறார்கள். கேளிக்கைகளில் மூழ்குபவர்களாக, குடிகாரர்களாக, அறமற்றவர்களாக, பண்பாடற்றவர்களாக, நாகரீகத்தைப் பவுடர் பூச்சைப்போல பூசிக் கொள்பவர்களாக, கொடியவர்களாக, வாய்ப்பு கிடைத்தால் ஏமாற்றுபவர்களாக, பிறர் சொத்தை அபகரிப்பவர்களாக, இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்களாக, மலைகளை உடைப்பவர்களாக, மணல்கொள்ளையர்களாக, பல்லுயிரிகளைக் கொல்பவர்களாக, இயற்கைச் சமன்பாட்டை குலைப்பவர்களாக, சகமனிதன் மீது குரோதம் கொண்டவர்களாக, குடிநீரை விற்பவர்களாக, விவசாயத்தை மதிக்காதவர்களாக, மனோதிடமில்லாதர்களாக, கோழைகளாக, அடிமைகளாவதற்குத் தயாராக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள்திரளைக் கொண்ட இந்தக் குடிமைச் சமூகம் ஆபத்தான சமூகமா இல்லையா?

ஒரு ஆபத்தான காலகட்டத்தில் ஒரு ஆபத்தான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதோ இன்னும் ஒரு ஆண்டு கழிந்து விட்டது. காலத்தின் பேராற்றில் ஒரு துளி. நம்முடைய வாழ்நாளில் முந்நூற்றுஅறுபத்தைந்து நாட்கள் கடந்து விட்டன. எல்லா ஆண்டுகளையும் போல இனி வரும் ஆண்டும் கருப்பு ஆண்டாகவே மலருமா? சமூகத்தின் அத்தனை கொடுமைகளும் இப்படியே மாறாமல் கூடிக் கொண்டே போகுமா? நாம் நம்முடைய எதிர்காலச்சந்ததியினருக்கு எந்த மாதிரியான சமூகத்தைக் கொடுக்கப் போகிறோம்? நமக்கு முன்னால், நம் மனசாட்சியின் முன்னால் இந்தக் கேள்வி பெரும்பாறையென நிற்கிறது. உண்மையில் இப்போது நெருக்கடி முற்றிவிட்டதென்றே தோன்றுகிறது. சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள், சமூகத்தை மாற்ற வேண்டும் என்று லட்சியம் கொண்டவர்கள் ஒன்றிணைந்து தங்கள் செயல்திட்டங்களை உருவாக்க வேண்டிய காலம் இது. இடதுசாரிகள், பெரியாரியவாதிகள், அம்பேத்கரியவாதிகள், பெண்ணியவாதிகள், சமூக மாற்றத்தில் அக்கறையுள்ள அறிவுஜீவிகள், இலக்கியவாதிகள், முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள், உண்மையான ஜனநாயக எண்ணம் கொண்டவர்கள், பாலினச்சிறுபான்மையினர், என்று எல்லோரும் இணைந்து பொதுத்தளத்தில் எல்லோருக்கும் பொதுவான ஒரு செயல்திட்டத்தை உருவாக்கி சமூகத்தின் பொதுப்புத்தியில் தலையிட வேண்டும். குறைந்தபட்ச பண்பாட்டு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயல்படுவதின் மூலம் மட்டுமே இந்த ஆபத்தான காலத்திலுள்ள நம்முடைய ஆபத்தான சமூகத்தை மாற்ற முடியும். இது தான் நம்முடைய இன்றைய தலையாயக்கடமை. காலமும் கழிந்து கொண்டிருக்கும் இந்த ஆண்டும் நமக்கு விடுக்கும் செய்தி. காலமும் வரலாறும் அழைக்கிறது நம்மை. அதன் குரலுக்குச் செவிமடுப்போம்.

Friday, 24 August 2012

தீண்டாமையின் அர்த்தவிநோதங்கள்

 an_untitled_portrait_modern_art  

உதயசங்கர்

 

தீண்டாமை என்ற சொல் அதனுடைய எதிர்வான தீண்டுதலையும் உள்ளடக்கியே இருக்கிறது. அதே போல பருப்பொருளாகத் தீண்டப்பட முடியாதவையெல்லாம் தீண்டாமை என்ற அர்த்தத்துக்குள் அடங்குவதுமில்லை. உதாரணமாக வெளி, காலம், போன்ற கருத்துருக்களும் அன்பு, காதல், போன்ற குணநலன்களும் பருண்மையாகத் தீண்டப்பட முடியாதாவை. சமூகத்தின் விதிமுறைகளின் படி எதிர்பாலினத்தை, ஆண் பெண்ணையோ, பெண் ஆணையோ திருமணச்சடங்குகளின்றி தீண்ட முடியாது. அதே போல அடுத்தவர் மனைவியையோ, கணவனையோ சமூகக்கட்டுப்பாட்டின் படி தீண்ட முடியாது. ஆனால் இவையெல்லாம் தீண்டாமை என்ற அர்த்தத்துக்குள் வருவதில்லை. ஆக தீண்டாமையும் அதன் எதிர்வான தீண்டுதலும் வேறொரு எதிரிணைவையும் கொண்டு வருகிறது. சுத்தம் எதிர்வு அசுத்தம், அல்லது தூய்மை எதிர்வு தூய்மையின்மை என்ற சொல்லாடலையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

தீட்டு தூய்மையின்மையையும் அதைக் கழிக்கும் சடங்கு தூய்மையையும் பிரதிநிதித்துவப்படுத்துவால் தற்காலிகத் தீண்டாமையாகத் தீட்டைக் கருதுகிறார்கள். தீட்டுச் சடங்கு முடிந்த பிறகு குளித்து உடலைத் தூய்மை செய்த பின்னர் அந்தத் தற்காலிகத் தீண்டாமை மறைந்து விடுகிறது. அந்தச் சடங்கைச் செய்யும் பிராமணரும் அந்தச் சடங்கு முடிந்த பின்னர் அந்த வீட்டிலிருந்த தீட்டை ஏற்றுக் கொண்டு அவரும் தீட்டாகி விடுகிறார். அவரும் குளித்த பிறகே தற்காலிகத் தீண்டாமையிலிருந்து விடுவிக்கப்படுகிறார். வருணாசிரமப் படிநிலையிலிருக்கும் அனைத்துச் சாதியினரும் இந்தத் தற்காலிகத் தீண்டாமைக்கு ஆளாகின்றனர். தூய்மை, தூய்மையின்மை, என்ற கருத்தாக்கங்களின் வழி ஆன்மிக அதிகாரத்திலிருக்கும் பிராமணியம் இந்தத் தற்காலிகத் தீண்டாமையை எல்லோருக்கும் விதிக்கிறது.

எனவே தீண்டாமை என்பது பிராமணியத்தின் அடிப்படையாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பிராமணியம் தன்னுடைய அடிப்படைப் பண்பான தீண்டாமையை அனைத்து சாதியினரையும் பின்பற்ற வைத்ததில் பெற்ற வெற்றியே இன்று வரை பிராமணியத்தை ஆன்மீக அதிகாரத்தில் வீற்றிருக்க வைத்திருக்கிறது. தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் தீண்டாமையை வாழ்வின் ஆதார நிகழ்வுகளுடன் பிறப்பு, இறப்பு, திருமணம், எல்லாவற்றுடனும் இணைத்து என்றென்றும் தன் நிலையை அசையாமல் இருக்க வழி வகை செய்துள்ளது. இதற்குள் இருக்கும் பொருளாதாரப்படிநிலையினையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். உழைக்கும் வர்க்கமான தலித்துகளை நிரந்தரத்தீண்டாமை நிலையில் வைப்பதன் மூலமும், அதற்கான அங்கீகாரத்தை மற்றெல்லாசாதியினரிடமிருந்தும் பெறுவதன் மூலமும் முடிவில்லாத உழைப்புச் சுரண்டலை பிராமணியம் உத்தரவாதப்படுத்தியிருக்கிறது. அசுத்தமான (?) வேலைகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட தலித்துகளை அந்த வேலைகளைக் காட்டியே தீண்டத் தகாதவர்களாக மாற்றியிருப்பது என்பது பிராமணியத் தந்திரமன்றி வேறென்ன? இதற்கான ஒப்புதலை மற்ற சாதியினரிடமிருந்து பெறுவதற்காகவே தீட்டு என்ற தற்காலிகத் தீண்டாமை என்று கருத இடமுண்டு. ஏனெனில் அசுத்தத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தி விட்டால் தீட்டு கழிந்து எல்லாப்பொருட்களையும், எல்லாமனிதர்களையும் தீண்ட முடியும் என்ற கருத்தியலையும் நடைமுறைப்படுத்தியதால், தற்காலிகமான தூய்மையின்மையை சடங்குகளின் மூலம் உடனடியாகத் தூய்மைப்படுத்தி விடலாம், ஆனால் நிரந்தமான தூய்மையின்மையை எந்தச் சடங்கின் மூலமும் தூய்மைப்படுத்த முடியாது. உண்மையில் அப்படி எந்தச் சடங்கும் தீண்டத்தகாதவர்களுக்கு இல்லை. எனவே அவர்கள் நிரந்தரமாகத் தீண்டத்தகாதவர்கள். தர்க்கபூர்வமாக எல்லா சாதியினரும் இந்தக் கருத்தியலுக்கு வந்து சேரும் வகையில் மனுதர்மசாஸ்திரத்தைக் கட்டமைத்திருக்கிறது.

சாதியப்படிநிலையில் கீழ்நிலையில் இருக்கும் தலித்துகளைப் போல சாதியப்படிநிலையில் மேல் நிலையில் இருக்கும் பிராமணரும் தீண்டத்தகாதவரே. அவரும் பிற சாதியினரைத் தீண்ட முடியாது. பிற சாதியினரும் அவரைத் தீண்ட முடியாது. அப்படி யாரையேனும் அவர் தீண்டி விட்டாலோ, அல்லது அவரை யாரேனும் தீண்டி விட்டாலோ அவர் தீட்டாகி விடுகிறார். அவர் குளித்தபிறகே அவருடைய மடி நீங்குகிறது. ஆனால் அவரைத் தீண்டியவர்கள் தீட்டாவதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். அவர்கள் குளித்து தீட்டைக் கழிக்க வேண்டியதில்லை. இது அப்படியே தலைகீழாக தலித்துகளிடம் நிகழ்கிறது. தீண்டத்தகாதவர் மற்றவர்களைத் தொட்டு விட்டாலோ அல்லது மற்றவர்கள் அவர்களைத் தொட்டு விட்டாலோ தீண்டத்தகாதவர் தீட்டாவதில்லை. அவர்கள் குளித்து மற்றவர்கள் தீண்டிய தீட்டைக் கழிப்பதில்லை. ஆனால் அவரைத் தொட்டவர்கள் அல்லது அவரால் தொடப்பட்டவர்கள் தீட்டாகி விடுகிறார்கள். அவர்கள் குளித்து தங்களுடைய தீட்டைக் கழிக்கிறார்கள். இரண்டு நிலைகளில் இருக்கும் தீண்டத்தகாதவர்களில் எவ்வளவு மாறுபாடு? மேல்நிலையிலுள்ள பிராமணர் தீண்டத்தகாதவரேயாயினும் அவர் தீண்டியதற்காக அல்லது அவரைத் தீண்டியதற்காக மற்றவர்கள் குளிப்பதில்லை. ஆனால் அவர் குளிக்கிறார். அதே போல கீழ்நிலையில் வைக்கப்பட்ட தீண்டத்தகாதவர் மற்றவர்களைத் தீண்டியதற்காகவோ, அல்லது தீண்டப்பட்டதற்காகவோ அவர் குளிப்பதில்லை, ஆனால் மற்றவர்கள் குளிக்கிறார்கள். ஏனெனில் மேல்நிலையில் உள்ள தீண்டத்தகாதவரிடம் ( பிராமணரிடம் ) ஆன்மீக அதிகாரம் இருக்கிறது. எனவே அவர் தீண்டத்தகாதவராக இருப்பதற்காக பெருமைப்படுகிறார். மற்றவர்களையும் அவர் தீண்டத்தகாதவராக இருப்பதற்காகப் பெருமைப்பட வைக்கிறார். ஆனால் கீழ்நிலையில் உள்ள தீண்டத்தகாதவரிடம் இழிவும் அவமானமும் மட்டுமே இருக்கின்றன.

ஆக ஒரே செயலை முற்றிலும் வேறுபட்ட இரண்டு எதிர்நிலைகளில் செயல்பட வைப்பதில் பிராமணியமும், மனுதர்மமும் வெற்றி பெற்றிருக்கின்றன. தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்றால் நாம் கேள்வி முறையின்றி கடைப்பிடித்து வரும் சடங்குகளை ஒழிக்க வேண்டும். மனுதர்மசாஸ்திரத்தை ஒழிக்க வேண்டும். பிராமணியத்தை ஒழிக்க வேண்டும். அப்போது தான் முழுமையான மனித விடுதலை சாத்தியமாகும்.

DSC01492

Tuesday, 21 August 2012

தீட்டு, தீண்டாமை, விலக்குதல்…….

 

உதயசங்கர்

Mohan Das (99)

இந்திய சமூகத்தின் நடைமுறை வாழ்வில், தீட்டு, தீண்டாமை, விலக்குதல், இந்த மூன்று செயல்களும் மிக முக்கியமானவையாகக் கடைப்பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எந்தக் கேள்வியுமின்றி, எந்த விமர்சனப்பார்வையுமின்றி இவற்றை மக்கள் மனதார ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இதை பண்பாட்டு விழுமியங்களாக, பாரம்பரிய உன்னதங்களாகக் கருதுபவர்களும் இருக்கிறார்கள். அதனால் தான் சாதாரண மக்களே,

“ அதுக்காக நம்ம பாரம்பரியத்தை, பழக்க வழக்கத்தை சம்பிரதாயத்தை விட்டுர முடியுமா? “

“ தீட்டுக் கழியாம எங்கேயும் போகக் கூடாது..”

“ அதைத் தொடாதே.. தீட்டாயிரும்..”

என்று சொல்வதைக் கேட்க முடிகிறது. அது மட்டுமல்ல. ஜனநாயகஎண்ணம் கொண்டவர்களுக்குக் கூட இந்த கொடிய நடைமுறைகள் கண்ணை உறுத்துவதில்லை. அநுதாபமும், பரிதாபமும், உதவியும் செய்தால் போதுமானது என்ற சிந்தனை வருகிறது. ஒட்டு மொத்தமாக இந்த நடைமுறைகளை ஒழிப்பதற்கான செயல் திட்டம் பண்பாட்டுத் தளத்தில் துவங்கப்பட வேண்டியிருக்கிறது. அதற்கு முதலில் பிராமணியமும், மனுதர்மமும் எப்படி தீட்டை, தீண்டாமையை, விலக்குதலை, மக்கள் மனதில் தந்திரமாகப் புகுத்தியது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இவற்றின் உள்ளார்ந்த தத்துவம் என்ன? என்பதையும் அந்தத் தத்துவத்தின் நடைமுறைகள் என்ன? என்பதைக் குறித்தும் புரிந்து கொண்டால் தான் பண்பாட்டுத் தளத்தில் அதை எதிர் கொள்வதற்கான புதிய பண்பாட்டு ஆயுதங்களை உருவாக்கமுடியும்.

விலக்குதல், தீட்டு, தீண்டாமை, என்ற வார்த்தைகள் மேலோட்டமாகப் பார்க்க ஒரே அர்த்தமுள்ளவை போலத் தோன்றினாலும் அடிப்படையில் மிக ஆழமான வேறுபாடுகளைக் கொண்டவை. பெரும்பாலும் தங்களுடைய தொடர்பெல்லைக்கு வெளியே நிறுத்துதல் என்ற அளவில் இந்த மூன்று செயல்களும் ஒரே மாதிரியான அர்த்தம் தருவதாகக் கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் அடிப்படை வாழ்வாதாரமான உடல், உணவு, உடை, உறைவிடம், தான். ஆனால் விலக்குதலும், தீட்டும், தற்காலிகமானவை. நடைமுறையில் எல்லோர் வாழ்விலும் இந்தத் தீட்டும், விலக்குதலும், அவர்களுடைய வாழ்வனுபங்களூடாக நடக்கின்றன. தலித்துகள் உட்பட எல்லோரும் இதைக் கடைப்பிடிக்கின்றனர்.

விலக்குதலை மிகச் சாதாரணமாக, சுய காரணங்களாக, எனக்குக் கத்தரிக்காய் பிடிக்காது, எனக்கு முட்டை பிடிக்காது, சாப்பிட்டால் ஒவ்வாமை வந்து விடும். உடல் நலம் கெட்டுவிடும் அவரைப் பிடிக்காது, இவரைப்பிடிக்காது பச்சை நிறம் பிடிக்காது இன்ன பிற விஷயங்களைச் சொல்லலாமென்றால் சமூகக் காரணங்களாக ஊர் விலக்கம், சாதி விலக்கம், வீட்டு விலக்கம் என்று சொல்லலாம். சுயகாரணங்கள் ஒவ்வொரு தனிநபரைப் பொறுத்தும் மாறிக் கொண்டேயிருக்கும். ஒவ்வொருவருடைய விருப்பு வெறுப்புகளைப் பொறுத்தும் வேறு வேறு பொருட்கள், வேறு வேறு நபர்கள், வேறு வேறு விஷயங்கள் என்று மாறிக் கொண்டேயிருக்கும். அதே போல சாதி விலக்கம், ஊர் விலக்கம், வீட்டு விலக்கமும் ஒரு இனக்குழு அல்லது சாதியின் எழுதப்படாத விதிமுறைகளைப் பின்பற்றாததற்கான தண்டனையாக அந்த இனக்குழு அல்லது சாதியின் கூட்டுச் சமூகம் எடுக்கிற முடிவுப்படி ஒரு தனி நபர் அல்லது ஒரு குடும்பம் அந்த இனக்குழு அல்லது சாதியிலிருந்து விலக்கப்படும். ஆனால் இதில் மிக முக்கியமான விஷயம் விலக்கப்பட்ட அந்தத் தனிநபர் அல்லது குடும்பம் மீண்டும் அந்த இனக்குழு அல்லது சாதியில் மீண்டும் சேருவதற்குப் பரிகாரம் உண்டு. அதை அந்த இனக்குழு அல்லது சாதியின் கூட்டுச் சமூகமே பரிகாரத்தைச் சொல்லிவிடும். பரிகாரம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இதே மாதிரி தான் ஊர் விலக்கமும், வீட்டு விலக்கமும். இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் விலக்குதலுக்கு பரிகாரம் இருக்கிறது என்பதும் அதைச் செய்தால் மீண்டும் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்பது தான். விலக்குதல் சேர்த்தலையும் இணைத்தபடியே தான் வருகிறது. இதையும் தீண்டாமை என்று சொல்லலாமென்றால் அது தற்காலிகமானது என்பது மட்டுமல்ல அதில் தீண்டுதலுக்கான நடைமுறையும் இருக்கிறது.

மனிதனின் பிறப்பு, இறப்பு, பூப்படைதல், பெண்களின் மாதவிடாய் நாட்கள், போன்றவற்றை தீட்டாக கற்பித்து வந்திருக்கிறார்கள். இதெல்லாவற்றுக்கும் அசுத்தம் எதிர்வு தூய்மை என்ற கருதுகோளை முன்வைத்தும், அசுத்தமான இடங்களில் தான் ஆவிகள் நடமாடும் என்ற கற்பிதத்தின் அடிப்படையிலும் தீட்டைக் கடைப்பிடிக்கிறார்கள். குழந்தை பிறந்த வீடென்றால் பதினாறு நாட்கள் கழித்து தாயையும், குழந்தையும் வீட்டோடு சேர்க்க ‘ வீடு சேர்த்தல் ‘ என்ற சடங்கை நிகழ்த்துகிறார்கள். அன்றிலிருந்து வீட்டுக்குள் தாயும் குழந்தையும் சேர்க்கப்பட்டு அன்றாட நடைமுறை வாழ்வில் இணைகிறார்கள். அவர்கள் இப்போது வெளியே வரலாம். எல்லோருடனும் கலந்து பழகலாம். அது வரை அவர்கள் தீட்டானவர்கள். தீண்டத்தகாதவர்கள். ஆக பிள்ளை பிறந்தவீட்டுத் தீட்டு ஒரு சடங்கின் ( பரிகாரம் ) மூலம் கழிக்கப்படுகிறது.

பெண் பூப்படைதலும் தீட்டு. அவளைத் தனியே வீட்டு முற்றத்திலோ, தனிக்குடிலிலோ, தனிமைப்படுத்தி வெளியுலகிலிருந்து விலக்கி வைத்து, தலைக்குத் தண்ணீர் ஊற்றினாலும், புண்ணியார்த்தனம் என்ற சடங்கை ( பரிகாரம் ) ஒரு பிராமணர் வந்து செய்த பிறகே அந்தத் தீட்டு கழிகிறது. தீட்டுக் கழிந்த பின்னே அந்தப்பெண் வெளியுலகோடு கலந்து பழகலாம். அது வரை இருந்த தற்காலிகத் தீண்டாமை மாறி தீண்டுதலுக்கான நடைமுறை வந்து விடுகிறது. அதன் பிறகும் அது தொடர்கிறது என்பது பெரிய கொடுமை. ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நாட்களில் பெண் தனிமைப்படுத்தப் படுவதும், மூன்று நாட்களோ ஐந்து நாட்களோ கழிந்து அவள் குளித்தபிறகு தான் வீட்டுக்குள் மற்ற பொருட்களைத் தீண்ட அநுமதிக்கப்படுவாள். அது வரை அவளுக்குத் தனித் தட்டு, தம்ளர், படுக்கை, உடை, உறைவிடம். வயதாகி மாதவிடாய் நிற்கும்வரை அந்தப் பெண் இந்தத் தற்காலிகத் தீண்டாமையிலிருந்து தப்பமுடியாது. ( இப்போது நகரங்களில் நவீன வாழ்வின் பல காரணிகளால் இந்தப் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது ) இங்கேயும் தீண்டாமை தற்காலிகமானது. தீண்டப்படுவதற்கான பரிகாரத்தையும் கொண்டிருக்கிறது.

இறப்பு வீட்டிலும் பதினாறாவது நாள் விஷேசம் முடியும் வரை அந்த வீடும் அந்த வீட்டிலுள்ள உறுப்பினர்களும் தீட்டாகவேக் கருதப்படுகிறார்கள். கருமாதி விஷேசம் ( பரிகாரம்) முடிந்ததும் அந்த வீடும், வீட்டிலுள்ளவர்களும் தீட்டுக் கழிந்தவர்களாகி விடுகிறார்கள். அதன் பிறகு அவர்கள் மற்றவர்களைத் தீண்டுவதோ மற்றவர்கள் அவர்களைத் தீண்டுவதோ தீட்டாகாது. இதுவும் தற்காலிகமான தீண்டாமை தான்.

மேலே குறிப்பிட்ட தீட்டு குறித்த முக்கியமான நிகழ்வுகளில் தற்காலிக தீட்டினால் விலக்கப்பட்ட மனிதர்களை, பொருட்களை, தீட்டு கழியுமுன்பே தீண்டிவிட்டால் தீண்டியவர் தன்னுடைய உடலைக் கழுவிச்( குளித்து) சுத்தம் செய்வதன் மூலம் உடனே அந்தத் தீட்டைக் கழித்து விடலாம். தீட்டினால் விலக்கப்பட்டவர்கள் தான் தீட்டு கழிவதற்காகக் குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து சடங்கு நடத்திய பின்பே மற்றவர்களைத் தீண்ட முடியும். ஆனால் மற்றவர்களுக்கு அது தேவையில்லை. தீட்டுக்காரரைத் தொட்ட தீட்டை குளித்தால் போக்கி விடலாம். தீட்டு நிகழ்வுகள் நடைபெற்ற வீட்டுக்காரர்கள் சில நாட்கள் தீண்டத் தகாதவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அவர்களைத் தீண்டியவர்கள் சிறிது நேரத்துக்கு தீண்டத் தகாதவர்களாக இருந்து உடனே குளித்து தன் தீண்டாமையைப் போக்கிக் கொள்ளலாம்.

இப்படிச் சில நாட்கள், சிறிது நேரம் தீண்டத் தகாதவர்களாக, மற்றவர்களிடமிருந்து விலக்கப்பட்டவர்கள், விலக்கப்பட்ட பொருட்கள், விலக்கப்பட்ட இடம், சில சடங்குகளைச் செய்வதன் மூலம் மீண்டும் தீண்டத்தக்கவர்களாக மாறுகிறார்கள். இப்படி தன் வாழ்நாள் முழுவதும் பிறப்பு, சாவு, பூப்படைதல், மாதவிடாய் காலம், என்று மாறி மாறி தற்காலிகமாகத் தீண்டத்தகாதவர்களாகவும், பரிகாரங்களுக்குப்பின் தீண்டத்தக்கவர்களாகவும் நிலை மாறிக் கொண்டேயிருக்க வைப்பதன் மூலம் பிராமணியம் தீண்டாமை என்ற வருணாசிரமத்தின் இழிவான நடைமுறையை எல்லோரையும் பின்பற்ற வைத்துள்ளது. இது தான் பிராமணியத்தின் இழிவான தந்திரம்.

நடைமுறையில் எல்லாசாதியினரும் தங்கள் வாழ்நாளில் சில காலம் தீட்டினால் தீண்டத் தகாதவர்களாக இருப்பதனால் தீண்டாமைக்கு அவர்களுடைய மனம் வசமாகிவிட்டது. அதை இயல்பாகப் பார்க்கும் மனநிலை உருவாகிறது. சாதியப்படிநிலையை ஏற்றுக் கொள்ள வைத்ததன் மூலம் வருணாசிரமப்படிநிலையில் கீழ் நிலையில் இருக்கும் தலித்துகளை தீண்டத்தகாதவர்களாக வைத்திருப்பதை எந்தக் கேள்வியும் இன்றி உறுதிப்படுத்தும் நடைமுறை உருவாகிறது. தலித் மக்களின் எழுச்சியை, விழிப்புணர்வைச் சகிக்க முடியாத மனநிலை பிராமணியத்தால் சமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இந்தச் சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயம், தீட்டு எல்லாம் பயன்படுகிறது. பண்பாட்டுத் தளத்தில் முற்போக்கு எண்ணம் கொண்ட எல்லோரும் குறிப்பாக இடது சாரிகள் இந்தச் சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயங்களுக்கு எதிராக சமரசமில்லாத யுத்தம் தொடுக்க வேண்டிய காலம் இது.

புகைப்படம் – மோகன்தாஸ் வடகரா

Monday, 30 July 2012

சாஸ்திரம் சம்பிரதாயம் சடங்குகளின்உடல் – 2

சடங்குகளும் சுயபோராட்டமும்

உதயசங்கர்

emotion-chart-with-picture-reflection

சிந்தனையில், சமூகச்செயல்பாடுகளில் முற்போக்காகவும், சொந்த குடும்ப வாழ்க்கையில் பிற்போக்கான சடங்கு சாஸ்திரம் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கவுமான இரட்டைநிலை கொண்ட தோழர்களை நான் அறிவேன். இதற்கு அவர்கள் மட்டுமே குறை சொல்லிவிட முடியாது. பண்பாட்டுத் தளத்தில் நாம் புதிய செயல்பாடுகளைச் செய்யத் தவறியதே காரணம். அது மட்டுமேயல்லாமல் அரசியல் சிந்தனைகளுக்கு, செயல்பாடுகளுக்குக் கொடுத்த அளவுக்கு சிறிதளவேனும் முக்கியத்துவம் பண்பாட்டு நடவடிக்கைகளுக்குக் கொடுக்கவில்லை என்பதும் யதார்த்தமான உண்மை. நம்முடைய படைப்பாளிகள் முற்போக்கான படைப்புகளை படைக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் காலத்திற்கேற்ற படைப்புகளாக இருக்கின்றனவா என்று நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டும்.முதலாளித்துவ, மதவாத, பண்பாட்டு நடவடிக்கைகளை நுட்பமாகப் புரிந்து கொண்டு அதிலிருந்து அதைச் செரித்துக் கொண்டு புதிய பண்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விவாதங்களைத் துவக்கியிருக்கிறோமா?

இல்லையெனில் எல்லாபிற்போக்கான பண்பாட்டு நடவடிக்கைகளுடனும் சமரசம் செய்து கொண்டு ஆனால் அதே நேரம் அரசியல்ரீதியாக முற்போக்காகவும் திகழ்கிற போலிக் கம்யூனிஸ்ட்கள் பெருகி விடும் ஆபத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

என் வாழ்வில் சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயங்களுக்கு எதிராக நான் நடத்திக் கொண்டிருக்கிற போராட்டம் மேடு பள்ளங்களைக் கொண்டது தான். நான் பள்ளியில் படிக்கிற காலத்திலேயே சாமி கும்பிடுவதை நிறுத்தி விட்டேன். எனக்குப் பத்தாவது வகுப்பில் தமிழாசிரியராக வந்த குருசாமி வகுப்பில் சொன்ன பகுத்தறிவுக் கருத்துகள் என்னை எதனாலோ ஈர்த்தன. வீட்டிலும் ரெம்ப பழமைவாதம் கிடையாது. ஊரோடு ஒத்துப் போவதற்காக நல்லநாள் கொண்டாடுவார்கள். மற்றபடி வீட்டிற்கு மிக அருகில் இருந்தாலும் கோவிலுக்குச் செல்லும் பழக்கமெல்லாம் வீட்டிலுள்ள யாருக்கும் கிடையாது. அதனால் பெரிய நெருக்கடி ஒன்றும் கிடையாது. அதற்கு முன்பு எட்டாம் வகுப்பு வரை மார்கழி மாதம் விடிகாலைக் குளிரில் எழுந்து குளித்து விட்டு கந்தபுராணத்தையும், விநாயகர் அகவலையும் சத்தம் போட்டு பாடிக் கொண்டே செண்பகவல்லியம்மன் கோவிலை நூற்றியெட்டு முறை சுற்றி வந்தவன் தான். ஆனால் குருசாமி வாத்தியாரின் வகுப்புகள் என்னை ஏதோ செய்தது. அது மட்டுமல்ல என்னுடைய அருமை நண்பனான நாறும்பூநாதனின் நட்பும் ஒரு காரணம். அவனுடைய அண்ணன் ஆர்.எஸ்.மணி மூலமாக அவன் நிறைய முற்போக்கான கருத்துகளைக் கற்றுக் கொண்டு எங்களிடம் வந்து கொட்டுவான். முதலில் அதை எதிர்த்துப் பேசி பின்னர் அது ஆழமாக மனசில் பதிந்து விட்டது. கல்லூரிக் காலத்தில் புத்தகவாசிப்பின் மீதான ஆர்வம் எழுத்தை நோக்கி உந்தித் தள்ள நண்பர்கள் நாங்கள் கையெழுத்துப் பத்திரிகை துவங்கி தமுஎசவில் வந்து சேர்ந்தோம். அப்போது வாசித்த நூல்கள் மதம், சாதி, சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம் குறித்த புரிதலைத் துவக்கி வைத்தது.

1987-ல் என் திருமணநிகழ்வினை எந்த சாஸ்திரமும் சடங்கும் இல்லாமல் நடத்த பெரும்போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. அது தான் முதல்முறையாக நான் சடங்கு சாஸ்திரம் சம்பிரதாயங்களின் வலிமையை உணர்ந்த நாட்கள். வீட்டுப் பெரியவர்களின் விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டியதாயிற்று. அந்த விரோதம் என்னுடைய அப்பா, அம்மா, இருவரின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.ஆனால் என்னுடைய பிடிவாதம், பால்வண்ணம், பாலு, தேவப்ரகாஷ், போன்ற தோழர்களின் ஒத்துழைப்பினால் சாஸ்திரம் சடங்கு சம்பிரதாயங்களுக்கு எதிரான என்னுடைய முதல் போர் வென்றது. எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தாலி எடுத்துக் கொடுக்க கைதட்டுதலோடு கலியாணம் முடிந்தது. என்ன பேசியும் தாலியைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் அதையும் பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு என் துணைவியார் துறந்து ஒரு பதக்கச் சங்கிலியை அடையாளமாக அணிந்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் தோழர்கள் திருமணம் பெரும்பாலும் அப்படித்தான் நடந்தது. ஆனால் இப்போது அதே தோழர்கள் அவர்கள் அவர்களுடைய திருமணத்தைத் தவிர வீட்டில் நடைபெற்ற அத்தனை விழாக்களையும் சடங்குகள் சகிதம் நடத்தியதையும் கண்டேன். இப்போது காலம் தன் சட்டையை உரித்து மீண்டும் அதே பழைய சனாதன உருவத்தோடு காட்சியளிக்கிறது.

என் குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காது குத்தும் சடங்கை என்ன சொல்லியும் என்னால் தடுக்க முடியவில்லை. சலூனில் மொட்டை போடும் என் யோசனைக்கு எல்லோருமே எதிர்ப்பு தெரிவித்தார்கள். திருமணத்துக்குப் பிறகு எல்லாமே குடும்பவிஷயமாக(?) மாறிவிடுவதால் தோழர்களும் தலையிடவில்லை. கடைசியில் சாத்தூர் இருக்கண்குடி மாரியம்மன் கோவிலில் அந்தச் சடங்குகள் நடந்தன. நான் தோல்வியடைந்தாலும் அய்யர் இல்லாமல் நாட்டார்தெய்வக் கோவிலில் வைத்துத் தானே நடக்கிறது என்று மீசையில் ஒட்டிய மண்ணைப் பெருமையுடன்(!) துடைத்துக் கொண்டேன். என் பெண்குழந்தைகள் பருவமடைந்ததை நாங்கள் யாருக்கும் சொல்லவில்லை. எந்த விதமான சடங்கும் செய்யவல்லை. என் துணைவியாருக்கோ குழந்தைகளுக்கோ அதில் வருத்தமில்லை.ஆனால் உறவினர்கள் திட்டினார்கள். தோழர்களும், நண்பர்களும் கூட வருத்தப்பட்டார்கள். சடங்கு முக்கியம் என்றார்கள். பிராமணரைக் கூட்டிக் கொண்டு வந்து புண்ணியானம் என்று சொல்லப்படுகிற தீட்டுக் கழிக்கிற சடங்கைச் செய்த தோழர்கள் வீட்டுக்குக் குடும்பத்தோடு சென்று வந்தார்கள். யாரும் என் வீட்டுக்கு வரவில்லை.அப்போது என் துணைவியார் கொஞ்சம் நம்பிக்கையிழந்தார். நான் சடங்கின் வலிமையை மீண்டும் உணர்ந்தேன். ஆனால் நம்பிக்கையிழக்கவில்லை.

என் தந்தையார் இறந்தபோது உறவினர்கள் எல்லோரும் நெருக்கடி கொடுத்தார்கள். அப்போது தோழர். சக்தி கூட இருந்ததால் அதைச் சுலபமாகக் கடந்து விட்டேன்.கொள்ளிச்சட்டி தூக்கவோ, மொட்டை போடவோ வேறு எந்த சடங்கையும் செய்யவும் மறுத்து விட்டேன். எல்லோரும் என்னை வேற்றுக் கிரகமனிதனைப்போல பார்த்தார்கள். சிலர் கொள்கையெல்லாம் சரிதான் அப்பாவுக்குத் தானே செய்றீங்க என்று சொன்னார்கள். அந்த நேரம் அப்பா இறந்து போன துக்கத்தை என்னால் முழுமையாக அநுபவிக்க முடியவில்லை என்பது உண்மை தான். இந்தச் சடங்குகளிலிருந்து எப்படி தப்பிப்பது என்ற சிந்தனையே எனக்குள் ஒரு இறுக்கத்தையும், பிடிவாத உணர்வையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் என் தம்பிகள் இந்தச் சடங்குகளைச் செய்வதிலிருந்து தடுக்க முடியவில்லை. என்பாடே பெரும்பாடாக இருந்தது. ஏற்கனவே கோட்டிக்காரன் என்று பெயர் எடுத்திருந்ததால் என் தாயார் இறந்தபோது யாரும் என்னை வற்புறுத்தவில்லை.

சொந்த வீடு கட்டும் போதும் சரி, கட்டி முடித்த பிறகும் சரி எந்தச் சடங்கையும் செய்ய மறுத்து விட்டேன். கிரகப்பிரவேசம் என்று சொல்லப் படுகிற சடங்கையோ, கணபதி ஹோமம் என்ற பெயரில் புது வீட்டுக்குள்ளே மாட்டைக் கூட்டிக் கொண்டு போய் சுத்திக் காண்பித்து அதன் மூத்திரத்தை வீட்டுக்குள்ளே தெளித்து அதுக்கு ஒரு விஞ்ஞானவிளக்கமும் கொடுத்து செய்கிற சடங்கையோ செய்யவில்லை. கிரகப்பிரவேசம் கணபதி ஹோமம் நடத்தி விழா எடுத்த தோழர்கள் வீட்டுக்கு எல்லோரும் போனார்கள். ஆனால் நான் அழைத்தும் யாரும் என் புது வீட்டுக்கு யாரும் வரவில்லை. நாங்கள் பல நாட்கள் எங்களுடைய புது வீட்டில் தோழர்களுக்காகக் காத்திருந்தோம். பத்திரிகை அடித்து நேரில் சென்று அழைத்து ஸ்பீக்கர் செட் அலற நான் முன்பு சொன்ன சடங்குகள் செய்து சாப்பாடு போட்டால் எல்லோரும் குதூகலமாக வந்து போகிறார்கள். எந்தச் சடங்கையும் செய்யாமல் நீங்கள் சும்மா அழைத்தால் யாரும் தோழர்கள் உட்பட யாரும் வரத்தயாரில்லை. எல்லோரிடமிருந்தும் தனிமைப் பட்ட உணர்வு வந்ததென்னவோ உண்மை தான். என் துணைவியாரும் “ என்னமோ தோழர்கள் அதையெல்லாம் பாக்கமாட்டாங்கன்னு சொன்னீங்க..” என்று வறுத்து எடுத்து விட்டார். சடங்குகளின் வலிமையை மீண்டும் உணர்ந்தேன்.

1987-லிலேயே வீட்டில் மாட்டுக்கறி எடுத்து சமைப்பதற்குப் பழகியிருந்தோம். இப்போதும் நானே போய் மாட்டுக்கறி எடுத்து வந்து சமைத்து சாப்பிடுகிறோம். அதே போல வெள்ளைப்பன்னிக்கறியும்( கறுப்பு பன்னி மீது இன்னமும் என் வீட்டிலுள்ளவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. நானும் இந்த வரைக்கும் வந்தார்களே என்று சும்மாயிருந்து விட்டேன்.) வீட்டில் சமைத்துச் சாப்பிடுகிறோம். எனக்கு என் துணைவியாரோ,என் மூத்த மகளோ தான் முடி வெட்டி விடுகிறார்கள். எந்தக் குழப்பமும் இல்லை. உண்மையில் சாதிய நடைமுறைகளை, சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயங்களை மறுத்து அதைக் கடந்து செல்லவே பெரும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். விழுதலும் எழுதலுமாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும் நானறியாமல் பல சடங்கு சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களுக்குத் துணை போயிருக்கிறேன். என் தம்பிகள், தங்கைகள் விஷயத்தில் தலையிடாமல் இருந்திருக்கிறேன். நான் மட்டும் சரியாக இருந்து கொள்கிறேன் மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை என்ற சுயபெருமித உணர்வுதான் காரணம். இதெல்லாம் பெருமை பேசுவதற்காகவோ யாரையும் குற்றம் சொல்வதற்காகவோ இல்லை. தன் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து முற்போக்கான அரசியலைப் பேசி, அதற்காகப் போராடிய தோழர் இறந்த பிறகு அப்படியே அவரை அவருடைய சாதியின் கையில் சடங்குகளின் கையில், சாஸ்திரங்களின் கையில், சம்பிரதாயங்களின் கையில் ஒப்படைத்துவிட்டு வாளாவிருப்பது என்ன நியாயம்?

,விரைவில் புரட்சி நடந்து விடும் புதிய கலாச்சாரம் வர்க்கபேதமற்ற, சாதி சமயங்கள் ஒழிந்த, சாஸ்திர, சம்பிரதாயங்கள், அழிந்த ஒரு புதிய சமூகம் பிறக்கும் என்று எனக்கு நம்பிக்கையளித்த இடதுசாரிகள் இப்போது மோசமாகிக் கொண்டேயிருக்கும் சாதி மத மயமாக்கப்பட்ட சூழலில் யுத்தகளத்தில் இல்லையோ என்ற அச்சம் வருகிறது.

1990-களில் அத்வானி ” ஆட்சி அதிகாரத்தை விட குடிமைச்சமூகமே எங்களுக்கு முக்கியம்.” என்று சொன்னார். அதில் பெரிய அளவுக்கு அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்றே தோன்றுகிறது. வரலாற்றறிஞர் கே.என். பணிக்கர் சொன்னதைப் போல அரசியல் ரீதியாக மதவாத சக்திகளை எதிர்கொள்கிற இடது சாரிகள் பண்பாட்டு ரீதியாக வலுவாக எதுவுமே செய்யவில்லை. இதனால் நம் கண்முன்னே குடிமைச்சமூகம் மதவாத சக்திகளிடம் போய்க் கொண்டிருக்கிறது. அதைத் தடுக்கவோ, எதிர்கொள்ளவோ, நம்மிடம் திட்டமில்லை. சாதி மத, சாஸ்திர, சடங்கு, சம்பிரதாயங்களுக்கு எதிரான எந்த முயற்சியும் இல்லை. முற்போக்கு பண்பாடு குறித்த விவாதத்தைத் துவங்கவே யில்லை. மிகுந்த உற்சாகத்துடன் என்னுடன் இணைந்து சாஸ்திர, சடங்கு, சம்பிரதாய மறுப்புகளைச் செய்து வருகிற என் துணைவியார், இப்போது சற்று சோர்ந்து போயிருக்கிறார்.

என் மூத்த மகள் சொல்கிறாள், “ நாம ஒரு சதவீதம் தானே இருக்கோம்… சுத்தி எல்லோரும் வேற மாதிரி தான இருக்காங்க ”

“ ஒரு சதவீதம் நூறு சதவீதமாகும் நாள் சீக்கிரம் வந்துரும் “ என்று நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன். ஏனென்றால் எதிர்காலச் சந்ததிகள் அவர்கள் தானே. அவர்கள் நம்பிக்கையிழக்கலாமா? ஒரு புதிய பண்பாட்டுப்போரைத் துவக்க வேண்டிய தருணம் இது. நம்முடைய முற்போக்கு பண்பாட்டு நிகழ்ச்சிநிரலை ஆரம்பிக்க வேண்டிய காலம் இது.

நன்றி - தீக்கதிர்

Tuesday, 24 July 2012

சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகளின் உடல்- 1

Yajna_14150

 

உதயசங்கர்

 

பண்பாடு என்பதன் பொருளாக ஒரு இனக்குழுவின் பழக்கவழக்கங்கள், அந்த இனக்குழுவின் தோற்றம், வளர்ச்சி, தங்களை நிலை நிறுத்துவதற்கான போராட்டம்,பெருமை, இவற்றைப் பிரதிபலிக்கிற நடைமுறை வாழ்க்கையையும், கருத்துருவான வாழ்க்கையையும் சொல்லலாம். இதை வெளிப்படுத்தவே சடங்குகள் என்று சொல்லப் படும் பண்பாட்டு நிகழ்வுகளை வாழ்க்கை முழுவதும் உருவாக்கி வைத்திருக்கின்றனர். அறிவியல் வளராத காலகட்டத்தில் தாங்களாகவே உருவாக்கிக் கொண்ட கருத்துருக்களுக்கு ஏற்பவும், பழைய வரலாற்றை நினைவு கூர்ந்து அதைத் திரும்பச் சொல்லும் முறையிலும் சடங்குகளின் நடைமுறை இருந்தது. ஒவ்வொரு பண்பாட்டு நிகழ்வுக்குள்ளும் சடங்குகள் தீவிரமாகக் கடைப்பிடிக்கப் பட்டன. அது அந்த இனக்குழுவின் அடையாளமாகக் கருதப்பட்டது. இதற்குமப்பால் உளவியல் ரீதியாக அந்த இனக்குழுவின் தன்னம்பிக்கை, ஒற்றுமை, உற்பத்தி உறவுகளின் ஊடாடல், இவற்றை முன்னிலைப்படுத்துவதாகவும் இருந்தது. பண்பாட்டு, சடங்குகள், இவற்றின் அடிநாதமாக கொண்டாட்ட மனநிலை இருப்பதைக் காணலாம். அடுத்தது இனக்குழு கூடி வர்த்தமானங்களை, சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொள்கிற ஒரு இடமாக அந்த விழாக்கள் அமைகின்றன. தங்களுடைய பூர்வீகத்தை, மூதாதையரை நினைவு கூர்ந்து மீண்டும் ஒரு தங்கள் இனக்குழு அடையாளத்தை உறுதி செய்கிற நிகழ்வாகவும் இருக்கிறது. தங்களுக்கேயுரிய பண்பாட்டு அசைவுகளை மீளவும் ஒரு சடங்காக செய்து பார்க்கிற நிகழ்வாகவும் பண்பாட்டு நிகழ்வுகள் இருக்கின்றன.

என்று பிராமணியம் தன்னுடைய மனுதர்மசாஸ்திரத்தின் மூலம் இந்திய சமூகத்தைத் தன் ஆதிக்கத்தின் கீழே கொண்டுவந்ததோ அன்றிலிருந்து பண்பாட்டு நிகழ்வுகளில் பிராமணமதச்சடங்குகளும் இடம் பெற ஆரம்பித்தன. அவற்றை இடம் பெறச் செய்வதில் இந்து சமயமும், புராண, இதிகாசங்களும் பெரும்பங்காற்றின. அதற்கு முன்பு வரை இருந்த நாட்டார்சமய மரபின் இளகிய தன்மையை இறுகச் செய்தது பிராமணமதம் தான். பிராமண மதத்துக்கான அரசு அங்கீகாரம், ஆதரவு மற்ற நாட்டார்சமய மரபுகளையும் மேல்நிலையாக்கத்தினை நோக்கி உந்தித் தள்ள ஆரம்பித்தது. மனுதர்மசாஸ்திரத்தின் உருக்குபோன்ற விதிமுறைகளை மாற்றவோ, உடைக்கவோ முடியாததினால் பிராமண மதத்தின் சடங்குகளைப் போலச் செய்தலின் மூலம் தங்களையும் அந்தக் கண்ணிக்குள் சேர்த்துக் கொள்கிற யத்தனம் நால்வருணங்களில் உள்ள கீழ்வருணங்களிலும், அவர்களைப் பார்த்து தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் செய்தனர். அரச ஆதரவு பெற்ற மதமாக இருந்த காரணத்தினால் சாம, தான, தண்ட, பேத முறைகளில் பிராமண மதம் தன்னுடைய சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம் அத்தனையையும் மொத்த சமூகத்துக்குள்ளும் மிகச் சுலபமாகத் திணித்து விட்டது.

இனக்குழுக்கள் தங்கள் சொந்த அடையாளங்களை இழந்து பிராமணீயத்தின் சூழ்ச்சியான சாதியப்படிநிலைகளை ஏற்றுக் கொண்டனர். உட்பிரிவுகளும் உருவாயின. இப்போது சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம் சாதியப்படிநிலைகளைத் தக்க வைத்துக் கொள்ளவும், , ஒவ்வொரு சாதியும் தங்களுக்குக் கீழ் உள்ள சாதியின் மீதான தங்களது மேலாண்மையை உறுதிப்படுத்திக் கொள்ளவுமான நினைவூட்டலாக மாறி விட்டது. அந்தந்தச் சாதியினர் தங்களது எல்லைகளைத் தாண்டாமல் பார்த்துக் கொள்கிற ஏற்பாடாகவும் ஆகி விட்டது. அப்படியே ஏதேனும் மீறல்கள் நடந்தால் அதை அரசின் ஆதரவோடு அடக்கி ஒடுக்கவும் தயாராக மேல்நிலையிலுள்ள உள்ள சாதியினர் தயாராகின்றனர். சாதியப்படி நிலையில் உள்ள தங்களது நிலையை மனதார ஏற்றுக் கொள்ளவே சமய இலக்கியங்கள் புனையப்பட்டு திரும்பத் திரும்ப பாராயாணம் செய்யப்பட்டு, மக்கள் மனதின் ஒப்புதலைப் பெற்றுள்ளனர். எனவே சாதியைப் பற்றி யார் பேசினாலும், யாரிடமும் என்ன சாதி என்று கேட்டாலும் அதைக் கேவலமானதாக கேட்பவரும் நினைப்பதில்லை.பதில் சொல்பவரும் நினைப்பதில்லை. விஷவிருட்சமாய் வேரோடிப் போயிருக்கும் இந்தச் சாதிய மனநிலைகளையும், அதைக் காப்பாற்றும் சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயங்களையும் வேரோடு வெட்டியெறிய ஜோதிபா பூலேவையும், அம்பேத்காரையும், பெரியாரையும் தவிர வேறு யாரும் தீவிரமாக முயற்சித்ததாகத் தெரியவில்லை. சமூகசீர்திருத்தவாதிகள் இந்து சமயத்தோடு சமரசமுயற்சியே செய்தனர். அவர்கள் சாஸ்திர, சடங்கு, சம்பிரதாயங்களை எதிர்த்த போதும் அவற்றின் உயிரான மனுதர்மசாஸ்திரத்தை எதிர்ப்பதற்கான வேலைத் திட்டம் அவர்களிடம் இல்லை. அது மட்டுமல்ல சூழ்ச்சித் திறன் மிக்க பிராமண மதம் எல்லா சமயச்சீர்திருத்தவாதிகளையும் உட்கிரகித்துக் கொண்டு தன்னைச் செழுமைப் படுத்திக் கொள்ளும் ஆற்றல் மிக்கதாக மாறிக் கொண்டேயிருக்கிறது.k.n.panikkar

முன்னெப்போதையும் விட இப்போது அடையாள அரசியலின் எழுச்சி காரணமாக எல்லாச்சாதிகளும் தங்கள் சாதிய அடையாளங்களை உயர்த்திப் பிடிக்கவும், சாதியப்பெருமைகளைப் பேசவும், தங்கள் குடும்ப விழாக்களிலும், கோவில் விழாக்களிலும், பண்பாட்டு நிகழ்வுகளிலும் சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம் ஆகியவற்றை மீளுருவாக்கம் செய்கிற நிலைமையைக் காணலாம். பிராமணமதம் மீண்டும் ஒரு முறை தன்னை மறுமலர்ச்சி அடையச் செய்து கொண்டுள்ளது. சாஸ்திர, சம்பிரதாய , சடங்குகளின் உயிராக பிராமண மதம் இருக்கிறதென்றால் அதன் உடலாக சாதிகள் இருக்கின்றன, அவைகளே பண்பாட்டுச்சூழலைத் தீர்மானிக்கின்றன. கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறது. பிரதோஷம், அஷ்டமி, நவமி, என மைல் கணக்கில் கூட்டம் கோவில்களில் கியூவரிசையில் நின்று கொண்டிருக்கிறது. மக்கள் எல்லாக்கோவில்கள் மீதும் படையெடுக்கிறார்கள். முன்னெப்போதையும் விட சாமியார்கள், ஜோசியர்கள், கடல்மணலைப் போலப் பெருகியிருக்கிறார்கள். எந்த எதிர்ப்பும் இல்லாமல் ராஜபாட்டையில் நடைபோட்டுக் கொண்டிருக்கின்றன சாதிய, மத வாத சக்திகள். இதையெல்லாம் எதிர்த்து மிகப்பெரும் போரை நடத்த வேண்டிய இடது சாரிகள், பெரியாரியவாதிகள், அம்பேத்காரியவாதிகளிடம் எந்த செயல் திட்டமும் இல்லை. அதனால் அந்தந்த அமைப்புகளுக்குள்ளேயே சாதிய, மத, சடங்கு சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களோடு சமரசம் செய்யும் போக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்குக் காரணம் பண்பாட்டுச் சூழல் குறித்து போதிய கவனமின்மை தான். இதனால் குடிமைச்சமூகத்தைக் கைப்பற்றுவதற்கு அடுத்த இருபது முப்பது ஆண்டுகளுக்கான திட்டத்தை மதவாத சக்திகள் உருவாக்கியிருக்கிற போதும் அடுத்த ஆண்டுக்கான திட்டமே இல்லாமல் இடதுசாரிகள் இருப்பது கவலைக்குரியது.

முன்னெப்போதையும் விட நமது பண்பாட்டுச் சூழல் உலகமயம், சநாதனமயம் என்று இரண்டு பக்கங்களிலிருந்தும் தாக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. முதலாளித்துவம் தன்னுடைய உச்சக்கட்ட சுரண்டலான உலகமயமாக்கலின் மூலம் எல்லாநாடுகளிலிருந்தும் பொருள்வளத்தைச் சுரண்டுவது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிக்கிற வேலையைச் செய்கிறது. அந்தந்த நாட்டு மக்களின் தனித்துவமிக்க, பன்முகக்கலாச்சாரத்தை தன் பகாசுர சக்தியினால் ஒடுக்கிவிட முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அதே நேரம் இந்த மேற்கத்திய உலகமயமாக்கலின் கலாச்சாரச்சீரழிவுகளை எதிர்ப்பதான பாவனையில் சநாதனமும், பழமைவாதமும் தங்களைப் புணருத்தாரணம் செய்து கொண்டிருக்கின்றன. உலகமயமாக்கலின் விளைவுகளினால் வாழ்வின் ஆதாரங்களை இழந்து கொண்டிருக்கும் பெரும்பான்மை மக்களை, அதே உலகமயமாக்கலின் விளவுகளினால் தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொண்டிருக்கும் சிறுபான்மை மக்களும், மதவாதசக்திகளும் சநாதனத்தின் பக்கம் திசை திருப்புகிறார்கள், இதனால் தங்கள் வாழ்வைப் பறித்தவர்களைப் பற்றியோ, காரணங்கள் பற்றியோ அவர்கள் அறியாமல் பழமையை மீட்டெடுக்கும் சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயங்களை உயர்த்திப் பிடிக்கிறார்கள்.

இத்தகையச் சூழலில் இடதுசாரிகளின் வேலை இன்னும் கடினமாகிறது. அரசியல் ரீதியில் முற்போக்காகவும், பண்பாட்டு ரீதியில் பிற்போக்காகவும் இடதுசாரி அமைப்புகளின் ஊழியர்களே ஆகி விடுகிற நிலைமை உருவாகிவிடுகிறது. இதற்கு புதிய முற்போக்குப் பண்பாட்டுத் தளத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடமே காரணம்.வரலாற்றறிஞர் கே. என். பணிக்கர் சொல்வதைப் போல,

“ முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் அரசியல்-பண்பாடு இரண்டுமே சமநிலையில் இயங்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக நான் கருதுகிறேன். பண்பாட்டுச் செயல்பாடுகள் மீது அரசியல் செயல்பாடுகள் ஆதிக்கம் செலுத்துமானால் பண்பாட்டின் மீது அரசியல் ஒரு சர்வாதிகாரத்தைச் செலுத்துமானால் சில முன்னாள் சோசலிச நாடுகளில் அப்படித்தான் நடந்தது என்பதை இங்கே நாம் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்- பண்பாட்டு இயக்கத்தால் ஆக்கபூர்வமான விளைவுகளை ஏற்படுத்த இயலாமல், தனது வரலாற்றுப் பங்களிப்பைச் செய்ய இயலாமல் போய் விடும் “

உடனடியாக பண்பாட்டுத்தளத்தில் ஏகாதிபத்தியத்தின், சாதி மத வாதத்தின் பண்பாட்டுத் தாக்குதல்களை எதிர்கொள்ளவும், மக்களிடையே விமர்சனக்கண்ணோட்டத்தை வளர்க்கவும், புதிய முற்போக்கு பண்பாட்டுத் தளங்களையும் உருவாக்க வேண்டிய கடமை நமக்கு முன்னால் இருக்கிறது.

நன்றி - தீக்கதிர்