Showing posts with label சமயம். Show all posts
Showing posts with label சமயம். Show all posts

Friday, 24 August 2012

தீண்டாமையின் அர்த்தவிநோதங்கள்

 an_untitled_portrait_modern_art  

உதயசங்கர்

 

தீண்டாமை என்ற சொல் அதனுடைய எதிர்வான தீண்டுதலையும் உள்ளடக்கியே இருக்கிறது. அதே போல பருப்பொருளாகத் தீண்டப்பட முடியாதவையெல்லாம் தீண்டாமை என்ற அர்த்தத்துக்குள் அடங்குவதுமில்லை. உதாரணமாக வெளி, காலம், போன்ற கருத்துருக்களும் அன்பு, காதல், போன்ற குணநலன்களும் பருண்மையாகத் தீண்டப்பட முடியாதாவை. சமூகத்தின் விதிமுறைகளின் படி எதிர்பாலினத்தை, ஆண் பெண்ணையோ, பெண் ஆணையோ திருமணச்சடங்குகளின்றி தீண்ட முடியாது. அதே போல அடுத்தவர் மனைவியையோ, கணவனையோ சமூகக்கட்டுப்பாட்டின் படி தீண்ட முடியாது. ஆனால் இவையெல்லாம் தீண்டாமை என்ற அர்த்தத்துக்குள் வருவதில்லை. ஆக தீண்டாமையும் அதன் எதிர்வான தீண்டுதலும் வேறொரு எதிரிணைவையும் கொண்டு வருகிறது. சுத்தம் எதிர்வு அசுத்தம், அல்லது தூய்மை எதிர்வு தூய்மையின்மை என்ற சொல்லாடலையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

தீட்டு தூய்மையின்மையையும் அதைக் கழிக்கும் சடங்கு தூய்மையையும் பிரதிநிதித்துவப்படுத்துவால் தற்காலிகத் தீண்டாமையாகத் தீட்டைக் கருதுகிறார்கள். தீட்டுச் சடங்கு முடிந்த பிறகு குளித்து உடலைத் தூய்மை செய்த பின்னர் அந்தத் தற்காலிகத் தீண்டாமை மறைந்து விடுகிறது. அந்தச் சடங்கைச் செய்யும் பிராமணரும் அந்தச் சடங்கு முடிந்த பின்னர் அந்த வீட்டிலிருந்த தீட்டை ஏற்றுக் கொண்டு அவரும் தீட்டாகி விடுகிறார். அவரும் குளித்த பிறகே தற்காலிகத் தீண்டாமையிலிருந்து விடுவிக்கப்படுகிறார். வருணாசிரமப் படிநிலையிலிருக்கும் அனைத்துச் சாதியினரும் இந்தத் தற்காலிகத் தீண்டாமைக்கு ஆளாகின்றனர். தூய்மை, தூய்மையின்மை, என்ற கருத்தாக்கங்களின் வழி ஆன்மிக அதிகாரத்திலிருக்கும் பிராமணியம் இந்தத் தற்காலிகத் தீண்டாமையை எல்லோருக்கும் விதிக்கிறது.

எனவே தீண்டாமை என்பது பிராமணியத்தின் அடிப்படையாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பிராமணியம் தன்னுடைய அடிப்படைப் பண்பான தீண்டாமையை அனைத்து சாதியினரையும் பின்பற்ற வைத்ததில் பெற்ற வெற்றியே இன்று வரை பிராமணியத்தை ஆன்மீக அதிகாரத்தில் வீற்றிருக்க வைத்திருக்கிறது. தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் தீண்டாமையை வாழ்வின் ஆதார நிகழ்வுகளுடன் பிறப்பு, இறப்பு, திருமணம், எல்லாவற்றுடனும் இணைத்து என்றென்றும் தன் நிலையை அசையாமல் இருக்க வழி வகை செய்துள்ளது. இதற்குள் இருக்கும் பொருளாதாரப்படிநிலையினையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். உழைக்கும் வர்க்கமான தலித்துகளை நிரந்தரத்தீண்டாமை நிலையில் வைப்பதன் மூலமும், அதற்கான அங்கீகாரத்தை மற்றெல்லாசாதியினரிடமிருந்தும் பெறுவதன் மூலமும் முடிவில்லாத உழைப்புச் சுரண்டலை பிராமணியம் உத்தரவாதப்படுத்தியிருக்கிறது. அசுத்தமான (?) வேலைகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட தலித்துகளை அந்த வேலைகளைக் காட்டியே தீண்டத் தகாதவர்களாக மாற்றியிருப்பது என்பது பிராமணியத் தந்திரமன்றி வேறென்ன? இதற்கான ஒப்புதலை மற்ற சாதியினரிடமிருந்து பெறுவதற்காகவே தீட்டு என்ற தற்காலிகத் தீண்டாமை என்று கருத இடமுண்டு. ஏனெனில் அசுத்தத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தி விட்டால் தீட்டு கழிந்து எல்லாப்பொருட்களையும், எல்லாமனிதர்களையும் தீண்ட முடியும் என்ற கருத்தியலையும் நடைமுறைப்படுத்தியதால், தற்காலிகமான தூய்மையின்மையை சடங்குகளின் மூலம் உடனடியாகத் தூய்மைப்படுத்தி விடலாம், ஆனால் நிரந்தமான தூய்மையின்மையை எந்தச் சடங்கின் மூலமும் தூய்மைப்படுத்த முடியாது. உண்மையில் அப்படி எந்தச் சடங்கும் தீண்டத்தகாதவர்களுக்கு இல்லை. எனவே அவர்கள் நிரந்தரமாகத் தீண்டத்தகாதவர்கள். தர்க்கபூர்வமாக எல்லா சாதியினரும் இந்தக் கருத்தியலுக்கு வந்து சேரும் வகையில் மனுதர்மசாஸ்திரத்தைக் கட்டமைத்திருக்கிறது.

சாதியப்படிநிலையில் கீழ்நிலையில் இருக்கும் தலித்துகளைப் போல சாதியப்படிநிலையில் மேல் நிலையில் இருக்கும் பிராமணரும் தீண்டத்தகாதவரே. அவரும் பிற சாதியினரைத் தீண்ட முடியாது. பிற சாதியினரும் அவரைத் தீண்ட முடியாது. அப்படி யாரையேனும் அவர் தீண்டி விட்டாலோ, அல்லது அவரை யாரேனும் தீண்டி விட்டாலோ அவர் தீட்டாகி விடுகிறார். அவர் குளித்தபிறகே அவருடைய மடி நீங்குகிறது. ஆனால் அவரைத் தீண்டியவர்கள் தீட்டாவதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். அவர்கள் குளித்து தீட்டைக் கழிக்க வேண்டியதில்லை. இது அப்படியே தலைகீழாக தலித்துகளிடம் நிகழ்கிறது. தீண்டத்தகாதவர் மற்றவர்களைத் தொட்டு விட்டாலோ அல்லது மற்றவர்கள் அவர்களைத் தொட்டு விட்டாலோ தீண்டத்தகாதவர் தீட்டாவதில்லை. அவர்கள் குளித்து மற்றவர்கள் தீண்டிய தீட்டைக் கழிப்பதில்லை. ஆனால் அவரைத் தொட்டவர்கள் அல்லது அவரால் தொடப்பட்டவர்கள் தீட்டாகி விடுகிறார்கள். அவர்கள் குளித்து தங்களுடைய தீட்டைக் கழிக்கிறார்கள். இரண்டு நிலைகளில் இருக்கும் தீண்டத்தகாதவர்களில் எவ்வளவு மாறுபாடு? மேல்நிலையிலுள்ள பிராமணர் தீண்டத்தகாதவரேயாயினும் அவர் தீண்டியதற்காக அல்லது அவரைத் தீண்டியதற்காக மற்றவர்கள் குளிப்பதில்லை. ஆனால் அவர் குளிக்கிறார். அதே போல கீழ்நிலையில் வைக்கப்பட்ட தீண்டத்தகாதவர் மற்றவர்களைத் தீண்டியதற்காகவோ, அல்லது தீண்டப்பட்டதற்காகவோ அவர் குளிப்பதில்லை, ஆனால் மற்றவர்கள் குளிக்கிறார்கள். ஏனெனில் மேல்நிலையில் உள்ள தீண்டத்தகாதவரிடம் ( பிராமணரிடம் ) ஆன்மீக அதிகாரம் இருக்கிறது. எனவே அவர் தீண்டத்தகாதவராக இருப்பதற்காக பெருமைப்படுகிறார். மற்றவர்களையும் அவர் தீண்டத்தகாதவராக இருப்பதற்காகப் பெருமைப்பட வைக்கிறார். ஆனால் கீழ்நிலையில் உள்ள தீண்டத்தகாதவரிடம் இழிவும் அவமானமும் மட்டுமே இருக்கின்றன.

ஆக ஒரே செயலை முற்றிலும் வேறுபட்ட இரண்டு எதிர்நிலைகளில் செயல்பட வைப்பதில் பிராமணியமும், மனுதர்மமும் வெற்றி பெற்றிருக்கின்றன. தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்றால் நாம் கேள்வி முறையின்றி கடைப்பிடித்து வரும் சடங்குகளை ஒழிக்க வேண்டும். மனுதர்மசாஸ்திரத்தை ஒழிக்க வேண்டும். பிராமணியத்தை ஒழிக்க வேண்டும். அப்போது தான் முழுமையான மனித விடுதலை சாத்தியமாகும்.

DSC01492

Tuesday, 21 August 2012

தீட்டு, தீண்டாமை, விலக்குதல்…….

 

உதயசங்கர்

Mohan Das (99)

இந்திய சமூகத்தின் நடைமுறை வாழ்வில், தீட்டு, தீண்டாமை, விலக்குதல், இந்த மூன்று செயல்களும் மிக முக்கியமானவையாகக் கடைப்பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எந்தக் கேள்வியுமின்றி, எந்த விமர்சனப்பார்வையுமின்றி இவற்றை மக்கள் மனதார ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இதை பண்பாட்டு விழுமியங்களாக, பாரம்பரிய உன்னதங்களாகக் கருதுபவர்களும் இருக்கிறார்கள். அதனால் தான் சாதாரண மக்களே,

“ அதுக்காக நம்ம பாரம்பரியத்தை, பழக்க வழக்கத்தை சம்பிரதாயத்தை விட்டுர முடியுமா? “

“ தீட்டுக் கழியாம எங்கேயும் போகக் கூடாது..”

“ அதைத் தொடாதே.. தீட்டாயிரும்..”

என்று சொல்வதைக் கேட்க முடிகிறது. அது மட்டுமல்ல. ஜனநாயகஎண்ணம் கொண்டவர்களுக்குக் கூட இந்த கொடிய நடைமுறைகள் கண்ணை உறுத்துவதில்லை. அநுதாபமும், பரிதாபமும், உதவியும் செய்தால் போதுமானது என்ற சிந்தனை வருகிறது. ஒட்டு மொத்தமாக இந்த நடைமுறைகளை ஒழிப்பதற்கான செயல் திட்டம் பண்பாட்டுத் தளத்தில் துவங்கப்பட வேண்டியிருக்கிறது. அதற்கு முதலில் பிராமணியமும், மனுதர்மமும் எப்படி தீட்டை, தீண்டாமையை, விலக்குதலை, மக்கள் மனதில் தந்திரமாகப் புகுத்தியது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இவற்றின் உள்ளார்ந்த தத்துவம் என்ன? என்பதையும் அந்தத் தத்துவத்தின் நடைமுறைகள் என்ன? என்பதைக் குறித்தும் புரிந்து கொண்டால் தான் பண்பாட்டுத் தளத்தில் அதை எதிர் கொள்வதற்கான புதிய பண்பாட்டு ஆயுதங்களை உருவாக்கமுடியும்.

விலக்குதல், தீட்டு, தீண்டாமை, என்ற வார்த்தைகள் மேலோட்டமாகப் பார்க்க ஒரே அர்த்தமுள்ளவை போலத் தோன்றினாலும் அடிப்படையில் மிக ஆழமான வேறுபாடுகளைக் கொண்டவை. பெரும்பாலும் தங்களுடைய தொடர்பெல்லைக்கு வெளியே நிறுத்துதல் என்ற அளவில் இந்த மூன்று செயல்களும் ஒரே மாதிரியான அர்த்தம் தருவதாகக் கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் அடிப்படை வாழ்வாதாரமான உடல், உணவு, உடை, உறைவிடம், தான். ஆனால் விலக்குதலும், தீட்டும், தற்காலிகமானவை. நடைமுறையில் எல்லோர் வாழ்விலும் இந்தத் தீட்டும், விலக்குதலும், அவர்களுடைய வாழ்வனுபங்களூடாக நடக்கின்றன. தலித்துகள் உட்பட எல்லோரும் இதைக் கடைப்பிடிக்கின்றனர்.

விலக்குதலை மிகச் சாதாரணமாக, சுய காரணங்களாக, எனக்குக் கத்தரிக்காய் பிடிக்காது, எனக்கு முட்டை பிடிக்காது, சாப்பிட்டால் ஒவ்வாமை வந்து விடும். உடல் நலம் கெட்டுவிடும் அவரைப் பிடிக்காது, இவரைப்பிடிக்காது பச்சை நிறம் பிடிக்காது இன்ன பிற விஷயங்களைச் சொல்லலாமென்றால் சமூகக் காரணங்களாக ஊர் விலக்கம், சாதி விலக்கம், வீட்டு விலக்கம் என்று சொல்லலாம். சுயகாரணங்கள் ஒவ்வொரு தனிநபரைப் பொறுத்தும் மாறிக் கொண்டேயிருக்கும். ஒவ்வொருவருடைய விருப்பு வெறுப்புகளைப் பொறுத்தும் வேறு வேறு பொருட்கள், வேறு வேறு நபர்கள், வேறு வேறு விஷயங்கள் என்று மாறிக் கொண்டேயிருக்கும். அதே போல சாதி விலக்கம், ஊர் விலக்கம், வீட்டு விலக்கமும் ஒரு இனக்குழு அல்லது சாதியின் எழுதப்படாத விதிமுறைகளைப் பின்பற்றாததற்கான தண்டனையாக அந்த இனக்குழு அல்லது சாதியின் கூட்டுச் சமூகம் எடுக்கிற முடிவுப்படி ஒரு தனி நபர் அல்லது ஒரு குடும்பம் அந்த இனக்குழு அல்லது சாதியிலிருந்து விலக்கப்படும். ஆனால் இதில் மிக முக்கியமான விஷயம் விலக்கப்பட்ட அந்தத் தனிநபர் அல்லது குடும்பம் மீண்டும் அந்த இனக்குழு அல்லது சாதியில் மீண்டும் சேருவதற்குப் பரிகாரம் உண்டு. அதை அந்த இனக்குழு அல்லது சாதியின் கூட்டுச் சமூகமே பரிகாரத்தைச் சொல்லிவிடும். பரிகாரம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இதே மாதிரி தான் ஊர் விலக்கமும், வீட்டு விலக்கமும். இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் விலக்குதலுக்கு பரிகாரம் இருக்கிறது என்பதும் அதைச் செய்தால் மீண்டும் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்பது தான். விலக்குதல் சேர்த்தலையும் இணைத்தபடியே தான் வருகிறது. இதையும் தீண்டாமை என்று சொல்லலாமென்றால் அது தற்காலிகமானது என்பது மட்டுமல்ல அதில் தீண்டுதலுக்கான நடைமுறையும் இருக்கிறது.

மனிதனின் பிறப்பு, இறப்பு, பூப்படைதல், பெண்களின் மாதவிடாய் நாட்கள், போன்றவற்றை தீட்டாக கற்பித்து வந்திருக்கிறார்கள். இதெல்லாவற்றுக்கும் அசுத்தம் எதிர்வு தூய்மை என்ற கருதுகோளை முன்வைத்தும், அசுத்தமான இடங்களில் தான் ஆவிகள் நடமாடும் என்ற கற்பிதத்தின் அடிப்படையிலும் தீட்டைக் கடைப்பிடிக்கிறார்கள். குழந்தை பிறந்த வீடென்றால் பதினாறு நாட்கள் கழித்து தாயையும், குழந்தையும் வீட்டோடு சேர்க்க ‘ வீடு சேர்த்தல் ‘ என்ற சடங்கை நிகழ்த்துகிறார்கள். அன்றிலிருந்து வீட்டுக்குள் தாயும் குழந்தையும் சேர்க்கப்பட்டு அன்றாட நடைமுறை வாழ்வில் இணைகிறார்கள். அவர்கள் இப்போது வெளியே வரலாம். எல்லோருடனும் கலந்து பழகலாம். அது வரை அவர்கள் தீட்டானவர்கள். தீண்டத்தகாதவர்கள். ஆக பிள்ளை பிறந்தவீட்டுத் தீட்டு ஒரு சடங்கின் ( பரிகாரம் ) மூலம் கழிக்கப்படுகிறது.

பெண் பூப்படைதலும் தீட்டு. அவளைத் தனியே வீட்டு முற்றத்திலோ, தனிக்குடிலிலோ, தனிமைப்படுத்தி வெளியுலகிலிருந்து விலக்கி வைத்து, தலைக்குத் தண்ணீர் ஊற்றினாலும், புண்ணியார்த்தனம் என்ற சடங்கை ( பரிகாரம் ) ஒரு பிராமணர் வந்து செய்த பிறகே அந்தத் தீட்டு கழிகிறது. தீட்டுக் கழிந்த பின்னே அந்தப்பெண் வெளியுலகோடு கலந்து பழகலாம். அது வரை இருந்த தற்காலிகத் தீண்டாமை மாறி தீண்டுதலுக்கான நடைமுறை வந்து விடுகிறது. அதன் பிறகும் அது தொடர்கிறது என்பது பெரிய கொடுமை. ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நாட்களில் பெண் தனிமைப்படுத்தப் படுவதும், மூன்று நாட்களோ ஐந்து நாட்களோ கழிந்து அவள் குளித்தபிறகு தான் வீட்டுக்குள் மற்ற பொருட்களைத் தீண்ட அநுமதிக்கப்படுவாள். அது வரை அவளுக்குத் தனித் தட்டு, தம்ளர், படுக்கை, உடை, உறைவிடம். வயதாகி மாதவிடாய் நிற்கும்வரை அந்தப் பெண் இந்தத் தற்காலிகத் தீண்டாமையிலிருந்து தப்பமுடியாது. ( இப்போது நகரங்களில் நவீன வாழ்வின் பல காரணிகளால் இந்தப் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது ) இங்கேயும் தீண்டாமை தற்காலிகமானது. தீண்டப்படுவதற்கான பரிகாரத்தையும் கொண்டிருக்கிறது.

இறப்பு வீட்டிலும் பதினாறாவது நாள் விஷேசம் முடியும் வரை அந்த வீடும் அந்த வீட்டிலுள்ள உறுப்பினர்களும் தீட்டாகவேக் கருதப்படுகிறார்கள். கருமாதி விஷேசம் ( பரிகாரம்) முடிந்ததும் அந்த வீடும், வீட்டிலுள்ளவர்களும் தீட்டுக் கழிந்தவர்களாகி விடுகிறார்கள். அதன் பிறகு அவர்கள் மற்றவர்களைத் தீண்டுவதோ மற்றவர்கள் அவர்களைத் தீண்டுவதோ தீட்டாகாது. இதுவும் தற்காலிகமான தீண்டாமை தான்.

மேலே குறிப்பிட்ட தீட்டு குறித்த முக்கியமான நிகழ்வுகளில் தற்காலிக தீட்டினால் விலக்கப்பட்ட மனிதர்களை, பொருட்களை, தீட்டு கழியுமுன்பே தீண்டிவிட்டால் தீண்டியவர் தன்னுடைய உடலைக் கழுவிச்( குளித்து) சுத்தம் செய்வதன் மூலம் உடனே அந்தத் தீட்டைக் கழித்து விடலாம். தீட்டினால் விலக்கப்பட்டவர்கள் தான் தீட்டு கழிவதற்காகக் குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து சடங்கு நடத்திய பின்பே மற்றவர்களைத் தீண்ட முடியும். ஆனால் மற்றவர்களுக்கு அது தேவையில்லை. தீட்டுக்காரரைத் தொட்ட தீட்டை குளித்தால் போக்கி விடலாம். தீட்டு நிகழ்வுகள் நடைபெற்ற வீட்டுக்காரர்கள் சில நாட்கள் தீண்டத் தகாதவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அவர்களைத் தீண்டியவர்கள் சிறிது நேரத்துக்கு தீண்டத் தகாதவர்களாக இருந்து உடனே குளித்து தன் தீண்டாமையைப் போக்கிக் கொள்ளலாம்.

இப்படிச் சில நாட்கள், சிறிது நேரம் தீண்டத் தகாதவர்களாக, மற்றவர்களிடமிருந்து விலக்கப்பட்டவர்கள், விலக்கப்பட்ட பொருட்கள், விலக்கப்பட்ட இடம், சில சடங்குகளைச் செய்வதன் மூலம் மீண்டும் தீண்டத்தக்கவர்களாக மாறுகிறார்கள். இப்படி தன் வாழ்நாள் முழுவதும் பிறப்பு, சாவு, பூப்படைதல், மாதவிடாய் காலம், என்று மாறி மாறி தற்காலிகமாகத் தீண்டத்தகாதவர்களாகவும், பரிகாரங்களுக்குப்பின் தீண்டத்தக்கவர்களாகவும் நிலை மாறிக் கொண்டேயிருக்க வைப்பதன் மூலம் பிராமணியம் தீண்டாமை என்ற வருணாசிரமத்தின் இழிவான நடைமுறையை எல்லோரையும் பின்பற்ற வைத்துள்ளது. இது தான் பிராமணியத்தின் இழிவான தந்திரம்.

நடைமுறையில் எல்லாசாதியினரும் தங்கள் வாழ்நாளில் சில காலம் தீட்டினால் தீண்டத் தகாதவர்களாக இருப்பதனால் தீண்டாமைக்கு அவர்களுடைய மனம் வசமாகிவிட்டது. அதை இயல்பாகப் பார்க்கும் மனநிலை உருவாகிறது. சாதியப்படிநிலையை ஏற்றுக் கொள்ள வைத்ததன் மூலம் வருணாசிரமப்படிநிலையில் கீழ் நிலையில் இருக்கும் தலித்துகளை தீண்டத்தகாதவர்களாக வைத்திருப்பதை எந்தக் கேள்வியும் இன்றி உறுதிப்படுத்தும் நடைமுறை உருவாகிறது. தலித் மக்களின் எழுச்சியை, விழிப்புணர்வைச் சகிக்க முடியாத மனநிலை பிராமணியத்தால் சமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இந்தச் சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயம், தீட்டு எல்லாம் பயன்படுகிறது. பண்பாட்டுத் தளத்தில் முற்போக்கு எண்ணம் கொண்ட எல்லோரும் குறிப்பாக இடது சாரிகள் இந்தச் சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயங்களுக்கு எதிராக சமரசமில்லாத யுத்தம் தொடுக்க வேண்டிய காலம் இது.

புகைப்படம் – மோகன்தாஸ் வடகரா

Tuesday, 7 August 2012

இறப்புச் சடங்குகளின் பின்னால்..

 

உதயசங்கர்

imagesCAUS9Z8Z

ஒவ்வொரு மனிதனின் பிறப்பிலிருந்தே சடங்குகள் தொடங்கி விடுகின்றன. ஆதி இனக்குழுச் சமூகத்தில் கருக்கொண்ட இந்த சடங்கியல் முறைகள் தாங்கள் அறியாத இயற்கையின் மர்மங்களை விளங்கிக் கொள்ளும் முயற்சியாகவும், இயற்கையைச் சாந்தப்படுத்துகிற முயற்சியாகவும், உற்பத்தி, வளமைக்கான வேண்டுதலாகவும், பிரார்த்தனையாகவும், கொண்டாட்டமாகவும் உருவாகி நிலை பெற்றிருக்கின்றன. இந்த முயற்சிகளை வேறு குறியீடுகளினால் பிரதிநிதித்துவம் செய்து மொழியின் மூலம் மந்திரங்களாகவும், சாங்கியம் என்று சொல்லப் படுகிற செய்முறைகளில் உருவாக்கப்படும் விசித்திரமான , குழந்தைத்தனமான, அகவயமான செயல்களே தொன்மங்களாகின்றன. இந்தத் தொன்மங்கள் என்பவை ஆதி மனிதன் இந்த உலகைப் புரிந்து கொண்ட விதத்தைக் குறிக்கும் உருவகங்களே. அதனால் இது கலையோடு நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது. இவற்றில் தர்க்கஞானத்தை புகுத்த முடியாது. உணர்வுநிலையில் மட்டுமே இயங்கக் கூடியது. திரும்பத் திரும்ப ஒலிக்கப்படும் ஒரே மாதிரியான ஒலிக்குறிப்புகளும் அதன் விசித்திரமான சூழலும் அதைச் செய்கிறவரின் வித்தியாசமான உடல்மொழியும் அதில் ஈடுபடுகிற சாதாரண மக்களின் மனதில் ஒரு உளவியல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தங்கள் கோரிக்கைகள், வேண்டுதல்கள், கேட்கப்பட்டு விட்டதாக, அல்லது சாந்தியடைந்து விட்டதாக மனதில் ஒரு திருப்தி ஏற்படுகிறது. இனி கேடுகள் எதுவும் வராது என்று மனம் நம்புகிறது. அந்த நம்பிக்கையே வாழ்வை மேலே அடுத்தடுத்து கொண்டு செலுத்த உதவுகிறது.

ஆதி மனித உணர்வுகளை சடங்கியல்களை இறுகிய வடிவமாக நிறுவனமயமாக்கப்படும் சமயம் மாற்றுகிறது. அது மட்டுமல்லாமல் அந்தச் சடங்குகளைச் செய்ய உளவியல் ரீதியான நிர்ப்பந்தமும் கொடுக்கிறது. சமயத்தின் நடைமுறைகளையும், தெய்வீகக்கதைகளையும் புகுத்தி மக்கள் மனதை வசப்படுத்துகிறது. மக்களை கட்டாயப்படுத்துகிறது. இந்த நடைமுறைகளிலும், புராணக்கதையாடல்களிலும் சமயத்தின் தத்துவக்கூறுகளை நிலை நிறுத்தி சமூகத்தில் தன்னையும், சமூக உற்பத்தி முறையையும் உறுதிப்படுத்துகிறது. உற்பத்திமுறைகள் மாற, மாற சமயம் அதற்கேற்ப விஞ்ஞான விளக்கங்களையும் கொடுத்துக் கொள்கிறது. இதன் மூலம் மக்கள் மனதில் எந்த விதமான சந்தேகங்களோ, கேள்விகளோ வரவிடாமல் சமயம் பார்த்துக் கொள்கிறது.

இயற்கையில் எல்லாப்பொருட்களும் மாற்றத்துக்குரியது. மாற்றம் ஒன்றே மாறாதது. பிறப்பு, இறப்பு இயற்கையானது. ஆனால் இயற்கையின் மற்ற உயிரினங்களை விட மேலான அறிவை தன் உழைப்பின் மூலம் பெற்ற மனிதனுக்கு பிறப்பும் இறப்பும் புதிராகவே இருந்தது. எப்படி ஒரு உயிர் உருவாகிறது என்று தெரியாமலிருந்ததைப் போலவே எப்படி ஒரு உயிர் இறக்கிறதென்றும் தெரியவில்லை. தன்னுடனே வாழ்ந்து கொண்டிருந்த ஒருவனை இனி எவ்வப்போதும் காணமுடியாது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் வேறு ஒரு உலகத்தில் வாழப் போகிறான் என்று உருவகிப்பதன் மூலம் மனம் சாந்தியடைந்தது. எனவே சாவுச் சடங்குகளில் இம்மை, மறுமை கருத்தாக்கங்கள் உருவாகின்றன. இந்த பூலோகத்தை விட்டு மேலோகம் செல்வதாக கற்பனை விரிகிறது. எனவே தான் இறந்தவரை நீர்மாலை எடுத்து ( நீர் நிறைந்த கும்பம் செழிப்பின் அடையாளம் ) குளிப்பாட்டி, புத்தாடை உடுத்தி, சந்தனம், குங்குமம், இட்டு உணவு கொடுத்து ( வாய்க்கரிசி ) போகும் வழிச்செலவுக்கு நாணயமும் நெற்றியில் ஒட்டி, பூம்பல்லக்கில் வைத்து அனுப்புகிற விதமாய் சடங்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதே போல அந்தக் காலத்தில் நெருப்பைக் காப்பாற்றி சுடுகாடு வரை கொண்டு செல்வது மிகவும் கடினமான காரியமாக இருந்ததனால் கொள்ளிச்சட்டி என்று எப்போதும் நெருப்பெரியும் மண்கலயத்தைத் தூக்கிச் செல்லும் வழக்கம் உருவானது.

சுடுகாட்டில் நீர் நிறைந்த மண்குடத்தைத் தூக்கிக் கொண்டு இறந்தவரின் உடலைச் மூன்று முறை சுற்றி வர ஒவ்வொரு சுற்றுக்கும் நாவிதர் ஒரு ஓட்டையை அந்தக் கலயத்தில் போடுவார். மூன்று சுற்று முடிந்ததும் அந்தக் கலயத்தை உடைத்து விடுவார்கள். பண்டைய காலம் தொட்டே நீர் நிறைந்த கும்பம் செழிப்பின் அடையாளமாகக் கருதப்பட்டு வந்தது என்பதினால் இறந்தவர் போய் விட்டாலும் அந்தக் குடும்பத்தில் செழிப்பு தங்கியிருக்க வேண்டும் என்ற காரணத்தினால் இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. அது மட்டுமல்லாமல் பதினாறாவது நாள் விஷேசம் முடியும் வரை ஒரு சிறிய கும்பத்தில் மலர்களிட்டு விளக்கு முன் வைக்கும் பழக்கமும் இந்தச் செழிப்பு நம்பிக்கையில் வந்ததே.

பிராமணசாதியினருக்கு அடுத்து வந்த இடைநிலைச் சாதியினர் எரிக்கும் ( சுடுகாடு ) வழக்கமும், அதற்கடுத்த நிலையில் இருந்த சாதியினர் புதைக்கின்ற ( இடுகாடு ) வழக்கமும் கொண்டிருந்தனர். எரித்த மறுநாள் ஆற்றுகிற சடங்காக தீயாற்றுதல் நடைபெறுகிறது. எரிந்த சாம்பலை எடுத்து, தாம்பாளத்தில் வைத்து சந்தனம், பால், தேன், திருநீறு, நவதானியங்கள் ஆகியவற்றால் அபிசேகம் செய்து இறுதியில் ஒரு குச்சியினால் நிலம் வரைந்து அதில் அந்தக் குச்சியினால் உழுது நவதானியங்களை விதைத்து நீருற்றி உடனே ஒரு கொப்பும் குலையுமாக செடி ஒன்றை அந்த நிலத்தில் நட்டு வைத்து விடுவார்கள். வேளாண்சமூகம் தன்னுடைய குலம் தழைக்க இறந்தவரின் சாம்பலை தங்கள் நிலத்தில் கலந்து விடுவதின் மூலம் வளமை பெறுவதாகவும் உருவகிக்கிற போலச் செய்தல் சடங்கு முறைகள். இதில் ஆதிச் சடங்கியல் முறைகளின் கூறுகள் இருக்கின்றன. சுடுகாட்டில் இறந்தவரின் சடலம் எரிந்து கொண்டிருக்கும்போதே மொட்டை போடுவது இறந்தவரின் ஆண்வாரிசுகள், அல்லது கொள்ளி வைக்கும் பாத்தியதை உள்ள ஆண்களே. இந்தச் சடங்குகள் சாதிக்குச் சாதி சில வித்தியாசங்களுடன் நடக்கிறது. தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத சாதிகளில் அவர்களுடைய இனக்குழுவின் சடங்கியல் முறைகள் பின்பற்றப்படுகின்றன. உதாரணத்துக்கு தெலுங்கு பேசும் சாதியினர் மொட்டை போடுவதில்லை. அதற்குப் பதில் மீசையை அல்லது முன்கையில் சிறிது ரோமத்தை மழித்துக் கொள்கிறார்கள்.

இது வரையான இறப்புச் சடங்குகளில் பிராமணர்கள் தலையீடு இல்லை என்பதைக் குறித்துக் கொள்ளவேண்டும். ஐந்தாம் நாள் இறந்தவரின் பெண்பிள்ளைகள் இறந்தவருக்கு செய்யும் படையல் நிகழ்ச்சி ( கிழமை செய்தல்)  நடைபெறுகிறது. நவதானியங்களை அவித்து சிறுபண்டங்களைச் செய்து, இறந்தவருக்கு விருப்பமான பண்டத்தையும் செய்து விளக்கு முன் படைத்து கும்பிடுகிறார்கள். அதற்கு முன் வீட்டு வாசலில் நின்று இறந்தவர் கைலாயமும், வைகுந்தமும் போவதற்கு பெண்கள் தலைமுடியை விரித்துப் போட்டு நெஞ்சிலடித்துக் கொண்டு பாடுகிறார்கள். ஒரு வேளை இறந்தவரின் ஆத்மா பந்தபாசம் காரணமாக அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தால் அதை வழியனுப்புகிற ஒரு சடங்காகவே இது இருக்கிறது.

” கைலாயம் உங்களுக்கு

கத்தரிக்காய் எங்களுக்கு

வைகுந்தம் உங்களுக்கு

வழுதனங்காய் எங்களுக்கு “

என்கிற மாதிரி இந்த உலக வாழ்க்கையை விட்டு விடைபெறச் சொல்லி பாடுகிறார்கள்.

பிறகு இறந்தவரின் வீடு தீட்டாகக் கருதப்படுகிறது. பதினாறாவது நாள் விஷேசம் நடத்தும்வரை துட்டி கேட்கப்போகிறவர்கள் கேட்டுவிட்டு வந்ததும் தீட்டைக் கழிக்க குளிக்கிறார்கள். பதினாறாவது நாள் விஷேசத்துக்கு பிராமணர் அழைக்கப்பட்டு பிண்டம் வைத்து இறந்தவரின் ஆவியைச் சாந்தி செய்யும் மந்திரங்கள் ஓதி வீடு முழுவதும் மாட்டு மூத்திரத்தைத் தெளித்து தீட்டுக் கழித்து, இறந்தவருக்குப் படைப்பதற்காக வாங்கிப் படையல் வைக்கப்படும் அத்தனை சாமான்களையும் ( அது அவர் எழுதிக் கொடுப்பது தான் ) புது வேட்டி துண்டையும் சடங்குகளை நடத்தியதற்காக ஃபீஸையும் வாங்கிக் கொண்டு பிண்டங்களை அருகாமையில் இருக்கும் நீர்நிலையில் கரைத்து விடச் சொல்கிறார். அன்று அந்த வீட்டிலுள்ளோர் எல்லோரும் தலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து தீட்டைக் கழிக்கிறார்கள். உடல், உடை, உணவு, இருப்பிடம், எல்லாவற்றிலும் தீட்டு என்கிற தீண்டாமையைக் கற்பித்து அதை மக்கள் மனங்களில் அவர்களின் ஒப்புதலோடு ஏற்றுக் கொள்ள வைத்தது தான் பிராமணியத்தின் வெற்றி.

மேற்சொன்ன சாங்கியங்களில் அறிவியல் பூர்வமானதென்று எதுவும் கிடையாது. இறந்தவர் நோய்வாய்ப்பட்டு இறந்திருந்தால் அந்த வீட்டை கிருமிநீக்கம் செய்ய வேண்டும் என்பது மட்டும் தான் இதில் உள்ள ஒரே அறிவியல் உண்மை. சுடுகாட்டுச் சடங்குகளில் கூட ஒரு இனக்குழுவின் பண்பாட்டு அசைவுகள் இருக்கிறதென்று உணரமுடிகிறது. அதுவும் இப்போது காலத்துக்கு ஒவ்வாததாக மாறி விட்டது. ஆனால் பதினாறாவது நாள் விஷேசம் என்ற பெயரில் பிராமணரை அழைத்துச் செய்கிற சடங்குகள் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற விஷேசம். முன்னோர் வழிபாடு என்பது பண்பாட்டு அசைவு. ஆனால் பித்ருக்களாக காக்கா வந்து உணவு எடுக்கவும், திதி என்ற பெயரில் ஆண்டு தோறும் நடக்கும் விஷேசமும், அமாவாசை தோறும் பித்ருக்களுக்காக விரதம் இருந்து அவர்களுக்கு உண்ட பிறகே தாங்கள் உண்ணும் சடங்கு பிராமணிய தந்திரம். இப்படி இனக்குழுவின் சடங்கியல் முறைகளில் அவர்களுக்கே உரித்தான பண்பாட்டு அசைவுகள் இருந்ததென்றால் அதில் தங்களுடைய வேதகாலச்சடங்கியல் முறைகளையும் கலந்து விட்டது பிராமணீயம். இதனால் எவையெல்லாம் அந்த இனக்குழுவின் பண்பாட்டு அசைவுகள், எவையெல்லாம் பிராமணமதத்தின் சடங்கியல் கூறுகள் என்று அறிய முடியாமல் போய் விட்டது. பிராமணீயத்தை நோக்கிய மேல்நிலையாக்கத்தில் உள்ள விருப்பமும் மிகச் சுலபமாக பிராமணியம் எல்லாச் சடங்குகளுக்குள்ளும் கலந்து விடுவதற்கு ஏதுவாக இருந்ததை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இது மனுதர்மசாஸ்திரத்தை அறிந்தோ அறியாமலோ எல்லோரும் கடைப்பிடிக்க வழி வகை செய்கிற ஒரு ஏற்பாடாக அமைந்து விட்டது.

தீட்டு என்கிற ஒன்றை மக்கள் ஏற்று கொண்டிருக்கும் வரை பிராமணியமும், மனுதர்மமும் நிலைத்திருக்கும் என்றே தோன்றுகிறது.

2

ஒவ்வொருவருடைய மரணத்தை அர்த்தப்படுத்துவது அவர்களுடைய வாழ்க்கை தான். அந்த வாழ்க்கையில் அவர் தான் வாழும் சமூகத்துக்காக, தன் சகமனிதர்களுக்காக, என்ன செய்திருக்கிறார் என்பதே காலங்காலமாக நினைக்கப்படும். மானுடவிடுதலைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணிக்கிற தோழர்களும் மரணமடையும் போது நாம் அவரைக் கைவிட்டு விடுகிறோம். அது வரை அவர் எதையெல்லாம் மறுத்தும் எதிர்த்தும் தன் வாழ்நாள் முழுவதும் போரிட்டாரோ பிரச்சாரம் செய்தாரோ இயங்கினாரோ அவரைச் சடங்குகளின் கையில் ஒப்படைத்து விட்டு வாளாவிருக்கிறோம். பல நேரங்களில் அவருடைய சாதி அந்தச் சூழ்நிலையைக் கையாளுகிறது. அதற்கு ஒரு காரணமாக தோழர்களின் குடும்பங்களும் இருக்கின்றன. ஆனால் அதற்கும் நாம் தான் காரணம் என்று தோன்றுகிறது. தோழர்களின் குடும்பங்களுக்குள் நம்முடைய பண்பாட்டுக் கருத்தியல்களைக் கொண்டு போவதற்கான திட்டம் நம்முடைய அமைப்புகளிடம் போதுமானதாக இல்லை.

வாழ்கிற வரை கம்யூனிஸ்ட்டாக மட்டுமே மற்றவர்களால் அடையாளம் காணப்பட்ட தோழர்கள் மரணமடைந்தவுடன் அவருடைய சாதியைச் சேர்ந்தவராக, அவருடைய மதத்தைச் சேர்ந்தவராக அடையாளப்படுத்தப் படுகிறார். அவருடைய சாதியைச் சேர்ந்த இறுதி ஊர்வல வண்டியில் எல்லாச்சாங்கியங்களும் செய்யப்பட்டு நெற்றியில் குங்குமம் சந்தனம் நாணயம் சகிதமாக, சனிக்கிழமை என்றால் கூடவே ஒரு கோழிக்குஞ்சையும் கட்டிக் கொண்டு முன்னால் தன் வாரிசுகள் கொள்ளிச்சட்டி தூக்கிக் கொண்டு நடந்து வர சாதிக்காரர்கள் முன்னால் நடந்து செல்ல பின்னால் தயக்கத்துடன் நம்முடைய தோழர்கள் நடக்கத் தன் இறுதிப் பயணத்தைத் தொடர்கிறார். தான் இது வரை வாழ்ந்த முற்போக்கான வாழ்வின் அர்த்தம் என்ன? என்று தன் தலையை ஆட்டி ஆட்டிக் கேள்வி கேட்டுக் கொண்டே போகிறார். எத்தனையோ பேரை தன்னுடைய விசாலமான அறிவுத் திறமையினால் விவாதக்கூர்மையினால் வென்றெடுத்து முற்போக்கு இயக்கங்களுக்குள் கொண்டு வந்த தோழர். தீண்டாமை, சாதிவெறி, மதவெறி, மூடநம்பிக்கை இவற்றுக்கெல்லாம் எதிராக சமரசமற்ற போரைத் தன் வாழ்நாள் முழுவதும் நடத்திய அந்தத் தோழருக்கு தனக்கு நடந்து கொண்டிருக்கும் சடங்குகளைத் தடுக்க முடியவில்லை. துணைக்குத் தன் தோழர்களும் இல்லை. அவர்கள் மிகவும் பின்னால் வருகிறார்கள். அவர்களுக்கு இன்னமும் இதன் முக்கியத்துவம் தெரியவில்லை. எப்போதும் அவருக்கு உடன்பாடில்லாத விஷயங்களுக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் அவரது உரத்தகுரல் இப்போது மௌனமாக இருக்கிறது.

பிராமணியமும் மனுதர்மசாஸ்திரமும் நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றன. நாம் என்ன செய்யப் போகிறோம்?

நன்றி - தீக்கதிர்