Wednesday 27 April 2016

கிளிக்கூண்டுக்கனவு

கிளிக்கூண்டுக்கனவு

உதயசங்கர்

மத்தியான நேரம். கிருஷ் அவனுடைய பள்ளிக்கூடத்தில் இருந்த வேப்பமரத்தில் இரண்டு கிளிகள் பறந்து பறந்து விளையாடிக்கொண்டிருந்ததைப் பார்த்தான். இளம்பச்சை நிறமும் கரும் பச்சை நிறமும் கலந்த உடல். கழுத்தைச் சுற்றி வரைந்து வைத்த மாதிரி ஒரு கருப்புக் கோடு., அழகான சிவந்த அலகுகள். உருண்டை விழிகள். நீளமான வால். அடடா..எவ்வளவு அழகாக இருக்கிறது. கிருஷுக்கு உடனே அதைத் தொட்டுத் தடவிப் பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. அந்தக் கிளிகள் கீ கீகீ கீக்கீ என்று பேசிக்கொண்டு ஒவ்வொரு கொப்பாகத் தாவித் திரிந்து கொண்டிருந்தன.
அப்போது கூட இருந்த அபி
“ டேய் கிளியைப் பிடிச்சி கூண்டில வச்சு வளப்பாங்க.. அது நாம சொல்றத அப்படியே திருப்பிச்சொல்லும்… எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு பாட்டி வளக்கிறாங்க.. அவங்க வீட்டுக்கு யார் போனாலும் அது யார் நீங்க…யார் நீங்க…ன்னு கேக்கும்… நல்லாருக்கும்ல… “
அதைக் கேட்ட கிருஷ் அண்ணாந்து கிளிகளை ஆசையோடு பார்த்தான். கிளிகள் மேலே வானத்தில் பறந்து கொண்டிருந்தன.
சாயந்திரம் வீட்டுக்குப் போனதும் அம்மாவிடம் “ அம்மா எனக்குக் கிளி வேணும்..” என்றான். அவனுடைய அம்மா, “ கிளி பொம்மையெல்லாம் இப்ப கிடையாதுடா…” என்று சொன்னாள். உடனே கிருஷ்ஷுக்கு கோபம் வந்து விட்டது. “ எனக்கு உயிரோட கிளி வேணும் நான் வளக்கப்போறேன்..” என்று சொன்னான். அதைக் கேட்ட அவனுடைய அம்மா திரும்பி கிருஷ்ஷைப் பார்த்தார். அவன் அழுது விடுவதைப் போல முகத்தைக் கோணினான்.
“ அதெல்லாம் பாவம்டா கிருஷ்… பறக்கிற பறவையைக் கூண்டில அடைக்கக்கூடாதுடா..கண்ணு ..எஞ்செல்லமில்ல.சொன்னா கேளுடா.”
அதைக் கேட்டதும் அழவே ஆரம்பித்து விட்டான் கிருஷ். அழுது கொண்டே,
“ எனக்கு வேணும்.. நான் அதுக்குப் பேசச் சொல்லிக் கொடுப்பேன்…எனக்கு விளையாட யாரிருக்கா…” என்று சொன்னான். கிருஷ் அழுவதைப் பார்த்த அம்மாவுக்கு சங்கடமாகி விட்டது. அவள் கிருஷை பக்கத்தில் இழுத்து அவனுடைய தலைமுடியைக் கோதி விட்டாள்.
“ அழக்கூடாதுடா செல்லம்.. இப்ப என்ன உனக்குக் கிளி வேணும் அவ்வளவு தானே அப்பா வரட்டும் சொல்லி பிடிச்சித்தரச் சொல்றேன்… ஆனா கொஞ்சம் யோசிச்சிப்பாரேன்.. நல்லா ஓடியாடித் திரியற உன்னயப் பிடிச்சி ஒரு கூண்டுக்குள்ள போட்டு ஆடறா.. பாடறா.ன்னு சொன்னா செய்வியா….”
அம்மா சொன்னதைக் கேட்டதும் கிருஷ் கத்தி அழ ஆரம்பித்து விட்டான்.. அப்போது அலுவலகத்திலிருந்து அப்பா வந்து விட்டார். கிருஷ் அழுவதைப் பார்த்த அவர்,
 “ ஏண்டா கண்ணா அழறே..”
என்று கேட்டார். கிருஷ் அழுகையை அடக்கிக் கொண்டே அவன் பள்ளிக்கூடத்தில் பார்த்த கிளிகளைப் பற்றிச் சொன்னான். அவனுடைய ஆசையைச் சொன்னான். உடனே அப்பா,
“ இவ்வளவு தானே நாளைக்கி குருமலை கந்தசாமி அண்ணாச்சிகிட்ட சொல்லி ரெண்டு கிளியப் பிடிச்சித்தாங்கன்னு சொன்னாப்போச்சி… இதுக்குப் போயி அழலாமா? ..”
என்று சிரித்துக் கொண்டே சொன்னார். உடனே கிருஷின் அழுகை சட்டென நின்று விட்டது. உடனே அப்பாவிடம்,
“ நாளைக்கே கிடைச்சிருமாப்பா..”
என்று கேட்டான். அதற்கு அப்பா, “ இன்னும் மூணு நாளைக்குள்ள உங்கூட கிளிகள் பேசிக்கிட்டிருக்கும்… சரியா..” என்று சொன்னார். கிருஷ் முகம் மலர்ந்து சிரித்தான். உடனே சுறுசுறுப்பாய் பாடங்களைப் படித்தான். அம்மா சுட்டுத் தந்த தோசைகளை முரண்டு பண்ணாமல் சாப்பிட்டான். அவனுடைய நினைவில் எல்லாம் பள்ளிக்கூடத்தில் பார்த்த கிளிகளின் ஞாபகம் தான். படுத்தவுடன் தூங்கியும் விட்டான்.
அப்போது தான் விடிந்திருந்தது.  கிளிகளின் கீச்சட்டம் அவனை எழுப்பியது. கண்விழித்துப் பார்த்தான். அவனைச் சுற்றிலும் கிளிகள். பறந்து கொண்டும் கீ கீ என்று பேசிக் கொண்டும் நடந்து கொண்டும் இருந்தன. சில கிளிகள் பறந்து அவனுடைய படிப்பு மேசை மீது உட்கார்ந்திருந்தன. ஒரு கிளி சன்னல் கம்பியில் தலைகீழாக நடை பழகிக் கொண்டிருந்தது. ஒரு கிளி மின்விசிறி மீது உட்கார்ந்து தலையைத் திருப்பி எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்தது. இரண்டு கிளிகள் தங்களுடைய அலகுகளால் ஒன்றோடொன்று உரசிக் கொஞ்சிக் கொண்டிருந்தன. அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்பாவிடம் ரெண்டு கிளிகள் தானே கேட்டோம். எதுக்கு இத்தனை கிளிகளை வாங்கிட்டு வந்தார் என்று நினைத்தான். திரும்பி அப்பாவைக் கூப்பிட வாயெடுத்தான். அய்யோ அவனால் திரும்பவே முடியலயே. அசைய முடியாமல் கிடந்தான். அப்போது தான் அவனுக்குத் தெரிந்தது அவன் ஒரு கூண்டுக்குள் அடைபட்டிருப்பது. அவனுக்கு அருகில் ஒரு கிண்ணத்தில் அவனுக்குப் பிடித்த நெய்ச்சோறு, ஒரு தண்ணீர் பாட்டில். எல்லாம் இருந்தன. ஆனால் அவனால் நிமிர்ந்து நிற்கவோ, நடக்கவோ முடியவில்லை. அவன் உட்கார மட்டுமே இடமிருந்தது. அம்மாவையோ அப்பாவையோ காணவில்லை. அவனைச் சுற்றி பெரிய வயதான கிளிகள், இளம் கிளிகள், குஞ்சுக்கிளிகள் என்று கூட்டமாக இருந்தன. அவனுடைய கூட்டைச் சுற்றி பெரிய கிளிகள் நின்று கொண்டு கீ…கீ..கீ..கீ… என்று தொடர்ந்து கத்திக் கொண்டிருந்தன. அவனுக்கு அழுகையாக வந்தது. அவன் அம்மாவையும் அப்பாவையும் கத்திக் கூப்பிட்டான். கூண்டை திறக்க முயற்சித்தான். எதுவும் நடக்கவில்லை. வயிறு பசித்தது. அவனுக்குப் பிடித்த நெய்ச்சோறு அருகில் இருந்தது. ஆனால் சாப்பிடப்பிடிக்கவில்லை. அவனுக்கு இப்போது பள்ளிக்கூடம் போகவேண்டிய நேரம். அவன் ஒரு நாள் கூட பள்ளிக்கூடத்துக்குப் போகாமல் இருந்ததில்லை.
அவனுடைய வீட்டுக்குள் பறந்து கொண்டிருந்த கிளிகள் எல்லாம் சேர்ந்து ஒரே குரலில் கீ கீ கீ கீ என்று கத்தின. முதலில் எதுவும் புரியவில்லை. அப்புறம் தான் தெரிந்தது. அந்தக் கிளிகள் அதனுடைய மொழியை அவனுக்குச் சொல்லிக் கொடுக்க முயற்சிக்கின்றன. அவனுடைய முகம் கோணியது. அழுகை பொங்கி வர பெரிய குரலில் அழத்தொடங்கினான்.
அம்மா கிருஷைப் படுக்கையிலிருந்து எழுப்பிக் கொண்டிருந்தாள். கண்விழித்துப் பார்த்தான் கிருஷ். கூண்டையோ கிளிகளையோ காணவில்லை. எழுந்து உட்கார்ந்து ஒரு நிமிடம் அவன் கண்ட பயங்கர கனவை நினைத்துப் பார்த்தான். உடனே அம்மாவிடம், “ அம்மா எனக்கு கிளி வேண்டாம்மா…நான் மரத்திலேயே பாத்து ரசிக்கிறேன்.. பறவைன்னா பறக்கணும்.. மனுசன்னா நடக்கணும் ..இல்லியாம்மா….” என்று சொன்ன கிருஷை ஆச்சரியத்துடன் பார்த்தாள் அம்மா.

( மீள்பதிவு )

1 comment: