Sunday, 29 June 2025

இபானெமாவிலிருந்து ஒரு பெண் 1963/1982

 

இபானெமாவிலிருந்து ஒரு பெண் 1963/1982

ஹாருகி முரகாமி

ஆங்கிலத்தில் - பிரையன் வில்சன்

தமிழில்உதயசங்கர்



( கெட்ஸ்/கில்பெர்டொ பாடல் வரிகளுடன் தொடங்குகிறது, உயரமான பழுப்பு மஞ்சள் நிறமான இளமையும் அழகும் பொங்கும்…. அப்படியே தொடர்ந்து போகும்)

1963 – ஆம் ஆண்டு இபானெமாவிலிருந்து வந்த பெண் இந்த மாதிரியாகத் தான் கடலைப் பார்த்தாள். இப்போது 1982 – ஆம் ஆண்டு இபானெமாவிலிருந்து வந்த பெண்ணும் அதே மாதிரியாகத்தான் கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு ஓவியத்தில் சிறைப்பட்டு காலத்தின் கடலில், மிதந்து கொண்டிருந்தாள் அவள்.அவளுக்கு வயதாகியிருந்தால் அவளுக்கு இப்போது கிட்டத்தட்ட நாற்பது இருக்கும்.

உண்மைதான் அவள் அவ்வளவு வயதானவளாக இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் அவள் இவ்வளவு மெலிந்திருக்கமாட்டாள். அவளுடைய மஞ்சள் பழுப்பு நிறமும் அப்படியே இருந்திருக்காது. அவளுக்கு மூன்று குழந்தைகள் இருந்திருக்கும். வெயில் தோலுக்கு நல்லதில்லை. அவள் இப்போதும் அழகாக இருப்பாள். ஆனால் இருபது வருடங்களுக்கு முன்னால் இருந்ததைப் போல் இளமையாக இருக்க மாட்டாள்.

ஆனால் அந்தப் பாடலில் அவளுக்கு வயதாகாது. எப்போதும் அதில் அவள் பதினெட்டு வயது இனிய, அமைதியான இபானெமா பெண்ணாகவே ஸ்டான் கெட்ஸின் சாக்ஸ்போனின் வெல்வெட் இசையில் இருந்தாள். நான் இசைத்தட்டு சுழலும் இயந்திரத்தில் இசைத்தட்டை வைத்து ஊசியை வைத்ததுமே அவள் தோன்றி விடுவாள்.

ஒவ்வொரு முறை நான் இந்தப் பாட்டைக் கேட்கும்போதும் என்னுடைய உயர்நிலைப்பள்ளியின் தாழ்வாரத்தை நினைத்துக்கொள்வேன். இருண்ட, குளிர்ந்த, உயர்நிலைப்பள்ளி தாழ்வாரம். உயரமான மேற்கூரை. காங்கிரிட் தரையில் நடக்கும்போது என்னுடைய காலடிகள் எதிரொலிக்கும். வடக்குப்பக்கச் சுவரில் சில சன்னல்கள் இருக்கும். அதன்வழியே குறைந்த சூரிய ஒளியே உள்ளே வரும். ஏனெனில் அந்தக் கட்டிடம் ஒரு செங்குத்தான மலைக்குக் கீழே இருந்தது. என் நினைவுக்குத் தெரிந்தவரை தாழ்வாரத்தில் எந்தச் சலனமும் இருக்காது.

நான்  இபானெமாவிலிருந்து ஒரு பெண்ணைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு அந்தத் தாழ்வாரம் ஞாபகத்துக்கு வரும். ஏனென்று எனக்குத் தெரியவில்லை. அதற்கு ஒரு காரணமுமில்லை. என் மனக்குளத்தில் எந்த மாதிரியான கல்லை அந்த இபானெமாவிலிருந்து ஒரு பெண் 1963 போடுகிறாள்?

அந்த உயர்நிலைப்பள்ளி எனக்கு,சாலட் ஞாபகத்துக்கு வரும். லெட்டூஸ், தக்காளி, வெள்ளரி, வெங்காயம், பச்சை மிளகாய், அஸ்பாரகஸ், சேர்த்து இளஞ்சிவப்புநிறத்தில் கெட்ச்சப், மையோனேஸ், சில்லி, எல்லாம் சேர்த்த அலங்காரமான சாலட்.  உண்மையில் அந்தத் தாழ்வாரத்தின் முடிவில் எந்த சாலட் கடையுமில்லை. அந்த தாழ்வாரத்தின் முடிவில் ஒரு கதவு இருந்தது. அதற்கு வெளியே இருபத்தியைந்து மீட்டர் நீளமுள்ள  சாதாரண நீச்சல்குளம் இருந்தது.

ஏன் அந்தத் தாழ்வாரம் சாலட்டை நினைவுபடுத்துகிறது? எனக்குத் தெரியவில்லை. அதற்கு எந்தக் காரணகாரியமும் இல்லை. இரண்டும் என்னுடைய மனதில் ஒரு விபத்தாகவோ வேறு மாதிரியாகவோ இணைந்து விட்டது. அதிர்ஷ்டமில்லாத ஒரு பெண் புதிதாக வர்ணம் பூசிய பெஞ்சில் உட்காந்திருப்பதைப் போல இருந்தது.

  எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை சாலட் நினைவுபடுத்தியது. அதற்குத் தெளிவான தொடர்பு இருந்தது. அந்தப் பெண் எப்போதும் சாலட் சாப்பிட்டுக் கொண்டிருப்பாள்.

நீ..( கறுமொறு கறுமொறு ) ஆங்கில வகுப்பிற்கான ( கறுமொறு கறுமொறு ) ஹோம் ஒர்க்கை முடித்து விட்டாயா? “

“ ( கறுமொறு கறுமொறு.. ) இன்னும் இல்லை.. கொஞ்சம் ( கறுமொறு கறு மொறு ) பாக்கியிருக்கிறது..”

எனக்கு காய்கறிகள் பிடிக்கும். நாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் நாங்கள் சாலட்டை இப்படித்தான் சாப்பிடுவோம். அவள் மிகவும் மனவுறுதி கொண்டவள். அவள் காய்கறிகளைச் சாப்பிட்டால் எல்லாம் நல்லபடியாகப் இருக்கும் என்ற நம்பிக்கை கொண்டவள். மக்கள் காய்கறிகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலே உலகம் அமைதியாகவும், அழகாகவும், ஆரோக்கியமாகவும்,  அன்பு நிறைந்ததாகவும் மாறி விடும். அது மாதிரி.. ஏதோ..

ஸ்ட்ராபெர்ரி அறிக்கை..”

முன்பு ஒரு காலத்தில், பொருட்களும் நினைவுகளும் தனித்தனியே தத்துவத்தின் ஆழ் நிலையினால் பிரிக்கப்பட்டிருந்த காலம் ஒன்றிருந்தது..”

இபானெமாவிலிருந்து வந்த அந்தப் பெண் 1963/1982, தத்துவநிலையிலான சூடான மணற்பரப்பில் எந்த ஓசையுமில்லமல் நடந்துப் போய்க் கொண்டிருந்தாள். அது ஒரு நீண்ட கடற்கரை. அதில் வெள்ளை அலைகள் மெதுவாக கழுவிக் கொண்டிருந்தன. காற்றில்லை. வானத்தில் எதுவுமே இல்லை. என்னால் கடலை நுகரமுடிந்தது. வெப்பமிக்க சூரியன் என்னைச் சுட்டெரித்தது.

நான் ஒரு கடற்கரை குடையின் கீழ் படுத்தேன். ஐஸ் பெட்டியிலிருந்து ஒரு டின் பியரை எடுத்துத் திறந்தேன். அவள் இன்னமும் நடந்து கொண்டிருந்தாள். அவளுடைய உயரமான, மஞ்சள் பழுப்பு நிற உடலில் பிரகாசமான நிறத்தில் பிகினி அணிந்திருந்தாள்.

ஹாய்..” என்னுடைய தைரியத்தைத் திரட்டிக் கொண்டு பேசினேன்.

ஹாய்..” அவள் பதிலளித்தாள்.

ஒரு பியர் சாப்பிடலாமா..? “  நான் கேட்டேன்.

அவள் சற்று தயங்கினாள். ஆனால் நீண்ட தூரம் நடந்து வந்ததினால் அவளுக்குத் தாகமாகவும் சோர்வாகவும் இருந்திருக்க வேண்டும்.

நல்லதுஎன்று அவள் சொன்னாள். நாங்கள் இருவரும் கடற்கரை குடையின்கீழ் அமர்ந்து ஒன்றாக பியர் குடித்தோம்.

“ 1963 –ல் இதே இடத்தில், இதே நேரத்தில் நான் உங்களைப் பார்த்திருக்கிறேன்..” என்று நான் சொன்னேன்.

அது நீண்ட நாட்களுக்கு முன்னால் இல்லையா? “ என்று அவள் தன் தலையைச் சற்று குலுக்கிக் கொண்டு சொன்னாள்.

ஆமாம்.. அது நீண்ட நாட்களுக்கு முன்பாகத் தான் இருக்க வேண்டும்..” என்று நான் சொன்னேன்.

அவள் ஒரே மூச்சில் பாதி பியரைக் குடித்தாள். பிறகு அதன் திறப்பைப் பார்த்தாள். அது ஒரு சாதாரண பியர் கேனின் திறப்பு தான். ஆனால் அவள் அதைப் பார்க்கும்போது அதில் ஏதோ முக்கியத்துவம் இருப்பதாக நினைத்தேன். ஒரு வேளை முழு உலகமே அதற்குள் இருக்கலாம் என்று தோன்றியது.

நாம் சந்தித்திருக்கலாம்.. 1963 – லா.. ம்ம்ம் 1963. ஆமாம், நாம் ஒருவரையொருவர் சந்தித்திருக்கவேண்டும்..”

அதன் பிறகு உங்களுக்கு வயதாகவேயில்லை ..இல்லையா? “

அதற்குக் காரணம்.. நான் மாயப்பெண்..”

நீங்கள் எப்போதும் கடலையே கவனித்துக் கொண்டிருப்பதால் என்னைக் கவனிக்கவில்லையென்று நிச்சயம் தெரியும்..”

என்று சொல்லி நான் தலையாட்டினேன்.

அப்படியும் இருந்திருக்கலாம்..” அவள் புன்னகையுடன் சொன்னாள். சோகத்தின் சாயலுடன் கூடிய ஒரு அழகிய புன்னகை.

நான் எப்போதும் கடலையே கவனித்துக் கொண்டிருந்தேன்.. நான் கடலை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தேன்..”

நான் ஒரு பியர் கேனைத் திறந்தேன். பிறகு அவளிடம் ஒன்று கொடுத்தேன். அவள் தலையைக் குலுக்கி, அவளால் அவ்வளவு பியரைக் குடிக்க முடியாது என்றாள்.

நன்றி. ஆனால் நான் முன்பு நடந்ததைப் போலவே இப்போதிருந்து நடந்து கொண்டிருக்க வேண்டும்.. ” என்று அவள் சொன்னாள்.

உன்னுடைய பாதங்கள் சுடவில்லையா? இவ்வளவு நேரமாய் மணலில் நடக்கிறாயே..”

இல்லை.. என்னுடைய பாதங்கள் மாயத்தினால் செய்யப்பட்டவை. அதை பார்க்க விரும்புகிறாயா? “

ஆமாம்..”

அவள் அவளுடைய மெலிந்த கால்களை நீட்டி, பாதங்களை என்னிடம் காட்டினாள். ஆமாம். அவை உண்மையில் மாயப்பாதங்கள். நான் அவற்றை மென்மையாகத் தொட்டேன். அவை சூடாகவுமில்லை. குளிராகவுமில்லை. நான் அவளுடைய பாதங்களைத் தொடும்போது, அலைகளின் மங்கிய ஓசையைக் கேட்டேன். அந்த அலைகளின் ஓசை கூட மிகவும் மாயத்தனமையுடன் இருந்தது.

நான் என் கண்களைச் சற்று மூடித் திறந்தேன். ஒரு மடக்கு குளிர்ந்த பியரைக் குடித்தேன். சூரியன் அசையவேயில்லை. காலமும் கூட சலனமின்றி நின்றது. அதாவது ஏதோ நான் ஒரு கண்ணாடியில் வரையப்பட்டவனைப் போல இருந்தேன்.

ஒவ்வொரு நேரமும் நான் உங்களை நினைத்துக் கொள்வேன்.. எப்போதும் என்னுடைய  உயர்நிலைப்பள்ளியின் தாழ்வாரத்தை நினைப்பேன்.. நான் ஏன் அப்படிச் செய்தேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்..”

என்று சொல்வதற்கு நான் துணிந்தேன்.

மானுடத்தின் சாராம்சம் அதன் சேர்க்கையில் இருக்கிறது.. மனித அறிவியல் பொருட்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யவேண்டியதில்லை.. அது உடலுக்குள் இருக்கும் மனதைப் பற்றியே ஆராய்ச்சி செய்ய வேண்டும்..”

என்று அவள் சொன்னாள்.

ம்ம்ம்ம்என்றேன் நான்.

எபடியோ.. வாழவேண்டும்.. வாழுவாழு.. அவ்வளவுதான்.. நீ வாழவேண்டும் என்பது மிக முக்கியம்.. அவ்வளவுதான் நான் சொல்லமுடியும்.. நான் மாயப்பாதங்களைக் கொண்ட ஒரு பெண் மட்டுமே..”

பிறகு இபானெமாவிலிருந்து வந்த பெண் 1963/1982 அவளுடைய தொடைகளில் ஒட்டியிருந்த மணலைத் தட்டி விட்டு எழுந்து நின்றாள்.

பியருக்கு நன்றி..” என்று அவள் சொன்னாள்.

பரவாயில்லை..” என்று நான் சொன்னேன்.

எப்போதாவது நான் அவளை சுரங்கப்பாதை ரயில்களில் அவளைப் பார்ப்பேன். எனக்கு அவளைத் தெரியும். அவளுக்கும் என்னைத் தெரியும். நாங்கள் சந்திக்கும் பொழுதெல்லாம் அவள் பியருக்கு நன்றி என்ற புன்னகையை வீசுவாள். அதன் பிறகு நாங்கள் வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் இதயங்களால் எங்கோ இணைந்திருக்கிறோம் என்று உணரமுடிந்தது. நாங்கள் எங்கே இணைந்திருக்கிறோம் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்த முடிச்சு எங்கோ விசித்திரமான தூரத்து உலகில் இருக்கிறதென்று நிச்சயமாய் சொல்லமுடியும்.

நான் அந்த முடிச்சைக் கற்பனை செய்தேன். அந்த முடிச்சு யாரும் நடக்காத இருண்ட தாழ்வாரத்தில் அமைதியாகக் கிடந்தது. நான் இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் பல அருமையான ஞாபகங்கள் என்னுடைய மனதுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தன. அங்கே என்னையும் என்னுடைய ஆன்மாவையும் இணைக்கும் ஒரு முடிச்சு இருக்கவேண்டும். என்றாவது ஒரு நாள் நான் என்னை ஆன்மாவை அந்த விசித்திரமான தூரத்து உலகில் சந்திப்பேன் என்று உறுதியாக நினைத்தேன். அந்த இடம் கதகதப்பாக இருக்கவேண்டுமென்று விரும்பினேன். அங்கே குளிர்ந்த பியரும் இருந்து விட்டால் எனக்கு புகார் சொல்வதற்கு ஏதுமில்லை. அந்த உலகில் நான் தான் ஆன்மா. ஆன்மா தான் நான். ஆனமா தான் உடல். உடல் தான் ஆன்மா. இரண்டுக்குமிடையில் இடைவெளி கிடையாது. அவை ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டவை. அப்படிப் பட்ட விசித்திரமான இடம் உலகில் எங்கோ இருக்க வேண்டும்.

இபானெமாவிலிருந்து வந்த பெண் 1963/1982 இன்னமும் சூடான கடற்கரை மணலில் ந்து கொண்டிருக்கிறாள். கடைசி சாதனையை முறியடிக்கும்வரை அவள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பாள், இடைவெளியின்றி.

 

 

 

No comments:

Post a Comment