பனி
மனிதன்
ஹாருகி
முரகாமி
ஆங்கிலத்தில்
– ரிச்சர்டு.எல்.பீட்டர்சன்
தமிழில்
– உதயசங்கர்
நான் ஒரு
பனிமனிதனைத் திருமணம் முடித்தேன். ஒரு பனிச்சறுக்கு உல்லாசவிடுதியில் அவனை முதன் முதலில் சந்தித்தேன். ஒரு பனிமனிதனைச் சந்திக்க அது பொருத்தமான இடம்தான். ஹோட்டல் வரவேற்பறையில்
உற்சாகமான இளஞர் கூட்டம் நிரம்பியிருந்தது. ஆனால் பனிமனிதன் கணப்படுப்பிலிருந்து தூரமாய் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அமைதியாக ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். அப்போது நண்பகலாக இருந்தாலும் முன்பனிக்காலத்து தெளிவான குளிர்ந்த ஒளி அவனைச் சுற்றி வட்டமிட்டிருந்தது.
“ அதோ.. அவன் ஒரு
பனிமனிதன்..” என்று என்னுடைய தோழி முணுமுணுத்தாள்.
உண்மையில் அந்த
நேரம்வரை பனிமனிதன் என்றால் என்ன என்பதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்னுடைய தோழிக்கும்
கூடத் தெரியாது.
“ அவன் பனியினால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.. அதனால் தான் அவனை பனிமனிதன் என்று அழைக்கிறார்கள்..”
என்று அவள்
தீவிரமான முகபாவத்துடன் இதைச் சொன்னாள். ஏதோ ஒரு
பேயைப் பற்றியோ அல்லது தீவிரமான தொற்றுவியாதிக்காரனைப் பற்றியோ சொல்வதைப் போல அவள் பேசுவதைப் போலிருந்தது.
பனிமனிதன் உயரமாக
இருந்தான். அவன் பார்ப்பதற்கு
இளமையாகத் தெரிந்தாலும் அவனுடைய குட்டையான கம்பி போன்ற முடியில் ஆங்காங்கே வெள்ளை நிறத் திட்டுகள் இருந்தன. பனி உருகாத
கிடங்குகளைப் போலத் தெரிந்தன. உறைந்த பனிப்பாறையைப்
போல அவனுடைய கன்ன எலும்புகள் வெளியே துருத்திக் கொண்டிருந்தன. அவனுடைய விரல்களைச் சுற்றி உறைபனி வளையமிட்டிருந்தது. அது ஒருபோதும் உருகப்போவதில்லை என்கிற மாதிரி இருந்தது. மற்றபடி பனிமனிதனைப்
பார்க்கும்போது சாதாரண மனிதனைப் போலவே தான் இருந்தான். அவன் நீங்கள்
சொல்லிக் கொண்டிருப்பதைப் போல அழகானவன் இல்லை. ஆனால் அவன்
வசீகரமானவனாக இருப்பதை நீங்கள் பார்க்கமுடியும். நீங்கள் அவனை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. எப்படியோ அவனைப்
பற்றிய ஏதோ ஒன்று என்னுடைய இதயத்தில் துளைத்து விட்டது. அதை வேறெங்கும்
விட அவனுடைய கண்களில் பார்த்தேன். அவனுடைய கூர்பார்வை அத்தனை அமைதியாகவும் ஊடுருவக்கூடியதாகவும் இருந்தது. பனிக்காலக்காலை நேரத்தில் ஒளிச்சிதறல்கள்
பனிக்கட்டிகளின் வழியே பாய்ந்து செல்வதைப் போல இருந்தது. அது ஒரு
செயற்கையான உடலில் ஒரு ஒளி மின்னுவதைப் போலிருந்தது.
நான் அங்கே
கொஞ்சநேரம் தூரமாய் நின்று பனிமனிதனைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை. அவன் அப்படியே அசையாமல் உட்கார்ந்து புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தான். அவனைச் சுற்றி யாருமில்லை என்பதைப் போல.
அடுத்த நாள்
காலை, அதே இடத்தில்
அதே போல பனிமனிதன் புத்தகத்தை வாசித்தபடி உட்கார்ந்திருந்தான். நான் மதிய உணவுக்காகப் போகும்போதும் சரி, மாலை
பனிச்சறுக்கு விளையாட தோழிகளுடன் சென்று வரும்போதும் சரி அவன் அங்கேயே இருந்தான், அதே புத்தகத்தின்
சில பக்கங்களை உற்றுப் பார்த்தபடி. அதேதான் மறுநாளும் நிகழ்ந்தது. சூரியன் மறையும்போதும், விடியல் நேரம் தாமதமானபோதும் அவன் அதே நாற்காலியில் அப்படியே உட்கார்ந்திருந்தான். சன்னலுக்கு வெளியே தெரியும் பனிக்காட்சியைப் போல.
நான்காவது நாள்
மதியம், நான் பனிச்சரிவுகளுக்குப்
போகமலிருக்க சில காரணங்களைச் சொல்லிப் போகாமலிருந்து விட்டேன். நான் தனியே
ஹோட்டலில் தங்கி விட்டேன். பிறகு சற்று
நேரம் பார்வையாளர் அறையில் சுற்றித்திருந்தேன். அது காலியாக பேய் நகரம்போலத் தெரிந்தது. காற்று கதகதப்பாகவும்
ஈரப்பதத்துடன் வீசியது. அறையில் வித்தியாசமான
கெட்ட நாற்றம் அடித்தது. பனியின் வாடை
அது. மக்களின்
காலணிகளில் ஒட்டிக் கொண்டு வந்திருக்கும் பனி அங்கிருக்கும் கணப்படுப்புக்கு முன்னால் உருகி வழிந்திருக்கிறது. நான் சன்னல் வழியே வெளியே பார்த்தேன். ஒன்றிரண்டு செய்தித்தாள்களின் பக்கங்களைப் புரட்டினேன். பிறகு என்னுடைய தைரியத்தையெல்லாம் திரட்டிக் கொண்டு பனிமனிதனிடம் சென்று பேசினேன்.
அந்நியர்களிடம் தகுந்த காரணமில்லாமல்
சென்று பேச நான் மிகவும் தயங்குவேன். எனக்குத் தெரியாதவர்களிடம் நான் பேசமாட்டேன். என்ன காரணத்தினாலோ நான் பனிமனிதனிடம் பேசியாக வேண்டுமென்ற உந்துதலை நான் உணர்ந்தேன். அந்த ஹோட்டலில் அது தான் என்னுடைய கடைசி இரவு. இந்தச் சந்தர்ப்பத்தை
விட்டு விட்டால் இனி பனி மனிதனிடம் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காமல் போய்விடும்.
“ “ நீங்கள் பனிச்சறுக்கப் போகவில்லையா? “ என்னால் முடிந்தவரை சாதாரணமாகப் பேசுவதைப் போலக் கேட்டேன்.
அவன்
மெதுவாக என்னை நோக்கி முகத்தைத் திருப்பினான். எங்கோ தூரத்தில் சத்தம் கேட்டுத் திரும்புகிற மாதிரி. பிறகு அந்தக்
கண்களால் என்னைக் கூர்மையாகப் பார்த்தான். பிறகு அமைதியாகத் தலையை ஆட்டிக் கொண்டே,
“ நான் பனிச்சறுக்குவதில்லை.. வெறுமனே இங்கே உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டு பனியைப் பார்த்துக் கொண்டுமிருப்பேன்..”
என்று சொன்னான். அவனுடைய வார்த்தைகள் அவனுக்கு மேலே காமிக்ஸ் ஸ்டிரிப் தலைப்புகளைப் போல வெள்ளை மேகங்களை உருவாக்கியது. காற்றில் வார்த்தைகளை என்னால் பார்க்கமுடிந்தது. அவன் உறைபனி வளையமிட்ட விரலால் அவற்றை அழித்து நீக்கும் வரை பார்த்தேன்.
அடுத்ததாக என்ன
சொல்வதென்று தெரியவில்லை. நான் சிவந்த முகத்துடன் அங்கே நின்று கொண்டிருந்தேன். பனிமனிதன் என்னுடைய கண்களுக்குள் உற்றுப் பார்த்து லேசாகச் சிரித்தது போலிருந்தது.
“ “ உட்கார விரும்புகிறாயா? “ என்று அவன் கேட்டான்.
“ என்மீது ஆர்வமாகி விட்டாய்.. இல்லையா? பனிமனிதன் என்றால்
என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறாய்..” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.
“ அமைதி.. கவலைப்பட ஒன்றுமில்லை.. என்னுடன் பேசுவதாலேயே ஜலதோஷம் பிடிக்காது..”
நாங்கள் வரவேற்பறையின்
ஒரு மூலையிலிருந்த சோபாவில் அருகருகே உட்கார்ந்து சன்னலுக்கு வெளியே பனித்துகள்கள் நடனமாடிக் கொண்டிருப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தோம். நான் சூடான கோக்கோவை வரவழைத்துக் குடித்தேன். ஆனால் பனிமனிதன் எதையும் குடிக்கவில்லை. என்னை விடச் சிறந்த உரையாடல்காரனாக அவனில்லை. அது மட்டுமில்லை. நாங்கள் பேசுவதற்குப் பொதுவான விஷயங்களென்று ஏதுமில்லை. முதலில் நாங்கள்
வானிலை பற்றிப் பேசினோம். பிறகு அந்த
ஹோட்டலைப் பற்ரிப் பேசினோம்.
“ நீங்கள் மட்டும் தான் இருக்கிறீர்களா? “ என்று நான் கேட்டேன்.
“ ஆமாம் “ என்று அவன் பதிலளித்தான். எனக்குப் பனிச்சறுக்கு பிடிக்குமாவென்று அவன் கேட்டான்.
“ ரொம்பப் பிடிக்குமென்று சொல்லமுடியாது.. என்னுடைய நண்பர்களின் வற்புறுத்தலினால் நான் இங்கே வந்தேன்.. நான் எப்போதாவது பனிச்சறுக்கு விலையாடுவேன்..” என்று சொன்னேன்.
ஏராளமான
விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்பினேன். அவனுடைய உடல் உண்மையிலேயே பனியினால் செய்யப்பட்டதா? அவன் என்ன சாப்பிடுவான்? அவன் கோடைகாலத்தில் எங்கே வசிப்பான்? அவனுக்குக் குடும்பம்
இருக்கிறதா? இப்படியான விஷ்யங்கள். ஆனால் பனிமனிதன் அவனைப் பற்றி எதுவும் பேசவில்லை. தனிப்பட்ட கேள்விகளைக்
கேட்பதிலிருந்து பின் வாங்கினேன்.
அதற்குப் பதில்
பனிமனிதன் என்னைப் பற்றிக் கேட்டான். அது நம்புவதற்கு
கடினமாக இருந்தாலும் அவன் எப்படியோ என்னைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருந்தான். என் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி தெரிந்திருந்தான். என் வயதைப் பற்றி தெரிந்திருந்தான். என்னுடைய விருப்பு வெறுப்புகளைப் பற்றி, என்னுடைய உடல்நலம்
பற்றி, நான் படித்துக்
கொண்டிருக்கும் பள்ளியைப் பற்றி, நான் பார்த்த
நண்பர்கலைப் பற்றி தெரிந்திருந்தான். இன்னும் சொல்லப்போனால் என்னுடைய கடந்த காலத்தில் நடந்த விஷயங்களைப் பற்றித் தெரிந்திருந்தான். நானே அவற்றை மறந்து நீண்ட நாட்களாகி விட்டது.
“ எனக்குப் புரியவில்லை..” நான் பதைபதைப்புடன் சொன்னேன். ஒரு அந்நியன்
முன்னால் நிர்வாணமாக நிற்பதைப் போல உணர்ந்தேன்.
“” உங்களுக்கு எப்படி என்னைப் பற்றிய எல்லாவிஷயங்களும் தெரியும்? நீங்கள் மற்றவர்கள்
மனதை வாசிப்பவரா? “
“ இல்லை.. என்னால் மனதை வாசிப்பது மாதிரியான விஷயங்களெல்லாம் தெரியாது.. எனக்குத் தெரியும்.. அவ்வளவுதான். நான் பனிக்கட்டியை ஆழ்ந்து பார்ப்பது போல.. எனக்குத் தெரிகிறது
அவ்வளவு தான்.. நான் உன்னைப் பார்க்குப் போது உன்னைப் பற்றிய விஷயங்களனைத்தும் தெளிவாகத் தெரிகிறது..”
“ உங்களால் என்னுடைய எதிர்காலத்தைப் பார்க்கமுடியுமா? “
என்று நான்
கேட்டேன்.
“ என்னால் எதிர்காலத்தைப் பார்க்க முடியாது.. எதிர்காலத்தின் மீது எந்த ஆர்வத்தையும் காட்டமுடியாது.. துல்லியமாகச் சொல்வதானால் எனக்கு எதிர்காலத்தைப் பற்றி எந்தக் கருத்தும் கிடையாது.. ஏனெனில் பனிக்கட்டிக்கு எதிர்காலம் இல்லை. அதற்குள்ளே இருப்பதெல்லாம்
கடந்த காலம் மட்டுமே..பனிக்கட்டியினால் அந்த வகையில்
மட்டுமே விஷயங்களைப் பாதுகாக்க முடியும்..மிகத் தெளிவாக..தனித்துவமாக, அவை உயிரோடு இப்போதும் இருப்பதைப் போல விரிவாக.. அது தான் பனிக்கட்டியின் சாராம்சம்..”
“ அருமை.. இதைக் கேட்டு ஆசுவாசுமடைந்தேன்.. பிறகு எனக்கும்.. என்னுடைய எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பவில்லை..”
என்று புன்னகையுடன்
சொன்னேன்.
மீண்டும் நாங்கள்
நகரத்துக்குத் திரும்பிய பிறகு பலமுறைச் சந்தித்தோம். அதன் விளைவாகச் சேர்ந்து சுற்றினோம். நாங்கள் திரைப்படங்களுக்கோ இல்லையென்றால் காப்பிக்கடைக்கோ போகவில்லை. உணவகங்களுக்குக் கூடப் போகவில்லை. பனிமனிதன் எப்போதாவது தான் சொல்லும்படி ஏதாவது சாப்பிட்டான். அதற்குப் பதில் நாங்கள் பூங்காவின் பெஞ்சில் உட்கார்ந்து அனைத்து விஷயங்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம், பனிமனிதனைப் பற்றி மட்டும் பேசுவதில்லை.
“ ஏன் அப்படி? “ நான் ஒருமுறை அவனிடம் கேட்டேன்.
“ உங்களைப் பற்றி ஏன் எதுவும் பேச மாட்டேனென்கிறீர்கள்> உங்களைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எங்கே பிறந்தீர்கள்? உங்களுடைய பெற்றோர்கள் எப்படி இருப்பார்கள்? எப்படி நீங்கள் பனிமனிதன் ஆனீர்கள்? “
பனிமனிதன் என்னைச்
சில கணம் பார்த்தான். பிறகு அவனுடைய தலையைக் குலுக்கிக் கொண்டு,
“ எனக்குத் தெரியாது..” என்று அவன் அமைதியாக, தெளிவாக, காற்றில்
வெள்ளைநிற வார்த்தைகளை புகையாக வெளியே விட்டான்.
“ எல்லாவற்றின் கடந்த காலத்தை நான் அறிவேன்.. ஆனால் எனக்குக் கடந்தகாலம் கிடையாது..நான் எங்கே
பிறந்தேனென்று எனக்குத் தெரியாது. என்னுடைய பெற்றோர்கள்
எப்படியிருப்பார்கள் என்று தெரியாது. இன்னும் சொல்லப்போனால்
எனக்குப் பெற்றோர் இருக்கிறார்களா என்று கூடத் தெரியாது.. எனக்கு எவ்வளவு வயது என்று தெரியாது.. எனக்கு ஆயுட்காலமென்று ஒன்று இருக்கிறதா என்பதும் தெரியாது..”
இரவின் இருளில்
பனிமனிதன் ஒரு பனிப்பாறையைப் போல தனிமையில் இருந்தான்.
நான் இந்தப்
பனிமனிதனின் மீது தீவிரமான காதல் கொண்டேன். பனிமனிதன் நிகழ்காலத்தில்
நான் எப்படியிருந்தேனோ அப்படி என்னைக் காதலித்தான். எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. பதிலுக்கு நானும் பனிமனிதனை அவன் நிகழ்காலத்தில் எப்படியிருக்கிறானோ அப்படியே காதலித்தேன். அவனுடைய கடந்த காலத்தைப் பற்றிக் கவலைப் படவில்லை. நாங்கள் திருமணம்
முடிப்பதைப் பற்றிக் கூடப் பேசத் தொடங்கி விட்டோம்.
எனக்கு இப்போது
தான் இருபது வயதாகிறது. நான் உணமையில்
காதலிக்கும் முதல் மனிதனாக பனிமனிதன் இருந்தான். அந்த நேரத்தில்
ஒரு பனிமனிதனைக் காதலிப்பதென்றால் என்ன மாதிரியிருக்கும் என்று கற்பனைச் செய்ய முடியாமலிருந்தேன். ஆனால் ஒருவேளை நான் சாதாரண மனிதன் மீது காதல் கொண்டிருந்தால், எனக்குக் காதல் என்றால் என்ன என்று தெளிவாகத் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே.
என்னுடைய அம்மாவும்
மூத்த சகோதரியும் பனிமனிதனுடனான என்னுடைய திருமணத்தை கடுமையாக எதிர்த்தனர்.
“ திருமணம் முடிக்க இன்னும் உனக்கு வயதாகவில்லை.. அத்துடன், அவனுடைய பின்னணியைப்
பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது.. அவன் எங்கே, எப்போது பிறந்தான்
என்பதுகூடத் தெரியாது. நீ இப்படியொரு
மனிதனைத் திருமணம் முடிக்கப்போகிறாய் என்று எங்களால் எப்படி உறவினர்களிடம் சொல்லமுடியும்? கூடுதலாக, நாம் பனிமனிதனைப்
பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம் அவன் உருகிப் போய் விட்டால் நீ என்ன செய்யப்போகிறாய்? திருமணத்துக்கு உணமையான அர்ப்பணிப்பு வேண்டுமென்று உனக்குப் புரியவில்லை “
என்று சொன்னார்கள்.
அவர்களுடைய கவலைகளுக்கு
எந்த ஆதாரமுமில்லை. பனிமனிதன் உணமையில் பனியினால் ஆனவன் இல்லை. எவ்வளவு வெப்பத்தை
வாங்கினாலும் அவன் உருகப்போவதில்லை. அவனுடைய உடல் பனியைப் போலக் குளிர்ந்திருந்ததினால் அவனை எல்லோரும் பனிமனிதனென்று அழைத்தார்கள். அவன் பனியிலிருந்து வித்தியாசமான பொருளால் உருவாக்கப்பட்டவன். அது மற்ற மனிதர்களின் வெப்பத்தை எடுத்துக் கொள்ளும் குளிர்ச்சி அல்ல.
ஆக நாங்கள்
திருமணம் முடித்தோம். ஒருவரும் திருமணத்தை வாழ்த்தவில்லை. உறவினர்களோ நண்பர்களோ யாரும் மகிழவில்லை. அவனுடைய குடும்பத்தைப் பற்றிப் பதிவேட்டில் பெயர்களைப் பதிவு செய்யும்போது தான் தெரிந்தது, அவனுக்குக் குடும்பமென்று
யாருமில்லை. நாங்கள் இருவரும் முடிவு செய்தோம், நாங்கள் திருமணம்
முடித்துக் கொண்டோம். ஒரு சிறிய
கேக்கை வாங்கிச் சேர்ந்து சாப்பிட்டோம். எங்களுடைய எளிமையான திருமணம் முடிந்து விட்டது.
நாங்கள் ஒரு
சிறிய அடுக்கக வீட்டை வாடகைக்கு எடுத்தோம். பனிமனிதன் இறைச்சி
குளிர்பதனக்கிடங்கில் வேலை பார்த்துச் சம்பாதித்தான். எந்தளவுக்கு
வேண்டுமானலும் குளிரை அவனால் தாங்கிக் கொள்ள முடியும். அங்கே எவ்வளவு
கடினமாக உழைத்தாலும் சரி ஒருபோதும் சோர்வடைவதில்லை. அதனால் பனிமனிதனின் முதலாளிக்கு மிகவும் பிடித்து விட்டது. மற்ற தொழிலாளிகளுக்குக்
கொடுத்ததை விட அதிகமான சம்பளம் கொடுத்தார். நாங்கள் இருவரும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அல்லது யாருடைய தொந்திரவுமில்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம்.
பனிமனிதன் என்னுடன்
காதல் கொள்ளும்போது என்னுடைய மனதில் எங்கோ தனிமையில் ஒரு பனித்துண்டு இருப்பதை நான் பார்த்தேன். அந்தப் பனித்துண்டு எங்கே இருந்ததென்று பனிமனிதனுக்குத் தெரிந்திருக்குமென்று நினைத்தேன். அந்தப் பனித்துண்டு கடினமாக உறைந்திருந்தது. அதை விடக் கடினமாக எதுவுமிருக்கமுடியாது என்று நான் நினைத்தேன். அதுதான் உலகத்திலேயே மிகப்பெரிய பனித்துண்டு என்று நினைத்தேன். அது எங்கோ வெகுதூரத்திலிருந்தது. பனிமனிதன் தான் அந்தப் பனித்துண்டின் நினைவுகளை எனக்கும் இந்த உலகத்துக்கும் கடத்தினான். முதலில் பனிமனிதன் என்னிடம் காதல் கொள்ளும்போது குழம்பிப் போனேன். ஆனால் கொஞ்சநேரத்துக்குப்
பிறகு நான் அதற்குப் பழகிக் கொண்டேன். அவனுடன் பாலுறவு
கொள்வதை விரும்பவும் தொடங்கினேன். அந்த இரவில் நாங்கள் மௌனமாக ஏராளமான பனித்துண்டுகளை எங்களுக்குள் பகிர்ந்து கொண்டோம். அவற்றில் உலகத்தின்
லட்சக்கணக்கான வருடங்களின் எல்லாக் கடந்தகாலங்களும் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.
எங்களுடைய திருமணவாழ்க்கையைப்
பற்றிப் பேசுவதில் எந்தப் பிரச்னையுமில்லை. நாங்கள் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தோம். எங்களுக்கிடையில் எந்தப் பிரச்னையும் வரவில்லை. எங்களுக்கு ஒரு
குழந்தை வேண்டுமென்று நினைத்தோம். ஆனால் அது சாத்தியமாகுமென்று தெரியவில்லை. மனித மரபணுக்களும் பனிமனிதனின் மரபணுக்களும் அவ்வளவு சுலபத்தில் இணையமுடியாது. எங்களுக்குக் குழந்தை இல்லாமலிருந்ததுக்குக் வேறொரு காரணம் இருந்தது அது என்னவென்றால் ஏராளமான நேரம் எனக்குக் கிடைத்தது. காலையிலேயே நான்
வீட்டு வேலைகளை முடித்து விடுவேன். அதன் பிறகு
செய்வதற்கு எதுவும் இருக்காது. எனக்கு பேசுவதற்கோ
அல்லது வெளியில் போவதற்கோ நண்பர்கள் கிடையாது. அது மட்டுமில்லை
பக்கத்து வீட்டுக்காரர்களுடன் அதிகமாக உறவுமில்லை. பனி மனிதனைத் திருமணம் முடித்ததால் என்னுடைய அம்மாவும் சகோதரியும் இன்னும் என் மீது கோபமாக இருக்கிறார்கள். என்னை எப்போதாவது மீண்டும் பார்ப்பதற்கு விரும்புகிற எந்த அறிகுறியையும் காட்டவில்லை. மாதங்கள் செல்ல செல்ல எங்களைச் சுற்றியிருந்தவர்கள் அவ்வப்போது பேசத் தொடங்கினார்கள். அவர்களுடைய இதயங்களின் ஆழத்தில் இன்னமும் பனிமனிதனையோ அல்லது அவனைத் திருமணம் முடித்த என்னையோ ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாங்கள் அவர்களிலிருந்து வேறுபட்டிருந்தோம். எங்களுக்குக்கிடையில் இருந்த இடைவெளியை நிரப்ப போதுமான நேரம் கிடைக்கவில்லை.
பனிமனிதன் வேலைக்குப்
போகும் போது நான் வீட்டில் புத்தகங்களை வாசித்துக் கொண்டு, இசையைக் கேட்டுக்
கொண்டு தனியாகவிருந்தேன். நான் வீட்டிலிருப்பதையே இருப்பதற்கே முன்னுரிமை கொடுத்ததால் தனியாக இருப்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் இன்னமும் இளமையாக இருந்த எனக்கு ஒரேமாதிரியான வேலையைத் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருப்பது கவலையளித்தது. சலிப்பல்ல, மீண்டும் மீண்டும்
ஒரே வேலையைச் செய்வது தான் காயப்படுத்தியது.
அதனால் தான்
நான் என்னுடைய கணவரிடம்,
“ ஏன் நாம் இரண்டுபேரும் ஒரு பயணம் போய் விட்டு வரக்கூடாது? சும்மா ஒரு மாறுதலுக்காக..”
என்று கேட்டேன்.
“ பயணமா? எதற்காக நாம்
பயணம் போக வேண்டும்? என்னுடன் நீ
மகிழ்ச்சியாக இல்லையா? ? “
என்று
கண்களைச் சுருக்கிக் கொண்டு என்னை உற்றுப் பார்த்தவாறு கேட்டான்.
“ அப்படியில்லை.. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்..ஆனால் சலிப்பாக இருக்கிறது.. எங்காவது தூரப்பிரதேசங்களுக்குச் சென்று நான் இதுவரை பார்த்திராத இடங்களைப் பார்க்கவேண்டுமென்று நினைக்கிறேன்.. புத்தம் புதிய காற்றை சுவாசிக்க விரும்புகிறேன்.. உங்களுக்குப் புரிகிறதா? அத்துடன் நாம்
இன்னும் தேனிலவைக் கொண்டாடவில்லை.. நம்மிடம் கொஞ்சம் சேமிப்பு இருக்கிறது.. அத்துடன் உங்களுக்கு நிறைய விடுமுறைநாட்களும் வரப்போகின்றன. நாம் எங்காவது போய் கொஞ்சநாள் உல்லாசமாக இருக்க இது சரியான நேரமல்லவா? “
என்று சொன்னேன். பனிமனிதன் ஆழ்ந்த உறைபனிப்பெருமூச்சை வெளிவிட்டான். அது காற்றின் நடுவில் சத்தத்துடன் படிகமாகி விட்டது. அவன் தன்னுடைய
நீண்ட விரல்களால் முழங்கால்களைப் பின்னினான்.
“ சரி.. உண்மையிலேயே உனக்கு
சுற்றுலா போகவேண்டுமென்ற அவசியம் இருப்பதாக நீ கருதினால் எனக்கு ஓரு ஆட்சேபணையுமில்லை. உனக்கு மகிழ்ச்சியாக இருக்குமென்றால் நான் எங்கு வேண்டுமானாலும் போவேன்.. நீ
எங்கே போக வேண்டுமென்று விரும்புகிறாய்? “
“ தென் துருவத்துக்குப் போனால் என்ன? “ என்று நான் சொன்னேன். நான் தென்
துருவத்தை ஏன் தேர்ந்தெடுத்தேனென்றால் பணிமனிதன் குளிர்பிரதேசத்துக்குப் போக விரும்புவான் என்று நினைத்தேன். நேர்மையாக்ச் சொல்வதென்றால் நான் அங்கே போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நான் முக்காட்டுடன் கூடிய உரோமமேலாடையை அணிந்து கொள்ளவும் அங்கே தென்முனைப் பிழம்பொறியைப் பார்க்கவும் பென்குயின் கூட்டத்தையும் பார்க்க விரும்பினேன்.
நான் இதைச்
சொல்லும்போது என் கணவர் கண்ணிமைக்காமல் என் கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தார். ஒரு கூர்மையான பனித்துண்டு என் பின் தலை வரை குத்தித் துளைத்துக் கொண்டு போவதைப் போல உணர்ந்தேன். அவர் சற்று நேரம் பேசாமலிருந்தார். கடைசியில்,
“ சரி.. இது தான்
உனவிருப்பமென்றால் நாம் தென் துருவத்துக்குப் போவோம்.. இதைத்தான் நீ விரும்புகிறாயா என்று நிச்சயப்படுத்திக் கொள்..” என்று பளிச்சென்று சொன்னார்.
உடனே என்னால்
பதில் சொல்லமுடியவில்லை. நீண்டநேரமாக என்னைப் பார்த்துக் கொண்டிருந்த பனிமனிதனின் பார்வை என் தலைக்குள் புகுந்து மயக்கியது. நான் தலையசைத்தேன்.
காலம் போய்க்
கொண்டேயிருந்தது. தென் துருவத்துக்குப் போகவேண்டுமென்ற என்னுடைய யோசனைக்காக நான் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். ஏனென்று தெரியவில்லை. ஆனால் நான் தென் துருவம் என்ற வார்த்தையைச் சொன்னவுடனேயே என் கணவருக்குள் ஏதோ ஒரு மாற்றம் தோன்றியது போல இருந்தது. அவருடைய கண்கள்
கூர்மையடைந்தன. அவருடைய மூச்சுக்காற்று வெள்ளை வெளேரென்று வந்தது. அவருடைய விரல்கள்
உறைந்து விட்டன. அதன்பிறகு அவர்
என்னிடம் பேசுவதேயில்லை. சாப்பிடுவதையும் நிறுத்தி விட்டார். எல்லாம் சேர்ந்து
என்னிடம் ஒரு பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியது.
நாங்கள் போவதற்கு
ஐந்து நாட்களுக்கு முன்னால், எனக்குத் துணிச்சல்
வந்தது.
“ நாம் தெந்துருவத்துக்குப் போவதை மறந்து விடுவோம்.. இப்போது அதைப் பற்றி யோசிக்கும்போது, அங்கே பயங்கரக்குளிராக இருக்கப்போகிறதென்று உணர்கிறேன்.. நம்முடைய உடல்நலத்துக்கு அது நல்லதில்லை. நாம் வேறு ஏதாவதொரு சாதாரணமான இடத்துக்குப் போனாலென்ன என்று யோசிக்கத் தொடங்கி விட்டேன்.
ஐரோப்பா
எப்படி? நாம் ஸ்பெயினில்
உண்மையான விடுமுறையைக் கழிக்கலாம். நாம் வைன் குடிக்கலாம். பாயெல்லா (ஸ்பெயினின் அரிசி
உணவு )
சாப்பிடலாம். காளைச்சண்டையையோ அல்லது வேறெதையோ பார்க்கலாம்.
ஆனால் என்னுடைய
கணவர் நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேனென்பதைக் கவனிக்கவில்லை. சில நிமிடங்களுக்கு வெற்று வெளியை உற்றுபார்த்தார். பிறகு அவர் அறிவித்தார்.
“ இல்லை, நான் குறிப்பாக
ஸ்பெயினுக்குப் போக விரும்பவில்லை.. என்னைப் பொறுத்தவரை ஸ்பெயின் மிகவும் சூடு.. அங்கே புழுதியும் அதிகம்.. உணவும் ரொம்ப காரமாக இருக்கும்.. அதுமட்டுமல்லாமல் நான் ஏற்கனவே தெந்துருவம் போவற்காதான பயணச்சீட்டுகளை வாங்கி விட்டேன்.. நம்மிடம் மென்மயிர் கோட்டுகள் இருக்கின்றன.. மென்மயிர் விளிம்பிட்ட பூட்ஸுகளும் இருக்கின்றன. அவற்றையெல்லாம் வீணாக்கமுடியாது. இவ்வளவு தூரம் வந்தபிறகு திரும்ப முடியாது..”
உண்மை என்னவென்றால்
நான் பயந்தேன். ஒரு தீயநிகழ்வு
குறித்த முன்னுணர்வு எனக்குத் தோன்றியது. நாங்கள் தென்துருவத்துக்குப்
போனால் எங்களுக்கு ஏதோ நிகழுமென்றும் அதிலிருந்து நாங்கள் தப்பமுடியாதென்றும் தோன்றியது. திரும்பத் திரும்ப
இந்த தீயகனவு வந்து கொண்டேயிருந்தது. அப்படியே வந்தது. நான் வெளியே
நடைப்பயிற்சி செல்லும்போது நான் தரையில் திறந்திருக்கும் ஒரு ஆழமான பனிப்பிளவுக்குள் விழுந்து விடுகிறேன். யாராலும் என்னைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. அன்கே நான் உறைந்து போய் விடுகிறேன். பனிக்கட்டிகளால் மூடப்பட்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு உணர்விருக்கிறது. ஆனால் என்னால் அசைய முடியவில்லை. என்னுடைய விரலைக் கூட அசைக்க முடியவில்லை. அப்போது கணத்துக்குக் கணம் நான் இறந்தகாலமாகிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. மக்கள் நான்
எப்படி மாறிவிட்டேனென்று பார்க்கும் போது அவர்கள் இறந்த காலத்தையே பார்க்கிறார்கள். நான் அவர்களிடமிருந்து பின்னால் போய்க் கொண்டிருக்கிற காட்சியாக மாறிக் கொண்டிருக்கிறேன்.
பிறகு நான்
கண் விழிக்கும்போது பனிமனிதன் எனக்கருகில் படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவன் உறங்கும்போது மூச்சு கூட விடமாட்டான். அப்படியே இறந்த மனிதனைப் போலக் கிடப்பான். ஆனால் நான்
பனிமனிதனைக் காதலித்தேன். நான் அழுதேன். என்னுடைய கண்ணீர்
அவருடைய கன்னங்களில் சொட்டியது. அவன் எழுந்து
என்னைத் தன் கரங்களில் பிடித்துக் கொண்டான்.
“ நான் மோசமான கனவு கண்டேன் “ என்று அவனிடம் சொன்னேன்.
“ அது வெறும் கனவு தான்..கனவுகள் இறந்தகாலத்திலிருந்து
வருகின்றன. எதிர்காலத்திலிருந்தல்ல.நீ அவற்றுக்குக்
கட்டுப்பட வேண்டியதில்லை.. கனவுகள் தான் உனக்குக் கட்டுப்பட்டவை. உனக்குப் புரிந்ததா? “
நான்
சமாதானப்படவில்லையென்றாலும் “ சரி “ என்று சொன்னேன்.
அந்தப் பயணத்தை
ரத்து செய்ய ஒரு நல்ல காரணத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் நானும் என்னுடைய கணவரும் தெந்துருவத்துக்குச் செல்லும் விமானத்தில் ஏறினோம். விமானப்பணிப்பெண்கள் அமைதியின்றி இருந்தார்கள். நான் சன்னல் வழியே வெளியே பார்க்க விரும்பினேன். ஆனால் மேகங்கள் அடர்த்தியாக இருந்ததால் என்னால் எதையும் பார்க்கமுடியவில்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு சன்னலில் பனித்திரை மூடியது. என்னுடைய கணவர்
அமைதியாக ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். நான் விடுமுறைக்காலப்பயணத்தின் உற்சாகம் எதையும் உணரவில்லை. நான் ஏற்கனவே
தீர்மானிக்கப்பட்ட அசைவுகளையும், காரியங்களையும் மட்டுமே செய்து கொண்டிருந்தேன்.
நாங்கள் படிகளின்
வழியே கீழே இறங்கி தெந்துருவத்தின் பூமியில் காலடி எடுத்து வைத்தோம். என்னுடைய கணவரின்
உடல் தள்ளாடுவதை நான் உணர்ந்தேன். கண்ணிமைக்கும் நேரத்தும் குறைவான பொழுதுக்கு அல்லது அரை நொடிப் பொழுதுக்கு நீடித்தது. அவருடைய முகவெளிப்பாட்டில்
எந்த மாற்றமுமில்லை. ஆனால் அது நிகழ்ந்ததை நான் பார்த்தேன். பனிமனிதனுக்குள்ளே ஏதோ ஒன்று ரகசியமாக, ஆனால் வன்மையாக
அதிர்ந்தது. அவர் நின்று வானத்தை நிமிர்ந்து பார்த்தார். பிறகு அவருடைய கைகளைப் பார்த்தார். அவர் நீண்ட நெடிய பெருமூச்சை வெளிவிட்டார். பிறகு என்னைப் பார்த்து பலைக் காட்டினார்.
“ இந்த இடத்தையா நீ பார்ப்பதற்கு விரும்பினாய்? “ என்று கேட்டார்.
“ ஆமாம் இதுதான்..” என்று நான் சொன்னேன்.
தென்துருவம் நான்
எதிர்பார்த்திருந்ததைப் போல தனிமையில் இருந்தது. கிட்டத்தட்ட யாருமே
அங்கே வாழவில்லை. அங்கே சிறியதொரு
எந்த விசேஷமுமில்லாத நகரம் இருந்தது. அந்த நகரத்தில்
ஒரு ஹோட்டல் அதுவும் சிறியது எந்த விஷேசமுமில்லாதது. தென் துருவம் சுற்றுலாப்பயணிகளுக்கான் இடம்
இல்லை. அங்கே ஒரு
பெங்குயின் கூட இல்லை. அங்கே தென்
துருவத்தின் ஒளி தெரியவில்லை. மங்கே மரங்களோ, பூக்களோ, நதிகளோ, குளங்களோ இல்லை. நான் எங்கே
போனாலும் பனி தான். என்னால் பார்க்க
முடிந்தவரை எங்கேயும் பனியின் தரிசு நிலம் தான் பரந்திருந்தது.
என்னுடைய கணவர்
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் என்று ஆரவத்துடன் நடந்தாரென்றாலும் எதையும் முழுமையாகக் காணவில்லை. அவர் அங்குள்ள
உள்ளூர் மொழியை மிக விரைவிலேயே கற்ருக்கொண்டார். அங்கிருந்த நகரத்து மக்களிடம் பனிப்பாறை சரியும் போது ஏற்படும் நொறுங்கிய குரலில் பேசினார். முகத்தில் தீவிரமான
பாவத்துடன் அவர்களிடம் மணிக்கணக்கில் பேசினார்.
ஆனால்
எனக்கு அவர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்களென்பதைத் தெரிந்து கொள்ள ஒரு வழியுமில்லை. என்னுடைய கணவர் என்னைக் கைவிட்டு விட்டாரென்று நான் உணர்ந்தேன். என்னை என் பொறுப்பிலேயே விட்டு விட்டார்.
அடர்ந்த பனி
சூழ்ந்த வார்த்தைகளேயில்லாத அந்த உலகத்தில் கடைசியாக இருந்த என்னுடைய எல்லாச்சக்தியையும் கொஞ்சம் கொஞ்சமாக் கொஞ்சம் கொஞ்சமாக நான் இழந்தேன். இறுதியில், இதற்கு
மேலும் எரிச்சலைத் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு நான் சக்தியிழந்திருந்தேன். நான் எங்கோ என்னுடைய உணர்ச்சிகளின் திசைகாட்டியைத் தொலைத்து விட்டிருந்தேன். நான் போக வேண்டிய பாதையைத் தொலைத்து விட்டேன். கலத்தின் பாதையைத்
தொலைத்து விட்டேன். என்னுடைய ஐம்புலன்களின்
உணர்ச்சிகளைத் தொலைத்து விட்டேன். எப்போது இது
தொடங்கியதென்று எனக்குத் தெரியவில்லை. எப்போது முடியுமென்றும் தெரியவில்லை. ஆனால் நான் தன்னுணர்வு அடைந்தபோது நான் பனி உலகத்திலிருந்தேன். அனைத்து
நிறங்களையும் வடிகட்டித் தனிமையில் மூடிய முடிவிலாத பனிக்காலம்.
கிட்டத்தட்ட என்னுடைய
எல்லா உணர்வுகளும் போன பிறகு நான் தெரிந்து கொண்டது இவ்வளவு தான். தென் துருவத்திலிருக்கும்
என்னுடைய கணவர் முன்பிருந்தவரில்லை. அவர் எப்போதும் செய்வதைப் போலவே என்னைக் கவனித்துக் கொண்டார். என்னிடம் அன்பாகப்
பேசினார். அவர் என்னிடம்
உள்ளார்ந்து பேசிய விஷயங்களை என்னால் சொல்லி விடமுடியும். ஆனால் நான் ஸ்கை ரிசார்ட்டில் சந்தித்த பனிமனிதனாக இனிமேலும் இருக்க முடியாது என்பதையும் நான் தெரிந்து கொண்டேன்.
இதை யாருடைய
கவனத்துக்கும் கொண்டுவருவதற்கு எனக்கு எந்த வழியுமில்லை. தென் துருவத்திலிருந்த ஒவ்வொருவருக்கும் அவரைப் பிடித்திருந்தது. நான் பேசிய ஒரு வார்த்தையைக் கூட அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களுடைய வெள்ளை நிற மூச்சுக்காற்றை இழுத்து விட்டுக் கொண்டும், நகைச்சுவையாகப் பேசிக் கொண்டும், விவாதித்துக் கொண்டும், அவர்களுடைய சொந்த
மொழியில் பாடல்களைப் பாடிக் கொண்டுமிருந்தார்கள். அப்போது நான் எங்களுடைய அறையில் உட்கார்ந்து இன்னும்
வரப்போகும் பல மாதங்களுக்கும் தெளிவின்றியே இருக்கப்போகிற சாம்பல் நிற வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். எங்களை இங்கே இறக்கி விட்ட போன சிறிது நேரத்திலிருந்தே விமான ஓடு தளம் என்னுடைய இதயத்தைப் போலவே கடினமான பனிப்படலத்தால் மூடப்பட்டிருந்தது.
“ குளிர்காலம் வந்து விட்டது. அநேகமாக மிக
நீண்ட குளிர்காலமாக இருக்கும்.. இனிமேல் விமானங்களோ, கப்பல்களோ, இருக்காது.. அதுமட்டுமில்லை.. எல்லாம் உறைந்து விடும். அடுத்த வசந்தகாலம்
வரை நாம் இங்கேயே தான் இருக்க வேண்டும் போல் தெரிகிறது..” என்று என்னுடைய கணவர் சொன்னார்.
தென் துருவத்துக்கு
வந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு நான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்தேன். எனக்குப் பிறக்கப்போகும் குழந்தை குட்டி பனிமனிதனாக இருக்கலாம் என்பதும் எனக்குத் தெரியும். என்னுடைய கருப்பை
உறைந்து போய் விட்டது. என்னுடைய பனிக்குட
நீர் சேறாக இருந்தது. அதனுடைய குளிர்ச்சியை
எனக்குள்ளே உணர முடிந்தது. என்னுடைய குழந்தை
அப்பாவைப் போலவே இருப்பான். பனிக்கட்டிகளாலான கண்கள், பனி
விளிம்பிட்ட விரல்கள், அத்துடன் எங்களுடைய
புதிய குடும்பம் இனி ஒரு போதும் தென் துருவத்தை விட்டு ஒரு அடி எடுத்து வைக்காது. முடிவிலாத கடந்தகாலம்
பற்றி,
எல்லாம்
புரிந்தாலும் சுமையாக இருந்தது. அது எங்களை
தன்பிடியில் வைத்திருந்தது. அதை எங்களால் ஒருபோதும் உதற முடியவில்லை.
இப்போது கிட்டத்தட்ட
இதயம் என்று எதுவுமில்லை. என்னுடைய கதகதப்பு வெகு தூரத்துக்குப் போய் விட்டது. சிலசமயம் வெப்பம்
என்ற ஒன்று இருந்தது என்பதையே சந்தேகப்பட்டேன். இந்த இடத்தில் உலகத்தில் உள்ள வேறு யாரையும் விட தனியளாக இருந்தேன். நான் அழுதபோது
பனிமனிதன் என்னுடைய கன்னங்களில் முத்தமிட்டான். என்னுடைய கண்ணீர் பனியாக மாறிவிட்டது. உறைந்த அந்த கண்ணீர்த்துளிகளை அவன் கையிலேந்தி அவனுடைய நாவில் போட்டான்.
“ பார்.. நான் உன்னை எப்படிக் காதலிக்கிறேன்..” என்று அவன் சொன்னான். அவன் உணமையைத்
தான் சொன்னான். ஆனால் எங்கிருந்துமில்லாமல்
வீசிய காற்று அவனுடைய வெள்ளை வார்த்தைகளைக் கடந்தகாலத்துக்கும் பின்னால் பின்னால் தள்ளித் துடைத்தது.
_நன்றி - சிறுகதை காலாண்டிதழ்
“
No comments:
Post a Comment