Saturday, 14 June 2025

குரங்கு கையில் கொட்டு

 

குரங்கு கையில் கொட்டு

உதயசங்கர்




திடீரென்று ஒரு நாள் மேட்டூர் காட்டில் ஒரு சத்தம் கேட்டது. அதிகாலையில் அந்தச் சத்தம் கேட்டது. காலையில் கண்விழித்த அத்தனை பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் அந்தச் சத்தம் கேட்டது. காடே அதிரும்படியான சத்தம். என்ன சத்தம் தெரியுமா?

ஒரு கொட்டுச்சத்தம்.

டம் டம் டம் டம் டம டம டம டம டும் டும் டும் டுடும் டுடும் டுடும்..

இப்படிச் சத்தம் ஒரு ஆலமரத்தில் இருந்து கேட்டது. முதலில் இந்தச் சத்தத்தைக் கேட்டு பயந்தன மிருகங்கள்.

யானை புலியிடம் கேட்டது,

என்ன சத்தம்? “

குருவி பருந்திடம் கேட்டது,

என்ன சத்தம்? “

பாம்பு தவளையிடம் கேட்டது,

என்ன சத்தம்? “

குயில் காகத்திடம் கேட்டது,

என்ன சத்தம்? “

எல்லாரும் ஆலமரத்தை நோக்கி வந்தார்கள். ஆலமரத்தின் உச்சாணிக்கிளையில் ரங்கு குரங்கு மடியில் ஒரு கொட்டை வைத்துக் கொண்டு அடித்துக் கொண்டிருந்தது.

டம் டம் டம் டம் டம டம டம டம டும் டும் டும் டுடும் டுடும் டுடும்..”

காதைப் பிளக்கும் ஒலி. புலி உறுமியது. “ டேய் ரங்கு.. நிறுத்துடா..”

ரங்கு குரங்கு நிறுத்தவில்லை.

டம் டம் டம் டம் டம டம டம டம டும் டும் டும் டும் டுடும் டுடும் டுடும்

காது கிழியும்படி அடித்துக் கொண்டிருந்தது ரங்கு குரங்கு. வயதான விலங்குகள் எல்லாம் அந்தச் சத்தத்தினால் உடல் நடுங்கின.

வயதான பரிநரி பரிதாபமாக ஊளையிட்டது,

ஊஊஊஊஊஊ யாராவது ரங்குவை நிறுத்துங்களேன்.. நான் செத்துருவேன் போலருக்கே..”

சின்ன வயது மிருகங்கள் எல்லாம் அந்தக் கொட்டுச் சத்தத்தினால் நடனம் ஆட ஆரம்பித்தனர்.

ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ரங்கு குரங்கு கொட்டு அடித்தது. நேற்று மாலை அது கீழே சமவெளிக்குப் போயிருந்த போது ஒரு குழந்தை கையில் இந்தக் கொட்டு இருந்தது. அந்தக் குழந்தை கொட்டை டம் டம் டம் என்று அடித்ததைப் பார்த்த ரங்குவுக்கு ஆசை வந்தது. குழந்தை கொட்டைக் கீழே வைத்த சமயத்தில் அதை எடுத்துக் கொண்டு ஓடி வந்து விட்டது.

இரவு முழுவதும் கழுத்தில் கொட்டை மாட்டிக் கொண்டு தூங்கியது. தூக்கத்தில் கொட்டு ஒரு கிளையில் மோதிவிட டம் என்று சத்தம் கேட்டது.

அவ்வளவு தான்.

அப்போதிருந்து ரங்கு கொட்டடிக்க ஆரம்பித்தது. அன்றும் மறுநாளும் ரங்கு கொட்டை அடித்துக் கொண்டிருந்தது. எங்கு போனாலும் கொட்டை அடித்துக் கொண்டே போனது.

அணில் குணில் ரங்கு குரங்கிடம் போய்,

ரங்கண்ணே.. நான் உங்களுக்கு கொட்டைகள் தாரேன்.. பழங்கள் கூடத் தாரேன்.. கொட்டடிக்கிறதை நிறுத்துண்ணே..”

ரங்கு குரங்கு கேட்கவில்லை.

டம் டம் டம் டம்

கரடிகிரடி சொன்னது,

டேய் ரங்கு நான் உனக்குத்தேன் தாரேண்டா.. கொட்டடிக்கிறதை நிறுத்துடா..”

ரங்கு குரங்கு கேட்கவில்லை.

டம டம டம டம டம

யானைசேனை சொன்னது,

டேய் ரங்கு தம்பி.. உன்னை காட்டுக்குள்ளே எல்லா இடங்களுக்கும் கூட்டிட்டுப் போரேன்.. கொட்டடிக்கிறதை நிறுத்து..”

ரங்கு குரங்கு கேட்கவில்லை.

டம் டம் டம் டம டம டம

சிறுத்தைப்புலி கோபத்துடன் சொன்னது,

டேய் பொடிப்பயலே.. இப்ப கொட்டடிக்கிறதை நிறுத்தலை.. நான் மரத்துமேலே ஏறி உன்னைக் கொன்னுருவேன்..”

என்று கத்தியது.

ரங்கு குரங்கு கேட்கவில்லை.

டம்ம்ம்ம்ம் டமடமடம டம டம

விலங்குகளும்,

ரங்கு.. காது வலிக்குது.. கொட்டடிக்கிறதை நிறுத்து.. “ என்று கெஞ்சிக்கேட்டும் கேட்கவில்லை ரங்கு.

  ஒருசமயம் எல்லாவிலங்குகளும் அந்தக் காட்டைவிட்டே ஓடிவிடலாம் என்று கூட யோசித்தன. அப்போது யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது.

எங்கிருந்தோ ஒரு இருவாச்சி வேகமாகப் பறந்து வந்தது. அந்தக் கொட்டில் அலகினால் ஓங்கி ஒரு கொத்து கொத்தியது.

கொட்டில் பெரிய ஓட்டை விழுந்தது. ரங்கு கோபமாகத் திரும்பியபோது இருவாச்சி அங்கிருந்து பறந்து போய் விட்டது.

ரங்குவின் கொட்டு இப்போது,

டுப் டுப் டுப்என்று முனகியது. அடிக்க அடிக்க ஓட்டை பெரிதாகக் கிழிந்து கொண்டே வந்தது. ரங்கு கொட்டைக் கீழே தூக்கி வீசியது. இப்போது ரங்கு குரங்குக்கு பசித்தது.

அணில் குணிலிடம் போய் கேட்டது,

எனக்கு கொட்டைகள் இருந்தால் கொடு.. “ என்றது.

அணில் குணில் முகத்தைத்திருப்பிக் கொண்டது.

கரடி கிரடியிடம் போய்,

அண்ணே எனக்குக் கொஞ்சம் தேன் கொடுங்களேன்..” என்று கேட்டது. கரடிகிரடி கையில் வைத்திருந்த தேனடையை அப்படியே வாயில் போட்டு விழுங்கியது.

இனி யாரிடமும் கேட்க ரங்குகுரங்குக்கு மனமில்லை. எப்படியும் எல்லோரும் எதுவும் கொடுக்கமாட்டார்கள் என்று நினைத்து வீட்டுக்குப் போனது.

அங்கே கொட்டைகள் பழங்கள் தேனடை எல்லாம் இருந்தன.

ரங்கு குரங்கு, “ எல்லோருக்கும் நன்றி நன்றி நன்றிஎன்று சொன்னது. .

நன்றி - விஞ்ஞானத்துளிர்


 

4.    

No comments:

Post a Comment