Saturday, 4 April 2026

பஞ்ச தந்திரக்கதைகள் சிறார் இலக்கியமா?

 

1.          பஞ்ச தந்திரக்கதைகள் சிறார் இலக்கியமா?

உதயசங்கர்

    பொதுவாகச் சிறார் இலக்கியம் என்று பேசினாலே பெரியவர்களுக்கு காக்கா வடை நரி கதை தான் மின்னலெனப் பளிச்சிடும். அந்தக் கதைகளைச் சொல்லாத பெரியவர்களும் கிடையாது. கேட்காத குழந்தைகளும் கிடையாது. ஏன் எழுத்தாளர்களே கூட அந்தக் கதைகளைக் சிறார்களுக்கானது தான் என்று நம்புகிறார்கள். பஞ்ச தந்திரக்கதைகளை அப்படியே பிரதியெடுத்து நூற்றுக்கணக்கான புத்த கங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நூலகங்களையும் அதை தன்னுடைய சொந்தப்படைப்பாக் கணக்கிடும் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் குறைந்த து பத்திருபது பஞ்ச தந்திரக்கதைகள் நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

 பஞ்ச தந்திரக்கதைகளின் தோற்றம்

 பஞ்ச தந்திரக்கதைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாய்மொழிக்கதைகளாக இருந்து கி.மு 2 நூற்றாண்டிலிருந்து கி.பி. 3 ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.5 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் சமஸ்கிருதச் செய்யுள்களாக எழுதப்பட்டிருக்கலாமென்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

காஷ்மீர் அல்லது தென்மேற்கு ராஜ்ஜியத்தின் அரசன் அமரசக்தி. அவருடைய மூன்று புதல்வர்களான பகுசக்தி, உக்கிரசக்தி, அனந்த சக்தி, ஆகியோர் கல்வியிலும் அரசியலிலும் நாட்டமில்லாமல் இருந்தார்கள். விஷ்ணு சர்மா என்ற எண்பது வயது முதியவர் ( இது புனைபெயராகவும் இருக்கலாம் ) அவர்களுக்கு அரசநீதி, அரசியல் சூழ்ச்சி, அரசியல் தந்திரம், அரசியல் உத்தி, அரசியல் ரகசியங்கள் ஆகியவற்றைப் போதிக்க விலங்குகளை உருவகமாக க் கொண்டு சொன்ன கதைகள் தான் பஞ்ச தந்திரக்கதைகள்.

ஐந்து அரச நீதிகளான, மித்ர பேதம் ( நட்புப் பிரிவினை ), மித்ர லாபம் ( நட்புப்பேறு ), காக்க கோலூகீயம் ( அடுத்துக்கெடுத்தல் ), லப்தப்பிராணசம் ( பெற்றதை இழத்தல் ), அபரீக்‌ஷீதாகாரகம் ( அடாவடியான செயல் ) இவற்றை அடிப்படையாக க் கொண்டே பஞ்ச தந்திரக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

ஐந்து பாகங்களாக எழுதப்பட்டுள்ள இந்தக் கதைகளில் விலங்குகள் கதாபாத்திரங்களாக இருந்தாலும் அவை மனிதப்பெயரும் மனித குணமும், மனித சிந்தனைகளையும் வெளிப்படுத்துவதாகவும்  சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

 இந்தக் கதைகள் வைணவ சமயத்தின் பிரதியாகக் கருதப்படுகிறது. இந்தக் கதைகள் இந்து சமயத்தின் அரசியல் சிந்தனைகளின் கருவூலமாகவே இருக்கின்றன.

பஞ்ச தந்திரக்கதைகள் கிட்ட த்தட்ட 200 விதமான பாடபேதங்களுடன் உலகமெங்கும் பரவியிருக்கிறது. எந்த ஒரு இட த்திலும் இந்தக் கதைகள் குழந்தைகளுக்கான கதைகளென்று குறிப்பிடப்படவில்லை.

விலங்குகளும் பறவைகளும் வருவதாலேயே குழந்தைகளுக்கான கதைகளென்று நம்பி இன்று வரை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதிக் கொண்டிருக்கிறோம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய நிலவுடமைச் சமூகத்தின் அரசியல் நீதி நெறிமுறைகளைச் சொல்லும் கதைகளை இப்போது குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்ற கேள்வியை நாம் கேட்கவேண்டியவர்களாக இருக்கிறோம்.

இந்தக் கேள்வி பஞ்ச தந்திரக்கதைகளுக்கு மட்டுமானதில்லை. தெனாலிராமன், பீர்பால், மரியாதை ராமன், முல்லா கதைகள், யேசு கதைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கதைகளுக்கும் பொருந்தும்.

எனவே பஞ்ச தந்திரக்கதைகள் குழந்தைகளுக்கானதில்லை.

நன்றி - புக் டே.

No comments:

Post a Comment