Monday 16 February 2015

ஆண்டிபயாட்டிக் அவசியமா?

antibiotics உதயசங்கர்

ஒரு வேடிக்கையான கதை ஒன்று இப்போது மருத்துவ வட்டாரங்களில் உலவி வருகிறது. கி.மு. 2000 ஆம் ஆண்டில் ஒருவன் எனக்கு ஜலதோஷம், சளி, காய்ச்சல் என்றால் அவனை இந்தப்பச்சிலையை அல்லது இந்த வேரைச் சாப்பிடு என்றார்கள் மருத்துவர்கள். பின்னர் கி.மு.1000 ஆம் ஆண்டில் ஜலதோஷம், சளி, காய்ச்சல் என்றால் வேரையோ, பச்சிலையையோ சாப்பிடாதே அது கடவுளால் ஆசீர்வதிக்கப்படவில்லை. பூஜை செய், ஜெபம் பண்ணு, தொழுகை நடத்து, என்று மாந்திரீக நடவடிக்கைகளைச் செய்யச் சொன்னார்கள். கி.பி. 1850 களில் மாந்திரீகம் மூடபழக்கம் இதோ இந்தக் கஷாயத்தைக் குடி என்றார்கள். கி.பி.1950 களில் கஷாயம் விஷம். இதோ சோதனைச்சாலைகளில் நிருபிக்கப்பட்ட மாத்திரைகளைச் சாப்பிடச் சொன்னார்கள். கி.பி. 1980- களில் மாத்திரைகள் போதுமானவையில்லை. இதோ நுண்ணுயிரிக்கொல்லி ( Antibiotics ) சாப்பிடுங்கள் என்றார்கள். இப்போது கி.பி. 2000 ஆம் ஆண்டில் மறுபடியும் பச்சிலையையோ வேரையோ சாப்பிடச் சொல்கிறார்கள்!?. இந்தக் கதையிலுள்ள முக்கியமான விஷயம் மாற்றம் அல்ல. இயற்கைக்குத் திரும்புதலே மனித குலத்துக்கு இறுதியான வழி என்பது தான்.

இப்போது மழைக்காலம் ஒரு மருத்துவரிடம் சென்று எனக்கு காய்ச்சல், சளி, இருமல், தும்மல், என்று சொன்னதும் அவர் ஒரு அனால்ஜெசிக், ஒன்றோ இரண்டோ நுண்ணுயிரிக்கொல்லிகளையும் தன்னுடைய மருந்துச்சீட்டில் எழுதித் தருகிறார். நாமும் அதை வாங்கிச் சாப்பிடுகிறோம். எல்லாம் சரியாகிவிட்டது. உண்மையில் எல்லாம் சரியாகி விட்டதா? முதலில் நமது உடல் தனக்குள் ஏற்படுகிற பாதிப்புகளை நம்முடைய பாதுகாப்பு அமைப்புக்கும், நமக்கும் தெரியப்படுத்துகிற அறிகுறிகளே இந்தக் காய்ச்சல், சளி, தும்மல், இருமல், என்று புரிந்து கொள்வோம். இன்னொரு வகையில் உடலின் உயிராற்றலைப் பாதிக்கும் நுண்ணுயிரிகள் ( வைரஸ்கள் பாக்டீரியாக்கள் ) உடலுக்குள் நுழைந்திருப்பதைச் சொல்லும் ரெட் அலர்ட் அலாரம். இந்த அலாரம் நம்முடைய பாதுகாப்பு படையணிகள் யுத்தத்துக்கு தயாராகச் சொல்வதற்கும் யுத்தம் நடத்துவதற்குமான முழக்கம். நம்முடைய உடலின் பாதுகாப்பு அமைப்பின் இன்னொரு விஷேசமான காரியம். ஒரு முறை நமது உடலில் நுழைந்து உயிராற்றலுக்கும் உடலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளின் பையோடேட்டாவை தன்னுடைய ஞாபகத்தொகுப்புகளில் பத்திரப்படுத்திக் கொள்ளும். அது மட்டுமல்ல எதிரி நுண்ணுயிரியின் யுத்த முறைகளையும், யுத்த தந்திரங்களையும் அதற்கு எதிராக தான் எடுத்த எதிர் நடவடிக்கைகளையும்கூட தன்னுடைய மெமெரியில் பதிவு செய்து கொள்ளும். ஒரு முறை கொன்றொழித்த நுண்ணுயிரிகள் மீண்டும் உடலுக்குள் நுழைந்தால் போதும் உடனே ஒரு பொத்தானைத் தட்டி தன்னுடைய ஞாபகத்தொகுப்பிலிருந்து அந்த நுண்ணுயிரியை எதிர்கொள்வதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துவிடும் கணப்பொழுதில். ஆனால் உடலினுள்ளே நுழைந்திருக்கும் நுண்ணுயிரியின் தன்மைகளைப்பற்றி நமது பாதுகாப்பு அமைப்புக்குத் தெரியுமுன்னே நாம் சாப்பிடும் நுண்ணுயிரிக்கொல்லிகள் அதை அழித்து விடும். அதனால் நம்முடைய பாதுகாப்பு அமைப்பில் அந்த நுண்ணுயிரிகளைப் பற்றிய எந்தப்பதிவுகளும் இருக்காது. அது மட்டுமல்லாமல் பிறகெப்போதும் அந்த நுண்ணுயிரிகள் தாக்குதல் தொடுக்கும் போது வெளியிலிருந்து நுண்ணுயிரிக்கொல்லியின் ஆதரவு தேவைப்படும் அளவுக்குப் பலகீனமாகி விடும். தூண்டத்தூண்ட துலங்கும் விளக்கு போல தான் நம்முடைய பாதுகாப்பு அமைப்பும் நுண்ணுயிரிகளின் தாக்குதல்களைத் தானே சமாளிக்கும்போது மேலும் மேலும் பலம் பெறும்.

நமது உடல் ஆரோக்கியமாக, முழுபலத்துடன், உற்சாகமாக இயங்குவதற்கு நமது உடலுக்குள்ளேயே சுமார் மூன்று பவுண்ட் அளவுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் இருக்கின்றன. இவை நமது உடலின் நண்பர்கள். இந்த நண்பர்களைப் பற்றிக் கவலைப்படவில்லையென்றால் நமது உடல் மெல்ல மெல்ல நலிவடையும். இவர்களுடைய இருத்தல் மிக மிக அவசியம். நாம் நோய்களுக்கு வெளியிலிருந்து சாப்பிடும் நுண்ணுயிரிக்கொல்லிக்கு என்ன தெரியும்? செக்குன்னு தெரியுமா? சிவலிங்கம்னு தெரியுமா? அதன் வேலை நுண்ணுயிரிகளை அழிப்பது. அந்த நுண்ணுயிரிகள் நல்லதா கெட்டதா என்பதைப் பற்றி அதற்குக் கவலையில்லை. அழிக்கப்போகிற நுண்ணுயிரிகளின் வேலைகளைப் பற்றி அதற்குத் தெரியாது. ஆக அது உடலுக்குள் புகுந்து நுண்ணுயிரிகள் அனைத்தையும் நல்லது கெட்டது அனைத்தையும் அழிக்கிறது. நமது உடலில் உள்ள நன்மை நுண்ணுயிரிகள் உடலில் நுழையும் தீய பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சை தொற்று, போன்றவற்றை எதிர்க்கும் முதல் படையணி. அது மட்டுமல்லாமல் அவை உடலுக்குத் தேவையான வைட்டமின் பி யையும், நம்முடைய செரிமானத்தை மேம்படுத்தவும், தொற்று நோய்க்கு எதிராகவும், செயல்படுகிறது. அதோடு அவை பாக்டீரிசியான் ( bactericions ) என்ற பொருளையும் உற்பத்தி செய்கிறது. இந்த பாக்டீரிசியான்கள் இயற்கையான நுண்ணுயிரிக்கொல்லியாகச் செயல்படுகிறது.

இத்தகைய நன்மை நுண்ணுயிரிகளையும் சேர்த்து வெளியிலிருந்து நாம் சாப்பிடும் நுண்ணுயிரிக்கொல்லிகள் கொன்று விடுகின்றன. ஒரு முறை நீங்கள் எடுக்கும் நுண்ணுயிரிக்கொல்லி மருந்துகளினால் அழிந்துவிடும் நன்மை நுண்ணுயிரிகள் திரும்பவும் உருவாக குறைந்தது ஆறு மாதங்களாகும். அது மட்டுமல்ல தொடர்ந்து வெளியிலிருந்து சாப்பிடும் நுண்ணுயிரிக்கொல்லிகளினால் தீமை பாக்டீரியாக்களுக்கும், வைரஸ்களுக்கும் அவற்றினுடைய வலிமை அதாவது தற்காப்புத்திறன் கூடிக்கொண்டே போகிறது. எனவே வெளியிலிருந்து எடுக்கும் நுண்ணுயிரிக்கொல்லிகளின் அளவும் கூடிக்கொண்டே போகிறது. தேவைக்கு அதிகமான நுண்ணுயிரிக்கொல்லிகளை வெளியேற்றும் பணியைச் செய்யும் சிறுநீரகங்களும் சிரமப்படும். அளவுக்கு அதிகமான வேளைப்பளுவால் சில சமயம் சிறுநீரகங்கள் வேலைநிறுத்தம் செய்யவும் கூடும். உடல் பலகீனமாகும்.

எனவே அனாவசியமாக நுண்ணுயிரிக்கொல்லிகளைச் சாப்பிடக்கூடாது. மருத்துவர்களும் எல்லா வைரல் தொற்றுகளுக்கும் நுண்ணுயிரிக்கொல்லிகளைச் சாப்பிட பரிந்துரைக்கக்கூடாது. அவசியமோ, கட்டாயமோ இருந்தால் மட்டுமே நுண்ணுயிரிக்கொல்லிகளை நோயாளர்களுக்குக் கொடுக்க வேண்டும்.. நோயாளரைப் பார்க்கும்போது சகமனித நேசத்தோடு அவரைக் குணப்படுத்த எந்த வகையான எளிய உடலுக்குத் தீங்கிழைக்காத மருந்துகளினால் குணப்படுத்த வேண்டும் என்று யோசிக்க வேண்டும். பதிலாக நோயாளரை பணங்காய்ச்சி மரமாக நினைக்கக்கூடாது. ஏனெனில் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க உதவி செய்வதே மருத்துவர்களின் தலையாயக் கடமை

இயற்கையான எதிர்ப்புசக்தியை எப்படி அதிகரிப்பது? எதற்கெடுத்தாலும் மருந்துகளை உட்கொள்ளும் பழக்கத்தை முதலில் நிறுத்த வேண்டும். உடல் தன்னுடைய பாதுகாப்பு படையைப் பயன்படுத்த அவகாசம் தரவேண்டும். தீமை நுண்ணுயிரிகளும் நன்மை நுண்ணுயிரிகளும் நம் உடலில் அதிகமாகவோ குறைவாகவோ இருப்பதற்கு நம்முடைய வாழ்க்கை முறை, உணவுப்பழக்கவழக்கம் முக்கியமான காரணம். எனவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவு, சரிவிகித சம உணவு அவசியம். இந்த உணவே நம்முடைய எதிர்ப்புசக்தியைத் தூண்டி பாதுகாப்புப்படைக்கு பலத்தைத் தரும். அந்த பலத்தினால் எந்த தீயநுண்ணுயிரிகளையும் உயிராற்றல் அழித்து ஆரோக்கியத்தை நிலைநாட்டும்.

நன்றி- நலம்வாழ, தமிழ் இந்து

6 comments:

  1. நல்ல தகவல்

    ReplyDelete
  2. 1.பல காரணங்களினால் இந்த நோய் எதிர்ப்பு சக்தி பலருக்கு குறைந்து விடுகிறது.

    2.இயற்கையாக நோய் குணமாக சில தினங்கள் தேவைப்படும். இப்போதுள்ள காலத்தில் அதற்கு நேரமில்லை. நோயின் வெளிப்படை குணங்களை மறைத்து நம் அன்றாட வேலைகளைத் தொடரத் துடிக்கிறோம்.

    இதுதான் உயிர்க்கொல்லி மருந்துகள் சாப்பிடக் காரணம். தேவையான ஓய்வும் நல்ல உணவும் இருந்தால் பல நோய்கள் தானாகவே குணமாகிவிடும். ஆனால் அதற்கு எங்கே நேரம் இருக்கிறது?

    ReplyDelete
    Replies
    1. இந்த அவசரயுகத்தின் அவசர வாழ்வு புதிய நோய்களையும் உருவாக்குகிறது. அதனால் மருத்துவத்தின் அறவுணர்வு குறைந்து கொண்டே வருவது தான் பிரச்னை. நன்றி பழனி கந்தசாமி ஐயா!

      Delete
  3. மிகவும் பயனுள்ள தகவல் ஐயா
    நன்றி

    ReplyDelete