Thursday 12 February 2015

மீன் காய்க்கும் மரம்

 

மலையாளத்தில்- வைசாகன்

தமிழில்- உதயசங்கர்inthu__2307007g

இந்து பயந்து போனாள். வழியில் ஒரு பிள்ளையைக்கூட காணலியே. ரெம்ப நேரம் ஆயிருச்சோ?. பள்ளிக்கூடத்தில் மணி அடிச்சிருப்பாங்களோ? புதிதாக வந்திருக்கிற வாத்தியார் சும்மா விடமாட்டாரே!

நேற்றே தாமதமாய் வருபவர்களுக்கு என்ன தண்டனை என்று சொல்லியிருந்தார். “ புத்தகங்களைத் தலையில் வைத்துக் கொண்டு ரெம்ப நேரம் நிக்கணும்..”

அதை நினைத்தபோது இந்துவுக்கு வெட்கமாயிருந்தது. இன்று அப்படி நிற்க வேண்டியது வருமோ? வேகமாக நடந்தால் மட்டும் போதாது. ஓடணும். இந்து ஓடத் தொடங்கினாள். ஓட்டத்தில் என்ன வேகம்? ஓடுகிற வண்டியில் போகும்போது பின்னால் பாய்ந்து போகிற மரங்களைப் பற்றி யோசித்தாள். அதை மாதிரி இப்போது சாலையின் அருகில் உள்ள மரங்கள் எல்லாம் பின்னால் பாய்ந்து சென்றன. திடிரென ஒரு மரத்திலிருந்து ஏதோ ஒரு கிளியின் சத்தம்.

“ இந்துக்குட்டி…நிலாக்குட்டி…”

இந்துவுக்கு ஆச்சரியம். அந்தக் கிளியின் குரல் அம்மாவின் குரலைப் போலவே இருந்ததே! இதென்ன ஒரு மாயாஜாலம்! பறவைகளால் பேச முடியுமா?

தார்ச்சாலையில் குழந்தைகள் யாரையும் பார்க்க முடியவில்லை என்பது மட்டுமல்ல. ஒரு ஜீவராசியையும் பார்க்க முடியவில்லை. ஒரு வாகனமும் சாலையிலில்லை. ஆட்களுக்கும் வாகனங்களுக்கும் என்ன ஆச்சு? திடிரென ஞாபகம் வந்தது. இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிற நேரமா இது? சீக்கிரமாக பள்ளிக்கூடம் போய்ச் சேரணும்.

ஓட்டத்தின் வேகம் கூடியது. இன்னிக்கு என்ன இப்படி? ஓடுவது கஷ்டமாகத் தெரியவில்லை. காற்றில் பறக்கிற தாத்தாப்பூச்சியைப் போல அப்படியே பறந்து போனாள். இந்து திடுக்கிட்டுப் போனாள். திடீரென கருத்த தார்ச்சாலை மறைந்து போய்விட்டது. இப்போது அவளுக்கு முன்னால் ரெம்ப தூரத்துக்கு மணல் மட்டுமே விரிந்து கிடந்தது

சீனியைப் போல வெள்ளைமணல். தார்ச்சாலை மணலுக்குள் தலையை நுழைத்து கலந்து சேர்ந்து மறைந்திருக்கிறது. இந்து திகைத்து சுற்றிலும் பார்த்தாள். சுற்றிலும் மணல் மட்டும் தான்.இன்னொரு சமயமாய் இருந்தால் இந்த வெள்ளைமணலில் உருண்டு புரண்டு விளையாடியிருப்பாள். இப்போது விளையாட்டைப் பற்றி நினைக்கக் கூட முடியவில்லை. உள்ளுக்குள் துக்கம் அதிகரித்தது.

யாராவது மனிதர்களை பார்த்தால் நல்லது! மனிதர்களைப் பார்க்காவிட்டால் கூடப் பரவாயில்லை. ஒரு ஆட்டுக்குட்டியையாவது பார்த்தால் என்ன? இந்து யாராவது ஒரு சேக்காளிக்காக சுற்றும் முற்றும் பார்த்தாள்.

கொஞ்ச தூரத்தில் ஒரு மரம் நின்று கொண்டிருந்தது. அதற்குப் பின்னால் இன்னும் தூரத்தில் இலைகளில்லாத இன்னொரு மரத்தையும் பார்க்க முடிந்தது. கொஞ்சம் ஆறுதலாயிருந்தது. எந்த வழியில் போனால் பள்ளிக்கூடத்துக்குப் போக முடியும்? வழியை யாரிடம் கேட்பது? அவள் கொஞ்ச தூரத்திலிருந்த மரத்தை நிராதரவாய்ப் பார்த்தாள். மரம் வழி சொல்லாது என்று அவளுக்குத் தெரியும். ஆனாலும்…

இந்து மரத்தை நோக்கி நடந்தாள். புது மணலில் கால் புதைந்தது. சூடு தாங்க முடியவில்லை. இனி ஓரு அடி வைக்க முடியாது என்று தோன்றியது. அவள் மரத்திற்கடியில் போய் நின்றாள். அப்பாடா… நிழல் கொஞ்சம் ஆசுவாசமளித்தது. நிழலில் நின்று கொண்டு இந்து தூரமாய்ப் பார்த்தாள். அங்கே ஆகாயம் பூமியைத் தொடுகிற இடத்தில் உயரமாய் தெரிவது என்னவாக இருக்கும்?

மணலிலிருந்து தீப்பொறிகள் போல புழுதி பறந்து மேலே வந்தது. வானத்தில் சூரியன் ஒளிப்பிழம்பாய் ஜொலித்தது. இந்து தூரமாய் பார்த்த அந்த பொருளை உற்றுப் பார்த்தாள். அதிசயம்! அது பள்ளிக்கூடமல்லவா? மின்னுகின்ற மணலில் ஒத்தையாய் நிற்கிற ஒரேஒரு கட்டிடம். இப்படியில்லையே பள்ளிக்கூடம்? பள்ளிக்கூடத்துக்குப் போகிற வழியும் இப்படியில்லையே?

சாலைக்கருகில் படர்ந்து நின்ற மாமரங்கள் எங்கே போச்சு? ஏதோ ஒரு பிரச்னை. வழி தவறி வேறு எங்கேயோ வந்து விட்டோமா? இந்து மிகவும் பயந்து போனாள். அழுகை வந்தது. வீட்டுக்குத் திரும்பிப் போகும் ஆசை கூடிக் கொண்டே வந்தது. அப்படி நடக்கத் தொடங்கும்போது……

தலைக்கு மேலேயிருந்து விசித்திரமான சிரிப்பொலிகள் கேட்டன. இந்து மரத்தின் கிளைகளைப் பார்த்தாள். அதில் இலைகளாகத் தொங்கிக் கொண்டிருந்தது இலைகளில்லை. மீன்கள்! இலைகளைப் போல மரக்கிளைகளில் தொங்கிக் கொண்டு ஆயிரமாயிரம் மீன்கள்! மீன் காய்க்கிற மரமோ இது? இந்து திகைத்து அதைப் பார்த்துக் கொண்டு நிற்கும்போது மீன்கள் கூட்டமாய் சிரித்தன. சிரிப்பு நின்ற போது ஒரு மீன் பேசத் தொடங்கியது.

“ உனக்கு ஆச்சரியமாயிருக்கும். நாங்கள் எங்களைக் காப்பாற்றிக் கொள்ள இந்த மரத்தில் ஏறித் தொங்குகிறோம். உன்னுடைய பள்ளிக்கூடத்துக்குப் பின்னால் ஒரு ஆறு ஓடுதுல்ல..அந்த ஆத்திலுள்ள மீன்கள் தான் நாங்க…ஆத்தில வெள்ளம் இப்போ கரைபுரண்டு ஓடுது…யாருக்கும் பாதுகாப்பில்ல…அந்தா பாரு தூரத்தில உன்னோட பள்ளிக்கூடம். அதுவும் இடிஞ்சி விழுந்துகிட்டிருக்கு…”

இடி முழங்குவதைப்போல ஒரு சத்தம் தூரத்தில் கேட்டது. பள்ளிக்கூடக்கட்டிடம் இடிந்து விழுவதை இந்து பார்த்தாள். எதையும் யோசிக்க முடியவில்லை. தோளில் தொங்கிக் கொண்டிருந்த புத்தகப்பையை விழுந்து விடாமல் பிடித்துக் கொண்டு அவள் ஓடத்தொடங்கினாள். எப்படியாவது வீட்டிற்குப் போய்ச் சேர வேண்டும்.

ரெம்ப தூரம் ஓடியிருக்க மாட்டாள். அப்போதே அவள் வந்த பாதையில் மணல் மூடியிருப்பதைப் பார்த்தாள். என்ன செய்வதென்று தெரியாமல் அவள் ஸ்தம்பித்து நின்றாள். ஆகாயத்திலிருந்து ஒரு முழக்கம். ஆயிரம் ரயில்கள் ஒன்று போல ஓடி வருவதைப் போல… ஒரு பெரிய சப்தம்.. கண்களை அகல விரித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது…. பார்ப்பது என்ன.. கண்ணுக்கெட்டாத உயரத்தில் பொங்கிப் பாய்ந்து வரும் கடலலைகள்! கடல் பொங்கி பூமியை விழுங்குகிறதோ? இனி எங்கே ஓடுவது? இதோ….முழங்கும் கடலலை அருகில் வந்து விட்டது…!

இந்து தன்னால் முடிகிற உச்சத்தில் கூப்பாடு போட்டாள். சத்தம் வெளியே வரவில்லை.

“ இந்துக்குட்டி…கண்ணு இந்துக்குட்டி..”

கண்களைத் திறந்தபோது அப்பாவின் முகம் தெரிந்தது. கடலலைகள் மறைந்த இடத்தில் அப்பாவின் சிரித்த முகம். இந்து வியர்வையில் குளித்திருந்தாள். அவளுடைய அப்பா மடித்த செய்தித்தாளினால் அவளுக்கு விசிறிக்கொண்டிருந்தார். இந்துவுக்கு மூச்சு முட்டிக் கொண்டு வந்தது. ஆனாலும் அவள் சிரிக்க முயற்சித்தாள். உதடுகள் காய்ந்து வறண்டிருந்தன.

இப்படியும் ஒரு கனவு வருமோ? மத்தியானம் சாப்பிட்டு விட்டுத் தூங்காதேன்னு அப்பா சொல்லியிருந்தார். இந்துவுக்குக் குற்ற உணர்ச்சி தோன்றியது. அவள் கண்ட பயங்கரக்கனவை அப்பாவிடம் விவரமாகச் சொல்லி முடித்த போது வெட்கம் தோன்றியது. அப்பா சிரித்தார்.

“ சமர்த்து… வெட்கப்படறதுக்கு ஒண்ணுமில்ல..கனவு காணாதவர்கள் யார்? சொல்லு..அதுவும் குழந்தைகள் விசேசமாய் கனவு காண்பார்கள். பெரியவர்களை விட கற்பனைத்திறன் குழந்தைகளுக்கு அதிகமல்லவா? “

திரும்பத்திரும்ப இந்து கேட்டாள், “ கனவில பாம்பு வந்தா சர்ப்பதோஷம்னு பாட்டி சொல்லுவாங்க….யானை கனவுல வந்தா கணபதிக்குக் கோபம்னு சொல்லுவாங்க… நான் கண்ட கனவுக்கு என்ன அர்த்தம்னு சொல்லுங்க அப்பா! “

“ அதெல்லாம் சும்மா சொல்றது இந்து..மூட நம்பிக்கைகள்…அது பாட்டியோட தப்பில்லை..புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் பாட்டிக்குத் தெரியாதில்லையா?...”

அப்பா இந்துவை எழுப்பி விட்டார். சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அவளைத் தனக்கருகில் பிடித்து நிறுத்தினார். அப்போது தான் இந்துவின் மனதில் கனவு விதைத்த பயத்தின் முட்கள் மறையத் தொடங்கியது. அறைக்குள் அம்மா வந்தாள்.

“ அப்பாவோட செல்லக்குட்டி ஏன் கூப்பாடு போட்டா? “

என்று கேட்டாள். இந்து அம்மாவைப் பார்த்து விழித்தாள். அதற்குள் அப்பா,

“ அவள் சமர்த்தில்லையோ அதான்..” என்று துணைக்கு வந்தார். அதற்கு அம்மா,

“ ஆமா இப்படிக் கொஞ்சிகிட்டிருங்க…மத்தியானத்துக்கு மீன்குழம்பு வைக்கலன்னு கோவிச்சிகிட்டு படுத்தவ.. அது தெரியுமா உங்களுக்கு…?

இந்து தலை குனிந்தாள். ஏதோ ரகசியத்தைக் கண்டுபிடித்தவர் போல அப்பா,

“ அப்படிச் சொல்லு… இப்ப தெரிஞ்சிபோச்சி…அவ்வளவு விலை குறைச்சி மீன்களை அவர்கள் விக்கிறதுக்கான காரணத்தை அப்பா இந்துவுக்குச் சொன்னேனில்லையா? தொழிற்சாலையிலிருந்து வருகிற விஷம் கலந்ததினால் செத்து மிதந்த மீன்கள் தான் அது. அதைச் சாப்பிடக்கூடாதுன்னு சொன்னேனில்லையா…அது தான் இந்துவின் கனவோட ஆணிவேர்.. அதாவது மீன்கோபம்…”

என்று சொல்லிவிட்டு அப்பா வாய்விட்டுச் சிரித்தார். சிரித்து முடித்தபிறகு அவளுடைய தலையைத் தடவிக்கொடுத்துக் கொண்டே சொன்னார்.

“ இந்து.. அப்பாவுக்கு அவ்வளவு பெரிசா ஒண்ணும் தெரியாது... நாலு விஷயங்களையும் சொல்வேன்..அறிந்தும் அறியாமலும் எவ்வளவோ விஷயங்கள் நம்முடைய மனசுக்குள் வந்து சேரும். நாம் தூங்கும்போது தூங்காமலிருக்கும் ஒரு பகுதிமனம் உண்டு. அது செய்கிற வேலை தான் கனவு… இந்து பெரியவளாகும்போது இன்னும் விபரமாய் படித்துத் தெரிந்து கொள்ளலாம்…..”

என்று சொன்ன அப்பா மீண்டும் தொடர்ந்து,

“ இன்னிக்கு மீன்குழம்பு கிடைக்கலங்கிற வருத்தம் உன் மனசில வந்திச்சில்ல அப்படி பல விஷயங்களும் தான். செத்து மிதந்த மீன்கள், அதற்கான காரணங்களைப் பற்றி அப்பா சொன்னது, நேற்று தாமதமாக வகுப்புக்குப் போனபோது வாத்தியார் சொன்ன தண்டனை..இதெல்லாம் சேர்ந்து உருவானது தான் அந்தக் கனவு…வனங்கள் அழிந்தால் மழை பொய்த்து எல்லா இடமும் சுடுகாடாகும்..என்று அப்பா சொன்னேனில்லையா…ஒரு வேளை உன்னோட கனவில வந்த சீனி மணலுக்கு அதுதான் காரணமாயிருக்கும்…”

இந்துவும் அம்மாவும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர். அப்பா அவளுடைய முதுகில் மெல்லத் தட்டிக் கொடுத்துக் கொண்டே,

“ கனவு வருவதற்குக் காரணம் பாம்பும் கணபதியும், பூதமும் இல்லை…ஆனால் பூதத்தின் வேலை கொஞ்சம் இருக்கு... அதாவது கடந்த காலத்தில் நடந்தது..எதுவாக இருந்தாலும் அது பூதத்தோட காரியமில்லாம வேறு என்ன ? ஆனால் என்னோடச் செல்லக்குட்டி இந்து இப்படியொரு கனவு கண்டதுக்கு அவளுடைய கற்பனை சக்தி தான் காரணம் தெரியுமா? “

அம்மா சிரித்துக் கொண்டே,

“ இந்து இனிமே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுற மாதிரி கனவு காண்பாள்..”

என்று சொன்னாள்.

நன்றி- மாயாபஜார், தமிழ் இந்து

inthu_2307008g

No comments:

Post a Comment