Sunday 1 July 2012

கலையின் இயங்கியல் – சிறு குறிப்பு

 

உதயசங்கர்

abstract 

எந்தவொரு கலைப்படைப்பின் முதல் நோக்கம் கலை இன்பமே. பின்னர் அந்தப் படைப்பிலிருந்து கிடைக்கும் அநுபவபகிர்வு. அந்த அநுபவப்பகிர்வின் வழியாக நாம் புரிந்து கொள்கிற சிந்தனைத்தளம். இது ஒரு படைப்பை வாசிக்கிற வாசகனின் பயணம் என்று சொல்லலாம். இந்தப் பயணத்தின் முடிவில் படைப்பாளியும் வாசகனும் ஒரே இடத்தில் சந்திக்கலாம். அப்போது அடுத்த பயணத்துக்கான ஆயத்தங்களைச் செய்ய முயற்சிக்கிறார்கள். அந்தப் பயணம் இருவரையும் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.

கலைஞன் தன்னுடைய வாழ்வில் எதிர் கொள்ள நேரிடும் நிகழ்வுகளில் சில அநுபவப்பொறிகள் மின்னலெனக் கருக்கொண்டு மனதில் வளர்கின்றன. வளர்ச்சியின் வேகமும், ஆழமும், கலைஞனின் மொழி ஆளுமை, படைப்பாற்றலில் உள்ள தீவிர வேட்கை, வாசிப்பு அநுபவம், அவனுடைய அழகியல் கோட்பாடு, இவற்றின் அடிப்படையிலேயே இருக்கும். வெளிப்பாட்டுக்குத் தேவையான உத்வேகம் புறவயமாகவோ, அகவயமாகவோ, எந்த நிலையிலும், எந்த நேரத்திலும் பிறக்கலாம். அப்போது காகிததில், கணிணியில் பதிவு செய்யும் நிகழ்வு நடக்கிறது. இந்தப் புறவயமான வெளிப்பாட்டுக்கு முன்னரே மனசுக்குள் பலமுறை வீரியமிக்க மொழியலகுகளை மாற்றி, மாற்றிப் போட்டு எழுதிப் பார்த்தபிறகே காகிதத்தில் எழுதும் துணிவு வந்தது.

கலைஞன் சுய அநுபங்களிருந்தோ, அறிவனுபவங்களிலிருந்தோ, புராணிக, சரித்திர, தொல்கதை வாசிப்பனுபவங்களிலிருந்தோ, தத்துவார்த்த அனுபவங்களிலிருந்தோ, தன் படைப்புக்கான உத்வேகத்தைப் பெறலாம். ஆனால் அந்த உத்வேகம், படைப்பின்சிறு பொறி நின்று நிதானித்து நன்றாக அடைகாக்கப்பட்டு, முழு உருவம் அடைந்த பிறகு வெளிவந்திருக்கிறதா அல்லது அவசரமாக, அரைகுறையாக வெளிவந்திருக்கிறதா என்பதை எந்த எளிய வாசகனும் கண்டுபிடித்து விடுவான். இதற்கு ஒரளவு வாசிப்பனுபவமும், நுண்ணுணர்வும் இருந்தாலே போதுமானது.

கலைஞனிடம் பிறந்த படைப்பு வாசகனிடமே நிறைவடைகிறது. அது மீண்டும் கலைஞனிடத்தில் வாசகானுபவக்குறிப்புகளுடன் வரும்போது வேறொன்றாக மாறிவிடுகிறது. அது வெறும் அரூபமான குறியியல் சூத்திரமாக இருப்பதில்லை. ஒவ்வொரு வாசகர் வாசிக்கும் போதும் அது அவரிடத்தில் அவருடைய உணர்ச்சித் தளம், சிந்தனைத்தளம், ஆகியவற்றில் செயல்பட்டு பௌதீகசக்தியாக மாறுகின்ற வல்லமை கொண்டதாகிறது. கலைஞனித்திலிருந்து வெளிப்படும் படைப்பு தன் வெளிப்பாட்டுச் செயல் முடிந்ததும் தாயிடமிருந்து தொப்புள்க்கொடி அறுந்த குழந்தையைப் போல சுயம்புவாகி விடுகிறது. அந்தப் படைப்பின் மீது படைப்பாளிக்கு தன் படைப்பு என்ற உரிமையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஏனெனில் படைப்பாளியிடமிருந்து வெளிப்பட்ட படைப்பு உறைநிலையிலேயே இருக்கிறது. வாசகன் அதை வாசிக்கும் போதே அது உயிர்பெறுகிறது. படைப்பு முழுமையடைகிற இடமாக வாசகனே இருக்கிறான். வாசகன் கரங்களால் தொடும் வரை படைப்பு மண்ணில் புதைந்த விதையே போல் படைப்பு தற்காலிக உறக்கம் கொள்கிறது. மண்ணைக் கீறி மலரச் செய்வது வாசகனே.

படைப்பு வாசகனால் வாசிக்கப்படும்போது ஒரே தளத்தில் அர்த்தத்தையும் தரலாம். பல தளங்களில் பல அர்த்தங்களையும் தரலாம். பலருக்கு பலவிதமாகவும் அர்த்தம் தரலாம். இதற்கு வாசகனின் நுண்ணுணர்வு, இலக்கியப்பயிற்சி, சமூக அக்கறை, இவை காரணங்களாக இருக்கும். எனவே ஒரே படைப்பு காலந்தோறும் வெவ்வேறு மாதிரியாக வாசிக்கப்படுவதும் நிகழும். ஆனால் அதற்கு படைப்பில் அதற்கான அடிப்படைக் கூறுகள் இருக்கவேண்டும். பாதைகள் தெரியாத கும்மிருளாய் படைப்பு இருந்து அதில் பல்வேறு அர்த்தங்கள் இருப்பதாகப் பாவனை செய்யும் படைப்பாளிகளும், படைப்புகளும் உண்டு. அதற்காக படைப்பின் அடிப்படை கலை அழகியல் முறைமையிலிருந்து பிறழ்ந்து வெறும் சொற்கோர்வையாகவோ, நேரடியான,செய்தியாகவோ, பிரச்சாரமாகவோ, படைப்பு விளங்குமானால் அது காலத்தால் நிராகரிக்கப்படும்.

எல்லாவெளிப்பாடும் அடிப்படையில் பிரச்சாரமே. ஆனால் அந்த வெளிப்பாட்டுமுறையின் அடிப்படைத் தர்க்கநியதிகள் அதில் தொழிற்பட்டிருத்தல் வேண்டும். அதுவே அந்த வெளிப்பாட்டை செய்தி எனவும், பேச்சு எனவும், கவிதை எனவும், கதை எனவும், இன்ன பிற கலைவடிவங்கள் எனவும் வகை பிரிக்கிறது.

படைப்பு எளிமையானதாக இருக்க வேண்டும். ஆனால் இது அந்தப் படைப்பிற்கான அடிப்படை விதியாகக் கொள்ள முடியாது. மொழியின் மீதும், தன் கலைச்சிந்தனைகளின் மீதும் ஆளுமையும் தெளிவும் சித்திக்கும்போது படைப்பில் எளிமை உருவாகும். ஆனால் எளிமையானதெல்லாம் கலையாகி விடாது என்ற எச்சரிக்கையுணர்வும் தேவைப்படுகிறது.

ஒரு படைப்பு படைக்கப்படும்போது தன்னுணர்வுப்பூர்வமானது. அறிவும் உணர்வும் ஊடாடி நெசவு செய்கிற காரியமாக படைப்பு திகழ்கிறது. அனுபவப்பொறி பற்றித் தீயாய் எரியும்வரை வேண்டுமானால் தன்னுணர்வும், தன்னுணர்வுமற்ற நிலையில் படைப்பு தன் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் அதுவுமே முன்னனுபவங்களின், வாசிப்பனுபபவங்களின் சாரம் ஊறிக் கிடக்கும் ஊற்றின் கண் தான். மற்றபடி, அநுபூதிநிலை, தெய்வீக உணர்வு, என்பதெல்லாம் மூட நம்பிக்கைகளே.

எல்லா அறிவுத்துறைகளையும் போலவே படைப்பிலக்கிய அறிவுத்துறையிலும் படைப்பின் நுட்பங்கள் குறித்தான ஆய்வும், அடிப்படை அலகுகள் குறித்த உரையாடலும் அவசியம். அப்போது தான் வாசகனுக்கும் ஏன் படைப்பாளிக்கும் கூட படைப்பின் சூட்சுமங்களை விளங்கிக் கொள்ளமுடியும்.

DSC01492

3 comments:

  1. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  2. படைப்பிற்கும் வாசகனுக்குமான உணர்வு விதைக்கும் விளைவதற்குமான ஒப்புமையுடன் உள்ளது.ஒரு வைரஸ் புறவய நிலையில் உயிரற்றும் ஒரு தாங்கு (ஹோஸ்ட் )உயிரியினுள் உயிர்ப்புடன் இயங்குவதையும் போல இருக்கிறது.ஒரு படைப்பாளி படைப்பை தன்வய உணர்வில் படைக்கும் போது அது படைப்பாக வெளிவந்தபின்பும் படைப்பாளியின் உணர்வுடன் இணங்கித்தானே இருக்க முடியும்.படைப்பின் மீதான கண்ணோட்டங்களும் விமர்சனங்களும் வாசகனின் உணர்வில் மாறுபட்டாலும் படைப்பாளின் உணர்வுடன் கலந்த படைப்பை வெறும் உடைமை என மட்டும் எப்படி ஏற்க இயலும்.

    ReplyDelete