Saturday 28 July 2012

முற்றத்து நீர்

உதயசங்கர்

Mohan Das (76)

உமாவின் வேலை தினமும் பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் அருகிலிருக்கும் அடி பம்பில் இரண்டு குடம் தண்ணீர் எடுத்து வந்து வீட்டில் ஊற்றவேண்டும். வீட்டு முற்றத்தைப் பெருக்கித் தண்ணீர் தெளிக்க வேண்டும். பின்பு பாடங்களைப் படிக்க வேண்டும். மேடும் பள்ளமுமான மண்தரை முற்றத்தில் உமா தெளித்த தண்ணீர் அங்கங்கே சின்னச் சின்னப் பள்ளங்களில் தேங்கிக் கிடந்தது.

கோடைவெயில் உக்கிரமாய் அடித்தது. உமா முற்றத்தில் தண்ணீர் தெளித்து விட்டுப் போனதும் எங்கிருந்தோ ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்தது.கீழே பள்ளங்களில் தேங்கிக் கிடந்த தண்ணீரைத் தலையைச் சாய்த்து தன் அலகால் உறிஞ்சிக் குடித்தது. இரண்டு மூன்று முறை குடித்த பிறகு தான் அதற்கு உயிர் வந்தது போல் இருந்தது. தொண்டையிலிருந்து குரலே அப்போது தான் வெளி வந்தது கீச் கீச்சென்று கத்தியபடியே உமாவின் வீட்டு வாசலை ஒரு முறை சுற்றி விட்டுப் பறந்து போய் விட்டது.

பின்பு தினமும் சாயங்காலம் சரியாக ஐந்து மணிக்கு அந்தக் குருவி வந்துவிடும். உமாவும் அதற்குள் முற்றத்தில் தண்ணீர் தெளித்திருப்பாள். வழக்கம் போல தண்ணீரைக் குடித்து விட்டு வீட்டு வாசலை ஒரு முறை சுற்றிவிட்டுப் பறந்து போய் விடும்.

சில நாட்களுக்குப் பிறகே இதைக் கவனித்தாள் உமா. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதே நேரம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. பள்ளிக்கூடத்தில் எல்லோரும் குடிக்கும் பானையில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்கக் கூடாது, தனியாக பாட்டிலில் தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று வாத்தியார் கண்டிப்பாய் சொல்லி விட்டார். எல்லோரும் தொட்டுப் புழங்குகிற தம்ளரை இவள் தொடக்கூடாதாம். பள்ளிக்கூடம் போகவே பிடிக்கவில்லை. ஆனால் சுபா, செண்பகவல்லி, கனகு, இவர்கள் அப்படிச் சொல்லவில்லை. இவளுடன் தொட்டுப் பிடித்து விளையாடுவார்கள். இவள் கொண்டு போகிற கேப்பைக் களியை, வெஞ்சனத்தைச் சாப்பிடுவார்கள். அவர்கள் சாப்பாட்டை இவளும் சாப்பிடுவாள். அவர்கள் யாரும் அவளிடம் வித்தியாசம் காட்டியதேஇல்லை.

பள்ளிக்கூடம் விடும் போதும் வருத்தம் வந்து விடும். பள்ளிக்கூடம் போகும்போதும், வீட்டுக்கு வரும்போதும் ஊரைச் சுற்றி அவள் வீடு இருக்கிற காலனிக்கு வரவேண்டும். ஊருக்குள்ளே கூடி தெருக்கள் வழியே வரக்கூடாதாம். அய்யா கண்டிசனா சொல்லிட்டாரு. அதனாலே பள்ளிக்கூடம் விட்டு வரும்போது ஆள் நடமாட்டமில்லாத பொட்டல் காடு வழியே வருவாள் உமா. பயமாக இருக்கும். அங்கே நிழலுக்குக் கூட பச்சை மரங்களோ செடி கொடிகளோ கிடையாது.

அய்யாவிடம் ஏன் அவள் மட்டும் ஊரைச் சுற்றி வரவேண்டும் என்று கேட்டிருக்கிறாள். அதற்கு அய்யா ஏதேதோ மேல்சாதி கீழ்சாதி என்று புலம்பினார். உமாவுக்குப் புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. தங்களை மற்றவர்கள் சரி சமமாக நடத்தவில்லை என்பதும், இழிவு படுத்துகிறார்கள் என்பதும். இதைப் பற்றி யோசித்திருக்கிறாள். இதைச் சரி செய்ய வேண்டும் என்று யோசித்திருக்கிறாள்.

அவள் வீடு இருந்த பொட்டலில் மரம் செடி கொடி இல்லாத இடத்திற்கு எங்கிருந்து வருகிறது இந்தச் சிட்டுக்குருவி? அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்போதெல்லாம் பள்ளிக்கூடம் விட்டதுமே உமாவுக்கு ஒரு பரபரப்பு உண்டாகி விடும். தாமதிக்காமல் வீட்டுக்கு ஓடுவாள். அவசர அவசரமாக குடத்தை எடுத்துக் கொண்டு தண்ணீர் எடுத்து வந்து தெளித்து முடித்தவுடன் வந்துவிடும் அந்தக் குருவி. எங்கிருந்து தான் வருமோ? எப்படித் தான் அதற்குத் தெரியுமோ? சர்ரென்று பறந்து வந்து விடும்.

ஒரு நாள் பள்ளிக்கூடத்திலிருந்து உமா வீட்டுக்கு வருவதற்கு நேரமாகி விட்டது. வழக்கமான நேரம் தாண்டி விட்டது. பறந்து வந்த குருவி முற்றத்தில் ஈரம் இல்லாமல் இருப்பதைக் கண்டதும் திகைத்து விட்டது. ஏற்கனவே மிகவும் தாகத்துடன் பறந்து வந்த குருவிக்குச் சோர்வாக இருந்தது. ஒவ்வொரு பள்ளமாய் தத்தித் தத்திச் சென்று பார்த்தது. குரல் எழுப்பக் கூட அதற்குச் சக்தியில்லை.

அப்போது தான் பறந்து வந்தாள் உமா. வேக வேகமாக உள்ளே சென்று தண்ணீருக்காகப் பானைகளை உருட்டினாள். எதிலும் தண்ணீர் இல்லை. உடனே குடங்களை எடுத்துக் கொண்டு போய் தண்ணீர் கொண்டு வந்தாள். முதல் வேலையாய் முற்றத்தில் தண்ணீர் தெளித்தாள். அதற்குள் இருட்டி விட்டது. எந்த சத்தமும் இல்லை. இனி குருவி வரவே வராதா? இருட்டுக்குள் சுற்றும்முற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அழுகை வரும்போல இருந்தது. திடீரென கீச்சென்ற ஒரு சத்தம் கேட்டது. குனிந்து பார்த்தாள். அவளுக்கு மிக அருகில் குருவி தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அவளுக்கு சந்தோசமுன்னா சந்தோசம். குதி குதியென்று குதித்தாள். குருவிக்கும் சந்தோசம். கீச் கீச் கீச் கீச்சென்று கத்தி அவளை வாழ்த்திப் பறந்து போனது.

Mohan Das (77)புகைப்படங்கள் – மோகன் தாஸ் வடகரா

1 comment: