Thursday 26 July 2012

சுயநலத்துக்கு ஒரு கடிதம்

Mohan Das (98)

உதயசங்கர்

 

அன்பே

சின்னஞ்சிறு வயதில்

ஒரு துளி ஒளியைப்போல

ஒரு கண இருளைப்போல

கவர்ச்சியான தின்பண்டம் போல

காணாத காட்சி போல

கன்னியின் முயங்கல் போல

கதிரொளியின் வெப்பம் போல

பசித்த வயிற்றுக்கு உணவைப்போல

பாழும் கிணற்றுப் புதையல் போல

கனிவின் சாரம் போல

கனவின் குழப்பம் போல

கவித்துவ ஒளியைப் போல

காதல் கருக்கொண்ட முதல் முத்தம் போல

இல்லாத ஒன்றின் நிழலே போல

பிள்ளைபிடிப்பவன் போல

பிடித்துக் கொண்டாய் என்னை

பிச்சை எடுக்க வைக்கிறாய்

பெருமை பேச வைக்கிறாய்

உன் பலிபீடத்துக்கு பூசாரியாக்குகிறாய்

எப்போதும் உன்புகழ் பாடச் சொல்கிறாய்

உன்னைக் காப்பாற்ற யாரையும்

பலிபீடத்தில் பலியிடச் செய்கிறாய்

வாழ்நாள் முழுவதும் சுரண்டச்சொல்கிறாய்

முரண்டு செய்தால் பட்டினி போடுகிறாய்

சாட்டையை வீசி வசப்படுத்துகிறாய்

துளித் துளியாய் மதுவைக் கொடுத்து

மயங்கச் செய்கிறாய்

செய்ய நினைப்பதொன்றாய்

செய்வதொன்றாய் என்னை

நிலைபிறள வைக்கிறாய்

காமத்தின் பேய்க்காற்றாய் என்னைச் சுழட்டி

ஒரே வாயில் விழுங்கிறாய்

அன்பே போதும்

என்னை விட்டு விடு

உன் போதைக்கு நான்

உணவோ, ஊறுகாயோ இல்லை

எல்லோருடனும் இணைந்து வாழ

என் உணவு உடை காற்று

எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள

எத்தனிக்கும் எளிய மானிடன் நான்Mohan Das (43)

விட்டு விடு என்னை.

 

 

புகைப்படங்கள்- மோகன்தாஸ் வடகரா

1 comment: