Tuesday 3 July 2012

கனவின் சுடரைக் கைகளில் ஏந்தி..

 

உதயசங்கர்

maryMcLeodBethune_jpg

வாழ்வின் மிகச் சில கணங்களில், ஒரு சொல்லோ, ஒரு காட்சியோ, ஒரு புத்தகமோ, ஒரு மனிதரோ, நமக்கு உத்வேகமளிக்கிறார்கள். அதைக் கேட்கிற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கிறது. ஆனால் அது கோரும் உழைப்பையும், தீவிரத்தையும், அர்ப்பணிப்பையும், தருவதற்கு யாரும் முன் வருவதில்லை. ஏனெனில் அது உயிரையே காவு கேட்கிறது. நம் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் தன் பலிபீடத்தில் பலி பொருட்களாக வேண்டுகிறது. தான், தனது, தன் குடும்பம், என்று தந்திரக்கூட்டுக்குள் வாழ்கின்ற எல்லோருக்கும் கமலாலயனின் ‘ உனக்குப் படிக்கத் தெரியாது ‘ குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தும்.

மேரி மெக்லியோட் பெத்யூன் என்ற பெண்மணியின் உறுதியான அர்ப்பணிப்பு, ஒரு இனத்தின் எழுச்சிக்கே வித்திட்டுள்ளது. கறுப்பினமக்களுக்கு கல்வியுரிமை மறுக்கப்பட்டிருந்த காலத்தில் பிறந்து வளர்ந்த மேரி, ஒரு வெள்ளைச்சிறுமியின் ‘ உனக்குப் படிக்கத் தெரியாது ‘ என்ற அவமானச் சொற்களால் இதயத்தால் ஆழமான ஆறாத காயத்தைப் பெறுகிறாள். அந்தக் காயத்தினால் துவண்டு விடாமல் அதன் வழியாகவே தன் தீராஉறுதியைப் பெறுகிறாள். காயத்தின் வலியிலிருந்து அவள் மட்டும் உத்வேகம் பெற்று, சிறந்த பெண்மணியாகவில்லை. தன் கறுப்பினத்தையே அந்த வலியின் சிறகுகளில் ஏற்றி உத்வேகமடைய வைக்கிறாள். அதற்காக அவள் நடந்த கரடுமுரடான பாதைகளும், எதிர்ப்புகளும், அவளை மேலும் மேலும் உறுதியானவளாக்கியது. ஜனநாயக உணர்வுடைய சில வெள்ளையினத்தவரிமிருந்தும் கிடைத்த உதவிகளைக் கொண்டு தன் கறுப்பினத்தின் முன்னேற்றத்துக்காக இருபத்திநான்கு மணி நேரமும் சிந்தித்த பெண்மணியாக மேரி மெக்லியோட் பெத்யூன் வாழ்ந்திருக்கிறார்.

வெறுமனே ஒரு ஐந்து மாணவர்கள் மட்டுமே இருந்த ஒரு சிறிய அறையில் மரப்பெட்டியே மேஜையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பள்ளி மேரி மெக்லியோட்டின் அயராத உழைப்பால் அறுநூறு மாணவர்களைக் கொண்ட பள்ளியாகவும் கல்லூரியாகவும் உயர்ந்த வரலாறு. அது மட்டுமல்ல. கற்பித்தல் முறைமையிலும் பெரும் மாற்றத்தைச் செய்து பார்த்திருக்கிறார் மேரி மெக்லியோட் பெத்யூன் என்பது இந்தப் புத்தகத்தில் அங்கங்கே வருகிற குறிப்புகளை வாசிக்கும் போது தெரிகிறது.

பருத்திக்காட்டில் ஏதுமறியாத சிறுபெண்ணாக உழைத்து வந்த மேரி மெக்லியோட்டின் வாழ்க்கை அமெரிக்க நாடே போற்றுகிற ஆளுமையாக வளர்ந்த வரலாறு. இந்த வரலாறு முழுவதும் மேரி மெக்லியோட்டின் ரத்தமும் வியர்வையும் சிந்தப் பட்டிருக்கிறது. எல்லோரும் கனவுகள் காண்கிறோம். மேரி மெக்லியோட் ஒரு சமூகத்துக்கான கனவைக் காண்கிறார். அடிமைகளாக இருந்த காலத்தின் ஈரம் உலர்வதற்கு முன்பே அதைப் புரட்டிப் போட்டு மாற்றுவதற்கு கல்வி எனும் ஆயுதத்தைக் கையிலெடுத்துப் போராடியிருக்கிறார்.

“ க்ரு க்ளக்ஸ் க்ளான்” என்ற வெள்ளை நிறவெறி அமைப்பின் அச்சுறுத்தல்களுக்கு எதிராகத் தீரமான மன உறுதியைக் காட்டியிருக்கிறார். கறுப்பர்களுக்கு வாக்குரிமை தரக்கூடாது என்ற பயமுறுத்தல்களுக்கு எதிராக வாக்குரிமை அளிக்க முதல் ஆளாய் புறப்பட்டிருக்கிறார். லின்ச்சிங் எனப்படும் கறுப்பர்களைக் கேள்வி முறையின்றி மரங்களில் தூக்கிலிட்டுக் கொன்ற இனவெறி அமைப்பு வலுவாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் மேரி மெக்லியோட் பெத்யூன் இத்தகைய செயல்களைச் செய்திருக்கிறார். எனவே தான் “உனக்குப் படிக்கத் தெரியாது “ என்ற இந்த நூல் மேரி மெக்லியொட் ஒரு ஆளுமையாக வளர்ந்த வரலாறாக மட்டுமின்றி அமெரிக்கக் கறுப்பின மக்களின் வரலாறாகவும் விரிகிறது.

உனக்குப் படிக்கத் தெரியாது என்ற சொற்களால் அவமானப் படுத்தப்பட்ட சின்னஞ்சிறு மேரி மெக்லியோட் இறுதி வரை அதை மறக்கவில்லை. ஒவ்வொரு முரை துவளும்போதும் அந்த வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்து அவருக்குப் புதிய உத்வேகமளிக்கிறது. இளம் பிராயத்தில் எல்லோருக்குமே லட்சியங்கள் உருவாவது உண்டு. காலத்தின் சிலந்தி வலைப் பின்னலில் அன்றாட வாழ்க்கை சிக்கிச் சின்னாபின்னாமாகும்போது அந்த லட்சியங்களின் நிழல் கூடத் தெரியாமல் வாழ்ந்து முடிக்கிற சாமானியர்களான நமக்கு மேரி மெக்லியோட் என்ற ஆளுமையின் வரலாற்றை வாசிக்கும் போதும் வாசித்து முடிந்த பின்னரும் உத்வேகமளிக்கும் என்றால் மிகையில்லை.

இந்த அபூர்வமான ஆளுமையைத் தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிற கமலாலயன் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர், சிறுகதையாசிரியர், எப்போதெல்லாம் மனம் சோர்வடைகிறதோ அப்போதெல்லாம் வாசிப்பதற்காக நம் கையில் எப்போதும் இருக்க வேண்டிய புத்தகம் உனக்குப் படிக்கத் தெரியாது.

உனக்குப் படிக்கத் தெரியாது

கமலாலயன்

விலை: 60/

வெளியீடு- வாசல் பதிப்பகம்

40 டி - வசந்த நகர்

மதுரை- 625003

அலைபேசி – 9842102133

நன்றி- புத்தகம்பேசுது

1 comment:

  1. வாசலின் அற்புதமான படைப்பு.. தோழர் ஸ்ரீரசாவிடமிருந்து கிடைத்த புத்தகம்.தோழர்.கமலாலயனின் மொழி நடையும் அழகாக அமைந்திருந்தது.மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி தோழர்.

    ReplyDelete