Tuesday 10 July 2012

ரகசியம்

உதயசங்கர்

 

விரல்களில் பிடித்திருந்த சிகரெட்டுடன் கீழேunusual_sculptures_500

விழுகின்ற கணம்வரை சிவசுவுக்குத் தெரியாது

தான் இறந்து விடுவோம் என்று

இன்னும் புகைந்து கொண்டிருக்கிற சிகரெட்டின்

புகைக்குள் மறைந்து போனான்

எதையும் விழுங்க மறுத்த தொண்டக்குழியில்

வளர்ந்த புற்று மரணப்பூனையின் காலடியென்பதை

ஆறுமாதம் கழித்து உணர்ந்த முத்து

பூனைக்கண்களைத் திறந்த படியே

பூனையின் வயிற்றுக்குள் சென்றான்

கவிதைக்காக வாழ்வைப் பணயம் வைத்த

அப்பாஸின் மூளையில் மரணம்

உயிரைப் பணயம் வைத்திருப்பது தெரியாமல்

விவாதித்துக் கொண்டிருந்தான்

மரணத்தைப் பற்றித் தன் கவிதைகளில்

சூதாட்டப் புதிர்ப்பாதைகளில்

நானும் மரணமும்

ஒருவரை ஒருவர் தேடிக் கொண்டிருக்கிறோம்.

எப்படியும் ஒரு நாள் சந்திக்கப்போகிறோம்.

எந்தத் திருப்பத்தில் என்பதில் தான்

ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது

வாழ்வின் ரகசியம்.

No comments:

Post a Comment