Saturday 21 July 2012

சிங்கமும் நாயும்

lionanddog லியோ தால்ஸ்தோய்

தமிழில் - உதயசங்கர்

லண்டனில் காட்டு மிருகங்களைப் பார்ப்பதற்கு மிருகக் காட்சி சாலை வைத்திருந்தார்கள். அவற்றைப் பார்க்க வேண்டுமானால் மக்கள் பணம் செலுத்த வேண்டும் அல்லது நாய்களையோ பூனைகளையோ கொண்டு வரவேண்டும். காட்டுமிருகங்களுக்கு அவை உணவாக வீசியெறியப் படும்.

காட்டுமிருகங்களைப் பார்க்கவேண்டும் என்பதற்காக ஒரு ஆள் தெருவில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு குட்டி நாயைப் பிடித்துக் கொண்டு வந்தான்.நிர்வாகத்தினர் அவனை உள்ளே அனுமதித்து விட்டனர். அதே நேரம் அந்த குட்டிநாயை சிங்கத்தின் கூண்டுக்குள் வீசியெறிந்தனர்.

அந்தக் குட்டி நாய் வாலை மடக்கித் தன் கால்களுக்கு நடுவே வைத்துக் கொண்டு சிங்கக்கூண்டின் மூலையில் போய் ஒளிந்து கொண்டது.ஆனால் சிங்கம் வந்து மோந்து பார்த்தது.

பிறகு, அந்தக் குட்டி நாய் கால்களை உயரே தூக்கியபடி மல்லாக்கப் படுத்துக் கொண்டு வாலை ஆட்டியது.

சிங்கம் அதைத் தன் காலால் புரட்டி விட்டது.குட்டிநாய் குதித்து எழுந்து தன் பின்கால்களில் உட்கார்ந்து கொண்டது.சிங்கம் அந்தச் சிறிய மிருகத்தைப் பார்த்தது.அதன் தலையை அங்கிட்டும் இங்கிட்டும் திருப்பிப் பார்த்தது.அதற்கு மேல் அதைத் தொடவில்லை.

சிங்கத்தின் எஜமானன் அதற்கு கொஞ்சம் இறைச்சி போட்டபோது சிங்கம் அதில் ஒரு துண்டைக் கிழித்து நாய்க்குட்டிக்காக வைத்தது.

மாலையில் சிங்கம் தூங்கும் போது குட்டிநாயும் அதன் அருகில் சிங்கத்தின் கால் மீது தலை வைத்துப் படுத்துக் கொள்ளும்.

அதிலிருந்து நாயும் சிங்கமும் ஒரே கூண்டில் சேர்ந்து வாழத் தொடங்கின.சிங்கம் குட்டிநாயை ஒரு போதும் துன்புறுத்தவில்லை. அதன் உணவைப் பகிர்ந்துகொண்டது. அதனுடன் சேர்ந்து உறங்கியது.ஏன் விளையாடக் கூடச் செய்தது.

ஒரு நாள் மிருகக் காட்சி சாலைக்கு வந்த ஒரு பணக்காரர் அந்தக் குட்டிநாயை அடையாளம் கண்டு கொண்டார்.அவர் மிருகக்காட்சி சாலை முதலாளியிடம் அந்தநாய் தன்னுடையது என்றும் அதைத் திருப்பித் தர வேண்டும் என்றும் கேட்டார்.முதலாளியும் கொடுத்துவிட முடிவு செய்தார்.ஆனால் அந்த குட்டிநாயைக் கூப்பிட்ட உடனேயே பிடறி மயிர் சிலிர்க்க சிங்கம் உறுமியது.

குட்டிநாயும் சிங்கமும் சேர்ந்து ஒரு வருடம் முழுவதும் ஒன்றாக வாழ்ந்து வந்தன. ஒரு வருடத்திற்குப் பிறகு குட்டிநாய் நோய்வாய்ப் பட்டு இறந்து விட்டது. சிங்கம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டது. இறந்து போன நாய்க்குட்டியை மோந்து பார்த்துக் கொண்டும் நக்கிக் கொடுத்துக் கொண்டும் காலை அதன் மீது போட்டபடியே இருந்தது சிங்கம்.

நாய்க்குட்டி இறந்து விட்டது தெரிந்ததும் திடீரென குதித்து எழுந்தது. அதன் பிடறிமயிர் சிலிர்த்தது.வாலால் தன்னை அடித்துக் கொண்டது.கூண்டின்சுவர்களில் மோதியது.கூண்டுக் கம்பிகளையும் தரையையும் கடித்துப் பிறாண்டியது.

கூண்டிற்குள் கர்ச்சித்துக் கொண்டே இறந்து போன குட்டிநாயின் பக்கத்திலேயே படுத்துக் கிடந்தது.முதலாளி இறந்த நாயை அப்புறப் படுத்த விரும்பினார்.ஆனால் சிங்கம் யாரையும் அருகில் வர விடவில்லை.

இன்னொரு நாய்க்குட்டியை விட்டால் சிங்கத்தின் துயரம் மறைந்து விடும் என்று முதலாளி நினைத்தார்.இரண்டாவது நாய்க்குட்டியைக் கூண்டுக்குள் விட்டார்.ஆனால் சிங்கம் உடனே அதை துண்டுதுண்டாகக் கிழித்தெறிந்து விட்டது.பிறகு இறந்துபோன அந்த குட்டிநாயைச் சுற்றி கால்களைப் போட்டுக் கொண்டு எந்த அசைவுமில்லாமல் ஐந்து நாட்களுக்கு அப்படியே கிடந்தது.

ஆறாவது நாள் சிங்கமும் இறந்துவிட்டது.

1 comment: