Wednesday 25 July 2012

பறவைகளுக்கு எப்படி சிறகுகள் கிடைத்தன?

Vector-mythical-creature-1 மலையாளத்தில் – மாலி

தமிழில் – உதயசங்கர்

 

முன்பு ஒரு காலத்தில் பறவைகளுக்கு சிறகுகள் கிடையாது. அவர்கள் தரையில் தான் வசித்தனர். ஆனால் மிருகங்களுக்கு சிறகுகள் இருந்தன. அவர்கள் வானத்தில் பறந்து கொண்டிருந்தனர். மிருகங்களுக்குத் தலைவன் இருந்தான். அதே போல் பறவைகளுக்கும் தலைவன் இருந்தான். அவர்களுக்கிடையில் பகை இருந்தது.

பறவைகளை அடக்கியே தீர வேண்டும்- இது மிருகத்தலைவனின் ஆசை.

“பறவைத்தலைவா! ஒழுங்கா மரியாதையா..கப்பம் கட்டணும்.. தெரியுதா..” என்று மிருகத்தலைவன் சொன்னான்.

பறவைத்தலைவன் ரொம்ப மரியாதையானவன். எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே அவனும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

“மிருகத்தலைவா! நான் கப்பம் தர மாட்டேன்..” என்று பறவைத்தலைவன் சொன்னான்.

“அப்படியா..நான் யாருன்னு காட்டுறேன்..” என்று மிருகத்தலைவன் பயமுறுத்தினான்.

“என்ன செய்வே? என்னோட அலகை உடைச்சு உப்புப் போட்டு ஊற வச்சி திம்பியா? பேசாம இரு..” என்று பறவைத்தலைவன் சூடாகப் பதில் சொன்னான்.

உடனே மிருகத்தலைவன் பறந்து அருகில் வந்தான். பறவைத்தலைவன் எதிர்த்து நின்றான். அவன் கடித்தான்.இவன் கொத்தினான். அங்கே ஒரு கலகமே நடந்தது. மிருகத்தலைவனின் சிறகு லேசாக முறிந்து விட்டது. பறவைத்தலைவனின் அலகு கொஞ்சம் உடைந்து விட்டது. அதோடு சண்டையும் முடிந்து விட்டது.

ஆனால் மிருகத்தலைவன் யோசித்துக் கொண்டேயிருந்தான். எப்படியாவது பறவைகள் மீது படையெடுத்து ஒடுக்கவேண்டும். அவன் ரகசியமாக மிருகங்களை அணி திரட்டி பறவைகளைத் திடீரென்று தாக்கினான். பறவைகள் அதை எதிர்பார்க்கவில்லை. அதனால் தயாராகவும் இல்லை. ஏராளமான பறவைகள் செத்து விட்டன. மிருகங்கள் வெற்றி பெற்றன.

பறவைத்தலைவனும் யோசித்தான்.மிருகங்கள் மறுபடியும் படையெடுக்கும். முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பது நல்லது. அவன் பறவைகளை ரகசியமாக அணி திரட்டினான். அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தான். அதெல்லாம் மிருகத்தலைவனுக்குத் தெரியாது. மிருகத்தலைவன் மறுபடியும் படையெடுத்தான். இந்த முறை எல்லாம் எதிராக இருந்தது. ஏராளமான மிருகங்கள் செத்துப் போயின. வெற்றி பறவைகளுக்குக் கிடைத்தது.

இன்னும் படையெடுக்க வேண்டும்-தயாராக இருந்தான் மிருகத்தலைவன். படையெடுப்பை எதிர்க்கவேண்டும்-இதற்குத் தயாராகப் பறவைத்தலைவன். இந்தமுறை யுத்தம் பயங்கரமாக இருக்கும். இது உறுதி.

மிருகமும் இல்லாமல் பறவையும் இல்லாமல் ஒரு இனம் இருந்தது. அது பாம்பினம். பாம்புகளுக்கு விஷம் உண்டு. அவர்கள் எண்ணிக்கையும் அதிகம். மிருகத்தலைவனுக்கும், பறவைத்தலைவனுக்கும் ஒரு விசயம் உறுதியாகத் தெரிந்தது. பாம்புத்தலைவன் யார் பக்கம் சேர்கிறானோ அவருக்கே வெற்றி.

மிருகத்தலைவன் பாம்புத்தலைவனைப் பார்க்கச் சென்றது. அந்தச் சமயத்தில் பறவைத்தலைவனும் வந்து சேர்ந்தான். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.அது மட்டுமில்லை.பார்த்தவுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டனர்.

பாம்புத்தலைவனுக்கு முன்பே எல்லாம் தெரியும். இருவரும் எதற்காக வந்திருக்கிறார்கள் என்பதை யூகிக்க ஒரு சிரமமும் இல்லை.

“மிருகத்தலைவா! பறவைத்தலைவா! கவனிங்க, நான் ஒரு முடிவு செய்ஞ்சிருக்கேன்..உங்க ரெண்டு பேரில யார் அதை ஏத்துக்கலேன்னாலும்..நானும் என் கூட்டமும் எதிராளி கூடச் சேந்துருவோம்.. என்ன சம்மதமா?” என்று பாம்பு கேட்டது.

பாம்புத்தலைவன் எதிராளியுடன் சேர்ந்தால்? நம்ம சோலி முடிந்துபோகும்.இது மிருகத்தலைவனுக்கும் தெரிந்திருந்தது. பறவைத்தலைவனுக்கும் தெரிந்திருந்தது.

“எனக்குச் சம்மதம்.” என்று மிருகத்தலைவன் சொன்னான்.

“எனக்குச் சம்மதம்” என்று பறவைத்தலைவன் சொன்னான்.

“சரி..இதுதான் என் முடிவு.மிருகத்தலைவன் தான் முதலில் சண்டை போட்டது.அதுக்கு முதலில் மிருகங்கள் பரிகாரம் செய்யவேண்டும். அவர்கள் பறவைகளுக்கு சிறகுகள் தரணும்..” என்று பாம்புத்தலைவன் சொன்னான்.

மிருகங்களுக்கு வேறுவழியில்லை. அவர்கள் பறவைகளுக்கு சிறகுகளைக் கொடுத்தனர். அன்று முதல் என்னாச்சு? மிருகங்கள் நிலத்தில் வாழ்ந்தன. பறவைகள் ஆகாயத்தில் பறந்து திரிந்தன. இன்று வரை அப்படித்தானே!

1 comment: