Friday 20 July 2012

அடி வாங்கினவனுக்குத் தான் வலி தெரியும்!

மலையாளத்தில் – மாலி

 

தமிழில் – உதயசங்கர்

Black-Cat-Yellow-Eye-Wallpaper

அப்பாபூனையின் நிறம் கருப்பு.உடம்பு முழுவதும் கரியைத் தேய்ச்சது மாதிரி. அம்மா பூனையின் நிறம் வெள்ளை.பாலினால் செய்தது மாதிரி. அவர்களுக்கு நான்கு குட்டிகள் இருந்தன. முதல் குட்டி அப்பாவைப் போல கருப்பு. அவன் பெயர் கருப்பன். இரண்டாவது குட்டி அம்மாவைப் போல.அவளுடைய பெயர் வெளுப்பி. மூணாவது குட்டியின் உடம்பு கருப்பு, கால்கள் வெள்ளை.அவனுடைய பெயர் வெள்ளைக் காலன். நாலாவது குட்டியின் உடம்பு வெள்ளை கால்கள் கருப்பு. அவளுடைய பெயர் கருங்காலி.

அப்பாபூனைக்கு வேலை அதிகம். அவர் எப்போதும் வெளியிலேயே இருந்தார். எப்போதாவது தான் வீட்டிற்கு வருவார். குட்டிகளை வளர்த்ததோ அம்மாதான்.

கருப்பன் பலசாலி. முன்கோபக்காரன். அவன் அவனிஷ்டம் போல தான் நடப்பான்.இளையவர்களைப் பற்றி யோசிப்பதில்லை. அம்மா பால் கொடுக்கும் போதோ கேட்கவே வேண்டாம். கருப்பன் இளையவர்களைத் தள்ளி விட்டு தான் மட்டும் தனியே பால் குடிப்பான். அது மட்டும்தான் என்றால் கூட பரவாயில்லை போகட்டும் என்று விட்டு விடலாம். அவன் அவர்களை அடிக்கவும் கடிக்கவும் செய்வான். அதனால் அவர்களுக்கு அவனைக் கண்டால் அப்படி பயம்!

ஒரு தடவை குட்டிப் பூனைகள் கரணம் போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். வெளுப்பி தெரியாமல் கருப்பனின் மேல் விழுந்து விட்டது. வந்ததே கோபம் கருப்பனுக்கு! அவன் வெளுப்பியின் மூக்கில் ஒரு அடி. வெளுப்பி அழுது விட்டாள்.

பின்பு ஒருதடவை பால் குடிக்கிற நேரம். முதலில் வெள்ளைக்காலன் ஓடி வந்து குடித்து விட்டான். கருப்பனுக்குக் கோபம் வந்து விட்டது. அவன் வெள்ளைக்காலனின் வாலில் ஒரு கடி. வெள்ளைக்காலன் அய்யோ என்று அலறி விட்டான்.

இன்னொருதடவை வெயில் காயப் போனார்கள் எல்லோரும். கருங்காலி தெரியாமல் என்ன செய்து விட்டாள் தெரியுமா? கருப்பன் எப்பவும் படுக்கிற இடத்தில் படுத்து விட்டான். அது போதாதா கருப்பனுக்கு. அவன் நகத்தை வைத்து கருங்காலியின் வயிற்றில் ஒரு குத்து. கருங்காலியின் வயிற்றிலிருந்து ரத்தம் துளிர்த்தது.

மூத்த மகனின் குணத்தைப் பார்த்து அம்மாபூனை வருத்தப்பட்டது. ஆனால் பாவம் அம்மாபூனை! யாரையும் தண்டிக்க மனசு வரவில்லை. அறிவுரை மட்டுமே சொன்னது ஆனால் அதெல்லாம் ஒண்ணும் பிரயோசனமில்லை. கருப்பன் மாறவேயில்லை பழைய மாதிரியே இருந்தான்.

ஒரு நாள் அப்பாபூனை வீட்டிற்கு வந்தது. அவரிடம் அம்மாபூனை,” மூத்தமகன் போக்கே சரியில்லை..கொஞ்சம் கவனிங்க..” என்று நடந்ததெல்லாவற்றையும் சொன்னாள்.

அப்பாபூனை கருப்பனை கூப்பிட்டது. “மகனே! சின்னவங்களை அடிக்கக்கூடாது.தெரியுதா?” என்று மரியாதையாகச் சொன்னார்.

அப்பாபூனை வேலைக்குப் போய் விட்டால்? கருப்பன் மறுபடியும் அடிக்கத்தொடங்கினான். தம்பிகளூம் தங்கைகளும் ரொம்பக் கஷ்டப்பட்டார்கள். வேறு என்ன செய்ய?

சில நாடகள் கழிந்தன.அப்பாபூனை வேலை முடிந்து வீட்டிற்கு வந்தது. அப்போது என்ன பார்த்தது தெரியுமா? வெள்ளைக்காலன் படுத்து உருண்டு கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தான். அம்மாபூனை அவனை தடவிக் கொடுத்து ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தது.

அப்பாபூனை “என்ன நடந்தது?” என்று கேட்டது.

“அப்பா கருப்பண்ணன், வெள்ளைக்காலண்ணனோட காது நுனியைக் கடிச்சித் துண்டாக்கிட்டான்..” என்று கருங்காலி சொன்னாள்.

அப்பாபூனை கருப்பனின் அருகில் சென்றார்.

“டேய்.. கருப்பா..உனக்கு வலிச்சாத்தான் நீ மத்தவங்களை அடிக்காம இருப்பே..” என்று அவர் சொன்னார். சொன்னது மட்டுமில்லையே. அப்பாபூனை பாய்ந்து கருப்பனின் காதில் ஒரு கடி. கருப்பன் கூப்பாடு போட்டான். அப்பாபூனை விடவில்லை.அது மட்டுமா? கருப்பனின் காதுநுனியைக் கடித்துத் துண்டாக்கிவிட்டார். கருப்பன் வேதனையில் நடுநடுங்கிப் போனான்.

“இனி மரியாதையா இருக்கணும்..” அப்பாபூனை சொன்னார்.

அன்றிலிருந்து கருப்பன் யாரையும் அடிப்பதில்லை. கடிப்பதில்லை.

1 comment: