செல்லாக்காசு
உதயசங்கர்
ஒரு பத்துரூபாய்
நாணயம் அரசாங்கத்தின் நாணயத்
தொழிற்சாலையில் இருந்து ஓடி
வந்து விட்டது. புத்தம்
புதிய நாணயம். அதற்கு
அவசரம். எப்படியாவது சீக்கிரமே
இந்த உலகத்தைப் பார்த்து
விட வேண்டும். மக்களைச்
சந்தித்து விட வேண்டும் என்று
ஆசை.
சாலையில் உருண்டு
உருண்டு போய்க் கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் யாருமே
இல்லை. அத்துவானக் காடாக
இருந்தது. அப்போது அங்கே
ஒரு சின்னப்பையன் தலையில்
காட்டில் பொறுக்கிய விறகுச்
சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வந்தான்.
அவன் பத்துரூபாய்
நாணயத்தைப் பார்க்கவில்லை. தலைச்சுமையினால் அவன் குனிந்து பார்க்கவில்லை. அவனைப் பார்த்ததும் பத்துரூபாய்
நாணயம் துள்ளிக்குதித்தது. பிறகு
அவன் பார்க்கவேண்டும் என்பதற்காகப்
பத்துரூபாய் நாணயம் சூரிய
வெளிச்சம் தன் உடலில் படுகிற
மாதிரி உருண்டு விழுந்தது.
அந்தப் பையனின்
கண்களில் பத்துரூபாய் நாணயத்தின்
ஒளி வட்டமாக விழுந்தது.
அந்தப் பையன் கண்களைத் தாழ்த்திப்
பார்த்தான். அவனால் நம்பவே
முடியவில்லை. சுற்றும் முற்றும்
பார்த்தான்.
யாரும் இல்லை.
யாராவது தவற
விட்டிருப்பார்களோ என்று நினைத்தான்.
வெள்ளியைப் போல
பளபளத்தது காசு. மெல்ல
தலைச்சுமையுடன் அப்படியே குனிந்து
அந்தக் காசைக் கையில்
எடுத்தான். பத்துரூபாய் என்று
அச்சிடப்பட்டிருந்தது. அரசாங்க முத்திரையும்
இருந்தது. அப்படியே டவுசர்
பையில் வைத்தான்.
போகும்போதே தொட்டுத் தொட்டுப்
பார்த்துக் கொண்டான்.
குடிசையின் வாசலில்
விறகுச்சுமையைப் போட்டான். வீட்டுக்குள்
போய் அந்தக் காசை
எடுத்து திருப்பித் திருப்பிப்
பார்த்தான்.
பத்துரூபாய் நாணயத்துக்குச் சிரிப்பாய் வந்தது. அந்தப்
பையனுக்கும் சிரிப்பாய் வந்தது.
திடீரென சிரிப்பு நின்றது.
இது நல்ல
காசா? செல்லாக்காசா?
அவனுக்குச் சந்தேகம்.
ஆனால் அரசாங்க முத்திரை
இருக்கிறதே. சில நிமிடங்களில் மனதைத்
தேற்றிக் கொண்டான்.
முழுதாகப் பத்துரூபாய். ஆகா! பத்துரூபாயைப் பார்த்து
எவ்வளவு நாட்களாகி விட்டது.
கடைசியாக பத்தமடை தாத்தா
திருவிழாவுக்கு வந்தபோது கொடுத்தார்.
அந்தப் பத்துரூபாய் அன்னிக்கே
காலி. அதற்குப் பிறகு
இப்போது தான் பத்துரூபாய் நாணயத்தைப்
பார்க்கிறான்.
பத்துரூபாய்க்கு என்னென்ன
வாங்கலாம்? என்று யோசித்தான்.
ஐந்து ரூபாய்
பிஸ்கெட் பாக்கெட் இரண்டு
வாங்கலாம். அவனுக்கு ஒன்று.
பாப்பாவுக்கு ஒன்று. இல்லை
என்றால் அம்மாவிடம் கொடுக்கலாம். வீட்டுச்செலவுக்கு ஆகும்.
இப்படித் திட்டம்
போட்டதுமே அவனால் இருக்க
முடியவில்லை. பத்துரூபாய் நாணயத்துக்கும் இருக்க முடியவில்லை.
சீக்கிரம் சீக்கிரம்
சீக்கிரம் என்று அவனை அவசரப்படுத்தியது.
தெருமுக்கிலிருந்த பெட்டிக்கடையை
நோக்கி நடந்தான். ஒவ்வொரு
அடியிலும் அந்தக் காசை
பூவா தலையா போட்டு விளையாடிக்
கொண்டே போனான் அந்தப்
பையன்.
பத்துரூபாய்க்கு ஏகமகிழ்ச்சி. அதுவும் சேர்ந்துத் துள்ளிக்குதித்தது. கடைக்குப் போய்
விட்டால் பத்துரூபாய் கை
மாறிக் கொண்டே இருக்கும்.
விதம் விதமான மனிதர்களைப்
பார்க்கலாம். எத்தனையோ கைகளைப்
பார்க்கலாம். எத்தனையோ பைகளில்
தங்கியிருக்கலாம். விதம்விதமான குணங்களைப்
பார்க்கலாம்.
எவ்வளவோ இடங்களுக்குப்
பயணம் போகலாம். பத்துரூபாய்
நாணயம் மகிழ்ச்சியில் ஒரு
துள்ளு துள்ளியது.
பையனுக்கு ஆச்சரியம்.
காசு தானாகத் துள்ளுகிறதே.
“ ரெண்டு பிஸ்கெட்
பாக்கெட் கொடுங்க அண்ணாச்சி..
” என்று கம்பீரமாகக் கேட்டான்.
கடைக்கார அண்ணாச்சிக்குச் சந்தேகம்.
வாங்கிட்டு கடன் சொல்லுவானோ என்று
நினைத்தார். ஏனெனில் அவனுடைய
அம்மா அடிக்கடி அப்படிக்
கடன் சொல்லி சாமான்
வாங்கிக் கொண்டு போவார்.
அவன் டவுசர்
பையிலிருந்து பத்துரூபாய் நாணயத்தை
எடுத்தான். கடைக்கார அண்னாச்சியிடம் கொடுத்தான்.
அண்ணாச்சி
காசைக் கையில் வாங்கி
அப்படியும் இப்படியும் திருப்பிப்
பார்த்தார்.
பிறகு உதட்டைப்
பிதுக்கினார்.
” இது செல்லாதே
தம்பி... ஒரு பய இதை
வாங்க மாட்டான்..”
என்று சொன்னார்.
அவ்வளவுதான். முன்னால்
இருந்த பிஸ்கெட் பாக்கெட்டை
எடுக்கவில்லை.
” என்ன
செல்லாதா? “ என்று நம்பிக்கையில்லாமல் மெதுவாகக்
கேட்டான். கடைக்கார
அண்ணாச்சி பத்துரூபாய் நாணயத்தைத்
திருப்பிக் கொடுத்தார்.
கையில் வாங்கிய
பையன் அந்தக் காசைத்
திருப்பித் திருப்பிப் பார்த்தான்.
ஒரு நெளிசலோ, அடியோ,
இல்லையே. புத்தம்புதிதாகத் தானே
இருக்கிறது.
மறுபடியும் நம்பிக்கை
இல்லாமல்,
“ அண்ணாச்சி நல்லாப்பாருங்க.. செல்லாதா? “ என்றான்.
அதற்கு அண்ணாச்சி,
“ தம்பி.. இப்போ
இந்தக் காசை யாருமே வாங்கமாட்டேங்காங்க.. நானே பத்து பதினைந்து
நாணயங்களை வைச்சிருக்கேன்.. எப்பவாவது
டவுணுக்குப் போகும்போது தள்ளி
விட்டிருவேன்.. “
என்று பொறுமையாகச்
சொன்னார். அந்தப் பையன்
காசைக் கையில் வைத்துக்
கொண்டு அப்படியே நின்றான்.
அண்ணாச்சி வேறு ஆளைக் கவனிக்கப்
போய் விட்டார்.
பத்துரூபாய் நாணயத்துக்கு
வருத்தமாகி விட்டது. இப்போது
தானே தொழிற்சாலையில் அச்சடித்தார்கள். அதுக்குள்ளே செல்லாது என்று
சொல்லி விட்டார்களா என்று
குழம்பிப் போனது. இந்த
அரசாங்கத்தில் எது வேண்டுமானாலும் நடக்கும்
என்று நினைத்தது.
ஊர் சுற்றிப்
பார்க்கலாம். காசு கையில் கிடைத்ததும்
மனிதர்களின் குணம் எப்படி எல்லாம்
மாறுகிறது என்று பார்க்கலாம் என்று
பத்துரூபாய் கற்பனை செய்திருந்தது.
பத்துரூபாய் நாணயத்தைக்
கையில் வைத்துத் திருப்பித்
திருப்பிப் பார்த்தபடியே தன்னுடைய
குடிசைக்குத் திரும்பினான் பையன். அவனுக்குக் கடுப்பாக
இருந்தது. போகும் வழியில்
இருந்த சாக்கடையில் அந்தக்
காசை வீசி விடலாமா என்று
கூட யோசித்தான்.
” ஐய்யய்யோ.. போட்டுராதே..பையா....” என்று
பத்துரூபாய் கத்தியது. பிறகு
என்ன! பண்டம் வாங்கித்
திங்க எவ்வளவு
ஆசையாக இருந்தான். அம்மாவிடம்
கொடுத்துக் கேட்கலாம். அம்மா
எப்படியாவது மாற்றிவிடுவார்.
இல்லையென்றால் இந்த
வாரம் ஞாயிற்றுக்கிழமை தாத்தாவிடம்
கொடுத்தால் அவர், செல்லாக்காசை
எல்லாம் செல்ல வைத்து விடுவார்
என்று அம்மா சொல்லி இருக்கிறார். பையன் டவுசர் பையிலேயே
பத்துரூபாய் நாணயத்தைப் போட்டு
வைத்தான்.
பத்துரூபாய் பையனின்
டவுசரில் ஞாயிற்றுக்கிழமை வரும்
தாத்தாவுக்காகக் காத்துக் கொண்டிருந்தது.
ஊருக்குள் தொலைக்காட்சியில் செய்தி ஓடிக்கொண்டிருந்தது.
” அரசு அடித்து
வெளியிடும் பத்துரூபாய் நாணயம்
செல்லும். அதை யாரும் மறுக்கக்கூடாது. ”
அவனுடைய வீட்டில்
தொலைக்காட்சி இல்லை. இது
அந்தப் பையனுக்குத் தெரியாது.
நீங்கள் போய்ச் சொல்ல
முடியுமா?
நன்றி - விஞ்ஞானத்துளிர் ஜனவரி 2026

No comments:
Post a Comment