Showing posts with label Book for children. Show all posts
Showing posts with label Book for children. Show all posts

Friday, 18 April 2025

மெகர்பா கோழியும் நீலகண்டன் குள்ளநரியும்.

 

மெகர்பா கோழியும் நீலகண்டன் குள்ளநரியும்.

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



 

ஒரு நாள் நல்ல நிலா வெளிச்சம். நீலகண்டன் குள்ளநரி சுவரேறிக் குதித்தது. மெகர்பா கோழி இருக்கும் கூட்டுக்கு அருகில் போனது. மெகர்பா கண்களை மூடித் தூங்குவதை கொஞ்சநேரம் பார்த்துக் கொண்டிருந்தது. எந்த சத்தமுமில்லை. நாய்க்குட்டி எங்கே உறங்குகிறது என்று தெரியவில்லை. கர்வம் பிடித்த நாய்க்குட்டி தோணுகிற இடத்தில் உறங்கும். அது முழித்து விட்டால் கடித்துக் கொன்றுவிடுவான்.

கண்ணை மூடித் தூங்குகிற மெகர்பா கோழியைப் பார்த்துப் பார்த்து குள்ளநரிக்கு வாயில் எச்சில் ஊறியது. என்ன அழகான கால்கள்! பொரித்த கோழிக்காலைக் கடித்துத் தின்பதில் என்ன ஒரு சுகம்!

நீலகண்டன் குள்ளநரி மெல்லப்பாடியது,

உன்னை யார் பார்த்தாலும் ஆசைவருமே கோழிப்பெண்ணே!

பிறகு ஏன் இன்றுவரை உன்னைக் கலியாணம் முடிக்க யாரும் வரவில்லை?”

மெகர்பா விழித்து விட்டது. தன்னுடைய கலியாணத்தைப் பற்றி நினைத்தபோது சோகம் வந்தது. நீலகண்டன் அண்ணன் சொல்வது சரிதான். அந்தப்பக்கத்தில் இருக்கும் சேவலுக்கு நான்கு மனைவிகள் இருக்கின்றன.

நீலகண்டன் குள்ளநரி இன்னும் கவனமாகப் பாடியது,

என்னுடன் நீ காடு சுற்றிப் பார்க்க வருகிறாயா கோழிப்பெண்ணே.. தோடு வாங்கலாம், மாலை வாங்கலாம்,, என்ன வேண்டுமானாலும் வாங்கித் தருகிறேன்..”

நாய்க்குட்டி அருகில் இருந்த வைக்கோல் குவியலில் படுத்திருக்கிறது என்று இரண்டு பேருக்கும் தெரியாது. நாய்க்குட்டி விழித்தது. காது கொடுத்துக் கேட்டது. ஆகா! நீலகண்டன் குள்ள நரி தானே பாடுது...

மெகர்பா கோழி யோசித்துப் பார்த்தது. நீலகண்டன் குள்ளநரி பாடுவதிலும் அர்த்தம் இருக்கிறது என்று தோன்றியது. தோடு ஒன்று வாங்கவேண்டுமென்று வெகுநாட்களாக ஆசை இருந்தது. கதைப்பாட்டியின் காதுகளில் அழகாகத் தொங்குகிற மாதிரி வேண்டும்.

மெகர்பா நீலகண்டனைப் பார்த்துப் பாடியது,

ஆலப்புழக்காரன் நீலகண்டன் மாமாவே நாளை எனக்கு ஒரு தோடு வேண்டும். தோடு வேண்டும். பிறகு தோடு வேண்டும் தோளில் தட்டுகிற மாதிரி தோடு வேண்டும். ஆச்சியும் நானும் கோவித்துக் கொள்ளும்போது கூடவே கோவித்து ஆடுகிற தோடு வேண்டும்..”

சரி.. வாங்கித் தருகிறேன்..” குள்ளநரிக்குத் தன்னுடைய தந்திரம் பலித்த மகிழ்ச்சியில் சொன்னது,

நீ வெளியே வா மெகர்பா.. நாம் காட்டைச் சுற்றிப் பார்க்கலாம்..”

நாய்க்குட்டி எழுந்தது. பாய்ந்து குள்ளநரியின் கழுத்தில் கடித்தது. குள்ளநரி ஊளையிட்டு அழுதது. கோழி, க்க்கோ க்க்கோ க்க்கோ..” என்று சத்தம் போட்டது. வீட்டுக்காரர்கள் விழித்து விளக்கைப் போட்டார்கள். பூனைக்குட்டி சீறிப் பாய்ந்து குள்ளநரியின் முதுகில் நகங்களால் கீறி விட்டது.

நீலகண்டன் குள்ளநரி ஓரே ஓட்டம் ஓடியது. ஆலமரத்துக்கு அருகில் கூடி ஓடும்போது கதைப்பாட்டியும் ஒரு அடி கொடுத்தாள்.

நன்றி - பறயாம் நமுக்கு கதகள்

 


 


Tuesday, 21 January 2025

இடமாற்றம்

 

இடமாற்றம்

உதயசங்கர்




ஓங்கி உயர்ந்த மலைகள் மடிப்பு மடிப்பாய் விரிந்திருந்தன. 

அதன் சிகரங்களில் எப்போதும் மேகங்கள் மிதந்து கொண்டிருந்தன. 

குட்டி மேகம், பெரிய மேகம், குழந்தை மேகம், தாத்தா மேகம், பாட்டி மேகம், எல்லாம் இருந்தன. 

மேகங்கள் எல்லாம் தினம் ஒரு தடவையாவது அந்த மலைகளைச் சந்திக்காமல் போவதில்லை. அங்கே மலைகளுடன் பேசி ஓய்வு எடுத்து விட்டுத் தான் மறுபடியும் பயணத்தைத் தொடரும்.

ஓயாமல் பயணம் போகும் மேகங்கள். 

ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம், என்று எல்லா இடங்களையும் சுற்றி வரும் மேகங்கள் சொல்லும் கதைகளைக் கேட்க ஆச்சரியமாக இருக்கும். ஆர்க்டிக், அண்டார்ட்டிக் குளிர்பிரதேசங்கள், பாலை வனங்கள், அமேசான் காடுகள், கிராமங்கள், நகரங்கள், என்று உலகின் எல்லா அதிசயங்களையும் பர்த்து விட்டு வரும் மேகங்கள்.

மேகங்கள் சொல்லும் கதைகளைக் கேட்கும் மலைகளுக்கு ஒரு ஆசை வந்தது. பிறந்ததிலிருந்தே ஒரே இடத்தில் அசையாமல் நின்று கொண்டிருக்கிறோமே. கொஞ்சம் ஊர் சுற்றிப்பார்த்தால் என்ன? மேகங்களிடம் கேட்டது.

“ என்னையும் உன் கூட ஊர் சுற்றிப்பார்க்கக் கூட்டிட்டுப் போயேன்..

மேகங்கள் யோசித்தன. இதுவரை யாரும் இப்படிக் கேட்டதில்லை. தாத்தா மேகத்திடம் ஆலோசனை கேட்டன. தாத்தா மேகமும் மலைச்சிகரத்தில் இரண்டு நாட்கள் தங்கி யோசித்தது.

கடைசியில் மேகங்களும் மலைகளும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தன. ஒரு நாள் மேகங்கள் மலைகளைப் போல பூமியில் தங்கியிருப்பது, மலைகள்   மேகங்களைப் போல உயரே பறப்பது என்று முடிவு செய்தார்கள்.

அடுத்த நாள் காலையில் பார்த்தால் மேகங்கள் தரையில் கூட்டம் கூட்டமாகத் தங்கி விட்டன. மலைகள் எல்லாம் வானத்தில் மிதந்து கொண்டிருந்தன.

காற்று வீசியபோது மலைகள் குலுங்கின. மலைகளில் இருந்த உயிரினங்கள் பயந்து அலறின. சில விலங்குகள் மலைகளின் விளிம்பிலிருந்து தவறி விழுந்தன. மரங்கள் முறிந்து பூமியில் விழுந்தன. மலைகளுக்கே பயமாக இருந்தது. கீழே இறங்கி விடலாம் என்று இறங்கத் தொடங்கின.

கீழே மேகங்கள் எங்கும் போகமுடியாமல் ஒரே இடத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருந்தன. தாத்தா மேகம்,

“ வாருங்கள் விரைந்து மேலே போய் விடுவோம்..என்றது. மேகங்கள் உயரே சென்றன.

இப்போது மலைகளும் மேகங்களும் தினமும் சந்தித்துப் பேசிக் கொள்கிறார்கள். மலைகள் இங்கே பூமியில் நடப்பவற்றைச் சொல்கின்றன. 

மேகங்கள் உலகம் முழுவதும் நடப்பதைப் பற்றிச் சொல்கின்றன.

அதோ! ஒரு குட்டி மேகம்.  

மேகமலையின் உச்சியில் இருக்கும் தேவதாரு மரத்தின் கிளையில் உட்கார்ந்து கதை சொல்லிக்கொண்டிருக்கிறது.

என்ன கதை என்று கேட்போமா?


நன்றி - வண்ணத்துப்பூச்சியும் புலிக்குட்டியும்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்